ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 06 March 2026 அனரமுதல
(குறட் கடலிற் சில துளிகள் 41 : சூழலால் உருவாவதே அறிவு!- தொடர்ச்சி)
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௫ – 455)
மனம் தூய்மை யாதலும், செயல் தூய்மை யாதலும் தான் சேரும் இனத்தின் தூய்மையால் உருவாகும்.
பதவுரை:
மனந்தூய்மை-மனநலன், உள்ளத் தூய்மை; செய்வினை தூய்மை-செயல் நயம்; இரண்டும்-இரண்டும்; இனம் – சேர்க்கை; தூய்மை-நன்றாதல்; தூ-பற்றுக்கோடு; ஆ-ஆகும்படி; வரும்-உண்டாம்.
மனத்தூய்மை என்பது மனத்தில் மாசு இன்றி இருத்தல். அஃதாவது தனக்குத் தீமை தரும் என்று கருதும் செயல்களைத் தான் பிறருக்குச் செய்யாதிருக்க வேண்டும். அதுபோல், தனக்கு நன்மை விளைவிக்கும் எனக் கருதும் செயல்களைப் பிறருக்குச்செய்தல் வேண்டும்.
ஒருவருக்கு அவர் சேர்க்கைக்கு அல்லது கூட்டத்திற்கு அல்லது நட்பிற்கு ஏற்பவே பழக்க வழக்கங்கள், ஒழுக்கங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் முதலியன உருவாகின்றன. கூடா நட்புடன் தொடர்பு ஏற்படும் பொழுது தீய எண்ணத்திற்கு ஆட்பட்டுத் தீய செயலில் ஈடுபட்டு விடுகின்றனர். அதனால் தீமையே விளைகிறது. சேர்க்கையால் நல்ல நண்பர்கள் அமையும் பொழுது மனத்தூய்மை கொண்டு நற்செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனால் நன்மையே விளைகிறது.
வஞ்சகர்களுடன் சேரும்பொழுது மனங்கெட்டு வஞ்சச் செயல்களில் ஈடுபட்டு விடுகின்றனர். அறவோர்களுடன் சேரும்பொழுது மனம் தூய்மை அடைந்து அறச் செயல்களில் நாட்டம் கொள்கின்றனர். மூட நம்பிக்கையருடன் சேருபவர்கள் மனந்திரிந்து மூடச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பகுத்தறிவாளர்களுடன் பழகினால் நன்மனம் கொண்டு பகுத்தறிவுச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே, தீய இனத்திலிருந்து விலகியும் நல்லினத்துடன் இணைந்தும் வாழ வேண்டும்.
எனவேதான் திருவள்ளுவர் மனத் தூய்மையையும் அதனால் நிகழும் செயல் தூய்மையையும் வலியுறுத்துகிறார்.
“இனந்தூய்மை தூவா வரும்” என்றால் என்ன பொருள்? இதற்கு இன்றைய உரையாசிரியர்கள், ‘நல்ல கூட்டுறவால் வரும்’, ‘அவன் நெருங்கிப் பழகும் மனிதர்களுடைய இனம் தூய்மையாக இருந்தால்தான் முடியும்’, ‘ அவன் சேரும் இனத்தாரின் புனிதத்தைச் சார்ந்தே அமைவன ஆகும்’, ‘தாம் சேர்ந்துள்ள இனத்தின் காரணமாக உண்டாகும்’ என்று வெவ்வேறு பொருள் கூறுகின்றனர்.
“தூவா வரும்“ என்றால் என்ன?
‘தூவா வரும்’ என்ற தொடர்க்குப் பற்றிவரும், காரணமாகவே வரும், பற்றுக் கோடாக உளவாம், பொறுத்தே ஏற்படும், பொறுத்தே உண்டாகும், வரும், தருவதால் வருவன, சார்ந்தே அமைவன ஆகும், காரணமாக உண்டாகும், பற்றுக்கோடாக நிலைத்து நிற்கும் என அறிஞர்களின் கருத்துகளைக் குறள் திறன் தொகுத்துத் தருகிறது.
குறள்நெறிக்காவலர் பேரா.முனைவர் சி.இலக்குவனார், இக் குறளை ஆட்சியாளருக்கு அறிவுரை கூறுவதாகப் பின்வருமாறு கூறுகிறார்.
“ஆட்சிப் பொறுப்பினை ஏற்போர்க்கும் பிறர்க்கும் உள்ளத்தூய்மையும் வினைத் தூய்மையும் இன்றியமையாது வேண்டும். இவையிரண்டும் இல்லையேல், எவரும் நற்பணி ஆற்றி நல்வாழ்வு வாழ்தல் இயலாது. தூய்மையே வாழ்வின் உயிர் என்று கூறலாம். அத்தூய்மையும் இனத்தால்தான் உண்டாகின்றது. ஆதலின் சிற்றினம் தவிர்க்கப்படல் வேண்டும்” என்கிறார்.
ஆட்சிப்பொறுப்பினை ஏற்போர்க்கும் என்று நிறுத்தி விடாது, பிறர்க்கும் என விளக்கம் தருகிறார் இலக்குவனார்.
எனவே, இக்குறள் யாவருக்கும் பொருந்துவதே. எனவே, அனைவரும் இக்குறளைப் பின்பற்றி, தூய்மையான மனத்துடன் செயலிலும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இவற்றுக்குத் தூய இனத்துடன் சேர வேண்டும்.
ஆதலின் நாம் தூய இனத்துடன் சேருவோம்! தூய மனம் கொள்வோம்! தூய செயல் ஆற்றுவோம்!
(வெருளி நோய்கள் 1225 -1228 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1229 -1232
1229.தாய்மாமா வெருளி- Avunculusphobia/Gufuphobia
தாய்மாமா குறித்த அளவுகடந்த பேரச்சம் தாய்மாமா வெருளி.
தந்தை மைத்துனர் வெருளி/அம்மான் வெருளி – Gufuphobia; தாய்மாமா வெருளி – Avunculusphobia என்று இருவகையாகக் குறிக்கப் பெறுகிறது. தந்தை மைத்துனர் என்றால் தாயின் உடன் பிறந்தவர். அப்படியானால், தாய்மாமா. எனவே, இரண்டையும் தாய்மாமா வெருளி என்றே சொல்லலாம்.
தங்கை அல்லது தமக்கை மக்களுக்குத் தாய்மாமன்மார் சீர் செய்வதைத் தங்கள் கடமையாகவும் பெருமையாகவும் கருதுவர்.
00
தாய்வழி அத்தை தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தாய்வழி அத்தை வெருளி.
Matertera என்னும் இலத்தீன் சொல்லிற்கு அத்தை எனப் பொருள்.
00
தாய்வழி தாத்தா தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தாய்வழி தாத்தா வெருளி.
மூத்தோர் தொடர்பிலான பொதுவான பேரச்சம் போன்றதுதான் இதுவும்.
00
தாய்வழி மாமா தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தாய்வழி மாமா வெருளி.
தாய்மாமாவின் கண்டிப்பு, வழிகாட்டுதல் குறித்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5