சும்மாவா சொன்னாங்க!
வீட்டுல பெருசுங்க யாராச்சும் இருந்தா... பசங்க எதைச் செஞ்சாலும் தொணதொணத்துக்கிட்டே இருப்பாங்க. 'டேய்... நாதாங்கியை (தாழ்ப்பாள்) ஆட்டாதே... சண்டை வரும்'னு மொட்டைத் தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு மண்டையைக் காய வெப்பாங்க. ஆனா, சொல்ல வந்த விஷயம் வேறயா இருக்கும்... அதோட உட்பொருள் அதி முக்கியமானதாவும் இருக்கும்! இதை நேரடியாவே சொல்லியிருக்கலாம்தான். ஆனா, இப்படிச் சொன்னாத்தானே சின்னஞ்சிறுசுக கிராஸ் கேள்வி கேக்காம அதை ஏத்துக்கும்!
1. 'தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'
அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.
2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.'
வெட்டித்
துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட
கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு
வழிவகுத்துவிடும்.
3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம்.'
நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.
4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'
கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.
5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.'
வீட்டுக்குள்
பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை
தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில்
அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும்
சிரமம்.
6. 'வீட்டுத் தோட்டத்தில் ஆமணக்கு வளர்த்தால், அதன் காய்கள் வெடித்து விதைகள் சிதறுவதுபோல் குடும்பம் சிதறிடும்.'
ஆமணக்கு காய் முற்றியவுடன், அதன் விதைகள் கீழே சிதறிக்கிடக்கும். தெரியாமல் சிறுபிள்ளைகள் சாப்பிட்டால் தொண்டையில் சிக்கிக் கொண்டு விபரீதமாகிவிடும். அதனால்தான் அதை வீட்டுக்கு அருகில் வளர்க்கக் கூடாது.
7. 'பஞ்சு பறந்தா... பணம் பறக்கும்.'
வீட்டில் தலையணைக்காக இலவம் பஞ்சு வாங்கி வந்து அடைப்போம். அப்போது, அதைக் கண்டபடி பறக்கவிட்டு விளையாடுவார்கள் குழந்தைகள். அப்படி பறந்தால்... விலை உயர்ந்த பொருளான இலவம் பஞ்சு வீணாகி பணத்துக்குதான் வேட்டு. அதேபோல, சுவாசத்தின் மூலம் உடலுக்குள் போய் வைத்திய செலவை வேறு இழுத்து வைக்கும்.
8. 'வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.'
புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.
9. 'இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!'
கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.
10. 'புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.'
புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.
11. 'முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.'
மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்.
12. 'தோட்டத்தில் முதல் வெள்ளாமையாக தென்னை வைக்கக் கூடாது.'அது காய்ப்புக்கு வந்து பலன் கொடுக்க ஆண்டுக் கணக்கில் ஆகும். அதற்குள் 'அடச்சே' என்று வெறுத்துவிடும். எனவே, சீக்கிரமாக பலன் கொடுக்கும் பயிர்களை ஆரம்பத்தில் பயிர் செய்வது நல்லது.
புரியும் புதிர்கள்!
கிராமப்புறங்களில்
எல்லாவற்றுக்குமே ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிவிடுவார்கள். பல சமயங்களில்
அது நம்ப முடியாததாகக்கூட தோன்றும். ஆனால், உண்மையை அலசி ஆராய்ந்து
பார்த்தால்... அத்தனையும் சொக்கத் தங்கம் என்பீர்கள்!
13. 'தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...'
சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!
14. 'வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.'
பூமியின்
காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து
படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும்
தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.
15. 'வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.'இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.
16. 'அதிகாலையில் முங்கிக் குளி.'
சூரியன் உதிக்காத, பனி விலகாத சமயத்தில்தான் நீர் நிலைகளின் மேற்பரப்பில் ஓசோன் படலம் இருக்கும். அதனால் முங்கிக் குளிக்க வேண்டும். அப்போது, அந்த ஓசோன் படலத்தை சுவாசிக்கும்போது, அது நம்முடைய மூச்சுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
17. 'ஏகாதசி விரதம் இருப்ப வர்கள், அதை முடிக்கும்போது அகத்திக்கீரை சாப்பிட வேண்டும்.'அகத்திக்கீரைச் சாப்பிட்டால், விரதத்தின் காரணமாக வயிற்றில் ஏற்படும் புண்கள் ஆறுவதோடு, வயிற்றிலுள்ள புழுக்களும் இறந்துபோகும்.
18. 'விசேஷங்களின்போது வாழை மரம், மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும்.'
மரம், செடிகளெல்லாம் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவைக் கொடுக்கும். விசேஷம் நடக்கிற இடங்களில் பலர் கூடும்போது வெளிப்படும் வியர்வை, மூச்சுக் காற்று போன்றவற்றை மாவிலை தோரணமும் வாழை மரங்களும் கிரகித்துவிடும்!
