தினசெய்தி நாளிதழில் இன்று (27.04.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 32)
‘‘இசையச் செய்யும் இசை..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
மன்னர் சரபோசி கல்லூரியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றுகிற பொழுது புரட்சித் தலைவர் தன் குழுவினரைக் கொண்டு `இன்பக்கனவு' என்ற நாடகம் நடத்த வந்தார். அப்போது புரட்சித் தலைவரிடம் நெருக்கமாக இருந்த கவிஞர் முத்துக்கூத்தன் என்னை அழைத்துப் போனார். மாணவப் பருவத்திலேயே என்னை அறிந்தவர் புரட்சித் தலைவர். என் மாணவன் பஞ்சநதி ஈசன் புரட்சித் தலைவரை கண்டால் போதும் என்று தவம் கிடந்தவன். ஓதுவார் மகன் இனிய இசை வளத்தால் எவரையும் பாடி ஈர்த்தவன். அவனையும் உடனழைத்துச் சென்றேன். ``அவ்வை மாணவனா நீ?'' என்று சொல்லி, ``ஒரு பாட்டு பாடு'' என்றார் பொன்மனச் செம்மல் அவனிடம்.
`உலகிற்கு ஒன்றாய் நின்றவன் நீ' என்ற இரண்டாம் தொடரை எடுத்து உரக்கப் பாடி, `ஓசை ஒலியெலாம் ஆனாய் நீ' என்று முடித்தான். மெய் மறந்து நின்ற புரட்சித் தலைவர் தன் பையில் இருந்து 100 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் கொடுத்தார். என்னைப் பார்த்து உங்கள் கல்லூரிக்குப் பேச வருகிறேன் என்று சொன்னார். அத்துடன், ``அது என்ன ஓசை, ஒலி?'' என்று கேட்டார் எனக்கு உடம்பெல்லாம் வியர்த்தது.
அண்ணா, ஓசை என்றால் அலை ஓசை, ஒலி என்றால் வானொலி என்று கூறினேன்.
இசை உலகத்தில் சப்தம், நாதம் என்று சொல்வார்களாம். தமிழ்தான் என் தலையைக் காத்தது. இரண்டும் மயங்கி வருவதும் உண்டு என்று சொன்னேன். அதனை வாழ்நாள் முழுவதும் அவர் மறந்தது இல்லை.
இந்த நிலையில், 21/12/1978 அன்று புரட்சித்தலைவர் சென்னை இசைக் கழகத்தின்(சங்கீத வித்வத் சபை) 52ஆவது மாநாட்டை தொடங்கி வைத்து ஆற்றிய உரையைப் படிக்கலாம்...
‘‘இசைக் கலைக்குத் தொண்டு செய்யும் விற்பன்னர்களும் இசைக் கலையை இல்லத்தில் வளர்க்கும் தாய்மார்களும் நல்ல இசையை ரசனையுடன் பாராட்டிப்போற்றும் பெரியோர்களும் இங்கு இசை விழாவைத் தொடங்கி வைக்கக் கூடியிருக்கிறீர்கள். இத்தகைய மேலோர் குழுமிய அவையில் நிகழவிருக்கும் இசை விழாவைத் தொடங்கி வைக்குமாறு என்னை அழைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த விழாவைத் தொடங்கி வைப்பது உண்மையில் நானல்ல; நீங்கள்தான்!
இறைவனின் தேரை இழுப்பதற்காக, அவ்வூர் மரபுப்படி குறிப்பிட்ட ஒருவரையோ அல்லது அமைச்சர் ஒருவரையோ அழைப்பார்கள் அவரும் தேரின் வடத்தைத் தொடுவார். அதை ஒருவர் தூக்குவதுகூட எளிதல்ல. ஊர் மக்கள் ஒன்று கூடித் தேரை இழுத்து, ஊர்வலம் சுற்றி மீண்டும் தேரை நிலைக்குக் கொண்டு வருவார்கள். ஆனால், ஏடுகளிலே வெளிவரும். ‘‘அமைச்சர் அல்லது ஒரு பிரமுகர் தேரை இழுத்தார்'' என்று. அதுபோல உங்களில் ஒருவனாக, இசையை, இசை மேதைகளை ஆராதிக்கும் முதற்தொண்டனாக, இந்தப்பணியில் ஈடுபட வாய்ப்பளித்துள்ளீர்கள். தமிழகத்தின் முதல்வர் என்பதற்காக அல்லாது, இசை, இசையோடு தொடர்பு கொண்ட நாடகம், மற்றும் நுண்கலைகள் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட ஒரு ரசிகன் என்ற முறையிலும் இந்த உயர்வு எனக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.
இந்த இசைக் கழகம் பொன்விழாச் சிறப்புப் பெற்று, இப்பொழுது 52ஆவது விழாவை எட்டியிருக்கிறது. 52 என்ற எண்ணின் கூட்டுத் தொகை ஏழு. இசை, ஏழு ஸ்வரங்களில் உண்டாவது. ஆகையால், இந்த விழா இசையோடு எவ்வளவு நயமாக ஒட்டியிருக்கிறது என்பதை இதிலேயே உணர்ந்து நான் ரசிக்கிறேன். ‘‘ஏழிசையாய் - இசைப் பயனாய் நின்றவன்'' என்று நம் முன்னோர்கள் வழிபாட்டில் கூறியுள்ளார்கள். அந்த ஏழு இங்கேயும் இருக்கிறது. நாத உபாசனை என்பார்கள் பெரியோர்கள். இசை மூலமாக இறைவழிபாடு செய்வது என்று அதற்குப் பொருள்.
இறைவழிபாடு என்றால், இறைமைக் குணங்களைக் கைக்கொண்டு வழிப்படுதல் என்றும் பொருள் கொள்ளலாம். மனிதன் மனிதனாக வாழ்ந்தால் அவன் கடவுளின் வாரிசாகக் கருதப்படுவான். அந்த மனிதத் தன்மையை அடைவதற்குத் தன்னைப்போல் பிறரை நினைக்கும் குணம் தேவை. எல்லாம் ஒன்று என்ற எண்ணம் உண்டாக வேண்டும். இசை ஒன்றுதான் ‘‘ஒன்ற'' வைக்கும் ஆற்றல் கொண்டது பாடுகின்றவர் கருதியோடு ஒன்றும்போது, மற்றவர்கள் அவரோடு ஒன்றிவிடுகிறார்கள். சுருதி கொஞ்சம் கலைந்தால்கூட ஒன்றுகிற நிலை கலைந்துவிடும். உருகிப் பாடும்போது கண்களில் நீர் மல்குவதைக் காண்கிறோம். இது தனக்காக உகுக்கும் கண்ணீரலல. மற்றவருக்காக மற்றவரின் மனத்தில் நிலையான ஆனந்தத்தை ஏற்படுத்த உகுக்கின்ற கண்ணீர்!
‘‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி'' - என்ற செய்யுள் வரியை நாம் கேட்டிருக்கிறோம். கண்ணனைக் காதலனாக – சேவகனாக – சற்குருவாக – சீடனாக – காதலியாகக் கூட பாவித்துப் பாடினார்கள். அந்த பாவம் ஐக்கியமடைந்த ஆன்மாவின் புனித சங்கமத்தில் உருவாகும் உன்னத நிலை. நாத உபாசனை (இசை வழிபாடு) இருக்கிறதே, இதில் எந்த விதமான பேதத்திற்கும் இடம் கிடையாது. மனம் உள்ளவர்களின் மனங்களையெல்லாம் ஈர்க்கும் ஆற்றல், அதாவது இசையவைக்கும் சக்தி கொண்டது அந்த இசை.
நாத உபாசனை என்று சொல்வதோடு -
‘நாதயோகம்' என்றும் சொல்வார்கள்.
‘பூதங்கள் ஒத்துப் புதுமை தரல் விந்தையெனில்
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு ஈடாமோ.'' என்றார் பாரதியார்.
நாதங்கள் சேரும் நயம்தான் நாத யோகம். அத்தகைய புனிதமான பேரானந்த மண்டலத்திற்கு நம்மை அழைத்துப் போகும் நல்லிசை - மரபுவழி இசையாகும்; அதாவது கருநாடக சங்கீதமாகும். பொதுவாக – இசை நம்முடைய தமிழ்க் குடும்பங்களில் ஒன்றிப் போன ஓர் அம்சம் ஆகும். சின்னஞ் சிறு குழந்தையைத் தூங்கவைக்க, தாய் குழந்தையைத் தொட்டிலில் போட்டுத் தாலாட்டுப் பாடுவது வழக்கம்.
அக்கால இலக்கியத்தைப் பார்த்தாலும் இசையினுடைய முக்கியத்துவம் நமக்குப் புலப்படுகிறது. அன்று வாழ்ந்த பாணர்கள் மன்னர்களைக்கண்டு யாழ் மீட்டி, இசை பாடித் தம் திறமைக்கு ஏற்ப அன்பளிப்பாகப் பொன்னும் மணியும் பெற்று வீடு திரும்புவார்களாம்.
வழியிலே பாலை நிலங்கள், காடுகள், ஆகியவற்றைக் கடந்து வரும்போது - அவர்களைக் கள்ளர்கள் வழிமறித்துக் கொள்ளையடிக்க முயலுவார்களாம். அந்தப் பாணர்கள் இனிமையான பாடல்களைப் பாடி, அந்தக் கள்ளர்களையும் மயக்கி, அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்றுவிடுவார்களாம்.
கோயில்களில் மங்கல விழாக்களில் நாதசுரம் இசைப்பது தமிழர்களுடைய வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்த நாதசுரம் மங்கல விழாவுக்கே உரியது.
மங்கல இசைக்கு என்று தனியாகவும், மற்றைய நிலையை வெளிப்படுத்த வேறு வகையாகவும் வாத்தியங்களை வகுத்தக் கையாண்டவர்கள் நம் மூதாதையர்கள்.
அக்காலத்திலிருந்து நாட்டியம் தனிச் சிறப்புப் பெற்று வந்திருக்கிறது. இசை, காதால் கேட்டு அனுபவிப்பது, நாட்டியமோ கண்ணால் பார்த்ததும் காதால் கேட்டும் அனுபவிப்பது.
தமிழ் நூலான சிலப்பதிகாரத்தில் இசையையும் நாட்டியத்தையும் பற்றிய எண்ணற்ற விசேடக் குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. நாட்டியம் மகேசனைத் தொழுவதற்கும் மன்னர்களை மகிழ்விப்பதற்கும் பயன்பட்டது. நாட்டியமாடுவதற்கென்றே ஒரு பகுதியினர் இருந்த காலம் அது. பிற்காலத்தில் அந்த அற்புதக் கலை எல்லோருக்கும் பொதுவாகப் பரவி, இன்னார்தான் ஆட வேண்டும் என்ற நிலை மாறி, ஆடற்கலையில் வல்லவர்களாக எல்லோருமே ஆகலாம் என்ற அளவுக்கு, விரிவடைந்திருக்கிறது.
ஏன் அப்படி..!
காதில் இன்பத் தேனைப் பாய்ச்சுகிறது இசை! அந்த இசையின் ஒலி இதயத்தில் எதிரொலிக்கிறது!
அதோடு உடல் முழுவதும் பரவுகிறது. ஒவ்வொரு நரம்பையும் தட்டி எழுப்புகிறது!
பரவசம் ஊட்டுகிற ஓர் அபூர்வ மின் சக்தியாகி, நம்முடைய உடலின் ஒவ்வோர் அணுவையும் தீண்டி, ஒருவிதப் புதுமைக் கிளர்ச்சியை-மலர்ச்சியை-நெகிழ்ச்சியை-பூரிப்பை உண்டாக்கி விடுகிறது. நம்மிடமுள்ள எல்லாவற்றையுமே தன்வசப்படுத்திக் கொண்டுவிடுகிறது. சோர்வு உற்சாகமாகிறது... கவலை களிப்பாக மாறுகிறது...
கோபம் சாந்தமாகிறது... பகைமை நட்பாகிறது.
ஆழ்வார் பாசுரங்களில் ஒன்று நினைவுக்கு வருகிறது.
‘‘கோவிந்தன் குழல் ஊதின போது
மட மயில்களோடு மான்பிணைப் போல
மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ,
உடைநெகிழ, ஓர் கையால் துகில் பற்றி
ஒல்கி, ஓடரிக்கண் ஓட நின்றனரே!'' - என்று பாடுகிறார். குழலின் மெல்லோசை தருகின்ற பரவச நிலையை இப்படிச் சுவை ததும்ப வருணிக்கிறார் ஆழ்வார்.
‘‘நாதமே முக்கலை-நாதம் மூவெழுத்து
நாதமே முக்குணம்-நாதமே முப்பொருள்
நாதம் மூவுலகாகி விரித்து-
நாதமாம் பரத்தில் லயித்தது பாரே.
நாதம் பரத்தில் லயித்திடும் அதனால்
நாதம் அறிந்திடப் பரமும் அறியலாம்'' - இது ஓர் அகவல் பாடல்.
மேற்சொன்னவாறு மூன்று மூன்றாக விவரிக்கபட்ட இந்த நாதத்தின் மும்மூர்த்திகளாகத் திகழ்ந்தவர்கள் தியாகராசர், தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் ஆவார்கள். இவர்கள் மூவருமே ஆரூரைச் சார்ந்தவர்கள். ஆனாலும் ஓரூரைச் சேர்ந்தவர்கள் அல்லர். இந்தியத் துணைக்கண்டம் முழுவதற்கும், உலகத்தில் இசையை ரசிக்கின்றோர் வாழ்கின்ற அத்தனை இடங்களுக்கும் சொந்தமானவர்கள் இவர்கள். அறிவியல் துறையிலே மிக உயர்ந்து நிற்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில்கூட நமது இசைக் கலைஞர்கள் நமது கருநாடக இசையை முழக்கிப் புகழ்பெற்றுத் திரும்புகிறார்கள். இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் அண்ணல் காந்தியடிகளின் உள்ளத்தை உருகவைத்ததையும், ஐக்கிய நாடுகள் சபையிலே பலநாட்டு மக்களின் ரசனையையும் ஒன்றுபடுத்தி அவர்களால் புகழப்பட்டதையும், நாம் அறிவோம்! நம் இசை நாடு கடந்த, கடல் கடந்த ஒரு கலையாகும். அதுபோலவே, காலம் கடந்தும் நிலைத்து நிற்பதாகும்.
இசையாகிய தேனைப் பருகுவதற்கு அடிப்படை வடிவம். அந்த வடிவத்தைக் கீர்த்தனைகளாக்கி வழங்கிய மேலோர்கள் இந்த மும்மூர்த்திகள். முற்காலத் தமிழகச் சிறப்புக்கும், பண்பாட்டு மேன்மைக்கும், சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்கள் காரணமாக இருந்தது போல, பழம்பெரும் கருநாடக இசையின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் இந்த இசை - மூவேந்தர்கள் அடித்தளம் அமைத்துத் தந்திருக்கிறார்கள். ஆனால், இவர்களின் பாடல்கள் வடமொழியிலும் தெலுங்கு மொழியிலும் அமைந்திருக்கின்றன. அவற்றைக் கேட்கும்போது மனம் உருகினாலும், அந்த உருக்கம் அவற்றின் பொருளையும் நாம் அறிந்து கொள்ளும்போது இன்னும் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
‘‘தமிழ்த் தியாகய்யா'' என்று போற்றப்படும் பாபநாசம் சிவன், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், கோபாலகிருஷ்ண பாரதியார், முத்துத்தாண்டவர் முதலானவர்களின் பாடல்களைப் பாடக் கேட்கும்போது, இசையின் இனிமையோடு, பொருளையும் சுவைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
சிலர் தமிழில் இந்த இசைப்பாடல்கள் அமைந்தால் அவற்றின் சிறப்பு குன்றிவிடுமோ என அய்யப்படுகிறார்கள். தமிழ் மொழி எந்த மொழிக்கும் புனிதத்தில் குறைந்ததில்லை. நம் தமிழகத்தில் பிறந்து, தமிழிலேயே பாசுரங்கள் இயற்றிய பன்னிரு ஆழ்வார்கள் வழங்கியுள்ள தேவாரத்திற்கும் தனிப்பட்ட சிறப்பும் பெருமையும் உண்டு என்று தெய்வத்தொண்டில் ஈடுபட்ட ஆன்றோர்களும் கூறியுள்ளார்கள்.
‘‘ ‘செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி' என்கையாலே, தமிழ் மறைகளும் மிகமிகத் தொன்மையானவை. வடமொழி மறை ஒன்று சம்ஸ்கிருத வேதத்தைச் சொல்வது, தமிழ் மறைகள் என்றென்றும் உண்டு என்று நினைத்தேதான் சொல்லப்படுகிறது. நான்கு வேதங்களுக்கு ஆறு அங்கங்கள், எட்டு உபாங்கங்கள் இருப்பதுபோல, நம்மாழ்வார் பணித்த தமிழ் மறைக்குத் திருமங்கையாழ்வார் பாடியருளிய ஆறு அங்கங்களும் மற்றைய எட்டு ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்களும் அமைந்திருக்கும்'' என்று சிறப்பு மிகுந்த எம்பார் விஜயராகவாச்சாரியார் கூறியிருக்கிறார்.
இசை, மொழியைக் கடந்தது என்றாலும், சொந்த மொழியில் பாடல்கள் அழகாகப் பாடப்படும்போது அவற்றின் பொருளையும் சேர்த்து அனுபவிக்க முடிவதால், இனிமை - ரசனை அதிகமாகிறது. கீர்த்தனைகள் ஆனாலும், பாடல்களானாலும் சொற்களுடைய அழகும், பாவமும் தெரியும்படியாகப் பாடவேண்டும். ஒரு சில இசைப் பேரறிஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு பாடும்போது சொற்கள் உருவிழந்து போகின்றன என்பது, ரசிகர்கள் பலரும் சொல்லிக்கொள்ளும் குறையாகும். ஆனால், தமிழ்ப்பாடல்களையும் கீர்த்தனைகளையும் சொற்களுடைய அழகு சிறிதும் குறையாமல் நயமாகத் திருமதி கே.பி.சுந்தராம்பாள், திருமதி டி.கே.பட்டம்மாள் முதலானவர்கள் பாடக் கேட்டு ரசித்திருக்கிறேன்.
இந்த விழாவிலே பாராட்டப் பெறும் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்கூட தெலுங்கிலே கீர்த்தனைகளை இவ்வாறு அழகுடன் பாடுவதை நான் பலமுறை கேட்டு அனுபவித்திருக்கிறேன். ரசித்து மகிழாதவர் இல்லை.
இசை, மொழிக்கு அழகு தருவது மட்டுமல்லாமல், அதனுடைய வளர்ச்சிக்கும் உதவ வேண்டும் என்பதே என் ஆசை. மதுரையிலே தமிழ் வளர்க்கும் பல்கலைக் கழகத்தில் இசை ஆராய்ச்சிக்கும் ஒரு பகுதியை நிறுவியிருப்பது, இத்தகைய ஆர்வத்தினால்தான் என்று இங்கே நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.''
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
- ஔவை நடராசன்,
தொடர்புக்கு: thamiz...@gmail.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/72124e8f-f2f6-4bb9-adbe-dcbc06d38abd%40googlegroups.com.
தினசெய்தி நாளிதழில் இன்று (04.05.2020) வெளியான கட்டுரை
===============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 33)
‘‘மன அமைதிக்கான வரப்பிரசாதம் இசை..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
சென்னையில் ஓர் இலங்கை மாணவர் சிவபாலன் இசைக்கல்லூரியில் இடம் கேட்டு வந்தபோது, ``ஒரு பாட்டு பாடு'' என்றார் புரட்சித்தலைவர், விழித்த மாணவனிடம், ``ஓசை, ஒலி'' என்ற பாடலை பாடச் சொன்னார்.
``ஓசை ஒலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிது மினியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.''
- என்ற பாடலை சிவபாலன் இனிமையாகப் பாடியதை மிகவும் லயித்துக் கேட்டு மகிழ்ந்தார் புரட்சித்தலைவர்.
குறிப்புரை: `ஓசை, ஒலி' என்பன, `சத்தம், நாதம்' என்னும் பொருளுடையன. `வெற்றோசையும் பொருளோசையும்' என ஓசை இருவகைப்படும். அவற்றுள், வெற்றோசையை `ஓசை' என்றும், பொருளோசையை `ஒலி' என்றும் பொருள்பட நாவுக்கரசர் தேவாரத்தில் அமைந்தது.
சிவபாலனால் என் சிறப்பு பன்மடங்கு உயர்ந்தது. அவருடைய நினைவலைகள் எவ்வளவு நீண்டன என்று வியந்தேன். இந்தநிலையில் புரட்சித்தலைவரின் இசை உரையை வாசிக்கலாம்.
‘‘நாதப்பிரும்மம்'' என்பார்கள். இதிலிருந்து அதற்குண்டான தனி மதிப்பை நாம் அறிய முடியும். ஓசையை உண்டாக்கும் சக்திதான் காற்று. வசந்த காலத்திலும் காற்று வீசுகிறது. கடல் குமுறிக் கொந்தளிக்கும் காற்று வீசுகிறது. முன்னதற்குத்தான் தென்றல் என்று பெயர். பின்னதற்குப் பெயர் புயல் அல்லவா..!
ஸ்வரம், சுருதி, ராகம் இவை மூன்றும் நாதத்தின்... அதாவது ஓசையின் நல்லிசைக்குரிய ஜீவ அம்சங்கள், ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் இவை ஏழும் இசையின் ஸ்வரங்கள். இந்த ஏழையும் தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
தேவாரம், திருவாய்மொழிப் பாடல்களுக்குப் பலவகையான பண்கள் உள்ளன. அந்தப் பண்களுக்கு ஏற்ற இராகங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.
எடுத்துக்காட்டாகச் சிலவற்றைச் சொல்லலாம். தமிழில் உள்ள பண்ணான நட்டபாடைக்குரிய இராகங்கள் நாட்டை...
இந்தளம் - மாளவ கௌளை.
தக்கேசி - காம்போதி.
கௌசிகம் - பைரவி.
குறிஞ்சி - அரிகாம்போதி.
இந்தப் பண் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று விரைவில் எல்லாப் பண்களுக்கும் உரிய இராகங்களை அறியும் வாய்ப்பு ஏற்படக்கூடும் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டுக்கு என்று ஒரு பண்பு இருக்கிறது. அதேபோல கருநாடக இசைக்கும் ஒரு பண்பு இருக்கிறது. தமிழ்மறையான திருக்குறளில் கூறப்பட்டுள்ள நீதி முறைகள் எல்லாமே தமிழ்ப் பண்புகள் அன்புடைமை, அருளுடைமை, அடக்கமுடைமை, வாய்மை இப்படி எத்தனையோ பண்புகள்.
அவ்வாறே, கருநாடக இசைக்கும் பல இலக்கணங்கள் உண்டு. மனித இலக்கணம் போல இசைக்கும் இலக்கணம் இருக்கிறது. குறிப்பிட்ட கட்டுக்கோப்பைத் தாண்டக் கூடாது என்று வரம்பு உண்டு. சுதியோடு சேர்ந்து பாடவேண்டிய அவசியம் உண்டு தாளம் தவறக்கூடாது. இப்படிப்பட்ட விதிகள் ஏராளம். அவை அனைத்தையும் அறிந்து, தெளிந்து முறைப்படி கடைப்பிடிக்கவேண்டும். ஆதலால் இதற்கு மிகவும் `சாதகம்' தேவை அதாவது பயிற்சி வேண்டும். பயிற்சியில் முதிர்ச்சி பெறுவதற்குப் பொறுமை வேண்டும். ஆர்வமும் ஈடுபாடும் அசைவிலாத ஊக்கமும் அனைத்துக்கும் மேலாக பக்தியும் வேண்டும்.
இராகங்களுக்கு எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவைக்கு மாதர் திலகங்களின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.
கல்யாணி - பைரவி
நீலாம்பரி - ஜகன்மோகினி
வசந்தா - இப்படிப் பலப்பல. இதற்கு என்ன காரணமாக இருக்கும்!
`விண்' என்ற உத்தரத்தில் அன்பு என்கிற தாம்பு இட்டு, `மண்' என்ற தொட்டிலிட்டு, `கண்வளராய்' என்று கனிவோடும் கருணையோடும் அக்கறையோடும் ஆர்வத்தோடும் அன்போடும் அரவணைப்போடும் `இன்னிசை' என்றும் செல்வச் சேயைத் தாலாட்டிச் சீராட்டும் தாய்க்குலத்தினர் அல்லவா அவர்கள்! அதனால்தான் பெரும்பாலான இராகங்களின் பெயர்களில் அவர்கள் கொலுவிருக்கிறார்கள்.
பாட்டோடு பண் இணைய வேண்டும். இது மிகவும் முக்கியமாகும். திருவள்ளுவர் இதை ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்:
``பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்!'' என்கிறார்.
தாட்சண்யம் என்பார்களே, அகல் இல்லாதபோது, கண் இருந்தும் பயனில்லை என்ற கருத்தைச் சொல்லவந்தவர், உவமையாகப் பண் பற்றிச் சொல்லுகிறார். ``பாடலோடு இணையாவிட்டால் பண் என்ன ஆகும்?'' என்று கேட்கிறார்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே `டென்ஷன்' எனப்படும் உணர்ச்சி வேகம் நிறைய இருக்கிறது. எல்லாத் துறைகளிலுமே பொறுப்புள்ளவர்களுக்குப் பொதுவாக ஏற்படும் பரபரப்பு நிலை இது!
இப்படிப் பரபரப்பான நிலை உண்டாவதால் உடல் நிலை பாதிக்கப்படும் என்றும், மனத்தை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர்கள் சொல்வதுண்டு. இதற்கு ஒரு வரப்பிரசாதம் போன்றதுதான் இன்னிசை.
``துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா.''
என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். இயற்றியிருக்கிறார் என்று நான் சொல்லவில்லை. அது செய்யுளாக மட்டுமாக இருந்தால் அப்படிச் சொல்லலாம். இசையோடும் இணைந்திருப்பதால் `பாடியிருக்கிறார்' என்று குறிப்பிட்டேன்.
தமிழிலே மாபெரும் கவிஞர்கள் பல கவிதைகளை இயற்றியிருக்கிறார்கள். அவர்களின் கவிதைகள் இசையுடன் பாடப்படும்போதுதான் உயிர் பெற்று உலவும் நிலை பிறக்கிறது.
நந்தனார் கீர்த்தனையை அனுபவிக்கிறோம். மாபெரும் கவிஞரான கோபால கிருஷ்ண பாரதியார் சுடர்விட்டுத் திகழ்கிறார்.
`சின்னஞ் சிறு கிளியே' என்ற கவிதை இசையோடு ஒலிக்கிறது-மகாகவி பாரதியார் ஒளி வீசுகிறார்.
`தமிழுக்கு அமுதென்று பேர்!'-இசையோடு ஒலிக்கிறது-பாவேந்தர் காட்சி அளிக்கிறார்.
தத்துவப் பாடல் ஒன்று, பாடப்படுகிறது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை நம்முன்னே காட்சி அளிக்கிறார்!
இப்படி, கவிஞர்களின் படைப்புகள் இசையோடுகலக்கும் போது, அவற்றிற்கும் அவற்றைப் படைத்தவர்களுக்கும் புகழ் உண்டாகிறது.
``ஆன்ம வெளியில் மூழ்கித் திளைப்போர்க்கு
அச்ச முண்டோடா!
மனமே!
தேன்மடை இங்கே திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!'' என்கிறார் பாரதியார்.
``தேன்மடை திறந்து விட்டது, தேக்கி மகிழ்ந்து ஆடுவோம்'' என்றால், என்ன தேன் அது! இசைத்தேன்! இனிமை மயமான சங்கீதத் தேன் அது!
நான் எனது மிகச் சிறிய பிராயத்திலேயே இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த நாடகக் கம்பெனியில் என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவன். அந்தக் காலத்தில் நாடகம் என்றால், வள்ளித் திருமணம், சம்பூர்ண இராமாயணம், மகாபாரதம், சத்தியவான் சாவித்திரி, நந்தனார் என்பவை போன்ற இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடகங்களாகத்தான் இருக்கும். மேடையிலே எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தரம்பாள், சுப்பையா பாகவதர் போன்றவர்கள் அற்புதமான பாடல்களை விரிவாகப் பாடி மக்களைக் கவர்வது வழக்கம். புகழ்பெற்ற நாடகங்கள் எல்லாம் இசைக்கு முதலிடம் தரும் நாடகங்களாகத்தான் இருக்கும். என்னுடைய `தொழில் வாழ்க்கை'யை நாடகக் கம்பெனிகள் மூலம் தொடங்கியதால் எனக்கும் இளம்பிராயத்திலிருந்தே இசையை ரசிப்பதில் அளவற்ற ஆர்வம் இயல்பாகவும், சூழ்நிலை உதவியாலும் ஏற்பட்டிருந்தது; இசையில் பாண்டித்யம் இல்லாவிட்டாலும் நான் இசையை ரசிப்பதன் மூலம் அமைதியைப் பெற விரும்புகிறேன்.
