இன்றையநிலையில் மெய்யியலின் தேவை
இக்கட்டுரையில் இன்றைய நிலை பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாம் நிதர்சனத்தை மறந்து பல காலம் வாழ முடியாது. ஒரு நாள் நிதர்சனம் என்ன என்பதை உணர்ந்தே தீருவோம்.
வரலாற்றில் பல இடங்களில் தத்துவத்தோன்றல்கள் இக்கட்டான சூழ்நிலையில் தோன்றின. சில நேர்வழியையும் சில மாற்றுவழியையும் கொண்டது. என்னைப்பொறுத்தவரை நேர்வழி என்பது “உலகம் வழி மனம்”. மாற்றுவழி என்பது “மனம் வழி உலகம்”. சிலநேரங்களில் தோன்றிய சிந்தனைகள் விரக்தி ரூபங்களாகவே இருந்தன, குறிப்பாக இந்தியா மற்றும் ஐரோப்பியசிந்தனைகள் தர்க்கசிந்தனைகளாக சில காலம் கைகொடுத்தாலும், அவை யதார்த்தமான உலகக்காண மறுத்தது, மறந்தது. இவையெல்லாம் கண்ணைமூடி உலகைக்காண சொல்லிக்கொடுத்தது. மனம் வழி உலகம் புலன்களை சந்தேகிக்கச்சொல்லியது. “மனிதன் தொடர்ந்து துக்கத்தைக்காணும் பொழுதும், தோல்வி மற்றும் மரணத்தை காணும் பொழுதும் அவன் எல்லாவற்றிலும் நம்பிக்கை இழக்கிறான்” என்றும் எதையும் செய்யத் துணிகிறான் என்றும், இருந்தும் வாழ்க்கையை அனுபவிக்க எத்தனிக்கிறோம் என்றும் வரலாற்றில் பல இடங்களில் காண்கிறோம். ஏதன்ஸ் நகரில் பெலோப்பொனோசிய யுத்தத்திற்கு பின் இந்நிலை ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.
இந்து புராணக்கதைகளில் ஒரு மனிதன் காட்டு வழியாக வரும் வழியில் தடுமாறி இடறி விழுகிறான், உருண்டு சென்று ஒரு மரத்தின் வேரைப்பற்றுகிறான். கீழே பலஅடி ஆழம் அதில் விஷம் நிறைந்த நாகங்கள் படமெடுத்து ஆடும் காட்சி, இவன் பற்றிய வேரை, எலி ஒன்று மெதுவாக அறுத்து தின்று கொண்டிருக்கிறது. கையின் பலம் மெதுவாகக்குறைகிறது, கை லேசாக வழுக்குகிறது. அந்நேரம் மரக்கிளையில் உள்ள தேன்கூட்டிலிருந்து இவன் அருகே ஒருசில தேன்துளிகள் சொட்டுகின்றன, அதை தன் நாவை நீட்டி சுவைக்கிறான். இக்கதை நடைமுறை வாழ்வுடன் ஒப்பிட்டு நற்கதிக்குண்டான வழியாக போதிக்கப்படுகிறது. அந்நிலையில் தேன்துளியை அருந்துவதென்பது நிகழ்காலத்தில் இருப்பதல்லவா? இது அனர்த்தம் என்றும் கடவுள் சிந்தனை வேண்டும் என்றும் இந்திய தத்துவியலில் ஒரு பகுதியினர் பறைசாற்றுகிறார்கள். உபநிடத சாரமாகிய பகவத்கீதையும் அப்படியே சொல்கிறது. இதற்குப் பிரமாணமாக பாகவதத்தில் ஜடபரதோபாக்யானம் கூறப்படுகிறது.
“நான்கு பக்கத்திலும் அடி விழும் பொழுது அறிவு பக்தியை சரணடையும்” என்று கூறியது, நமது இந்தியாவின் முதல் ஜனாதிபதியும் தத்துவ பேராசிரியருமான சர் ராதாகிருஷ்ணன் ஆவார். இந்துதத்துவவியல் என்பது கீழ்கண்ட கூறுகளை நன்றாக உணர்ந்த பின், அதன் ஊடாக உரு பெற்று வளர்ந்தது.
· மனித மனம் எப்படிப்பட்டது?
· மன சிந்தனை எப்படி வடிவமைகிறது?
· மனதின் உறுதிக்கு எது எல்லை?
· மனச்சிந்தனையை எப்படி மடைமாற்றம் செய்கிறார்கள்?
· மனம் எதை நம்பும்?
· அறிவின் மேல் மனம் படர்தல்
· பொதுச் சிந்தனைக்கு பூட்டு
· அதிகார அமைப்பின் பங்கு
· எது தர்மம்?
இக்கூறுகளை ஒவ்வொன்றாக விரிவாக பார்க்கலாம்.
இங்ஙனம்
ஜனா