பின்னோக்கி ஓடும்
நினைவுகள். – 23-5-2026
நேற்று இரவு நான் ஒரு சொட்டு தூங்கவில்லை. ஒரு சொட்டு என்றால் ஒரு விநாடிகூட. ஏற்கனவே காய்ச்சல். வேறு எந்த வேலையும் செய்யாமல், மாத்திரைகளைப் போட்டுவிட்டு, 11:30 மணிக்கே படுத்தால் தூக்கம் என் கண்களைத் தழுவ மறுத்தது. நானும் என்னென்னவோ செய்துபார்த்தேன். சங்கீதங்களை வரிசையாகச் சொல்லிப்பார்த்தேன். பாதியிலேயே நினைவு ஓடைப்பட்டிக்குக் கொண்டுபோனது. ஜெபம்செய்து பார்த்தேன். ஆரம்பித்திலேயே மனக்குதிரை முரண்டுபிடித்து கட்டுக்கடங்காமல் ஓடைப்பட்டியை நோக்கிக் காற்றாய்ப் பறந்தது. என்ன ஆயிற்று எனக்கு? பொதுவாக, படுக்கும் முன் சங்கீதங்களைச் சொல்லிவிட்டு, ஒரு குட்டி ஜெபம் செய்துவிட்டுப் படுத்தால் அடுத்தநாள் காலையில்தான் எழுந்திருப்பேன். இன்று முற்றிலும் மாறான அனுபவம். கொஞ்சநேரம் குதிரையை அடக்கமுடியாமல், அதன் போக்கில் விட்டுவிட்டேன். லாவகமாக அதன்மேல் ஏறி அமர்ந்தேன். நாலுகால் பாய்ச்சலில் அது பறந்து சற்று நேரத்தில் அது என்னை ஓடைப்பட்டிக்குக் கொண்டுவந்து விட்டது. அந்த வேகத்தில் காலச் சக்கரம் பின்னாக சுழன்று 80 ஆண்டுகளுக்கு முன்னால் வந்து நின்றது. 1940 களில் முற்பகுதி.
ஓடைப்பட்டி என்பது நான் பிறந்த ஊர். ஆண்டு 1943. அன்றைய மதுரை மாவட்டம், இன்றைய தேனி மாவட்டம், கம்பம் சாலையில் உள்ள சின்னமனூர் என்ற ஊருக்குக் கிழக்கே 5 மைல் (8கி.மீ) தொலைவில் அமைந்த ஊர். ரொம்பவும் குக்கிராமம் அல்ல. அந்தப் பகுதிக்கு அது சற்றுப் பெரிய ஊர். அங்கு என் தந்தை கள்ளர்பள்ளி ஆசிரியராக இருந்தார். தாயார் District Board பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியை. நான் இரண்டாவது பிள்ளை. அந்த இரண்டு பள்ளிகளிலுமே ஐந்தாம் வகுப்பு வரைதான் உண்டு. அதுவும் அப்பாவின் பள்ளி ஒற்றையாசிரியர் பள்ளி., மொத்தம் சுமார் 50 மாணவர்கள் இருப்பார்கள். 5 வகுப்புகளுக்கும் மாறிமாறி பாடங்கள் நடத்துவார். அண்ணன் கள்ளர்பள்ளி மாணவர். நான் அம்மா பள்ளி மாணவன்.
அந்த ஊரில் கொஞ்சம் அதிகமாக இருந்தவர்கள் ஒக்கலிகக் கவுண்டர்கள். கன்னடம் பேசுவார்கள். என் நண்பர்கள் அனைவரும் அந்த வகுப்பினரே. அவர்களுடன் கன்னடம் சரளமாகப் பேசுவேன். அவர்கள் விவசாயிகள். நிறையப்பேருக்குத் தோட்டங்கள் இருக்கும். கமலைப் பாசனம். கமலை என்றால் தெரியுமா? கிணற்று நீரை, தோப்பறை கொண்டு கமலை மாடுகள் மூலம் இறைப்பார்கள்.
கயிற்றில் கட்டி மாடு இழுக்கிறதே, அதுதான் தோல் பறை = தோப்பறை. தோலினால் ஆனது. அந்தத் தோல் கிழிந்துபோனால், இறைக்கும் நீர் கீழே சிந்திப்போகும். எனவே அதைச் சரிசெய்ய தோல்வினைஞர்கள் இருப்பார்கள். அவர்கள் இனப்பெயரை இங்கு குறிப்பிடுவது நாகரிகம் அல்ல. இவர்கள் தோல் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் செய்வார்கள். அந்தக் காலத்தில் மிகப் பெரும்பாலும் யாரும் செருப்பு அணிவதில்லை. ஒரு சில பெரியவர்கள் – பணக்காரர்கள் தான் செருப்பு அணிவார்கள். அதை இவர்கள்தான் செய்துதருவார்கள். மூலப்பொருள் மாட்டுத்தோல். ஒரு சிலர் அது சீக்கிரம் தேய்ந்துவிடாமல் இருக்க செருப்பின் அடிப்பகுதியில் இரும்புக் குமிழ்களை அறைந்திருப்பார்கள். கடினமான தரையில் நடக்கும்போது சரக் சரக் என்று சத்தம் எழுப்பும். முள்காட்டில் வேலை செய்பவர்கள் செருப்பு அணிந்திருப்பார்கள். இன்றைக்கு யாரிடமாவது ஒருவரைப் பற்றி அடையாளம் கேட்டால், அந்த செருப்பு போட்டிருப்பானே அவனா? என்று கேட்டால் நாம் சிரிக்கமாட்டோமா? ஆனால் செருப்பு அடையாளமாக இருந்திருக்கிறது.
தொடுதோல் கானவன் கவை பொறுத்து அன்ன - அகம் 34/3
இந்த அகநானூற்றுப் பாடலில் தொடுதோல் கானவன் என்று குறிப்பிடப்படுபவன் முள்ளம்க்காட்டில் வேலை பார்க்கும் கானவன். தொடுதோல் என்பது செருப்பு. இங்கே அது அவனுக்கு அடையாளமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் ஓடைப்பட்டியில் பிறந்து வளர்ந்ததால் இதன் முழுப்பொருளை உணர முடிந்தது.
இதுமட்டுமல்ல – இன்னும் பல இடங்களில் சங்க இலக்கியங்களைப் புரிந்துகொள்ள என் ஓடைப்பட்டி வாழ்க்கை உதவியது.
இன்னும் வரும் ---------
ப.பாண்டியரஜா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/304cb8cc-18a0-481a-b0c4-9dfb5953c77dn%40googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/304cb8cc-18a0-481a-b0c4-9dfb5953c77dn%40googlegroups.com.

--