திருமலை வேங்கடத்தானை அமைதியான முறையில் வரிசையில் சென்று அமைதியான முறையில் கர்ப்பக்கிருகத்துள் நுழைந்து அமைதியான முறையில் ஆண்டவனை தரிசித்து அவன் அருளை ஆனந்தமாகப் பெறுவது எப்படி?
இப்படிக் கேட்டால் ‘அட போங்க சார்.. ஜோக் அடிக்காதீங்க’ என்பார்கள் விவரம் தெரிந்த அநேகம்பேர். ஆனால் கொஞ்சம் சீரியஸாகவே இதைப்பற்றி சமீபத்தில் திருப்பதியில் தேவஸ்தானத்தார் சார்பில் திருப்பதியில் ஒரு செமினாரே நடந்தது. இந்த செமினாருக்கு அடியேனையும் அழைத்திருந்தார்கள் என்றாலும் சில பல காரணங்களால் செல்லமுடியவில்லை. ஆனாலும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட முக்கிய விஷயங்கள் பற்றிய முழுத்தகவலும் நம்மிடையே வந்துள்ளதால் அவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கூட்டத்தில் முக்கிய புள்ளி விவரங்களோடு சில பொறுப்புள்ள அதிகாரிகள், ஒரு சில பெருமக்கள் பேச்சு விவரம்,
திரு அஜய கல்லம் (முன்னாள் செயல் அதிகாரி, தி.தி.தே): தற்போதுள்ள கர்ப்பக்கிருகத்தில் சில மாற்றங்களை செய்யவேணும்.
ஒரு பக்கமே வழி என்பதால் கூட்டம் தரிசிக்க இயலாமல் தள்ளாடுகிறது. இரண்டு பக்கங்களிலும் வழி செய்யப்படவேண்டும்.
ஆகமவிதிமுறைகள் என்பது கர்ப்பகிருக மாற்ற விஷயத்தில் குறுக்கிட்டால், காலத்துக்கேற்ப சாந்தி முறைகள் செய்துகொள்ளலாம். கோயிலே பல மாற்றங்களை காலவாக்கில் சந்தித்துள்ளது.
கர்ப்பக்கிருக ஆலயத்தில் உள்ள ஊழியர்களுக்கு, அவர் என்னதாம் கஷ்டப்பணிகளை மேற்கொண்டவராயினும், பக்தர்களை மதிக்கும் பண்பாடு காட்டாயமாக கற்றிருக்கவேண்டும். பக்தர்களை இழுப்பது, அவர்களைத் தள்ளுவது, திட்டுவது போன்றவை நிறுத்தப்படவேண்டும்.
கோயிலில் தினம் 60000 பக்தர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான் எனும் பட்சத்தில் வி.ஐ.பி. பக்தர்களுக்கு, அவசியப்பட்டலொழிய, முக்கியத்துவம் தராமல் இருக்கவேண்டும். தரிசன் வேளைகளை நாள் முழுதும் வைத்திருக்கமுடிந்தால் இன்னமும் எளிதாகும்.
திரு சௌந்தரராஜன், ஆந்திர மாநில ஆலயக் காப்பாளர், சில்கூர்(ஹைதராபாத்)பாலாஜி கோயில் நிர்வாகி:
கூட்டங்களைக் குறைக்க திருப்பதியில் உள்ள பல தலங்கள் (முக்கியமாக சீனிவாசமங்காபுர வேங்கடவர்), சில்கூர் பாலாஜி, ஏலூர் வேங்கடவர், விஜயநகரம் அருகே உள்ள திருவேங்க்டவர், மதுரை சீனிவாஸர், ஒப்பிலா அப்பன் போன்ற கோயில்களையும் தி.தி.தே சமான அந்தஸ்து கொடுத்து பூஜை விதானங்கள், கல்யாண கைங்கரியங்கள் போன்றவை நடத்தவும் வழி வகை செய்தால் கால் பங்கு திருமலை கூட்டம் குறையும். திருவேங்கடவனுக்கு சமானமானவன் இந்த கோயில்களில் இருக்கும் பகவான் என்று தி.தி.தே செய்தி மீடியா மூலம் பரப்புதல் அவசியம்.
திரு கிருஷ்ணாராவ், இன்றைய செயல் அதிகாரி:
ஆகமமுறைகளில் எந்த மாற்றத்தையும் ஜீயர்கள் முதல் கோயில் அர்ச்சகர் வரை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். ஆகையினால் கர்ப்பக்கிருக மாற்றத்துக்கு வழி இல்லை.
லகு தரிசனம் (தூரத்தில் நின்று தரிசிக்கும் முறை) என்பது பக்தருக்கு திருப்தியாக இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ரூ.300 டிக்கட் தரிசனம் உடனடியாக வந்து போவதற்கு வசதி இருந்தாலும், அவர்கள் கோயில் வாசல் வரும்போது பொது தரிசனத்தோடு கலந்து விடுவதால் அவர்களும் திருப்தியில்லாமல் இருக்கிறார்கள். இப்போதைய சூழ்நிலையில் எங்களால் செய்யமுடிந்தது இவ்வளவுதான். கூட்ட நெரிசல் என வரும்போது எங்களால் முடிந்த அளவு போராடுகிறோம். வி.ஐ.பி தரிசங்கள் கூட கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம்.
கர்ப்பக்கிருக பகுதியில் ‘தானியங்கி நகரும் மேடை’ ஒன்று ஜனவரி மாதத்தில் பரிசோதனை முறையில் அமைக்க உள்ளோம்.இதன்படி கர்ப்பக்கிருகத்தில் ஒரு முறை கூட்டம் நுழைந்தால் அந்த மேடை ஒரு சுற்று சுற்றி அதுவாகவே பக்தர்களை வெளிக்கொணர்ந்து விடும். இதனால் ஊழியர்களின் கெடுபிடிகள் கர்ப்பக்கிருகத்தில் வெகுவாகக் குறையும். ஆனால் நடைமேடையில் ஏறும்போதும், இறங்கும்போதும் எச்சரிக்கையாக இருப்பதறகும், பக்தர்களை கையாள்வதற்கும் அவர்களுக்குப் பயிற்சி தரப்படும். இது பரிசோதனை முறைதான்.பொது பக்தர்கள் நீண்டநேரம் காக்கவைக்காமல் இருப்பதற்கு தற்சமயம் 15000 வரை கொடுக்கப்பட்டு வரும் 300 ரூபாய் டிக்கெட்டுகள் பத்தாயிரம் வரை குறைக்கப்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------
இது போக இன்னமும் தங்கும் வசதிகள், கட்டண பூஜை விதானங்கள், கல்யாணங்கள் என எல்லாவித விஷயங்களும் அலசப்பட்டன. அவை பற்றிய விஷயங்களை நான் இங்கு எழுதவில்லை.
தனிப்பட்ட முறையில் அடியேனால் திருமலை செல்லும் பக்தருக்கு சில ஆலாசனைகள்.
1. முடிந்தவரை உங்கள் பயணத் திட்டங்களை திங்கள் முதல் வெள்ளி என வாரகாலத்தில் வைத்துக் கொள்ளுங்கள். லீவு நாள் எனப் பார்த்து சனி, ஞாயிறன்று அத்தனை மக்களும் எல்லாப்பகுதியிலிருந்தும் வருவதால் ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளது. அங்கே காவல் காப்பவர்கள் ஒருவேளை தேவர்களே ஆனாலும் கூட கூட்ட நெரிசலை அதுவும் சின்னஞ்சிறிய ஏழுமலையில் ஒன்றும் கட்டுப்படுத்தமுடியாது
.
2. முடிந்தவரை, ஏஜென்சி மூலம் அல்லாமல் நீங்களே நேரில் திருப்பதி-திருமலை சென்று, முடிந்தால் ரூ 300 டிக்கெட்டை வாங்கிச் செல்லுங்கள். ஒரு சில நாட்கள் தவிர ஏனைய வாரநாட்களில் நிம்மதியாகவே தரிசனம் காணமுடியும்.ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்தில் தரிசனம் கிடைக்கும்
.
3. எக்காரணம் கொண்டும் ஏஜெண்டுகளுக்கு லஞ்சம் கொடுத்து (300 ரூ டிக்கெட் சில சமயம் 1000 வரை விற்கப்பட்டு, உங்களை கோயில் வாசல் கும்பலோடு வசதியாக கலக்கவிடுவார்கள்)ப் போக வேண்டாம். டெம்ப்ட் செய்வார்கள். நாமும் கும்பலைப் பார்த்து பயந்துபோவோம். தவிர்க்கப்பார்க்கவும்.
முடிந்தவரை சிபாரிசுகளை எடுத்துச் செல்லாமல், திருவேங்கடவனை மட்டுமே சிபாரிசாகக் கொண்டு செல்லுங்கள். நிச்சயம் திருப்தியான தரிசனம் கிடைக்கும். அங்கே தங்கிப் பாருங்கள். இயற்கை சூழ்நிலைகள் உங்களைப் பரவசப்படுத்தும்.
திருமலையாண்டவன் தரிசனம் என்பது எத்தனைதான் சிரமப்பட்டாலும் தனிப்பட்ட அளவில் எல்லோருக்குமே திருப்திகரமானதாகத்தான் இருக்கும் .அதுதான் திருமலையாண்டான் ஸ்பெஷாலிடி. அவன் தனிப்பட்ட ஒவ்வொருவர்களின் சாமி. HE KNOWS YOU, SO NOT TO WORRY.