19. 'வெள்ளி, செவ்வாய் சாம்பிராணி போட வேண்டும்.'
வாரம் இரு தடவை இப்படிச் செய்வதன் மூலம்... சாம்பிராணி புகை வீடு முழுக்க பரவி... விஷ ஜந்துக்கள், கொசுக்கள் உள்ளிட்டவற்றை விரட்டி அடிக்கும்.
20. 'வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ மறக்கக் கூடாது.'
வெளியில் சென்று திரும்புபவர்களின் கால்களில் தப்பித் தவறி ஏதாவது விஷக் கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். நிலைப்படியில் காலை வைத்தால்... அதிலிருக்கும் மஞ்சள் கிருமிநாசினியாகச் செயல்படும்.
21. 'அருகில் எங்காவது இடி இறங்கினால்... 'அர்ஜுனா, அர்ஜுனா' என்று சத்தமாகச் சொல்ல வேண்டும்.'
இடிச் சத்தத்தின் காரணமாக சிலருக்குக் காது அடைத்துக் கொள்ளும். அதைச் சரிசெய்ய, தாடையை சுருக்கி விரிக்க வேண்டும். 'அர்ஜுனா' என்று சொல்லும்போது அது எளிதாக நடந்தேறிவிடும். சொல்லித்தான் பாருங்களேன் - அர்ஜுனா!
22. 'ஊசி கொண்டு இரவில் துணி தைத்தால் தரித்திரம்.'
அந்தக் காலத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் இல்லை. அதனால், ஊசியானது கை மற்றும் நகக்கண்களில் ஏறிவிடும் வாய்ப்பு உண்டு. அத்தகைய வீணான விபத்தைத் தவிர்க்க, இதுதான் வழி!
நன்றி /ஆக்கம் /உரிமை /தொகுப்பு ;அவள் விகடன்
கையிலேயே மருந்து!
23. லேசாகத் தலைவலி என்றாலே... 'ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் சீஃப் டாக்டருக்கு போன் போடு' எனும் அளவுக்கு இன்றைக்கு பயமே வாழ்க்கையாகி விட்டது. ஆனால், பாம்பு கடித்தால் கூட... 'அந்த பச்சிலையை அரைச்சுப் போடு... இதை உள்ளுக்குக் குடி' என்று அடுத்த நிமிடமே எழுந்து நடமாட வைத்துவிடும் அளவுக்கு நண்டு, சிண்டுகள்கூட கை வைத்தியத்தோடுதான் நடைபோடும் கிராமங்களில். அதுதான் நாட்டுப்புற மகத்துவம்!
24. கிராமப்புறங்களில்
தினமும் வாசலில் மாட்டுச் சாணத்தை நீரில் கரைத்து தெளித்துக் கோலமிடுவதை
வழக்கமாகக் கொண்டுள்ளனர். மாட்டுச்சாணம் ஒரு கிருமிநாசினி. நோய்,
நொடியிலிருந்து வீட்டில் உள்ளவர்களைக் காத்துக் கொள்ளவே இந்த சாணத்
தெளிப்பு! இப்போதும்கூட ஏழைகளின் வீட்டை மெழுகுவதற்கு சாணம் பயன்பட்டு
வருகிறது. அந்தத் தரைதான் அவர்களுக்குப் பஞ்சு மெத்தை!
25. திருநீறு... மாட்டுச்சாணத்தை வெயிலில் காயவைத்து, தீயில் எரித்து சாம்பலாக்கி, ஆற வைத்து சுத்தப்படுத்தி எடுத்து வைக்கும் பொருள். இதைத் தினமும் நெற்றியில் பூசுவார்கள். தலையில் கோத்துக் கொண்டு வலி-சளி உண்டாக்கிக் குடைச்சல் கொடுக்கும் தேவையற்ற நீரை உறிஞ்சும் தன்மை படைத்தது.
26. விதையில்லாத பிஞ்சு புளியங்காயைப் பறித்து, காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்துச் சாப்பிட்டால்... பித்த சம்பந்தமான வியாதிகள் மற்றும் கிறுகிறுப்பு போன்றவை குணமாகிவிடும்.
27. தேனீக்கள்
இறக்கை முளைத்து பறப்பதற்கு முன், புழு பருவத்தில் இருக்கும்போது அவற்றைப்
பிசைந்து சாறு எடுத்துச் சாப்பிட்டால்... காச நோயாளிகளுக்கு வரக்கூடிய
இருமல் குணமாகும், வறட்டு இருமல் பிரச்னையும் தீரும்.
28. பனைமரத்தில் இருந்து நுங்கு, பதநீர், கருப்பட்டி போன்றவற்றை மட்டுமே பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள். கிராமங்களில் பனம்பழம் அல்லது செங்காயை வெட்டி, கருப்பட்டி சேர்த்து வேக வைத்துச் சாப்பிடுவார்கள். பனங்கிழங்கை வேக வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், வெள்ளைப்பூண்டு, உப்பு சேர்த்து உரலில் போட்டு இடித்து, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சுவைத்துச் சாப்பிடுவார்கள். வேக வைத்து நன்றாக காய வைத்த பனங்கிழங்கை தூளாக்கி சாப்பிடுவார்கள். இப்படி பல்வேறு நிலைகளில் சாப்பிடும் இத்தகைய பனை உணவுகள்.. மலச்சிக்கலிலிருந்து விடுதலை அளிப்பதோடு, தேக நலனையும் பாதுகாக்கும்.
29. முற்றின
கத்திரிக்காயை தீயில் சுட்டுப் பிசைந்து அதனுடன் தீயில் சுட்ட காய்ந்த
மிளகாய், சிறிய வெங்காயம், உப்பு சேர்த்துப் பிசைந்து சாப்பிடுவார்கள்.
பழைய சாதத்துக்கு தொட்டுக்கொள்ள இது நல்ல காம்பினேஷன். அம்மை நோய் பரவும்
நேரங்களில் இத்தகைய கூட்டினை சமைத்துச் சாப்பிட்டால்... நோய் தொற்றாது.
இதில் நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து
வைத்திருக்கிறார்கள் கிராமத்தினர்.
30. ஒற்றைத் தலைவலிக்கு பூவரசு மரத்தின் காய்கள் நல்லதொரு மருந்து. பசுமையான பூவரசங்காய்களை அரைத்து பற்று போட்டு வந்தால்... நிச்சயம் நிவாரணம் கிடைக்கும். கருஞ்ஜம்பை எனும் மரத்தின் இலைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி, மூன்று நாட்களுக்குத் தலை குளித்தாலும் பூரண குணம் காணலாம்.
31. கிராமங்களில் இன்றைக்கும் ஆலமரத்தின் குச்சி, கருவேலங்குச்சி, வேப்பங்குச்சி போன்றவற்றில் பல் துலக்குவார்கள். இதைத்தான் சொல்கிறது 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி'! எனும் சொலவடை. நாயுருவி செடியின் வேரினால் பல் துலக்கினால் பல், ஈறு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
32. 'நுணா' எனப்படும் மஞ்சணத்தி மரத்தின் பழங்களை கிராமத்துச் சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். கறுப்பு நிறத்தில் லேசான ஒரு வாடையுடன் காணப்படும் இந்தப் பழத்தைச் சாப்பிட்டால், ஆஸ்துமா நோய் குணமாகும்.
33. சுண்ணாம்புடன் கொஞ்சம் நீரை விட்டுக் கலக்கி, தெளிந்ததும், நீரை வடித்துக் கொள்ள வேண்டும். அந்த நீருடன் சம அளவு நல்லெண்ணெயைக் கலந்தால், கொப்புளங்களுக்கான மருந்து தயார். சமையலறையில் ஏற்படும் தீக்காயங்களுக்குப் பயன்படுத்தினால், காயம் ஆறுவதுடன் தழும்பும் ஏற்படாது என்பது எக்ஸ்ட்ரா ப்ளஸ்.
34. உடல்
சூடு காரணமாக நீர்க்கடுப்பு வரும்போது... இரண்டு கால் கட்டைவிரல்
நகங்களிலும் சுண்ணாம்பைத் தடவி உலர வைத்தால்... இரண்டு நிமிடங்களில் பூரண
குணம் கிடைக்கும். இரண்டு புளியங்கொட்டைகளைக் கடித்துச் சாப்பிட்டாலும்
குணம் பெறலாம்.
35. தாளம்மை நோய்க்கு மருந்தாக பூங்காவி என்ற ஒரு வகை மண்ணை நீராகாரத்தில் குழைத்து, தாளம்மை பரவிய கன்னத்தில் பூசுவார்கள். இந்த நோய்க்கு பச்சைமஞ்சள் மற்றும் வேப்பிலை இரண்டையும் ஒன்றாக அரைத்தும் பூசுவார்கள்.
அழுகிய புண், விஷக்கடி, தீப்புண், வெண்புள்ளி, தழும்பு ஆகியவை குணமடைய காய்ந்த அரச இலைகளை எரித்து, அந்தக் கரியோடு கற்பூரத்தையும் தேங்காய் எண்ணெயையும் கலந்து பூசுவார் கள்.
விஷம்... ஒரு விஷயமே இல்லை!
