தமிழர்கள் வாழ்ந்த வாழ்வு மிகச் சிறப்பான போற்றுதலுக்குரிய வாழ்வு. வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வு பல விதமான நல்ல அறிவு சார்ந்த சாதனைகளைப் படைக்கும் திறன் பெற்ற வாழ்வு. அதே சமயத்தில் பல சோதனைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
தமிழ் வளர்ச்சி குறித்து எண்ணும்போது புறநானுறு, சிலப்பதிகாரம், கம்பர், திருவள்ளுவர், பாரதியைப் பற்றி நினைக்காமல் இருக்கமுடியாது. எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து என்னை வழிநடத்தியது திருக்குறள்தான். எனக்குப் பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது.
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அத்துடன் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல், அதாவது கோட்டை போல் நின்று நம்மைக் காக்கும் என்பதாகும். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் சொல்கிறது "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்று. அதாவது அரசியலில் பிழை செய்தவர்களுக்கு அறமே எமனாக மாறி அழித்திவிடும் என்பது பொருள்.
எனவே, இந்தக் கருத்துகளை நாம் நம் வாழ்வில் கடைப்பிடித்தால் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். அப்படிப்பட்ட அறிவார்ந்த சமுதாயம்தான், அடுத்த தலைமுறைகளைப் போரில்லா ஓர் உலகத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.
"யாரொடும் பகை கொள்ளலன் எனின், போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்த பின், வேரொடும் கெடல், வேண்டல் உண்டாகுமோ?"
இதன் அர்த்தம் என்னவென்றால் யாருடனும் பகைமை கொள்ளாவிட்டால் போர் இல்லாத நிலை உண்டாகும். போரின்மையால் மன்னனின் புகழ் மங்காது. மன்னனின் ஆட்சியும், மன்னனின் வாழ்வும் குறைபடாது. போரில்லா நிலைமை ஏற்பட்டுவிட்டால், எந்த ஒரு மன்னர் குலத்தையும் அடியோடு அழிய வேண்டுமென்று எவரும் சபித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். போரில்லாத நாடு உலக அமைதிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கம்பனுடைய கவிதை நம் எல்லோருக்கும் அருமையாக உணர்த்துகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் யுத்தமில்லாத வாழ்வு உலகுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறார் கம்பர்.
நண்பர் கவியரசு வைரமுத்து, சமீபத்தில் எழுதிய "மூன்றாம் உலகப் போர்" என்ற ஓர் அருமையான புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார். விஞ்ஞான முறைப்படி விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி சொல்லி இருக்கிறார். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் மூன்றாம் உலகப்போர் வராது என்று கவிஞர் வைரமுத்து கூறுகிறார். அந்நிலையை நோக்கி நாம் எல்லோரும் முன்னேறுவோம். நமது எண்ணம், செயல் அனைத்தும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில்தான் அமைந்திருக்க வேண்டும். எனவே தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தால், இந்தியா 2020க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது நிச்சயம் என்றார் அப்துல் கலாம்.
பதிப்பு தொடர்பாக முக்கிய விஷயத்தைக் கூற விரும்புகிறேன். புத்தகங்களின் நிறைவுப் பக்கத்தில் புத்தகத்தைப் பற்றிய உள்ளீடு தொடர்பான தகவல்கள் ஆங்கிலப் புத்தகங்களில் இடம்பெறுகின்றன. இது போன்று தமிழ் புத்தகங்களிலும் இடம்பெற வேண்டும். இந்த தகவல்கள் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மொழி பெயர்ப்பு இலக்கியங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது போன்ற மொழி பெயர்ப்பு இலக்கியங்களை திசை எட்டும் என்ற காலாண்டிதழ் பதிப்பித்து வருகிறது.
அந்த இதழில் பிற மொழிகளின் சிறந்த படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்கிறார்கள்.
சிறந்த பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்ப்பதற்காக விருதுகள் வழங்கப்படுகின்றன. அது போன்ற விருது வழங்கும் விழாவை தில்லித் தமிழ்ச் சங்கம் நடத்த வேண்டும் என்றார் நல்லி குப்புசாமி.
செப்டம்பர் 15ம் தேதி மறைமலை அடிகளாரின் நினைவு தினம் என்று "தினமணி" ஆசிரியர் குறிப்பிட்டார். இந்த நாள் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளும் கூட தமிழ் இனத்தையும், உணர்வையும் வீரத்துடன் காத்து வந்த ஒரு நட்சத்திரம் மறைகிறது. அதே சமயம், ஒரு சூரியன் எழுகிறது.
பேரறிஞர் அண்ணா தில்லி வந்தபோது, "இந்தியாவில் அதிகமானோர் பேசக் கூடிய ஹிந்தியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் தமிழும் ஆட்சி மொழியாக வேண்டும் என்கிறீர்களே?" எனக் கேட்டபோது, "மயில்களைவிட , காக்கைகளே அதிகம். அதற்காக, எண்ணிக்கையில் அதிகமுள்ள காக்கையைத் தேசிய பறவையாக அறிவிக்கவில்லை. மயிலையே தேசியப் பறவையாக அறிவித்துள்ளோம்" என பதிலளித்தார்.
தமிழர்களை மொழியின் தீவிரவாதிகள் போன்று சித்திரிக்கிறார்கள். இனம், மொழி ஆகியவற்றின் மீது அதீத பற்றுள்ளவர்கள்தான். ஆனால், எந்த மொழியின் மீது நமக்கு வெறுப்பு கிடையாது. மொழி குறித்து நம் மீது கூறப்படும் குற்றச்சாட்டு களையப்பட வேண்டும். தாய்மொழி உள்பட எந்த மொழியையும் எவர் ஒருவரும் தாழ்த்த மாட்டார்கள்.
இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பது இரண்டு வகைகளில் சாத்தியம். ஒன்று நதிகளை இணைப்பது. மற்றொன்று தேசிய மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழிகளாக அறிவிப்பது.
நம்முடைய வாழ்வு அகம் மற்றும் புறம் என இரு வாழ்வுகள் சார்ந்தது. இந்த இரண்டுக்கும் தலைமை வகிப்பது அறமாகும். ஆனால், அந்த அறம் பிறந்தது முதலே சிறுபான்மையாக இருக்கிறது. அதர்மம் என்பதே பெரும்பான்மையாகத் திகழ்கிறது.
சிறுபான்மையாக இருந்தாலும் அந்த அறமே மனித குலத்தின் வாழ்வை தீர்மானிக்கிறது. மனித குலத்தில் பிறவி என்று இருந்தால், அது அறத்தைத் தீர்மானித்ததாக இருக்க வேண்டும். தமிழர்களின் குடும்ப கட்டமைப்பு சரியாக இருந்தால் உலகத்தில் அவனை வெல்ல யாரும் இல்லை.
இந்தியாவில் விட்டுவிட வேண்டியது ஜாதிகள் கட்டமைப்பு. ஆனால், குடும்பக் கட்டமைப்பை விட்டுவிடக் கூடாது.
உலகம் என்பது துன்பமயமானது. அதிலே நாம் இன்பத்தைக் காண வேண்டும். வாழ்வு என்பது இரண்டும் சேர்ந்த கலவையாகும். இருளையும் சேர்த்தது தான் நாள். நுரையையும் சேர்த்தது தான் கடல். குறையையும் சேர்த்தது தான் வாழ்வு. அதிலிருந்து நாம் நன்மையைக் கொண்டு வர வேண்டும்.
நம்மிடையே இருந்த பழைய உணவு முறைகள் இப்போது காணாமல் போய் விட்டன. தேனும், தினையும் சாப்பிட்டவர்கள் இப்போது பிட்சா சாப்பிடுகிறார்கள். உணவு, உடை, பழக்க வழக்கம் மாறி விட்டது. ஆனால், மாறாதது மொழி மட்டுமே.
இதுபோன்ற மாநாட்டை பல்கலைக்கழகங்களே நடத்த வேண்டும். ஆனால், ஒரு நடுநிலையாளராக விளங்கக் கூடிய "தினமணி" ஆசிரியர் வைத்தியநாதன் இந்த மாநாட்டை நடத்தியிருக்கிறார் என்றார் வைரமுத்து.
கலைவாணர் கேட்ட தோசைகள்
துன்பத்தின்போதும் இன்பத்தைத் தேடமுடியும் என்பதற்கு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஓர் உதாரணம் என்று கூறிய கவிஞர் வைரமுத்து ஒரு சுவையான தகவலைக் குறிப்பிட்டார்.
"ஒரு முறை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவை நிகழ்வை உதாரணமாகச் சொல்வார்கள். அவர் மதுரைக்கு, ஒரு ஓட்டலுக்குச் சாப்பிடச் சென்றார். தென் மாவட்டங்களில் தோசைக்கு சர்க்கரையும், சாம்பாரும் கொடுப்பார்கள். சர்க்கரையில் உள்ள இனிப்பும், சாம்பாரில் உள்ள ஒரு காரமும் இணைந்து ஒரு சுவையைக் கொடுக்கும். என்.எஸ். கிருஷ்ணன் ஓட்டலுக்குச் சென்ற காலத்தில் அப்போது சர்க்கரை விலை அதிகமாக இருந்தது. எனவே, அவர் சென்ற ஓட்டலுக்கு வெளியே "இன்று முதல் தோசைக்கு சர்க்கரை தரப்பட மாட்டாது" என எழுதப்பட்டு இருந்தது.
முதல் தோசை வாங்கிச் சாப்பிட்ட பிறகு, இரண்டாவது தோசையைக் கேட்டு, அதற்கு சர்க்கரையைக் கேட்டார் என்.எஸ்.கே., இதற்கு ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையைக் காட்டினார் ஊழியர். அதற்கு பதிலளித்த என்.எஸ்.கே., "முதல் தோசைக்குத் தானே கிடையாது? நான் வாங்கியது இரண்டாவது தோசை. எனவே, சர்க்கரை கொடுத்தாக வேண்டும்" என்றார்.
இதையடுத்து, அறிவிப்புப் பலகையில் "இனிமேல் தோசைக்கு சர்க்கரை கிடையாது" என்று அறிவிப்பு மாற்றப்பட்டது. இரண்டு தோசைகளை அடுக்கி வரச் சொன்ன என்.எஸ்.கே., "மேல் தோசைக்குத்தானே சர்க்கரை கிடையாது? கீழ் தோசைக்குக் கொடு" என்றார். இப்படி வாழ்வில் உள்ள துன்பங்களுக்கு இடையே இன்பத்தையும் காண வேண்டும்" என்றார் கவிப்பேரரசு வைரமுத்து. .
அப்போது, அவரை தனது நூலகத்துக்கு அழைத்துச் சென்ற கலாம், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் திருக்குறள் நூல்களை அவரிடம் கொடுத்தார். எனக்கு மட்டுமல்ல தமிழ்ச் சமுதாயத்துக்கே அடிப்படையாக விளங்குவது திருக்குறள் நூல். அதைச் சீன மொழியிலும் மொழிபெயர்க்க வேண்டும் என யூஸிடம் அப்துல் கலாம் கோரிக்கை விடுத்தார்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மொழி பெயர்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2010ம் ஆண்டு அப்துல் கலாம் தைவான் சென்ற போது சீனமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் வெளியிடப்பட்டது.
இந்த மாநாடு இவ்வளவு சிறப்பாகவும், வரவேற்பையும் பெறும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். சிலர் இப்போது சொல்கிறார்கள் நாங்கள் வரமுடியாமல் போய்விட்டதே என்று. இன்னும் பல அறிஞர்கள் நான் வருகிறேன் என்ற சொல்பவர்களை, ஐயா இந்த வயதிலும் நீங்கள் வருகிறேன் என்று தயவுசெய்து இந்த மாநாட்டுக்காக சிரமப்பட வேண்டாம். அடுத்த மாநாடு நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே நடத்தித் தருகிறோம் என்று சமாதானப் படுத்தியிருக்கிறேன்.
நேற்றுக்கூட அவ்வை நடராசன் இவ்வளவு பெரிய மாநாட்டை கூட்டிவிட்டு நான் வராமல் இருந்தால் எப்படி என்று சொன்னார். நான் சொன்னேன். ஐயா உடல்நலக்குறைவாக இருக்கிற நீங்கள் உங்கள் உடலை வருத்துதல் ஆகாது. நீங்கள் எங்கள் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள் என்ற நினைவுடன்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது என்று சமாதானம் கூறி தடுத்துவிட்டேன்.
தமிழ் அமைப்புகள் ஆங்காங்கே செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் ஒன்று கூட்டி மாநாடு நடத்துவதால் என்ன பயன் என்று சிலர் கேட்கிறார்கள். கூடிக் கலைவதற்காக ஒரு மாநாடா என்றும் சிலர் கேட்கிறார்கள். இது கூடிக் கலைவதற்கான மாநாடு அல்ல, கூடி மகிழ்வதற்கான மாநாடு. கூட்டம் போட்டால் அதில் என்ன நடக்கும் என்று சிலர் கேட்கிறார்கள், கூடினால்தான் விவாதம் நடக்கும். கூடாமல் விவாதமில்லை. விவாதம் ஏற்படும்போதுதான் வளர்ச்சி ஏற்படும். கருத்து வேறுபாடுகள் எங்கே வருகிறதோ, அப்போதுதான் வளர்ச்சியும் வருகிறது. அதன் மூலம்தான் மொழியும் வளம் பெறும்.
இன்னொரு காரணம் இருக்கிறது. இந்தியா முழுவதும் இதுபோன்ற அமைப்புகள் மிகப் பெரியச் சேவையைச் செய்து கொண்டிருக்கின்றன. யாரெல்லாம், எங்கெல்லாம், என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதைப் பிறர் அறிவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பிற அமைப்புகள் அறிந்து கொள்ளும்போது, அவர்களும் இது போன்ற தமிழ் அமைப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பினை உருவாக்கும். இதுவே, இப்படியொரு மாநாட்டை கூட்டுவதற்கான காரணம்.
இதற்கெல்லாம் மேலாக இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. உலகத்தில் எத்தனை, எத்தனையோ மொழிகள் இருக்கலாம். எத்தனை, எத்தனையோ இனங்கள் இருக்கலாம். எத்தனை, எத்தனையோ நாடுகள் இருக்கலாம். ஆனால், ஒரு வள்ளுவனுக்காக நாம் விழா எடுக்கிறோமே, கம்பனுக்காக விழா எடுக்கிறோமே, பாரதிக்காக விழா எடுக்கிறோமே, இளங்கோவுக்காக விழா எடுக்கிறோமே இது போல, புரலவலர்களுக்கும், பாவலர்களுக்கும் விழா எடுக்கின்ற பழக்கம் வேறு எந்த ஊரிலும், நாட்டிலும் கிடையாது. அப்படியே, மில்டனுக்கோ, ஷெல்லிக்கோ, பைரனுக்கோ விழா எடுப்பார்களேயானால், அது பல்கலைக்கழக அரங்குகளிலே நடக்குமேயன்றி, பொது இடங்களில் நடந்ததாகச் சரித்திரம் இல்லை.
ஆனால், இன்றைய சூழ்நிலை என்ன என்று யோசித்து பார்க்கிறேன். நமது வீட்டிலே இருக்கிற குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது என்ற நிலைமை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. நமது குழந்தைகளுக்கு தமிழ் எழுத படிக்கத் தெரியாது என்று சொல்வதை பெருமையாகக் கருதும் சூழ்நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆங்கில படிப்பு படித்தால் மட்டும்தான் உலக அளவில் வேலைவாய்ப்பு, மேம்பாடு என்ற நிலை உள்ளபோது, நீங்கள் ஆங்கிலம் படிக்காதீர்கள், இந்தி படிக்காதீர்கள் என்று ஏனைய மொழிகளை படிப்பதைத் தடுத்து நிறுத்துவது மாபெரும் பாவச்செயல்.
அப்படிப்பட்ட நிலையில் குழந்தைகள் தமிழ் பேச வேண்டுமென்றால், நாம் வீடுகளில் தமிழில் பேச வேண்டும். அவர்களுக்கு தமிழ், தாய்மொழி என்று தெரிய வேண்டும். இந்தப் பணியை இலக்கிய அமைப்புகள்தான் செய்ய வேண்டும். அந்தந்த ஊர்களில் இருக்கிற இலக்கிய அமைப்புகளால், குழந்தைகளுக்கு திருக்குறள் தெரிய வேண்டாமா, ஆத்திசூடி தெரிய வேண்டாமா உலகத்தில் யாருக்குமே கிடைக்காத தமிழ் என்ற பொக்கிஷத்தை மூதாதையர்கள் நமக்கு தந்திருக்கிறார்கள். தயவுசெய்து நம் குழந்தைகள் அவற்றை இழந்துவிடக்கூடாது. இந்தப் பணியை இலக்கிய அமைப்புகள்தான் செய்ய வேண்டும்.
ஆங்காங்கே இருக்கின்ற இலக்கிய அமைப்புகள் இலக்கியக்கூட்டங்களை நடத்தி இது தான் நமது தாய்மொழி, இந்த மொழியைத்தெரிந்து கொள், படித்துக்கொள், வீட்டில் இருக்கும்போது தமிழில் பேசு என்று சொல்லித்தர வேண்டும்.அதற்கு இலக்கிய அமைப்புகள்தான் சரியான களமாக இருக்க முடியும்.
அகில இந்திய அளவிலே இலக்கிய அமைப்புகளை ஒன்றுக்கூட்டி ஒரு வேண்டுகோளை அவர்கள் முன்னால் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்தக் கனவு இன்று நனவாகியிருக்கிறது. ஆகவே, இந்த மாநாடு விடுக்கின்ற செய்தி என்னவாக இருக்க வேண்டுமென்றால், ஆங்காங்கே அமைப்பு ரீதியாக வெவ்வெறு ஊர்களில் பிரிந்திருந்தாலும், உணர்வால் இணைவோம். தமிழை வளர்ப்போம்.
நமது குழந்தைகள் தமிழ் பேச, எழுத, படிக்கத் தெரியாத குழந்தைகளாக இருக்கக் கூடாது என்ற நிலையை இந்த மாநாடு கோஷமாகவே எழுப்ப வேண்டும்.
மகிழ்ச்சியான நல்ல குடும்பம் என்பது ஆன்மிகக் குடும்பம், சந்தோஷம் மிக்க தாய், வாய்மையான தந்தை, தூய்மையான பசுமை வீடு ஆகியவை சேர்ந்தது ஆகும்.
நாம் ஒரு சின்ன குடும்பத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, இரண்டு மகன்கள், ஒரு மகள் அல்லது இரண்டு மகள்கள், ஒரு மகன் என்று எடுத்துக்கொண்டால், இன்றைய சூழ்நிலையில், வாழ்க்கையை நல்ல மேம்பாட்டுடன் நடத்துவதற்கு கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இன்றைக்கு பல குடும்பத்தில் குழந்தைகளோடு பேசி மகிழ்வதற்கு நேரமில்லை. வேலைப் பளு மற்றும் தொலைக்காட்சி நமது பொன்னான நேரத்தை ஆக்கிரமிக்கிறது. எனவே பெற்றோர்கள், குழந்தைகளுக்கு உதாரணமாக தங்களது வாழ்க்கையை முதலில் அமைத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குடும்பத்தில் ஒரு சிறிய பிராத்தனை அறை இருக்க வேண்டும், குறைந்தது 10 புத்தகங்கள் கொண்ட ஒரு சிறிய நூலகம் இருக்கவேண்டும். ஒரு வேளையாவது, குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து உணவருந்த வேண்டும். அந்த நேரத்தில் படித்த, பார்த்த நல்ல சம்பவங்களை, குழந்தைகளுக்கு கதை போல சொல்லிக்கொடுக்க வேண்டும்.
இப்படி பல வகைகளில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால், நல்ல கருத்து பரிமாற்றம் நிகழும். அன்பு பிறக்கும். பாசம் வளரும். அறிவுப் பரிமாற்றம் நிகழும். குடும்பத்தில் தெய்வீகம் பிறக்கும். அமைதி பிறக்கும். அப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகள், நம்பிக்கையுடன் உருவாகும், சுயமரியாதையுடன் வாழப் பழகும். தான் செய்யும் அனைத்து செயல்களையும் ஒரு தனித்தன்மையுடன் செய்யவேண்டும் என்ற உணர்வுடன் வளரும். அதைச் செயல்படுத்தும். எனவே இப்படிப்பட்ட ஆன்மிகக் குடும்பம் முதலில் உருவாக வேண்டும்.
இரண்டாவது சந்தோஷம் மிக்க தாய். இது நான் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சொல்லும் விஷயம்.
(இவ்வாறு கூறிவிட்டு, சில வாசகங்களைக் கூறி அதை இளைஞர்கள் திரும்பக் கூறும்படி செய்தார் கலாம்)
இன்று முதல், நான் தாயின் முகத்திலும், அகத்திலும் மகிழ்ச்சியை உருவாக்குவேன். என் தாய் மகிழ்ச்சியாக இருந்தால், என் வீடு மகிழ்ச்சியாக இருக்கும். என் வீடு மகிழ்ச்சியாக இருந்தால், இந்த சமுதாயம் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த சமுதாயம் மகிழ்ச்சியாக இருந்தால், தமிழ்நாடு மகிழ்ச்சியாக இருக்கும். தமிழ்நாடு மகிழ்ச்சியாக இருந்தால், இந்தியா சந்தோஷமடையும்.
அடுத்தது வாய்மையான தந்தை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று சொல்வதுண்டு. தந்தைதான் அறிவையும், ஆற்றலையும், தைரியத்தையும் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும். தந்தைதான் குழந்தைகளுக்கு முதல் ஹீரோ. குழந்தை வளரும் போது தந்தையைப் பார்த்துத்தான் வளர்கிறது. தந்தைதான் வாய்மையாக நடந்து காட்டவேண்டும். நேர்மையாக வாழ்ந்து காட்டவேண்டும். விவேகத்தை ஊட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஒர் எடுத்துக்காட்டாக வாழவேண்டும். அப்படிப்பட்ட வாய்மையான தந்தைதான் இன்றைய சூழ்நிலையில், இளைய சமுதாயத்தைப் பண்படுத்த முடியும். வாய்மையான தந்தைதான் மகிழ்ச்சியான நல்லதொரு குடும்பத்தை உருவாக்குவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறார்.
இறுதியாக தூய்மையான பசுமை வீடு. பூமியின் தட்பவெப்பநிலை மாறி வருகிறது. மரங்களை வெட்டுவதும், தொழிற்சாலைகள், போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்ûஸடு காரணமாக ஒசோன் படலத்தில் ஒட்டை விழுந்து பூமியின் தட்பவெப்ப நிலை அதிகரிப்பதால், இன்றைக்கு மழை பொய்த்து வறட்சி, வெள்ளம் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இளைஞர்கள் நினைத்தால் இந்த சூழ்நிலையை மாற்ற முடியும். ஒவ்வொருவரும் ஒரு மரம் நட வேண்டும்.
