எனது அடுத்த தொடரடைவு
அன்புடையீர்,
சற்றுநேரத்திற்கு முன்னர், நிகண்டுகளில் எனது அடுத்த தொடரடைவை முடித்து என் இணையதளங்களில் பதிவேற்றம் செய்துவிட்டேன்.
இந்தத் தொடரடைவு:
திருவம்பலத்து இன்னமுதம்பிள்ளை இயற்றிய அபிதானமணிமாலை என்ற நிகண்டு நூலுக்குரியது. இதன் பதிப்பாசிரியர் வித்துவான் சு பாலசாரநாதன். வெளியீடு : டாக்டர் உ வே சாமிநாதையர் நூல் நிலையம், 1988
இந்த நூல் எழுதப்பட்ட காலம் தெரியவில்லை. எனினும் இது இதுவரை தொடரடைவுகள் உருவாக்கப்பட்ட ஏனைய நிகண்டு நூல்களின் காலத்திற்கும் பிற்பட்டது என நினைக்கிறேன்.
இது மொத்தம் 9 தொகுதிகளைக் கொண்டது. ஆனால் 8-ஆவது தொகுதி முழுமையாகக் கிடைக்கவில்லை. மற்ற தொகுதிகளிலும் சில நூற்பாக்கள் முழுமையாக்க் கிடைக்கவில்லை.
மொத்தம் 2425 நூற்பாக்களைக் கொண்டது.
நிகண்டுகளில் இது தொடரடைவுக்கான 20-ஆவது நூல்.
மொத்தத்தில் தொடரடைவுக்கான 122-ஆவது நூல்.
இந்த நூலுக்கான மின்பதிப்பில் சில பக்கங்கள் தெளிவாக இல்லை. சில நூற்பாக்கள் விட்டுப்போயிருந்தன. எனவே உ.வே.சா நூலகத்திற்குச் சென்று, இதனுடைய புத்தக வடிவினைப் பார்த்துவர எண்ணினேன். கோர வெயிலின் காரணமாகவும், கொடும் முதுமையின் காரணமாகவும் அதனைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். அப்போதுதான் இந்த நூல் சென்னை ராஜா முத்தையா நூலகத்தில் இருப்பதை அறிந்தேன். அங்குள்ள மாலா என்ற உதவியாளரைத் தொடர்புகொண்டேன். அவர் எனக்குத் தேவையான 20 இடங்களையும் நகலெடுத்து அனுப்பினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை இதன்மூலமும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இத்துடன் நிகண்டுகளுக்கான தொடரடைவுகளை முடித்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.
அடுத்து எடுத்துக்கொள்ளப்போகும் பணி மிகப் பெரியதும் முக்கியமானதும் ஆகும். இந்த நிகண்டுகளில் ஒரு சொல்லைத் தேடவேண்டுமெனில், நிகண்டுகளின் முகப்புப் பக்கத்திற்குச் சென்று, ஒரு நிகண்டைத் தெரிவுசெய்து அந்த சொல்லைத் தேடவேண்டும். மீண்டும் அந்த முகப்புப் பக்கத்திற்குச் சென்று, வேறொரு நிகண்டைத் தெரிவுசெய்து அந்த சொல்லைத் தேடவேண்டும். இது அயர்வைத் தரும். அவ்வாறில்லாமல், ஒரு சொல்லைக் கொடுத்தால், அது எல்லா நிகண்டுகளிலும் அதனைத் தேடியெடுத்துக்கொடுக்கும் முறையை உருவாக்க எண்ணியுள்ளேன்.
நடந்து செல்கின்றவர் ஒருவரிடம் ஒரு சைக்கிளைக் கொடுத்தால், அவர் மகிழ்ச்சியோடு அதில் செல்வார். சிறிது நேரம் கழித்து, இதுவே ஒரு மோட்டார் வண்டியாக இருக்கக்கூடாதா என்று எண்ணுவார் இல்லையா? அதுபோலத்தான்.
இந்தப் பணியையும் முடித்துவிட்டு, மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா