கிராமத்து பாட்டி சமையல்
பயத்தங்கஞ்சி
தேவையானவை: பாசிப்பருப்பு - 1 கப், வெல்லம் (பொடித்தது) - அரை கப், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை: கடாயில்
நெய் விட்டு, பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் ஒரு
பங்கு பருப்புக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டுக் குழைய வேக வைக்கவும்.
வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டவும். வெந்த
பாசிப்பருப்பில், வெல்லக் கரைசலைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக
கொதித்து வரும்போது பாலை சேர்த்து, ஒருமுறை கொதித்ததும் இறக்கவும். அதில்
ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
இந்தக் கஞ்சி விரத நாட்களுக்கு ஏற்றது.
தவலை அடை
தேவையானவை: பச்சரிசி
- ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய்
துருவல் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2,
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து ரவை போல பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும். அதனை லேசாக வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்க்கவும். அது கொதிக்க ஆரம்பிக்கும்போது பொடித்த ரவையை மெதுவாகப் போட்டுக் கிளறி, கெட்டியாக வரும்போது இறக்கவும். ஆறியதும், சிறுசிறு அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
திரட்டுப்பால்
தேவையானவை: திக்கான பால் - 2 லிட்டர், பொடித்த வெல்லம் - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை:
அடி கனமான பாத்திரத்-தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு,
பால் நன்றாக சுண்டும் வரைக் கிளறவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர்
விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, சுண்டிய பாலில் மெதுவாக ஊற்றிக்
கிளறவும். இரண்டும் ஒன்றாகக் கலந்து சுருள வரும் பக்குவத்தில் நெய்
விட்டுக் கிளறி, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.
திணை அரிசி பாயசம்
தேவையானவை: திணை அரிசி, பால், திக்கான தேங்காய்ப்பால், பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: கடாயில் நெய் விட்டு திணை அரிசியை வறுத்து, குக்கரில் போட்டு ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் சேர்த்து 4 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், குக்கரை திறந்து அதில் பால் ஊற்றவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, திணை அரிசியில் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து திக்காக வரும் சமயத்தில் தேங்காய்ப்பாலைச் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை அதில் சேர்த்துப் பரிமாறவும்.
கேழ்வரகு வெல்ல அடை
தேவையானவை: பக்குவப்படுத்தப்பட்ட
கேழ்வரகு மாவு (சுத்தப்படுத்தி, ஊற வைத்து, உலர்த்தி அரைக்கப்பட்ட மாவு) -
ஒரு கப், பொடித்த வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில்
நெய் விட்டு, கேழ்வரகு மாவு சேர்த்து லேசாக வறுத்து, அதை தனியாக
வைக்கவும். அதே கடாயில் வெல்லத்தை ஒரு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க
வைத்து வடிகட்டி, கடாயில் விட்டு தேங்காய் துருவல், வறுத்த கேழ்வரகு மாவு,
ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். பின்னர் தோசைக்கல்லில்
சிறுசிறு அடைகளாகத் தட்டி இருபுறமும் நெய்விட்டு சுட்டு எடுக்கவும்.
பால் கொழுக்கட்டை
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட
அரிசி மாவு (அரிசியை ஊற வைத்து, உலர்த்தி அரைத்த மாவு), பொடித்த வெல்லம் -
தலா ஒரு கப், பால் - 3 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, உப்பு - ஒரு
சிட்டிகை
.
செய்முறை: அரிசி
மாவில் உப்பு சேர்த்துக் கிளறி, அதன்மீது கொதிக்கும் நீர்விட்டு,
கெட்டியாகக் கிளறி வைத்துக் கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாக
உருட்டவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து
வடிகட்டி, அதில் பாலை ஊற்றவும். இதை அடுப்பில் வைத்து பால் கொதித்து
வரும்போது அதில் உருட்டிய உருண்டைகளைப் போட்டு மீண்டும் கொதிக்க விடவும்
(இதனை அகலமான பாத்திரத்தில்தான் செய்ய வேண்டும்). கொழுக்கட்டை வெந்து மேலே
மிதந்து வரும்போது ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.