ஒரு மரம் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்ûஸடை ஓரு வருடத்திற்கு உள் வாங்கி அழிக்கிறது. 14 கிலோ கிராம் எடையுள்ள ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்நாளில் 10 மரங்கள் நட்டு அதைப் பாதுகாத்தால், ஆயிரம் கோடி மரங்களை நாம் நடுவோம். அப்படி மரங்களை நாம் நட்டால் இந்தியாவில் மாறிவரும் தட்ப வெட்ப சூழலை சமாளித்து, நமது எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்த இயலும். மரம் வளர்ப்பது மட்டும் அல்ல, வீட்டை மட்டுமல்ல, தெருவையும் சுத்தமாக வைத்துக்கொள்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் அப்துல் கலாம்.
மாநாட்டில், உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தமிழ்ச் சங்க, இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்த பிரநிதிகள் கலந்துகொண்ட முதல் அமர்வு பிற்பகலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருப்பூர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் அமர்வைத் தொடங்கிவைத்தார்.
இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து ( இலண்டன்) உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தங்கள் அமைப்புகள், செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்த கருத்துகளைப் பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியை மக்களவைச் செயலக இயக்குநர் கே. ஜான் சுந்தர் தொகுத்து வழங்கினார்.
இம் மாநாட்டில் கலந்துகொண்டோர் பகிர்ந்து கொண்ட கருத்துகள்:-
தலைநகர் தமிழ்ச் சங்கத் தலைவர் சுந்தர்ராஜன்
எங்கள் சங்கம் 38 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வண்டலூரில் சங்கத்தின் கட்டடம் அமைந்துள்ளது. தமிழ் ஆட்சிமொழி, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், தமிழுக்குத் செம்மொழித் தகுதி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல பணிகளை மேற்கொண்டோம்.
அகில இந்திய தமிழ்க் கூட்டமைப்பு அமைக்கக் கோரி 1986ல் பெங்களூரில் கூட்டம் நடத்தினோம். இதில், கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 2008ம் ஆண்டில் தில்லியில் இது தொடர்பான கூட்டம் தில்லித் தமிழ்ச் சங்க ஏற்பாட்டில் நடைபெற்றது. அப்போதுதான் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியை தீவிரப்படுத்தினோம்.
தமிழ்தான் தமிழர்களின் தேசிய அடையாளம். இந்த அடையாளத்தைக் காப்பதற்கு நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
மக்கள் சிந்தனைப் பேரவை நிர்வாகி ஸ்டாலின் குணசேகரன்
18 ஆண்டுகளுக்கு முன்பு எங்களது பேரவை ஆரம்பிக்கப்பட்டது.
மகாகவி பாரதியின் இறுதிப் பேச்சு ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்றது. அதைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் பாரதி விழாவை நடத்தி வருகிறோம்.
கடந்த 8 ஆண்டுகளாக புத்தகத் திருவிழாவை வெகு சிறப்பாக நடத்தி வருகிறோம். தேசிய அளவில் சங்கத் தமிழ்ப் பயிலரங்கங்கள் நடத்தி வருகிறோம். இதில் அறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவையும் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இதில், பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, சா.கணேசன் போன்றோர் உரை நிகழ்த்தியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாகத் திருக்குறள் வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றன. எஸ்.கே.எம். இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
பாரதி இளைஞர் மன்றம் சார்பில் 33 ஆண்டுகளாக பாரதி விழா நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பல்வேறு தமிழ்ப் பணிகளையும் செய்து வருகிறோம்.
பெங்களூர் தமிழ்ச் சங்கச் செயல் பொறுப்பாளர் மீனாட்சிசுந்தரம்
எங்களது சங்கம் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. 1976ம் ஆண்டில் அகில இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மேற்கொள்ள முயற்சி செய்யப்பட்டது. 1980ல் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்றது. அப்போது, இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.
பெங்களூரில் 18 ஆண்டுகளாக கோணிப் பையில் மூடப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை திறக்கும் முயற்சியை மேற்கொண்டோம். அது நல்லெண்ண நடவடிக்கையால் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்மொழி இலக்கியங்களை கன்னடத்திலும், கன்னட இலக்கியங்களைத் தமிழிலும் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கெனவே அகநானூறு, புறநானூறு கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கன்னட மொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்க கர்நாடக முதல்வருக்குத் திட்டவரைவு கொடுத்துள்ளோம்.
பெங்களூர் தமிழ்ச் சங்க நூலகத்தில் ஏராளமான நூல்களை வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொழி வளர்ச்சிக்கான பங்களிப்பைச் செய்து வருகிறோம்.
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்துராமன்
தமிழ்க் கலை, இலக்கியம், பண்பாடு, தமிழ்மொழி வளர்ச்சிக்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம். கேரள அரசின் மொழி சிறுபான்மையினர் உரிமைகள் குழுவின் உறுப்பினராகவும் இருந்து வருகிறோம்.
1998ல் அனைத்து கேரள தமிழ்ப் பேரவை உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக அபு பக்கர் இருந்து வருகிறார். இந்த அமைப்பும் தமிழ் வளர்ச்சி, தமிழர் நலனுக்கான பணிகளைத் திறம்பட ஆற்றி வருகிறது.
தமிழ் மொழியில் இருந்து மலையாளத்திற்கும், அம்மொழியில் இருந்து தமிழுக்கும் பல படைப்புகளை மொழிமாற்றம் செய்யும் பணிகளை மேற்கொள்வோரை விழா நடத்தி ஊக்குவித்து வருகிறோம்.
திருக்குறள், திருமந்திரம், திருவாசகம் ஆகியவை மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாரதி விழாவை 50 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். தமிழ்ப் பண்பாட்டு விழா நடத்தப்படுகிறது.
சங்க வளாகத்தில் 20 ஆயிரம் நூல்கள் கொண்ட நூலகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கே.எம்.எஸ் கலை உலகம், பிரதிநிதி உலகநாதன்
2002ல் இளைஞர் கே. முத்துசாமியால் ஆரம்பிக்கப்பட்டது எங்கள் அமைப்பு. புலம் பெயர்ந்து தில்லியில் வாழும் தமிழர்களின் முத்தமிழ்ப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது. தமிழ் திரை உலக முக்கியப் பிரமுகர்களை அழைத்து வந்து கலை நிகழ்ச்சியை நடத்தியது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரை விருது வழங்கி கௌரவித்து வருகிறோம்.
தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்ச் சங்கங்களும் இலக்கிய அமைப்புகளும் தலைநகர் தில்லியில் வந்து கூடினர் என்பதுடன் நின்றுவிடவில்லை இந்த மாநாடு. கோலாலம்பூர், இலண்டன், நியூயார்க் என்று உலகின் பல்வேறு நகரங்களில் இருந்தும் "தினமணி" செய்தியைப் படித்துவிட்டு இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் கலந்துகொள்ளப் பிரதிநிதிகள் வந்திருந்ததுதான் உவகையைப் பேருவகை ஆக்கியது.
கோலாலம்பூரிலிருந்து வந்திருந்த மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. இராசேந்திரன் முன்வைத்த ஒரு கோரிக்கை நெகிழ வைத்தது. இதயத்தை சற்று வலிக்க வைத்தது. தாய் மண்ணில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்கிறோம். ஆனால், எங்களைப் பற்றிய செய்திகள் எதுவுமே தாய்மண்ணில் வாழும் தமிழர்களுக்குத் தெரிவதில்லையே என்கிற அவரது நியாயமான ஆதங்கம் இதழாசிரியர் என்கிற முறையில் என்னைச் சிந்திக்க வைத்தது.
இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார் என்று சொல்வதைவிட, தமிழ் இலக்கிய அமைப்புகளின் நல்லுறவுக்கும் புரிந்துணர்வுக்கும் அடித்தளமிட்டார் என்றுதான் கூறவேண்டும்.