கரப்பான்
பூச்சியைப் பார்த்தாலே அலறித் துடிப்பவர்கள்தான் இங்கே அதிகம். ஆனால்,
கிராமப்புறங்களில் நல்ல பாம்பையே இடது கையால் தூக்கி வீசும் ஆசாமிகள்கூட
உண்டு. அப்படியே கடித்துவிட்டாலும், அடுத்த நொடிகளில் முதல் உதவி போல
பல்வேறு வைத்தியங்கள் அவர்களிடம் உண்டு. சமயங்களில் அதுவே முழு
உதவியாகவும் இருக்கும்.
36. குளவி, தேனீ, தேள் போன்றவை கொட்டிவிட்டால், மரண வேதனைதான். அந்த இடத்தில் சுண்ணாம்பைத் தடவுவார்கள். சில நிமிடங்களில் விஷம் குறைந்து வலி பறந்துவிடும்.
37. தேள் கொட்டிவிட்டால், யூக்லிப்டஸ் மரத்தின் காய்களை எடுத்து, அதன் மீது எச்சிலைத் துப்பி தரையில் உரசி, கடிவாயில் வைப்பார்கள். விஷம் மட்டுப்படும்.
38. பல்லி எச்சம் நம் உடலில் பட்டால், நீர் சுரந்து புண் மாதிரி இருக்கும். பனைமரத்தின் மீது கல்லை வைத்து அடித்தால், அதிலிருந்து தண்ணீராக சாறு வெளிப்படும். அதை, பல்லி எச்சம்பட்ட இடத்தில் தினமும் காலை வேளையில் தடவி வந்தால், கட்டாயம் குணம் உண்டு.
39. குப்பை, சுடுகாடு இங்கெல்லாம் முள்ளம்பன்றி போல முள்ளோடு கூடிய காய்களுடன் இருக்கும் செடியைப் பார்த்திருப் பீர்கள். ஊமத்தை இலைச் செடி எனப்படும் இது, நாய்க்கடி விஷத்துக்கு 'நச்' மருந்து. இதன் இலைகளைக் கசக்கி சாறு எடுத்து, சுண்ணாம்பு சேர்த்து நாய்க்கடித்த இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால்... விஷம் முறிந்துபோகும். ஆனால், கடுகு, நல்லெண்ணெய், மஞ்சள் இவற்றை எட்டு நாட்களுக்கும், முட்டை மற்றும் மாமிசத்தை இரண்டு மாதங்களுக்கும் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையை மீறினால்... உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
40. பாம்பு கடித்து
இறந்தவர்களை விட, கடித்த பிறகு ஏற்படும் அதீத பயத்தால் இறந்தவர்கள்தான்
அதிகம். அதாவது, முதலில் தைரியத்தை இழக்கக் கூடாது. நம் நாட்டில்
இருப்பவற்றுள் பெரும்பாலான பாம்புகள் விஷமற்றவைதான். 'நீர்க்காத்தான்
குட்டி' எனப்படும் தண்ணீர் பாம்புகள் கடித்துவிட்டால்... அந்த இடத்தில்
சுண்ணாம்பு போட்டாலே குணமாகிவிடும்.
41. 'விதி வந்தால்தான் விரியன் கடிக்கும்' என்பார்கள். காரணம், நல்ல பாம்பைவிட, விரியன் பாம்புகளின் விஷம் வேகமாகப் பரவி உயிருக்கு உலை வைத்து விடும். ஆனால், இதற்கும்கூட சிறியா நங்கை, பெரியா நங்கை எனும் பச்சிலை கைகொடுக்குமாம். சிறியா நங்கை இலை 5 கிராம், பெரியா நங்கை இலை 5 கிராம் இரண்டுடன் 10 மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் எந்தவிதமான விஷமும் மட்டுப்படும்.
42. எந்தவிதமான விஷக்கடியாக இருந்தாலும் உடனடியாக பத்து மிளகைக் கடித்துச் சாப்பிட்டால், கூடுமான வரை விஷம் ஏறாமல் தடுக்க முடியும். சாதாரண விஷமாக இருந்தால், அதிலேயே குணமாகிவிடும். வீரியம்மிக்க விஷம் என்றால்... மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுக்கும் வரைக்கும் மிளகு காப்பாற்றும்.
43. வீட்டுப்பக்கம் பாம்புகள் நடமாட்டம் இருந்தால்... வாசலில் கற்பூரம் ஏற்றி வைப்பார்கள். அல்லது வெங்காயத்தை வெட்டி வைப்பார்கள். இந்த இரண்டின் வாடைக்கும் பாம்புகள் அண்டாது.
