பத்துப் பன்னிரண்டு வயது முதலே இசை கேட்கப் பிடித்திருந்தது. அது சங்கீதம் கேட்பதல்ல, பாட்டுக் கேட்பது! தாழக்குடி ஜலகண்டேசுவரர் கோயில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோயில், திருப்பதிசாரம் திருவாழி மார்பன் கோயில், நாகர்கோயிலின் நாகராஜா கோயில், கிருஷ்ணன் கோயிலின் கிருஷ்ணன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில் எங்கும் தேரோட்டத் திருவிழாக் காலங்களில் சங்கீதக் கச்சேரிகள் நடக்கும். நடந்தலைந்து, இரவு கண்விழித்து, பசிக்கப் பொறுத்துக் கேட்டவை.இன்றளவும் தொடர்கிறது இசை கேட்பதென்பது. பம்பாய் சென்ற பிறகு சண்முகாநந்த சபா, செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்; டிசம்பர் மாதங்களில் சென்னை இசைவிழாவுக்கு என்றே வந்து மியூசிக் அகாடமி, நாரதகான சபா என்று கேட்டவை. கோவை வந்தபிறகு தொடர்ந்து கேட்பவை. இன்றும் காலை எழுந்து கடன்கள் முடித்துப் படிப்பறைக்கு வந்ததும் முதல் வேலை இசைக் குறுந்தகடுகள் போட்டுக் கேட்பது. தினமும் காலையிலும் மாலையிலுமாக ஆறேழு குறுந்தகடுகள்.