தங்களது சொந்தச் செலவில் இந்த மாநாட்டில் பங்குகொள்ளத் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கத்தில் வந்து கூடிய ஏறத்தாழ 250 அமைப்புகளுக்கும் சிரம் தாழ்த்தி நன்றிகூற "தினமணி" கடமைப்பட்டிருக்கிறது. "அமைப்பு ரீதியாகப் பிரிந்திருந்தாலும் உணர்வால் இணைவோம்" என்கிற கோஷத்தை முன்வைத்து நடத்தப்பட்ட இந்த மாநாட்டின் வெற்றியைத் தமிழ் அன்னையின் காலடியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் உறுதுணையுடன் சமர்ப்பிக்கிறோம்.
மகாகவி பாரதியாரின் நினைவாக கல்கத்தாவில் உள்ள ஒரு சாலைக்கு "கவி பாரதிசரணி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை கல்கத்தா தமிழ் மன்றம் மேற்கொண்டது. திரு.வி.க., தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ம.பொ.சி., ப. ஜீவானந்தம், புதுமைப்பித்தன், டாக்டர் மு.வ. உள்ளிட்ட தமிழ் அறிஞர்களின் திருவுருவப் படத் திறப்புகளை நடத்தியது கொல்கத்தா தமிழ்மன்றம்.
திருக்குறள் மனப்பாடப் போட்டி, புதுமைப்பித்தன் நினைவுக் கவிதைச்சொல்வண்ணம் போட்டி, அறிஞர் அண்ணா நினைவுத் தமிழ்ச் சொற்பொழிவுப் போட்டி, கிருபானந்த வாரியார் நினைவு ஆன்மிகச் சொற்பொழிவுப் போட்டி, கண்ணதாசன் நினைவு தமிழ் மெல்லிசைப் போட்டி, திரு.வி.க. நினைவு கட்டுரைப் போட்டி, கல்கி நினைவு தமிழ் சிறுகதைப் போட்டி, நாமக்கல் கவிஞர் நினைவு கவிதைப் போட்டி ஆகிய போட்டிகளையும் நடத்திப் பரிசு வழங்குகிறது கொல்கத்தா தமிழ்மன்றம்.
வருகிற 2013ஆம் ஆண்டு வைர விழாவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த மன்றம் இன்னும் பல தமிழ்ப் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறது.
இலக்கியத் தரமிக்க தொன்மையான தமிழ் வீரயுகப் பாடல்கள் சுமேரிய, கிரேக்க வீரயுகப் பாடல்களோடு ஒப்பிடத்தக்கன என்றும், இலியட், ஒடிசி ஆகிய கிரேக்கப் பாடல்கள் தேசிய உணர்வு ஏற்பட வழியமைத்துக் கொடுத்ததுபோல தமிழ்நாட்டில் இன உணர்வும், மொழிவழிப்பட்ட தேசிய உணர்வும் வேர்விட்டு வளர தமிழ் வீரயுகப் பாடல்கள் அடித்தளமாக அமைந்தன என்றும் அறிஞர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் கூறியுள்ளார்.
தமிழ் இலக்கியங்கள் காலத்தைக் கடந்து நிற்பதற்குக் காரணம் என்ன? அவை காலத்துக்கேற்பக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டதுதான். "காதலும் போரும் பழைய இலக்கியங்களின் கருத்தாகவும், சமயமும் தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாகவும், விஞ்ஞானமும் மனித வியலும் தற்கால இலக்கியங்களின் பிழிவாகவும் அமைந்துள்ளன" என்றார் எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை.
ஆனால், சங்க இலக்கியங்களையும், பிற்பட்ட இலக்கியங்களையும் படிக்கும்போது, முச்சங்கங்களுக்கு முந்தியும், பிந்தியும் தமிழ்நாட்டில் தமிழ்ச்சங்கங்கள் இருந்தமைக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. அகம் - புறம் பற்றிய தொகைநூல்களில் தமிழ்ச்சங்கங்களில் உறுப்பினர்களாகயிருந்த புலவர்களுடைய பாட்டுகளே இடம்பெற்றுள்ளன என்பதிலிருந்தே இதை அறிந்துகொள்ளலாம்.
தலைச்சங்கம் எனப்படும் முதற்சங்கத்துக்கு முன்பே தென்மதுரைத் தமிழ்ச்சங்கம், மகேந்திரமலை தமிழ்ச்சங்கம், பொதியமலைத் தமிழ்ச்சங்கம், மணிமலைத் தமிழ்ச்சங்கம், குன்றம் எடுத்த குமரவேள் தமிழ்ச்சங்கம் முதலிய தமிழ் அமைப்புகள் இருந்தன.
முதற் சங்கத்துக்கும், இடைச் சங்கத்துக்கும் ஏற்பட்ட இடைவெளியில் முதுகுடுமித் தமிழ்ச்சங்கம் என்ற பெயரில் ஓர் அமைப்பு இருந்துள்ளது. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் இதை நிறுவினான். கடைச்சங்கத்துக்கும், இடைச்சங்கத்துக்கும் ஏற்பட்ட கால இடைவெளியில் திருப்பரங்குன்றத்துத் தென்மதுரைத் தமிழ்ச்சங்கம் இருந்தது.
இவை தவிர, வச்சிரநந்தி தமிழ்ச்சங்கம், மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம், கோவைத் தமிழ்ச்சங்கம், கரந்தைத் தமிழ்ச்சங்கம் மற்றும் ஊர்தோரும் தமிழ்ச்சங்கங்கள் செயல்பட்டு வந்துள்ளன. இவற்றுக்குள் ஓர் ஒருங்கிணைப்பு இல்லை என்பதும் வெளிப்படை.
இச்சங்கங்கள் எல்லாம் குருகுலவாசம் எனப்பட்ட கல்விச்சாலைகளாக இருந்தன எனத் தெரிகிறது. இங்கு மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்றனர். இச்சங்கங்களில் சீனா, காந்தாரம், எகிப்து, பாபிலோனியா, அக்கேடியா, அமேரியா, பாரசிகம், இலங்கை முதலிய நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து கல்வி பெற்றுச் சென்றுள்ளனர் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
இவ்வாறு தமிழ் வளர்த்த அமைப்புகள் காலந்தோறும் அழிந்து புதிய புதிய அமைப்புகள் தோன்றியபடி இருந்துள்ளன. இதற்குக் கடல்கோள்கள் போன்ற இயற்கைச் சீற்றங்களும் காரணம். அடிக்கடி தமிழ் மன்னர்கள் போரிட்டுக் கொண்டதால் போர்க்காலங்களில் தமிழ்ச்சங்கங்கள் கவனிப்பார் இல்லாமலும் அழிந்தொழிந்தன.
கடைச்சங்கம் அழிவெய்திய 15 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்ந்த மாணிக்க வாசகர் (கி.பி. 250 -282) இந்தத் தமிழ்ச்சங்கத்தைப் பற்றிப் பாடுகிறார். அவர் பாண்டியன் அவையில் முதலமைச்சராக இருந்ததால் தமிழ்ச்சங்கம் நடைபெற்று வந்ததற்கான ஆதாரங்களை அவர் அறிந்துள்ளார். அதனால்தான் "கூடலில் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ?" என்று பாடுகிறார்.
எனவே தமிழ்ச்சங்கங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றன, நடைபெற்று வருகின்றன என்பதற்கு ஐயம் கிடையாது. தமிழை வளர்க்க வேண்டும் என்பதற்காக அன்றும், இன்றும் பாடுபடுவோர் இல்லாமல் இல்லை. அந்த நல்லவர்களின் முயற்சியும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.
அறிவியல் வளராத அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட இலக்கிய அமைப்புகள் செய்த பணிகள் எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், எல்லா வசதிகளும் பெற்ற இந்தக் காலத்தில் தெரிந்து கொள்ளவும், தொடர்பு கொள்ளவும் தகவல் தொடர்பு ஊடகங்கள் பெருகிவிட்டன. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?
இன்று தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் ஆங்கில மோகம் தாய்மொழியை வீழ்த்தி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த அச்சத்தை அகற்றும் பணியை நம் தமிழ் அமைப்புகள் செய்ய முன்வர வேண்டும். "செய்யும்' என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்த வேண்டாமா?