நன்றி /உரிமை /ஆக்கம் /தொகுப்பு ; அவள் விகடன்
44. வயல் வேலைகளில் தீவிராக இருக்கும்போது கை, கால்களில் திடீர் என்று ஏதாவது காயங்கள் ஏற்பட்டால்... ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க, வயல் மண்ணையே எடுத்து காயத்தின் மீது அழுத்துவார்கள். மண் இல்லாத காட்டுப் பகுதிகளில் இப்படி ஏதாவது காயம் ஏற்பட்டால், சிலந்தி புதிதாக கட்டியிருக்கும் வலையை கைகளால் திரட்டி, அதை அப்படியே காயத்தில் அப்பிக் கொள்வார்கள். காபித்தூளை அமுக்குவதும் உண்டு.
45. வெட்டுக் காயத்துக்கு வாழைப்பட்டைச் சாற்றினை சிறிய துணியில் நனைத்து, அந்த இடத்தில் கட்டி விடுவார்கள். காயம் ஆறிய பிறகுதான் துணியை எடுக்க முடியும். அதுவரை புண் மீது தண்ணீர்பட்டால்கூட உள்ளே போகாதவாறு தடுத்து நிற்கும் இந்த இயற்கை ஹேண்டி பிளாஸ்ட்.
46. ரயில் பூண்டு கேள்விப் பட்டிருப்பீர்கள். அதற்கு, வெட்டுக்காய பூண்டு என்றொரு பெயரும் உண்டு. அதன் இலைகளை கையில் வைத்துக் கசக்கினால் வரும் சாறை... காயத்தின் மீது விட்டால், அப்படியே ஒட்டிக்கொள்ளும். சிறிய அளவிலான தையல் போட வேண்டிய காயங்களுக்குக்கூட இதைப் பயன்படுத்துவார்கள்.
47. காட்டுப்பகுதிகளில்
உள்ளவர்களுக்கு பாம்பு கடித்துவிட்டால், உடனடியாக வைத்தியம் செய்யமுடியாத
சூழலில், சிறுநீரைப் பிடித்து வாயில் ஊற்றி விடுவார்கள். அது கூடுமானவரை
விஷம் ஏறுவதை தடுத்து நிறுத்தி வைக்கும். அதன் பிறகு மருத்துவமனைக்குச்
செல்வார்கள்.
48. சமையல் வேலை செய்யும் போது கைகளில் கத்தி பட்டுவிட்டால், தீக்குச்சியை கொளுத்தி வெட்டுவாயில் சூடு வைப்பார்கள்.
49. விக்கல் எடுப்பவர்களுக்கு, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால், அது நின்றுவிடும். அதிர்ச்சிகரமான தகவல்களைச் சொல்வதில் ஆரம் பித்து, உச்சகட்டமாக கத்தியைக் காட்டி அதிர்ச்சி ஊட்டுவதும்கூட உண்டு.
50. கண்களில் தூசு விழுந்தால்... அதை எடுப்பதற்கு தவியாகத் தவிப்போம். ஆனால், சட்டென்று நாக்கை வைத்தே, தூசியை எடுத்துவிடுவார்கள் கில்லாடிகள்.
51. கண்களில் தூசி விழுவது உள்ளிட்ட பிரச்னைகளால் ஏற்படும் உறுத்தலை சரிப்படுத்த... தாய்ப்பால் கொஞ்சம் கண்ணில் விட்டால்... உடனடி குணம் கிடைக்கும். பிறகு மருத்துவமனைக்குச் சென்று தீர்வு காணலாம்.
52. சுளுக்கு ஏற்பட்டால்... பெரும் பாலும் பக்கத்து வீடு, அல்லது பக்கத்து தெரு தாத்தாதான் பிஸியோ தெரபிஸ்ட். சுளுக்கு கண்ட இடத்தில் எண்ணெயைத் தடவி, தன் கால் மற்றும் கைளை பயன்படுத்தியே அதிரடியாக அதை நீக்கிவிடுவார்... பைசா கூட ஃபீஸ் வாங்காமல்!
தானிய பாதுகாப்பு!
இப்போதெல்லாம், 100 கிராம் துவரம்பருப்பைச் சேமித்து வைப்பதற்குள்ளாகவே படாதபாடு படவேண்டியிருக்கிறது. எப்படியாவது புழு, பூச்சிகள் பதம் பார்த்து விடுகின்றன. ஆனால், ஆயிரம் கிலோவாக இருந்தாலும் அட்டகாசமான ஐடியாக்களோடு அதைப் பொத்திப் பொத்தி பாதுகாப்பதில் கிராமங்களை அடித்துக் கொள்ள முடியாது.
53. அறுவடை முடிந்ததும் நெல்லைச் சேமித்து வைக்கும் குதிர், குலுக்கை போன்றவற்றில் அந்துப்பூச்சி புகுந்து புறப்பட்டால்... அத்தனையும் 'அய்யகோ'தான். இதைத் தடுக்க வேப்ப இலை அல்லது நொச்சி இலை போன்றவற்றை தானியங்களுடன் சேர்த்தே போட்டு வைப்பார்கள். நெல்லுடன் சீத்தாப்பழ விதைகளைப் போட்டு வைத்தால்... பூச்சி பிடிப்பது குறையும்.
54. உளுந்து, பயறு போன்ற தானியங்களை ஆண்டுக்கணக்கில் பாதுகாக்க வேண்டுமா..? முதலில் நன்கு காய வைத்து, பின் ஆற வைக்க வேண்டும். பிறகு, காய்ந்த நொச்சி இலைகளையும் சேர்த்துப் போட்டு வைத்தால்... பூச்சி, பொட்டு அண்டாது. வசம்பைத் தூள் செய்து தூவிவிட்டாலும் பூச்சிகள் வராது.
55. நல்லெண்ணையை ஆட்டி எடுப்பவர்கள், நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தவும், சுத்திகரிக்கவும் மொந்தை வெல்ல உருண்டையை அதற்குள்ளே போட்டு வைப்பார்கள். இது, கசடுகளை முறித்து நீண்ட நாட்களுக்கு எண்ணெயைப் பாதுகாக்கும்.
56. கருந்துளசி அல்லது
வேப்பிலையை நிலத்தில் உலர்த்தி, அரிசி உள்ளிட்ட தானியங்கள் வைக்கும்
பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால்... புழு, பூச்சிகள் அண்டாது. காய்ந்த
மிளகாயைக் கிள்ளிப்போட்டு வைத்தாலும் பூச்சிகள் வராது.
57. உளுந்து, தட்டைப் பயறு, நரிப்பயறு போன்ற தானியங்களைச் சேமிக்கும்போது, அந்தப் பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அளவுக்கு கல் உப்பு போட்டு வைத்தால்... பூச்சி பிடிக்காது.
58. கிலோ கணக்கில் பூண்டு வாங்கிவிட்டீர்களா? முறையாகச் சேமிக்கா விட்டால் அது கெட்டுவிடும். கேழ்வரகு தானியத்தோடு பூண்டைச் சேர்த்து வைத்தால் கெடாமல் காப்பாற்றலாம்.
59. தக்காளி காய்களை தலைகீழாக கவிழ்த்து வைத்தால், உடனடியாக பழுக்காமல் முடிந்தவரை காயாகவே தாக்குப் பிடிக்கும்.
60. தேங்காயை உரிக்காமல் வைத்திருந்தால் நீண்டநாட்களுக்கு வரும். உரித்துவிட்டாலும் பாதகமில்லை. அதன் குடுமிப்பகுதி மேல் நோக்கியவாறு இருப்பது போல் தேங்காய்களை சுவரோரமாக நிறுத்தி வைத்தால்... நீண்ட நாட்களுக்குக் கெடாது.
61. காய்களை காம்புடன் வைத்தால், சீக்கிரம் வாடிப்போகாமலும்... கெட்டுப்போகாமலும் இருக்கும்.
இயற்கையாக பழுக்க வைப்போமா!
அவசர
யுகத்தில் தேவை அதிகமாகி விட்டதால், எதையும் நொடியில் செய்து முடித்துவிட
நினைக்கிறார்கள். கடைசியில் அதுதான் ஆபத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது.
பழம் பழுக்க வைக்கும் விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்... பேராசைப்பட்டு
கார்பன் கற்களை வைக்கிறார்கள். எதிர்விளைவாக, அந்தப் பழங்களைச்
சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு இம்சை ஏற்படுகிறது.
ஆனால், பழுக்க வைப்பதற்காக கிராமத்தினர் கடைபிடிக்கும் அத்தனையும் படு
இயற்கையானது!
பின்குறிப்பு: காய்கள் மரங்களிலிருந்து கீழே விழாமல் பறித்தெடுக்கப்பட்டால்தான் பழுக்கும். அடிபட்டிருந்தால்... அழுகிவிடும்.
62. தூய்மையான ஒரு அறையில் வைக்கோல் பரப்பி, மாங்காய்களை வரிசையாக வைத்துவிட்டால் தன்னாலே அவை பழுத்துவிடும். ஆவாரம் செடியின் தழைகள் கிடைக்கும் இடங்களில் அதிலும் பழுக்க வைக்கலாம்.
63. வாழைக்காயை காற்றுப் புகாத அறையில் வைத்து, அடிக்கடி புகை போட்டால்... பழுத்துவிடும். வாழைக்காயின் காம்பில் சுண்ணாம்பு தடவினால், சீக்கிரம் பழுத்து விடும்.
64. பலாக்காய் வெயிலில் வைத்தாலே பழுத்துவிடும்.
65. மா, கொய்யா, நாரத்தை என்று எந்த வகைக் காயாக இருந்தாலும், அரிசிப் பானைக்குள் போட்டு வைத்தால் பழுத்து விடும்.
