இசைக்கென்று ஓர் பேரகராதி!

25 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Sep 18, 2009, 7:38:09 PM9/18/09
to Min Thamizh, Nallisai Group
இசையால் வசமாகா இதயமெது?

இசை என்பது சாதி, இனம், மொழி இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது.

இசை கேட்டால் புவியும் அசைந்தாடும் என்று ஒரு கவிஞர் அழகாகக் கூறியுள்ளார்.

இசைக்கு மொழியில்லை என்றாலும் ஒவ்வொரு மொழிக்கும் உரிய சிறப்பான இசை என்னவோ இருக்கத்தான் செய்கிறது. தமிழிசையில் தனது கவனத்தைக் குவித்து இயங்கி வருபவர் நா.மம்மது.  இசை தொடர்பான பல்வேறு நூல்களை எழுதியுள்ள நா.மம்மது தமிழிசையைப் பரப்புவதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

http://www.dinamani.com/Images/article/2009/9/13/13k2.jpg

"இன்னிசை டிரஸ்ட்" என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை அமைத்து, அதன்மூலம் இசை மேம்பாட்டுப் பணிகளைத் திறம்படச் செய்து வருகிறார். இயல், இசை, நாடகம் குறித்து பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் இசைப் பேரகராதி ஒன்றைத் தயாரித்துள்ளார். அந்தப் பேரகராதியை அச்சிட்டு, சந்தைக்கு கொண்டு வரும் பணிக்காக, இறுதிக்கட்ட வேலைகளில் மும்முரமாக இருந்த அவரை, மதுரை மகாத்மா காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு காலைப் பொழுதில் சந்தித்தோம்.

இசை ஆர்வலர், இசைக் கலைஞர், இசை ஆய்வாளர் எனப் பன்முகங்களைக் கொண்ட நா.மம்மது, தமது தமிழிசை ஈடுபாட்டை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். "தமிழ் மொழி, தமிழ் இசை என்பது மிகவும் தொன்மையானது. உலக மொழியாக விளங்கும் ஆங்கிலம் நம்மிடையே புகழ்பெற்றது கடந்த 5 நூற்றாண்டுகளில் தான். ஆனால், சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மொழியானது இன்னும் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு உயர்ந்த நிலையை அடையவில்லை. தமிழிசையும் அதே போன்றது தான். தொல்காப்பியத்தில் தமிழிசை குறித்து ஏராளமான குறிப்புகள் உள்ளன. இத்தகைய தொன்மையான இசையையும், இசை குறித்த விவரங்களையும் உலகறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இசைப் பேரகராதியைத் தயாரிக்கத் திட்டமிட்டேன்.

நான் தத்துவவியலில் எம்.ஏ. பட்டமும், இசையில் எம்.ஃபில் பட்டமும் பெற்றுள்ளேன். நெடுஞ்சாலைத் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி
2004ல் ஓய்வுபெற்றேன். திருநெல்வேலி கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு இசையில் ஈடுபாடு உண்டு. பாளை சு.சு. மணி தமிழிசையை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
  • பேராசிரியர் தொ. பரமசிவம்
  • வளனரசு
  • பேராசிரியர் லூர்துசாமி
ஆகியோர் தமிழிசை குறித்து அதிகம் தெரிந்துகொள்ள எனக்கு உதவிபுரிந்தனர்.

கலைக்களஞ்சியத்தை
4 தொகுதிகள் தயாரித்து அளித்த வீ.ப.கா.சுந்தரம் தான் எனக்கு இசை ஆசிரியர். பகலில் பணி முடித்த பின் மாலை வேளையில் இவரது வீட்டுக்குச் சென்று இசையைக் கற்றேன். இசையின் ஆழத்தை அறிந்தேன். அதில் பிடிப்பு அதிகமானது. அப்போதுதான் இசைக்கென்று ஏன் ஒரு பேரகராதியைக் கொண்டு வரக்கூடாது என யோசித்தோம்.

2003
ல் பணியிலும் இறங்கினோம்.