தேங்காய்ப்பால் முறுக்கு
தேவையானவை: பச்சரிசி
- 4 கப், பாசிப்பருப்பு, திக்கான தேங்காய்ப்பால் - தலா ஒரு கப், சர்க்கரை
- அரை டீஸ்பூன், எள், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் -
கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியைக்
கழுவி உலர்த்தவும். பிறகு, அரிசியையும், பாசிப்பருப்பையும் வாசனை வரும்
வரை வறுக்கவும். இதை மெஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும்.
தேங்காய்ப்பாலில் சர்க்கரை சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். மாவில்
பெருங்காயத்தூள், உப்பு, எள், வெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து, அதில்
தேங்காய்ப்பாலை விட்டு முறுக்கு மாவு பதத்தில் நன்றாகப் பிசைந்து
கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, முள் முறுக்கு அச்சில் மாவை நிரப்பி,
முறுக்குகளாகப் பிழிந்து சுட்டெடுக்கவும்.
அரிசி உப்புமா கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி
- ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப்,
பச்சை மிளகாய் - 2. கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால்
டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2
டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, துவரம்பருப்பு, சீரகத்தை மிக்ஸியில் ரவையாக பொடித்து தனியாக
வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு,
பெருங்காயத்தூள் தாளித்து நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
வதக்கவும். அதில் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர்
ஊற்றிக் கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும், பொடித்து
வைத்திருக்கும் ரவையைப் மெதுவாகப் போட்டுக் கிளறவும். முக்கால் பதம்
வெந்ததும் இறக்கி விடவும். இளஞ்சூட்டில் இருக்கும்போது கொழுக்கட்டைகளாகப்
பிடித்து, ஆவியில் வேக வைத்துப் பரிமாறவும்.
சீரக ரசம்
தேவையானவை: துவரம்பருப்பு,
சீரகம், நெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த
மிளகாய் - 2, புளி - பாதி எலுமிச்சம்பழம் அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு
பாத்திரத்தில் புளி, உப்புடன் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க
விடவும். துவரம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், மிளகு, கறிவேப்பிலையை
மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். புளித் தண்ணீர் கொதித்தவுடன், பொடித்து
வைத்திருக்கும் மசாலா பொடியை அதில் சேர்த்து, நுரைத்துப் பொங்கி வரும்போது
இறக்கவும். கடாயில் நெய் விட்டு கடுகு தாளித்து, ரசத்தில் கொட்டிக் கலந்து
பரிமாறவும்.
பரங்கித் துவையல்
தேவையானவை: பரங்கிக்காய்
(நறுக்கியது) - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் -
4, புளி - கொட்டைப்பாக்கு அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில்
கொஞ்சம் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து தனியே
வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பரங்கிக்காயை
வதக்கி ஆற வைக்கவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வதக்கிய
பரங்கிக்காய், பெருங்காயத்தூள், உப்பு, புளியை மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு
நைஸாக அரைத்து எடுத்தால் துவையல் தயார்!
அரிசி\தேங்காய் பாயசம்
தேவையானவை:
பச்சரிசி - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், வெல்லம் - அரை கப்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு -
10.
செய்முறை: அரிசியை
அரை மணி நேரம் ஊற வைத்து வடித்து, அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து
அரைக்கவும். வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து
வடிகட்டவும். அந்த பாகை கொதிக்க வைத்து, அரைத்த அரிசி-தேங்காய் துருவல்
மாவைச் சேர்க்கவும். ஒன்றாகக் கலந்து திக்காக வரும்போது ஏலக்காய்த்தூள்
சேர்த்து இறக்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து சேர்க்கவும்.
