தபால் பெட்டி
— கரந்தை ஜெயக்குமார் கடிதம். ஒரு காலத்தில் எண்ணங்களை, சுப, துக்க நிகழ்வுகள் குறித்த தகவல்களை, உற்றார் உறவினர்களுக்கு சுமந்து சென்று தெரிவித்த ஒரே வாகனம் கடிதம்.
இன்று கடிதம் எழுதும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. அலைபேசியின் வரவால் கடிதத்திற்கு வேலையே இல்லாமல் போய்விட்டது.
அக்காலத்தில், தெரு முனைகளில் ஆங்காங்கே தபால் பெட்டிகள் தொங்கும். அவ்வூரில் உள்ளவர்கள் எல்லாம், தங்களது கடிதங்களைக் கொண்டு வந்து இப்பெட்டிகளில் போடுவார்கள்.
ஆனால், யாருடைய வீட்டிலாவது, வீட்டிக்கு உள்ளே தபால் பெட்டி இருந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
இவர் வீட்டில் இருந்தது.
வீட்டின் வரவேற்பறையில், ஒரு தபால் பெட்டி வைத்திருந்தார். வீட்டில் இருப்பவர்களுக்காக மட்டும்.
வியப்பாக இருக்கிறதல்லவா? இவர் குடும்பம் பெரிய குடும்பம்.
எழுத்து ஒன்றே மனதின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான எளிய வழி என்று நம்பினார்.
எனவே, வீட்டில் உள்ள அனைவரும், தங்களின் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், குறைகள் என அனைத்தையும் எழுதி இந்த தபால் பெட்டியில் போடச் சொல்வார்.
அவ்வாறே குடும்பத்தினர் அனைவரும் எழுதிப் போட்டார்கள்.
இவரது மகன், தன் காதலை, அப்பாவிடம் நேரில் கூற பயந்து, கடிதமாய் எழுதி இந்தப் பெட்டியில்தான் போட்டார்.
வார இறுதி நாளில், இந்த தபால் பெட்டியை அவர் திறப்பார்.
தபால் பெட்டியில் இருந்த படைப்புகள், கடிதங்கள், குறைகள், வேண்டுகோள்கள் முதலியவற்றிற்கு தகுந்த பதில் அளிப்பார்.
இந்த தபால் பெட்டியால், வீட்டில் ஒளிவு மறைவற்ற தன்மை உருவானதோடு, ஒருவரை ஒருவர் பகிர்ந்துகொள்ள எளிய வழியும் பிறந்தது.
குடும்ப உறவுகளின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள, இந்த தபால் பெட்டி முறையைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?
ஒரு எழுத்தாளர், சாதாரண எழுத்தாளர் அல்ல. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்.