ஓர் அழகிய காட்சியை விவரிக்க ஒரு தருணம் கொடுத்த சுபா அவர்களுக்கு நன்றி. மலைபடுகடாம் என்ற பாடலின் தொடக்கக் காட்சி இது.
மலைபடுகடாம் (1 – 13)
1.திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
2.விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து
3.திண் வார் விசித்த முழவொடு(1) ஆகுளி (2)
4.நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில்(3)
5.மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு(4)
6.கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின்
7.இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு(5)
8.விளிப்பது கவரும் தீம் குழல்(6) துதைஇ
9.நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை(7)
10.கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி(8)
11.நொடி தரு பாணிய பதலையும்(9) பிறவும்
12.கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப
13.நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர்-
இதன் அடிநேர் பொருள்:
1.கருக்கொண்ட மேகங்கள் ஒன்றுகூடிய கருமை நிறங்கொண்ட பரந்த வானில்
2.விண்ணகமே அதிரும்படி முழங்கும் ஓசையைப் போன்று, தாளங்களைத் தட்டிப்பார்த்து,
3.உறுதியான வாரால் இறுகக் கட்டிய மத்தளத்துடன்(1), சிறுபறையும்(2),
4.நன்றாக உருக்கப்பட்டு ஒளிர்கின்ற தகடாகத் தட்டப்பட்ட கஞ்சதாளமும்(3),
5.மின்னுகின்ற கரிய மயில் இறகுகளின் அழகிய கொத்து(கட்டப்பட்ட) கொம்பு வாத்தியமும்(4) சேர்த்து,
6.துளைகள் இடையிடையே விடப்பட்ட, யானையின் துதிக்கை போன்ற குழலமைப்புக்கொண்ட,
7.இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்(5),
8.பாடுவதைச் சுருதி குன்றாமல் கைக்கொள்ளும் இனிய வேய்ங்குழலும்(6) நெருக்கமாகச் சேர்க்கப்பட்டு,
9.(தாளத்திற்கு)இடைநின்று ஒலிக்கும் (தவளையின்)அரித்தெழும் ஓசையையுடைய தட்டைப்பறையும்(7),
10.அடிக்குரல் ஓசையில் (தாளத்துடன்)ஒத்து ஒலிக்கும் வலிமையான விளிம்புப் பகுதியையுடைய சல்லியும்(8),
11.காலவரை காட்டுவதற்கு ஒலிக்கும் ஒருகண் பறையும்(9), இன்னும் பிற இசைக்கருவிகளும்,
12.கார்காலத்தே கொள்ளப்படும் பலாவின் காய்களைக்கொண்ட கொத்தைப் போல,
13.சமமாய் எடைகட்டி(பைகளில் இட்டு வாயின் சுருக்கை)இறுக்கித் தோளின்(இருபுறமும்) தொங்கவிட்ட பைகளை உடையவராய் –
கூத்தராற்றுப்படையென்றும் அழைக்கப்படும் மலைபடுகடாம் என்பது சங்க இலக்கியங்களுள் ஒன்றான, பத்துப்பாட்டில் இறுதிப் பாடல் ஆகும். இப் பாடலின் தொடக்கமே கூத்தர்களின் இசைக்கருவிகளைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்கிறது. பிறவும் என்பதால் இவற்றுடன் இன்னும் பல இசைக்கருவிகளையும் எடுத்துக்கொண்டு யாரேனும் ஒரு வள்ளலிடமோ அரசனிடமோ சென்று பாடி அவர்களை மகிழ்வித்து அவர்களிடம் பரிசில் வாங்கப் புறப்படும் ஒரு பாணர் குடும்பத்துக் காட்சி இது.
இந்த இசைக் கருவிகளை இரண்டு பகுதிகளாகப் பிரித்து அவற்றைச் சம எடை கொண்டதாக இருக்கும்படி இரண்டு மூடைகளாகக் கட்டுகிறார்கள். பின்னர் அவற்றின் வாய்களை இறுக்கி மூடி, அவற்றை ஒரு நீளமான கயிற்றால் இணைத்து, மூடைகள் தோளின் இரு பக்கங்களிலும் தொங்குவதுபோல் தொங்கவிடுகிறார்கள். இப்பொழுது அவர்கள் புறப்படத் தயார்.
கலப்பை என்பது கலங்களைக் கொண்ட பை – Instrument bag.