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
தேவையானவை: பிஞ்சுக்
கத்திரிக்காய் - 10, புளி - எலுமிச்-சம்பழ அளவு, தேங்காய் துருவல் - கால்
கப், தனியா, உளுத்-தம்-பருப்பு - தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, அரிசி -
தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடுகு - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய்
- 5, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு. எண்ணெய் - கால் கப், உப்பு
- தேவையான அளவு.
செய்முறை: வெறும்
கடாயில் தனியா, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி, வெந்தயம், காய்ந்த
மிளகாயை வறுக்-கவும். அதில் தேங்காய் துருவலைச் சேர்த்து மிக்ஸியில்
அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில் கத்திரிக்காயை இரண்டு
இரண்டாகப் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள-வும். அதே கடாயில் கடுகு,
கறிவேப்பிலை தாளித்து, கரைத்த புளியைச் சேர்க்கவும். அதில் உப்பு,
பெருங்காயத்தூள் சேர்த்து, புளித் தண்ணீர் கொதித்து வரும்போது அரைத்த
மசாலாவை சேர்த்துக் கொதிக்க விடவும். வறுத்தெடுத்த கத்திரிக்காயை அதில்
போட்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
பிரண்டை துவையல்
தேவையானவை: பிரண்டை
(நறுக்கியது) - கால் கப், தேங்காய் துருவல், எள், உளுத்தம்பருப்பு, மிளகு
- தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்-பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 5,
வெல்லம் - கொட்டைப் -பாக்கு அளவு, புளி - அரை எலுமிச்சம்பழ அளவு, எண்ணெய்
- 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெறும் கடாயில் எள்ளை வறுக்கவும். அதே கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்
விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை வறுக்கவும். பிரண்டையை
எண்ணெயில் தனியாக வதக்கவும். பின்னர் வதக்கிய பிரண்டையையும், மற்ற எல்லாப்
பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிரண்டை துவையல் ரெடி!
புளி இஞ்சி
தேவையானவை:
இளசான இஞ்சி (நறுக்கியது) - ஒரு கப், புளி - எலுமிச்சம்பழ அளவு, வெல்லம் -
கொட்டைப்பாக்கு அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை
டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு -
தேவையான அளவு.
செய்முறை: கடாயில்
எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய இஞ்சியை அதில்
போட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். புளியை அரை கப்
தண்ணீரில் கரைத்து வடிகட்டி, இஞ்சியில் சேர்த்துக் கிளறவும். புளியும்
இஞ்சியும் சேர்ந்து கெட்டியானதும், வெல்லம் சேர்த்து இறக்கவும். ஆறியதும்
சுத்தமான பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
இது, அவசரத்துக்கு அனைத்துவிதமான சாப்பாட்டுக்கும் ஏற்ற டிஷ். ஜீரணத்துக்கு நல்லது.
பிடிகருணை மசியல்
தேவையானவை: பிடிகருணை
- 4, துவரம்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு - தலா
கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் - 3, காய்ந்த
மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு -
தேவையான அளவு.
செய்முறை: குக்கரில்
அரிசி களைந்த நீரில் பிடி கருணையை தோலுடன் வேக வைக்கவும். தோலினை உரித்து
சிறு துண்டுகளாக நறுக்கவும். துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து தனியாக
வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து
பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு வதக்கி, கரைத்து
வடிகட்டிய புளி நீரைச் சேர்க்கவும். புளி நீர் கொதிக்க ஆரம்பித்ததும்
பிடிகருணைத் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, வேக
வைத்த துவரம்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து,
இறக்கியதும் மசித்துப் பயன்படுத்த வும்.
மாங்காய்த்தோல் பச்சடி
தேவையானவை:
காய்ந்த மாங்காய்த்-தோல் (சீஸன் காலத்-தில் பதப்படுத்-தப்பட்ட மாங்காய்) -
கால் கப், தயிர் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு. எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
செய்முறை: மாங்காய்த்தோலை
தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். வெந்ததும் அடுப்பிலிருந்து
இறக்கி, நன்றாக மசிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,
உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து அதில் கொட்டவும். மாங்காய்
ஆறியதும் தயிர் சேர்த்துப் பரிமாறவும். மாங்காய்த்தோல் ஏற்கெனவே
பதப்படுத்தப்பட்டிருப்பதால், அதில் உப்பு இருக்கும். எனவே, தனியாக உப்புச்
சேர்க்கத் தேவையில்லை.