"மெல்லத் தமிழ் இனி சாகும்" என்று ஒரு பேதை உரைத்ததற்கே ஆத்திரம் கொண்டார் பாரதி. அந்த சத்திய ஆவேசம் ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் வரவேண்டாமா?
இன்று வளமான, வசதியான கட்டடத்தில் இயங்கி வரும் தமிழ்ச் சங்கத்தைப் பார்த்து, "தமிழ்ச் சங்கம் பிறக்கும்போதே செல்லப் பிள்ளையாகப் பிறந்திருக்கும்" என்று எண்ணிவிடக் கூடாது. அலுவல் காரணமாக தில்லியில் தங்கியிருந்த தமிழர்கள் சிலரது உறைவிடமாகவும் இருந்தது "நியூ மதராஸ் போர்டிங் ஹவுஸ்". இந்த உணவு விடுதியின் நெரிசலான அறையில்தான் தில்லித் தமிழ்ச் சங்கம் பிறந்தது. எஸ். சுப்பிரமணியம், அ.வி. குப்புசாமி, கே.சி. கமலையா, கணபதி இராமய்யர், இரா. அரங்கராஜன், ம.பாலசுப்பிரமணியன், ஆ. திருமலை கோவிந்தன் ஆகியோரும் வேறு சிலரும் அவ்வப்போது சந்தித்து உரையாடியதன் பயனாக 1946ல் ஜனவரி மாதத்தில் உருவானது "டெல்லித் தமிழ்ச் சங்கம்". ஆனால், முறையான தொடக்க விழா நடந்தது சித்திரை விழாவின்போதுதான்.
அத்துடன், சிறிய அளவில் நூலகத்தையும் தமிழ் அன்பர்கள் தொடங்கினார்கள். எம். பாலசுப்பிரமணியத்தின் அறையில்தான் நூல் நிலையம் உருவானது. அவரது பராமரிப்பில் இருந்த சில புத்தகங்களுடன் இருந்த சிறிய நூல்நிலையம் படிப்படியாக வளர்ந்ததுடன், பல தமிழ் அன்பர்களை ஈர்த்து, இணைக்கும் பொது மையமாகவும் திகழ்ந்தது.
அப்போது, சுப்பிரமணியம் தலைவராகவும், ஏ.வி.ஒய். நாராயணன், சி.ஏ. இராதாபாய் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், குப்புசாமி செயலாளராகவும், பி.ஏ.இராஜகோபாலன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அப்போது தில்லியில் பெரிய தலைவராக விளங்கிய இராவ்பகதூர் சி. குப்புசாமி முதலியார் தலைமையில் தால்கட்டோரா கிளப் கட்டடத்தில் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. அதில், அப்போது நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்த மூதறிஞர் இராஜாஜி, "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" ஆங்கில இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்த க. சந்தானம் ஆகியோர் பங்கேற்றனர்.
சில மாதங்களிலேயே தமிழ்ச் சங்கம் புதிய தில்லியின் மையமாக உள்ள கனாட் பிளேஸ் பகுதியில் ஓர் அழகிய கட்டடத்தில் குடி புகுந்தது. அப்போது, சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளும் அதிகரித்தன. நூலகமும், படிப்பகமும் விரிவடைந்தன.
அந்தச் சமயத்தில்தான், நிகழ்ச்சிகள் நடைபெறும் நாள்களில் மட்டும் தமிழ்ச் சங்கத்துக்கு வருவது என்ற நிலை மாறி, அன்றாடம் மாலை நேரத்தில் தமிழர்கள் கூடிப் பேசுவது உருவானது. அதுவே சங்கத்துக்குப் பெரும் வலுவை ஊட்டியது.
தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு ஊக்கமளித்த பெரியோர்களில் டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார், டாக்டர் சி.பி. இராமசாமி ஐயர்,
மும்பையில் வள்ளுவர்!
மும்பை தமிழ்ச்சங்கத்தில் நிறுவப்பட்டிருக்கும் ஏழடி உயர திருவள்ளுவர் சிலை. சாலையின் பெயரும் திருவள்ளுவர் பெயரிலேயே அமைந்திருக்கிறது.
இளைய தலைமுறையினரிடையே திருக்குறளின் அருமையையும், பெருமையையும் பரப்பும் முயற்சியாக நவி மும்பை தமிழ்ச் சங்கம் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் இதில் பங்கேற்று சிறப்பித்தனர். பங்கேற்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பயனுள்ள பரிசை, நவி மும்பை தமிழ்ச் சங்கம் தமிழ் அன்பர்களின் உதவியுடன் பங்கேற்பு பரிசாக வழங்குவதுடன் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் சிற்றுண்டியும் உணவும் வழங்கி மகிழ்கிறது.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலா இந்த நிலை என்று எண்ணிக் கலங்கிய அந்தநெஞ்சத்தில் ஆக்கம் பெற்று, 14.09.1901 அன்று (பிலவ ஆண்டு ஆவணித்திங்கள் 13ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை உதயமாயிற்று மதுரையின் நான்காம் தமிழ்ச்சங்கம்.
மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி மண்டபத்தில் நிறுவப்பெற்ற அதேநாளில், சேதுபதி செந்தமிழ்க்கலாசாலை, பாண்டியன் புத்தகசாலை, நூலாராய்ச்சி சாலை ஆகியனவும் தொடங்கப்பெற்றமை வரலாற்றுச் சிறப்பு. கலாசாலைக்கு நாராயணஐயங்காரும், நூலாராய்ச்சி சாலைக்கு இரா.இராகவையங்காரும் தலைமையேற்றனர்.
தமிழ்க்கல்லூரி உண்டாக்குதல், .இறவாத புகழுடைய ஏடுகளையும் நூல்களையும் தேடிப் பலருக்கும் பயனளிக்கும் வகையில் பாதுகாத்தளித்தல்.
அச்சேறாத அரியநூல்களை அச்சிட்டுப் பரப்புதல், வடமொழி ஆங்கிலம் முதலியவற்றில் வெளிவந்துள்ள திறமிகு நூல்களை மொழிபெயர்த்தல், தமிழ்க் கல்வி பற்றி இதழ் வெளியிடுதல், தக்கோரைக் கொண்டு தமிழாய்தல், பேருரையாற்றச் செய்தல், தமிழில் தேர்வு நடத்தி மாணாக்கர்கட்குப் பரிசில் வழங்குதல் முதலிய நோக்கங்களைச் செயலாற்றத் தொடங்கியது இச்சங்கம். அரசஞ்சண்முகனார், பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரிகள்), சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர், சே.ரா. அருணாசலக்கவிராயர், கந்தசாமிக்கவிராயர் உள்ளிட்டோர் இருந்து தமிழ்வளர்த்த பெருமையுடையது இச்சங்கம். செந்தமிழ் மாத இதழும், செந்தமிழ்க்கல்லூரியும் இதன் செவிலிமையில் தோன்றியவையே.
ஸ்ரீமான், சீமாட்டி, விவாக சுபமுகூர்த்தப் பத்திரிகை போன்ற சொற்களுக்கு நிகராக, திரு. திருமதி, திருமண அழைப்பிதழ் என்ற சொல்லாக்கங்களை நடைமுறைப்படுத்திய பெருமை இச்சங்கத்திற்கு உண்டு. இதனை அடியாகக் கொண்டு கரந்தையில் பல்வேறு கல்விநிலையங்கள் தோற்றுவிக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும்.