66. எத்தகைய காய்களையும் கூடையில் வைக்கோலை நிரப்பி, அதில் வைத்தும் பழுக்க வைக்க லாம். நொச்சி இலையைப் போட்டும் பழுக்க வைக்கலாம்.
67. காய்களை நெல் உமியில் திணித்து வைத்தால் சீக்கிரம் பழுத்துவிடும்.
68. வெப்பாலை, வேப்பிலை, துளசி... இந்த மூன்று இலை களையும் பரப்பி, அதன் மீது காய்களை வைத்து, மீண்டும் இலைகளைப் பரப்பி பாத்திரத்தை வைத்து மூடினால், ஒரு வாரத்தில் பழுத்துவிடும்.
இதெல்லாம் விளையாட்டுக்கல்ல!
இப்போதெல்லாம்...
விளையாட்டுகள் என்றாலே, அதற்கான தளவாட பொருட்களை நினைத்தால் பலருக்கும்
தலை சுற்ற ஆரம்பித்துவிடும். ஒவ்வொன்றுக்கும் நூறு, ஆயிரம் என்று
செலவழித்து மாளாது. ஆனால், கிராமப்புற விளையாட்டுகளின் தாத்பர்யமே...
'வெறுங்கையில் முழம் போடுவதுதான்'! அட, ஆமாங்க... சும்மா ஒரு குச்சியை
எடுத்துக்கிட்டு நாலு கோடு போட்டாலோ... நாலைஞ்சு கல்லைப் பொறுக்கினாலோ...
விஷயம் முடிஞ்சுது. பொருளாதார இழப்பில்லாம... அதேசமயம் சந்தோஷத்துக்கு
குறைவில்லாம விளையாடி முடிச்சுடலாம்.
69. கிச்சுகிச்சு தாம்பாளம்: இருவர் பங்கு பெறும் இந்த விளையாட் டில் எதிரெதிரே அமர்ந்து கொண்டு நீளவாக்கில் மணலைக் குவிப்பார்கள். ஒருவர் அந்த மணலுக்குள் ஏதாவது ஒரு பாகத்தில் சிறுகுச்சியை ஒளித்து வைப்பார். எதிராளி, தன் இரு கைகளையும் இணைத்து சரியாக அந்தக் குச்சி இருக்கும் இடத்தில் வைத்து கண்டுபிடிக்க வேண்டும்.
மனதை ஒருமுகப்படுத்துவதோடு, மூளைக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டு!
70. தட்டாங்கல்: ஐந்து
கற்களை வைத்து, 'எட்லாச்சி... குட்லாச்சி... ஏகப் புரட்டாசி, தம்பி
பொறந்தான் தடபுடலாச்சி' என்றெல்லாம் பாட்டுப்பாடி ஒரு கல், இரண்டு கல் என
மேலே தூக்கிப்போட்டுப் பிடிக்க வேண்டும். கை விரல்களின் இடையில் கல்
இருக்கும்போதே... மேலேயும் வீசி கல் பிடிக்க வேண்டும் கையின்
பின்புறப்பகுதியால்.
கவனத்தை ஒருங்கிணைத்து, கை விரல்களுக்கும் பயிற்சி கொடுக்கும் விளையாட்டு.
71. கண்ணாமூச்சி: ஒருவர், மற்றொருவரின் கண்ணைப் பொத்திக்கொள்ள, குழுவில் உள்ள பிறர் ஒளிந்து கொள்வார்கள். கண்களை மூடியிருந்தாலும், காதின் வழியாக கேட்டும், மூக்கின் வழியாக நுகர்ந்தும் கண்டுபிடிக்க வேண்டும். புலன்கள் அனைத்தையும் விழிப்பாக வைத்திருக்கும் மனப்பழக்கத்தை உண்டாக்கும் விளையாட்டு!
72. கட்டுத்தாவல்: குச்சியால் தரையில் கட்டங்களைப் போட்டு, ஒரு ஓட்டு சில்லை வைத்துக் கொண்டு அந்த கட்டங்களைத் தாவித் தாவி சென்று பாயின்ட் எடுக்கும் விளையாட்டு. இதில் பல ரகங்கள் உள்ளன.
காலுக்கு மட்டுமல்ல... உடலுக்கே நல்ல பயிற்சி!
73. பல்லாங்குழி: பன்னிரண்டு குழிகளை வைத்து அதில் புளியங்கொட்டைகளைப் போட்டு விளையாடுவார்கள். வரிசையாக குழியில் கொட்டைகளைப் போட்டுக் கொண்டே வந்து, அது முடியும் இடத்தில் வெற்றுக்குழியாக இருந்தால்... அடுத்திருக்கும் குழியில் உள்ள அனைத்து புளியங்கொட்டைகளையும் அள்ளிக் கொள்ளலாம்.எண்களை மனதில் ஏற்றி, சரியாகக் கணக்கிடுவதற்கு சரியான பயிற்சி கிடைக்கும்.
74. பதினைந்து நாயும் ஒரு புலியும்: முக்கோண வடிவில் கட்டங்களைப் போட்டு விளையாடுவார்கள், செஸ் விளையாட்டு போல. செஸ் விளையாட்டின் தாய் இது!
மனப் பயிற்சிக்கும், புத்தி கூர்மைக்குமான விளையாட்டு.
75. தாயக்கட்டை: கட்டம் போட்டு, தாயத்தை உருட்டி, அதில் வரும் எண்ணிக்கைக்கு ஏற்ப கூட்டிக் கழித்து விளையாடுவார்கள்.
மூளைத் திறனை அதிகப்படுத்தும் விளையாட்டு.
76. கிட்டிப்புல் (கில்லிதாண்டு): சிறிய குச்சி மற்றும் பெரிய குச்சி இரண்டுதான் தேவை. சிறிய குச்சியை பெரிய குச்சியால் அடிப்பார்கள். அது எங்கு விழுகிறதோ... அந்த தூரத்தை அளந்து அளந்து விளையாடுவார்கள்.
குச்சியை அடிப்பது உடல் வலிமையை அதிகரித்து தசைகளை உறுதியாக்கும்.
77. கபடி: இரண்டு குழுக்களாகப் பிரிந்து 'கபடி கபடி' என்று பாடிக்கொண்டே வந்து விளையாடுவது. எதிராளியை அவர் தொட்டால்... எதிராளி வெளியேற வேண்டும். எதிராளிகள் பிடித்துவிட்டால், இவர் வெளியேற வேண்டும்.
வியர்க்க விறுவிறுக்க விளையாடுவதால், உடலில் உள்ள தேவையற்ற அசுத்தநீர் வெளியேறி உடல் வலிமை பெறும்.
78. கல்லா... மண்ணா?:
கூட்டமாக விளையாடும் விளையாட்டு. ஒருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் கையில்
குச்சியை வைத்திருக்க வேண்டும். குச்சியில்லாதவர் 'கல்லா, மண்ணா?' என்று
கேட்பார். 'கல்' என்று சொன்னால்... அருகிலிருக்கும் கற்களைத் தேடிச்
சென்று கையிலிருக்கும் குச்சியை அனைவரும் வைக்க வேண்டும். அதற்குள் அந்த
ஒருவரிடம் யார் பிடிபடுகிறார்களோ... அவர்கள் மறுபடியும் விளையாட்டை
ஆரம்பிக்க வேண்டும். அவர் மரம், மண், இலை என்று எந்தப் பொருளை
வேண்டுமானாலும் சொல்லலாம்.
எப்போதும் 'அலர்ட்'டாக இருக்க வேண்டும் என்ற விழிப்பு நிலையையும், சுறுசுறுப்பையும் உருவாக்கும் விளையாட்டு.
நன்றி/ஆக்கம்/தொகுப்பு/உரிமை/அவள் விகடன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கையிலேயே மருந்து!
44. வயல் வேலைகளில் தீவிராக இருக்கும்போது கை, கால்களில் திடீர் என்று ஏதாவது காயங்கள் ஏற்பட்டால்... ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க, வயல் மண்ணையே எடுத்து காயத்தின் மீது அழுத்துவார்கள். மண் இல்லாத காட்டுப் பகுதிகளில் இப்படி ஏதாவது காயம் ஏற்பட்டால், சிலந்தி புதிதாக கட்டியிருக்கும் வலையை கைகளால் திரட்டி, அதை அப்படியே காயத்தில் அப்பிக் கொள்வார்கள். காபித்தூளை அமுக்குவதும் உண்டு.
44. வயல் வேலைகளில் தீவிராக இருக்கும்போது கை, கால்களில் திடீர் என்று ஏதாவது காயங்கள் ஏற்பட்டால்... ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க, வயல் மண்ணையே எடுத்து காயத்தின் மீது அழுத்துவார்கள். மண் இல்லாத காட்டுப் பகுதிகளில் இப்படி ஏதாவது காயம் ஏற்பட்டால், சிலந்தி புதிதாக கட்டியிருக்கும் வலையை கைகளால் திரட்டி, அதை அப்படியே காயத்தில் அப்பிக் கொள்வார்கள். காபித்தூளை அமுக்குவதும் உண்டு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
52. சுளுக்கு ஏற்பட்டால்... பெரும் பாலும் பக்கத்து வீடு, அல்லது பக்கத்து தெரு தாத்தாதான் பிஸியோ தெரபிஸ்ட். சுளுக்கு கண்ட இடத்தில் எண்ணெயைத் தடவி, தன் கால் மற்றும் கைளை பயன்படுத்தியே அதிரடியாக அதை நீக்கிவிடுவார்... பைசா கூட ஃபீஸ் வாங்காமல்!