இந்த அன்பர் அறியும் பொருட்டும், இவர் போன்ற எவரேனும் இருப்பின் அவர் அறியும் பொருட்டும் இக் கட்டுரையினை இங்கு இடுகின்றேன்.
*******************************************************************************************************
திருச்சிறம்பலம்
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்ற்!
வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!
வார்கொண்ட வார்முலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்.
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே! (ஏழாம் திருமுறை-சுந்தரமூர்த்திநாயனார்)
[திருத்தொண்டர்த் தொகை - முதல்நூல்]
திருவாரூரில் எழுந்தருளி இருக்கும் இறைவருக்கு ஆட்பட்டவனாகிய ஆரூரனாகியயான் (சுந்தரமூர்த்தி நாயனார்) கச்சணிந்த அழகிய மார்பின உடையவராகிய உமை அம்மையின் பங்காளராகிய சிவபெருமான் திருவடியினையே மறவாமல் கல்லெறிந்த சாக்கிய நாயனாருக்கும் அடியவனாகின்றேன்.
தகடன ஆடையன் சாக்கியன் மாக்கற் றடவரையன்
மகடனந் தாக்கக் கம்பர்செம்பொன்
திகழ்தரு மேனியிற் செங்கல் எறிந்து சிவபுரத்துப்
புகழ்தரப் புக்கவன் ஊர்சங்க மங்கை புவனியிலே. (பதினொன்றாம் திருமுறை-திருத்தொண்டர்
அந்தாதி- பாடல்-41 / வழிநூல் ஆசிரியர் :
நம்பியாண்டார் நம்பி)
தொண்டை நாட்டைச் சேர்ந்த திருச்சங்க மங்கை என்னும் ஊரில் சாக்கிய நாயனார் வேளாளர் குலத்தில் தோன்றினார். பௌத்த மதத்தில் ஞனம் பெற முயன்று பிறகு சிவ நெறியே சிறந்ததெனக் கண்டார். காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதரைத் தொழுதார். தகடு போன்ற பௌத்தர்க்குரிய ஆடையை அணிந்டவர்.அதை மாற்றிக் கொள்ளாமல் சிவபெருமானைக் கல்லால் எறிந்து வழிபட்டார். சைவ சமயத்தில் அவருக்குள்ள பற்றின் காரணமாக இறையடி சேர்ந்தார்.
திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்
(தொகை நூல் - ஆசிரியர் சேக்கிழார்)
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
[40] சாக்கிய நாயனார் புராணம்
(பாடல்கள் : 3636 - 3654)
ஆறுவகைப்பட்ட சமயங்களுக்கும் தலைவராய் விளங்கும் சிவபெருமானுக்கு அன்பராகிப் புறச்சமய சாக்கியர்களின் வடிவுடன் வரும் தொண்டராகி, சைவ சமயமே மெய்ச் சமயம் என்ற துணிவு கொள்வதால் சிவலிங்கத்தைப் பார்த்து மகிழ்ந்து, அதன்மீது கலெறிந்து குற்றம் நீக்கும் த்ருவடியைப் பெற்ற தன்மையை நாம் அறிந்த அளவினால் வணங்குவோம்.(3636)
அச்சாக்கிய நாயனார், திருச்சங்க மங்கை என்ற பதியில் முயறிசியுடையவர்களாக வாழ்கின்ற வேளாளர் மரபில் தோன்றினார். உண்மைப் பொருளைத் தெரிந்தும் அதன் பயனை உணர்ந்தும் அன்புடையவராயும் எல்லா உயிர்களிடத்தும் அருள் உடையவராயும் ஒழுகிப் பிறந்தும் இறந்தும் வரும் நிலையின் தன்மை மேலும் செல்லாது இந்தப் பிறவியிலேயே அதனின்றும் நீங்குவேன் என்ற கருத்துடனே அவ்வொழுக்கத்தில் நிற்பாராயினார். ( சங்க மங்கை - காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள பதி ) (3637)