காய கலப்பை என்பது தொங்கவிட்ட கலப்பை.
சுருக்கி என்பது வாயிலுள்ள கயிற்றை இழுத்துச் சுருக்குதல் அவ்வாறு செய்தால் பை மூடிக்கொள்ளும். நம் பாட்டிமார் இடுப்பில் செருகிவைத்திருக்கும் சுருக்குப்பை நினைவுக்கு வருகிறதா? அதைப் போன்று பெரியது இது.
நேர் சீர் என்றது இரண்டு பாகங்களிலும் சம எடை கொண்டது.
இங்கே இன்னொரு செய்தியைக் கவனியுங்கள்.
நேர் சீர் சுருக்கிக் காய கலப்பையிர் – என்கிறார் புலவர். முதலில் எடைகட்டி, அடுத்து வாய்களை இறுக்கிப் பின்னர் தூக்கித் தோள்களில் போடுகின்றனர். இதுதான் முறை.
இதைப் படிக்கும்போது இன்னொரு பாடல் நினைவுக்கு வரவில்லையா?
ஔவையார் பாடிய பாடல் – புறநானூறு – 206
வாயிலோயே வாயிலோயே
வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தித் தாம்
உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே
கடு மான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல்
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து என
வறும் தலை உலகமும் அன்றே, அதனால்
காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
மரம் கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழு உடை காட்டகத்து அற்றே,
எத் திசைச் செலினும் அத் திசைச் சோறே.
ஔவையார் அதிகனிடம் பரிசில்வேண்டிச் செல்கிறார். பரிசில் கொடுத்தால் ஔவையார் சென்றுவிடுவாரே என்ற எண்ணத்தில் அதியமான் பரிசில் கொடுக்கத் தாமதிக்கின்றான். தாமதத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட புலவருக்குக் கடுங்கோபம் வருகிறது. “மூட்டையைக் கட்டிக்கொண்டு ஊருக்குப் போகிறேன். எத் திசையில் சென்றாலும் அத் திசையில் எனக்குச் சோறு கிடைக்கும்” என்கிறார் அவர். காவின் எம் கலன். சுருக்கின் எம் கலப்பை என்கிறார் அவர். முதலில் பிரித்த மூடைகளில் மீண்டும் கலன்களைப் போட்டு, ஒரு மூடையை முதலில் தோளில் தூக்கி முதுகின் பின் எறிகிறார். (காவின் எம் கலன்). அடுத்த மூடை முபக்கம் தொங்கும். பின்னர்தான் பேசிக்கொண்டே கயிற்றை இழுத்துச் சுருக்குப் போடுகிறார். மலைபடுகடாம் புலவர் போல நிதானமாக, கயிற்றைச் சுருக்கிப் பின்னர் தோளில் தூக்கிப் போட நேரமில்லை. கோபத்திலும் அவசரத்திலும் மாற்றிச் செய்கிறார் புலவர்.
காவினெம் கலனே என்று முதலில் தோளில் தூக்கிப்போட்டு,
சுருக்க்க்க்க்கினெம் கலப்பை என்று ஆத்திரத்தோடு அவர் கயிறை இழுத்து ‘வெடுக்’-கென்று சுருக்கை இழுத்து மூடும் காட்சி கண்முன் தோன்றவில்லையா?
மலைபடுகடாம் இசைக் கருவிகளுக்குரிய படங்கள் எனக்குக் கிடைக்கவில்லை.
ப.பாண்டியராஜா
ஒன்றரை அடி உயர முக வீணை, அதற்கடுத்ததாக திமிரி நாயனம், அப்புறம் திருவாவடுதுறையாரின் உபயத்தில் பாரி நாயனம்!!!.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பழந்தமிழ் இசை : தமிழிசைக்கருவிகள்- காற்றுக் கருவிகள்
(கொம்பு, தாரை, நாதசுவரம், புல்லாங்குழல், சங்கு, மகுடி, முகவீணை, எக்காளம்)
கொம்பு
கொம்பு எனப்படுவது ஒரு வகை இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. நாட்டுப்புற இசையிலும் கோயில் இசையிலும் கொம்பு பயன்படுகிறது.
கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது.
கொம்பு போன்ற இந்த இசைக் கருவிகள் காற்றுக் கருவிகள், ஆங்கில S வடிவில் வளைந்த இந்தக் கருவிகள் நான்கு பாகங்களைக் கொண்டவை.