உண்மையிலேயே கருநாடக இசையின் அடிப்படையில் அமைந்த அழகான சுத்தமான பாடல்களை படங்களில் அமைக்கச் செய்து நான் ரசித்து அனுபவித்து வந்திருக்கிறேன். கருநாடக இசை பின்னுக்குப் போய் விட்டது என்றும், மெல்லிசை என்ற பெயரில் மலிவான இலக்கணச் சுத்தமில்லாத பாட்டுக்கள் புகழ் பெற்றுவிட்டன என்றும் பலரும் இன்று குறை சொல்லுகிறார்கள். ஆனால், எனக்குத் தெரியும் ஒரு காலத்தில் பல திரைப்படங்கள் வெற்றியடைந்ததற்கு அவற்றினுடைய கருநாடக இசை மரபின்படி அமைக்கப்பட்ட பாட்டுக்களே காரணம் ஆகும் என்பது; இன்றும் நம்மில் பலர், பாபநாசம் சிவனின் பாட்டுக்களைத் தியாகராஜபாகவதர் திரைப்படங்களிலே பாடியதை, எவ்வளவு ரசனையோடு கேட்டு மகிழ்கிறோம் என்பது எனக்குத்தெரியும்.
இன்று திரைப்படங்களிலும் அத்தகைய நல்ல இசை இடம் பெறுவதற்கு அடிப்படையான ஆர்வமும் எண்ணமும் கொண்டு, திரைப்பட இசை இயக்குநர்கள் சிலர் அம்முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த இடத்தில் ஒரு செய்தியைக் குறிப்பிட விரும்புகின்றேன். மேலை நாடுகளிலும்கூட இந்தப் பிரச்சினை இருக்கின்றது. ‘வெஸ்டர்ன் கிளாசிக்கல் மியூசிக்' என்ற இசையின்பால் மக்களுக்கு உள்ள விருப்பம் குறைந்து ‘பாப் மியூசிக்' போன்ற நாகரிக இசையில் மக்கள் அதிகமாகக் கவனம் செலுத்துகிறார்கள் என்ற குறையை அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள். அதேபோல இன்று நம்முடைய குடும்பங்களிலும் இசைக்கு உள்ள ரசனை, ஓரளவு மாறுபட்டிருக்கின்றது. இதை நாம் எச்சரிக்கையோடு கவனித்தாக வேண்டும்.
எந்த ஒரு கலையும் ஆற்றின் நீரோட்டம் போல ஓடிக்கொண்டிருக்க வேண்டும். தேங்கிப் போனால் அதனுடைய அழகும், இனிமையும் குறைந்து போய்விடும். இந்தக் கருத்து இசைக்கும் பொருந்தும் நம்முடைய மக்கள் துரிதமான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்கள். நிதானமாகவும், நீண்டநேரம் கவனம் செலுத்தியும் நுட்பமாகவும் கலைகளை ரசிக்க அவர்களுக்குப் பொழுது இருப்பதில்லை. ஒரு காலத்தில் இசைப் பேரறிஞர் இராஜரத்தினம் பிள்ளை போன்றவர்கள் ஒரு ராகத்தை இரவு முழுவதும் விடிய விடிய நாதசுரத்தில் வாசிப்பார்கள். கிராமங்களில் பல கோயில்களில் இரவு ஒரு மணி வரையில் சங்கீதக் கச்சேரி நடப்பதுண்டு.
ஆனால், இன்று சங்கீத சபாக்களில் நிகழும் மேடைக் கச்சேரிகள் மூன்று மணி நேரத்திற்கு மேல் இருப்பதில்லை. வானொலியில் இசைக் கச்சேரியை ஒலிபரப்பும்போது ஒன்றரை மணி நேரம்தான் ஒளிபரப்பப்படுகிறது. அதிலும் நல்ல பாடகர்களைச் சேர்ந்தாற்போல் பாடவிடாமல் நேரத்தை இரு பிரிவாகப் பிரித்துத் தந்து பாடச்சொல்கிறார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். டெலிவிஷனில் அதே இசைக்கச்சேரி முக்கால் மணிநேரந்தான் இடம் பெறுகிறது. ஆகவே, இன்று நல்ல இசையையும் கூடச் சுருக்கமாகவும், அதே சமயத்தில் இனிமையாகவும் கேட்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். மெல்லிசை இன்று மக்களிடையேயும், இளம் சமுதாயத்தினரிடையேயும் பிரபலமாக இருப்பதற்கு இதுதான் காரணம். நம்முடைய கருநாடக இசையை அழகான, சுருக்கமான வடிவத்தில், இனிமை குறையாமல் பாடச் செய்தால், அது அனைத்து மக்களையும் கவரமுடியும்; இளம் சமுதாயத்தினரிடையேயும் பிரபலமாக இருப்பதற்கு இதுதான் காரணம். நம்முடைய கருநாடக இசையை அழகான, சுருக்கமான வடிவத்தில், இனிமை குறையாமல் பாடச் செய்தால், அது அனைத்து மக்களையும் கவரமுடியும்; இளம் சமுதாயத்தினரையும் ஈர்க்க முடியும்.
‘கலாசாரம்' என்ற சொல்லைத் தமிழில் ‘பண்பாடு' என்னும் சொல் பண்-பாடு என்று பிரிந்து அழகான மற்றொரு பொருளையும் தருகிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கையில் முதலிடம் பெற்ற அரிய தன்மை இந்தப் ‘பண்பாடு' ஆகும். அதோடு, நுண்கலைகளின் காவலராகத் திகழ்ந்த அவர்கள் பண்-பாடுவோரைப் பாராட்டிப் போற்றுகின்ற பண்பாட்டைக் கொண்டவர்கள்!
அந்தப் பண்பாட்டைக் கடைப்பிடிக்கின்ற நான் பண்-பாடுவோரோடு கலந்து மகிழவும் இசையோடு நெஞ்சை இசையச் செய்யவும் ஒரு நல்வாய்ப்பு அளிக்கப்பட்டதற்கு, எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க இசை, வாழ்க தமிழ், வாழ்க அண்ணா நாமம்.''
தின செய்தி நாளிதழில் இன்று (11.05.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 34)
‘‘பணத்தைவிடப் பாராட்டு மகிழ்ச்சியை அளிக்கிறது...!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
===============================
வாழ்வு, கலை, பண்பாடு, ஒழுக்கம், இலக்கியம் என்பனவற்றை ஒரு வரிசையாகக் கருதும் வழக்கம் தமிழ் மக்களிடம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. கலையால் பண்பாடும் பண்பாட்டால் ஒழுக்கமும் வளர வேண்டும் என்று ஒரு கருத்து எப்போதும் இருந்தது.
கலை மனம் கொண்டவர்கள், உணர்வின் உயர்ந்த நிலையை உணர்ந்தவர்கள் என்பதாலும் அந்த உணர்வு மனித நேயத்துடன் பின்னிப் பிணைந்ததென்றும், அறிஞர்கள் கருதுவார்கள்.
தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் தோல்வியடைந்த பின்னர் வந்த கழக ஆட்சி என்று நாம் கருதினாலும், பேரறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி எனத் தொடர்ந்து வந்தவர்கள் அனைவரும் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர்கள் என்பதோடும், அவர்கள் இயல்பாகக் கலை மனம் கொண்டவர்களாகவே திகழ்ந்தார்கள்.
கலை மனம் உடையவர்களுக்கு வாழ்வு, பண்பாடு, இலக்கியம், கவிதை, நாகரிகம் முதலிய கூறுகளையெல்லாம் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் பெரிதாக இருக்கும். அந்த வகையில்தான் கலை உணர்ச்சி என்பது பொதுவாக அனைவரின் மனத்தை ஈர்ப்பது என்றாலும், அந்தத் துறையிலேயே தங்களுடைய வாழ்வைக் கழித்தவர்களுக்குக் கலையின் ஆர்வமும், பெருமிதமும், பாராட்டும் வாழ்க்கையில் ஒரு தனிச்சிறப்பை உருவாக்கித் தந்திருக்கிறது.
அந்த வகையிலேதான், கலை வாழ்வு என்பது, நுணுக்கமான வாழ்வு என்பது பற்றிச் சொல்லாமல், நடிப்பு என்பது, ஒரு வாழ்வில் நடப்பது போன்ற இடர்ப்பாடான ஒரு கலை என்று யாரோ ஒருமுறை எழுதியிருந்தார்கள். அதற்கு விளக்கம் சொல்ல வந்தபோது, நடிப்பது வேறு, நடப்பது வேறு, என்பதை இரண்டாகப் பிரித்துப் பார்த்துக் கொள்கிற வாய்ப்பு மிகவும் அரிதாகத்தான் அமையும்.
நடிப்பின் மீது, கைக்கொள்கிற பேரார்வம், நடிகர் தன் உள்ளத்திலிருந்து எடுத்துச் சொன்னாலும்கூட, இது நடிப்புதானோ என்று எண்ணுகிற ஒரு மயக்கம் ஏற்படுவது இயல்பாகும்.
இந்திப் படங்களைப் பார்த்த நாட்களில், என் மனத்தைக் கவர்ந்தவர்கள் ராஜ்கபூரும், நர்கீஸ் என்ற நடிகையும் ஆவார்கள். அவர்கள் இருவரின் படங்களைப் பார்த்தபோது, இருவரும் நடிப்பதாகவே நான் நினைக்கவில்லை. வேறொரு இல்லத்தில் நடப்பதை அல்லது வாழ்வில் நடப்பதைத்தான் அவர்கள் நடத்திக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றே நான் நினைத்தேன்.
நர்கீஸும், ராஜ்கபூரும் நாட்டு மக்களின் நெஞ்சங்களில் மிகப்பெரிய செல்வாக்கான பெருமிதத்தோடு இருந்தார்கள். ஏன், சோவியத் நாட்டிற்கு அவர்கள் இருவரும் சென்று திரும்பிய பிறகு, சோவியத் நாட்டு மக்களில் பலர் தம்முடைய மக்களுக்கு ராஜ்கபூர், நர்கீஸ் என்ற பெயரையே இட்டு மகிழ்ந்தார்கள் என்று நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், திடுமென்று, ஒருநாள் நடிகர் ராஜ்கபூரும், நர்கீஸும் பிரிந்துவிட்டார்கள் என்பது மட்டுமில்லை, ராஜ்கபூர் நடிப்பு என்பது வேறு, வாழ்வு என்பது வேறு என்பதைத் தெரிந்து கொள்ளாமல் மக்கள் மயங்குகிறார்கள். எனவே, நர்கீஸ் ஒரு நடிகை அவ்வளவுதான் என்று சொன்னார்.
இது ஒரு பெரிய திடுக்கீட்டை மக்களுக்கு அந்த நாளில் ஏற்படுத்தியதை நான் நினைக்கிறேன். ஏனென்றால், கலை வாழ்வு என்பது அவ்வளவு நெளிவு, வளைவு உடையது. இதில், தான் நடித்த காட்சிகளில் எல்லாம் தன்னை நல்லவனாகவே, உயர்ந்தவனாகவே காட்டி, அதுபோன்ற வாழ்க்கையைத்தான் தாம் முடிந்த வரையில் நடத்த வேண்டும் என்று முயன்று அந்தத் தோற்றந்தான் மக்களுக்கு முன்னால் எப்போதும் இருக்க வேண்டும் என்பதில் ஆர்வத்தோடு முயன்று வெற்றி பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமை புரட்சித்தலைவர் அவர்களைத்தான் சாரும். எனவே, அவர் கலையைப் பற்றியும், நடிகர்கள் படும் துயரைப் பற்றியும், அவர்களுக்கு ஏற்படுகிற மகிழ்ச்சி எப்படிப் பாராட்டுகளால் பெருகியது பற்றியும் அவர் குறிப்பிட்டுப் பேசிய இந்தப் பேச்சை நாம் காணலாம்.
1981-ஆம் ஆண்டு நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில் புரட்சித் தலைவர் ஆற்றிய உரை...
‘‘சிறுவயதில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் எனக்கு இங்கே நினைவுக்கு வருகின்றன. இதுவரை எங்கும் சொல்லாத நிகழ்ச்சிகள் எல்லாம் எனக்கு நினைவுக்கு வருகின்றன. அவற்றைச் சொல்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
இங்கே டி.கே.சம்பங்கி பொற்கிழி வாங்கினார்கள். அவர்களை இன்று எத்தனை பேருக்குத் தெரிந்திருக்க முடியும்? பலருக்கு ஞாபகம் இருக்காது. ‘மைனர் ராஜாமணி' என்னும் படத்தை டைரக்டர் ராஜா சாண்டோ இயக்கிக் கொண்டிருந்த சமயத்தில் நடிப்புலகில் எனது ஆசானாகத் திகழ்ந்த காளி என்.ரத்தினம் என்னை ராஜா சாண்டோ அவர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வாய்ப்புத் தருமாறு கூறினார். அப்போது ராஜா சாண்டோ கூறினார்; ‘‘உன்னைவிடச் சிறந்த நடிகர் ஒருவரை அந்த வேடத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டேன். அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம்'' என்று குறிப்பிட்டார். அந்தப் பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அந்த நடிகர்தான் டி.கே.சம்பங்கி. மங்கள கானசபா என்ற ஒரு சபையை அவர் நிறுவியிருந்தார். அந்தச் சபையைக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் விலைக்கு வாங்கி என்.எஸ்.கே. நாடக மன்றமாக ஆக்கினார். இந்தச் செய்தி பலருக்குத் தெரியாது.
இங்கே இளையவர்களுக்குப் பாராட்டுத் தரும்போது முதியவர்கள் நினைக்கலாம். ‘நாங்கள் எங்கோ கிடக்கிறோம் இந்த இளைஞர்கள் சுகமாகத்தானே இருக்கிறார்கள் இவர்களுக்கு ஏன் பாராட்டு என்று! அதே நேரத்தில் இளைஞர்கள் நினைக்கலாம். இந்த முதியவர்களுக்கெல்லாம் எதற்குப் பாராட்டு? அவர்கள்தான் ஆண்டு முடித்து விட்டார்களே! எங்களைப் போன்ற இளைஞர்களைப் பாராட்டினால் எங்களுக்கு அது ஊக்கம் தருவதாக அமையும் என்று!'
‘‘இங்குச் சிலரைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டியிருக்கிறார்கள். இன்னும் பாராட்டப்பட வேண்டியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இங்குச் சில சகோதரிகளை நானே பேசச் சொன்னேன். தங்களது அனுபவங்களைத் தங்களுக்கு ஏற்பட்ட சூழ்நிலைகளைச் சொல்ல வேண்டும் என நான் விரும்பினேன். சில அனுபவங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சிக்கல்கள் ஆகியவற்றை அவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லும்போது தவறான பாதையில் போகும் மற்றவர்களுக்கு அது எச்சரிக்கையாக இருக்கும்.''
இங்கே எம்.ஆர்.வாசவாம்பாள் கலைமாமணி விருது பெற்றார்கள். மிகச்சிறந்த ஆர்மோனியக் கலைஞரான இவர் பங்கு பெறும் நாடகத்தைப் பார்ப்பதற்கு மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு டிக்கெட் வாங்கிய காட்சியை நான் கண்டிருக்கிறேன். இத்தகைய புகழ் பெற்ற கலைஞர் பலர் இருந்திருக்கின்றனர்.
கலைஞர்கள் தாங்கள் பாராட்டப்படும்போது அவர்களுக்குக் கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு ஈடுயிணை கிடையாது. ஒரு கோடி ரூபாய் கொடுக்கும்போதுகூட ஏற்படாத அந்த மகிழ்ச்சி, பாராட்டப்படும்போது அவர்களுக்கு உண்டாகிறது. பாராட்டுப் பெறும்போது, அது அவர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கையை அவர்களுக்கு அளித்து மேலும் மேலும் உழைக்க வைக்கிறது. இங்கே ஒரு சிறு பையன் விருது வாங்கினான். அவனது தந்தைதான் சுருளிராஜன். மக்களை எல்லாம் தமது நகைச்சுவை நடிப்பில் சிரிக்க வைத்த பெருமை அவருக்கு உண்டு. இன்று அவர்தம் மனைவியைக் கண்ணீர் வடிக்கவைத்துச் சென்றுவிட்டார்.
நகைச்சுவை நடிகர் என்னத்தே கண்ணையா இங்கே விருது பெற வந்தார்கள். அவர்களைப் பார்த்து நான் கேட்டேன். இன்னும் என்னத்தே கண்ணையா தானா என்று? மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்ற கலைஞர்கள் தங்கள் சொந்த வாழ்வில் மகிழ்ச்சியோடு வாழ்கின்றார்களா என்றால், அதற்கு உத்தரவாதம் தரப்படவில்லை. இங்கே ஒன்றை நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். ஆடை அலங்காரம் செய்தாலும் என்னதான் சுவையான உணவு உண்டாலும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சி கொஞ்சநேரம் இருக்கும். ஆனால், கலை உணர்வு கொண்டிருந்தால் கண்ட காட்சியைப் பிறகு எண்ணி எண்ணி மகிழலாம்.
இங்கே விருது பெற்ற பன்மொழிப் புலவர் அறிஞர் அப்பாதுரையார் பற்பல நூல்களை எழுதியுள்ளார். அவரது நூல்கள் எல்லாம் படித்து இன்புறத்தக்கது. படிப்போரை அந்நூல் புதுமையில் ஆழ்த்துகின்றன. கலைஞன் என்பவன் மனிதனில் இருந்து பிரித்து வைப்பதற்குரிய சொல்லாகும். கலையை யாரும் விலை பேச முடியாது; விலை பேசவிடக்கூடாது.
ஒருவன் நடப்பதைப் பார்த்து, என்ன அழகாக நடக்கிறான் பார் என்கிறோம். சிரிப்பதைப் பார்த்து என்ன அழகாகச் சிரிக்கிறான் பார் என்கிறோம். அழகாக உடை உடுத்தியிருப்பதைப் பார்த்து என்ன அழகாக உடை உடுத்தியிருக்கிறான் பார் என்கிறோம். சிலர் மனைவியைச் சமாதானப்படுத்துவதற்காகக் கோபத்தில்கூட நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்று கூறுவார்கள். பிறருக்கு மகிழ்ச்சியூட்டப் பிறரை நிம்மதிப்படுத்த கலை பயன்படும் என்பதற்கு இவை எல்லாம் எடுத்துக்காட்டுகளாகும்.
கலை உணர்வுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பவர்களிடத்தில் ஏற்றத் தாழ்வு உணர்ச்சி தோன்ற முடியாது. சாதி, மதபேதங்கள் தலை காட்ட முடியாது. கட்டுப்பாடு, ஒழுங்கு, நேர்மை, பண்பாடு ஆகியவற்றுடன் நடந்து கொள்வதும் கலைதான். மதங்கள் பல இருந்தாலும் அவை போதிக்கும் கோட்பாடுகள் ஒன்றுதான். சைவ மதமாயினும், வைணவ மதமாயினும், புத்த மதமாயினும், சமண மதமாயினும் அந்தந்த மதத்தினர் தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ள கொள்கை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை மீறி நடந்தால் மதத்திற்கு விரோதமான செயலாகிவிடும்.
மனித சமுதாயத்தில் தமிழினத்துக்கென ஒரு மரபு, பண்பாடு, பழக்க வழக்கம் உள்ளன. அதை மீறி நடப்பவர்கள் தமிழர் அல்லர் தமிழ்ச் சமுதாயத்துக்குச் சொந்தக்காரர் அல்லர். கலைஞர்கள் பண்பாட்டிற்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது கலை வெற்றி பெறும். அப்படி இல்லாவிட்டால் அவர்களது கலை, கலைவாணர் சொல்லியது போல அது கூட்டத்தைக் கலைக்கும் கலையாக ஆகிவிடும்.
கலையை வயிற்றுப் பிழைப்புக்காகப் பயன்படுத்தக்கூடாது, கலையை விலைபேச வேண்டும் என்ற முறையிலே கலைஞர்கள் நடந்துகொள்ளக் கூடாது. கலையைக் கலையாக மதித்து கலைக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்தான் இங்கே இன்று பாராட்டுப் பெற்றிருக்கிறார்கள். நமது ஆளுநர் அவர்கள் இங்கே கலைஞர்களைப் பாராட்டிப் பேசினார்கள். அவர்களது உரையிலிருந்து, அவர்கள் தமிழை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தமிழ்க் கலையை அறிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
எத்தனையோ கலைஞர்கள் நல்ல நிலைக்கு வந்தும் இன்றும் கஷ்டப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நடிகர் சங்கத்தைப் பலப்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் உறுதியாகிறது. அதற்கு அரசும் தன்னாலான உதவிகளைச் செய்யும். இங்குத் திறக்கப்பட்டுள்ள கலை மேதைகளின் படங்களை வைக்க மன்றக் கட்டடத்தில் இடம் போதவில்லை என்று செயலாளர் குறிப்பிட்டார். நான் அவருக்கு விளையாட்டாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நீதிமன்றக் கட்டடம் சிறிது. ஆனால், தீர்ப்பு பெரிது. இதைச் சொல்லி நான் ஏமாற்றுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.
கட்டடம் கட்டுவதற்கான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். அழியாத கலைக்கு ஒரு நல்ல கட்டடம் கட்ட எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும்.''
தின செய்தி நாளிதழில் இன்று (18.05.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 35)
‘‘மன்னாதி மன்னனுக்கும் மனம் மாறும்..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
===============================
நாகரிகம் வளர்ந்த நிலையில, உலகம் தழுவியதைக் காட்டுவதுதான் மக்களாட்சி என்று அனைவரும் போற்றுகின்றனர். பட்டத்து யானை ஓடி வந்து மாலையிட்டால் போதும் மன்னனாகிவிடலாம் என்று நம்பினர். மன்னனோடு உடன் இருக்க வாய்ப்புக் கிடைத்ததால் மன்னனுக்குப் பிறகு ஒழித்து விடலாம் என்கிற மமதை மனம் கொண்டவர்களும் தம் கையில் ஆதிக்க ஆட்சியை நடத்தி முடித்ததையும் உலக வரலாற்று ஏடுகளில் காண முடியும்.
ஆனால், எளிய மக்களால், எல்லோரும் திரண்டு நின்று, தங்கள் நெஞ்சில் நின்றவனைத் தலைவராகத் தெரிவு செய்தனர். மக்கள் எந்த மனநிலையில் தேர்வு செய்தார்கள் என்பதை இன்றுவரை எவராலும் தெளிவான முடிவு சொல்ல முடியவில்லை. மக்களாட்சி அமைந்த பிறகும், மன்னவர் ஆட்சியில் இருந்து வந்த மரபுரிமைக் கறையும், ஆதிக்கப் போக்குக் கொண்ட மமதையாளர்களின் சிலந்தி மனம் என்ற குறையும் சேர்ந்தே பின்னி வந்தன.
மைய அரசு, மாநில அரசு என்று எவையும் இந்தக் குறைகளைப் போக்கிக்கொள்ள முடியவில்லை. மரபு வாய்ப்பில்லாதவர்கள், உடனிருந்த நண்பர்களையும் பழகி வந்த சுற்றத்தாரையும் குற்றத்தாரையும் பல்லக்கு சுமந்தவர்களையும் பங்காளிகளாகச் சேர்த்தனர். இந்தக் கதையோ, அனைத்து நாடுகளிலும் அமைந்ததுதான்.
புரட்சித்தலைவரின், உடல் திடுமென நலிவடையத் தொடங்கியதும் சுற்றிச் சூழ்ந்தவர்கள் அவரைப் பல நிலைகளில் பற்றிக் கொண்டு வழிநடத்தினார்கள். காட்டிய இடத்தில் கையெழுத்திட்டால், பாலும் தேனும் நாட்டில் ஓடும் என்றும் குறிப்பிட்டார்கள். இந்த நிலையில், உயரிய அலுவலர்கள் இருந்தபோதிலும்கூட, தங்களால் தடுக்க முடியவில்லையே என்று தவித்தார்கள்.
மன்னாதி மன்னனுக்கும்கூட, மனமாறுபாடும் மறதியும் அடிக்கடி வாட்டி வதைத்தன. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழாவில், திடுமென அழைத்து மாவீரருக்குக் கோடி ரூபாய் மக்கள் முன்னால் வழங்கினால் என்ன என்று கேட்டார். அப்படி ஊரறியச் செய்ய முடியாது என்று அவர் மனத்துக்கு மாற்றத்தைத் தருவதற்குச் சில மணி நேரம் பிடித்தன.
இந்தச் சூழ்நிலையில்தான், திடுமென எனக்கு ஒரு பதவி மாற்றம் வந்தது. வேடிக்கை என்னவென்றால், தமிழ் வளர்ச்சிச் செயலாளரை மாற்றம் செய்ய வேறு எங்கும் வாய்ப்புக் கிடையாது. ஏன் மாற்றினார்கள்? எப்படி மாற்றினார்கள்? பிறகு என்னைத் தொடர்ந்து வந்த பெருந்தகையாளர்கூட இந்த மாற்றம் ஏன், எப்படி நடந்தது என்றுதான் என்னைக் கேட்டார்கள். எவருக்கும் தெரியவில்லை. மர்ம யோகி கதையாக முடிந்தது.
நோயும், நலிவும் நம்மைப் பற்றிப் படரும் என்று புரட்சித் தலைவர் நினைத்ததேயில்லை. ஒருமுறை என்னைப் பார்த்து, சர்க்கரை ஒரு நோயா? என்று வாதுமை அல்வாவை உருட்டி என் வாயில் இட்டார். இதோ பாருங்கள் நான் இரண்டு உருண்டைகளை உண்ணுகிறேன் என்று என் அருகில் உட்கார்ந்து உண்டார். நான் மறுநாள் என் மருத்துவரிடத்தில், இதனைக் கூறினேன். முதலமைச்சர் மாபெரும் மக்கள் தொண்டர். பொன்மனச்செம்மல், மருத்துவரில்லை என்று கூறி நகைத்தார். மூன்றாவது மாதம் சர்க்கரை நோய் மிகுந்து நான் மருத்துவமனையில் உடன்சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டேன். புரட்சித் தலைவர் மனம் துடித்து வினவினார்.
எனவே, வாழ்க்கையில் ஒரே நிலையில் இருப்பது என்பது, எளிதானது இல்லை. இருபத்தேழு ஆண்டுகள், சிறையில் இருந்து திரும்பிய தென்னாப்பிரிக்க அதிபர், நெல்சன் மண்டேலா, ஐந்தாண்டுகளுக்கு மேல் தமக்கு இந்தப் பதவி தேவையில்லை. எனக்கு நலிவு வரலாம். வயது முதிர்வால் மறதி வரலாம். இவையிரண்டும் மக்களாட்சியைக் குலைக்கும் என்று கூறினார் என்பர். தள்ளாடித் தடுமாறி மக்களாட்சி தவித்தபடியே எங்கும் வடிவெடுத்தன.
இந்த நிலையில், ஒரு மருத்துவர் மாநாட்டில், அவர் பேசியதைத் தொடர்ந்து படிக்கலாம்.
‘‘அனைத்திந்திய அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் கழகம் 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது விரிவாக்கம் அடையப்போகிறது என்றார்கள். எத்தனை ஆண்டுகள் என்று கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். அன்று நான் கொடுத்தது ரூ.50 ஆயிரம். இன்று ரூபாய் இலட்சத்துக்கு சமம் என்று கூறினார். அன்று நான் மட்டும் கொடுக்கவில்லை. டாக்டர் ராமமூர்த்தியும் கொடுத்து இருக்கிறார். அப்போது அவர் மருத்துவர். நான் கலைஞன். சாதாரண நடிகராக இருந்த நான் கொடுத்தாலும் அதைக்கொடுக்கச் செய்வதில் பங்கு கொண்டவர் டாக்டர் நடராஜன்.
ஆண்டுகள் பல கடந்தாலும் இன்று மீண்டும் இந்த கட்டடக் கால்கோள் விழாவில் கலந்து கொள்கிறேன். நல்லதை எண்ணினால் அது விரிவடையும்போது அதில் பங்குகொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்பது தெரிகிறது.
இங்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்தக் கட்டடத்துக்காக ஒரு பிரிவை ஏற்படுத்தும்போது அந்தப்பிரிவுக்கு ஆகும் செலவான ரூ.3 இலட்சத்தை சென்னை செரீப் திரு சிவந்தி ஆதித்தன் அவர்கள் அளிக்கிறார். அந்தப்பிரிவுக்கு அவரது தந்தை பெயரை வைக்க வேண்டும் என்று நானும் அவரும் விரும்புகிறோம்.
நான் அதிகமாகக் கவலைப்படுவது புறநகர்ப் பகுதியைப் பற்றியும் கிராமம்புறப் பகுதியைப் பற்றியும்தான். அந்தப் பிற்பட்ட பகுதிகள் கிராமப்புற பகுதிகள் எப்படி இருக்கிறது என்பதை அங்கு வாழும் மக்களை நன்கு கவனித்தால் தெரியும் மருத்துவர்கள் படித்து பட்டம் பெறுகிறார்கள் நிபுணர்கள் தகுதி வாய்ந்தவர்களுக்குப் பட்டம் அளிக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருக்கு மருத்துவம் அளிக்க வேண்டுமோ, அங்குப் போக மறுக்கிறார்கள். இது வேதனைக்குரியது. தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.
பக்கத்தில் இருப்பவர்களுக்கு நோய் இல்லாமல் இருந்தால்தான், நோய் பரவாமல் இருக்கும். கிராம மக்கள் வேலைக்கும் பொருளுக்கும் ஏங்கிக் கிடந்து நகரத்துக்கு வருகிறார்கள். இதைத் தடுக்க வேண்டாமா? தடுக்க என்ன செய்கிறோம் வேலைவாய்ப்பைக் கொடுக்கிறோம். வேலை வாய்ப்பைக் கொடுத்தால் போதாது நோயைத் தடுக்க வேண்டும். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும்.
என் வாழ்க்கையில் நடந்ததைச் சொல்ல வேண்டும். என் வாழ்க்கைத் துணைவிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு காச நோய் வந்தது. அவர் இப்போது உயிரோடு இல்லை. அப்போது பி.ஏ.எஸ் பவுடர் என்பதுதான் கண்கண்ட மருந்து. வேறு நல்ல மருந்துகள் கிடையாது. ஆணி ஊசி ஏற்றிக் காற்று ஏற்றுவார்கள். தமிழகத்தில் யார் பெரிய மருத்துவராக இருந்தாரோ அவர்தான் என் மனைவிக்குச் சிகிச்சை அளித்தார். கேவிட்டி இருந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டது. மறுபடியும் வந்தது. இனி ஆபரேஷன் செய்ய முடியாது என்று கூறிய அந்த மருத்துவர், உங்கள் மனைவி இன்னும் 3 மாதம்தான் உயிரோடு இருப்பார். அதற்குள் என்ன விரும்புகிறாரோ அதை வாங்கிக் கொடுங்கள் என்றார். அதன் பிறகு ஒரு அறுவைச் சிகிச்சை டாக்டர் வந்தார். அவர் விசேஷ நிபுணர் அல்ல. இந்தப் பெண் சாகப்போகிறது நான் சிகிச்சை அளிக்கிறேன் என்று அவர் கூறினார்.
நிபுணர் கொடுத்த தவணை 3 மாதம்தான். எனவே, சரி சிகிச்சை செய்துவிட்டுப்போகட்டும் என்று நான் விட்டுவிட்டேன். அந்த சர்ஜன் சிகிச்சை அளித்த பிறகு ஓர் ஆண்டு உயிரோடு இருந்தார். என் மனைவியை மறுபடியும் அந்த நிபுணரிடம் அழைத்துச் சென்று இனி என்ன செய்வது? என்று கேட்டேன். நன்றாக இருக்கிறார். என்ன மருந்து கொடுக்கிறீர்களோ அதையே தொடர்ந்து கொடுங்கள் என்றார்.
என் மனைவி 18 ஆண்டுக் காலம் அதன் பிறகு உயிரோடு இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த நோய் தீர்ந்தது. பின்பு வேறு நோயினால் மரணம் அடைந்தார். நான் அந்த நிபுணரைக் குற்றம் சொல்லவில்லை. சட்டப்படி அவர் படித்த திறமைக்கேற்ப இதைச் செய்தால், இந்த ஆபத்து வரும். உயிர் போய்விடும் என்ற ஆய்வைச் சொல்லி இருக்கிறாரே தவிர, அவர் தவறு செய்தார் என்று சொல்ல உரிமை இல்லை. இதுபோல அனுபவத்தில் பலவற்றைத் தெரிந்து கொள்கிறோம்.
நான் துப்பாக்கியால் சுடப்பட்டபோது, உயிரோடு திரும்பி வருவேனா என்பதே சந்தேகமாக இருந்தது. அப்போது எனக்குச் சிகிச்சை அளித்த டாக்டர் வேணுகோபால், நான் படத்தில் திரும்ப நடிக்க வேண்டும். காயத் தழும்புகள் இருக்கக்கூடாது என்று கருதி, கழுத்தில் சுருக்கம் விழும் இடத்தில் தழும்பு தெரியாதபடி ஆபரேஷன் செய்தார். இப்படிப்பட்ட மருத்துவர்கள் வேண்டும்.
அமைச்சர் ஹண்டே மருத்துவ அனுபவம் உள்ளவராக இருப்பதால் எனக்கு மிக உதவியாக இருக்கிறார். இவ்வளவு மாநிலங்களில் இருந்து வந்து இருக்கிறீர்கள். உங்கள் எல்லோரையும் பார்க்கும்போது இந்தியாவைப் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. உங்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். குழந்தைகள் நோயைத் தீர்ப்பதற்கு நோய் வராமல் தடுப்பதற்கு இத்தனை ஆண்டுகளில் வகை செய்வோம் என்ற திட்டத்தைத் தர வேண்டும்.
இந்தக் கட்டடத்துக்கு நானும் ஒரு கடமையைச் செய்யலாம் என்று கருதுகிறேன். என் சொந்தப் பொறுப்பில் ரூ.1இலட்சமும், அரசின் சார்பில் ரூ.5 இலட்சமும் அண்ணா பெயரால் அந்தப் பிரிவை உருவாக்கத் தருகிறேன். நாட்டைக் காப்பாற்றுங்கள். நோயை விரட்டுங்கள், மனத்தைப் பண்படுத்த உதவுங்கள்..!''
தினசெய்தி நாளிதழில் இன்று (25.05.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 36)
‘‘பாமரரைப் படிக்க வைத்த பத்திரிகையாளர்..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
-----
திரைப்படம் போல உலகத்தைக் கவரும் ஊடகத்தை விஞ்சுவதற்கு எந்த ஊடகமும் இல்லை. ஒரு திரைப்படம் வெற்றி பெற்றது என்றால், ஒரு கோடி மக்களின் உள்ளங்களைக் கவர்ந்துவிட்டது என்பது பொருள். எனவே, திரைப்படத்தினுடைய வலிமையையும், எல்லையையும் ஆழமாகத் தெரிந்து திரையுலகத்தில் புரட்சி நடிகராகப் பொன்மனச் செம்மல் திகழ்ந்த தனிப்பெருமை அவருக்கு உரிமையாகும்.
எதையும் மக்கள் மனத்தை நேர்முகமாகத் தொடும்படியாக எடுத்துச் சொல்ல வேண்டும். அழகாகச் சொல்வதும், அடுக்கிச் சொல்வதும், ஆழ்ந்த பொருள் ததும்பச் சொல்வதும் பேரறிஞர் அண்ணாவுக்கு முடிந்தது. வேறு எவராலும் அந்தப் போக்கை முழுமையாகப் பின்பற்ற முடியாது. அண்ணாவின் பேச்சு, எவ்வளவு ஆழமானது என்பதை அடிக்கடி தம்பி காளிமுத்து சொல்லிக் காட்டுவார்.
“மன மருள் கொண்ட பறவைகள் கூட்டமாகப் பாமரர் மயங்கியிருந்தபோது, அறிவுத் தெளிவு என்ற ஆலோலம் கேட்டு, அங்குமிங்கும் பறவைகள் பறப்பது போல மக்கள் மனமும் பகுத்தறிவுப் பண் கேட்டுத் தம் சிந்தனைச் சிறகுகளை விரிக்க வேண்டும்” என்று போகிற போக்கில் அண்ணா பொதுக்கூட்டத்தில் உதிர்த்த உரைகள் ஒப்பற்றவை.
“எண்ணாத் துறைகளிலெல்லாம் நாடி, எழில்படவே எடுத்துரைத்த எங்கள் அண்ணாத்துரைக்கு ஈடுன்றோ” என்று பாவேந்தர் ஒரு தொடரை ஓர் அணிந்துரையில் எழுதியிருந்தார்.
மக்களாட்சி என்பது தேர்தலில் வென்றவர்களையும், தேர்வெழுதி வந்தவர்களையும், தீர்ப்பு சொல்லி நிலைத்தவர்களும் என்ற மூன்று கால்களைக் கொண்ட முக்காலி போலத் தோன்றினாலும் நான்காவது காலாகச் செய்தித்தாள் உலகம் தான் சிறப்போடு திகழ்வது. நாளிதழ்களை எழுத்தெண்ணிப் படிப்பதும், தன்னுடைய பேச்சும், கருத்தும், தன்னுடைய ஒளிப்படமும் சரியாக வந்ததா என்பதை மிக நுணுக்கமாகக் கவனிக்கிற திறமை புரட்சித்தலைவரிடம் இருந்தது. காவல் துறையினர் நடத்திய ஒரு கூட்டத்தில், தான் அமர்ந்திருந்தபோது, மூன்றாவது இடத்தில் இருந்தவரை விலக்கிவிட்டு, கேமராக்காரர் தன் கோணத்தை முன்பக்கமாக மட்டுமே வளைந்து எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதைப் புகைப்பட நிபுணர்கள் பாராட்டிக் குறிப்பிடுவார்கள்.
நான், புதுத் தில்லியில், வானொலியில் பணியாற்றியபோது, ஒலிபரப்பில் விடியல் நிகழ்ச்சி காலை 5.45 மணிக்குத் தொடங்கும். ஆங்கிலச் செய்தி, 6.30 மணிக்குத் தொடங்கியதாக நினைவு. செய்தி வாசிப்பவர், மெல்வின் டிமெல்லோ என்ற பெயருடையவர். செய்தி உலகத்தின் சிகரமாகத் திகழ்ந்தவர். நேரு பெருமகனாருக்குப் பெரிதும் வேண்டியவர். காலை 5.55க்கு திடுமென்று நேரு அவர்களே வானொலி நிலையத்திற்கு வந்து டிமெல்லோவிடமிருந்து வாசிக்கும் செய்தித்தாளை வாங்கித் திருப்பியதைக் கண்டு நாங்கள் பெரிதும் வியந்தோம். அதே நிலையில், அ.இ.அ.தி.மு.க. இயக்கம் தொடங்கிய பிறகு, தென்னகம் இதழ், நடந்தபோதும், தம் சார்பான இதழ் தொடர்ந்தபோதும், ஒவ்வொரு முறையும் கேட்டுத் தெளிவடைந்து புரட்சித்தலைவர் திருத்தம் சொன்னதைப் பலர் கூறியிருக்கிறார்கள்.
செய்தியாளர்களுக்கு விருந்து தருவதும், தகவல்களைத் தெரிந்து கொள்வதும், அவருக்கு மிகவும் பிடித்தமான செயல்களாக இருந்தன.
“தந்தி வந்தால், அந்த நாளில் அச்சப்படுவோம். இப்போது தந்தி வந்தால்தான் நம் தளர்ச்சியே நீங்கும்” என்று ஒருமுறை குறிப்பிட்டார். அந்த வகையில், எளிமைக்கு இருக்கிற வலிமையைக் காட்டுவதற்காகவே பிறந்த நாளிதழ் தான் தினத்தந்தி.
அகரத்தில் அண்ணாவைத் தொடங்கினால், அடுத்த நெடிலாக அமைந்த பெயர் ஆதித்தனார் பெயராகும். பெருந்தகை ஆதித்தனார், இங்கிலாந்தில் பயின்றவர். உலகநாடுகள் பலவற்றை அறிந்தவர்.
நாளிதழ்கள் எப்படிக் கருத்துகளைச் சுருக்கென்று எடுத்துச் சொல்ல வேண்டும்; தேநீர் கடையில் நின்று கொண்டிருப்பவர் ஆர்வத்தோடு பக்கங்களைப் புரட்டுகிறபோது தன்னைச் சுற்றியும் நாட்டிலும் நடைபெறுவதைக் காட்ட வேண்டும் என்பதற்காக எளிமையாகத் தமிழை எடுத்துக்காட்டி நாளிதழ் வரலாற்றில் வைர மகுடத்தைத் தினத்தந்தி தனக்கென அணிந்திருக்கிறது.
பெருந்தகை ஆதித்தனார் மீது, பேரன்பு கொண்டவர் புரட்சித்தலைவர். ‘‘சினிமாவுக்குச் செல்வாக்கிருக்கிறது. சில நேரங்களில் சினிமாவுக்கே தினத்தந்திதான் செல்வாக்கைச் சேர்க்கிறது” என்று அண்ணல் சிவந்தியை அரவணைத்துக் கொண்டு புரட்சித்தலைவர் மகிழ்ந்து பேசியது நினைவுக்கு வருகிறது.
“ஆமாம் ஔவை, நீங்கள் கல்லூரியில் ஆசியராக இருந்தீர்களே, ஏன் பத்திரிகை ஆசிரியராகப் போகக்கூடாது? நான் ஒரு நாளிதழ் தொடங்கப்போகிறேன்” என்று ஒருமுறை புரட்சித் தலைவர் கேட்டார். அண்ணா, ஒரு கதை சொல்வார்கள் என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.
“ஒரு பெரிய கோடீஸ்வரன், தன் பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று பலமுறை முயன்றான். கிண்டிக்குப் போய்க் குதிரை மீது பணத்தைக் கட்டினான். கோடி பல கோடியாயிற்று. பிறகு போய் நூற்பாலைகளைத் தொடங்கினான். முதலீட்டைவிட முப்பது மடங்கு ஆதாயம் கிடைத்தது. என்ன செய்வது என்று பார்த்தான். ஒரு நாளிதழ் தொடங்குங்கள் என்று நண்பர்கள் சொன்னார்களாம். தொடங்கி, மூன்று மாதங்கள் நடத்தினான். தண்ணீராகக் கோடிகள் கரைந்தன. நாளிதழ் நின்றுவிட்டது” என்று சொன்னேன்.
“அப்படிச் சொல்லக்கூடாது. சென்னைக்கே புகழ் தருகிற வகையில், இந்து பத்திரிக்கையும், தினத்தந்தியும் இல்லையா?” என்றார் புரட்சித்தலைவர்.
திராவிட இயக்கத்தில், நூற்றுக்கணக்கான ஏடுகளைத் தொடங்கினார்கள். தொடர முடியாமல் நின்று விட்டன. இப்படிப் பார்த்தால், இதழ் நடத்துவது எவ்வளவு கடினம் என்று காணலாம்.
தில்லியில், ஒருமுறை செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு வந்தவர்களுக்குப் பதில் சொல்லி வந்தார். ஒரு நிருபர், புரட்சித்தலைவரைப் பார்த்து, நீங்கள் ஓர் ஆங்கில நாளிதழை நடத்துங்கள் என்று கூறினார். புரட்சித்தலைவர் புன்னகைத்தபடி, “இருக்கிற புகழைக் குறைக்கவா? அதிகப்படுத்தவா?” என்றார். பத்திரிகை என்பது அது ஒரு தனி அரசாங்கம் போல என்று கூறியது அப்போது ஆங்கில இதழ்களில் பெரிய எழுத்துகளில் செய்தியாக வெளிவந்தது.
இவ்வாறு, ஊடக உலகத்தின் நுணுக்கங்களையெல்லாம் தேர்ந்து தெளிந்தவராகப் புரட்சித்தலைவர் விளங்கினார். தான் விரும்பிப் படிக்கும் இதழ்களில் தலையங்கங்களைக் கூர்ந்து படித்துப் பிறரைப் படிக்கச் சொல்லிக் கேட்டு, உடனுக்குடன் மறுப்பு சொல்லவோ, விளக்கம் சொல்லவோ தயங்கமாட்டார்.
ஒரு வார இதழில், ‘வாழ்விக்கும்போது முதுமை தலைகாட்டுகிறது’ என்று எழுதியிருந்தார்கள். தொலைபேசியில் புரட்சித்தலைவர் சொன்னார். “அது முதுமை அல்ல, புதுமை” என்று மாற்றிவிடுங்கள் என்றார். இப்படிப் பொன்னான நினைவுகள் நினைக்க நினைக்க வந்து செல்கின்றன.
‘இதயம் பேசுகிறது’ மணியனோடு அவர் பேசிக்கொண்டிருந்தபோது, நண்பர் உதயமூர்த்தியும் இருந்தார். அப்போது, ஏன் மெயில் பத்திரிகையை நிறுத்திவிட்டார்கள். அதுபோல, ‘லிபரேட்டர்’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி தொடங்கிய தாளும் நின்றுவிட்டது. உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று கேட்டார். இரண்டு பேரும் வியந்தபடி பார்த்தார்கள். நான் அதுவரை சர். ஏ. இராமசாமி முதலியாரின் மகன், டாக்டர் கிருஷ்ணசாமி ‘லிபரேட்டர்’ என்ற தாள் தொடங்கி நடத்தியதை எப்போதே படித்திருந்தேன். புரட்சித்தலைவருடைய நினைவு எவ்வளவு படர்ந்தது என்பது மலைக்க வைக்கிறது. அதே நேரத்தில், திடுமென்று கலைஞர் இரவு பதினோறு மணிக்கு எங்கே இருப்பார் தெரியுமா? என்று கேட்டார். எல்லோரும் திடுக்கிட்டோம். முரசொலி அலுவலகத்தில் புரூஃப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி விழித்திருப்பதனால் தான் முரசொலி நாளிதழ் வெற்றி பெற்றது என்று சொன்னது மறக்க முடியாதது.
அந்த வகையில், அமைந்த ஓர் உரைதான் இங்கே இணைந்திருக்கிறது...
24.05.1987 அன்று சென்னையில் நடைபெற்ற தினத்தந்தியை நிறுவிய சி.பா. ஆதித்தனாரின் முழு உருவச்சிலையைத் திறந்து வைத்துப் புரட்சித் தலைவர் ஆற்றிய உரை...
‘‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே! என்னை வழி நடத்திச் செல்லும் பெரியோர்களே! என் இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புக்களே!
மறைந்த பெரியவர் சி.பா.ஆதித்தனார் அவர்களுடைய சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆதித்தனார் அவர்களுடைய வாழ்க்கையே தமிழ் வாழ்க்கை ஆகும். இலண்டனில் படிக்கும் போதே தமிழ் ஏடுகளுக்கு நிருபராகப் பணியாற்றி வந்தார். நாட்டு விடுதலை இயக்கத்தை ஆதரித்தார். அப்போது ‘தமிழன்’ என்ற வார இதழ் தொடங்கினார். யுத்தக் காலம் ஆனதால், காகிதப் பஞ்சம் வாட்டியது. அப்போதே கையால் செய்த காகிதத்தில் ‘தமிழன்’ ஏட்டை வெளியிட்டார்.
பின்னர்த் தமிழில் நாளேடு தொடங்கினார். மாவட்டத் தலைநகரங்களில் மாலை நேர நாளேடுகளை முதன் முதலாகத் தொடங்கியவர். எழுதப்படிக்கத் தெரியாத ஏழை மக்கள் எழுத்துக்கூட்டிப் படிக்கத்தக்க வகையில் எளிய தமிழில் ‘தினத்தந்தி’ பத்திரிகையை நடத்தினார்.
எந்த ஒரு செய்தி ஆனாலும் அதனைக் கதை போலச் சொல்வது என்ற வாடிக்கையை முதலில் கையாண்டவர், ஆதித்தனார்.
பல கல்வி நிலையங்களை விட ஆதித்தனார் நடத்திய பத்திரிகைகளால் எழுத்து அறிவு, படிப்பு அறிவு பெற்றவர்கள் ஏராளம். அவர் ஐம்பத்தி இரண்டாம் வருடத்தில் மேல் - சபை உறுப்பினராக இருந்தபோது, கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதைத் தடுக்கத் தனிநபர் மசோதா (சட்டம்) கொண்டு நிறைவேற்றினார்.
மொழிப் பிரச்சினையில் அறிஞர் அண்ணா எடுத்த முயற்சிகளுக்கு ஆதித்தனார் துணை நின்றார். தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டில் அரசியல் மாற்றம் நிகழ்ந்த நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு ‘தினத்தந்தி’ பத்திரிக்கை வாயிலாக முழு ஆதரவையும் அளித்தார். தமிழ்நாடு சட்டமன்றச் சபாநாயகராகத் திறமையாகச் செயலாற்றினார். அமைச்சராக இருந்து தனது நிருவாகத் திறமையைக் காட்டினார்.
இலங்கைத் தமிழ் மக்களுக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்த பெருமை அவருக்கு உண்டு. ஆதித்தனார் அவர்கள் நிறுவிய ‘தினத்தந்தி’ நாளேடு அவருடைய சீரிய குறிக்கோள்களுக்காக இன்றும் பணி ஆற்றி வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆதித்தனார் அமைத்த நிறுவனங்களை, அவரது புதல்வர் சிவந்தி ஆதித்தன் அவர்கள் கட்டிக்காத்து வருவதுடன் மெச்சத்தகுந்த வகையில் வளர்த்தும் வருகிறார். சிவந்தி ஆதித்தன் அவர்களுடைய தீவிர முயற்சியால் இன்று அவருடைய தந்தையின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகிறது.
அமரர் ஆதித்தனாருடைய இந்தச் சிலை நமக்கு எல்லாம் உழைப்பையும், தமிழ்ப் பற்றையும் நினைவூட்டிக்கொண்டு இருக்கும் என்று நம்புகிறேன். இந்த விழாவுக்கு என்னை அழைத்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆதித்தனாரின் நினைவுக்கு என் அஞ்சலியைச் செலுத்தி, அவருடைய உருவச் சிலையை மகிழ்ச்சியுடன் திறந்து வைக்கிறேன். இன்று முதல் ஆரிஸ் சாலை ஆதித்தனார் சாலை என்று அழைக்கப்படும். அண்ணா நாமம் வாழ்க!''
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
தின செய்தி நாளிதழில் இன்று (01.06.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 37)
‘‘பொன்மனத்துக்கு புகழ் சேர்த்த வெள்ளையானை விருது..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
-----
நான் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் பணியாற்றியபோது, எனக்கு வேடிக்கையான ஒரு சிந்தனை தோன்றியது. அதை வேடிக்கை என்று சொல்லக்கூடாது. புரட்சித்தலைவர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் பற்றி தொடக்கம் பெற்ற நாளில் பேசியபோது, இவ்வளவு பரந்து விரிந்த இடத்தில், தமிழகத்துக்குப் பெருமை தருகின்ற வகையில், ஒரு யானையும் எடுப்பான குதிரையும்கூட வாங்கி நாள்தோறும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சுற்றிவருமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னார். ஏதோ பேச்சு வந்தபோது அப்படி குறிப்பிட்டார்களே தவிர, அதைப் பற்றிய நினைவை பிறகு தொடரவில்லை. சாரணர் இயக்க மாபெரும் அணிவகுப்பில், வெள்ளி யானை விருது பெற்ற நிகழ்ச்சியை படித்ததால் இந்த நினைவு வந்தது.
எனினும், நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குப் பத்தாண்டுகள் கழித்து வந்தபோது, செட்டிநாட்டரசருக்குக் கடிதம் எழுதி, ஓர் அழகிய பந்தயக் குதிரையைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டுமென்றும், அதேபோல, கேரள மாநில முதலமைச்சருக்கு மடல் எழுதி, ஒரு யானையைப் பரிசாகத் தர வேண்டுமென்றும் கேட்டிருந்தேன்.
பணியாற்றுபவர்களுக்கே போதிய சம்பளம் தர முடியாத இடரான நிலையில், ஆனை கட்டி வைத்து பல்கலைக்கழகத்தில் ஒரு கவளம் கூட தர முடியாத கவலை உருவாக வேண்டுமா என்று சொல்லி அந்த எண்ணத்தை அப்படியே விட்டுவிட்டேன். இளைஞர்களை, பள்ளி மாணவர்களை, கல்லூரி மாணவர்களை ஓர் அணிவகுப்பாக நிறுத்திக் காண்பதில் புரட்சித்தலைவருக்கு மனத்தில் பெரிய மகிழ்ச்சி விளையும்.
புரட்சித்தலைவர் தன் வாழ்க்கையில் வருந்தியதாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும் என்றால், இளம் பருவத்தில் பள்ளியில் கல்வி பயில முடியாமல், அரிய வாய்ப்பை இழந்துவிட்டேன் என்றுதான் பலமுறை சொல்லி வருந்தினார். எனவே, பள்ளி மாணவர்கள் அணிவகுத்து நிற்கும் காட்சியைக் காணும்போது அவருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்படும். பள்ளி மாணவர்கள் சாரணர் இயக்கத்தில் சேர்ந்து அவர்களுக்கே அமைந்த சீருடை அணிந்துகொண்டு அணிவகுப்பு நடத்துவதைக் கண்டு அவர் பெரிதும் மகிந்தார்.
புரட்சித்தலைவருக்கு இளைஞர்கள் மீது பெரிய விருப்பம். அதுவும் பள்ளி மாணவர்களைப் பார்த்தால், அவர்கள் மீது பரிவைக் கொட்டுவார். நூற்றுக் கணக்கான பள்ளிப் பிள்ளைகளுக்கு ஏன் கல்லூரி மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கில் கல்விக் கட்டணம் கட்டியதை நான் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். மாணவர்களைப் போலவே, மரஞ்செடி கொடிகளையும், வீட்டு, வன விலங்குகளையும் விரும்பி வளர்க்கும் பழக்கம் அவருக்கிருந்தது.
யானையின் தலைமேல் அமர்ந்துகொண்டு புரட்சித்தலைவர் நடித்துப் பாடிய 'நல்ல நேரம்' திரைப்படத்தை ஒருமுறை நினைவுகூர்ந்தார்.
யானை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று ஒருமுறை கேட்டார். தமிழ் இலக்கியத்தில் அதிகமாகப் பேசப்பட்ட உயர்ந்த விலங்கு யானைதான். யானையின் மந்தைகளையே மன்னர்கள் வைத்திருந்ததாகவும், புலவர்களுக்கு யானையைப் பரிசளித்ததாகவும் பாடல்கள் உள்ளன. அண்டிரன் என்ற வேந்தன் நாட்டில், “ஓர் இளம் பிடி பத்துச் சூலு ஈனுமோ” என்றே புறநானூற்றில் ஒரு வரி உண்டு. அண்மையில் ஒரு நகைச்சுவையான செய்தியைப் படித்தேன் என்று அவரிடம் சொன்னேன்.
ஒரு சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. அந்த சர்க்கஸில் பெரிய யானை ஒன்று, துடிப்பான இளைஞன் கட்டளையிட யானை அதற்கு இணங்கி, வலம் வந்ததும், மண்டியிட்டதும் துதிக்கையால் மாலையிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. அப்போது, ஒரு பள்ளி மாணவன் கேட்டானாம், இந்த யானை இப்படி இளைஞன் சொல்வதைக் கேட்கிறதே, இது எதனால் என்று வினவினான்.
ஜப்பானியச் சிறுவன், மனிதன் அவ்வளவு ஆற்றலுடையவன், அவனைவிட எத்தனை மடங்கு பெரிய விலங்கைக்கூட அவன் கட்டுப்படுத்திவிடுவான். அதற்கு இந்தக் காட்சிதான் ஒரு சாட்சி என்று சொன்னான். சீன நாட்டு சிறுவன், யானையைக் கட்டுப்படுத்துபவன் கையில் ஒரு மின் கம்பி இருக்கிறது. அந்த மின் கம்பி யானையின் அருகில் வர வர அதன் உடல் நடுங்கும், மதம் ஒடுங்கும். அப்போது, எந்த ஆணையிட்டாலும் அது கேட்டுப் பணியும் என்று சொன்னான். ஆனால், இந்திய நாட்டு இளைஞனைக் கேட்டபோது அவன் சொன்ன விடை, எல்லோரையும் வியக்க வைத்தது. யானை பெரிய விலங்கே தவிர, தன்னுடைய ஆற்றலைத் தெரியதாத விலங்கு அது. தன்னுடைய பலம் மட்டும் தெரிந்திருந்தால், சர்க்கஸ் இங்கே நடக்குமா என்று கேட்டானாம்.
இந்தப் பொருளில் இல்லையென்றாலும் யானையின் இயல்பை ஒரு திருக்குறள் காட்டுகிறது என்று கூறியபோது, புரட்சித்தலைவர் அந்தக் குறளைத் திருப்பிச் சொல்லச் சொன்னார். அந்தக் குறள்,
வலியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலி தாக்குரின் (திருக்குறள் 599)
அப்போது அவர் கேட்ட வினா, யானைக்கும் புலிக்கும் போர் நடந்தால், யானை வெல்லுமா? புலி யானையைக் கொல்லுமா? எது வெல்லும் எதைக் கொல்லும் என்று புலவர்களே மாறி மாறி குறிப்பிட்டார்கள் என்று நான் சொன்னேன்.
இவ்வளவும் நீட்டிச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், சாரணர் இயக்கத்தில் நடைபெற்ற அணிவகுப்பைப் புரட்சித்தலைவர் கண்டு பேசிய உரையைத்தான் நாம் தொடர்ந்து படிக்க இருக்கிறோம்.
புரட்சித்தலைவருக்குச் சாரணர் இயக்கத்தின் மாபெரும் விருதான 'வெள்ளை யானைப் பரிசை' அவருக்கு அந்த அணிவகுப்பு நிறைவில் வழங்கினார்கள். யானை வடிவம் கொண்ட சங்கிலியை அணிந்து கொண்ட புரட்சித்தலைவர், யானையைப் பற்றி நினைவு கூர்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல், சாரணர் இயக்கத்தின் கடமை, திறமை, நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு, நம்பிக்கை நல்லெண்ணம் இவைகளை வற்புறுத்திப் பேசினார்.
அந்த உரை...
‘‘தியாகம் செய்கிறவர்கள், தியாகத்திற்கு மட்டும்தான் சொந்தக்காரர்கள் என்கிற வரலாறு மாற்றப்படும்போதுதான் சாரணர் இயக்கத்தின் முதல் கொடி பறக்கவிடப்படும். எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ, தகுதி உள்ளவர்கள் எனக்கு வெள்ளி யானை பரிசு அளித்துள்ளனர்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை இருக்கும்போது என்ன விலை மறைந்த பிறகு என்ன விலை என்று தெரியாது. ஆனால், இந்த வெள்ளி யானையைத் தந்திருப்பதன் மூலமாக என் கடமைக்கு ஒரு பாலம் அமைத்து, நான் செல்லும் பாதையை எச்சரிக்கையாக, சரியாகச் செல்ல வேண்டும் என்று தரப்பட்டது என்று கருதுகிறேன். எனக்கு அளிக்கப்படும் பரிசுப் பொருட்களை உடனே சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடுவேன்.
ஆனால், இங்கு அளிக்கப்பட்ட வெள்ளி யானைப் பரிசை மட்டும் இன்னும் கழற்றவில்லை. இதனால் இதற்கு எவ்வளவு மரியாதை தருகிறேன் என்பதை அறியலாம். இதனால், மற்றவற்றிற்கு மரியாதை இல்லை என்று பொருள் அல்ல. அறிவாற்றலும், கடமை ஆற்றலும் உணர்த்துவதால் இதனைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அப்படியே வைத்துள்ளேன்.
இந்தியா ஒரு நாடு என்பதும், அனைவரும் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் உங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நாம் அனைவரும் ஒருகுலம் என்பதைக் காட்டும் வகையில் இங்கே பரவியுள்ளார்கள். இங்கே இளைஞர்களாக உள்ள நீங்கள் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சாரணர் இயக்கத்தில் 4 ஆண்டுக் காலத்தில் 70 ஆயிரத்திலிருந்து ஒன்றரை இலட்சம் பேராக உயர்ந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். அது மட்டுமல்ல இந்தியா முழுமையும் கணக்கிட்டுப்பார்த்தால் 7 இலட்சம் பேர் உள்ளனர். இதில் இந்த ஒன்றரை இலட்சம் எந்த விகிதாசாரம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இது பெருமைக்குரியது என்றாலும் அனைத்து மாநிலங்களிலும் இதைப் பின்பற்றவேண்டும் என்பதுதான் நம் ஆசையாகும். நடை, நடத்தை என்பதை நாம் பிரித்துப் பார்க்கக்கூடாது. நடைதான் நடத்தையாகிறது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் நடை ஒழுங்காக இல்லை என்றால் அவர் குடித்துவிட்டார் என்கிறோம்.
குடித்துவிட்டார் என்றால் நடத்தை கெட்டவர் என்கிறோம். அதுபோல, ஒழுங்காக நடைபோடுவதும் ஒழுங்காகப் பணியாற்றுவதும், நாட்டில் உள்ள அனைவருடைய இன்றியமையாத கடமை-பொறுப்பு என்பதை உணரவேண்டும்.
இன்னொன்றையும் சொல்கிறேன். நாம் பிறரைத்தான் விமர்சனம் செய்கிறோமோ தவிர நம்மை அல்ல. தன்னைத்தானே விமர்சனம் செய்து கொள்வதில்லை. முதலில் நம்மைத் திறனாய்வு செய்த பின்னர்தான் மற்றவர்களைத் திறனாய்வு செய்யவேண்டும். அதுபோல நம்மை வலிவாக-உறுதியாக வைத்துக்கொண்டால்தான் மற்றவர்களுக்கு ஆலோசனைக் கூறமுடியும்.
ஓடுவதிலும், தாண்டுவதிலும், நீந்துவதிலும், எங்கு உதவி தேவையோ அங்கே உதவி தரும் வகையில் கயிற்றின் உதவியினால் பள்ளத்திலிருந்து மேலே வரவும், இங்கேயுள்ள சாரண சாரணியர் ஒவ்வொருவரும் பழக்கப்படுகிறீர்கள். உங்களை நான் பணிந்து கேட்டுக்கொள்வேன். எந்த வயதிலும் இந்தப் பயிற்சியை தேகப் பயிற்சியை நல்ல பழக்கத்தை கைவிட்டு விடாதீர்கள் என்பதுதான். நான் இன்னொன்றையும் கூறுவேன். நாட்டு மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்த்தால், சாரணர் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதை அதிகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குழந்தைகள் அதில் ஈடுபட வேண்டும். அதனால்தான் நாங்கள் உதவி செய்கிறோம். இந்த எண்ணிக்கை வளர வேண்டும் என்பதுதான் என் ஆசை.
பெரியவர்கள் சொல்ல முடியாததை ஒரு மாமன்னன் இளம் வயதில் சொன்னான் என்று தமிழ் இலக்கியத்தில் சொல்லுவார்கள். அதுபோல் நீங்கள் அதிகமான பேர்களுக்கு கல்லாத முதியோர்களுக்கு கல்வி சொல்லிக்கொடுக்க வேண்டும்.
எனக்குத் தங்க யானை தர வேண்டும் என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விரும்பினார். வேண்டுமானால் கிடைத்தால் போட்டுக் கொள்ளலாம். தமிழகத்தில் ஏழைக் குடிமக்களுக்கு இன்னும் தங்கத்தாலி கொடுக்க முடியவில்லை. அதை நினைவுப்படுத்தத்தான் வேறு வகையில் நினைவுபடுத்தினார் என்று நினைக்கிறேன். அவருக்குச் சொல்லிக்கொள்வேன். எங்களால் ஆன கடமையைச் செய்வோம் அதை அதிகப்படுத்துவோம். உருவத்தில் சிறிய - கருத்தில் பெரிய யானையைத் தந்தார்கள். துணிந்து சொல்லுங்கள் என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. கூறினார். அண்ணாவின் கொள்கைப்படி எங்கள் கடமையைத் தொடருவோம்.''
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
தின செய்தி நாளிதழில் இன்று (08.06.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 38)
‘‘புரட்சித்தலைவரின் இலட்சியக் கனவு..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
-----
புரட்சித்தலைவர், தாம் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தபோது கொண்டாடப்பட்ட பெருவிழாக்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை.
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை அந்த ஆண்டு முழுவதும் அந்த விழாவை எங்கும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வம் ததும்ப நிகழ்ச்சிகளை உருவாக்கினார். புரட்சித்தலைவருக்கு பெருந்துணையாக இருந்தவர் தியாகச் செம்மலாகத் திகழ்ந்த அறிஞர் கா.திரவியம் ஆவார். தலைமைச் செயலாளராக அமர்ந்திருந்து அவர் அரசாணை வெளியிட்டதை நினைவுகூர்கிறேன். அரசாணையை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுத்தெண்ணிச் செதுக்கி அழகுபடுத்திய பெருமை தலைமைச் செயலாளரின் தனிச் சிறப்பாக இருந்தது. அந்த ஆணையின் படி வருமாறு:
உலக வரலாற்றில், வேறு எந்தக் கவிஞருக்கும் ஓர் ஆண்டு முழுவதும் அவர் பிறந்து வளர்ந்த மாநிலத்தில் மட்டுமின்றிப் பிற பாரதம் அளாவிய பிற மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் நூற்றாண்டு விழா இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடப்படவில்லை என்று பிறர் பேசும் பெருமிதம் புரட்சித்தலைவருக்கு எப்போதும் உடன் இருந்தது.
தமிழக அரசு நிதி நல்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் உன்னதமான நூற்றாண்டு விழா மலரை வெளியிட உயர்ந்த அறிஞர் குழு அமைத்து ஏற்பாடு செய்தார். முப்பதுக்கு மேற்பட்ட அயல் மொழிகளில் அந்த மொழிகளின் வடிவமைப்பிலும், அவற்றின் மொழிபெயர்ப்பாக அயல் நாட்டு தூதர்களின் வாழ்த்துச் செய்தி இடம்பெற வேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பத்தைத் துணை வேந்தர் சை.வே.சிட்டிபாபு சிறப்பாக நிறைவேற்றியதை எவரும் மறக்க முடியாது.
நூற்றாண்டு மலருக்கு வாழ்த்துரை வழங்கிய புரட்சித்தலைவர் எழுதிய தொடர்களை அவ்வாறே காணலாம்.
நாம் புகழ்ந்து பாராட்டுகின்ற தனிச்சிறப்புகளுக்கு மகாகவி பாரதியார் முற்றிலும் தகுதி வாய்ந்தவர். தாம் வாழ்ந்த காலத்துக்கு மட்டுமின்றித் தனக்குப் பின்னால் வரும் தலைமுறைகளுக்கும் மேன்மை பெற்றுத்தரும் கவிதைத் தொண்டினை ஆற்றியவர் மகாகவி பாரதியார்.
இந்தியப் பெருநாட்டு மக்களனைவரும் சிறப்பாகத் தமிழக மக்கள் மொழிப் பற்றும், நாட்டுப் பற்றும் பெற்று சிறப்பானக் கல்வி கற்றுச் செம்மையான வாழ்வு நடத்த வேண்டும் எனப் பாரதியார் கண்ட கனவுகளை நனவாக்கும் பொறுப்பு தமிழ்ச் சமுதாயத்துக்கும் நமது அரசுக்கும் என்றும் உண்டு. அப்பணியே என் இலட்சியப் பாதையாகும்.
அறிவியலில் வளர்ச்சி பெற்றிருக்கும் மேற்கு நாடுகளுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் நமது மாநிலம் முன்னேற வேண்டும் என்பதே, பாரதியாரின் நெஞ்சக் கனலாகக் கொழுந்துவிட்டெரிந்தது. இலக்கியச் சுவையும் கவிதை அழகும் பெரிதாக இருந்தன என்றாலும், அவரிடம் சமுதாய முன்னேற்றத்தையே முழுமுதல் குறிக்கோளாகக் கொண்டு தான் வாழ்ந்த காலத்து மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பினார்.
சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை பேணுதல், அயராது உழைத்தல், நாட்டின் நலனை முன்னிறுத்தல், குறுகிய சிறுமைகளை வேரறுத்தல், அச்சத்தை அகற்றுதல் போன்ற மானிடத்தின் முக்கியப் பொருண்மைகளில் மகாகவிக்கு இருந்த ஆழமான நம்பிக்கை நம்மை எப்போதும் எழுச்சிபெறச் செய்யும்.
பாரதியார் பெயரால் பல்கலைக்கழகம் கண்டோம். எட்டையபுரத்தில் பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைத்தோம், மகளிருக்காகத் தனிப் பல்கலைக்கழகம் உருவாக்க முற்பட்டுள்ளோம் என்று இப்படி எங்கும் எதிலும் எப்போதும் பாரதியின் எண்ணங்களைப் பரப்புவதை இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறோம்.
இந்த வாழ்த்துரையை, அவர் பலவகையில் ஆட்சியில் நிறைவேற்றினார்.
பாரதியாரின் வாழ்வில் புரட்சி, புதுமை, பெண்ணுரிமை, பாரத அன்னை வழிபாடு, பராசக்தி ஆராதனை முதலிய அனைத்தியல்புகளையும் வங்க மாநிலத்திலிருந்தே அவர் பெற்றார். பாரதியாரின் முதல் கவிதை, வங்கமே நீ வாழி என்ற பாடல்தான் என்று சுதேசமித்திரனில் வெளிவந்தது.
நூற்றாண்டு விழாவின், சிறப்பாகத்தான் மேற்கு வங்க மாநிலக் கொல்கத்தா மாநகரில், ராஷ்பிகாரி அவென்யு அருகில் விவேகானந்தர் பூங்காவின் அருகில் ஏரிச்சாலை என்று அழைக்கப்பட்டிருந்த தெருவின் பெயர் கவி பாரதி சாரணி என்று மாற்றப்பட்டதோடு தமிழக அரசு வழங்கிய முழு உருவ வெண்கலச் சிலையைக் கல்கத்தாவில் நிறுவியதை புரட்சித்தலைவர் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் ஜோதிபாசு வந்திருந்தும் அவர் விழாவில் பேசவில்லை.
புரட்சித்தலைவர் பேசினால் போதும் என்று மகிழ்ந்தார். புரட்சித்தலைவர் தமிழில் பேசியதை வங்க மொழியில் மொழிபெயர்க்க இருவர் முயன்றும் திணறினார்கள். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாமா என்று கேட்டதற்கு ஆங்கிலம் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.
கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் மிகச் சிறப்பு வாய்ந்த பெருமைக்குரிய தமிழ்ச் சங்கமாகும். பாரதியார் பாடல்களைக் கட்டுரைகளைப் பழந்தமிழர் ஆராய்ச்சி நூல்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும், வங்காளத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்ட பெருமை கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தைச் சாரும்.
கொல்கத்தா அறிஞர்கள் ப.நா.தியாகராஜன், மு.சீனிவாசன், கவிஞர் கா.சு.மணியம், கோபாலசுந்தரம், வெங்கடேசுவரன், இராமன், நாராயணசாமி முதலியோர் கண்ட நெடுநாள் கனவு கொல்கத்தாவில் அன்று நிறைவேறியது. கொல்கத்தா தமிழ் மக்கள் திரண்டு கண்கலங்க கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
அந்த விழாவில் புரட்சித்தலைவர் பேசிய உரைதான் தொடர்கிறது...
‘‘நான் வணங்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே! என்னை வழிநடத்திச் செல்லும் பெரியோர்களே! என் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புக்களே!
அஸ்திவாரம் உறுதியாக இருந்தால்தான் அதன்மீது கட்டப்படும் கட்டடம் உறதியாக இருக்கும். அப்படித்தான் வங்கம், தமிழகம் இரண்டும் காலங்காலமாக அன்பாலும், பாசத்தாலும் பிணைந்திருக்கின்றன. இந்த இணைப்பு இதயங்களின் கலப்பு தொடர்ந்திருக்க வேண்டும். இந்த இணைப்பு மேம்போக்காக இல்லாமல் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுவதாக அமைதல் வேண்டும்.
இதயத்திலிருந்து எழுகிற எண்ணங்கள்தான் எப்பொழுதும் நிலைக்கும். பாரதியாரின் கவிதைகளும் நிலைப்பதற்கு அவைகள் இதயத்தின் குரலாக இருந்ததுதான் காரணம். ஆகவேதான் பாரதி, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறான்.
மேற்குவங்க அரசின் பலமான அஸ்திவாரமும் அதன்மீது எழுப்பப்பட்டிருக்கிற தமிழக அரசின் அன்பளிப்பான பாரதி சிலையும் இரு மாநிலங்களின் இணைப்புகளாக இதய ஒற்றுமையைக் காட்டுகின்றன.
பாரதியார் தமது கருத்துகளை ஒரு மதத்திற்காகச் சொல்லவில்லை. ஒரு மாநிலத்திற்காக சொல்லவில்லை, உலகத்திற்காகச் சொன்னார். உலகம் முழுவதற்குமாகச் சொன்னதால்தான் மகாகவி பாரதியாராக இங்கே வாழ்ந்தார். அவரது வாழ்க்கையில் அவர் எத்தனையோ உதாரணங்களைச் சொல்லியிருக்கிறார். குறிப்பாக அவர் சொன்னதை நான் இங்கே எடுத்துக் காட்ட வேண்டியது எனது பெரும் கடமை என எண்ணுகின்றேன்.
மனிதர்களுக்குள்ளேதான் சாதியைப் பற்றிச் சொல்லுகின்றார்கள். ஆனால், மிருகங்களைக்கூட சாதி வாரியாக நாம் பிரித்துவிட்டோம் என்று அவர் குறிப்பிடுகின்றார். பார்ப்பனப் பாம்பு, பறப் பாம்பு என்று பாம்புகளில் கூட பிரிவினையை சாதியை ஏற்படுத்திவிட்டோம் என்று அவர் குறிப்பிடுகின்றார். ஏறத்தாழ 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார் என்பதை எண்ணும்போதுதான் அந்தக் காலத்தில் இருந்த மக்கள் எவ்வளவு நம்பிக்கையோடு இருந்தார்கள். அவர்கள் மத்தியில் சொல்லும் பொறுப்பினை அன்று பாரதியார் ஒருவரால்தான் பெற முடிந்தது. என்பதை எண்ணும்போது அதுதான் மகாகவி பாரதியார் என நம்மால் பாராட்டப்பட வேண்டிய தகுதி உடையவராகிறார்.
மாதச் சம்பளம் பெற முடியாத நடந்து போகக்கூடச் சக்தியற்ற தையல் போடாத சட்டையைப் போட்டுக்கொள்ள முடியாத நிலையில் இருந்த ஒருவர் பணத்தைச் சம்பாதிக்கச் செல்லாமல், ‘ஏதோ பாட்டை எழுதினோம். அதனால் புகழ் அடைந்தோம்' என்று அதைப்பற்றி மட்டும் கவலைப்படாமல் நாட்டைப் பற்றி சமுதாயத்தைப்பற்றி அவர் அக்கறை காட்டினார். அதற்காக எழுதினார் என்றால், நாம் நினைத்து நினைத்துப் பாராட்டி அஞ்சலி செலுத்த வேண்டிய ஒருவராக பாரதியார் நம்முன் நின்று கொண்டிருக்கின்றார்.
எல்லா மதத்தினரும் அவரைக் கோபித்துக் கொண்டார்கள். எங்கும் அவருக்கு வேலை கிடையாது. கொடுக்கப்பட்ட இடத்திலும் அதற்கு எச்சரிக்கையும் சம்பளக் குறைவும்தான் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக பிரிட்டிஷ் ஆதிக்கம் அவரைத் துரத்திப் பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்தது. இவ்வளவுக்கும் இடையில்தான் புரட்சிகரமானக் கருத்துகளை நாட்டில் பரப்பினார் என்பது, இரவீந்தரநாத தாகூர் அவர்கள் கவிதை எழுதும்போது பாராட்டினார் என்பதையும், வந்தே மாதரம் கீதத்தை உருவாக்கியபோது அவர்தான் முதலில் அதை எழுதி மக்கள் மத்தியிலே தமிழகத்தில் பரப்பினார் என்பதையும் நான் எடுத்துச் சொன்னால் அதைக் கேட்கின்றவர்கள் அதிசயிக்க மாட்டார்கள். என்றாலும் தங்கள் உள்ளத்திலே கேட்காமல் இருக்கமாட்டார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
இன்றை தினம் நாம் சொல்லுகிறோம் விதவையைத் திருமணம் செய்யலாம் என்று அன்று பேசவே முடியாது. ஆனால், அன்றைய தினம் அவர் அதற்காகப் போராடினார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டுமென்று வாதாடினார். பெண்களை யாருக்கும் அடிமையாக்கக் கூடாது என்று அவர் சொன்னார். எல்லாவற்றுக்கம் மேலாக ஒருவன் பட்டினி கிடந்தால் கூட இந்த உலகத்தையே அழிக்க வேண்டும் என்று சொன்ன ஒரே ஒருவர் பாரதியார் மட்டும்தான். அந்தக் குறிப்பிடத்தக்க ஒருவர், இந்தியா முழுமைக்கும் என்றும் சொந்தம் என்று சொன்னால் உலகத்திலே இருக்கின்றவர்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் தெரிந்து கொள்ளட்டும். ஆனால், வங்காளத்திலே, வங்காளத் தலைநகரத்திலே இப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்படும் என்று இன்று அறியும்போது, இந்தியா எந்த அளவிற்கு மாநிலத்திற்கு மாநிலம் தொடர்பு வைத்திருக்கிறது என்பதையும், அண்ணன், தம்பியாக இருக்கிறோம் என்பதையும் இங்கே மற்றவர்கள் சொன்னதை நான் அடையாள பூர்வமாக ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல, தலைவணங்குகிறேன், என்று கூற விரும்புகிறேன்.
சில ஆஸ்தீக நம்பிக்கையுள்ளவர்களுக்கு மழை வருவது ஒரு நல்ல அடையாளம் என்று சொல்வார்கள். அதிலும் வறட்சிப் பாகத்திலிருந்து வந்திருக்கின்ற நான் இங்கே மழை பொழிவதைப் பார்க்கும்போது பெருமகிழ்ச்சி அடையத் தவறமாட்டேன். இந்தப் பெயரை வைக்கும் போதே மழைத் தூற்றல் போடுகிறது என்றால், இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் நாம் எவ்வளவு வளமாக வாழ முடியும் என்பதற்கு இதை அடையாளமாகக் கொள்ள முடியும் என்று கருதுகின்றேன்.
அவருடைய கொள்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அந்தக் கொள்கையைப் பின்பற்றினால், அன்றி இந்தியாவிற்கே விமோசனமில்லை என்பதைச் சொல்லி, இத்தகைய வாய்ப்பைத் தந்ததற்காக முதலமைச்சர் அவர்களுக்கும், குழுவினருக்கும் என் நன்றியைக் கூறி, வாழ்க பாரதி நாமம், அண்ணா நாமம் என்று சொல்லி விடை பெறுகிறேன்.''
தின செய்தி நாளிதழில் இன்று (15.06.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 39)
‘‘சத்துணவுத் திட்டம் சமுதாயப் புரட்சித்திட்டம்..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
-----
உயிர்களின் பசியொழிப்பே மணிமேகலை வலியுறுத்தும் பேரறமாகும். இவ்வறத்தை இந்நூல்போல் வற்புறுத்தும் வேறு நூல் தமிழில் இல்லை. பசியின் கொடுமை மிகப் பெரிது. குடிமை, பெருமை, கல்வி, நாண், தோற்றம் என்ற நல்லவை யாவும் பசித்தீ முன் அழிந்தொழியும். எதனைத் துறந்த துறவியும் பசியைத் துறத்தல் முடியாது. பசி, யாரையும் வாட்டிப் பண்பு திரிக்கும் ஆதலின்,
‘‘பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர்
இசைச்சொல் அவனைக் கென்நா நிமிராது'' (1239-40)
‘‘மண்டிணி ஞானத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே'' (1254-5)
என்று சோற்றுக்கொடையின் சிறப்பும் அக்கொடையாளியரின் உலகப் புகழும் இந்நூலால் பறைசாற்றப்படுகின்றன. சோற்றை ஆருயிர் மருத்துவர் என்றம் சாத்தனார் புகழ்வர். பசி நோயிலிருந்துதான் ஏனைப்புற நோய்களும் அகநோய்களும் பிறப்பன. உடற்பிணி மருத்துவர்களாலும், அகப்பிணி அறிஞர்களாலும் சமுதாயக் கேடுகள் ஒழியமாட்டா. எனை நோய்க்கும் பிறப்பிடமாம் பசிப்பிணி தீர்க்கும் அற மருத்துவர்கள் சமுதாயத்திற் பெருக வேண்டும்.
‘‘மக்கள் தேவர் எனவிரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன்
பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
தவப்பெரு நல்லறம் சாற்றினர்'' (1421-4)
எனப் பழுத்த துறவி அறணவர் உயிர்வாழும் உலகிற்கெல்லாம் பொதுவறம் சாற்றுவர். தனியாகும் பசியொழிக்கப் பாடுபடுதல் வேண்டும். அதன் ஒழிப்பை முதற்கடமையாக அரசும் எண்ண வேண்டும். ஓருயிர் பசித்துக்கிடத்தல் கூடாது, கூடாது. வரப்புயர என்றாற்போல் பசியொழிய என்றால் ஏனைத் தீயவை தீயெல்லாம் ஒழியும் என்பதுவே சாத்தனார் சமுதாயக்கொள்கை.
‘‘பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வன்னும் சுரக்கென'' (70-1)
முரசோன் விழா அறைகின்றான். பசி நீங்கப் புறப்பிணி நீங்கும்; புறப்பிணி நீங்க அகப்பகை நீங்கும் என்று சாத்தனார் நாட்டிற்கு வழி காட்டுவர். மக்கட்கு அடிப்படை வேண்டுகை உணவு, உடை, வீடு என்ற மூன்றுமே என்றும், அவற்றை எவ்வகையானும் அமைத்துக் கொடுப்பதுவே நல்லரசின் முதற் கடன் என்றும் இன்று பல்லரசுகளும் ஒப்புக் கொள்கின்றன. அக்கடனைச் செவ்வண் முடித்துக் குடிப்பசி களையப் பாடுபடுகின்றன.
‘‘அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவா திதுகேன் மண்ணுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டதில்......'' (3383-5)
சாத்தனார் பன்னூறு ஆண்டுகட்கு முன் கண்டு காட்டிய கனவு இது; அறுதியிட்டுரைத்த அறம் இது. மக்கட்கும் அரசுகளுக்கும் காட்டிய வழி இது. தமிழ்ப் புலவன் கண்ட கனவு அறிவியல் பெருகிய இவ்விருபதாம் நூற்றாண்டிலும் கனவாகவே நிற்கின்றது. உயிர் பசி நீங்கும் நனவுதான் என்றோ?
என்று வ.சுப.மாணிக்கம் எழுதினார்.
“பசிக்கிறவனுக்கு மீனைக் கொடுக்காதே அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடு” என்றும் “சோறு போட்டுச் சோம்பேறியாக்காதே” - பொன்மனச் செம்மல் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்த பொழுது இப்படியெல்லாம் சிலர் பழிப்புரை பேசினார்கள். அவர்களுக்கெல்லாம் ஒட்டு மொத்தமாக இந்தச் சத்துணவுத் திட்டம் மிகப் பெரிய பொருளாதாரத் திட்டம் என்றோ நான் ஓர் அரசியல் மேதை என்றோ உலகிற்குச் சொல்லவோ இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. என்னுடைய இளம் பருவத்தில் பசியின் கொடுமையை அனுபவித்தவன். என் தாய் பத்துப்பாத்திரம் தேய்த்துக்கூடப் பசியாற உணவும் படிப்பும் கொடுக்க இயலவில்லை. இந்தக் கொடுமையைக் கணிசமான அளவில் குறைக்க வேண்டும் என்கிற இலட்சியத்தை நிறைவேற்றவே இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தேன். இது என் ஈரமான இதயத்தின் வெளிப்பாடேயன்றி என் அரசியல் சாணக்கியத்தனம் இல்லை.
இதனால் அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை இழப்பு என்றாலும் எனக்குக் கவலையில்லை” என்று விளக்கமளித்தார் வள்ளல்.
வறுமையை ஒழிப்போம் என்றுதான் நான் தொடங்கினேன். ஆனால், வறுமையைக் காட்டிலும் என்னையும் என் கட்சியையும் ஒழித்துவிட்டார்கள் என்று அமெரிக்க குடியரசுத் தலைவர் ரீகன் குறிப்பிட்டார். ஆனால், புரட்சித்தலைவருக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான். கொடிது கொடிது இளமையில் வறுமை என்பதை நெருப்பு வரியாகத் தவித்த துயரம் புரட்சித் தலைவர் நெஞ்சத்தை கலக்குவதாகும். அந்தக் கலக்கத்தில் பிறந்ததுதான் சத்துணவுத் திட்டம்.
இளம்பிள்ளைகள் பசியில்லாமல் பட்டினியில்லாமல் மகிழ்ச்சியோடு படித்து முன்னேற வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்திற்காகத்தான் சத்துணவுத் திட்டத்தை நான் தொடர்கிறேன் என்று பலமுறை உருக்கமாகக் கூறுவார்கள். பசியைப் போக்குவதில் அவருடைய கை எந்தத் திசை நோக்கியும், எந்தத் தொலைவைக் கடந்தும் நீளும் கரமாகும். கொடுத்துச் சிவந்த கரம், கோடிக்கணக்கான இளம்பிள்ளைகளுக்கு கிடைத்த வரம். அந்த வகையில், தன்னைத் தாயாகவும், தந்தையாகவும் எண்ணி உருக்கத்தோடு ஆற்றிய உரைகள் பல.
அவற்றில் ஒரு கட்டுரையைத்தான் நீங்கள் படிக்க இணைத்திருக்கிறேன்.
திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில் 01/07/1982 அன்று நடைபெற்ற இலவச சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து புரட்சித்தலைவர் ஆற்றிய உரையில்...
‘‘இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த நிகழ்ச்சி வெறும் விளம்பரத்திற்காகவோ நாங்கள் எத்தகைய திட்டங்களையெல்லாம் அறிமுகப்படுத்துகிறோம் பார்த்தீர்களா என்று சொல்லி மக்களுடைய தேவைகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு என்னென்ன அவசியத் தேவை இருக்கின்றனவோ அவைகளை அலட்சியப்படுத்திவிட்டு, அவர்களைத் திசை திருப்பி விடுவதற்காகவோ இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. நடத்தப்படவில்லை என்பதை முதலிலே நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் பேசுவதாக இருந்தாலும் எங்கள் கட்சிக்காரர் பேசுவதாக இருந்தாலும்கூட அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அந்தக் குழந்தைகளை, இன்றைய நாட்டின் சூழ்நிலையில் நீங்கள் அனுப்பாதீர்கள். காரணம், அவர்கள் திணிக்கின்ற, ஒருவரையொருவர் வேறுபடுத்துகின்ற கருத்துகளை அந்தப் பசுமையான உள்ளத்தில் பதிய வைத்துவிடக் கூடாது என்பதுதான்.
இந்தக் குழந்தைகள் உணவுக்கு வகையில்லை என்பதை மட்டுமல்ல, உணர்வுக்கும்கூட - நல்ல உணர்வுக்கும்கூட - இந்த நாட்டுக்குத் தேவையான சமத்துவ உணர்வுகளுக்குக் கூட தகுதிக் குறைந்தவர்களாக வளர்க்கப்படுவார்களேயானால் எதிர்காலத்தில் இந்த நாட்டின் நிலைமை என்னவாகும் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
குழந்தையிலேயே ஒழுங்காக, ஒழுக்கமாக, சுத்தமாக, சீர்மையாகத் தூய்மையாகத் துப்புரவாகத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு உபதேசம் செய்யாமல் நடைமுறைப் பழக்கவழக்கங்கள் அவர்களுக்குச் சிறுபருவத்திலேயே வந்தாக வேண்டும். அப்படிப்பட்ட நிலைமையை உருவாக்க வேண்டுமென்பதுதான் எங்கள் ஆசை. பசியையும் போக்க வேண்டும், பண்பையும் வளர்க்க வேண்டும்.
கட்சியைத் தயவு செய்து தள்ளி வையுங்கள். 60 இலட்சம் ஏழைக் குழந்தைகளுடைய வயிற்றைப் பாருங்கள். அவர்கள் வாழ்வைப் பாருங்கள். இராமச்சந்திரனைப் பார்க்காதீர்கள். அவர் எந்தக் கட்சி என்ற பார்க்காதீர்கள். எதிர்க்கட்சியா? எதிரிக்கட்சியா என்று தயவு செய்து கவனிக்காதீர்கள். தமிழகம், தமிழ் மக்கள், அதில் இருக்கின்ற வறுமைக்கோட்டிற்குக் கீழேயுள்ள வேலையில்லாமல் இருக்கின்ற ஒரு வேளை உணவு கூட நிம்மதியாகக் கொடுக்க முடியாமல் இருக்கின்ற அந்த வறுமைக் கோட்டிற்குக் கீழேயுள்ள தாய்மார்கள். கண்ணீர் வடிக்கிறார்களே, அதைத் துடைக்கின்றோம் என்கிற நிலைமையில் ஒத்துழைக்க முன்வாருங்கள் என்று நான் சொல்லிக்கொள்வேன்.
குழந்தைகளுக்குச் சொந்தக்காரர்கள் வேலைக்குப் போவார்களேயானால் என் குழந்தை இப்போது என்ன செய்து கொண்டிருக்கும் உணவுக்கு என்ற அந்த நினைப்பே இல்லாமல் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள்தான் அந்தக் குழந்தையும் ஒரு காலத்தில் இந்த நாட்டின் முதலமைச்சராக வரலாம். ஏன்? குடியரசுத் தலைவராகவே வரலாம். அப்படிப்பட்ட குழந்தைகள் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள். அவர்கள் கொடுக்கின்ற வரிப்பணம், நாம் கொடுக்கின்ற வரிப்பணம் அவர்களுக்கு உணவாகப் போகிறது. ஆகவே, அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அங்கே சாப்பிடுகிறவர்கள் என்கின்ற எண்ணத்தோடு உரிமையோடு நிம்மதியோடு இருக்கின்ற நிலைமையை உருவாக்க முயலுகிறோம்.
இந்த நல்ல காரியத்துக்கு யாரும் எதிர்ப்புச் சொல்ல முடியாது. நியாயமும் இல்லை. காரணமும் இல்லை. ஆகவே, இதுவரை எதிர்ப்புக் கருத்துகள் அதிகமாகச் சொல்லப்படவில்லை. நடக்குமா என்றுதான் சந்தேகப்படுகிறார்களே தவிர, இது நடக்கக் கூடாதது. வேண்டாதது என்று யாரும் சொல்லவில்லை. ஆகவே, நடத்த முடியும் என்பதைத் திட்டமிட்டுக் காண்பித்துவிட்டோம்.
நான் உண்மையிலேயே பெருமைப்படுகின்றேன். இந்த உணவையும் கொடுத்துப் பண்பையும் கொடுத்துக் குழந்தையிலிருந்து அவர்களுக்கு உடற்பயிற்சியையும் கற்றுக் கொடுத்தோமானால் எதிர்கால சந்ததிகள் எந்த நாட்டு விளையாட்டுக்காரர்களோடும் போட்டி போடக் கூடிய அளவுக்கு அவர்கள் வளர முடியும்.
அறிவியிலிலே அவ்வாறு போட்டிபோட வேண்டுமென்றாலும் அங்கே போட்டிபோட அந்தத் திறமையைப் பெற முடியும் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லி, அங்கே தூரத்திலே கை ஆட்டுகிறவர்களுக்கு என் நன்றியைச் சொல்லி இந்த வாய்ப்பைத் தந்ததற்கு நான் நன்றி கூறி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க என் தாய் எனக்கு இந்த ஆயுளைத் தந்ததற்காக என் அன்னையை நான் வணங்கி இது வெற்றி பெறவேண்டும். இது மக்களுக்கு நல்லதாக அமைய வேண்டும் என்று கூறி இதைத் தொடங்கி வைக்கின்றேன்.''
வள்ளற் பெருமான் பசியால் ஏற்படும் முப்பத்தாறு துன்பங்களை பட்டியலிட்டு எழுதியிருப்பதைப் படிக்கும்போது நம் நெஞ்சம் உருகும். பசியாற்றுவதற்காகவே சத்திய தரும சாலையை தொடங்கிய பெருமை வள்ளலார் வடலூரில் தொடங்கிய அமைப்பாகும். அன்று தொடங்கிய பசியாற்றுவித்தல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
தின செய்தி நாளிதழில் இன்று (22.06.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 40)
‘‘எளியோர் கண்ணீரைத் துடைப்பதில் இறைவன் இருக்கிறான்..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
நூற்றிரண்டு ஆண்டுகள் வாழ்ந்த நுண்ணறிவாளர் மூதறிஞர் பேராசிரியர் அடிகளாசிரியரவர்கள் உரை நூல்கள், பதிப்பு நூல்கள், படைப்பிலக்கிய நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் என்ற வகையில் அறுபத்தெட்டு நூல்களைப் படைத்த அறிஞராவார். அத்தகைய அறிஞர் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் மேல் இயற்றிய இலக்கியத்தின் பெயரே ‘பல்துறைப் பலவினம்' என்பதாகும். அச்சுவாகனம் ஏறாத இவ்விலக்கியத்தைப் பற்றிய பல்வேறு சிந்தனைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் அவர்கள், தமிழ்மொழிக்குச் செய்துள்ள தொண்டுகளுள் மாபெருந் தொண்டாக அமைந்திருப்பது தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவியதாகும். அவர் அவ்வாறு நிறுவிய தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சுவடிப்புலத்தில் அவரும் பேராசிரியராகப் பணியாற்றினார். புரட்சித் தலைவரின் சத்துணவுத் திட்டத்தைக் கேட்டுப் பெரிதும் நெகிழ்ந்தார். சிறார்களுக்கு அன்னமிடுவதே சீரிய பணி என்றும் உருகினார். புரட்சித் தலைவரைப் போற்றிய பேராசிரியரின் நூல்கள் 2019ஆம் ஆண்டில் நாட்டுடமையாக்கப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழியல் துறை பேராசிரியர் முனைவர் ஆர்.சிவபெருமான் புரட்சித் தலைவர் நூற்றாண்டு மலரில் இதனைக் குறித்துள்ளார்.
‘‘அற்றார்தம் அழிபசியைத் தீர்த்தல் தானே
அரும்பொருளை வைக்கின்ற இடமா மென்ற
கற்றார்சொல் திருக்குறளைக் கற்றாய் போலும்,
கருணைமிகும் எம் அமைச்ச! இராமச் சந்திர!
அற்றாரின் அழிபசியை மதியத் தின்கண்
அகற்றுதற்கு நீயெண்ணி, அருமை சான்ற
உற்றார்போல் நல்லுணவை உண்பிக் கின்றாய்;
உலகத்தில் பண்ணன் இன்றும்
உதித்திட்டானோ!”
மேற்பாடலின் கீழ் குறிப்பு என்னுந் தலைப்பின் கீழ் அடிகளாசிரியரவர்கள், ‘‘தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களை இதுவரை நான் கண்டதில்லை. அவர்களும் என்னைப் பார்த்ததில்லை. எனினும், அவர்கள் செய்து வரும் அரும் பணிகளை எண்ணி மகிழ்வேன். அவ்வெண்ணமே இப்பாடலை எழுதத் தூண்டிற்று. இங்கே பண்ணன் என்பான் சிறுகுடிக்கிழான்பண்ணன் என்பவனாவான். இவன் பெரிய உணவுக் கொடையாளி; இவனைச் சிறப்பித்துச் சோழன் கிள்ளிவளவனே பாடியுள்ளார்'' என்று எழுதியுள்ளார்.
இந்தநிலையில், 18.07.1982 அன்று சென்னை இராஜாஜி மண்டபத்தில் நடைபெற்ற முசுலிம் மகளிர் சேவா சங்கத்தினர் ஏழை விதவைப் பெண்களுக்கு உதவி வழங்கும் விழாவில் புரட்சித்தலைவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியைக் காண்போம்
‘‘இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை நான் மனதாரப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இங்கே நபிகள் (ஸல்) அவர்களைப் பற்றி மாண்புமிகு அமைச்சர் கிருஷ்ணசாமி கூறினார்கள்.
இசுலாத்தின் ஈகைப் பண்பு மிக உயர்ந்த கொள்கையாகும். உருவ வழிபாடற்ற ஒரு முறையைக் கடைப்பிடிக்கும் இசுலாமிய சமுதாயம் எந்த அளவு ஒற்றுமையாக இணைந்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது.
திருக்குரானில் சொல்லப்பட்டிருக்கிறதை ஒன்றிரண்டை நான் குறிப்பிடுவது எனக்கு நினைவுபடுத்திக் கொள்வதாக அமையும். மறந்தவர்களுக்கும் நினைவுபடுத்துவதாக அமையும் என நான் கருதுகிறேன்.
ஒவ்வொருவரும் தனது சொத்தில் மொத்தத்தில் என்று நான் அடைமொழியாகச் சேர்த்துக் கொள்கிறேன். இரண்டரை சதவிகிதத்தை ஏழை, எளியவர்களுக்கு ஒதுக்கித் தரவேண்டும் என்பது ஒரு சித்தாந்தமாகக் கூறப்பட்டிருக்கிறது.
நோன்பிருப்பதை வெறும் நோன்பு என்று மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அவர் உண்ணாமலிருக்கும் பகல் நேர உணவான அந்த வேளை உணவு இன்னொருவருக்குப் பயன்படப்போகிறது என்கிற சித்தாந்தத்தை நாம் மறந்துவிடக்கூடாது. நாங்கள் இசுலாமிய சமுதாயத்தைப் பாராட்டக் காரணம் ஏழை பணக்காரன் என்பது இயற்கையாக ஆண்டவன் படைப்பில் இல்லை. அவரவர் பொறுப்புதான். அவரவர் செய்கின்ற துணிச்சலான காரியத்தினால்தான் அந்த இடத்தை எய்துகிறார்கள். அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் சட்டப்படி ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். ஒரு இசுலாமியனாக இருப்பானானால் அதைச் செய்தாக வேண்டும் என்றிருப்பதை எண்ணி எண்ணிப் பாராட்ட வேண்டும்.
அந்தக் கொள்கையைச் சொன்னவர்களுக்குக் கடைப்பிடிப்பவர்களுக்கு, கடைப்பிடித்து வருபவர்களுக்குத் தலைகுனிந்து கைக்கூப்பி வணக்கம் தெரிவிக்க விரும்புகிறோம். இங்கே ஏழைகளுக்குத் துணிகள் கொடுக்க இருக்கிறார்கள். மானத்தை மறைக்க இலவசமாகத் துணிகள் கொடுக்க இருக்கிறார்கள். என்றைக்கு அவரவர்களால் வாங்க முடிகிறதோ அன்றுதான் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு அடையாளமே தவிர, இன்னொருவருடைய கையை எதிர்பார்த்து வாழும் வரையில் இந்தியா பரிபூரண சுதந்திரம் அடைந்ததாக யாருமே சொல்ல மாட்டார்கள்.
அமரர் காந்தி சொன்னதில்லை. நேரு சொன்னதில்லை, இந்திராகாந்தி அம்மையாரும் சொன்னதில்லை. லால்பகதூர் சாஸ்திரி சொன்னதில்லை. அபுல்கலாம் ஆசாத் சொன்னதில்லை. மூதறிஞர் இராஜாஜி சொன்னதில்லை. அய்யா அவர்கள் சொன்னதில்லை. அமரர் அண்ணா சொன்னதில்லை. இதை நான் எதற்காகக் குறிப்பிடுகிறேனென்றால், இந்த வாய்ப்பை நாம் பெற்றாக வேண்டும்.
எந்த ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நம்பிக்கைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் சமத்துவத்தோடு, சரி நிகராக வாழ்க்கையிலே ஒரு மனிதன் அவசியத் தேவைகளையாவது பிறருடைய தயவில்லாமல் பெற்று வாழ்கின்ற நிலைமையை உருவாக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அந்தக் கடமையை இன்னும் யாரும் முழுமையாகச் செய்துவிடவில்லை என்பதை இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.
இங்கே மாண்புமிகு அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் பேசும்போது, 63 இலட்சம் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கும் காரியத்தை முதலமைச்சர் செய்துள்ளார் என்று சொன்னார். யாருடைய பணம்? என்னுடைய தனிப்பட்ட பணமல்ல. மக்களுடைய பணம், மக்களுடைய வரிப்பணத்திலிருந்து, மக்களுக்குச் செலவு செய்கின்ற பணம் இதை உண்டு வளருகின்றவர்கள் எந்த ஒரு தனிமனிதனுக்கும் கட்டுப்பட்டவர்களல்ல கட்டுப்பட வேண்டியவர்களல்ல. அவர்கள் நன்றிக்கடன் செலுத்த எந்தத் தனிப்பட்ட மனிதனையும் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்தப் பணம் தமிழக மக்களுடைய பணம் என்றால் தமிழக மக்கள் தமிழ்நாட்டின் சொத்து. எனவே, தமிழ்நாட்டிற்குத்தான் இந்தக் குழந்தைகள் வளர்ந்து எதிர்காலத்தில் நன்றியைச் செயல் மூலம் காண்பிக்க வேண்டுமே தவிர, யாருக்கும் அடிமையாகக் கைகட்டி நன்றி காட்டவேண்டிய அவசியமில்லை. நாங்கள் ஒரு குழு அமைத்திருப்பது உங்களுக்குத் தெரியும். அதில் ஒரு செய்தி வந்திருக்கிறது. 12, 13 வயதுச் சிறுவர்கள் சில வீட்டில் வேலை செய்கிறார்கள். எதற்கு வேலை செய்கிறார்கள் என்றால், சம்பளத்திற்காக அல்ல. ஒரு வேளைச் சாப்பாட்டிற்காக, தாய் தந்தையர்கள் வேலைக்குப் போகும்போது ஒரு வேளை உணவுக்காக வேறு வீடுகளுக்கு அனுப்புகிறார்கள்.
இந்த வயதில் ஒரு வேளை உணவுக்காக வேலை செய்துகொண்டு எங்களுக்கு எங்கே சாப்பாடு என்று கேட்கிறார்களாம். இல்லை உங்களுக்கு இல்லை. குழந்தைகளுக்குத்தான் என்று சொன்னால், நீங்கள் எம்.ஜி.ஆரிடம் சொல்லுவதில்லை. எம்.ஜி.ஆரிடம் சொல்லுங்கள், எங்களுக்கும் சாப்பாடு கிடைக்கும் என்கிறார்களாம்.
இதை நான் குறிப்பிடக் காரணம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பெரியது. ஆனால், அரசுக்கு இருக்கும் சக்தி மிகமிகச் சிறியது.
ஒரு கொள்கையை எடுத்து நிறைவேற்றும்போது திட்டங்களைப் பிரித்துப் பார்க்க முடியாது. முஸ்லிம் சமுதாயக் குழந்தைகள் பகலில் உண்ணக்கூடாது என்று சொன்னால், அவர்களுக்காக மாற்றி வைக்க வேண்டியிருந்தது. மாலை 7 மணிக்கு மேல் அவர்களுக்குச் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.
அதற்காக அந்தத் தாய்மார்கள் சமையல் செய்பவர்கள் 3 மணி நேரம் அதிகமாக இருந்து அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விட்டு செல்ல வேண்டி இருக்கிறது. அதற்காக அவர்கள் ஓவர்டைம் கேட்கவில்லை. கேட்கமாட்டார்கள்.
ஆனால், இப்போது எங்கு பார்த்தாலும் ஒரு நாட்டிற்குத் தொண்டு செய்பவர்கள் வேலை செய்யும்போது பல பிரச்சினைகளில் ஏலம் போடுகிறார்கள். தன்னுடைய கடமையை ஏலம் போடுகிறார்கள். தன்னுடைய நாட்டிற்குச் செய்ய வேண்டிய தியாக உணர்வை விலை பேசுகிறார்கள்.
அவைகளையெல்லாம் நீக்க வேண்டுமானால் படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சாதாரண மக்களுக்கு அல்ல, அப்படிப்பட்ட பணியிலிருப்பவர்களுக்குக் கூட எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். இன்றைக்கு
500 தாய்மார்களுக்குத் துணிகளை இந்த அமைப்பு வழங்க இருக்கிறது. 100 ஆண்டுக்காலம் பணி செய்யும் அமைப்பு இதனைச் செய்கிறது என்றால், இதிலும் பாதிப்பங்கு சுமார் 20 லிருந்து 30 ஆயிரம் ரூபாயைத் தமிழக அரசு ஏற்றுக் கொடுக்கிறது.
கொடுக்கிறது என்றால், இந்தத் தாய்மார்களுக்கு மாதம் 15 ரூபாய் தருகிறது என்றார்கள். அந்தப் பணத்துடன் அரசு முதியோர்களுக்குத் தரும் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொடுங்கள் என்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சொன்னேன். உடனே மற்றவர்கள், சங்கத்திலிருப்பவர்களுக்கு 50 ரூபாய் எங்களுக்கு 35 ரூபாய் 25 ரூபாய்தானா என்று போட்டிக்கு வந்துவிடக்கூடாது.
சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு ஒரு ரூபாய், 2 ரூபாய்கூட கிடைக்கலாம். இருக்கின்ற சூழ்நிலையை வைத்து, நமக்கிருக்கிற சக்தியை வைத்து வாழ்க்கையை எப்படி நடத்திக் கொள்ள வேண்டுமோ அப்படி நடத்திச் செல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று அமரர் அண்ணா எங்களுக்குச் சொன்னதன் விளைவாகத்தான் இன்றைய தினம் முசுலிம் பெரியவர்களைச் சந்திக்கும்போது நெஞ்சாரத் தழுவ முடிகிறது. அது ஒரு மதத்தினுடைய கோட்பாடு-நம்பிக்கையாக இருந்தாலும் அது எங்களுக்கும் பொருந்துகிறது. ஏனென்றால், எங்களுக்கும் ‘ஒன்றேகுலம்தான் ஒருவனே தேவன்தான்'.
எங்கெங்கே அன்பைக் காணுகிறோமோ, பண்பைக் காணுகிறோமா அங்கெல்லாம் இறைவனைக் காணுகிறோம். ஆகவேதான், ஒரு மனிதன் வேறுபட்ட உணர்ச்சிக்கு காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாக இடமில்லாமல் இருக்க வேண்டுமென்றால், உணவு பிரச்சினை இருக்கக்கூடாது. இருக்க வீடில்லை என்ற பிரச்சினை இருக்கக்கூடாது. செய்ய தொழில் இல்லை என்ற பிரச்சினை இருக்கக்கூடாது.
அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 லிருந்து வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கும் இந்த உணவுத் திட்டத்தை நகரத்திற்கும் விரிவாக்க திட்டமிட்டிருக்கிறோம். நாம் ஆரம்பித்திருக்கிற திட்டம் ஆங்காங்கே செயல்படும் அனுபவத்தை வைத்து நகரங்களிலும் செயல்படுத்த இருக்கிறோம்.
சில இடங்களில் தாய்மார்கள், ஏழைக் குழந்தைகளையும் அனுப்பிவிட்டுப் பெரியவர்களும் வந்து அமர்ந்து விடுகிறார்கள். இந்தத் துயரத்தையும் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஏழை, பணக்காரன் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டு, சாதி மதத்திற்கு அப்பாற்பட்டுக் காரியத்தைச் செய்தால் மற்ற மாநிலமும் சத்துணவுத் திட்டத்தினைப் பின்பற்றும்.''
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
தின செய்தி நாளிதழில் இன்று (29.06.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 41)
‘‘ஈரமும் வீரமும் இணைந்த புரட்சித்தலைவர்..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
-----
அப்போது மழைக் காலங்களில் இயற்கை சீறியபோதெல்லாம் ஏழை எளிய மக்கள் இன்னல்களுக்கு இரையானார்கள். வெள்ள நீரில் மக்கள் தவிக்கும் நிலை உருவானால் வினாடியும் தாமதிக்காமல், அரசு என்ன செய்யப் போகிறது என்று காத்திராமல், ஏதோ திருமண வீடுபோல புரட்சித்தலைவரின் வீட்டில் சமையல் தொடங்கிவிடும். ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சமைத்து, அவற்றை அண்டா அண்டாவாக நிரப்பி அல்லற்பட்டவர்களுக்கு நேரடியாகக் கொண்டு சென்று, பொட்டலங்களாகக் கட்டி வழங்காமல், விருந்துபோல பரிமாறிச் சாப்பிடச் சொல்லி அவர்கள் பசியாறுவதைக் கண்டு மகிழ்ந்தவர் மக்கள் திலகம். இந்தச் செயற்பாடுகளைப் பின்னணியில் இருந்து மேலாண்மை செய்தவர் அருளாளர் ஆர்.எம்.வீ.
அப்பொழுதெல்லாம் ‘மழை பெய்து வெள்ளம்' என்றால் அங்கே புரட்சித்தலைவர் சாப்பாடு போடுவது என்பது நிலையான நிகழ்ச்சியாகவே ஆகிவிட்டது. அதைப் போலவே எங்குக் குடிசைகள் தீப்பற்றி எரிந்தாலும் அங்கே உடனே உணவு உள்ளிட்ட உதவிகளைச் செய்ய புரட்சித்தலைவர் தவறியதே இல்லை.
அந்நாளில் மலிந்திருந்த ரிக்ஷாத் தொழிலாளர்களுக்கு மழைக் கோட்டு வழங்கியவர் வள்ளல் எம்.ஜி.ஆர். என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதன் பின்னணி சுவையானது என்று அருளாளர் விளக்கியதை எழுத்துச் செம்மல் இராணி மைந்தன் வரைந்து காட்டியதை அப்படியே எடுத்தாள்கிறேன்.
ஒருநாள் புரட்சித்தலைவர் காரில் போய்க் கொண்டிருந்தார். மழைக் காலம் அது. வழியில் ஒரு நெகிழ்ச்சியான காட்சியைக் கண்டார். ரிக்ஷாவில் அமர்ந்து செல்பவர் மழையில் நனையாமல் இருக்கையின் மேலிருந்த படுதாவுக்குள் பத்திரமாக இருக்க, ரிக்ஷாவை ஓட்டிச் செல்லும் தொழிலாளி சொட்டச் சொட்ட நனைந்து சென்ற காட்சி புரட்சித்தலைவரைத் துணுக்குற வைத்தது.
வீட்டுக்குள் சென்றதும் தன் தமையனார் எம்.ஜி.சக்கரபாணியிடம் தான் கண்ட காட்சியை உருக்கமாக விவரித்தார்.
‘‘ரிக்ஷாக்காரன் மழையில் நனையாமல் எப்படி வண்டி ஓட்ட முடியும்?'' என்று இயல்பாகக் கேட்டார் சக்கரபாணி.
‘‘ஏன்... இதற்கு வேறு வழியே இல்லையா?'' என்று துடிப்போடு எம்.ஜி.ஆர். கேட்க, நகைச்சுவையோடு பேசுவதில் வல்லவரான அவருடைய அண்ணன், ‘‘ரிக்ஷாக்காரன் மழைக்கோட்டு போட்டுக் கொண்டா ஓட்டுவான்'' என்று பேச்சுவாக்கில் சொல்ல, எம்.ஜி.ஆருக்குப் பொறி தட்டியது.
மழையில் நனையாமல் ரிக்ஷா ஓட்ட ரிக்ஷாத் தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வழங்குவது என்ற எண்ணம் அந்த வினாடியே அவர் மனத்தில் உருவாகிவிட்டது.
உடனே, அருந்துணைவரான ஆர்.எம்.வீயை அழைத்துத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். ஆர்.எம்.வீக்கோ, சட்டென்று ஏதும் புரியவில்லை. ‘‘மழைக்கோட்டு தயாரிக்க எவ்வளவு செலவாகும் என்று விசாரியுங்கள். புதுமையாக ஏதும் செய்ய முடியுமா என்றும் யோசியுங்கள்'' என்றார் புரட்சித்தலைவர்.
புரட்சித்தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்துப் பழகிவிட்ட ஆர்.எம்.வீ. உடனே செயலில் இறங்கினார். சிக்கனமாக இதைச் செய்ய முடியுமா என்று விசாரித்தார். கருத்து வேகமும், கணக்கிடும் திறமையும் கொண்ட ஆற்றலாளர் ஆர்.எம்.வீ.
பிளாஸ்டிக் என்ற பொருள் அறிமுகமாகியிருந்த நேரம் அது. தேவி தியேட்டர் அதிபர் இராஜகோபால் செட்டியாரின் சகோதரர்கள் அப்போது பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கியிருந்தார்கள். அவர்களிடம் ஆர்.எம்.வீ. உடனே விசாரித்தார். அந்நாளில், பத்து ரூபாய்க்குள் ஒரு பிளாஸ்டிக் மழைக்கோட்டை தயாரிக்க முடியும் என்று தெரிய வந்தது. புரட்சித்தலைவரிடம் சொன்னார். கிட்டத்தட்ட ஆறாயிரம் மழைக்கோட்டுகள் தயாராயின. நுங்கம்பாக்கம் ஏரிப் பகுதியில் இப்போது வள்ளுவர் கோட்டம் அமைந்த இடத்தில் மிகப்பெரிய பந்தலிட்டு ரிக்ஷாத் தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வழங்கி மகிழ்ந்தார். இப்படியெல்லாம் நெஞ்சின் ஈரத்தை ஊற்றாகக் கொண்டிருந்தார் புரட்சித்தலைவர். பின்னாளில், அவர் முதலமைச்சராக மாறி அரசாண்ட பெருமிதம் அனைவரும் அறிந்தது.
முதலமைச்சராக இருந்த, புரட்சித்தலைவர் நலிந்த நிலையில் இருந்தபடியே, வழங்கிய விடுதலை விழாச் செய்தி, குறிப்பிடத்தக்கது.
1987ஆம் ஆண்டு விடுதலைத் திருநாளையொட்டி நியூயார்க் நகரிலிருந்து அவர் வெளியிட்ட விடுதலை விழாச் செய்தியின் ஒரு பகுதி...
‘‘நான் வணங்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே! என்னை வழிநடத்திச் செல்லும் பெரியோர்களே! என் இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புக்களே! இந்தியச் சுதந்திரத் திருநாளையொட்டி உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலை பெற்ற இந்தியா இன்று தனது நாற்பதாண்டு நிறைவை விழாவாகக் கொண்டாடுகிறது. இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்த இலட்சக்கணக்கான தியாகிகளுக்கு இந்நாளில் நமது அஞ்சலியைக் காணிக்கை ஆக்குவது நமது நீங்காக் கடமை ஆகும்.
சுதந்திர இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய சக்தியாக எழுந்து வருகிறது. சமாதான சகவாழ்வு என்கிற மிகப்பெரிய குறிக்கோளுக்கு நமது நாடு குரல் கொடுத்து வருகிறது. கடந்த நாற்பதாண்டுகளில் விவசாயம், தொழில் வளர்ச்சி, கல்வி, பாசனம், மின்உற்பத்தி, போக்குவரத்து போன்ற எல்லாத் துறைகளிலும் பெருத்த முன்னேற்றம் கண்டுள்ளோம். என்றாலும் வறுமை, அறியாமை, சமூகக் கொடுமைகள், வேலையின்மை போன்ற தீமைகளுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்.
மைய, மாநில அரசுகள் நிறைவேற்றும் வளர்ச்சித் திட்டங்கள் சரிவரச் செயல்படச் செய்வதும், அவற்றின் பயன் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வது நமது ஆக்கப்பூர்வமான கடமைகள் ஆகும்.
ஒற்றுமையும், முயற்சியும், உழைப்பும் இல்லாமல் முன்னேற்றம் இல்லை என்பதை முன்னேறிய நாடுகளின் வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
இந்நிலையில், நமது ஒன்றுபட்ட சக்தியின் வலிமையைக் குலைக்கும் வகையில் மதவெறியும், சாதிவெறியும், வன்முறைவெறியும் ஆங்காங்கே தலைதூக்கி வருகின்றன. இந்தத் தீய சக்திகளை அடியோடு ஒழிக்க நாம் தொடர்ந்து போராட வேண்டும். இந்தப் போராட்டத்தின் வெற்றியில்தான் நாட்டின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்த ஆண்டு விடுதலை விழாவை ஓரளவு நிம்மதியுடன் கொண்டாடும் நிலை உருவாகியுள்ளது எனலாம்.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக மக்கள் உள்ளத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இது நமக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருகிறது.
இந்நிலை காண, அண்ணாவின் பெயரால் அமைந்த தமிழக அரசு சிறிதும் தொய்வின்றி கடந்த சில ஆண்டுகளாகப் பெரு முயற்சி செய்து வந்ததைத் தமிழகம் அறியும்.
நமது உள்ளத் தவிப்பை உணர்ந்த இந்தியப் பிரதமர் அன்னையார் அவர்கள், தீவிர முயற்சி எடுத்து அயராது பேச்சுவார்த்தை நடத்தி ஓர் உடன்பாடு கண்டுள்ளார். மாபெரும் தேசமான இந்தியாவின் தலைவராகவும், நடுநிலை நாடுகளின் நாயகராகவும், உலக சமாதானக் காவலராகவும் நின்று, பெரும் பொறுப்பை ஏற்று இந்திய-இலங்கை உடன்பாடு கண்டதன் வாயிலாக நமது பிரதமர் அவர்கள் மிகப்பெரிய சரித்திரச் சாதனை நிகழ வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. இந்த உடன்பாட்டின் காரணமாக இந்துமாக்கடல் பகுதியில் அமைதிக்கு உத்தரவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் விளைவாகத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு இலங்கைத் தமிழ்ப்பகுதிகளில் அமைதி ஏற்படுவதையும், அங்குள்ள மக்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி வருவதையும் கண்டு தமிழக மக்கள் பெரிதும் நிம்மதி அடைய வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களைச் சமஉரிமை படைத்தவர்களாக நடத்துவதுதான் இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு உத்தரவாதமாக இருக்கும் என்பதை அங்குள்ள பெரும்பான்மையினர் உணரவேண்டும். மாபெரும் தேசமான இந்தியாவின் நல்லெண்ண முயற்சிக்கு வலிவு சேர்ப்பதே இலங்கையில் வாழ்கின்ற சிங்களர்-தமிழர் ஆகிய அனைவரின் கடமை என்பதையும் இந்நேரத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்த உணர்வுகளோடு தமிழக மக்கள் கூடுதல் உற்சாகத்துடன் நாட்டுக்கான கடமைகளை ஆற்றிட முன்வர வேண்டும். வளர்ச்சித் திட்டங்களையும், சமூக நலத் திட்டங்களையும் வெற்றியுடன் நிறைவேற்றி சீரான வளர்ச்சிக்கு வழிகாட்டும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. சாதி மதப் பூசல்கள், வன்முறைகள், தலைகாட்டாத வகையில் அமைதிப் பூங்காவாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
தேசிய ஒருமைப்பாட்டு முயற்சிகளுக்கு வலிவு சேர்க்கிற பணிகளில் தமிழ்நாடு ஆர்வமுடன் ஒத்துழைப்பு நல்கி வருகிறது. இதே நிலையைத் தொடர்ந்து கட்டிக் காத்திட உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் நாடுகிறேன்.
வன்முறை, வெறித்தனம், வதந்தி பரப்புதல், மக்களைப் பிளவுபடுத்தல் இவற்றையே நோக்கமாகக் கொண்டுள்ள சீர்குலைவுச் சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்போம் என்று இன்று நாம் அனைவரும் சபதம் ஏற்றிடுவோம்!
கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும், ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்.
நாடு இன்றிருக்கும் சிக்கலான சூழ்நிலையில் சிறுபான்மை மக்களின் நலனைக் காத்தும், ஏழை, எளிய மக்களின் உள்ளக் கிடக்கைகளுக்கு உருவம் கொடுத்தும், பயங்கரவாதத்தை எதிர்த்தும், அந்நியச் சக்திகளின் தீய எண்ணங்களை முறியடித்தும், தனது அயராத உழைப்பாலும், சிறந்த இராஜதந்திரத்தாலும் இந்திய நாட்டைக் கட்டிக்காத்துவரும் நமது பிரதமர் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவிப்போம்.
இத்திருநாளில் தேசிய ஒற்றுமை ஓங்கவும், அனைத்து முயற்சிகளுக்கும் நாம் துணையாக நின்று நாட்டையும் மக்களையும் உயர்த்துவோம்.
‘உழைப்பவரே உயர்ந்தவர், உழைப்பே உயர்வு தரும்’ எனும் மூலமந்திரத்தை மனத்தில் இருத்தி, ‘உழைப்பால் நாட்டை உயர்த்திட வாரீர்’ என அனைவரையும் அன்புக் கரங் கூப்பி விடுதலைத் திருநாள் வாழ்த்து கூறி மகிழ்கிறேன்.
வாழ்க சுதந்திரம்! வாழ்க தமிழ்நாடு! வெல்க இந்தியா!
அண்ணா நாமம் வாழ்க!''
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
தின செய்தி நாளிதழில் இன்று (06.07.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 42)
‘‘தாய்க்குலம் செய்த தனித்தவம்..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
===============================
ஆயிரம் பணிகள் இருந்தாலும், சில நேரங்களில், தம் சிந்தனையை சிறு குறிப்பில் பறிகொடுத்துவிடுகிற பழக்கம் புரட்சித்தலைவருக்கு உண்டு. ஒரு முறை நடந்ததை நினைவுகூர்கிறேன். முதலமைச்சரின் செயலாளராக மூத்த ஆட்சிப்பணி அலுவலரான இலட்சுமி நாராயணன் பணியாற்றிய காலமது. எதிலும் படாமல் அகலாது, அணுகாது சிறந்த பணியாற்றியவர். ஆமாம், மகன் என்றால், மகளையும் குறிக்கும். அதுதான் சட்டம் என்கிறார் செயலாளர். அதென்ன திருக்குறள்?
‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாய்' என்பதில் ‘‘ஏன் மகள் என்று சொல்லக்கூடாது?'' என்று கேட்டார். நான் மருண்டு போய் நின்றேன். ‘‘ஈன்ற பொழுதில் மகள் என்று தாயிடம் சொன்னால் அம்மம்மா நான் பட்ட இந்த வேதனையை என் மகளும் பெறக்கூடாது என்ற தாயின் கனிவு ததும்ப மகன் என்றிருந்ததால், மகளுக்கு அந்த பாடில்லை என்று நினைத்தாளாம். அதனால்தான், மகள் என்று சொல்லவில்லை என்று கூறுவார்கள்'' என்று சொன்னேன். ‘‘தாயின் பரிவு அப்படித்தான். நன்றாகச் சொன்னீர்கள்'' என்று பரிவோடு அழைத்து, என் முதுகில் தட்டினார். ‘தாயின் மனம், அப்போதுகூட எவ்வளவு கனிவான மனம்' என்று கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்துக் கொண்டார். ‘‘என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய தாய்மார்களே...'', என்று கூட்டத்தில் அழைக்கும் வழக்கம் அரசியல் தலைவர்களிடம் புரட்சித் தலைவர்தான் முதன் முதலில் தொடங்கினார்.
தாய்மார்கள் எந்த முறையீடுகளைச் சொன்னாலும், அவர் மனம் நெகிழ்ந்துபோய் உடனே செய்து முடிப்பார். தாய்க்குலம் என்ற சொல்லே அவரால்தான் அடிக்கடி கூறப்பட்டது.
தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றிப் பயணம் செய்வதற்கு உதவும் வண்ணம், மகளிர் மட்டும் என்னும் சிறப்புப் பேருந்துகள் கூட ஒரு தாயின் முறையீட்டால் பிறந்தது.
சென்னையில் சாலிக்கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்திற்கு அவர் இட்ட பெயர் அவரது தாயாரின் பெயர்தான். அடையாறில் இருந்த அவரது திரைக் கூடத்தின் பெயரும் சத்யா நிறுவனம்.
தாயை மையப்படுத்திய பாடல் காட்சிகளைக் கொண்டுதான் படிப்பிடிப்பைத் தொடங்கினார். தமிழில் தொடங்கிய வார இதழுக்கு அவர் இட்ட பெயர் ‘தாய்'. இப்படி அன்னைமார் நிகழ்ச்சியில், நெஞ்சம் உருகிய நிகழ்ச்சியாக இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.
மயிலாடுதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. மக்கள் வெள்ளம் அலைமோதியது. எல்லையில்லாத மக்கள் கூட்டத்தில் இடிபாட்டுக்கிடையில் மேடை அருகே தாய்மார் இருவர் காத்திருந்தனர். அவர்கள் இரட்டையர்கள். ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், இருவரும் ஒரே மாதிரி குறை உடைய மாற்றுத் திறனாளிகள்.
இருவருக்கும் கால் ஊனம். கைகளை ஊன்றி தவழ்ந்தபடியே, மேடை அருகே வந்துவிட்டனர். மக்களின் வாழ்த்துகளை ஏற்றவாறு, கையசைத்தபடியே மேடைக்கு புரட்சித்தலைவர் வந்தார். தள்ளுமுள்ளு தாங்காமல் மக்கள் முண்டி வந்தனர். அந்தப் பெரும் நெரிசலில் இருவரும் சிக்கிக் கொண்டனர். இதை எப்படியோ எம்.ஜி.ஆர் கவனித்துவிட்டார். உதவியாளர்களிடம் சொல்லி அவர்களை எப்படியாவது அழைத்து உடனே மேடைக்கு கீழே அமர வைத்தார். அவர்களுக்கு உணவும், குழந்தைகளுக்கு பாலும் தரச் சொன்னார். அந்தத் தாய்மார்கள் இருவரும் புரட்சித்தலைவரிடம், ‘‘எங்கள் கஷ்டத்தை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்'' என்று கண்ணீர் மல்க சொன்னார்கள்.
கூட்டத்தில் பேசி முடித்ததும் அவர்களைக் காண்பதற்காக மேடையில் இருந்து இறங்கினார். அந்தத் தாய்மார்கள், ‘‘வறுமையால் துன்பப்படுகிறோம், எங்களுக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் நாங்கள் தையல் தொழில் செய்து பிழைத்துக்கொள்வோம். அதற்கு உதவி பண்ணுங்க'' என்று கெஞ்சும் குரலில் கேட்டனர். உடனே, இரண்டு தையல் மெஷின்களை புரட்சித்தலைவர் வாங்கி வரச் சொன்னார்.
தன்னிடம் உதவி வேண்டுபவர்கள் தெளிவாகச் சொல்லாவிட்டாலும் அவர்களது தேவை என்ன என்பதை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு உதவும் பொன்மனம் படைத்தவர் புரட்சித்தலைவர். உடனே, தையல் மெஷின்களை வாங்கி வருமாறு சொன்ன மறுகணம் ஓடோடிச் சென்ற உதவியாளர்களை திரும்ப அழைத்து, ‘‘காலில் மிதித்து தைக்கும் மெஷின் இல்லை. கையில் இயக்கி தைக்கும் மெஷின்'' என்று தெளிவாகச் சொல்லி அனுப்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு புது தையல் மெஷின்கள் காரில் வந்து இறங்கின. பிறகு, தையல் மெஷின்களை அவர்களுக்கு எம்.ஜி.ஆர். வழங்கினார்.
அதைப் பெற்றுக் கொண்ட இருவரும் கண்ணீருடன், ‘‘ஐயா, நீங்க கண்கண்ட தெயவம்'' என்றனர். அவர்களோடு தம் கண்ணீரையும் துடைத்துக் கொண்டு, ‘‘நான் சாதாரண மனுஷன்தாம்மா, தெய்வம் இல்லை. இந்த நிலைமையிலும் உழைத்துப் பிழைக்கணும்னு நினைக்கிற நீங்க நல்லா இருக்கணும்!'' என்று சொல்லி வாழ்த்திவிட்டு, அவர்களுக்கு ஒவ்வொருவர் கையிலும் ரூ.2,000 அன்பளிப்பாகக் கொடுத்தார்.
எத்தனையோ நிகழ்ச்சிகள் இவ்வாறு நடந்தன. தாய்மாரிடம் காட்டிய பரிவுக்கு வேறொரு நிகழ்ச்சியையும் நண்பர்கள் கூறினர். புரட்சித்தலைவரின் நெருங்கிய நண்பரும் படத் தயாரிப்பாளருமான சாண்டோ சின்னப்பா தேவரின் இல்லத் திருமணம் கோவையில் நடைபெற்றது. அதில் புரட்சித்தலைவர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசளித்துவிட்டு வந்தார்.
இது நடந்துக்கொண்டிருக்கும்போதே திடீரென தனது உதவியாளர்களைப் பார்த்தார். கூட்டத்தில் குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி விட உதவியாளர்களை மீண்டும் பார்த்தார். புரட்சித்தலைவர் பார்வையின் பொருள் அவர்களுக்குப் புரியும். அமைதியாகக் கூட்டத்தில் மக்களோடு கலந்த உதவியாளர்கள், குறிப்பிட்ட அந்த இடத்திற்குச் சென்றனர். அங்கிருந்த ஓர் இளைஞரைப் பிடித்தனர். அங்கேயே அந்த இளைஞரை நிறுத்தி வைக்குமாறு எம்.ஜி.ஆர். குறிப்புச் செய்தார்.
அந்த இளைஞரை உதவியாளர்கள் பின்னர் அழைத்து வந்தனர். ‘‘பெண்கள் நிரம்பிய கூட்டத்தில் நீ எப்படி நடந்து கொள்கிறாய்? உன்னுடைய தாய், தமக்கை அல்லவா அவர்கள்?'' என்று கேட்டவாறே இளைஞரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார் புரட்சித்தலைவர். பொறி கலங்கிப்போய் நின்ற இளைஞரிடம், ‘‘இனிமேல் இப்படி நடக்கக் கூடாது'' என்று ஆத்திரம் பொங்கக் கடிந்து கொண்டார். ‘‘சத்தியமா இனி இப்படி நடந்துக்கொள்ள மாட்டேன் தலைவரே. என்னை மன்னித்து விடுங்கள்.'' என்று காலில் விழுந்து கெஞ்சிய இளைஞரிடம், ‘‘இனிமேல் என் கூட்டம் எங்கு நடந்தாலும் உன்னை நான் பார்ப்பேன். கூட்டத்தை நீயே ஒழுங்கு செய்யும் வேலையைச் செய்ய வேண்டும்'' என்று கூறியனுப்பினார். இப்படி தாய்க்குலத்திற்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்ற மனம் கொண்டவர் புரட்சித்தலைவர்.
எங்குச் சென்றாலும் தாய்மார்கள்தான் தன்னை வாழ்வித்தவர்கள் என்ற அடிப்படையில், தாயையும், உடன் பிறப்பையும், தலைவர் அண்ணாவையும் மூன்று தொடர்கள் அமைந்த கண்ணியாக பேச்சைத் தொடங்குவார்.
மகளிர் மாட்சியை மதித்த மனத்தோடு அவர் ஆற்றிய பாரதியார் நூற்றாண்டு தொடக்க விழாச் சொற்பொழிவின் சில பகுதிகளைக் காணலாம்...
‘‘நேற்றைய நிகழ்ச்சியையும் இன்றைய நிகழ்ச்சியையும் எடை போட்டுப் பார்க்க வேண்டும். நேற்றுப் பேசிய பெண்களின் பேச்சு போராட்டத்திற்குத் தயாராக இருந்தது. இன்று இங்கே பேசிய ஆண்களின் பேச்சு, சமாதானத்துக்கு வழிவகுப்பதாக இருந்தது.
நேற்று எழுச்சியுடன் நடை பெற்ற மகளிர் பேரணியை ஊர்வலம் என்று சொல்வதா? பேரணி எனச் சொல்வதா? போராடச்செல்லும் வீராங்கனைகளின் அணிவகுப்பு என்று சொல்வதா? என்று எண்ணிப்பார்க்கும் போது எந்தப் பெயர் சொல்லி அழைத்தால் பொருத்தமாக இருக்குமோ அந்தப் பெருமைக்கு வழிவகுத்த அந்த வீராங்கனைகளுக்கு நான் தலை வணக்கம் செலுத்துகிறேன்.
அவர்களை ஊர்வலத்தில் கலந்துகொள்ள அனுமதித்த அவர்களது குடும்பத்து ஆண்களுக்கு நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எவ்வளவு பெரிய நம்பிக்கையில் பெண்களை அவர்கள் அனுப்பியுள்ளார்கள் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால் அவர்களது தகுதியை உணர முடியும்.
என் வாழ்நாளில் இதுபோன்ற ஊர்வலத்தை இதுவரை நான் கண்டதில்லை. அதிகப் பொதுமக்களும் அரசில் வேலை செய்யும் அதிகாரிகளும் தங்களை ஊர்வலத்தில் இணைத்துக்கொண்டு சில கிலோமீட்டர் தூரம் நடந்து வரும் நிகழ்ச்சியை இதுவரை நான் கண்டதே இல்லை. நேற்று, வங்கியில் பணிபுரிவோர், தனிப்பட்ட மகளிர் அனைவரும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று சட்டம் எதுவும் போடவில்லை. அவர்கள் தாங்களாகவே வந்து கலந்து கொண்டது, எதிர் காலத்தைப் பற்றி நம்பிக்கை தரும் வகையில் அமைந்திருக்கிறது.
நேற்று செல்வி ஜெயலலிதா அவர்கள் இங்கே ஒரு பயங்கரமான கருத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றார். அது பத்திரிகைகளில் எல்லாம் வந்திருக்கிறது. ‘‘வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்துபவர்களை தூக்கில் போட வேண்டும்'' என்று சொன்னார். அதையும் உடனே போடவேண்டுமாம், காலதாமதம் கூடாதாம். கருணை மனு போடுவதற்குக் கூட நேரம் தரக்கூடாதா? என்ன கோபம்? என்ன ஆத்திரம்? நேற்று இதுபற்றிச் சிந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.
திருமணம் செய்து கொள்ள வரும் ஆண்கள், தட்சணை கேட்பது என்றால் அது நியாயமில்லை. நான் சொல்வதெல்லாம் பெண்கள் ஆண்களிடம் தட்சணை கேட்க வேண்டும் என்பதுதான்.
‘‘நான் படித்தவள்; பணியாற்றுகிறேன்! எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்?'' என்று பெண்கள் கேட்க வேண்டும். ஸ்ரீதனம் என்கிறார்கள். ஸ்திரீ தனமா, ஸ்திரீ தானமா, எது எப்படி ஆயிற்று என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பெண்களைத் தானமாகக் கொடுத்து, சொத்துகளையும் கொண்டு செல்கிறார்கள். அப்படிக் கொண்டு செல்பவர்கள் பெண்களை வாழ வைக்க வேண்டாமா? அரைப் பவுன் நகை குறைந்து விட்டது என்பதற்காக ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ளும் நிலை வந்துவிட்டால், அதை அனுமதிக்கலாமா?'' என்று தாய்க்குலத்துக்கான குரலாக ஒலித்தார் புரட்சித்தலைவர்.
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
தினசெய்தி நாளிதழில் இன்று (13.07.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்
(பகுதி -43)
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
===============================
சிந்தனைக் கிளைகளில்தான் சீர்திருத்தக் கனிகள் கிடைக்கும் கிரேக்க மாமேதை அரிஸ்டாடில்தான் அறிவுத்துறைகள் அனைத்திலும் ஆழமாகத் தோய்ந்து ஆராய்ச்சிகள் நடத்தியவர். அவருடைய நூல்களே ஐரோப்பிய அறிவு வளர்ச்சியின் அடி நிலைகளாகும். அதனாலேயே ஐரோப்பியர்கள் அவரையே தம் இனத்திற்கு கிட்டிய பேரறிவுப் பிழம்பாகப் போற்றுகிறார்கள். மனிதனுடைய சிறப்பியல்பு எதுவாக இருக்கும் என்பது பற்றி நல்லறிஞர் அரிஸ்டாடில்தான் முதலில் ஆராய்ந்தார். ‘‘மனிதன் சிந்தனை செய்யும் திறத்தால் சிறப்படைகிறான்'' என்று முடிவுரைத்தார்.
நாம் நாள்தோறும் எளிதாகச் சொல்லும் ‘மனிதன்' என்னும் சிறு சொல்லும் ஆழ்ந்த பொருளைக் காட்டுகிறது. மனிதன் என்பதன் வேர்ச்சொல்லான ‘மன்' என்பதன் பொருள் சிந்தித்தல் என்பதாகும். ஆகவே, சிந்திப்பவனே மனிதன் என்று கருத வேண்டும்.
ஆனால், விழித்திருக்கும் நேரம் முழுவதும் இது நடைபெறுவதில்லை. இடையிடையே நாம் ஏதேனும் ஒரு பொருளை அறிய விரும்புவதும் ஏதேனும் ஒரு செயலைப் பற்றி முடிவு செய்ய வேண்டியதும் நேர்கிறது. அப்பொழுது நாம் அவற்றில் நம்முடைய மனத்தை அதிக நேரத்தை நிலைத்து நிற்கும்படிச் செய்கிறோம். ஆனால், நாம் சிந்திக்கும் முறையில் நம்முடைய மனம் அவற்றில் அதிக நேரம் ஆழ்ந்துவிட வேண்டிய தேவையில்லை. நாம் அறிய வேண்டிய பொருளைப் பற்றியோ முடிவு செய்ய வேண்டிய செயலைப் பற்றியோ நுழைந்து ஆராயப் புகுந்தால் மட்டுமே நம்முடைய மனம் நெடு நேரம் அவற்றில் நிற்க வேண்டிய நிலை உண்டாகும். ஆனால், நாமோ காத்திருக்காமல் பலவற்றை விரைந்து முடிவு செய்து விடுகிறோம்.
நாம் நன்றாக அறிந்த ஒரு நிகழ்வை நினைவில் கொள்ளலாம். இங்கிலாந்து நாட்டில் நியூட்டன் உலக அறிவியல் பேரறிஞராகத் திகழ்ந்தார். அவர் ஒருநாள் தோட்டத்தில் அமர்ந்தபடி இயற்கை எழிலைக் கண்டு களித்திருந்தார். அப்பொழுது செழித்த ஒரு மரத்திலிருந்து ஓர் ஆப்பிள் பழம் கீழே விழுந்தது. அதைக் கண்டதும் அவர், ‘‘இப்படிப் பழம் கீழே வந்து விழக் காரணம் என்ன?'' என்று சிந்திக்கலானார். பொதுவாக நாம், அதைப்பற்றி நினைப்பதற்கு ஒன்றுமில்லை. சிந்திக்க வேண்டிய தேவையும் அதில் என்ன இருக்கிறது; பழம் விழுவதற்குக் காரணம் பழுத்ததுதான் ; பழம் பழுத்துவிட்டால் தானே கீழே விழாமல் என்ன செய்யும்? என்று எண்ணி விட்டுவிடுவோம். அல்லது யாரேனும் சிந்திக்க வேண்டுமென்று சொன்னால் இதைச் சொல்லிக் காட்டி, அவர்களை எள்ளி நகையாடுவோம். ஆனால், நியூட்டனோ அதைப் பற்றி ஆழ்ந்து தொடர்ந்து சிந்தித்தார். பழம் பழுத்துவிட்டதனால் மரத்தில் தங்கியிருக்க முடியாது. அதை விட்டுப் பிரிந்துவிட வேண்டியதுதான். ஆனால், அதற்காக அது கீழே நிலத்தில் விழுவானேன்? மரத்தை விட்டுப் பிரிந்த இடத்திலேயே தங்கி நின்றால் என்ன? அப்படி நிற்காவிட்டாலும் அது மேலே போகலாம் அல்லவா? இறங்கிக் கீழேதான் வர வேண்டுமென்ற கட்டாயம் என்ன? என்ற எண்ணங்கள் அவர் மனத்தில் படர்ந்தன. இப்படி ஆராய்ந்து பழத்தைக் கீழே விழும்படிச் செய்ய வேண்டுமானாற் நிலத்திடம் ஒரு கவர்ச்சிச் சக்தி ஈர்ப்பாற்றல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இந்த முடிவே இயற்பியல் வளர்ச்சி அனைத்திற்கும் அடிப்படையான உண்மையாகும். இவ்விதம் நியூட்டன் சிந்தனையைச் செலுத்தியதால் புவி ஈர்ப்பாற்றலை உலகு கண்டு வியந்தது. அதன் பயனாக விளைந்துள்ள நாகரிக வளர்ச்சிக்கு எல்லையில்லை.
மனம் ஆயிரம் எண்ணும். “கருதுப கோடியும் அல்ல பல” என்பது திருக்குறள். ஒரு முடிவை ஓராயிரம் முறை திரும்பத் திரும்ப எண்ணினால்தான் நினைவு என்ற இழை வன்மை பெறும். எண்ணியர் திண்ணியராக முடியும். ‘சிந்தனைக் கிளைகளில்தான் சீர்திருத்தக் கனிகள் குலுங்கும்' என்ற தொடரை நாவலர் மேடையில் சொல்லாத நாளில்லை. இப்படி சிந்தனையாற்றலில் கனிந்தவர்களையே அறிஞர், கலைஞர், கவிஞர், எழுத்துத் திலகம் என்று கூறலாம்.
‘நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்' என்று மணிவாசகர் தற்சிந்தனை செய்ததுபோல, தமிழ் எழுத்தாளர்கள் நாம் யார்? நம் பரம்பரை எத்தகையது? நம்மொழி எத்திறத்தது? நம் வாசகர்கள் எவ்வண்ணர்? நம் எழுத்து நோக்கங்கள் யாவை? அவற்றின் எதிர்கால விளைவுகள் என்ன இவற்றையெல்லாம் நாம் தற்சிந்தனை செய்ய வேண்டும்.
நம் எழுத்து முன்னோர்கள் யார் என்று சுழி வேகமாக எண்ணினாலும், தொல்காப்பியர் சங்க சான்றோர் திருவள்ளுவர், இளங்கோ, திருத்தக்கதேவர், சேக்கிழார், கம்பர், வீரமாமுனிவர், உமறுப்புலவர், இளம்பூரணர், சிவஞானமுனிவர், பவணந்தியார், காரைக்காலம்மையார், ஆண்டாள், வள்ளலார், வேதநாயகம், உ.வே.சா. மறைமலையடிகள், திரு.வி.க., பண்டாரத்தார், மு.வ., ஔவை துரைசாமி, பாவாணர், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், வ.வே.சு., புதுமைப்பித்தன், கல்கி, மௌனி, சோமலெ என ஆயிரக்கணக்கான முன்னோடிகள் பலர் தமிழ் வானத்தில் ஒளிர்ந்தனர். இப்பெருமைப் பரம்பரையில் நாம் தமிழ்ப் பிறப்பு எடுத்திருப்தற்குப் பெருமிதம் எய்துகின்றோம். அதுவும் எழுத்தாளராகப் பிறந்து சிந்தனை செய்து தமிழ்ப்பணி செய்வதற்கு மகிழ்கின்றோம். நம் முன்னோரை நாம் மதிப்பது போல, நம்பின்னோர் நம்மை நல்ல முன்னோர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்ற அவலக் கவலையும் நமக்கு இல்லாமல் இல்லை என்று மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் எழுத்தாளர் மாநாட்டில் எடுத்துரைத்தார்.
‘மாவண் தமிழ்த்திறம்' என்பது மணிமேகலையில் சாத்தனார் மொழிந்தபடி, தமிழுக்குப் பல துறைகளிலும் சொல்லும் திறமுண்டு; எழுத்தாளர்களாகிய நமக்குத் தமிழாக எழுதும் ஆற்றலும் உண்டு. தவறான மொழிக் கொள்கைப் போக்கால் நம் படைப்புகள் வலுவிழக்கின்றன என்று வ.வே.சு.ஐயர் குறித்ததைக் காணலாம்.
‘கடைசிக் கதையாவது எங்கள் ஊர் குளத்தங்கரை அரச மரத்தால் சொல்லப்பட்டது. அது நன்னூல் முதலிய இலக்கணங்கள் படித்ததில்லை. கிட்டத்தட்ட அது பேசியபடியே எழுதியிருக்கின்றேன். படிப்போர் அக்கதையில் செந்தமிழை எதிர்பார்க்க மாட்டார்கள் என நம்புகின்றேன். இருப்பினும் முற்றிலும் அது பேசியபடியே எழுதினால் இன்று, போதும் என்பன போன்ற வார்த்தைகளை இன்னு, போரும் என்று எழுத வேண்டி வரும். படிப்போர் பொருள் கண்டுபிடிப்பது கடினமாகப் போய் விடும் என நினைத்து அவை போன்ற மொழிகளை இலக்கணப்படுத்தியே எழுதியிருக்கின்றேன்.'
ஒரு நூற்றாண்டுக்கு முன் தமிழ் மொழிச் செம்மை குறித்து வரைந்த கோட்பாடு இன்றைய எழுத்தாளர்கட்கு வேண்டிய அறிவுரையாகும். ‘நிலை பெறுமாறு எண்ணுதியேல்' என்று திருநாவுக்கரசர் கேட்டபடி நம் புதுமைப் படைப்புக்கள் எதிர்கால மன்பதைக்குச் சென்று இயக்க வேண்டுமானால் தமிழ் எழுத்தாளர்கள் பெயருக்குத் தகுந்த தனித் தமிழ் எழுத்தாளர்களாக சிந்தனை வளம் மிக்கவர்களாக ஒளிபெறல் வேண்டும். இதுவே நிலைபேறும் வழிப்பேறும் ஆகும். இதுவே நம் வேண்டுகோள் என்பது மூதறிஞரின் முன்மொழியாகும்.
புலவர், கவிஞர், கலைஞர், பேராசிரியர் என்றால் புரட்சித் தலைவர் அவர்களைக் கண்டு பேச பெரிதும் விரும்புவார். அவர்கள் பேச்சைக் காது கொடுத்துக் கேட்டதோடு குறுக்கே எதனையும் சொல்ல மாட்டார். திரைக்கதை, பாடல், காட்சி மாற்றம் முதலியவற்றைப் பற்றி பலமுறை எண்ணிப் பார்த்து காட்சிகளை எடுத்த பின்னாலும்கூட செலவைப் பற்றி கவலைப்படாமல் பொருத்தமாக மாற்றுவாராம். அலைமோதும் எண்ணங்களில் அமிழாமல் தனக்கு வேண்டிய கருத்தை சிந்தித்து முடிவு காண்பார். கதைகளாலும், காட்சிகளாலும் மக்கள் திருந்த வேண்டும் என்பது அவரின் நோக்கமாகும். பாடல்களையும் அப்படியே திருத்துவார். அப்படி ஒரு கதையைத் திருத்தியபோதுதான் தமிழறிஞர், எழுத்தாளர் முதலிய கலைஞரின் மக்கட் செல்வங்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இரண்டு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டாராம்.
திருவனந்தபுரத்தில், இப்போதும் வாழ்ந்து வரும் கலைத்திலகம் நீல பத்மநாபன் அவர்கள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற பழம் பெரும் எழுத்தாளர் ஆவார். கேரளத் தமிழ் நடையில், தமிழ் நெடுங்கதைகளை எழுதி நிலைத்த புகழ் பெற்றவர் திருவனந்தபுரத்தில் நான் அவரைக் கண்டு பேசி இல்லத்தில் மதிய விருந்து அருந்தியதை இப்போதும் எண்ணிப் பார்த்து மகிழ்கிறேன்.
மின்னியல் பொறியாளராக பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற நீல பத்மநாபன் அவர்களை நேரில் காணாமலேயே நூலை வெளியிட்ட பெருமை புரட்சித்தலைவரைச் சாரும். அந்த உரைதான் தொடர்கிறது...
1977ஆம் ஆண்டு நடைபெற்ற நீல பத்மநாபன் எழுதிய ‘உறவுகள்' என்னும் தமிழ் நாவலுக்கு நினைவுப் பரிசு வழங்கி ஆற்றிய உரை...
‘‘சில நேரங்களில் ஒரு சிலருக்குக் கிடைப்பதற்கரிய வாய்ப்புக் கிடைப்பதுண்டு. அதைப்போன்ற ஒரு வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது.
சில நேரங்களில் நேரடியாக எழுத்துலகில் பங்கு பெற முடியாவிட்டாலும், சில பரிதாபத்துக்குரியவர்கள் தாங்கள் எழுதி, யாருடைய பெயரிலோ வெளியிடுகிறவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், அப்படிப்பட்ட நிலை இங்கே இல்லாமல், தகுதி உள்ளவர் எழுதி, அதை நல்லோர் மத்தியில் பாராட்டக்கேட்டுப் பரிசு பெறுகிற இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
விஞ்ஞான வளர்ச்சியில் எப்படி எல்லாம் மாற்றம் ஏற்படுமோ என்று கருதத்தக்க நிலையில் விளையும் உணர்வுகள் - விளைவுகள் - அத்தனையும் தமிழால், அதன் சுற்றுச் சார்புள்ளனவாக இருக்கும் என்பதைக் கவனிக்கும் அவசியத்தில் இந்த நாடு உங்களைப் பாராட்டியே தீரும்.
ஒரு கதாசிரியர், ஒரு கதாநாயகனை உருவாக்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். பிறகு ஒரு வில்லன் பாத்திரம் ஒன்றை உருவாக்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
கதாசிரியர் எதை நியாயம் என்று கருதுகிறரோ, அது நீதிக்கு மாறுபட்டது அல்ல என்று கருதுகிறரோ அதனை அந்தக் கதாநாயகன் பாத்திரத்தில் வைப்பார். அதற்கு எதிர்மாறான கருத்தை-குணாதிசயத்தை-எதிரியின் பாத்திரத்தில் வைப்பார். அப்படி அவர் சொல்கிறபோது இந்தச் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் அந்த எழுத்தில் கூறுகிறார் என்று அர்த்தமாகிறது.
நான் எழுத்தாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன், எழுதும்போது எங்களையும் மறந்து விடாதீர்கள் என்று. இப்படி நான் கூறுவது உங்கள் உள்ளத்தை ஈர்ப்பதற்காக அல்ல நான் அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் கிடையாது. மக்களின் வாழ்வைப்பற்றிக் கவலைப்படுகிறவன்!
இந்த மூன்று மாதக் காலத்தில் நான் பல பேர் கூறிய பிரச்சினைக்கு வாதம் செய்து அதைப் பெரிதுபடுத்தாமல் மக்களின் பிரச்சினைகளையே கவனித்து வருகிறேன். மக்களுக்கு நானும், எனது நண்பர்களும் சரியாகக் கடமையாற்றுகிறோமா என்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன்.
எப்படிக் கடமையாற்றினால் தமிழர்களின் வாழ்வு பின்னால் மேன்மையுறும் என்று ஆய்ந்து பணிபுரிகிறோம். நீங்கள் சுட்டிக்காட்டும் குறைபாடுகளை எங்களுக்கு வழிகாட்டுகிறவைகளாக ஏற்போம்.
இந்த நாட்டின் பண்பாட்டை, யாரும் தகர்க்க முடியாத அளவுக்கு உங்கள் எழுத்துகள் பயன்பட வேண்டும்.
ஒரு பக்கம் நீதிபதி-மறுபக்கம் வழக்கறிஞர்-இடையில் நான். இங்கே சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அனைவரும் கூடியிருக்கிறீர்கள்.
இந்த உறவுகள் தொடரட்டும்-வளரட்டும்.
இந்த உறவுகளின் சொந்தக்காரர் - சிறந்த நாவலாசிரியர் நீல பத்மநாபன் இன்னும் பல்லாண்டு எழுத்துச் சேவையாற்றிட என் அன்னையை இறைஞ்சுகின்றேன்.''
தினசெய்தி நாளிதழில் இன்று (20.07.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 44)
‘‘தலைமைச் செயலகத்தின் தகைமையும் திறமையும்..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
===============================
ஓர் அரசு சிறப்பான ஆட்சி நடத்தி மக்களின் உரிமைகளை நிலை நாட்டும் என்றால் அந்நாட்டின் ‘அரசியலமைப்பு’ போற்றத்தக்க வகையில் அமைந்த திறமுடையதாகும்.
ஏறத்தாழ முப்பது மாநிலங்களின் ஒருங்கிணைப்பில், கூட்டாட்சி முறையில் இயங்கும் நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தினைப் பொதுமக்களும், மாணவர்களும் வாய்ப்பு நேரும்போது அறிந்து தெளிவடைய வேண்டும்.
நமது அரசியல் அமைப்புச் சட்டம் பல்வேறு நாடுகளின் அடிப்படைச் சட்டங்களில் உள்ள கருத்துகளையும் உள்ளடக்கியது. அமெரிக்கா, அயர்லாந்து, சோவியத்து ருசியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, செருமனி, ஆத்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அடிப்படை சட்டங்களிலிருந்து நமது அரசியல் அமைப்புச் சட்டத்திற்குத் தேவையான கருத்துகளை நம் நாட்டிற்கு ஏற்ற வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் வல்லவர்கள் அமைத்தனர்.
சட்ட மாமேதை அறிஞர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று உணரலாம். மேலும், தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள பல தரப்பினருக்கும் குறிப்பாகச் சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் கேள்வி பதில் வடிவில் ஓய்வுபெற்ற உயர் அலுவலர் என்.எம்.பெருமாள் தனது நூலில் இச்சட்டத்தின் பல்வேறு நுணுக்கங்களைத் குறிப்பிட்டு உள்ளார்.
எழுத்துத்திலகமாக வாழ்ந்த சுஜாதா மூளையின் செயற்பாடுகளைப் பற்றிக் கேள்வி பதிலாக எழுதிய நூலுக்குப் பெயர் தலைமைச் செயலகம் என்பதாகும். தலைமைச் செயலகம் என்பது மிக அழகான தலைப்பு. உடம்பின் செயற்பாட்டுக்கெல்லாம் ஒரு முதன்மைச் செயலகமாக மூளை விளங்குவது போல அரசின் செயற்பாடுகள் அனைத்திற்கும் மாநில அளவில் தலைமைச் செயலகம் உருவாயிற்று.
பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பின்னர், தலைமைச் செயலகத்தில் பெருங்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது நீங்களும் நானும் அடிக்கடி தொட்ட, தொடுகிற கோப்பு இருக்கிறதே, அதற்கு ஆங்கிலத்தில் File என்று பெயர். அந்த நான்கு எழுத்துகளையும் நீங்கள் கொஞ்சம் மாற்றிச் சேர்த்தால் Life என்று வரும். எனவே, கோப்பினை தொடுகிறபோது, ஓர் ஏழையின் அழுகுரல் கேட்கும். இல்லாதவரின் குமுறல் கேட்கும். ஊரார் தனக்குத் தேவை என்று கேட்ட வேண்டுதல் கேட்கும். எனவே, கோப்பினைத் தொடுகிறபோது ஓர் ஏழையின் அழுகுரல் கேட்கும். இல்லாதவரின் குமுறல் ஒலிக்கும். ஊரார் தனக்குத் தேவை என்று கேட்ட வேண்டுதல் இரங்கி நிற்கும். எனவே, தொடுகிற போதெல்லாம் நடுங்குகிற குரல் உங்கள் காதில் கேட்பது போல, உங்கள் விரல்களும் அதை விரைந்து அனுப்பி, எப்படி நிறைந்த பலனை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளவும் அவர்கள் சிந்துகிற கண்ணீரைத் துடைக்கலாம் என்பதற்கு முற்படும் கரங்கள்தான் தலைமைச் செயலகத்தின் அலுவலர் கரங்கள் என்று குறிப்பிட்டார்.
இந்திய நாடு விடுதலை அடைந்தபோதே சென்னை புனித ஜார்ஜ் கோட்டைதான் தலைமைச் செயலகமாகச் செயற்பட்டு வந்ததை நாமறிவோம். உத்தமர் ஓமந்தூரார் தான் விடுதலைக் கொடியை ஏற்றி வைத்த பெருமை கொண்ட முதலமைச்சர் என்று அனைவரும் சொல்வார்கள். அப்போது, அவருக்கு பெயரேகூட பிரதமஅமைச்சர் என்றுதான் இருந்தது.
தலைமைச் செயலகத்தில் முதன்மைக் கட்டடம் மூன்று தளங்களைக் கொண்டது. இரண்டாம் தளத்தில், தலைமைச் செயலாளர் இருப்பது போலவும், பிறகு சுற்றி வருகிற வட்டத்தைப் பார்த்தால், முதலமைச்சர் அறையும், அமைச்சர்களின் அறைகளும் வகுத்து வைத்திருந்தார்கள். சட்டப் பேரவையும், மேலவையும் முதல் தளத்தின் வட முனையில் பேரவைகளாக அமைந்துள்ளன.
தலைமைச் செயலகத்தில் இந்த மூன்று தளங்களில் பணியாற்றிய அலுவலர் எண்ணிக்கை காலந்தோறும் பல்கிப் பெருகியதால் பத்து மாடிக் கட்டடத்தை முதன்மை அலுவலகத்துக்கு எதிர்ப்புறத்தில் கட்டி அந்தக் கட்டடத்தை நாமக்கல் கவிஞர் மாளிகை என்ற நற்பெயரை முத்தமிழ் அறிஞர் கலைஞர் சூட்டினார். இக்கட்டடத்தை முதன்மை கட்டடத்துடன் இணைக்க ஓர் இணைப்பு நடை பாலம் கட்டப்பட்டது புதுமையும், பொலிவுடையதாகும்.
விடுதலை அடைந்த பிறகு, அரசு அலுவலரை Writer என்று குறித்தனர். கொல்கத்தாவின் தலைமைச் செயலகம் எழுத்தர் கட்டடம் என்றே அழைக்கப்படுகிறது.
இப்போது முப்பத்து ஆறுக்கு மேற்பட்ட துறைகளும், ஏழாயிரத்துக்கு மேற்பட்ட பணியாளர்களும் பணியாற்றுகின்றனர்.
தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவது ஒரு பெருமிதமான பணியாகும். தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவதற்குத்தான் தேர்வாணையத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை பணியமர்த்தம் செய்யும் நிலை இருந்தது. இந்நிலையில்தான் அரசு செயலாளர்கள் எல்லாம் ஆட்சிப் பணித் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்வு பெற்ற அலுவலர் பெருமக்கள் செயலாளர்களாக இருந்தார்கள். தமிழகத் தலைமைச் செயலக முடிவை இந்திய அரசு எப்போதும் பாராட்டும்.
புரட்சித் தலைவர் ஆட்சிக்கு வந்த பின்னர், அவரைக் கண்ணாரக் காண வேண்டும் என்ற பேரார்வத்துடன், கொடுத்துச் சிவந்த குமணனே இப்போது கோலோச்சி வந்திருக்கிறார் என்று அவரை தலைமைச் செயலக அலுவலர் சங்கத்திற்கு அழைத்து வந்தார்கள்.
அவர் ஆட்சிக்கு வந்தபோது, சில குறிப்புகளைக் கேட்டாராம். எத்தனை துறைகள் உள்ளன? அலுவலர்கள் எத்தனை பேர்? பணியாளர்கள் எத்தனை பேர்? என்று கேட்டுவிட்டு, அவர் கேட்டதிலே புதுமையானது என்னவென்றால், அந்தந்த மாநிலத்தில் தலைமைச் செயலகத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? தமிழகத்தின் தலைமைச் செயலகத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை என்ன? என்ற ஒரு குறிப்பையும் தனியாக வைத்திருந்தார்.
ஆட்சித்திறம் என்பது, தன் நுண்ணறிவால், சிந்தனையால், உடனிருக்கும் உயர் அலுவலர்கள் சொல்வதைக் கேட்டு, தன் கருத்து வளத்தால் திருத்தி மேம்படுத்துவதுவதாகும்.
பெருந்தலைவர் காமராசர் தன்னுடைய சிந்தனை வளத்தாலும், தன் இயல்பான சமூக அக்கறை காரணமாகவும் சிறப்பாக செயற்பட்டதை ஒரு சான்றின் மூலம் அறியலாம். எங்களுக்கு பள்ளிக்கூடம் இல்லை. நாங்கள் பள்ளிக்கு போவதென்றால், ஐந்து கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, எங்களுக்கு ஒரு பள்ளியை உருவாக்கித் தர வேண்டும் என்று சிற்றூர்ப்புரத்தைச் சார்ந்த மக்கள் அருப்புக் கோட்டையிலிருந்து ஒருமுறை அவரைக் கேட்டார்களாம். பெருந்தலைவர் உடனே, பள்ளிதானே கேட்கிறீர்கள், நான் உடனே செய்கிறேன். படிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு தராமல் நான் பதவியில் இருப்பதில் என்ன பயன் என்று அவர் மறுநாள் தன்னுடைய அலுவலகத்திற்கு வந்தபோது கேட்டாராம். எங்கே பள்ளி வைக்கலாம் என்றாராம். அதற்கு அரசு செயலாளர், ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் இரண்டு மேநிலைப் பள்ளிகளை வைப்பது அரசின் விதிகளுக்கு புறம்பானது என்றாராம். அதற்கு பெருந்தலைவர், நீங்கள் சொல்லும் விதி சரிதான். அந்தப் பள்ளியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் நடந்த பிறகு வழியில் உள்ள வாய்க்காலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெள்ளம் வருவதால், அவர்கள் நீந்திக் கடக்கிறார்கள். இது எப்படிப் பொருந்தும் என்றாராம்.
அரசு செயலாளர் போய்த் திரும்பி வந்து, விதியில் மாற்றம் செய்யலாம். நடுவில் வாய்க்காலோ, தடையோ, வனப்பகுதியோ இருந்தால், ஐந்து கிலோ மீட்டருக்குள் இரண்டு பள்ளிகளை வைப்பதற்கு தடையில்லை என்றாராம். உடனே பெருந்தலைவர் கையெழுத்திட்டார்.
அதேபோல்தான் புரட்சித்தலைவர், தன்னைச் சூழ்ந்தவர்கள் கூறும் கருத்தை நிதானமாக கேட்டுக், கண்ணால் கண்டதைக் கையால் செய்வார்கள் என்று கூறும் திறமையைக் கொண்டிருந்தார். அந்த வகையில், எந்த அரசிலும் மாறாது நின்ற மதிநலம் மிகுந்த உயர் ஆட்சிப் பணி அலுவலர்கள் புகழ் சேர்த்திருக்கிறார்கள். சான்றாக, பன்னிரண்டு ஆண்டுகளாக நான்கு முதலமைச்சர்களிடம் ஒப்பற்ற நிதிச் செயலாளராகத் திகழ்ந்து எவர் மனமும் எள்ளளவும் கோணாமல் உயரிய திட்டங்களை உருவாக்கி வெற்றி கண்டதோடு இன்றைய தலைமைச் செயலாளர் க.சண்முகம் புகழோடு தலைமை தாங்குகிறார் என்பது பாராட்டத்தக்கது.
தின செய்தி நாளிதழில் இன்று (27.07.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 45)
‘‘மதி நுட்பம் நூலோடுடையார்..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
=======================================
பச்சையப்பன் கல்லூரியில் பயிலும்போதே, மாணவர் மன்ற நிகழ்வுகளில் தலைவர்கள் பலரை உரையாற்ற அழைப்பது வழக்கம். அந்த வகையில்தான் புரட்சித்தலைவரை அழைத்து அவரை பேச வைத்து கல்லூரிப் பருவத்திலே நான் சிறப்படைந்தேன். அதேபோலதான் நான் விரும்பி அழைக்க முயன்றது மூதறிஞர் இராஜாஜியைத்தான்.
மூதறிஞர் இராஜாஜி மீது எப்படி ஈடுபாடு என்று கேட்டால், தந்தை பெரியாரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். பலமுறை தந்தை பெரியார் தன்னுடைய விடுதலை, குடியரசு இதழ்களில் மூதறிஞர் இராஜாஜி வெளியிடுகின்ற ஒவ்வொரு கருத்துக்கும் மறுப்புரை வழங்குவார். மிக இயல்பாக தந்தை பெரியார் சொன்னது, ‘‘மூதறிஞர் எது சொன்னாலும் கண்ணை மூடி மறுத்தால், சிந்திக்கும் பழக்கம் அனைவருக்கும் வளரும்.'' அதனாலோ என்னவோ அவர் மீது தனியார்வம் வளர்ந்தது. மூதறிஞர் இராஜாஜி 10.12.1878-ல் பிறந்தவர். தந்தை பெரியார் 17.09.1879-ல் பிறந்தவர். மூதறிஞர் மறைந்த தேதி 25.12.1972. பெரியார் மறைந்த தேதி 24.12.1973.
தந்தை பெரியாரின் புரட்சிப் புதுமை திருமணத்தை முழுமையாக ஆதரித்து நல்வாழ்த்து வழங்கியவர் மூதறிஞர்தான். மூதறிஞரின் பெயரன் இந்திய அயலகத் துறையின் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய இராஜ்மோகன் காந்தி ஓர் அழகான ஆங்கில நூலை எழுதியுள்ளார். அந்நூலில் அண்ணல் காந்தியடிகளுக்கு ஏறக்குயை ஐம்பது கடிதங்களையும், அவருடைய மாப்பிள்ளை தேவதாசு காந்திக்கு இருபது கடிதங்களும் அவருடைய பெயரன் இராஜ்மோகன் காந்திக்கு இருபது கடிதங்களையும் மிக செவ்விய முறையில் மூதறிஞர் எழுதியதை வெளியிட்டிருக் கிறார்கள்.
இந்த நூலைப் படித்த பிறகுதான் மூதறிஞரின் சிந்தனை ஆழம் பொருந்திய கருத்துகளை மேலும் காண முடிகின்றன. மூதறிஞர் எழுதிய “குறை ஒன்றும் இல்லை” என்ற இசைப்பாடல் உலகப்புகழ் எய்தியது. அவர் எழுதிய சோக்ரதர், வாழ்வியல் சுருக்க நூல் அறிவாழம் கொண்டது.
மூதறிஞர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ஆட்சியில் இருந்தபோது, ஒவ்வொரு அரசுக் கோப்பிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் குறிப்புகளை எழுதி விளக்கம் பெறாமல் அந்த கோப்பை நிறைவு செய்வதில்லை.
அந்நாளில், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களில் முதற்பணி நிலையே Under Secretary என்பதாகும். பணியில் மூத்தவர்கள், பதவியுயர்வு பெற்று வருகிறபோது, இருவருக்கும் வேறுபாடு காட்ட இரு சொற்கள் Assistant Secretary, Under Secretary பயன்பட்டன. அது ஏன், வேறுபாடு காட்ட வேண்டும் என்று அப்போது பணி மூப்பு பெற்றோர் ஒரு முறையீடு வைத்திருந்தனர். மூதறிஞரின் செயலாளர்களில் ஒருவர் பணிமூப்பு கொண்டவர்களுக்கும், இந்தப் பெயர் மாற்றத்தை நீக்குவது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் கருதிப் பார்க்க வேண்டும் என்று விண்ணப்பம் வைத்திருந்தார். ஆங்கிலத்தில், மூதறிஞர் எழுதிய குறிப்பு சார் செயலாளர் எப்போதும் செயலாளராவதில்லை, ஆனால், முதல் படி நிலையில் சேர்ந்த ஆட்சிப் பணி அலுவலர் குறைந்தது பத்தாண்டுகளில் செயலாளராகி விடுவார்கள். (They are under study for the Secretary Post. For Assistant Secretaries it is a high attempt to think about Secretary Post) என்று எழுதியதை ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டுவார்.
சென்னை இராஜாஜி மண்டபத்தில் 08.12.1977 அன்று மூதறிஞர் இராஜாஜி அவர்களின் 100ஆவது பிறந்த நாள் விழாவில், அன்னாரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து புரட்சித்தலைவர் ஆற்றிய உரை...
“தன் மனத்தில் தோன்றுவதை வெளிக்காட்டி அதைச் செயல்படுத்தப் பின்வாங்குபவன் பொறுப்பேற்கத் தகுதியற்றவன்'' என்று மூதறிஞர் இராஜாஜி அவர்கள் சொன்னார்கள்.
இராஜாஜி அவர்களின் நேர்மையைப் பற்றியும், நிருவாகத் திறனைப் பற்றியும் இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். யாருக்கும் அஞ்சாமல், விட்டுக்கொடுக்காமல், கருத்தை எடுத்து வைப்பதில் வல்லவர் இராஜாஜி அவர்கள்.
அதுபோல என் உள்ளத்தில் எழுந்த கருத்தைச் சொல்வது அவரைப் பின்பற்றுகிற நீங்களும், மேடையிலே அமர்ந்திருப்பவர்களும், விரும்புவார்கள் என்று நம்புகிறேன்.
ஒருமுறை இராஜாஜி அவர்கள் தில்லியில் ஒரு கூட்டத்தில் பேசியபோது, அசம்பாவித நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மரியாதை தெரியாத ஒருவன் - இங்கிதம் தெரியாத ஒருவன் - பெரியவர்களை மதிக்கத் தெரியாத ஒருவன் - அழுகிய கோழி முட்டையை அவர் மீது எறிந்துவிட்டான்.
அந்த அழுகிய கோழி முட்டை அவர் சட்டையில் பட்டுவிட்டது. ஆத்திரப்படாமல் துடைத்துக் கொண்டார். அப்போது அவர், “நான் எதற்காகப் பாடுபடுகிறேன், உழைக்கிறேன் என்றால், இப்படிப்பட்ட அழுகிப் போனவர்களின் உள்ளத்தைத் திருத்த வேண்டும் என்பதற்காகத்தான்'' என்றார்.
இராஜாஜி அவர்களின் பணிகளை எண்ணி, அமரர் பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளை நிறைவேற்ற செயல்பட்டு வருகிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன். மக்கள் நாணயமாக வாழ வேண்டும் என்று இராஜாஜி அவர்கள் விரும்பினார்கள். மக்கள் நாணயமாக வாழ்வதற்குப் பாதுகாப்புத் தர வேண்டியது அரசின் கடமை என்பதை நான் உணருகிறேன்.
இங்கே பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களும், புத்தகங்களும் வழங்கப்பட்டதைப் பார்த்தீர்கள்.
எதற்காக இவைகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. இவர்களின் பேரன், பேத்திகள் இவர்கள் பெற்ற பரிசுகளைப் பார்க்கும்போது, மூதறிஞர் இராஜாஜியின் 100ஆவது பிறந்த நாள் விழாவில் பெரியவர்கள் மற்றும் ஆளுநர் முன்னிலையில், முதலமைச்சர் வழங்கினார் என்ற செய்தியைப் பார்க்கும்போது அவர்களுக்குப் பெருமையாக இருக்கும்.
அதற்கு மாறாகத் தனது தாத்தா வெடிகுண்டு வைத்தார்; தீ வைத்தார்; பஸ்ஸைக் கொளுத்தினார்; கல்லெறிந்து பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தினார்; பெண்கள் என்றும் பாராமல் கல்லெறிந்து, அவர்களைக் காயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார், கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற செய்தியைப் பார்ப்பார்களேயானால், அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட நிலை ஏற்படாமல் இருக்க, அவர்கள் ஆக்க முயற்சியில் ஈடுபட, ஊக்கம் அளிக்கும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டுகிறேன்.
இன்றைக்கு மூதறிஞர் இராஜாஜி அவர்களை எதற்காகப் பாராட்டுகிறோமோ, அந்த மூதறிஞர் பிறந்த நாட்டில், நாட்டின் முன்னேற்த்திற்காக யார் தடையாக இருந்தாலும் - அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள். ஆட்சியில் இருக்க உரிமை வழங்கும் மக்களின் நம்பிக்கையை பெற்ற மூதறிஞர் இராஜாஜி அவர்கள் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் செயல்பட்டார்கள். இராஜாஜி அவர்கள் பதவிக்குச் சென்று சட்டமன்றத்தில் பேசும்போது ஒன்றை அடிக்கடி குறிப்பிடுவார்கள் என்பதை நான் கூறியிருக்கிறேன்.
“நான் தொலைநோக்குப் பார்வையோடு 100 ஆண்டுகளுக்குப் பயன்படும் திட்டத்தைப் போடுகிறேன். ஆனால், அதே நேரத்தில் அடுத்த வினாடி பதவி விலக இராஜினாமா கடிதத்தை சட்டைப் பையில் வைத்திருக்கிறேன்'' என்று குறிப்பிடுவார்கள். மாஜிஸ்திரேட்டாக இருந்து, நீதிபதியாக, உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
மூதறிஞர் இராஜாஜி அவர்கள் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக, உயர்ந்த பதவியில் இருந்தவர். ஆனாலும்; இராஜாஜி அவர்கள் உயர்ந்த பதவி, சின்னப் பதவி என்று கணக்குப் பார்க்காமல், மக்களுக்கு தொண்டாற்றுவதில் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார்.
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜாஜி அவர்கள் மேற்கு வங்கத்தின் கவர்னராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.
அதற்குப்பிறகு, தமிழகத்தில் பல மாநிலங்கள் ஒன்றாக இருந்த சென்னை மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் குறைவாக இருந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக - வேறு கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்காக - முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
அப்போது திறமையான நிருவாகத்தால், தூய்மையான ஆட்சியை நடத்தினார். தனக்கு கெட்ட பெயர் வரும் என்று கருதாமல் மக்கள் நலனுக்காகத் துணிச்சலோடு செயல்பட்டார். கட்சி நலன் கருதாமல், பொதுமக்களின் நலனையே முக்கியமாகக் கருதிச் செயல்பட்டார்.
தமிழகத்தில் மீண்டும் உண்மையான மதுவிலக்குக் கொண்டு வர வேண்டும் என்று இராஜாஜி அவர்கள் கூறினார்கள். இராஜாஜி அவர்கள் கண்ட கனவை நனவாக்க மதுவிலக்கு கண்டிப்பாக அமல் நடத்தப்படும்.
உறவு, கட்சி, ஜாதி, மதம், வசதி படைத்தவர்கள், வேண்டியவர்கள் என்று எதைப்பற்றியும் பாராமல், இராஜாஜி அவர்களின் கொள்கையான மதுவிலக்கு அமல் நடத்தப்படும். மூதறிஞர் இராஜாஜி, பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கையை நிறைவேற்ற எது குறுக்கே நின்றாலும் அது அகற்றப்படும்.'' என்றார்.
அதேபோல, 24.12.1979 ஆம் நாளன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராஜாஜி முழு உருவச் சிலைத் திறப்பு விழாவில் உரையாற்றிய புரட்சித்தலைவர்,
‘‘அ.இ.அ.தி.மு.க-வை நான் தொடங்கியதும் முதல் முறையாக மூதறிஞர் இராஜாஜியைச் சந்தித்தேன். அவர் ஆசி கூறி என் கையைப் பிடித்து, அவரது உறுதியினால் கண்ணீர் விடவில்லை-என்னைப் போன்றவர்கள் என்றால் கண்ணீர் விட்டுப் பேசியிருப்பார்கள்-கண்ணீர் விடாமல் உறுதியோடு பேசினார்.
‘‘மதுவிலக்கு ரத்தினால் நாட்டு மக்களை எங்கேயோ அழைத்துச் செல்கிறார்கள்: அவர்கள் நல்வழியில் வாழ உத்தரவாதம் அளிக்க வேண்டும்'' என்று என்னிடம் சொன்னார்கள் காலம் நிச்சயம் செய்யும் என்றேன். அந்தக் காட்சியைப் பார்க்க நான் உயிரோடு இருக்க வேண்டுமே என்றார். அவர் உயிரோடு இல்லாவிட்டாலும் இந்தச்சிலை நாம் செய்யும் கொள்கைத் திட்டங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
தமிழக அரசு எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியை ஆட்சிமொழியாக ஏற்காது. எந்த வகையிலும் அதை அனுமதிக்காது. நாலே முக்கால் கோடி தமிழக மக்களின் சார்பில் இராமச்சந்திரன் என்ற முறையில் இல்லாமல், முதலமைச்சர் என்ற முறையில் இதைக் கூறுகின்றேன்.
மூதறிஞர் இராஜாஜி அவர்கள், தியாகத்தால் - அறிவாற்றலால் - மக்கள் தொண்டால் - உயர்ந்து நின்றார். அவரின் அறிவாற்றலை உலகம் போற்றியது. அவருக்குச் சிலை நிறுவப்பட்டுள்ளது. வடக்குக் கடற்கரைச் சாலைக்கு இராஜாஜி சாலை என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இராஜாஜியின் பிறந்த ஊர்ப்பக்கத்தில் இருக்கும் ‘‘சிப்காட்'' நகருக்கு ‘‘இராஜாஜி நகர்'' என்று பெயர் மாற்றப்படும்.'' என்றார்.
தினசெய்தி நாளிதழில் இன்று (03.08.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 46)
"தென்னாட்டின் மன்னாதி மன்னவனே!"
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
ஆந்திர நாட்டின் மாபெரும் நடிகர் கண்ணன் பெருமகனாகவே மக்களால் போற்றி வணங்கப்படும் தெய்வ வடிவமாக என். டி. ஆர் கருதப்பட்டார். திரைப்பட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் என்.டி.ஆர். அவர்களுக்கு புரட்சித் தலைவர்தான் உற்ற நண்பராகவும், ஒளிவிளக்கு தரும் அறிஞராகவும், எல்லா வகையிலும், பெரும் பேராசிரியராகவும் திகழ்ந்தார் என்று சொன்னால் மிகையாகாது.
திரு.என்.டி.ஆர் அவர்கள் தான், முதன்முதலாக அரசியல் கட்சி தொடங்கப்போகிறேன். அதற்கு நீங்கள்தான் பெயர் சூட்ட வேண்டும் என்றும், அதில் தெலுங்கு என்ற பெயரும் இடம்பெற வேண்டும் என்று என்.டி.ஆர். அவர்கள் புரட்சித்தலைவரிடம் கேட்டார்.
புரட்சித்தலைவருக்கு எவ்வாறு இரட்டை இலை சின்னம் கிடைத்ததோ, அதுபோல் என்.டி.ஆர். அவர்களுக்கு இரட்டை சக்கரங்கள் கொண்ட சைக்கிள் சின்னம் கிடைத்தது.
அக்கால கட்டத்தில் என்.டி.ஆர். எது செய்தாலும், அதில் புரட்சித்தலைவரின் ஆலோசனை இருக்கும் என்று ஆந்திரம் மற்றும் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுவது வாடிக்கையாகும்.
தெலுங்கு கங்கை திட்டத்தை அறிமுகம் செய்வதற்காக ஒரு மாபெரும் ஒப்பந்தத்தில் தமிழ்நாடுஆந்திராகர்நாடகமராட்டிய அரசுகள் கையெழுத்திட்டன. ஆந்திராவிலிருந்து, தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வர வேண்டும் என்ற மாபெரும் கனவை நனவாக்க வித்திட்ட தூண்களாக என்.டி.ஆர். அவர்களும் புரட்சித்தலைவர் அவர்களும் விளங்கினர். இந்த கிருஷ்ணா நதி நீதி திட்டம் ஏறக்குறைய 406 கிலோ மீட்டர் தொலைவில் தண்ணீரை தமிழகத்திற்கு கொண்டு வரும் ஒரு நுட்பமான திட்டமாகும். இத்திட்டத்திற்கு தமிழக, ஆந்திர மற்றும் மந்திய அரசும் பேரூக்கம் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணா நதிநீர் திட்ட தொடக்க விழாவிற்கு வருகை புரிந்தபோது, நான்கைந்து மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருந்த காட்சி, இன்றைக்கும் மாட்சி தரும் காட்சியாக என் கண்முன்னே நிற்கிறது.
ஆந்திரப் பெரு நடிகர் என்.டி.ஆர். தன் உரையைத் தொடங்கும்போதே, புரட்சித்தலைவரைப் பார்த்து,” The King Maker of South India” என்று விளித்து மாபெரும் கைத்தட்டலைப் பெற்றார். அதே சமயத்தில் என்.டி.ஆர். அவர்களின் ஆங்கில உரையை தமிழாக்கம் செய்யும் பணி எனக்குக் கிட்டியது. நான் உடனே புரட்சித்தலைவரையும், ஆந்திரப் பெரு நடிகர் என்.டி.ஆர். அவர்களையும், மேடையில் உள்ளவர்களையும், எதிரில் அமர்ந்திருந்தவர்களையும் பார்த்து
“ தென்னகத்தின் மன்னாதி மன்னனே” என்று கூறினேன்.
அந்த ஆங்கிலத் தொடருக்கு ஏற்ப தமிழ்த் தொடரைக் கூறியவுடன் இடி போல் கைத்தட்டலும், புரட்சித்தலைவரும் இரண்டு முறை தன்னுடைய கருப்பு கண்ணாடி மூலம் ஏறிட்டு பார்த்த காட்சியும், அவருக்கே உரிய வெட்கமான புன்னகை பூத்ததும், என்.டி.ஆர். சிலிர்த்ததும் அன்றைக்கு நடைபெற்ற மாபெரும் காட்சிகளாகும்.
அந்த உரை வருமாறு....
(25.05.1983 ஆம் ஆண்டு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற
தெலுங்கு கங்கைத் திட்ட தொடக்க விழாவில் பங்கு கொண்டு ஆற்றிய உரை)
இந்த நிகழ்ச்சி என் வாழ்நாளில் மறக்க முடியாத மகத்தான நிகழ்ச்சியாகும்.
ஒரு வரலாற்றுச் சிறப்பான சாதனையை எதிர்கொண்டு நிற்கிறேன் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1976ஆம் ஆண்டு, சென்னையில் இது போன்ற கூட்டத்தில் பிரதமர் அவர்கள் தெரிவித்த அறிவிப்புகள் தான் இந்தக் கிருஷ்ணா நதி நீர்த் திட்டம் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அவர் கூறும் நல்ல கருத்துகள் நிறைவேறுவதைச் சிலர் தாமதப்படுத்தினாலும், அந்த நல்ல திட்டங்கள் என்றேனும் நிறைவேறியே தீரும் என்பது உண்மையாகும்.
இந்த மாநிலத்தின் ஒரு மாவட்டம் என்கிற அளவுக்குச் சென்னையில் மக்கள் தொகை 35 இலட்சத்திலிருந்து 40 இலட்சம் வரை கணக்கிடப்பட்டுள்ளது. இங்குக் குடிநீர்ப் பிரச்சினை எவ்வளவு பெரிது என்பது நமக்குத் தெரியும். நான் எப்போதும் ஒருமைப்பாடு பற்றிப் பேசுபவன் என்பதையும், ஒருமைப்பாடு நாட்டில் இருக்கவேண்டும் என்றால் உள்ளத்தில் பரந்த போக்கு உருவாக வேண்டும் என்றும் சொல்வேன்.
இந்த மேடையில் வீற்றிருக்கும் மாநில முதல்வர்கள் எந்தக்கட்சியைச் சேர்ந்தவர்கள், நான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன்? கர்நாடக முதல்வர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்? இங்கு நான்கு கட்சிகளைச் சேந்தவர்கள் இருக்கிறோம் இதைப்பார்க்கும் போது ஒருமைப்பாடு மகத்தானது என்பதும், அதை நிறைவேற்ற விரிந்த உள்ளம்தான் வேண்டும் என்பது நன்கு புரியும். இந்தியாவில் ஒருமைப்பாடு என்பது பிரிக்க முடியாததாகும். இங்கு ஒருமைப்பாடு சிக்கல் இல்லாத ஒன்றாகிவிட்டது.
இந்தத்திட்டம் நிறைவேற எவ்வளவு உழைக்க வேண்டும் என்று உணராமல் இல்லை. கருநாடக மாநில முதல்வர் இங்கே பேசும் போது, காவிரிப் பிரச்சினை குறித்து மனம் விட்டுப் பேசவேண்டும். அப்படி பேசினால் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடக்கூடியதுதான் என்று குறிப்பிட்டார். அதற்காகக் கர்நாடக முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நாங்கள் எவ்வளவு காரியமாற்றினாலும் மத்திய அரசின் ஆதரவும் ஊக்கமும் இருந்தால்தான் இந்தத்திட்டம் வெற்றி பெற முடியும், இந்தத்திட்டம் தனிப்பட்டவர்களுக்காக அல்ல ஆனால் பணம் வீணடிக்கப்பட்டதாகச் சிலர் குறை கூறுகிறார்கள். வாழமுடியாதவர்கள் வாழ்கையில் ஏமாற்றமடைந்தவர்களின் வயிற்று எரிச்சல் அது. இந்தத் திட்டம் காலத்தையும் மீறி நிலைத்து நிற்கும்.
மாராட்டிய முதல்வர் கூறும்போது, “நான் கஷ்டப்படுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் பிறர் துயரப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமுடியாது. முதலில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்” என்று கூறினார்கள். இதைத்தான் நாமும் சொல்கிறோம். காந்தியடிகளும், அண்ணாவும் இதனையே கூறியுள்ளார்கள்.
“பிறரை நேசி., அவர்கள் உங்களை நேசிப்பார்கள்” என்றார், விவேகானந்தர். மாண்புமிகு முதல்வர் அருமைத் தம்பி என்.டி.ஆர். அவர்கள் நீண்ட உரையாற்றினார். அதற்கு இப்போது பதில் சொல்ல வேண்டுமா என்று எண்ணுகிறேன். நாட்டு நலனுக்காக அவருக்குச் சில ஆவல், ஆதங்கம் இருக்கிறது அதைப் பிரதமர் உணர்வார். அதன் அடையாளம் தான் 20 அம்சத் திட்டம்.
20 அம்சத்திட்டம், அதைத்தான் சொல்கிறது 1976 ஆம் ஆண்டு நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது 20 அம்சத் திட்டத்தைத் தெருத்தெருவாகச் சென்று பரப்பிய போது, சிலர் கேலி பேசினார்கள். அவர்களைப் பார்த்து இந்தக் கூட்டம் கேலி செய்கிறது இந்த விழா தனிப்பட்ட மனிதருக்கோ தனிப்பட்ட கட்சிக்கோ சாதிக்கோ நடக்கும் விழா அல்ல இது மக்களுக்காக நடத்தும் மக்கள் விழா.
முன்பு விளக்கு இருந்தது. திரியும் இருந்தது. எண்ணெய்யும் இருந்தது, ஆனால் அதை ஏற்றிவைக்க ஆளில்லாமல் இருந்தது. இன்று அந்த விளக்கை ஏற்றி வைக்கிறார், பிரதமர். இந்த நாடு முழுவதும் இதுபோல் பல விளக்குகள் பிரதமரால் ஏற்றிவைக்கப்பட வேண்டும். தமிழக மக்கள் மீது பிரதமருக்கு நல்லெண்ணமும் அனுதாபமும் எவ்வளவு இருக்கிறது என்று புரிகிறது. நீங்கள் பல்லாண்டு வாழ்க! நாட்டிற்கு நல்லது செய்யுங்கள்.
சித்திரா பௌர்ணமியில் நடக்கும் இந்த அடிக்கல் நாட்டுவிழா ஆந்திர மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள சகோதர பாசத்திற்கு எடுத்துக் காட்டாக நடக்கின்ற விழாவாகும். இத்திட்டத்தால், ஆந்திராவில் உள்ள இராயலசீமா போன்ற பகுதிகளில் இருக்கிற விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எவ்வளவு நம்மை என்று இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் 65 இலட்சம் ஏழைக் குழந்தைகளுக்கு அரசு மூலம் இலவசச் சத்துணவு அளித்து வருகிறோம். அதேபோல் இங்கே எனது தம்பி, ஆந்திர முதல்வர் என்.டி.ஆர் அவர்கள், ஏழை எளிய குழந்தைகளுக்கு ரொட்டியும் பாலும் அளித்து வருவதை நான் மனமாறப் பாராட்டுகிறேன். இன்றைய குழந்தைகள் நல்ல ஊட்டச் சத்தோடு வாழ்ந்தால்தான், எதிர்காலத்தில் இத்தேசம் ஒளிமயமாகும். இத்தகைய திட்டம் இந்தியா முழுவதும் வரவேண்டும்.
எங்கே போனாலும் வேலை இல்லை; போதுமான ஊதியம் கிடைக்கவில்லை; சொந்தமாகக் குடியிருக்க வீடில்லை என்கிறார்கள். இது தமிழகத்திலோ, ஆந்திராவிலோ மட்டுமல்ல; இந்தியா முழுவதும் இருக்கிறது. இந்த நிலை மாறப் புதிய திட்டங்கள் தீட்டப்படவேண்டும். படித்தவர்கள் நூற்றுக்கு நூறு என இருக்க வேண்டும். தாய்மார்கள், நூற்றுக்கு எழுபது சதவீதத்துக்கும் குறைவாகவே படித்தவர்களாக இருப்பதை வருத்தத்தோடு குறிப்பிடுகிறேன்.
ஆந்திர முதல்வர் அவர்கள் இத்திட்டத்திற்கு ஒத்துக்கொண்டது ஏன் என்று சிந்திக்கிறேன். வெறும் விவசாயத்திற்கு மட்டுமல்ல தண்ணீர். இத்திட்டத்தின் மூலம் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலையும் தரவிருக்கிறார். இந்த அணைக்கட்டு கட்டும் போது இலட்சக்கணக்கான வேலையற்றோர் வேலை பெற இருக்கின்றனர். அதுபோலவே தான் கோடிக்கணக்கான ரூபாயில் நீர்ப்பாசனத்துக்காக கால்வாய் வெட்டும் திட்டமும்.
பாசனத்திற்குத் தண்ணீர் குடிப்பதற்குத் தண்ணீர்மக்களுக்கு வேலை எல்லாம் இத்திட்டத்தில் இருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாக கிடைக்கும். அதேநேரத்தில் பல தொழில்கள் பெருகும். இதைச் சுற்றிச் சிறுசிறு தொழில்கள் இங்கு தோற்றுவிக்கப்படும். வேலைவாய்ப்பு உறுதியிருந்தால், மக்கள் வாழ்வு உத்தரவாதத்தோடு மேம்படும். காப்பீடு போல வாழ்க்கை உத்தரவாதம் கிட்டும்.
மாண்புமிகு ஆந்திர முதல்வர் அவர்கள் இங்கே பேசுகிறபோது ஒன்றைக் குறிப்பிட்டார்கள். “சொன்னதை நிறைவேற்றுகிறேன்” என்றார். எந்த மாநிலத்திலும், மூன்றே மாதத்தில் இப்படித் திட்டமிட்ட வரலாறே கிடையாது. அது என்.டி.ஆர் ஒருவரால்தான் முடிந்திருக்கிறது, நாட்டு மக்களாகிய உங்கள் துணையுடன். இந்த துணை அவருக்கு எப்போதும் இருக்க வேண்டுமென என் தாயாம் தெய்வத்தை வேண்டுகிறேன்.
இந்திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள 45 இலட்சம் மக்களுக்குக்குக் குடிநீர் கிடைக்கவிருக்கிறது. அங்கே தமிழ் பேசுவோர் மட்டுமல்ல; தெலுங்கு பேசுவோரும் இருக்கின்றனர். இதுமட்டுமல்ல; கர்நாடக மக்களும், குஜராத், பஞ்சாப், மகாராட்டிரம் இப்படிப் பல மாநில மக்களும் அங்கே இத்தண்ணீரைக் குடிக்க இருக்கின்றனர். இதை இங்கு நான் கூறக்காரணம், சகோதரர் என்.டி.ஆர். ஆந்திராவுக்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் சொந்தம். அவ்வகையில் அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். அண்ணா நாமம் வாழ்க!
தினசெய்தி நாளிதழில் இன்று (10.08.2020) வெளியான கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 47)
‘‘கண்ணீர் வெள்ளமும் கவிதை உள்ளமும்’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தமிழகத்தில் மாபெரும் அளவில் வெள்ளம் சூழ்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களும் வெள்ளக் காடாகவே காட்சி தந்தது. அந்நேரத்தில் புரட்சித் தலைவர் முதலமைச்சராக ஆட்சி நடத்திக் கொண்டிருந்த காலமது. தன்னால் இயன்றவரை தன் ஆட்சியாளர்களை அருகில் வைத்துக் கொண்டு தக்க உதவிகளை, காப்புப் பணிகளை உடனுக்குடன் விரைந்து அவர் செய்து வந்த அந்த மாபெரும் தொண்டுப் பணியைக் கண்டு தமிழக மக்களே பெருமிதமடைந்தனர். மத்திய அரசு நாள்தோறும் மாண்புமிகு முதலமைச்சருடன் உரையாடி தக்க உதவிகளையும் செய்தது.
12-11-77க்கும் 20-11-77க்கும் இடைப்பட்ட நாட்களில் வெள்ளக் கொடுமைகள் பற்றி அந்நாளைய புலவர் பெருமக்கள் பலர் பல்வேறு பாடல்களை இந்தக் கோரப் புயலை தலைப்பாக மனத்தில் வைத்து படைத்தார்கள். அந்தப் பாடல்களையெல்லாம் ஒருமுறை என்னை பார்க்கச் சொல்லி சில பாடல்களை தெரிவு செய்து அந்நாளைய செந்தமிழ்ச் செல்வி இலக்கிய இதழில் வெளியிடுவதற்கு ஆவன செய்தேன். கோரப் புயலின் பாடல்களின் உருக்கத்தையும் கலக்கத்தையும் படித்தீர்களென்றாலே அந்த கொடும் புயல், தாண்டவப் புயலின் கொடுமைகளை நீங்கள் நன்குணர்வீர்கள்.
முதல் பாடலை எழுதியவர் அந்நாளைய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத் துறையின் இயக்குநர் பெருந்தகை பேரறிஞர் தேவநேயப் பாவாணர் ஆவார்.
வெள்ளச் சேத விளரி
-----------------------------------
[ஞா. தேவநேயப் பாவாணர் ]
-----------------------------------------------
எத்தனை வெள்ள மோநாம் இதுவரை கதையிற் கேட்டோம்
இத்தனை கொடுமை யாக எவருமே கண்ட தில்லை
அத்தனார் கோயி லுள்ளும் அனைவரும் நசுங்கிச் சாகப்
பித்தமா வெறியின் வேகம் பிடித்தது, காற்றுப் பூதம்.
வெள்ளமென்றறிவிப்பின்றி, வீட்டினுள் உறங்கும் வேளை
கொள்ளையர் வருதல் போலக் கூடிய இரண்டு பூதம்
பொள்ளெனக் கேடு செய்யப் பொடித்தன பணிச்சா லைகள்
நள்ளிர வன்றே நாகை நத்தப்பா ழாயிற் றந்தோ !
கண்ணினுக் கெட்டு மட்டும் கண்டது வெள்ளக் காடு
மண்ணியல் ஊர்தி யொன்றும் மற்றவூர் சென்ற தில்லை
உண்ணவோர் உணவு மில்லை உரைக்கவோர் வழியு மில்லை
விண்ணவர் உதவி போலூண் வீழ்ந்தது, மூன்றாம் நாளே.
தமிழ் நிலந் தலையாஞ் சென்னை தாவியே, தெலுங்க நாட்டில்
இமிழ்கடல் எரியுந் தோன்ற எழுமலை யலைக ளாலே
அமிழ்கரை யூர்கள் மாய்ந் தார் ஆயிரம் பத்தோடைந்தும்
குமிழ் நுரை வெள்ளம் வந்து குடிகொண்ட தூர்க ளெல்லாம்.
ஆருயிர னைய என்றன் அன்பனை யிழந்தேன் என்பார்
கார்பணி கற்பின் செல்வக் கண்ணகி யிழந்தேன் என்பார்
சீரிய அறிவு வாய்ந்த சேயரை இழந்தேன் என்பார்
ஊரினில் உள்ள எல்லா உறவையும் இழந்தேன் என் பார்.
இரவிலே தந்தை தாயை இழந்தபிள் ளைகள் காலை
அருவிபோற் கண்ணீர் சிந்தி அம்மையப் பனையே கூவி
வெருவியே யழுது தேம்பி வெந் தழல் மெழுகு போல
உருகியுள் வெந்த கோலம் உள்ளுவார் குலையும் வேகும்.
அருந்த லாய் விற்ற காலை அரும்பெரும் பாடு பட்டு ‘
வருந்தியே தேடிப் பெற்ற வளம்படு பொருளும் வீடும்
பருந்தடி குஞ்சு போலப் பசக்கென மறைந்து போக
இருந்துபின் அழுது நைந்தார் எத்தனை பேர்க ளம்மா !
அரசனே கொடுமை செய்யின் ஆரிடம் சொல்வ தென்பர்
பரசுறு கடவுள் காப்பும் பறந்திடின் நாமென் செய்வாம்
துருசினில் மாயும் மக்களின் தொல்லைகள் தீரும் வண்ணம்
கரிசொடு செருக்கொ ழிந்து காவல்பூண் அமைச்சர் ஆள்க.
பெருங்கவிஞரும், நாடக ஆசிரியரும், புரட்சித் தலைவரை மிகவும் கவர்ந்த உரையாசிரியருமான கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியன் படைத்தப் பாடலை பதிவு செய்துள்ளேன்.
கோரப் புயலே!
==============
(கவிஞர் புத்தனேரி ரா.சுப்பிரமணியம்)
====================================
கோரப் புயலே! - கொலை
காரப் பயலே!
கோடிக் கணக்கில் சேதம்விளைத்த
கொடுமையும் ஏனோ? - நீ
கூற்றுவன் தானோ?
நாகப்பட்டினம் கரையைத் தாக்கி
நாட்டில் புகுந்தாயே!
நன்செய் புன்செய் தோப்பும் துரவும்
நாசம் செய்தாயே!
வேகத் தாலே கடலும் குமுறி
விண்ணும் கொட்டியதே!
வெள்ளம் புரண்டு பிரளயம் போலே
வேதனை முட்டியதே!
உன்வெறி யாட்டம் எத்தனை எத்தனை
உயிரைக் குடித்ததுவே!
வன்முறை யாலே மக்களை வதைக்கும்
வஞ்சகம் ஏன் கொண்டாய்?
அந்தக் காலம் லெமூரி யாவை
ஆழியும் விழுங்கியதே! - அந்த
அவலத் தாலே செந் தமிழ் நாட்டின்
அளவும் சுருங்கியதே!
மாபெரும் எழுத்தாளர் திரு.நாரண துரைக்கண்ணன் அவர்கள் உணர்வு பூர்வமாக எழுதிய பாடலையும் இணைத்துள்ளேன்.
அறந் தானோ ? இறைவா!
=============================
(நாரண - துரைக்கண்ணன்)
////////////////////////////////////////////////////////////
ஐயகோ! என்ன சொல்வேன் ?
ஆற்றொணாக் கொடுமை! அந்தோ !
பையவே சுழன்ற காற்று
புயலாக மாறி நம்மைக்
கையறவு கொள்ள வைத்த
கொடுமையைக் கூறப் போமோ?
வையத்தில் விளைந்த பச்சைப்
பயிரெலாம் பாழாய்ப் போச்சே !
'வான் மழை அமிழ்த' மென்றே
வள்ளுவர் குறளில் சொன்னார்;
தேன்துளி போன்று வானம்
சொரியாது புயலாய் மாறின்,
நாற்றிசை நடுங்கி நிற்கும்;
நஞ்சாகி நாசஞ் செய்யும்;
மாண்பயன் கெட்டே போகும்;
மக்களும் மாண்டு போவார்.
இருநாட்டில் இதுதான் கண்டோம் ;
என் னன்ன கொடுமை கேட்டோம்?
தருநிகர் தஞ்சை, நாகை,
தென் திசை முற்று மாகப்
பெரும்புயல் காற்று வீசிப்
பல்பொருள் நாச மாக்கிக்
கருங்கடல் போல நஞ்சைக்
கொட்டியே கெடுத்தது; அம்மா!
பெய்துமே கெடுக்கும் வானம் ;
பெய்யாதுங் கெடுக்கும் என்பார்;
கொய்கதிர் சூறைக் காற்றில்
கொத்தாகக் கொட்டிப் போச்சே!
மெய்யாக மழைதான் இன்று
மேதினி குலுங்க வைத்து
நைவித்த துயிர்கள் தம்மை;
நாசமே பலவாய் ஆச்சே!
கவிஞர் அரு.சோமசுந்தரன் அவர்கள் உணர்வுக் குவியலாக பாமாலை படைத்ததையும் இணைத்துள்ளேன்.
மடப்புயல்
==========
(கவிஞர் அரு. சோமசுந்தரன்]
-----------------------------------------------
பல்லாண்டாய் மழையின் றிப் பரிதவித்த
பாரதத்தின் தென்பகுதி மக்க ளுக்குச்
சொல்லாமல் இருமாதம் பெய்து கெட்டுச்
சொத்தெல்லாம் அரித்ததுடன் சூறை யாடிக்
கொல்லாமல் கொன்றதெலாம் நவம்பர் மாதம்
கொட்டாத மழையெல்லாம் கொட்டித் தீர்த் தாய் !
வில்லாக இரும்பெல்லாம் வளைத்து விட்டாய்
வீடெல்லாம் மேடாக விளைத்து விட்டாய்.
கடல் நாகை எனஎண்ணிப் புகழ்ந்த மண்ணைக்
கண்மூடித் திறவாமுன் மிதக்க வைத்துத்
திடமான வீடெல்லாம் நொறுக்கி விட்டுத்
தெருவெல்லாம் பிணக்காடாய் மாற்றி மண்ணை
முடமாக்கும் மடப்புயலே! வங்க மென்னும்
முத்தான கடலுக்குள் தோன்றி இங்கே
இடம்பிடிக்க வந்தாயோ ? மழையைக் கொட்டி
இடி இடிக்க வந்தாயோ ? எதற்கு வந்தாய் ?
பாலாற்றில் பேருந்து வீழ்ந்த தாலே
பலபேரின் உயிர் கொண்டாய் ; வேடசெந்தூர்
நாலாறு திசைவீழக் குடக னாற்றின்
நாற்கோடி அணைபேர்த்துப் பலரைக் கொன்றாய்
சேலாறு காவிரியும் சீரங் கத்தில்
சேராத கொள்ளிடமும் சேர்த்து வைத்தாய்
கோளாறு புயலாகி வருவ துண்டு
கூற்றாகி மண்ணெல்லாம் குடிப்ப துண்டோ !
சாலை யெலாம் உடைத்ததனால் போக்கு மில்லை
சலசலக்கும் வெள்ளத்தால் வரத்து மில்லை
ஆளை யெலாம் கொன்றதனால் மூச்சு மில்லை
அடைமழையாய் நின்றதனால் பேச்சு மில்லை
காளை முதல் கோழிவரை மிதக்க விட்டாய்
கட்டடங்கள் குடிசையெலாம் பறக்க விட்டாய்
பாளைவிடும் தோப்பெல்லாம் பலியா டாக்கிப்
பயிர் விளையும் நிலமெல்லாம் மண்மே டாக்கி.
எளியோரின் உயிர்குடித்தாய் தமிழர் நாட்டில்
இருநூறு கோடிக்குச் செலவு வைத்தாய்
வளியாக வந்தெம்மை வதைத்த தோடு
வங்கத்தில் மறுபுயலாய் வடிவெ டுத்துச்
சுழியாகிச் சூறையென ஆந்தி ரத்தில்
சுற்றுலா மேற்கொண்டு குண்டூர், கிருஷ்ணா
வழியான மாவட்டம் விரைய மாக
வெறியாட்டம் போட்டதெல்லாம் வெற்றி தானா?
கண்ணான தென்னாட்டைச் சாடு தற்கே
கடலோடும் முகிலோடும் கைகள் கோத்துப்
பண்ணான இடிபேச மின்னல் கூசப்
படையெடுத்து வந்தகடும் புயலே ! எங்கள்
புண்ணான நெஞ்சத்தால் பாடு கின்றோம்
புயலே நீ வாராதே ! பொறுமை பூண்டு
மண்ணான தனுக்கோடி பூம்பு காரை
மறவாமல் எண்ணிக்கொள் மறைந்தே போ போ !
அதேபோல், கவிஞர் கோ.வே.பெருமாள் அவர்கள் இயற்றிய பாடலையும் இணைத்துள்ளேன்.
வழங்கிடுவோம், வருவீரே !
============================
(கோ. வே. பெருமாள்]
======================
தேனூறும் ஆறுபல செழிப்பூட்டும் தென்னாடு,
வானூறும் கதிர்மதியம் வயங்குகின்ற பொன்னாடே!
இணனூறும் உழைப்பினையே உன்னுகின்ற இந்நாடு,
கானூறும் கவின்செல்வம் கனிவிக்கும் நம்நாடே!
இன்னமுதத் தமிழகத்தே ஏர்தஞ்சை திருச்சியிலே,
என்னென்போம்? முன்பொருகால், இருபத்தைந் தாண்டுகள்முன்
பன்னியவா யிரத்துத்தொள் ளாயிரத்தைம் பத்திரண்டில்,
மின்னுங்கார்த் திகைத்திங்கள் மிக்கபுயல் தாக்கியதே!
வங்கப்புயல் இப்போதும், வந்திருமுறை சூறையாகி,
அங்கங்கே மழைவெளத்தால், அது நிலைமை தந்ததுவே!
மங்காத ஆந்திரமும் மலையாளம் கன்னடமும்
எங்குமிலா இத்துயர்க்கே இலக்காகி நொந்தனவே!
மாட்டைக் கன்றினை மனிதரைமிக
வாட்ட வந்ததிப் புயலடா !- காலன்
காட்ட வந்ததிச் செயலடா!
உள்ளங் காடெனத் துயரம் மண்டிட
வெள்ளக் காடென் மாறியே-கெட
வீறு புயலது சீறியே !
கொள்ளை கொண்டது வளமும் உயிர்க்குலக்
கொத்த ழிந்திடச் செய்ததே - அழிவுக்
கூத்து மழையெனப் பெய்ததே !
மாலைமாலையாய் மனிதர் கண்களும்
வற்றி டா தகண் ணீருமே-வடிக்க
வாழ்வு கெட்டதைக் கூறுமே !
காலப் புயலுடன் ஓலமிடுமழை
கனத்த தீனியைத் தந்த தாய்-கொடுங்
கழுகுக் கூட்டமும் வந்ததே !
வீழ்ந்த பிணமலை அழுகி நாறிட
விரைந்து போயின கழுகெலாம்-கொத்த
விண்ப றந்தன பொழுதெலாம் !
வாழ்ந்த மானிட வாழ்வு தானொரு
மாயக் கன வென லானதே -உயிர்
மாயக் கன வென லானதே !