அவ்வாறு சாக்கியர் ஒழுகி சரும் நாளில் தன் பொருட்டுத் தம் ஊரைவிட்டு, மதிலையுடைய காஞ்சிநகர்க்குச் சென்று அடைந்து உண்மை ஞானத்தை அடைதற்குரிய பலவழிகளையும் ஆராய்பவராய் அதன் பொருட்டு முதலில் பௌத்த தருமங்களின் வழியில் சேர்ந்து நிலைபேற்ற பிறப்பை அறுக்கும் உறுதிப்பாட்டின் வழியினை ஆராய்பவராய் ஆனார்.(3638)
அந்நிலையில் அவர் பௌத்தர்களின் அரிய “திரிபிடகம்” என்ற கலை நூலைக் கற்று அதன் துணிபாகப் பெறப்பட்ட முடிபும் இன்னும் மற்றப் புறச்சமயங்களின் சார்பாகக் கூறும் முடிவுகளும் உண்மைப் பொருள் அல்ல என்ற உண்மையைத் தெளிந்தார்.சிவனின் திருவருள் கூடப் பெற்றமையால் “அளவில்லாத நல்ல சிவ நெறியே உண்மைப் பொருளாவது” என்ற உணர்வை மனத்தில் நிலை பெற நிறுத்தினார்.(3639)
செய்யும் வினை ஒன்று. செய்பவனான கருத்தா ஒன்று. பயன் ஒன்று. அதனைத் தந்து ஊட்டுபவனான முதல்வன் ஒன்று என உண்மை காணும் வகையினால் - விதியினால் கிடைக்கும் பொருள்கள் நான்காகும் என்ற தெளிவு கொண்டார். இந்தச் சிறப்பு இயல்புநிலை சைவநெறி அல்லாத மற்ற நெறிகளுக்கு இல்லை என்ற துணிபையும், உய்தி பெறும் தவத்தால் சிவபெருமானின் துணையால் பொருளாவது சிவனே ஆவார் என்பதனையும் அவர் உணர்ந்து அறிந்து கொண்டார்.(3640)
எந்த நிலையில் ஒருவர் நின்றாலும், எந்தக் கோலத்தைக் கொண்டாலும், நிலையான் சிறப்புடைய சிவ்னின் திருவடிகளை மறவாமையே உண்மையான உறுதிப் பொருளாகும் எனத் துணிந்தார். தாம் மேற்கொண்டு பூண்ட பௌத்த துறவுக் கோலத்தை நீக்காமலேயே தூய்மை செய்யும் சிவலிங்கக் குறியினை மிக்க அன்புடன் மறவாத நிலையில் சிறந்து விளங்கலானார். (3641)
உலகம் பலவற்றையும் தம் வடிவாக உடைய ஈசன் என்ற சொல்லுக்குப் பொருளாகி சிவபெருமானே முழுமுதலாம் தலைவர் என்ற உண்மையை அறிய மாட்டாதவர்களே பொல்லாங்கு துய்க்கும் பொறியிலிகளாய்த் தம் கோலத்தை அவனில் வேறு எனக் கொள்ளும் சாக்கியர்களாகிப் புன்மையின் நின்று ஒழுகுவர். கரிய நஞ்சுடைய கண்டத்தையுடைய சிவபெருமானுக்கு இந்த உலகம் எல்லாம் ஆளவதே அல்லாது வேறில்லை என்று, இவர் அந்த பௌத்த சமயத்தவர் தாங்கும் கோலத்தை )மாற்றாமலேயே சிவன்பால் அன்பின் வழியில் நின்றார்.(3642)
கண்ணுக்குத் தெரியாத அருவமாய் உள்ள மேனிக்கும், கண்ணுக்குத் தெரியும் உருவ மேனிக்கும் மூலமான இருப்பிடமாகி, நீண்ட பாம்பினை அணிந்த எம்பெருமான் சிவனை அறிந்து வழிபட சிறந்த அடையாளமான குறியாய் விளங்கும் சிவலிங்கம் தேடிய திருமாலும், நான்முகனும் காணுமாறு அவர்கள் நடுவே அனல் தூணாகித் தோன்றிய வடிவமே ஆகும் எனத் தெளிவு கொண்டார்.(3643)
நாள்தோறும் சிவலிஙத்தைக் கண்டு வணங்கிய பின்பே உணவு உண்ண வேண்டும் என்று வழக்கத்தை மேற்கொள்ள விரும்பினார். பக்கத்தில் ஒரு வெளியிடத்தில் நிலைபெற்ற சிவலிங்கத்தைப் பார்த்து மனதில் கொண்டு, என்ன செய்வது என்று அறியாதவராய்ப் பக்கத்தில் ஒரு கல்லைப் பார்த்து அதையே மலராய், அன்பி; உண்டான பதை பதைப்புடன் எடுத்து அச் சிவலிங்கத்தின்மீது எறிந்தார்.(3644)