ஆனால், திடீரென எனது குருநாதர் சுந்தரம் காலமாகி விட்டார்.
  இருந்தும் எனக்குள் இருந்த கனல் தணியவில்லை. ஆங்கிலத்தில் ஓர் இசை அகராதி 29 பதிப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், தமிழில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லையே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்தது. 2005ல் மீண்டும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். எனது எண்ணத்தை பல இசை அறிஞர்களிடம் கூறினேன். பட்டிமன்றப் பேச்சாளர் கு. ஞானசம்பந்தன் உதவி செய்ய முன்வந்தார். தற்போது அவர் தான் இதன் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். மேலும், அமெரிக்க வாழ் தமிழரான தொழிலதிபர் பால்பாண்டியன் நிதியுதவி, தொழில்நுட்ப உபகரணங்கள் உதவி ஆகியவற்றை வழங்கி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக இசைப் பேரகராதியைத் தயாரித்து தற்போது செப்டம்பரில் அதை வெளியிட உள்ளோம்.

இந்த இசைப்பேரகராதியை,
  • சொற் களஞ்சியம்
  • பண் களஞ்சியம்
  • இசைக் கருவிகள் களஞ்சியம்
என 3 தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

முதல் தொகுதியான சொற் களஞ்சியமே தற்போது வெளியிடப்படவுள்ளது.
முதல் தொகுதியில் சுமார் 5,000 இயல், இசை, நாடகத் துறை தொடர்பான சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சுமார் 600 பக்கங்கள் உள்ளன. இதில் ஒரு சொல்லுக்கு அர்த்தத்தை மட்டும் குறிப்பிடவில்லை. அந்தச் சொல்லுக்கான கூடுதல் தகவல்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். தொல்காப்பியம் தொடங்கி சுமார் 2,000 நூல்களை ஆய்ந்து அறிந்து இக்களஞ்சியத்தைத் தொகுத்துள்ளோம்.

"தமிழிசை பேரகராதி (சொற்களஞ்சியம்)" என்ற பெயரில் இது வெளியாகிறது.
  உதாரணமாக, "மண்டில விருத்தம்" என்ற சொல் இசைப்பாடலில் வருவது. இதற்கு. "சீர்கள் அடிகளில் மண்டியித்து (மீண்டும், மீண்டும் வந்து) வரும் விருத்த யாப்பு. எடு:- சிலப். கானல் வரி திங்கள் மாலை முதலிய 7: (1); (2); (3) ஆகிய ஆற்றுவரிப் பாடல்கள் மண்டில விருத்தங்கள்."

அதுபோல, "மண்டை" என்பது இசைக் கருவியைக் குறிப்பது. இதுகுறித்த விளக்கம். "மண்ணி" என்பது ஒப்பனையை விளக்குவது. இது குறித்த விளக்கம். இப்படி ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் தமிழ் மொழியே பயன்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆங்கிலச் சொற்களைச் சேர்த்துள்ளோம்.

இந்தப் பேரகராதி, இசை ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழாசிரியர்கள், இசை ஆர்வலர்கள், இசைக் கருவிகள் தயாரிப்பவர்கள் என இசைத் துறையில் உள்ள அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எழுதப் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் இது உதவியாக இருக்கும்.
  • பக்தி இசை
  • நாட்டுப்புறப் பாடல்கள்
  • காவடிச் சிந்து
  • விழாப் பாடல்கள்
  • தாலாட்டுப் பாடல்கள்
  • நலுங்குப் பாடல்கள்
  • செவ்வியல் இசை
  • திரையிசைப் பாடல்கள்
இவையெல்லாம் தமிழிசைப் பாடல்கள்தான் என்றார். 

தமிழிசையை அழிய விடக்கூடாது என்ற அவரது தீவிர பணிகள் சிறக்க வாழ்த்தி விடை பெற்றோம்.

பா. (
இ)ராஜா

நன்றி:- தினமணி கதிர்
Reply all
Reply to author
Forward
0 new messages