
கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு வகையில் தமிழ்நாட்டிற்கும் கொரியாவிற்கும் இடையேயான பண்பாட்டு ஒற்றுமைகள் பற்றியும் தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகளையும் அவ்வப்போது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மேற்கொண்டு வந்தது. இதன் மிக முக்கிய வளர்ச்சியாக நான்கு நூல்கள் பேராசிரியர் டாக்டர் நா. கண்ணன் அவர்களால் எழுதப்பட்டு அவை தமிழ், ஆங்கிலம், கொரிய மொழி ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளில் வெளிவந்தன.
இந்த நூல்கள் உலகளாவிய தமிழர்கள் மத்தியில் இக்கருத்தாக்கத்திற்கான நல்ல வரவேற்பையும்
பெற்றது.
தமிழ் மொழிக்கும் மங்கோலிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராய்ந்த செக் நாட்டின் பேராசிரியர் டாக்டர் வாசேக் மறைந்த பின்னர் அந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை. இதே போல ஜப்பானிய மொழி ஆய்வுகள் பேராசிரியர் ஓனோவுக்குப் பின்னர் இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் மனோன்மணி சண்முகதாஸ் மற்றும் பேராசிரியர் சண்முகதாஸ் இருவரால் முன்னெடுக்கப்பட்டன. அவர்களும் முதுமையை எட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இத்துறையிலும் ஆய்வுகள் செய்வதற்கு இளம் ஆய்வாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
இப்போது தமிழ் கொரிய மொழி ஆய்வுகள் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். இதே போல ஏனைய கிழக்காசிய நாடுகளின் மொழிகளுக்கும் தமிழ் மொழிக்கான பண்பாட்டு வரலாற்று தொடர்புகளை அலசி ஆராய இளம் தலைமுறை ஆய்வாளர்களின் தேவை இன்றி அமையாது. இதனை முன்னெடுக்கின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு. இதனை செயல்படுத்துகின்றது இந்த அமைப்பின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவான கடிகை.
அவ்வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பொறுப்புக் குழுவின் உறுப்பினர் முனைவர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் சங்கப்பலகை அமைப்பின் பொறுப்பாளர் முனைவர் சங்கரநாராயணன் ஆகியோரின் ஒத்துழைப்போடு தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை பிரிவு ஒரு கருத்தரங்கை வெற்றிகரமாக நிகழ்த்தியது.
கருத்தரங்கில் பேசப்பட்ட அனைத்து விஷயங்களும் கட்டுரைகளாக ஆவணப்படுத்தப்பட்டு அவை "தூர கிழக்கில் தமிழ் ஆய்வுகள்: கொரியா" என்ற தலைப்பில் நூலாக வடிவம் கண்டது.
இந்த நூல் நேற்று 9 ஜூன் 2025 அன்று தமிழக தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி அவர்களும் தலைமைச் செயலாளர் மதிப்பிற்குரிய திருமிகு முருகானந்தம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டிற்கான கொரியா குடியரசின் தூதர் அவர்களும் துணைத் தூதர் அவர்களும் கலந்து கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மொழி பண்பாடு மற்றும் வணிகத் தொடர்புகளை மையப்படுத்தி இரு நாடுகளும் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியும் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தமைக்கு இதன் பின்னணியில் ஒவ்வொரு பணிகளையும் முன்னெடுத்து செயல்படுத்திய தமிழ் மரபு அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் கல்வி பிரிவான கடிகை அமைப்பின் பொறுப்பை ஏற்றிருக்கும் முனைவர் பாப்பா அவர்கள் இந்த நிகழ்ச்சியின் முழுமையான ஒருங்கிணைப்பை ஏற்றுக் கொண்டார்.
பேராசிரியர் நா கண்ணன் அவர்கள் நேற்று வெளியிடப்பட்ட நூலை சரிபார்த்து அதன் அமைப்பு அதன் உள்ளடக்கம் அதில் உள்ள கட்டுரைகள் ஆகியவை செம்மையாக வடிவம் பெற முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார். அவருக்குத் துணையாக பதிப்பக பிரிவில் அருணேஷ் நூலை உருவாக்கி வழங்கினார்.
கடிகை அமைப்பின் சென்னை பகுதியில் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவியவர் திரு கிருஷ்ணகுமார்.
நூலுக்கான அட்டை இப்படித்தான் அமைய வேண்டும் என்ற எனது கருத்தைப் பகிர்ந்த போது அக்கருத்துக்கு வடிவம் அளித்தவர் எழுத்தோவியர் எஸ் நாணா. அது மட்டுமின்றி முதலமைச்சருக்கும் கொரிய குடியரசின் தூதருக்கும் வழங்கப்பட வேண்டிய நினைவுச் சின்னங்களை எப்படி வடிவமைக்க வேண்டும் என்று எனது கருத்தை பகிர்ந்து கொண்ட போது அதற்கு முழு உருவம் கொடுத்தவரும் இவரே.
நூல்கள் உருவாக்கம் கண்டு அச்சுக்கு சென்று அவை முழுமை பெற்று தரமான வடிவில் அச்சிடப்பட்டு இரண்டு வகை வடிவங்களில் வெளிவர முழுமையாக பொறுப்பெடுத்துக்கொண்டு செயல்படுத்தியவர் நமது அருங்காட்சியகப் பொறுப்பாளர் அர்ஷா.
இவர்களோடு கருத்தரங்கம் மட்டுமின்றி தொடர்ச்சியான இணைய வழி சந்திப்புகளுக்கான ஏற்பாடுகளை செய்வதோடு நிகழ்ச்சியின் செயல்பாடுகளுக்கு உடனிருந்து ஒத்துழைப்பு நல்கியவர் முனைவர் இறைவாணி.
இவர்கள் ஒவ்வொருவரது செயல்பாடுகளும் இந்த நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் தொடங்கி நேற்று வரை முழுமையாக வெற்றி காண அடிப்படையை வகுத்துக் கொடுத்தது.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன்.
கொரியா -தமிழ் மொழி தமிழ் பண்பாடு ஆய்வுகள் என்ற இத்துறையில் இந்த ஆண்டு மேலும் சில செயல்பாடுகள் நடைபெற உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்துடனும் கொரியா குடியரசின் தூதரகத்துடனும் இணைந்த வகையில் அச்செயல்பாடுகள் அமையும்.
தமிழின் சிறப்புகளைப் பற்றி வீண் பெருமை பேசுவதை விட்டு ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்து செய்ய வேண்டிய தருணத்தில் தமிழ் ஆய்வு நிறுவனங்கள் இருக்கின்றன.
அவ்வகையில் தமிழ்நாட்டில் இயங்கும் ஒவ்வொரு கல்லூரியும் பல்கலைக்கழகமும் தமிழ் ஆய்வு நிறுவனங்களும் இதனை கருத்தில் ஏற்று இத்துறையின் வளர்ச்சிக்கான தங்கள் பணியை ஆற்ற வேண்டும். அத்தகைய முயற்சிகளில் இணைந்து செயலாற்ற தமிழ் மரபு அறக்கட்டளை ஆர்வத்துடன் உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்!
-முனைவர் க சுபாஷினி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.