உள்ளம் நிறைந்து பெருகிய பெருமகிழ்ச்சியால் வந்த அளவற்ற அன்பினால் தம் குழந்தையை மகிழ்ந்து மகிழ்ச்சி கொள்பவர்கள், அக்குழந்தை செய்யும் எச்செயலும் அதற்கு அச்செயலால் இன்பமே உண்டாக்குமே அன்றி அச்செயலால் துன்பம் ஏற்படுவதில்லை. அது போன்றே நாயனார் செய்த கல்லெறிந்த வன்மைச் செயலுக்கு நீண்ட சடைமுடியினையுடைய அண்ணலார் மகிழ்வே அடைந்தார்.(36445)
அன்று போய் பின்வரும் நாள்களிலும் சிவலிஙத்தைக் கண்டபின் உணவு உட்கொள்வது என்று தாம் மேற்கொண்ட வழக்கத்தின்படி லிங்கத் திருமேனியைக் காணச் சென்றார். கொன்றை மாலைசூடிய சடையுடைய சிவபெருமானின் திருமேனியின் மீது தாம் முன்பு கல் வீசிய அடையாளத்தைப் பற்றி நின்று உணர்வில் கொள்பவராய், “அப்போதுஎனக்கு இத்தகைய எண்ணம் உண்டானது இறைவர் அருளால் ஆகும்” என்று துணிந்தார். அதனையே தாம் செய்யும் தொண்டாய் மேற்கொண்டு நாள்தோறும் இச்செயலையே செய்யலானார்.(3646)
சாக்கிய நாயனார் அச்செயல் தொடங்கிய நாளில் இறைவர் அருள் செய்த அச்செயல் இடையறாது தொடர்ந்து செல்லும் கடமையை எண்ணுபவராய்க் கல்லைச் சிவலிங்கத்தின்மீது எறிபவராய்த் துவராடையை அணிகின்ற பௌத்த வேடத்தையும் விடாது அணிவார். பெருந்தவமுடைய நாயனார் சிவபெருமானின் அருட் செயலே எல்லாம் ஆகும் என்ற உணர்வுடையராய் விளங்கினார்.(3647)
இத்தகைய நியதிச் செயலை அன்புடன் செய்து வந்தார். அச்செயல் மதிக்கப்படும் திருத் தொண்டேயாகி முடிந்த தன்மையைச் சொன்னால், அன்பினால் எழுந்த நெறியின் நியாயத்தால் பொருந்திய மெய்யன்பு காரணமாகத் தொடங்கிச் செய்த செயல் தூயவரான இறைவர்க்கு நிலைபெற்ற சிறப்புமிக்க பூசனையே ஆகும். (3648)
கல்லால் எறிந்த செயலும் அன்பால் செய்யும் தொண்டே ஆன தன்மையை ஆராய்ந்தால், வில்வேடரான கண்ணப்பரின் செருப்படியும், இறைவரின் திருமுடியில் பொருந்தப்பெற்றதாயின் தன்மையைப் பார்த்தோம் ஆதலின் நல்லவரான அவர் அன்பால் விரும்பிய அச்செயலை, அல்லாதவர், “அவர் எறிந்தது கல்” என்பர். அந்து எம்பெருமான் சிவனுக்கு மன்மிக்க மலரேயாகும். (3649)
அவ்வாறான ஒழுக்கத்தை மேற்கொண்டு வரும் நாள்களில், ஒரு நாள், இறைவன் திருவருளால் தம் வழக்கத்தை மறந்து உண்ணத் தொடங்கினார். உடனேயே அவர், “எம்பெருமானைக் கல் எறிந்து வழிபடாது நான் மறந்தேனே” என்று எண்ணி, உண்ணாமல் எழுந்து, மென்மேலும் எழுகின்ற பெருவிருப்புடன் மிகவும் விரைந்து புறப்பட்டுக் கொடிய யானையின் தோலை உரித்த அண்ணலாரின் முன் சென்றார்.(3650)
அங்கு கிடைத்த ஒரு கல்லை எடுத்து வழிபாட்டின் குறிக்கோள் நிறைவேறும் வகையில் அவர் எறிந்தார்.உண்னும் செயலையும் கைவிட்டு அச்சத்துடன் ஓடி வரும் பெருவிருப்புடன் அவரைக் கண்டு அருள் செய்கின்ற நெற்றிக் கண்ணரான இறைவர் அத் தொண்டரின் எதிரே பெரிய வானில் தம் துணைவியான உமையம்மையுடன் தோன்றினார். (3651)
இளமையுடைய காளையின் மீது எழுந்தருளி வந்த ஒப்பில்லாத செய்கையால் இறைவரின் திருவடியினை அடைந்த குற்றமற்ற சிறப்புடைய தொண்டரான சாக்கிய நாயனார் கண்டு, கைகள் கூப்பி நிலத்தில் விழுந்து பணிந்து விழுந்தார். அவரை அருள் நோக்குக் கொண்டருளிச் சிறப்பு மிக்க சிவலோகத்தில் பழைய அடிமைத்திறத்தை இறைவர் அளித்தருளினார்.(3652)
திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!