சுண்டைக்காய் வத்தல் குழம்பு
தேவையானவை: சுண்டைக்காய்
வத்தல் - கால் கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - கால் கப், புளி - எலுமிச்சம்பழ
அளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், வெல்லம் -
கொட்டைப்பாக்கு அளவு, கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு. நல்லெண்ணய் - ஒரு
டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை
வறுத்து தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். கடாயில்
எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் சுண்டைக்காய் வத்தலைப் போட்டுச்
சிவக்க வறுக்கவும். புளியை ஒன்றரை கப் நீரில் கரைத்து வடிகட்டி அதில்
ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். அது நன்றாகக் கொதித்ததும் அரைத்த
மசாலாவைச் சேர்த்து வெல்லம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க
விடவும்.எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். சுண்டைக் காய் வத்தலில்
ஏற்கெனவே உப்பு இருக்கும் என்பதால் குழம்பில் தேவைக்கு ஏற்ப உப்பு
சேர்ப்பது நல்லது.
நெல்லிக்காய் துவையல்
தேவையானவை:
முழு நெல்லிக்காய் - 5, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு -
தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
நெல்லிக்காயை கடாயில் லேசாக வேக வைத்து கொட்டையை நீக்கி வைத்துக்
கொள்ளவும். காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய்
துருவலில் எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கடைசியாக
நெல்லிக்காய், உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால் துவையல் ரெடி!.
உளுந்து பொங்கல்
தேவையானவை: முழு
உளுந்து - அரை கப், பச்சரிசி - ஒரு கப், இஞ்சி (நறுக்கியது), மிளகு - தலா
ஒரு டீஸ்பூன், சீரகம், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை -
சிறிதளவு, நெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முழு
உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாகக் களைந்து எடுக்கவும். அரிசியுடன்
சேர்த்து ஒன்றுக்கு 3 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
ஆறியதும், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். கடாயில் நெய் விட்டு பொடித்த
மிளகு, சீரகம் தாளித்து அதில் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை,
பெருங்காயத்தூள் சேர்த்து பொங்கலில் விட்டு நன்றாகக் கலக்கி பரிமாறவும்.
இது பெண் குழந்தைகளுக்கு ஏற்றது.
இனிப்பு அப்பம்
தேவையானவை: பச்சரிசி
- ஒரு கப், துவரம்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல்
- கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - அரை கப், எண்ணெய் -
தேவையான அளவு.
செய்முறை:
வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி
வைத்துக் கொள்ளவும். பச்சரிசி, வெந்தயம், துவரம்பருப்பை ஒரு மணி நேரம், ஊற
வைத்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்க வும். நன்றாக
அரைப்பட்டதும் அதில் வெல்லக் கரைசலை சேர்த்து மீண்டும் ஒருமுறை
அரைக்கவும். இது இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். அதில்
ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கரண்டியால்
மாவை ஊற்றி, அப்பங்களாகச் சுட்டெடுக்கவும்.
வெள்ளை பணியாரம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுந்து - ஒரு டீஸ்பூன், திக்கான பால் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி,
உளுந்து இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அதில் பால்
சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். பிறகு, உப்புச் சேர்த்து, பணியாரச்
சட்டியில் எண்ணெய் தடவி, மாவைக் கரண்டியால் ஊற்றி பணியாரங்களாக சுட்டு
எடுக்கவும்.
இதற்கு காரச் சட்னி சூப்பர் காம்பினேஷன்.
சொஜ்ஜி அப்பம்
தேவையானவை :
ரவை, தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் -
அரை டீஸ்பூன். நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், - தேவையான அளவு.
