எஸ்.பொ.: இரண்டெழுத்தில் ஓர் ஆளுமை

110 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 5, 2022, 3:08:39 AM1/5/22
to மின்தமிழ்
.
எஸ்.பொ.: இரண்டெழுத்தில் ஓர் ஆளுமை

-- அ.பாலமனோகரன், டென்மார்க்


குறிப்பு:  அக்கினிக்குஞ்சு' அவுஸ்திரேலியா இணைய இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு - ஜெர்மனியும் இணைந்து நடத்திய,   ஈழத்தமிழ் எழுத்தாளர் மூதறிஞர் எஸ்.பொ. அவர்களின் நினைவுப் பேருரை மெய்நிகர் நிகழ்ச்சியின்  இரண்டாம்  நாளன்று (18.12.2021) எழுத்தாளர் அ.பாலமனோகரன், டென்மார்க் அவர்கள் வழங்கிய தலைமையுரை.  

Espo.jpg
டென்மார்க்கில் வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் மூத்தவன் நான் என்பதாலேயே எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை நான் உணர்ந்தேன். இந்த நிகழ்வில் மூதறிஞர் எஸ்.பொ. அவர்களுடன்  மிக நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தவர்களும், அவருடைய ஆக்கங்களை மிகவும் ஆழமாக ஆராய்ந்த அறிஞர்களும், அவருடைய அன்பு இரசிகர்களும் எனப் பல பேராசிரியர்களும், கல்விமான்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர். அவர் வளர்த்துவிட்ட எழுத்தாளர்களும் இவர்களுள் அடங்குவர்.  இந்த வரிசையில் வருவதற்கு எனக்குள்ள தகுதி மிகவும் குறைந்ததுதான். ஆனாலும் ஓர் ஈழத்தமிழ் எழுத்தாளன் என்ற வகையில் அமரர் அவர்களுடன் எனக்குப் பழகக் கிடைத்த ஒரு சில சந்தர்ப்பங்களை எண்ணிப் பார்க்கின்றேன்.

எஸ்.பொ. என்ற இரண்டெழுத்து ஆளுமை உலகத் தமிழ் இலக்கிய உலகில் மாத்திரமன்று, அரசியல், சமுதாய ஏற்றத் தாழ்வுகள், பொதுவுடைமை தனியுடைமை தத்துவங்கள், உளவியல் உண்மைகள், உறவுச் சிக்கல்கள், முரண்பாடுகள் போன்ற எண்ணற்ற பரந்துபட்ட துறைகளில் தனது ஆளுமையை மிக ஆழமாகப் பதிந்துள்ளது.

உலகத் தமிழ் இலக்கியப் பூங்காவில் பல நினைவுத் தூபிகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் எமது மனங்களில் பிரமாண்டமாக எழுந்து நிற்பது வள்ளுவருக்கு குமரிமுனையில் அமைக்கப்பட்ட அவருடைய சிலைதான். ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களையும் இவர் ஒருவரா எழுதினார் என மேல்நாட்டு அறிஞர்கள் பலர் அதிசயப்பட்டதாகவும் அறிகின்றோம்.

என்னுடைய எண்ணத்தில் அமரர் எஸ்.பொ. அவர்களும் உலகத் தமிழ் இலக்கியப் பூங்காவில் நிமிர்ந்து நிற்கும் ஒரு நினைவுத் தூபியாகவே தெரிகின்றார். வெறும் தூபியாக மட்டுமல்லாமல் அவர் ஒரு கோபுரமாகக் காட்சியளிக்கின்றார். அந்தக் கோபுரத்தில் அவருடைய அத்தனை ஆக்கங்களும் சிலைகளாக அமைந்துள்ளன. அவருடைய எழுதுகோல் சித்தரிக்காத துறைகளே இல்லை என்பதுபோல் பலநூறு படைப்புக்கள் அந்தக் கோபுரத்தில் மிளிர்கின்றன. இந்த மெய்நிகர் நினைவேந்தல் நிகழ்வில், பல அறிஞர்களும் பேராசிரியர்களும் என்னுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டு அந்தக் கோபுரத்தைச் சுற்றிவந்து காட்டியது போன்று நான் உணர்ந்தேன். இவர்களில் சிலர் 'தோள் கண்டார் தோளே கண்டார்' எனக் கம்பன் கூறியதுபோல் தத்தமக்குப் பிடித்த சிலைகளையே சித்தரித்து மகிழ்ந்தனர். அமரரின் 'தீ', சடங்கு' போன்ற படைப்புக்களை மட்டுமே கஜுராஹோச் சிற்பங்களைப் போல் பார்த்துப் பரவசப்பட்டார்கள்.

ஆனால் பல பேராசிரியர்களும், அறிஞர்களும் அமரர் எஸ்.பொ.வின் ஏனைய பல, தனித்தன்மை வாய்ந்த வல்லமைகளை வியந்து, விபரமாக எனக்கு அறியத் தந்தனர். அப்போதுதான் சதாவதானி என்ற சொல் எனது நினைவுக்கு வந்தது. எந்த ஒரு விசயத்தைக் குறிப்பிட்டாலும் அதையிட்டுத் தனது, தனித்தன்மை வாய்ந்த கருத்தைச் சொல்லவும், எழுதவும், கவி புனையவும் கூடிய ஆற்றலையும்  கொண்டவர் எஸ்.பொ. அவர்கள் என எனக்குத் தெரியவைத்தனர். பல்துறை அவதானி என்று அழைக்கப்பட வேண்டியவர் எஸ்.பொ. அவர்கள். அவருடைய எழுதுகோல் தொடாத துறையே இல்லை என்று துணிந்து கூறமுடியும்!

எனது எழுத்தாசான் அமரர் மூதூர் வனா அனா அவர்கள்தான், தனது ஆத்ம இலக்கிய நண்பன் எஸ்.பொ. அவர்களையிட்டு எனக்குக் கூறியவர். ஒரு வரியிலேயே, இலக்கண வழு எதுவுமின்றி ஒரு சுவையான சிறுகதையை எழுதியவர் எஸ்.பொ. அவர்கள் என அறியத் தந்தார். இதைப் போன்றே அவரையிட்ட பல அரிய சங்கதிகளை அவர்மூலம் தெரிந்து கொண்டேன்,

நோபல் பரிசுபெற்ற வங்கக் கவிஞர் தாகூரைப் போன்று மகாகவி பாரதி உலகளவில் பிரசித்தம் பெறாது போனமைக்குக் காரணம் அவருடைய ஆக்கங்கள் ஆங்கிலத்திலே வெளிவராமையே என்று சொல்வார்கள். ஆனால் அமரர் எஸ்.பொ. அவர்கள் ஆங்கிலத்திலேயும் பல ஆப்பிரிக்க நாவலாசிரியர்களுடைய ஆக்கங்களை நமக்கு அளித்திருக்கின்றார்.

இவ்வளவு அற்புத ஆற்றல்கள் கொண்ட, மிக எளிமையான குணம் படைத்த எஸ்.பொ. அவர்கள் ஈழத் தமிழ் இலக்கிய உலகுப் பிரபலங்கள் சிலரால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதும் உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டில் அவருக்கு அபரீதமான புரிதல் தமிழறிஞர் மத்தியில் இருந்தமை யாவரும் அறிந்ததே.

தர்மன் தர்மகுலசிங்கம் அவர்கள் நிகழ்வில், எஸ்.பொ. அவர்களைப் பற்றிய விரிவான ஓர் ஆராய்ச்சி நூலை பிஎச்டி பட்டம் பெறுவதற்கு எழுதி அதனை உலகறியச் செய்ய யாராவது முன்வந்தால் அதற்கான பொருளாதார உதவியைத் தானே வழங்கமுடியும் என்று அறிவித்திருந்தார். இக் கனவு நனவாகவேண்டும்.

எனது இரண்டு நாவல்களைத் தமிழ்நாட்டு வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் எஸ்.பொ. அவர்கள் தமது மித்ரா பதிப்பகத்தில் வெளியிட்டிருந்தார். அந்த நூலுக்கு அவர் எழுதிய முன்னீட்டில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"மண்பற்றை ஒரு வெறியாகத் தன்னுள் வளர்த்து, கிழக்கிலங்கைக் கதைக்கலையின் பிதாமகராய் வாழ்ந்த வ. அ. வை ஆதர்சமாகவும், குருவாகவும் சம்பாவனை செய்யும் வன்னிக் கதைஞருடைய இரண்டு நாவல்களையும் கடந்த பத்து நாள்களுக்கிடையில் மூன்று தடவைகள் எழுத்தெண்ணி வாசித்திருக்கின்றேன். அத்தகைய வாசிப்பு ஒரு பதிப்பாசிரியர் ஒருவரின் கடமையாகும். அப்பணி பல சமயங்களில் சுமையாக இருக்கும். ஆனால், இங்கு அக்கடமை மகா சுகமாக அமைந்தது குறிப்பிடத் தக்கது."

என்னை 'வன்னிக்கதைஞர்' என அமரர் எஸ்.பொ. குறிப்பிட்டதை நான் மிகவும் உயர்வாகவே கருதுகின்றேன். வசிட்டர் வாயால் பிரம்மரிசி என அழைக்கப் பட்டமை போன்று!

தமிழ் இலக்கியப் பூங்கா போன்றே பலதுறைகளில் நினைவுப் பூங்காக்களும் நினைவுத் தூபிகளும் ஏராளமாக உள்ளன. எமது காலத்தில் இவற்றில் ஒரு சிலதையே தரிசிக்கும் வாய்ப்பு எமக்குக் கிட்டுகின்றது. வானவெளியிலே ஒளிவீசும் எண்ணற்ற விண்மீன்களைப் போன்றும், கடற்கரைகளிலே கொட்டிக் கிடக்கும் கோடிக்கணக்கான மணற் துகள்கள் போன்றும் எண்ணுக்கடங்காத் தூபிகளும், கோபுரங்களும், நடுகற்களும் நிறைந்து கிடக்கின்றன.

இந்தப் பூங்காக்களின் தரையிலே, காலை தோன்றி மாலையில் மடிந்துவிடுகின்ற ஆயிரமாயிரம் புற்பூக்களும் உண்டுதான். இவை புற்பூக்கள் என்பதனால் அவை சமானியமானவை அல்ல! மன்னன் சாலமன்கூட அத்தகைய வண்ண ஆடைகளை அணிந்ததில்லை என்று இயேசு ஒரு சமயம் கூறியிருக்கிறார்.

இந்த உலகில் காலத்தைக் கடந்தும் வாழ்கின்ற ஆக்கங்களை எஸ்.பொ. அவர்கள் போன்ற மகாமனிதர்கள் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததியினருக்கும் விட்டுச் சென்றுள்ளனர். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் அறியப்படும் என்பது பொய்யாமொழிப் புலவர் எமக்குக் கூறியது. எச்சம் என்பதை ஒருவருடைய பிள்ளைகள் என உரையாசிரியர்கள் கூறுகின்றனர். அவர்கள் மட்டுமல்ல அவர்கள் வீட்டுச் செல்லும் ஆக்கங்களும் அவர்களுடைய எச்சங்கள்தான்!

எஸ்.பொ. அவர்களின் எச்சங்களாகிய அவருடைய ஆக்கங்களும் அவருடைய தகமையை எமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றன!

----

தேமொழி

unread,
Jan 5, 2022, 3:25:54 AM1/5/22
to மின்தமிழ்
Espo1.jpg


மூதறிஞர் எஸ்.பொ.வின் நினைவுப் பேருரை:
முதல் நாள் நிகழ்ச்சி - https://youtu.be/jhdCoGC3qoA
இரண்டாம் நாள்நிகழ்ச்சி - https://youtu.be/Xm4426tMVis
-----------------------------

தேமொழி

unread,
Jan 5, 2022, 3:32:32 AM1/5/22
to மின்தமிழ்
Espo2.jpg
தேர்: சிறுகதை - எஸ். பொ. 
"'எஸ்.பொ' எனப்படும் எஸ். பொன்னுத்துரை 1932 ஜூன் 4ம் திகதி யாழ்ப்பாணம், நல்லூரில்; சண்முகம்  தம்பதியரின்  மகனாக பிறந்த இவர் ஈழத்தின் மூத்த, தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.
இவர் சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் இலக்கியவுலகில்  40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
----

தேமொழி

unread,
Jan 6, 2022, 1:07:37 AM1/6/22
to மின்தமிழ்
.
எஸ்.பொ. வுடனான எனது அனுபவங்கள்

-- திரு. தியாகலிங்கம், நோர்வே


குறிப்பு:  அக்கினிக்குஞ்சு' அவுஸ்திரேலியா இணைய இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு - ஜெர்மனியும் இணைந்து நடத்திய,   ஈழத்தமிழ் எழுத்தாளர் மூதறிஞர் எஸ்.பொ. அவர்களின் நினைவுப் பேருரை மெய்நிகர் நிகழ்ச்சியின்  இரண்டாம்  நாளன்று (18.12.2021) எழுத்தாளர்  திரு. தியாகலிங்கம், நோர்வே அவர்கள் வழங்கிய உரை.  

எஸ்.பொ. வுடன் எனக்கு இருந்த தொடர்புகள், அனுபவங்கள் பற்றி மிகவும் சுருக்கமாகக் கூறுவதென்றால்,  எஸ்.பொ. வுடனான பழக்கம் என்பது எனது வாழ்வில் கிடைத்த இலக்கிய, குருகுல, மனிதநேயக் கணத்துளிகள் என்றுதான்  நினைக்கிறேன்.  அழிவின் அழைப்பிதழ்  என்கின்ற நாவலை நான் காகிதத்தில் கிறுக்கி வைத்திருந்த காலம் அது. நோர்வேயின் வடதுருவத்தில் தனிமையாக இருக்கும் பொழுதே அந்தப் பணி நடந்தது. அதை வெளியிட வேண்டும் என்கின்ற பேராசையுடன் அலைந்து திரிந்தேன். அப்போது என்னோடு வசித்து வந்த குகனேரியப்பன் என்பவர் அவஸ்ரெலியாவில் வசித்து வந்த எஸ் கிருஷ்ணமூர்த்தி என்பவரைத் தொடர்புகொண்டு எஸ்.பொ.வை அறிமுகப்படுத்தினார். அதன் பின்பே 1994 ஆண்டு அவரைச் சந்திக்க சென்னை சென்றேன்.  அழிவின் அழைப்பிதழ் எனது முதலாவது நாவலாக அச்சேறியது. அது மித்ர பதிப்பகத்தின் நாலாவது பதிப்பும், முதலாவது நாவலுமாகும்.

ஒரு மதியம்போல கோடம்பாக்கத்தில் இருக்கும் பாலத்திற்குக் கீழே, மசூதியோடு இருந்த மித்ர அச்சகத்திற்குப் போயிருந்தேன். அப்பொழுது எஸ்.பொ, இளம்பிறை ரஹ்மான் இருவரும் அங்கே இருந்தார்கள். இருவரும் மிகவும் மென்மையாக அன்பாகப் பேசினார்கள். எஸ்.பொ கதைத்தால் அதில் நிறையத் தமிழ் இலக்கியக் கூறுகள், நெளிவு சுளிவுகள், எள்ளல்கள், பொதிந்து இருக்கும். நட்பு அதில் உறவாடும். முதல் சந்திப்பிலிருந்தே எனக்குப் பிடித்துக்கொண்ட விடயம் அது. அவரது பேச்சுத் திறமைக்கு அவரே நிகர் என்பதே சத்தியம்.   சிலர் அவரை ஈழத்துப் பாரதி, ஈழத்து ஜெயகாந்தன் என்றெல்லாம் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரைத் தமிழுலகு மொத்தத்திற்குமான ஈடுயிணையற்ற படைப்பாளி அவர் என்று நினைக்கிறேன். வானத்தில் இருக்கும் நட்சத்திரம் போன்றவர். அவருக்கு ஈழம் என்று அணை போடக்கூடாது என்று நினைக்கிறேன். எப்படி பாரதி தமிழ் உலகு முழுமைக்கும் சொந்தமான, நிகரற்ற படைப்பாளியோ, அதைப்போலவே எஸ்.பொ. என்பது என் கருத்து.

கோடம்பாக்கத்தில் அவரைச் சந்தித்த போது அவரின் வயதிற்கு என்னால் அவரை ஒரு குருவாக, அல்லது அப்பா போன்ற ஸ்தானத்திலேயே வைத்துப் பார்க்க முடிந்தது. அதுவே எனது இறுதி வரையுமான எஸ்.பொ பற்றிய தரிசனமாக இருந்தது என்பதே உண்மை. ஆனால் நான் பார்த்தவரை அவர் எல்லோரையும் வயது வித்தியாசம், தகமை வித்தியாசம் இல்லாமல் நட்பாகவே நடத்துவார். நண்பர் போலவே பழகுவார். பாரியாரோடும் (ஈஸ்வரம்) மிகவும் தோழமையாகப் பழகுவார். சிறு குழந்தைகளுடனும் அதைப் போலவே பழகுவார்.

ஒரு நாவலை எழுதிவிட்டால் அதை வெளிக்கொண்டு வராது வைத்திருப்பது இயலாத காரியம். என்னிடம் சில நாவல்கள் இருந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் விடுமுறை கிடைக்கும் போது சென்னை பயணமாவேன். ஆண்டுவாரியாகப் பட்டியல் இட முடியாத நிலையில் உள்ளேன்.  1994 – 1999 இடையில் அவரை சில முறைகள் சந்தித்து இருக்கிறேன். அவருடன் ஒரு புத்தக அறிமுக விழாவிற்கு Book point இற்குச் சென்ற ஞாபகம் உண்டு. அப்படி ஒரு நிகழ்வில்; சிவசங்கரி, மாலன், அம்பிகைபாகன், பிரபஞ்சன், கணேசலிங்கம் மற்றும் பல இலக்கியப் பிரபலங்களை அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  கவிஞர் இன்குலாப்பை மித்திர அச்சகத்தில் வைத்து அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் தான் மாத்திரம் உயரத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணாது மற்றவரையும் அந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் சிந்தனை கொண்டவர் என்பதை நான் கண்டேன்.
Espo1.jpg
சென்னையில் அவரைச் சந்தித்தபோது வெறுமனே எனது நாவல்களைப் பிரசுரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாது, அதை எப்படிச் செப்பனிடுவது (editing செய்வது) என்று எனக்குப் பயிற்சி தந்தார் என்பதை நான் என்றும் மறக்க முடியாது. நான் அதற்காகக் கோடம்பாக்கத்தில் அவரது பதிப்பகத்திற்கு அருகே இருந்த விடுதியில் தங்குவேன். அவர் அப்போது மாலை வேலைகளில் அங்கே வந்து, நாவலில் என்ன என்ன மாற்றம் செய்ய வேண்டும், எப்படி மெருகூட்ட வேண்டும் என்பதை அழகாகப் பயிற்றுவிப்பார். உண்மையில் நான் அச்சேற்றுவதற்குத் தயாராக இந்த நாவல்களை அங்கே கொண்டு சென்றது இல்லை. அதை அச்சேற்றுவதற்குத் தயாராக்கியதே அவர்தான். இதைச் சொல்வதற்கு நான் பின்னிற்கவோ வெட்கப்படவோ இல்லை. அன்று அவர் தந்த பயிற்சி இன்று எனக்கு உதவுகிறது என்பது உண்மை. ஆகக்குறைந்தது எனது படைப்புக்களையாவது நானே சொந்தமாக இயன்ற அளவு செம்மைப்படுத்தி வெளியிட முடிகிறது.

எஸ்.பொ, பாரியார் ஈஸ்வரம் அவர்களோடு ஒஸ்லோவுக்கு 2000 ஆண்டு இலக்கியப் பயணமாக வந்திருந்தார். எனது நாளை நாவலை வெளியிட்டதோடு ஒஸ்லோவில் இலக்கியச் சந்திப்பும் நடந்தது. அப்போது எனது இல்லத்திற்கும் வருகை தந்திருந்தார். அது எனது வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.  எஸ்.பொ. வுக்கு பல அவமதிப்புகள் ஏற்பட்டதான வருத்தம் அவரிடம் இருந்தன. அது உண்மையும் கூட. ஈழத்திலும் சரி, புலம் பெயர்ந்த தேசங்களிலும் சரி சிலர் தங்களை மேதாவிகளாகக் காட்டிக் கொள்வதற்காக, அல்லது கருத்தியல் ரீதியாக வெல்ல முடியாத காழ்ப்பில் அவருக்கான மதிப்பை அளிக்கத் தவறிவிட்டார்கள் என்பது என் எண்ணம். இன்றும் அதைப் பலர் ஒத்துக்கொள்ள முடியாது இருக்கிறார்கள். அவர் வார்த்தையில் சொல்வதென்றால் 'எலியோட்டம் ஓடுகிறார்கள்'.  

மேற்கூறியவற்றை விடவும் அவரிடம் வேறு சில கவலைகள் இருந்தன. அதைப்பற்றியும் என்னுடன் கதைத்தது ஞாபகம் இருக்கிறது.  ஒன்று கோடம்பாக்கம் பாலத்திற்குக் கீழே இருந்த பதிப்பகத்தை மாற்ற வேண்டி வந்தபோது ஏற்பட்ட சிக்கல். அதில் அவர் மனமுடைந்து போய் இருந்தார். அது மிகவும் கரடுமுரடாக நடந்திருப்பதாக நான் உணர்ந்தேன்.  அதன் பின்பு பதிப்பக உரிமையில் அல்லது செயற்பாட்டில் ஏற்பட்ட சிக்கலிலும் மனமுடைந்து போய் இருந்தார். அதைப் பற்றிக் கதைக்கும் போது 'உங்கள் நேரம் என்பது தமிழ் உலகிற்கானது. அதை அற்ப விஷயங்களுக்கு நீங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்' என்று கூறினேன். தமிழை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்கின்ற கோபமும் அவரிடம் இருந்தது. அதைச் சில முன்னீடுகளிலும் காணலாம்.

எஸ்.பொ. வுக்குச் சென்னையில் போகுமிடங்களில் நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தன. அவரது பேச்சில் பலர் ஈர்க்கப்பட்டு இருந்தார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன். சபையில் துணிவோடு, மிகவும் இயல்பாக அவரால் பேசமுடியும். அவர் பேசத் தொடங்கினால் அரங்கம் தானாகக் கட்டுண்டு கிடக்கும். கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகத்திடம் இருந்து ஒரு விருது கிடைத்தது. அதற்கு நானும் சென்றிருந்தேன். எதற்கு என்பது எனக்கு இப்போது ஞாபகம் இல்லை. மது அருந்துவதைப் பற்றி எஸ்.பொ.வின் பாரியாருக்கு மிகுந்த கவலை இருந்தது. மது அருந்தாமலிருந்தால் இன்னும் அதிக காலம் இருப்பாரே என்றும், அதனால் தமிழுக்கு மேலும் ஊழியம் செய்ய முடியுமே என்று கவலைப்படுவார். அவர் வீட்டில் எனக்கும், ஓவியர் புகழேந்திக்கும், யுகபாரதிக்கும் ஒரு நாள் விருந்து கொடுத்தார். அப்போது இந்தியாவில் திருமணம் செய்திருந்த மகன் உயிரோடு இருந்த காலம். மித்ரவுக்கு அடுத்ததாக அதுவும் அவருக்குப் பின்னாளில் மிகுந்த கவலையைத் தந்த விடயமாகும்.

இவ்வளவு பிரச்சனை இருந்தாலும் காலையும் மாலையும் அலுவலகத்திற்கு வந்து, தனது தமிழ் ஊழியத்தை யாகம் செய்வது போலச் செய்வார். தொடக்கத்தில் சென்னையில் வாட்டி எடுக்கும் வெப்பத்திற்குள், ஒரு சிறிய இடத்தில் அது நடந்தது. பின்னாளில் அது விஸ்தரிக்கப்பட்டுக்  குளிரூட்டப்பட்டது. எது எப்படி இருந்தாலும் ஒவ்வொரு கணமும் தமிழ் இலக்கியம் என்று வாழ்தல் அவர் வாழ்க்கையாக அமைந்தது. அதைப்போல ஈழத்திலும், புலம்பெயர்ந்த தேசங்களிலும் பலர் உண்மையான தமிழ் ஊழியம் செய்வது பற்றி அவர் பெருமைப்படுவார்.

ஒரு முறை ஒரு நாவலை வாசித்தால் பின்பு வரிவரியாக எங்கெங்கே என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுமளவிற்குக் கிரகிக்கும் அபார சக்தி அவரிடம் இருந்தது. அது என்னை வியப்பில் ஆழ்த்தும். அதைவிட அரசியலா, வரலாறா, பொது அறிவா, எது என்றாலும் ஆழமாக, துல்லியமாக அவர் நினைவில் நிலைத்து நிற்பதைப் பார்த்து அதிசயப்பட்டு இருக்கிறேன். அப்படியான விடயங்களை வாசித்து அறிந்து கொள்ளவும் அவர் ஊக்குவிப்பார். எனக்கும் சிலவற்றைப் பிரதி எடுத்துத் தந்திருக்கிறார். அத்தோடு எந்தெந்த படைப்புக்களை வாசிக்க வேண்டும் என்கின்ற தன் கருத்தையும் தெரிவிப்பார்.

நான் அவரைப் பார்த்துக் கற்றுக்கொண்டது என்னவென்றால், ஒரு நாளைக்கு ஒரு பக்கம் என்றாலும் எழுதுவது. ஒவ்வொரு நாளும் சிறிதாவது எழுத முயல்வது. எஸ்.பொ. இறுதிக் காலத்தில் தனது படைப்பைவிட மற்றவர்களின் படைப்பிற்கு அதிக நேரம் செலவு செய்திருக்கிறார். அதை நாங்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். தமிழ் உலகே அதற்கு நன்றி செலுத்த வேண்டும். எஸ்.பொ. வின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பதைப் பலர் அறிந்திருப்பார்கள். அது மட்டுமல்ல, அவர் வெளியிட்ட ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு தனி வடிவமைப்புடன், தனிக் கலையழகுடன் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதையும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். பதிப்பாசிரியராக நிச்சயம் அவர் கௌரவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

அவர் எழுதிய முன்னீட்டில் ஒரு பகுதி தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவை முழுமையாகத் தொகுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.  எனக்காக  1994 இல் இருந்து 2014 வரையும் ஒன்பது புத்தகங்களை வெளியிட்டுத் தந்ததிருக்கிறார். நான் அதற்கு என்றும் நன்றியுடையவன் ஆவேன். அதைச் சாத்தியமாக்க ஒத்துழைத்த அவரது துணைவியாருக்கும் குடும்பத்திற்கும் எனது நன்றிகள்.  ஒருகட்டத்தில் மித்ர அச்சகத்தை எடுத்து நடத்தும்படி கேட்டுக்கொண்டார். என்னால் நோர்வேயில் இருந்து குடிபெயர முடியாத இக்கட்டான நிலையிலிருந்ததால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது போயிருந்தது.  எஸ்.பொ. வுடன் பல முறை தொலை பேசியில் கதைக்கும் வாய்ப்பும், சில கடிதப் பரிமாற்றங்களும் எனக்குக் கிட்டியிருந்தன. அவையும் எனக்குக் கிடைத்த அற்புதமான நினைவுகளே.

எஸ்.பொ. வின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பு என்பது யாவரும் அறிந்ததே. என்னைப் பொறுத்தவரை எனக்கு ஒரு நல்ல ஆசானின், ஒரு நல்ல குருவின், ஒரு நல்ல தந்தை போன்றவரின் இழப்பாகும். எஸ்.பொ. அவர்கள் இலக்கியம் மட்டும் படைக்கவில்லை. பல புதிய எழுத்தாளர்கள் உருவாக ஊக்கமளித்தார். அவர்களை மேலும் செழுமைப்படுத்தினார் என்பதும் மறக்க, மறைக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.  அவர் இன்று இல்லாவிட்டாலும் அவர் படைப்புகள், அவர் ஆற்றிய தமிழ் ஊழியம் என்பன என்றும் அவரை ஞாபகம் கொள்ள வைக்கும் கல்வெட்டுக்கள். எஸ்.பொ என்றால் எஸ்.பொ. தான். அவருக்கு இணையாக யாரையும் ஒப்பிடத் தேவையில்லை. அவராக, அவரின் உச்சம், அதை யாரும் தொடமுடியாது என்று எண்ணுகிறேன்.

-----

தேமொழி

unread,
Jan 7, 2022, 3:20:47 AM1/7/22
to மின்தமிழ்
எஸ்.பொ.  இன்றி நவீன ஈழத்தமிழ் இலக்கியம் இல்லை

-- க. நவம்



குறிப்பு:  அக்கினிக்குஞ்சு' அவுஸ்திரேலியா இணைய இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு - ஜெர்மனியும் இணைந்து நடத்திய,   ஈழத்தமிழ் எழுத்தாளர் மூதறிஞர் எஸ்.பொ. அவர்களின் நினைவுப் பேருரை மெய்நிகர் நிகழ்ச்சியின்  இரண்டாம்  நாளன்று (18.12.2021) எழுத்தாளர் க. நவம், இதழியலாளர், கனடா அவர்கள் வழங்கிய சிறப்புரை.  


எஸ்.பொ.வுக்கும் எனக்கும் இடையிலான ஊடாட்டம் - ஈழத்து இலக்கிய வரலாற்றில் அவரது வகிபாகம் - அவரது இலக்கியம் சார் கருத்துநிலை - என எல்லை வகுத்து, எனது கருத்துக்களைச் சுருக்கமாக முன்வைக்கிறேன்.

நவீன ஈழத்தமிழ் இலக்கியப் புத்தகங்களைப் பள்ளிக் காலத்திலேயே படிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியிருந்தது. எஸ்.பொ.வின் ‘சில புத்தகங்கள்’ அப்போதைய என்னைப் போன்ற சின்னஞ் சிறிசுகளின் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ, வீட்டில் புத்தகங்களோடு புத்தகமாய்ப் புதைத்து வைக்கப்பட்டிருந்த காலமது. விளங்கினது பாதி – விளங்காதது பாதியென, அசுமாத்தம் ஏதுமின்றி அவசர அவசரமாகப் படித்துவிட்டு, மீண்டும் கிடந்த இடத்தில் அப்படியே அவற்றை நானும் பதுக்கி வைத்த ஞாபகம். ஆனாலும் தொடர்ந்து அவ்வப்போது எஸ்.பொ.வைப் படித்துவந்த எனக்கு, அவரது எழுத்தில் காரணம் தெரியாத ஒரு கவர்ச்சி இருந்து வந்தது. அவரை என்றைக்காவது ஒருநாள் காணவேண்டும் என்ற ‘காதல் மனதில் பெருகி இருந்தது’ என்றுகூடச் சொல்லலாம்.

1973 அல்லது 74ஆக இருக்க வேண்டும் - கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் நான் ஆசிரியப் பணியாற்றிவந்த தருணம், அகில இலங்கைத் தமிழ்த் தினவிழா மிகப்பெரும் ஏற்பாடுகளுடன் அங்கு நடைபெற்றது. அதன்பொருட்டு எஸ்.பொ. உட்பட, கிழக்கிலங்கையின் மூத்த படைப்பாளிகள் பலரும் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். அன்றுதான் நான் எஸ்.பொ.வை முதன்முதலாகக் கண்டேன். சற்றே காலம் கடந்த காட்சிப் படிமத்துடன் கூறுவதாயின், ‘மாமேரு மலையை அண்ணாந்து பார்த்த மலைப்புடன்’ அவரைத் தூர நின்று பார்க்கக் கிடைத்ததே தவிர, துரதிருஷ்டவசமாக அவருடன் பேசவோ பழகவோ எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை.

எண்பதுகளின் ஆரம்பத்தில் என்னினத்தவர்க்கும் எனக்கும் இலங்கையில் விளைவிக்கப்பட்ட இன்னல்கள் காரணமாக - நாடுகள், கடல்கள், கண்டங்கள் கடந்து, பரதேசியாக கனடா வந்து சேர்ந்திருந்தேன். ஆனாலும், எஸ்.பொ.வின் வார்த்தைகளில் சொல்வதாயின், நீண்ட பயணங்களிலும் அவற்றையும் மீறி, நெடிதுயர்ந்த ஆய்க்கினைகளிலும், அமோக இழப்புக்களிலும் ‘நான் தமிழன்’ என்ற பிரக்ஞையை மட்டும் கனடாவில் தொலைக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரை இங்கு கலை இலக்கிய முயற்சிகள் தவிர, மனதுக்கு இதந்தரும் வேறெந்தப் பொதுக் காரியங்களாலும் என் ஏதிலி வாழ்வின் தழும்புகளை என்னால் முற்றாக மூடிமறைக்க முடியவில்லை. இவைகளே எனது மனதுக்குக் குதூகலம் அளித்தன; வாழ்வுக்கு அர்த்தத்தை வழங்கின. ஆகையால், அவ்வப்போதான சிறுசிறு அஞ்ஞாதவாசம் தவிர, இத்துறைகளுடனான சிநேகிதம் இங்கும் தொடர்ந்தது.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் வெளியிட்டுவந்த ‘நான்காவது பரிமாணம்’ கலை இலக்கிய இதழினூடாக, சென்னையில் தமது இலக்கிய ஊழியத்தை மேற்கொண்டுவந்த எஸ்.பொ.வுக்கும் எனக்கும் தொடர்புகள் ஏற்பட்டன. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களே புத்தாயிரத்தில் தமிழ் இலக்கியத்திற்குத் தலைமை தாங்குவார்கள் என ஒரு வெற்றுப் புலம்பலாய் அல்லாமல், ஆறுகோடி தமிழ் மக்கள் வாழும் சென்னைத் தலைநகரிலே ஒவ்வொரு சொல்லினது அர்த்தமும் உணர்ந்து பிரசித்தம் செய்தவர், எஸ்.பொ. அந்த நம்பிக்கையின் அடையாளமாக, புலம்பெயர்ந்த கதைஞர்களின் 39 புதுக் கதைகளை ‘பனியும் பனையும்’ என்ற மகுடத்துடன் தமது மித்ர வெளியீடாக 94இல் வெளியிட்டார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க, கனடாவிலிருந்து கதைகளைத் திரட்டி அனுப்பியவர்களுள் நானும் ஒருவன்.
['பனியும் பனையும்' நூலினை 'நூலகம்' தளத்தில்  - வாசிக்க... http://noolaham.net/project/01/65/65.pdf]

Espo3.jpg
உலகச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு, 2000ஆம் ஆண்டு செப்ரெம்பரில் எஸ்.பொ. கனடா வந்து, 2 வாரம் தங்கியிருந்தபோதுதான் அவரைச் சந்தித்து நேரடியாகப் பேசிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கொள்கை அடிப்படையில் நாமிருவரும் முரண்பட்டவர்கள் தான்; ஆனாலும் இங்கு இடம்பெற்ற பல சந்திப்புகளின் போதெல்லாம் என்னோடு பயணிப்பதையே அவர் தமது விருப்புக்குரிய தேர்வாகக் கொண்டிருந்தார். மொன்றியால் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சந்திப்புக்கென, ஒருநாள் காலை புறப்பட்டு, அது முடிந்த கையோடு மீண்டும் அன்று மாலையே ரொறன்ரோ திரும்பினோம். எங்கள் இருவரதும் மனைவியர்கள் வாகனத்தின் பின் இருக்கைகளில் அமர்ந்துகொண்டு, தத்தமது வீடுகளில் ‘கோழி குட்டி போட்ட கதைகளையும் –  ஆடு குஞ்சு பொரித்த கதைகளையும்’ அந்நியோன்யமாக்கப் பரிமாறிக்கொண்டு வந்தனர்.

ஆனால் அந்த 12 மணிநேரக் கார்ப் பிரயாணத்தில் இடம்பெற்ற, ‘குருஷேத்ர கீதா உபதேசத்தின்போது’, தொடர்ந்து வினாக்களைத் தொடுத்த பார்த்தனாக நானிருந்தேன். கீதாசிரியன் கண்ணனாக இருந்து அலுக்காமல், சலிக்காமல் எனது வினாக்களுக்கான விடைகளாக அவர் மனம் திறந்து என்னோடு பகிர்ந்துகொண்ட செய்திகள், தகவல்கள், அனுபவங்கள், அறிவுரைகள் விலைமதிப்பற்றவை. தமது வாழ்வியல் அனுபவங்களை இளைய படைப்பாளிகளுடன் பகிர்ந்து கொள்வதை, இலக்கியச் சகாயத்திற்கு உதவும் ஒரு சல்லாபமாக மதிக்கும் அவரது அன்றைய பகிர்வுகள் ஓர் அருமந்த நூலாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய தகுதியுடையவை. அதேயாண்டு, மார்கழி மாதம் கனடாச் சிறப்பிதழாக, கணையாழி வெளிவந்தமைக்கும், அதன் தொகுப்பாசிரியராக நான் பங்காற்றியமைக்கும், எஸ்.பொ.வின் முன்னெடுப்பும் முயற்சியுமே முழு முதற்காரணங்கள். அதன் பின்னர் அவர் மறையும்வரை, சில கடிதங்கள், தொலைபேசி உரையாடல்கள் மூலமாக மட்டுமே அவருடனான உறவும் தொடர்பும் நீடித்திருந்தன.

இனி, ஈழத்து இலக்கிய வரலாற்றில் அவரது வகிபாகம் என்ன என்பதை ஒரேயொரு வரியில் சொல்வதாயின், எஸ்.பொ. என்ற இந்த மகத்தான இலக்கிய ஆளுமை இன்றி, ஈழத்து நவீனத் தமிழ் இலக்கிய வரலாறே இல்லை. சிறுகதை, உருவக்கதை, நாவல், நாடகம், கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, கல்வி, வானொலி, சினிமா என்று அவர் அகலக் கால் பதிக்காத துறையே இல்லை. அபிமன்யு, அம்யுக்தன், கொப்பன் கணபதி, கொண்டோடிச் சுப்பர், புரட்சிப்பித்தன், பழமைதாசன், ராஜ்மித்ரா, ராஜபுத்ரா என்ற மாறுவேடங்களுடன் எழுத்துலகில் நடமாடிய இவர், சிறுகதை மன்னன், ஈழத்து ஜெயகாந்தன், நடைச்சிற்பி என்றெல்லாம் விதந்துரைக்கப்பட்டவர்.

நவீன ஈழத்தமிழ் இலக்கிய உலகை ஒருகால் வழிநடத்திக்கொண்டுவந்த மாபெரும் இயக்கமொன்றைத் தமது வீரியம் மிக்க எழுத்தாற்றலைக் கொண்டும் - கரு, நடை, உத்திமுறை என்பவற்றைக் கையாளும் தமக்கேயான தனித்துவத்தினைக் கொண்டும் எதிர்த்து நின்ற துணிச்சலாளர். எதையும் புதிது புதிதாகச் செய்து பார்த்து, அதன் வெற்றி தோல்விகள் மீது மீண்டும் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக, சக எழுத்தாளர் பலருடன் இணைந்து மத்தாப்பு, மணிமகுடம் போன்ற மேலும் பல கூட்டு முயற்சி இலக்கியங்கள் தோன்றக் கால்கோளமைத்தவர். ஆங்கிலப் புலமையாலும் - ஆசிய, ஆப்பிரிக்க, அவுஸ்திரேலியக் கண்டங்களில் வாழ்ந்தமையால் கிட்டிய பட்டறிவினாலும் - ஒரு பண்பட்ட படைப்பாளிக்குரிய பரந்துபட்ட பார்வையினையும் ஆழ்ந்தகன்ற நுண்ணுணர்வையும் தனதாக்கிக் கொண்டவர். இவ்வாறாக, தாம் சென்ற இடமெல்லாம் தமது கலாச்சாரத்தை, பண்பாட்டை, இலக்கியத்தை, தனித்துவத்தைப் பெருமையுடன் வெளிக்கொணர்ந்து வந்த பெருமகன், அவர். ஒரு யாழ்ப்பாணத்தவனாகப் பிறந்து, யாழ்ப்பாண வாழ்க்கையின் பழக்க வழக்கங்களை உட்கொண்டு, அதே சமயம் ஒட்டுறவற்ற ஒரு துறவு மனப்பக்குவத்துடன் யாழ்ப்பாண வாழ்க்கையை உற்றுநோக்கியதன் பெறுபேறாகவே ‘நனவிடை தோய்தல்’ என்னும் புதிய இலக்கிய வடிவம் உட்பட, அலாதியான படைப்புக்கள் பலவற்றை ஆக்கி அளித்தவர்.

மலிவான பிரசுர களங்கள் என்னும் போர்வையுடன், புலம்பெயர்ந்த தமிழனின் குருதியும் வியர்வையும் உறிஞ்சிச் சுகிக்கப்பட்டு வந்த ஒரு காசாசைக் காமாலை நோய்ச் சூழலில், மித்ர வெளியீடு என்ற அழுத்தகம் ஒன்றை ஆரம்பித்து, அவனதும் ஏனைய பலரதும் படைப்புகள் நூலுருப் பெறுவதற்கு ஆவன செய்தவர். இவ்வாறாக ஈழத்தமிழ் இலக்கியத்தில் அவர் வகித்த பாகங்களின் விபரங்களைத் தொடர்ந்து அடுக்கிக்கொண்டே போகலாம்.

எஸ்.பொ. ஒருமுறை சொன்னார், “தமிழ் ஊழியம் என்னைப் பொறுத்தமட்டில் ரோஜாமலர்ப் படுக்கையாக அமையவில்லை. அது முள்முடி தரித்த, சிலுவை சுமந்த யாத்திரை! ஏன் இந்த ஆய்க்கினைகள்? என் தமிழ்ச் சேவிப்பிலே சதா புதிதுகளைத் தேடுகிறேன். அதுவும் இடையறாத ஓய்வில்லாத தேடல். அது இருட்டு அறையிலே கறுப்புப் பூனையைத் தேடுவதல்ல. அன்றேல் காரட் தொங்கும் தடிக்குப் பின்னாலான கழுதை ஓட்டமுமல்ல! அது உண்மையின் உள்ளொளி நாடிய தேடல்.” எஸ்.பொ.வினது இலக்கியக் கருத்துநிலையினைக் கோடிட்டுக் காட்டுவதற்கு அவரது வாய்வழி வந்த இந்த ஒப்புதலை விட வேறென்ன வாக்குமூலம் வேண்டிக் கிடக்கின்றது?

கைதேர்ந்த எழுத்துநடை வேறுபாடுகளுக்கும் அப்பால், தமது எழுத்துக்களில் உயிராக - ஊடுபாவாகப் பரவியிருப்பது இலக்கியச் சத்தியமே என்பதை "There was something in common in the diversity of styles which I employ" என ஆங்கிலத்தில் அழகாக ஒருமுறை கூறியிருக்கின்றார்.

படைப்பாளிகள் சத்தியத்திற்கு முன்னுரிமை கொடுத்துப் படைக்க வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தும் எஸ்.பொ., இந்தப் படைப்புச் சத்தியத்திற்கு உண்மையே அழகு; பொய்மைக்குத்தான் பூ வேலையும் பூச்சு வேலையும் தேவை எனச் சொல்லியிருக்கின்றார்.

மேலும், “இலக்கியத்தில் சமூக முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உள்ளடக்கமே பிரதானமானது என மார்க்சியவாதிகள் கருதுகின்றனர்” எனக் கூறும் எஸ்.பொ., இலக்கியத்தில் இந்த உருவம், உள்ளடக்கம் என்ற பகுப்புமுறை கொச்சையானது என எதிர்வினையாற்றி வந்துள்ளார்.

இவ்விதமாக, இஸங்கள், கோட்பாடுகள், தத்துவங்களின் அடிப்படையில் வாழ்வியலை உற்று நோக்கும் வழிமுறையை விடுத்து, படைப்பு மொழியைத் தனது போக்கில் நகரவிட்டு எழுதும் கட்டற்ற எழுத்து முறையை அவர் கையாண்டவர். மூடி மறைக்கப்படும் மானுட நடத்தை குறித்த உண்மையை உண்மையாகச் சொல்ல வேண்டும் என்ற வேட்கையுடன், ஒரு சராசரி மனிதனது ஆழ்மன விருப்புக்களையும் சபல சஞ்சலங்களையும் இலக்கியமாக்கித் தந்தவர்.

மேலும், மண்வாசனையுடன் கூடிய ஈழத்து வட்டார மொழி வழக்குகளை, அட்ஷர லட்ஷணம் பிசகாதபடி, அவற்றிற்கே உரிய அழகியல் நுட்பங்களுடன் கையாண்டு வெற்றி கண்டவர் என்றும், ஒரு கைதேர்ந்த இலக்கியப் படைப்பாளிக்குரிய கட்டற்ற நுட்பமான கதைகூறு முறை கைவந்த கலைஞர் என்றும் விமர்சகர்களால் புகழ்ந்து கொண்டாடப்பட்டவர். ஒரு சிறுகதையையோ அல்லது ஒரு நாவலையோ படைக்க முற்படும்போது, அதில் தாம் சித்தரிக்கவிருக்கும் கருப்பொருளுக்கு ஏற்ற பொருத்தமான எழுத்து நடையையும் உருவத்தையும் கொடுக்க வேண்டும் என்று நம்பும் எஸ்.பொ., தம்மை அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படைப்பாளி என்று வெளிப்படையாகவே சொல்லிக்கொள்கின்றார்.

சர்ச்சைக்குரிய ஒரு படைப்பாளியாக தம்மை இனங்காட்டிக்கொண்ட அவர், எதன் பொருட்டும் சலுகை காட்டாமல் தன்னளவில் கண்ட உண்மைகளைத் துணிந்து சொல்லவும் எழுதவும் ஒருபோதும் தயங்கியதில்லை. அதன் உடனடி விளைச்சலாக ஏககாலத்தில் எதிர்ப்பையும் ஆதரவையும் சம்பாதித்துக் கொண்டவர். தமது செழுமை மிக்க மொழி வல்லபத்தினாலும் ஆக்கத்திறனாலும் நெருக்கமான உறவுகளையும், அதேவேளை ஆழமான பிளவுகளையும் எதிர்கொண்டவர். ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அது இல்லாதவன் ஒரு படைப்பாளியே அல்ல. நுண்ணுணர்வு உள்ளமையால் தான் மற்றவர்களால் பார்க்க முடியாதவற்றை அவனால் பார்க்க முடிகிறது. அதேவேளை, அந்த நுண்ணுணர்வுதான் அவனை எதிர்வினை ஆற்றுபவனாகவும் ஆக்கிவிடுகின்றது. அதன் விளைவாக அவன் ஏகப்பட்ட புறந்தள்ளலுக்கும் ஆளாகின்றான். அது எல்லாப் படைப்பாளிகளுக்கும் ஏற்படக்கூடிய ஒரு பேரவலம், சாபக்கேடு. இந்நிலையில், நுணுக்கரிய நுண்ணுணர்வு கொண்ட எஸ்.பொ. மட்டும் எப்படி இந்த நியதியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்!

2000ஆம் ஆண்டு அவர் கனடா வந்திருந்த சமயம், ஒருநாள் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, நான் கேட்டேன் – “பிரேம்ஜியும் கனடாவிலதான் தன்ர பிள்ளையளோட வாழ்ந்துகொண்டிருக்கிறார், தெரியுமோ?” “ஓமடா தம்பி… கேள்விப்பட்டனான்” என்று எஸ்.பொ. சுருக்கமாகப் பதில் சொன்னார்.

“நான் உங்களைக் கூட்டிக்கொண்டு போறன். நீங்கள் ஏன் அவரை ஒருக்கால் சந்திக்கக் கூடாது?”

ஒரு கணநேர தாமதத்தின் பின் எஸ்.பொ. சொன்னார் -  “அதுக்கென்ன, சந்திக்கலாம்…”

உடனே பிரேம்ஜியைத் தொலைபேசியில் அழைத்து “எஸ்.பொ. உங்களைச் சந்திக்க விரும்புறார். கூட்டி வரட்டுமா?” எனக் கேட்டேன். “எனக்கொரு பிரச்சினையும் இல்லை, நவம்.” மறுமுனையிலிருந்து பதில் வந்தது. உடனடியாக நானும் எஸ்.பொ.வும் புறப்பட்டுச் சென்றோம்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆயுட்காலப் பொதுச் செயலாளராக இருந்தவர், பிரேம்ஜி. கோட்பாட்டு ரீதியில் கைலாசபதியையும் சிவதம்பியையும் பிரேம்ஜியையும் எஸ்.பொ.  தன் பரமவைரிகளாக வரிந்துகட்டிக்கொண்டிருந்தமை ஊருலகறிந்த ரகசியம்.

அதே பிரேம்ஜியின் வீட்டை நாங்கள் சென்றடைந்தபோது, அவர் வாசலில் எமக்காகக் காத்து நின்றார். இருவரும் இன்முகத்துடன் ஒருவரை ஒருவர் வரவேற்றனர். இலக்கியக் கோட்பாட்டு முரண்பாடுகளையும் மன முறுகல்களையும் மறந்து, தேநீர் அருந்தி அன்போடு அளவளாவினர். சுமார் ஒரு மணித்தியால உரையாடலின் பின்னர் அதே மலர்ந்த முகத்துடன் பிரேம்ஜியிடமிருந்து விடைபெற்று என்னுடன் புறப்பட்டு வந்தவர், எஸ்.பொ.

இது மட்டுமன்றி, இதே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளையின் செயலாளர் தெணியானின் தம்பிதான் நான் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தும், என்னோடு எந்தவிதக் கோபதாபமும் இன்றி, சம்பிரதாயம் ஏதுமற்ற அன்போடும் அளவிறந்த மரியாதையோடும் உறவாடிப் பழகி வந்தவர், எஸ்.பொ.

என்னதான் கொள்கை ரீதியான மோதல்களும் முரண்பாடுகளும் இருந்தாலும், காலம் பூராவும் கறாரான விமர்சனங்களையும் கண்டனங்களையும் அள்ளிக் கொட்டினாலும், நேருக்கு நேர் காணக் கிடைக்கின்றபோது நயத்தக்க நாகரிகத்துடனும், இனிமை தோய்ந்த இங்கிதத்துடனும் பேசிப் பழகும் மனப் பக்குவம் பெற்றவர் எஸ்.பொ. அவர்கள் என்பதற்கான இருசிறு உதாரணங்கள் இவை. முடிவாக -

ஷேக்ஸ்பியர் தனது காதலிக்கு எழுதிய கவிதையில் இப்படிச் சொன்னாராம் –
‘So long as men can breath or eyes can see,
So long lives this, and this gives life to thee’
அதுபோலவே, மனித இனம் வாழும்வரை எஸ்.பொ.வின் படைப்புகளும் வாழும்; அவரது படைப்புகள் வாழும்வரை அவரும் இவ்வுலகில் தொடர்ந்து வாழ்வார்.  

------------- 



Reply all
Reply to author
Forward
0 new messages