டாக்டர் நாகராசன் ஐயா, வணக்கம்.
///ஓலைச் சுவடிகளைக் குவித்துவைத்திருக்கும் பல்கலைக் கழகங்கள் நிதி கருவி கிடைத்தால் அடுத்த நிலைக்கு செல்லும் அப்படிச் சென்றாலும் சமஸ்கிரித வளங்களுக்கே முதலிடம் கிடைக்கக்கூடும். காரணம் தமிழ் ஓலைச்ச்சுவடிகளைப் படித்துப் பொருள் சொல்ல அந்நிறுவனங்களில் ஆட்கள் கிடையாது.///
அவர்கள்தாம் அப்படி நினைக்கிறார்கள்/சொல்கிறார்கள் என்றால் பல்கலைக்கழகங்கள், பிற துறைகள் இவற்றைப் பற்றிய நுணுக்கங்களை அறிந்திருக்கும் தாங்களுமா ஐயா அதற்கு மாற்றுவழி சொல்லாமல் அவர்களுடைய புலம்பலை ஏற்றுக்கொள்வதுபோல் சொல்கிறீர்கள்!
ஏற்கனவே ஓலைச்சுவடி படிக்கத் தெரிந்தவர்கள் இல்லாத தென்னாடா?! (ஆனானப்பட்ட இறையனார் களவியல் உருவானதே எங்க மதுரைச் சொக்கனின் அலுவலகத்தில்தானே!) தேடுங்கள் கிடைப்பார்கள். ஓலைச்சுவடிகளைப் படிப்பது என்பதும் பிற துறைகளில் பயிற்சி பெறுவது போன்றதே. எனவே அதற்குத் தேவையான பயிற்சி கொடுத்தால் சுவடி படிக்கும் புதிய ஆட்களும் உருவாகுவார்கள்.
***************
என் குறுகிய அனுபவத்தைச் சொல்கிறேன். சில ஆண்டுகளுக்குமுன் பாண்டிச்சேரியில் EFEO-இல் பார்த்த சுவடிக்காப்பகம் என்னை மிகவும் ஈர்த்தது. மிக அருமையான காப்பகம். மிக அருமையான பணிக்களம். பழகுவதற்கு இனிய மக்கள். கத்தும் குயிலோசை எப்போதும் காதில் விழும் சூழல்! கரையும் கடல் தப்படியில்! சூழலில் மையல் கொண்டேன். அங்கேயே தங்கிப் பணியாற்ற விரும்பினேன். ஆனால், ஐரோப்பிய சம்பளம் இல்லாத நிலையில் என் விருப்பத்தைத் தொடரமுடியவில்லை; என் அமெரிக்க வாழ்க்கை தந்த படிப்பினை.
நண்பர் ழான் வீட்டில் தங்கியிருந்தேன். நண்பர் மணிவண்ணனும் அவர் மனைவி ஆஷாவும் என்னைப் பார்க்க வந்தார்கள். ஒரு நாள் காலையில் எல்லாருமாகச் சேர்ந்து உட்கார்ந்து ஒரு பெரிய மின்திரையில் 'கணக்கதிகாரம்' என்ற சுவடியைப் பார்த்தோம். (சுவடியின் பெயரை நான் மறந்து தவறாகச் சொல்லியிருந்தால் நண்பர்கள் திருத்தட்டும்.) ஒரு சில ஏடுகளைப் பார்த்தவுடனே கடகட என்று அந்தச் சுவடியெழுத்துகளை இனம் கண்டுகொள்ளத் தொடங்கிவிட்டார் ஆஷா! ஆஷா போன்றவர்களுக்குப் பயிற்சி கொடுத்துப் பணிக்கு அமர்த்தலாமே?
***************
'சுவடிப்படிப்பு' என்று தனியாகப் பல்கலைக்கழக வகுப்புகளில் படிக்காமலே சுவடிகளைப் படிக்கும் பயிற்சியைப் பெறமுடியும்.
முக்கியமாகத் தேவையானவை:
1. சுவடிகளைக் கையாளும் பக்குவம்.
2. சுவடிகளின் எழுத்துகளைப் பெரிதாக்கிக் காட்டும் மின்திரை; அதற்கேற்ற கணினி.
3. Pattern recognition என்ற 'வடிவமைப்பை அறியும்' உத்தி. எடுத்துக்காட்டு: சிலருடைய கையெழுத்தைச் சிலர் மட்டுமே புரிந்துகொள்வதும், சிலருடைய பேச்சைச் சிலர் மட்டுமே புரிந்துகொள்வதும். இது மிகவும் அடிப்படையான உத்தி.
4. தமிழ் அறிவும் ஆர்வமும். இலக்கண, இலக்கியத் துறை மட்டுமில்லாமல் கணிதம், சோதிடம், மருத்துவம் போன்ற பிற துறை அறிவும் ஆர்வமும் தேவை.
++++++++++++++
இங்கே இரண்டு நிலைகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்:
ஒன்று, ஓலையில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் இனம் காணுதல் -- அதாவது, இது இது இன்னது என்று தெரிதல்.
இன்னொன்று, தெரிவுபடுத்தப்பட்ட சொற்களின் பொருளைப் புரிந்துகொள்ளுதல்.
இந்த இரண்டு நிலைக்குப் பிறகே சுவடியின் முழுமையான செய்தியைப் புரிந்துகொள்ள முடியும்.
++++++++++++++
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் மின்சுவடிகளைத் தேடுவதில் சிக்கல் இருக்கிறது. அவை தொகுக்கப்பட்ட முறையில் ஒழுங்கில்லை, தெளிவில்லை.
ஆனாலும், தேடித் தேடிப் பார்த்த சில சுவடிகளின் மின்படங்களைப் பார்த்து அதெல்லாம் என்ன என்று புரிந்துகொள்ள முடிந்தது, எனக்குத் தேவையான கருத்து கிடைத்தது, அதற்கு நன்றி சொல்வேன்.
++++++++++++++
சரி, எல்லாத்துக்கும் அப்பாலெ சொல்ல வருவது என்ன என்றால் ...
'சுவடிகளைப் படிக்கத் தயாராக உள்ளவர்' என்று யாரும் பிறந்ததில்லை; இனி யாரும் உங்கள் காலத்துக்குள் பிறந்து வரப்போவதுமில்லை. ஆகவே, இருக்கிற மக்களின் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தவும்.
++++++++++++++
இப்படிக்கு,
ராஜம்