மேல்மாவுக்கு: மைதா ஒன்றரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுக் கெட்டியாகப்
பிசைந்து கொள்ளவும். பின்னர் அடி கனமான கடாயில் நெய் விட்டு, ரவையை சிவக்க
வறுத்து, தேங்காய் துருவல் சேர்க்கவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டு
கொதிக்க வைத்து வடிகட்டவும். வெல்லக் கரைசலை ரவையில் சேர்த்து சுருள வரும்
வரை கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்தால் பூரணம் ரெடி. மைதா மாவில் கொஞ்சம்
எடுத்து சிறிய அப்பமாக இட்டு அதில் ரவைக் கலவையை உள்ளே வைத்து மூடி, சிறிய
வடிவில் பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பூரணத்தை
வைக்கும்போது வெளியில் வராமல் மூட வேண்டும்.
இது இரண்டு மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
குழாய் புட்டு
தேவையானவை: அரிசி மாவு - ஒன்றரை கப், தேங்காய் துருவல் - முக்கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பதப்படுத்தபட்ட அரிசி மாவில் உப்பு சேர்த்து, சூடான நீர் விட்டுப்
பிசறவும். புட்டு செய்யும் குழாயில் சுற்றிலும் நெய் தடவி, கொஞ்சம் அரிசி
மாவை வைத்து, அதன்மேல் தேங்காய் துருவல் வைக்கவும். இப்படி அரிசி மாவு,
தேங்காய் துருவல் என மாறி மாறி அடுக்காக வைத்து, வேக வைக்கவும். வெந்ததும்
பலகாரம் எடுப்பதற்கென்றே இருக்கும் ஊசி கொண்டு குழாயிலிருந்து புட்டை
வெளியே எடுக்கவும். நேந்திரம் பழத்தை துண்டுகளாக செய்து புட்டுடன்
சேர்த்துச் சாப்பிடவும்.
ராகி களி
தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், தண்ணீர் - ஒன்றரை கப், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: அடி
கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். அதனுள் ஒரு
மரக்கரண்டியைப் போடவும். கொதிக்கும் நீரில் ராகி மாவு, உப்பைப் போட்டு 2
அல்லது 3 நிமிடம் அப்படியே விட்டு விடவும். அடுப்பை அணைத்து,
பாத்திரத்தைக் இறக்கி மரக்கரண்டியால் மாவை சூட்டுடன் வேகமாக
கட்டியில்லாமல் கிளறவும். கிளறிய மாவை மீண்டும் அடுப்பில் வைத்து கொஞ்ச
நேரம் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பதத்துக்கு மாவு வந்தால் களி ரெடி!
அதை இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.
இதற்கு நெய்யுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை தொட்டுச் சாப்பிடலாம்.
சோளம்\தட்டைப்பயறு சுண்டல்
தேவையானவை: சோளம்
- ஒரு கப், தட்டைப்பயறு, வெங்காயம் (நறுக்கியது) - தலா கால் கப், பச்சை
மிளகாய் - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி -
சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், கடுகு,
உளுத்தம்பருப்பு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோளத்தில்
சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி மிக்ஸி விப்பரில் 2 முறை சுற்றி எடுத்து,
தண்ணீரில் கழுவினால் தோல் நீங்கிவிடும். குக்கரின் முதல் அடுக்கில் 2 கப்
தண்ணீரில் சோளத்தைப் போடவும். அடுத்த அடுக்கில் அரை கப் தண்ணீரில் தட்டைப்
பயறை வைத்து 6 விசில் வந்ததும் இறக்கி இரண்டையும் வடிகட்டவும். கடாயில்
எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை
மிளகாய், மஞ்சள்தூள், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அதில் வேக வைத்து
வடிகட்டிய சோளம், தட்டைப்பயறு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு,
தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி தூவிக் கிளறி, இறக்கி பரிமாறவும்.