இவற்றிலேயே பிறை போன்று வளைந்திருப்பவை கோயில் திருவிழாக்கள், கிராமத்து கொண்டாட்டங்கள், பொது நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்தப் படுவன. சாதாரண மக்களின் கொண்டாட்டங்கள், துக்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் கொம்பு ஊதுவது வழக்கம்.
இன்று நாட்டார் திருவிழாக்களில் கொம்பு ஊதுவதைப் பார்க்கலாம்.
“வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்”
12.0654
”சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று
பொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார்” 12.2182
திருமுறைகளில் இந்த இசைக்கருவி இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இசைத்தமிழ் வரலாறு : இசையமுதம் – தொடர் – 21
சிறீ சிறீஸ்கந்தராஜா
24/05/2014
பழந்தமிழ் இசை : தமிழிசைக்கருவிகள்- காற்றுக் கருவிகள்
நாதசுவரம்
நாதசுவரம் என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதசுவரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு.
சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது.
திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது. தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லா வகையான நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.
இவ்வாத்தியம் முன்பு தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகபட்டிணம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகசர்பத்தைத் தெய்வமாகப் பூசித்த நாகர் என்ற சாதியரினால் வாசிக்கப்பட்டு வந்தது.
நாகத்தைப் போன்று உருவத்தைப் போன்று நீண்டிருந்ததின் காரணமாகவும் நாதசுவரம் என்னும் ஏற்பட்டது. இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது.
நாதசுவரம் ஒரு பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ அல்லது இடைக்கால இலக்கியங்களோ இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை.
சிலப்பதிகாரத்தில் கூறப்படும் “வங்கியம்” என்னும் இசைக்கருவியுடன் இதனைத் தொடர்புபடுத்தச் சிலர் முயன்ற போதிலும் அது புல்லாங்குழல் போன்ற ஒரு கருவியே என்று பலர் கருதுகிறார்கள்.
இசைக் கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற கல்வெட்டுக்களிலும் இது பற்றிய குறிப்புக்களோ அல்லது அதனோடு தொடர்புடைய இசைக் கலைஞர் பற்றிய குறிப்புக்களோ இதுவரை கிடைக்கவில்லை. அத்துடன் இதன் துணை இசைக்கருவியாக விளங்குகின்ற தவிலும் கூட இத் தகவல் மூலங்கள் எதிலும் காணக் கிடைக்கவில்லை.
17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம் என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்ற போது இக் கருவியையும் நாகசுரம் என்ற பெயரில் பட்டியல் இடுகின்றது. இதுவே தற்போதைய நிலையில், கிடைக்கின்ற முதல் வரலாற்றுக் குறிப்பு எனலாம்.
இது வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்றது எனக்கூறுவோரும் உளர். எனினும் இது ஷெனாயை விட அளவில் பெரியது.
இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த அடிப் பகுதியையும் கொண்டது. இதன் பாகங்கள் வருமாறு:
1. வட்டவடிவமாக விரிந்து காணப்படும் அணைசு
2. உள் கூடான நீண்ட மரக்குழலால் ஆன உடல்
3. உடலின் மேற் பொருத்தப்படும் கெண்டை (செப்புத் தகடு)
4. அவ்வப்போது வைத்து இசைக்கப்படும் சீவாளி.
நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 அடி. உடலின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன. மேலிருந்து வரும் 7 துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை. மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள்.
நாதசுரத்திற்கு சுருதி கருவியாக விளங்குவது ஒத்து என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார். இன்று இந்தக் கருவிக்குப் பதிலாக சுருதிப்பெட்டி பயன்படுத்தப்படுகின்றது.
நாதசுவரத்துக்கு தாளக் கருவியாக அமைவது தவில் (அல்லது தவுல்) என்ற தோற்கருவியாகும். இதனால் நாதசுவர இசைக்கலைஞர்கள் பொதுவாகத் தவில் இசைக் கலைஞருடன் சேர்ந்து குழுக்களாகவே செயல்படுவது வழக்கம்.
நாதசுவரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாளக் கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவைப் பெரியமேளம் என அழைப்பர்.
நாதசுவரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படும். இம்மரமும் வெட்டப்பட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகே இக்கருவி செய்யப் பயன்படும்.
இக்கருவியின் மேல் பகுதியை உளவு என்றும், கீழ்ப்பகுதியை அணசு என்றும் கூறுவர். உளவுப் பகுதியில் 12 துளைகள் அமைக்கப்படும். இக்கருவியின் அளவிற்கேற்ப பல வகைப்படுகின்றன.
முகவீணை, திமிரி நாயனம், பாரி நாயனம், இடைப்பாரி நாயனம், மத்திம சுருதி நாயனம் என்ற பெயர்களுடன் வழங்கி வருகின்றனர்.
நாதசுவரத்தின் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படும். இது ஒரு வகை நாணல் என்ற புல் வகையால் செய்யப்படும். இந்த நாணலைக் ‘கொறுக்கைத் தட்டை’ என்பர். இதனை ஆற்றங்கரையிலிருந்து கொண்டு வந்து பக்குவப் படுத்துவர். இச்சீவாளியையும் நாதசுவரத்தையும் இணைக்கும் கெண்டை என்ற பகுதி சீவாளியோடு இணைக்கப் பட்டிருக்கும்.
நாதசுவரம் குழல், திமிரு மற்றும் அனசு எனும் மூன்று பாகங்களைக் கொண்டது. இது ஏறத்தாழ கூம்பு வடிவிலான மரமாகும். கீழ் பகுதியிலிருந்து மேல் நோக்கி சிறிது சிறிதாக குறைந்து இவ் வடிவத்தினை இது பெறுகின்றது. மேல் பகுதி வாய் வைத்து ஊதுவதற்கு ஏற்ற உலோக உருண்டை அமையப்பெற்று இருக்கும்.
பல ஓய்வு நாணல்களும் நாதஸ்வரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவற்றுடன் சிறு தந்தத்தினாலான கூம்பு இருக்கும் இவை நாணலினில் உள்ள எச்சில் மற்றும் தூசு குப்பைகளை நீக்கி சரியான காற்று போகும் அளவுக்கு திருத்த கொடுக்கப் பட்டிருக்கும்.
இவற்றுடன் ஒரு உலோக மணியும் பொருத்தப்பட்டிருக்கும். பாரம்பரியமாக நாதஸ்வரத்தின் உடல் வன்மரத்தினால் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மூங்கில், சந்தனமரம், தாமிரம், பித்தளை, கருங்காலி மற்றும் ஐவரி ஆகியவற்றிலும் செய்து பயன்படுத்தப்படுகின்றன.
நாதஸ்வரத்தில் ஏழு விரல் துளைகளும், ஐந்து கூடுதல் ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும். ஐந்து கூடுதல் ஓட்டைகளையும் தேவையானபொழுது பயன்படுத்திக் கொள்ள மெழுகு கொண்டு அடைத்திருப்பர். பான்சூரி புல்லாங்குழல் போன்று இரண்டரை எல்லை ஓட்டைகளும் போடப்பட்டு இருக்கும்.
நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரி, பாரி.
திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும்.
பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்.
பிரபல நாதசுவரக் கலைஞர்கள்
தென்னிந்தியா
டி. என். ராஜரத்தினம் பிள்ளை
சேக் சின்ன மௌலானா
திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை
காரைக்குறிச்சி அருணாசலம் பிள்ளை
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்
எஸ். ஆர். ஜி. சம்பந்தம் & எஸ். ஆர். ஜி. ராஜண்ணா
மாம்பலம் எம். கே. எஸ். சிவா
தேசூர் டி. எஸ். டி செல்வரத்தினம்
திண்டிவனம் ஏ. எஸ். ராமலிங்கம்
மன்னார்குடி எம். எஸ். கே. சங்கரநாராயணன்
காஞ்சி எஸ். சண்முகசுந்தரம்.
யாழ்ப்பாணம்
வி. கே. கானமூர்த்தி
வி. கே. பஞ்சமூர்த்தி
அளவெட்டி என்.கே. பத்மநாதன்
நாதசுவரம் மங்கல இசைக்கருவியாக பயன்படுகிறது. கோவில்கள் சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்த ஏற்ற இசைக் கருவியாகும். நாதசுவரங்கள் உட்புற நிகழ்ச்சிகளை விட திறந்த வெளிகளில் பயன்படுத்த மிகவும் ஏற்றதாகும்.
ஏனெனில் இவற்றின் இசை பெருக்கும் திறன் அதிகமாகும்.