காலக்கரையானுக்கு இரையாகிக்கொண்டிருந்த ஓலைத்தமிழைக் கண்டு அச்சேற்றித் தமிழுள்ள காலம் எல்லாம் நிலைத்து வாழும் உ.வே.சா. எழுதிய "என் சரித்திரம்" நூலைப் படித்த ஒருவர் தம் காலத்தில் தமிழ்த்தொண்டு புரிவதற்கு முனைந்தார். ஓலையில் எழுதிய தமிழைக் காகிதத்தில் அச்சிட்டால் மட்டும் போதாது. காலகாலத்திற்கும் நிலைக்கும் வண்ணம் தமிழர்களின் உள்ளங்களில் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தம் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர் ஒருவரைத் துணைக்கொண்டு களம் இறங்கினார் ஒரு காரைக்குடிக்காரர். அவர் மனதில் நிலை பெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கம் கண்ட தமிழவேள் உமாமகேசுவரனார் வாழ்க்கை ஓர் உதாரணமாக அமைய உதயமானது, இந்தியப் பல்தமிழ்க்கழகம்.
முறைப்படி தமிழ் கற்க வருவோர்க்குப் பாடம் சொல்லப் பள்ளிகளும், கல்லூரிகளும் இருந்த காலத்தில் முறைசாராக்கல்வியாகத் தமிழ்க்கல்வி வழங்கிய நிறுவனம் இது. விடுமுறைக்காலங்களில் தமிழ் வகுப்பு நடத்தும் அரசு பதிவு பெற்ற இந்நிறுவனத்தில் ஈராண்டு தமிழ் பயில்வோருக்கு இளமணி பட்டமும், நான்காண்டுகள் பயில்வோருக்கு முதுமணி பட்டமும் வழங்கப் பெற்றன. ஒரு தலைமுறை மாணாக்கரை உருவாக்கிய இம்முயற்சி காலப்போக்கில் தோல்வியைத் தழுவவே, மீண்டும் அந்தத் தமிழறிஞரைத் துணைக்கொண்டு, இக்கழகத்தைக் கல்லூரியாக்கினார் அந்தக் காரைக்குடிக்காரர். அதற்கான கட்டட வசதி இல்லாத நிலையில் வள்ளல் அழகப்பரைப்போலவே, தாம் குடியிருந்த வீட்டையே கல்லூரி நடத்தக் கொடுத்தார். அவரும் அந்தத் தமிழறிஞரும் யாரென்றா கேட்கிறீர்கள்? அவர்கள்தான் செம்மல் வ.சுப. மாணிக்கமும் இராம. பெரியகருப்பனும்.
தமிழறிஞர், தமிழ்க்காதல் நூல் தந்தவர் வ.சுப.மாணிக்கம். தமிழின்மீது தணியாக் காதல் கொண்டவர் பெரியகருப்பன். தம் இல்லத்தில் தனிநாயக அடிகள், ஜி.யு.போப், விபுலானந்தர், கால்டுவெல், வீரமாமுனிவர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் படங்களை வைத்துக் கொண்டவர். குடியிருந்த வீடுகளுக்கு எல்லாம் திரு.வி.க. இல்லம். பாரதி நிலையம், நீலாம்பிகையம்மையார் இல்லம் எனப் பெயர் வைத்ததோடு சிங்கப்பூரில் தாம் நடத்திவந்த தொழில் நிறுவனத்திற்கும் முதன்முதலில் தமிழில் விளம்பரப்பலகை வைத்த பெருமைக்குரியவர்.
தமது தந்தை பெயரால் இவர் காரைக்குடியில் உருவாக்கிய கல்லூரிதாம் இராமசாமி தமிழ்க்கல்லூரி. மதுரைப் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்று 18.06.1967இல் தொடங்கப்பெற்ற இக்கல்லூரி, தனித்தமிழ் நல்கும் ஒரு துறைக் கல்லூரியாக இயங்குகிறது. தொடக்கத்தில் நான்காண்டு பயில்வோர்க்குப் பட்டயச்சான்று வழங்கிய இக்கல்லூரி, 1976 முதல் பி.லிட் என்ற பட்டப்படிப்பை வழங்கிவருகிறது. 2003-2004ஆம் கல்வியாண்டில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தோடு இணைவுபெற்ற இக்கல்லூரி இருபாலரும் பயிலும் நிறுவனம். சுமார் 12,000க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூல் நிலையம் இங்கு இயங்கிவருகிறது. இக்கல்லூரியினைரைவிடவும், உள்ளூர் மற்றும் வெளியூர்ப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் எப்போது வேண்டுமானாலும் - குறிப்பாக விடுமுறை நாட்களில் கூட வந்து படித்து ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவான சூழல் இருக்கிறது, வருகிறார்கள்.
அவ்வூரைச் சார்ந்த சா.சிதம்பரம், பெரி.சித.இராமசாமி, பெரி.அரு.பெரியகருப்பன் ஆகியோர் கூடி, 22.07.1922இல் ஏ.கே.செட்டியாரை அழைத்து வந்து இச்சங்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். 16.01.1933இல் இச்சங்கத்தின் சார்பில், ஸ்ரீசரசுவதி வித்யாசாலை எனும் தொடக்கப்பள்ளி தொடங்கப்பெற்றது.
இங்கே வந்து பலநாள்கள் இந்தக் குழந்தைகளோடு உரையாடி, உறவாடி மகிழ்ந்து நெகிழ்ந்து தமது உணர்வுகளைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் நெல்லைச் சீமைக்காரர். அவர் வேறு யாருமல்லர். சிராவயலுக்கு வந்த வ.உ.சிதம்பரனார் தாம்.
அவர் மட்டுமா, இரசிகமணி டி.கே.சி., தந்தை பெரியார், கல்கி, ம.பொ.சி, நீலாம்பிகை அம்மையார், கி.வா.ஜகந்நாதன், அ.சரவணமுதலியார், முரு.பழ.இரத்தினஞ் செட்டியார், குன்றக்குடி அடிகளார், ஜெகவீரபாண்டியன், அ.ச.ஞானசம்பந்தன், குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா தொடங்கி இன்றைய தமிழ் அறிஞர்கள் வரைக்கும் வருகை தந்து சிறப்பித்து இருக்கிறார்கள்.
ஸ்ரீ சரஸ்வதி சங்கம் இலக்கியக் கழகமாக விளங்கியது. இச்சங்கம் ஆண்டுதோறும் ஆண்டுவிழாவினை இலக்கிய விழாவாக இன்றுவரைக் கொண்டாடி வருகின்றது. வெள்ளிவிழா மலர், பொன்விழா மலர் போன்றன இச்சங்கத்தின் விழாக்களின்போது வெளியிடப்பெற்றன.
இந்த ஆசிரமத்திற்குக் காந்தியைப்போலவே வருகை தந்து சிறப்பித்தவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்.
1929இல் சிராவயலில் இருந்த இக்குருகுலம் பக்கத்து ஊரான நாச்சியார்புரத்திற்கு மாற்றப்பட்டது. அந்தச் சமயம்தான், ஈ.வெ.ரா., ஜனசங்கரகண்ணப்பர், சுவாமி கைவல்யம், கோவை அய்யாமுத்து இவர்களின் தொடர்பு ஜீவாவுக்கு கிட்டியது. அக்காலத்தில் நடத்தப்பெற்ற மதுவிலக்குப் பிரசாரத்திற்காகக் குருகுலக் குழந்தைகளைக் கொண்டு நாடகங்கள் நடத்தியவர் தோழர் ஜீவா. தணியாத தமிழ்ப்பற்றால், தம்பெயரை, "உயிர் இன்பன்" என மாற்றிக்கொண்ட ஜீவா, தம்பி நடராஜனை, மணிமொழியாக்கினார். இதனையடுத்து, சுவாமிநாதன் - மணித்தொண்டன், கிருஷ்ணன் பிள்ளை -"இளங்கோ", இராமசாமி -"தொல்காப்பியன்", நாகலட்சுமி - "கிளிமொழி" என்று ஆனார்கள். இதுபோல், எத்தனையோ குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டித் தமிழன்னையை மகிழச் செய்தவர் ஜீவா.
வித்யாபாநு இதழாசிரியர் மு.ரா.கந்தசாமிக் கவிராயர், கீழச்சிவல்பட்டி வித்துவான் பீமகவி, தேவகோட்டை வேல்சாமிக்கவிராயர், வேந்தன்பட்டி புலவர் வாத்தியார் என்ற சைவப்பிள்ளை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருக்கோயில் பணிகளிலும், தெய்வப்பணிகளிலும் தலைநின்ற நகரத்தார் சமூகத்தைக் கல்விப்பணிக்கு முதன்முதலாகத் திருப்பிவிட்ட பெருமை இச்சபைக்கு உண்டு.
ஒழுக்கம், பக்தி, கல்வி வளர்க்கும் நோக்கில், சைவசமயக்குரவர் மற்றும் காரைக்காலம்மையார் குருபூசைகள் நடத்தப்பெற்று ஏழைகளுக்கும், சிவனடியார்களுக்கும் அன்னம்பாலிப்பதோடு, சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு சொற்பொழிவுகளும் நிகழ்த்தப்பெற்றன. தமிழ் வளர்ச்சிக்கு உதவும் வகையில், கல்விக்கூடங்கள் நிறுவுதல், நூலகம் அமைத்தல், நூல்வெளியீடு, மொழிபெயர்த்தல், தக்கோர்க்குப் பட்டமளித்தல் என்று தம் பணிகளை வடிவமைத்துக்கொண்ட இச்சபை, வடமொழியும் தமிழும் நன்கறிந்த மு.கதிரேசஞ் செட்டியாருக்கு, இயற்பெயரெனவே விளங்கும்படிக்கு, பண்டிதமணி என்ற பட்டம் கொடுத்தது. தம் தகுதியையும் பெருமையையும் இழவாது தம்மைச் சிறப்புற அமைத்துக் கொண்டது இக்கல்லூரி.
1918 ஏப்ரல் 23லேயே தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்று அன்றைய ஆங்கிலேய அரசிற்குப் பண்டித மணி நாவலர் சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட தமிழறிஞர்கள்கூடி தீர்மானம் இயற்றியதோடு, அன்றைய ஆங்கில அரசின் கவர்னருக்கும் பம்பாய், அலகாபாத் சென்னை, பஞ்சாப் முதலான பல்கலைக் கழகங்களுக்கும் தீர்மான நகல் அனுப்பி அவர்களது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது இச்சபை. இதற்கான குறிப்புகள் இருக்கின்றன.
(Institute Francais de Pondichery), கடந்த 1950இல் இருந்து ஓலைச்சுவடிகளை சேகரித்து, பாதுகாத்து வருகிறது. ஓலைச்சுவடிகளின் பெரும்பகுதி சைவ ஆகமம் தொடர்பானவை. சைவம் தொடர்பாக மட்டும் 2 இலட்சம் பக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இணையத்தளத்தில் ஓலைச்சுவடியை எழுதியவர் விவரம், சுவடியின் அளவு, மொழி, அதன் காலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், சேகரித்து வைத்துள்ள சைவ ஆகம ஓலைச்சுவடிகளின் தொகுப்பை யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டி உலகத்தின் நினைவு என்று அங்கீகரித்துள்ளது. தேசிய ஓலைச்சுவடிகளுக்கான ஆணையமும் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் பணிகளை அங்கீகரித்துள்ளது.
அண்மையில், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும், கீழ்திசை நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும் இணைந்து ஓலைச்சுவடிகளுக்கான இணைய தளத்தை உருவாக்கி உள்ளன. இத்தளத்தில், 1,144 ஓலைச்சுவடிகள் கையெழுத்து சுவடிகளாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
திரும்பிய திசையெங்கும் இலக்கிய அமைப்புகள் நிரம்பித் ததும்பும் தமிழ்ச்சோலை என்று புதுச்சேரியைச் சொல்லலாம். கம்பன் கழகத்தோடு, புதுவைத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கழகம், புதுவை எழுத்தாளர் கழகம், மக்கள் கலைக்கழகம், புதுமைத் தமிழ்க்கலைமன்றம், பாவலர் பயிற்சிப்பட்டறை மன்றம், கவிதைவானில் கவிமன்றம் மற்றும் பாரதி, பாரதிதாசன், வாணிதாசன், புதுவைசிவம் முதலிய புதுவைப் படைப்பாளிகளின் பெயர்களைத் தாங்கிய பேரவைகள், இதழ் சார்ந்த இயக்கங்கள், தமிழகத்தின் கலைஇலக்கிய அமைப்புகளான, கலைஇலக்கிப்பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அமைப்புகள், தெருவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்யும் இயக்கங்கள் நிரம்பிய தலம், புதுச்சேரி. அந்த வரிசையில், புதுவையில் தமிழ்ச்சங்கமும் உண்டு.
பெருமைக்குரிய பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் அந்தகக்கவி வீரராகவர், களத்தூர் வேதகிரியார், நாகலிங்க சுவாமிகள் போன்ற தலைசிறந்த புலவர்கள் அணிசெய்த பெருமைக்குரியது இச்சங்கம். 24.09.1967இல் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படத்தொடங்கியது. மாதந்தோறும் கருத்தரங்கம், நூல்வெளியீடு, இலக்கியச்சொற்பொழிவு, பயிலரங்குகள் என்று ஓய்வறியாப் பல பணிகள் புரிந்து வருகிறது இச்சங்கம்.
1. தமிழிலுள்ள தொல்காப்பியம் முதலிய சீரிய இலக்கண நூல்களையும் திருக்குறள் முதலிய ஒப்புயர்வற்ற உறுதி நூல்களையும், சங்கத்துச்சான்றோர் இயற்றிய செழும்பொருட்செந்தமிழ் இலக்கியங்களையும், பெருங்காப்பியங்களையும், பக்தி ஞானம் கனிந்து பேரின்பப்பயன் அளிக்கவல்ல தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி முதலிய அருள் நூல்களையும், சமயச்சார்பான வேதாந்த, சித்தாந்த, சித்தயோக நூல்களையும் பிறவற்றையும் நன்கு கற்கும்படி ஏற்பாடு செய்தல்.
2. ஆங்கிலத்துக்கும் வடமொழி முதலியவற்றிலும் உள்ளனவும், தற்காலத்துக்கு ஏற்றனவுமாகிய பல்வகைக் கலைகளையும் மொழிபெயர்த்தும், தமிழிலேயே புதிய நூல்களை ஆக்கியும் வெளிப்படுத்துதல்.
3. இன்றியமையாத பிறமொழிகளையும் ஏற்குமாறு கற்பித்தல்.
4. பல மதங்களின் உண்மையான கருத்துகளையும் நடுவுநிலைமையோடு போதித்துத் தெய்வபக்தியும், வாய்மை தூய்மை முதலிய நற்குணங்களும், மக்கள் யாவரிடத்தும் அன்பும் தேசாபிமானமும் உண்டாகுமாறு செய்தல்.
5. ஓரளவாவது தொழிற்பயிற்சி நடைபெறுவித்தல்.
6. அறிவு வளர்ச்சிக்கான நூல்நிலையம், ஆராய்ச்சி நிலையம் முதலிய அங்கங்களை அமைத்தல்.
இத்தகு அம்சங்களோடு தொடங்கப்பெறும் திருவருள் கல்லூரிக்கு நன்கொடையாக அப்போது ரூபாய் ஐம்பது நல்கினார் தந்தை பெரியார். எனினும் காரியம் கைகூடவில்லை. பின்னர் நாட்டாரின் நூற்றாண்டுப்போதில், 1984இல் இம்முயற்சி மேலும் கொள்ளப்பெற்றது. அப்போதும் இயலவில்லை. ஒருவழியாக, 14.10.1992இல் அவர் விரும்பிய வண்ணம், அவரது பெயரையும் இணைத்து உதயமானது, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி. இப்போது வயது பதினெட்டு.
நன்றி:- தினமணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil