"அப்பாக்கள் தினம்"
========================================ருத்ரா
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
இது
யாருக்கு யார் சொன்னது?
தெரியவில்லை.
மறந்து போனது.
ஒண்ணாங்கிளாஸில்
படித்தது.
"ஃபாதர்ஸ் டே"
பளிச்சென்று கண்ணைப்பறிக்கிறது
கடைகளில் கண்ணாடிக்குள்
அடுக்கப்பட்டிருக்கும்
வர்ண வர்ண அட்டைகள்.
ஊடுருவித்தேடினேன்.
என் முக பிம்பங்களின்
வழியாக
என் அப்பாவுக்கு தேடினேன்.
அன்று
என் முதுகில் அவர்
"பளார்" என்று போட்டதை
நான் என்ன
"புறமுதுகு"காட்டிய கோழையா?
என்று இன்று
புறநானூற்று வீர மீசை முறுக்கவில்லை.
அவசரப்பட்டு
நான் எழுதத்துடித்திருக்கும்
"அக நானூறு"க்கு
பிழை திருத்தம் போட்டிருப்பார்
அவ்வளவு தான்.
பிறகு
அவரே தோழனாக மாறிய
விந்தைத்தருணங்கள்
எத்தனை?எத்தனை?
அம்மா என்றால்
அவளுக்குள்
நான் இருந்த இடம் தெரியும்.
அந்த வலி தரியும்.
அதனால் அவள் விரல்கள்
எனக்கு அன்னத்தூவிகள்.
அப்பா என்றால்
என்னைத்
தடம் பதித்தது
மட்டும் தானே தெரியும்.
ஆனல்
தான் கூழாங்கல் உயரம் இருந்தாலும்
தன் நிழல்
ஒரு பேரொளியின்
இமயம் ஆக இருக்கவேண்டும்
என்ற தவிப்பே
அவர் விரல்களை
அப்படி
"உருட்டுக்கட்டைகள்"
ஆக்கி இருக்கலாம்.
அந்த முரட்டு அன்பில்
என்னை
"அவையத்து முந்தி இருப்ப"எனும்
செயலுக்கு
அவர் இழுத்த செக்குகள் எத்தனை?
நுரை தள்ள நுரை தள்ள
இந்த வாழ்க்கைப்பாறாங்கல்லில்
நைந்து பிழிந்த காட்சிகள்
எத்தனை?
அப்பர் இல்லை நான்.
இருந்தாலும்
"அப்பா நான் வேண்டுதல் கேட்டேன்"
உங்களிடம் ஒன்றை!
என்னை
அடிக்கு முன்
அல்லது
அடிக்கும்போது
உங்கள் கை எவ்வளவு
வலித்திருக்கும்
என்று
இன்று தான் புரிந்து கொண்டேன்.
வலிக்கும் மனத்தைத்தான்
உருட்டித் திரட்டினீர்கள்
உருட்டுக்கட்டைகளாக என்று
இன்று தான் புரிந்து கொண்டேன்.
இன்னொன்றும் கேட்கிறேன்
அந்த பிரம்புகளை
என்னிடம் தந்து விடுங்கள்.
என் பிள்ளைகளுக்கு
அதிலிருந்து தான்
பூச்செண்டுகள்
நான் தயார் செய்ய வேண்டும்.
==============================================ருத்ரா