தமிழறிஞர் மறைமலை அடிகள்ஒரு கல்லூரியில் தமிழாசிரியர் தேவை என விளம்பரம் வருகிறது. அறுபதில் ஒருவராக தமிழறிஞர் மறைமலை அடிகளும் தன் இளமைப் பருவத்தில் விண்ணப்பிக்கிறார்.
அக்கல்லூரியின் மூத்த தமிழறிஞர் இவரை நேர்முகம் கண்டார்.
தொல்காப்பிய இலக்கணத்தில் இருந்து எளிதில் விடையளிக்க முடியாத வகையில் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டது. மூத்த அறிஞர் எதிர்பார்க்காத வகையில் பதில் தந்தார் இளைஞர். அத்தோடு நிற்க வைக்க விடவில்லை அவரின் இளமை மிடுக்கும், புலமைத் துடுக்கும்.
இவரென்ன நம்மை ஆராய்வது? என்று மூத்த அறிஞரை நோக்கி, யான் கேட்கும் மூன்று வினாக்களுக்கு தாங்கள் விடை தர வேண்டும் என்று அதே தொல்காப்பியம் தொடர்பான மூன்று நுணுக்கமான ஆய்வுக் கேள்விகளையும் கேட்டார்.
சற்றே யோசித்த அந்த மூதறிஞர், நீரே இம்மூன்றிற்கும் விடையளிப்பீர் என்று கூறிட, அந்த இளைஞரும் பதில் தந்திட்டார்.
தம்மையே கேள்வி கேட்டவர் என்று கருதாது மூத்த தமிழறிஞரோ அந்த இளைஞரிடம் பேரன்பு கொண்டார். கல்லூரி முதல்வரிடம் அழைத்துச் சென்று இவர்தம் ஆழ்ந்த அரும் புலமை, கூரறிவு முதலியவற்றை எடுத்துக் கூறி , இவரையே தமிழாசிரியர் ஆக்கிடுமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வு நடைபெற்ற இடம், சென்னை கிருத்துவக் கல்லூரி. மூத்த தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர்.
தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்ற தமிழறிஞர் மறைமலை அடிகள். செம்மொழியாம் தமிழை, வடமொழிக் கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாகத் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட் பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.

மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம் பிள்ளை. இவர் 1876 சூலை 15-ஆம் நாளன்று திருக்கழுக்குன்றத்திலே பிறந்தார். பின்னர்த் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-இல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) (அதாவது அவரின் 40-ஆவது வயதில்) என்று மாற்றிக்கொண்டார்.
மறைமலை அடிகள், நாகையில் வெசுலியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால், நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். 'சைவ சித்தாந்த சண்டமாருதம்' என்று புகழ் பெற்றிருந்த சூளை சோமசுந்தர நாயகர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.
திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.
மறைமலை அடிகள் பல்லாவரம் முனிவர் என்றும் குறிப்பிடப்பட்டார்.
இவரெழுதிய நூல்களின் பட்டியல்:
பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
யோக நித்திரை: அறிதுயில் (1922)
தொலைவில் உணர்தல் (1935)
மரணத்தின்பின் மனிதர் நிலை (1911)
சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
ஞானசாகரம் மாதிகை (1902)
Oriental Mystic Myna Bimonthly (1908-1909)
Ocean of wisdom, Bimonthly(1935)
Ancient and Modern Tamil Poets (1937)
முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903)
பட்டினப்பாலை-ஆராய்ச்சியுரை (1906)
சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
முதற்குறள் வாத நிராகரணம் (1898)
திருக்குறள் ஆராய்ச்சி (1951)
முனிமொழிப்ப்ரகாசிகை (1899)
மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)
அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்) (1921)
குமுதவல்லி: அல்லது நாகநாட்டரசி (புதினம்) (1911)
மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
அறிவுரைக் கொத்து (1921)
அறிவுரைக் கோவை (1971)
உரைமணிக் கோவை (1972)
கருத்தோவியம் (1976)
சிந்தனைக் கட்டுரைகள் (1908)
சிறுவற்கான செந்தமிழ் (1934)
இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
மாணிக்க வாசகர் மாட்சி (1935)
மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)
மாணிக்க வாசகர் வரலாறு (1952)
சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
திருவாசக விரிவுரை (1940)
சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
துகளறு போதம், உரை (1898)
வேதாந்த மத விசாரம் (1899)
வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
சிவஞான போத ஆராய்ச்சி (1958)
Can Hindi be a lingua Franca of India? (1969)
இந்தி பொது மொழியா ? (1937)
Tamilian and Aryan form of Marriage (1936)
தமிழ் நாட்டவரும், மேல்நாட்டவரும் (1936)
பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
வேளாளர் நாகரிகம் (1923)
தமிழர் மதம் (1941)
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)
இவரது நினைவப் போற்றும் விதமாக சென்னையில் உள்ள ஒரு பாலத்துக்கு மறைமலை அடிகள் பாலம் என பெயரிடப்பட்டது.
இவர் 1936 இல் இயற்றிய முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் நூலினை [
https://archive.org/details/20210331_20210331_1209 ] பி டி எஃப் வடிவில் வழங்குவதில் மகிழ்ச்சி.