சோள தோசை
தேவையானவை: சோளம்,
புழுங்கலரிசி - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய்
- 3, சீரகம், தனியா - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: சோளத்தில்
தண்ணீர் தெளித்துப் பிசறி, மிக்ஸி விப்பரில் ஒன்றிரண்டு முறை சுற்றி
எடுத்து தண்ணீரில் கழுவினால் தோல் நீங்கிவிடும். தோல் நீங்கிய சோளத்துடன்
புழுங்கலரிசியைச் சேர்த்தும், உளுத்தம்பருப்பை தனியாகவும் தண்ணீரில் 2 மணி
நேரம் ஊற வைக்கவும். சோளம், அரிசி உறியவுடன் சுத்தம் செய்து, அதில் தனியா,
சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைக்கவும்.
உளுத்தம்பருப்பை தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். அரைத்த மாவுகளை
ஒன்றாக கலந்து 3 மணி நேரம் புளிக்க வைத்து, தோசைக்கல்லில் ஊற்றி,
இருபுறமும் எண்ணெய் விட்டு தோசைகளாகச் சுட்டு எடுக்கவும்.
மசாலா பொரி
தேவையானவை: பொரி
- ஒரு கப், பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
பூண்டு (பொடியாக நறுக்கியது) - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - கால் டீஸ்பூன்,
மிளகு - 2, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில்
எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதில்
மஞ்சள்தூள், காய்ந்த மிளகாய், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பூண்டு போட்டு
வறுக்கவும். அதில் பொரியை சேர்த்து ஒருமுறை வறுத்து இறக்கி, சூடாகப்
பரிமாறவும்.
இது, மாலை நேர டிபனுக்கு உகந்தது.
ராகி ரொட்டி
தேவையானவை:
ராகி மாவு - ஒரு கப், வெங்காயம் (நறுக்கியது) - கால் கப், பச்சை மிளகாய் -
2, வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் -
ஒரு டீஸ்பூன். கறிவேப்பிலை - சிறிதளவு. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அகலமான
பாத்திரத்தில் ராகி மாவு, வெங்கா யம், கீறிய பச்சை மிளகாய், தனியாத்தூள்,
கறிவேப்பிலை, வேர்க்கடலை, உப்பு சேர்த்து சூடான தண்ணீர் விட்டு நன்றாகப்
பிசையவும். அந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணெய் தடவிய வாழை
இலையில் வைத்து மெலிதாகத் தட்டவும். தோசைக்கல்லில் தட்டிய ரொட்டிகளைப்
போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு, நன்றாக வெந்தபின் எடுத்து சூடாகப்
பரிமாறவும்.
திருவாதிரை களி
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், வேக வைத்த பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த
வெல்லம் - ஒரு கப், முந்திரிப்பருப்பு, திராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள்
- கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2
டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியை
கடாயில் வறுத்து மிக்ஸியில் ரவை போல பொடிக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு
பொடித்த வெல்லம் போட்டுக் கரைத்து வடிகட்டவும். அதை கொதிக்க வைக்கவும்.
கொதித்து வரும்போது, பொடித்த அரிசியை சேர்த்துக் கிளறவும். அரிசி நன்கு
வெந்ததும், வேக வைத்த பாசிப்பருப்பு, நெய் சேர்த்துக் கிளறவும். தனியாக
நெய்யில் முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்து அதில் கொட்டி,
ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பாசிப்பருப்பு துவையல்
தேவையானவை: பாசிப்பருப்பு
- கால் கப், பச்சை மிளகாய் - 3, புளி - கொட்டைப்பாக்கு அளவு,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன். எண்ணெய் - ஒரு
டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பு
ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், புளி, உப்பு,
பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய்
விட்டு கடுகு தாளித்து, பருப்புத் துவையலில் சேர்த்துப் பரிமாறவும்.
நன்றி/ஆக்கம்/தொகுப்பு /உரிமை; அவள் விகடன்
கிராமத்து பாட்டி சமையல்