—— தொல்லியல் அறிஞர் முனைவர் சு. ராஜவேலு
முன்குறிப்பு:
செப்டெம்பர் மாதத்தின் (2019 ஆண்டு) முதல் வாரம் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் - மரபு பாதுகாவலர்கள் வாட்சப் குழுமத்தில் தொல்லியல் அறிஞர் பேராசிரியர் முனைவர் சு. ராஜவேலு அவர்கள் தமிழியின் பழமை குறித்து குழும உறுப்பினர்களின் கேள்விகளுக்குக் கொடுத்த விளக்கக் கருத்துகளின் தொகுப்பு.
சுபாஷிணி:
நமது அண்மைய காணொளிப்பதிவு வெளியீடுகளில் டாக்டர் ராஜவேலுவின் பேட்டி, டாக்டர் ராஜனின் பேட்டி ஆகியன தமிழ் நிலம் சமணம் வருவதற்கு முன்பே இலக்கிய வளம் நிறைந்து இருந்தது என்பதை விளக்குகின்றன.
I.
தமிழி எழுத்துக்கள் வட இந்தியாவில் தோன்றிய அசோகன் பிராமியிலிருந்து பின் மருவி கி.மு.2ம் நூற்றாண்டு வாக்கில் சமண முனிவர்களால் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட்டவை என்ற கூற்று தமிழ் கல்வெட்டுக்கள் மற்றும் எழுத்துரு ஆய்வுலகில் நிலவி வந்தது. அது இன்றும் தொடர்கின்றது.
குறிப்பிடத்தக்க சில ஆய்வுகள் தமிழக நிலப்பரப்பில் அதாவது கொடுமணல், அரிக்கமேடு, பொருந்தல், ஆதிச்சநல்லூர், அழகன்குளம், மற்றும் மிக அண்மையில் கீழடி எனப் பல பகுதிகளில் நிகழ்த்தப்பட்டு, தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டு அவை அறிவியல் கரிம ஆய்வின் படி காலத்தால் கி.மு. 7, கி.மு. 6 என காலக்கணக்கிடப்பட்டாலும் கூட, இச்செய்தி பரவலாகச் சென்றடையாது இருப்பது வேதனையே. கடந்த 30 ஆண்டுகளாகக் கடல்சார் மற்றும் தொல்லியல் ஆய்வுகளைத் தமிழகத்தில் நடத்தி வரும் டாக்டர்.ராஜவேலு அவர்கள் இப்பேட்டியில் அகழ்வாய்வு சான்றுகளைக் குறிப்பிடுகின்றார். தமிழி எழுத்துரு அசோகன் பிராமியிலிருந்து கிளைத்து வளர்ந்த எழுத்துரு அல்ல, மாறாக அது தமிழ் நிலத்திலேயே தமிழர்களால் உருவாக்கப்பட்ட எழுத்துரு எனத் தமது அகழ்வாராய்ச்சி ஆய்வுத்தகவல்களுடன் விவரிக்கின்றார்.
கூடுதலாக இப்பதிவில், களப்பிரர்களுக்குப் பின் தமிழக நிலப்பரப்பில் ஆட்சி செய்த பல்லவர்கள் வடக்கிலிருந்து வந்தமையாலும், வடமொழியை ஆட்சி மொழியாகத் தமிழக நிலப்பரப்பில் ஏற்படுத்திய போது அம்மொழிக்கான எழுத்துருவாகப் பல்லவ கிரந்தம் என்ற எழுத்துருவை உருவாக்கிய செய்தியையும் பகிர்கின்றார்.
II.
தமிழ் மொழியின் பண்டைய எழுத்தான தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டுக்களிலும் மக்களின் புழக்கத்திலும் பயன்பாட்டிலும் இருந்திருக்கின்றன என்பது நமக்கு தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கின்ற சான்றுகளாக அமைகின்றன. கி.மு.700 வாக்கிலேயே பொதுமக்களும் தங்களது பானை ஓடுகளில் பொறித்து வைக்கக்கூடிய வகையில் இந்த எழுத்து மக்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்ற சூழலில் இந்த எழுத்துரு அதற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவாகி செம்மை பெற்று வளர்ந்திருக்க வேண்டும் எனக் கருதலாம்.
இறந்த வீரனுக்காக மக்களால் எழுப்பப்படுபவை நடுகற்கள். நடுகற்களிலும் தமிழி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளமையை மிக அண்மைய கண்டுபிடிப்பைக் குறிப்பிட்டு இந்தப் பதிவு பேசுகிறது. இதுகாறும் கிடைத்துள்ள தமிழி கல்வெட்டுக்கள் சமயம் சேராதவையாக இருப்பதும் இவ்வகை கல்வெட்டுக்கள் பொதுவாக யாரோ ஒருவர் யாருக்கோ வழங்கிய நன்கொடை, சேவை என்பதைச் சுட்டுவதாகவே அமைகின்றது என்றும், கி.பி. 4ம் நூற்றாண்டிற்குப் பிறகே, பல்லவ ஆட்சிக் காலம் தொடக்கமே சமய சார்புடனான கல்வெட்டுக்கள் பெருகின என்றும் இப்பதிவில் டாக்டர்.ராஜவேலு குறிப்பிடுகின்றார்.
பெரும்பாலோர் ஆய்வு நூல்கள் எத்தனையோ வந்திருந்தாலும் அவற்றை வாங்கி வாசிப்பதில்லை. கேள்விப்படும் செய்திகளையே நம்பி அதனையே உண்மை எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பர். ஆனால் நாம் தொடர்ச்சியாக ஆய்வுத் தகவல்களை வழங்குவோம்.
சு.ராஜவேலு:
சிக்காகோவில் பேசிய எனது கட்டுரையின் சுருக்கத்தை மீண்டும் வெளியிட்டமைக்கு நன்றி சுபா.
தமிழருக்குச் சொந்த அறிவு இல்லை ... அடுத்தவர் வந்துதான் நமக்கு எழுத்தறிவை, கல்வி அறிவை, கலைகளை இலக்கியங்களை உருவாக்கினர் என நம்பிக் கொண்டிருப்பவர்கள் நாம் எத்தனை அறிவியல் சான்றுகள் மூலம் கருத்துக்களைச் சொன்னாலும் ஏற்க மாட்டார்கள். தமிழன் கி.மு. 700 அளவில் எழுத்துக்களைத் தரப் படுத்தி அதை கி.மு. 400 அளவில் இலங்கைக்கும், வட இந்தியர்களுக்கும் கொடையாக அளித்தான். அறிவியல் காலக்கணிப்பு இது.
பிற இந்திய மொழிகளையும் வடமொழி கல்வெட்டுகளையும் நன்கறிந்த இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டு அறிஞர்கள் கே.வி.இரமேஷ் சம்பத், பி.ஆர் சீனிவாசன் (இவர்கள் அனைவருமே தலை சிறந்த இந்தியக் கல்வெட்டு அறிஞர்கள்) போன்றோர் சமஸ்கிருத பண்டிதர்கள். இவர்கள் தமிழே காலத்தால் முற்பட்ட எழுத்துக்கள் கொண்டது எனச் சொன்னவர்கள். நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான சான்றுகளைப் பட்டியல் இட்டுள்ளேன். இன்னும் நாம் நாகசாமி யையும், ஐராவதத்தையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
நான் சாதாரணமான கேள்விகளை வைக்கின்றேன்...
தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் எழுத்துக்களையும் சமணர் உருவாக்கினர் என்றால் அவர்கள் பற்றிய குறிப்புகள் ஏன் அகத்திலும் புறத்திலும் இல்லை? மாறாக அவர்களின் சமயத்திற்கு முற்றிலும் எதிரான காதலும் வீரமும் மட்டுமே கருப்பொருளாகச் சங்க இலக்கியங்களில் பேசப் படுகிறதே. இதற்கு விளக்கம் அளிக்க இயலுமா? கி.மு. 700 இல் சமணமே வட இந்தியாவில் இல்லை. சமணர் கி.பி. 300 அளவில்தான் தமிழகத்தில் தொண்டை மண்டலத்திற்கு வருகின்றனர். தமிழி எழுத்துக்கள் அறிவுசார்ந்த தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட எழுத்துக்கள். அதனைச் சமணர்கள், பௌத்தர்கள் வணிகர்கள் வழியாக அறிந்து அவர்களுடைய மொழிக்கு ஏற்ப வர்கங்களை உருவாக்கினர். தமிழின் அடிப்படை உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்களை அப்படியே வைத்துக் கொள்கின்றனர்.
கி.மு. 700- 600 இல் அடிப்படையான உயிர் எழுத்துக்கள் தமிழில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஓ ஆகிய எட்டும். மெய் எழுத்துக்கள் 18 ம் புள்ளி இல்லாமல். கி.மு. 400 இல் இலங்கையில் இவ்வெழுத்துகள் வர்கங்களை கொண்டு மாற்றம் பெறுகின்றன. இதே கால கட்டத்தில் ஆந்திராவில் பட்டிபொருலு (Bhattiprolu) இல் இருந்த பௌத்த துறவிகளும் இந்த மாற்றங்களைச் செய்கின்றனர். வட இந்தியாவில் 5 கல்வெட்டுகள் இதே கால கட்டங்களில் வெளியிடப் பட்டன. இவற்றைப் பற்றி அரிய Early South Indian Palaeography by T. V. Mahalingam; Indian Palaeography by R. B. Pandey; Indian Epigraphy by D. C. Sircar; Indian paleography by G. Buhler போன்றோர் நூல்கள் பார்க்கவும்.
1. மகன்தான் கல்வெட்டு
2. பிப்ரவா பேழை கல்வெட்டு
3. கொசுண்டி கல்வெட்டு
4. ஈரன் காசு பொறிப்பு
ஆகியவற்றின் காலம் கி.மு. 400. இந்த கல்வெட்டுகளில் கூட்டெழுத்து முறை இல்லை. இன்றைய இந்திய எழுத்துக்கள் இந்த கூட்டெழுத்து முறையில் உள்ளவை. இதனை உருவாக்கியவர் கி.மு. 300 சார்ந்த அசோகர். அல்லாது மெய், உயிர்மெய் இரண்டுமே ஒரே குறியீடு உடையவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். எ.கா. அக்கம் என்ற சொல். இதனைத் தொடக்க நிலையில் தமிழர்கள் மெய் எழுத்துக்கள் புள்ளி பெறாமல் எழுதினர். மேற்குறித்த வட இந்திய, பட்டிபொருலு கல்வெட்டுகள் அனைத்தும் இவ்வாறே எழுதப் பட்டன. அதாவது 'அககம' என்ற குறியீடுகளைப் படிப்பவர்கள் அதன் பொருள் உணர்ந்து 'அக்கம்' எனப் படிக்க வேண்டும். இதை உணர்ந்த அசோகன் கூட்டெழுத்து முறையைத் தனது கல்வெட்டுகளில் புகுத்துகின்றான். அதாவது க க வை மேலும் கீழும், அல்லது பக்கங்களில் சேர்த்து எழுதும் முறை.
இதனை கி.மு. 300 இல் அறிந்த தமிழர்கள் கூட்டெழுத்து முறையை முதலில் முயற்சி செய்கின்றனர். இம்முயற்சி கொடுமணலில் நடைபெறுகின்றது. கொடுமணல் வணிக நகரம். இங்கு மட்டும் 40 பானை ஓடுகளில் எழுதி முயன்றுள்ளனர். இங்கு தான் வட இந்திய வணிகர்கள் தமிழர் எழுத்துக்களை கற்று வட இந்தியாவிற்குத் தெரிவிக்கின்றனர். ஆனால் தமிழர்களுக்கு இந்த கூட்டெழுத்து முறை ஒத்து வரவில்லை.
இதனால் தொல்காப்பியர் புள்ளி முறையைப் புகுத்தி தமிழைச் சீர் செய்தார். 'மெய்யின் இயற்கை புள்ளி யொடு நிலையல் எகரமும் ஒகரமும் அவ்விதம் அற்றே', தொல்காப்பியம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு. எ/ ஏ மற்றும் ஒ/ஓ ஆகியவற்றுக்கும் ஒரே குறியீடு. எ பக்கத்தில் ஒரு புள்ளி வைத்தால் மாத்திரை குறையும். அவ்வாறேதான் ஒ / ஓ வும். கெட்டான்/ கெட்டான் - கெ பக்கத்தில் புள்ளி வைத்தால் அது கெட்டான். புள்ளி இல்லை என்றால் கேட்டான். புரிந்திருக்கும். இந்த கே இரட்டைச் சுழி வீரமாமுனிவர் காலத்தில் தமிழில் புகுத்தப் பட்டது. ஓலைகளில் எழுதப் படும் இலக்கியங்கள் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை படி எடுக்கும் பொழுது அவ்வவ் காலங்களில் இடைச்செருகல்கள் ஏற்படும். அவ்வாறே 'அய்', 'அவ் என்பவையும். 'ஐ' கி.பி 4 ஆம் நூற்றாண்டு சமணரால் புகுத்தப் பட்டது. 'ஔ' வீரமாமுனிவர் காலத்தில் வருகிறது. ஆயுத எழுத்தும் அவ்வாறுதான்.
[தொடரும் ...]