இசைத்தமிழ் வரலாறு : இசையமுதம் – தொடர் – 22
சிறீ சிறீஸ்கந்தராஜா
30/05/2014
பழந்தமிழ் இசை : தமிழிசைக்கருவிகள்- காற்றுக் கருவிகள்
புல்லாங்குழல்
புல்லாங்குழல் மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவியாகும். உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படுகின்றது. இது ஒரு துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்ததாகும்.
பழைய இலக்கியங்களிலே இக்கருவியைப் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் உண்டு. தமிழின் சங்க இலக்கியங்களும் குழல் பற்றிப் பேசுகின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என மூன்று வகைக் குழல்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
இந்துக்களின் கடவுளான விஷ்ணு பகவானின் அவதாரமான கண்ணனின் கையிலுள்ளதாகச் சித்தரிக்கப்படும் புல்லாங்குழலுக்கு சமய ரீதியான முக்கியத்துவமும் உண்டு.
திருமுருகாற்றுப் படையிலே, “குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”
குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம்.
யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.
“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்”
வள்ளுவர் முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பின்னரே யாழைப்பற்றி பேசுகிறார்.
இந்திய பாரம்பரிய இசை வரலாற்றில் புல்லாங்குழல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. இவை மூங்கிலால் தயாரிக்கப் படுகின்றது. இந்தியர்களின் கடவுளான கிருஷ்ணரே புல்லாங்குழலின் குருவாக கருதப்படுகின்றார். மேற்கத்திய புல்லாங்குழலினை விட இவை சாதாரணமாகவே இருக்கின்றன.
இந்திய புல்லாங்குழல்களில் இரண்டு வகைகள் உள்ளன.
பன்சுரி-bansuri : (பன்=மூங்கில், சுரி=சுரம்) இதில் ஆறு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும். வட இந்திய ஹிந்துஸ்தானி இசைக்கு இவை பயன்படுகின்றன.
வேணு : இவை தெனிந்திய கர்நாடக இசைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் எட்டு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.
தற்போது தென்னிந்திய புல்லாங்குழலாக கருதப்படுவது 20-ஆம் நூற்றாண்டில் சரப சாஸ்திரி என்பவரால் வடிவமைக்கப் பட்ட ஏழு விரல்துளைகள் கொண்ட புல்லாங்குழல் ஆகும்.
சீனப் புல்லாங்குழல்
சீனப் புல்லாங்குழல்கள் டிசி என அழைக்கப்படுகின்றன. இவை பல்வேறு அளவுகளிலும், பல்வேறு அமைப்புக்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் துளைகளின் எண்ணிக்கை 6 – 11 வரை வேறுபடுகின்றன. பெரும்பாலானவை மூங்கிலால் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் மரம், எலும்பு, இரும்பு ஆகியவற்றாலும் ஆக்கப்பட்டவையும் காணப்படுகின்றன.
நவீன சீன இசைநிகழ்ச்சிகளில் காணப்படக்கூடிய புல்லாங்குழல்களாவன பங்டி கூடி, சிந்தி, டாடி என்பனவாகும். நிலைக்குத்தாக வைத்து வாசிக்கப்படும் மூங்கிலாலான புல்லாங்குழல் சியாவோ என அழைக்கப்படுகின்றது.
ஜப்பானியப் புல்லாங்குழல்
ஜப்பானியப் புல்லாங்குழல்கள் ஜப்பானிய மொழியில் பியூ (fue) (ஹிரகனா) என அழைக்கப்படுகின்றன. முடிவுப் பகுதியில் வைத்து வாசிக்கப்படுபவை, குறுக்காக வைத்து வாசிக்கப் படுபவை என இரு வகையிலும் பல சங்கீதப் புல்லாங் குழல்கள் ஜப்பானில் காணப்படுகின்றன.
சோடினா எனப்படுவது முடிவுப் பகுதியில் வைத்து வாசிக்கப்படும் ஒருவகைப் புல்லாங்குழல் ஆகும். இது இந்து சமுத்திரத்தில் உள்ள தென்கிழக்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த மடகஸ்கார் தீவுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. தென்கிழக்காசியாவிலும் இந்தோனேசியாவிலும் இது சுலிங் என அழைக்கப்படுகின்றது.
புல்லாங்குழல் அமைப்பு
புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் ‘மரத்தினால்’ செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர்.
சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும்.
குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது.
புல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம், சுற்றளவு 3 அங்குலம் ஆகும். இடப்பக்கம் மூடப்பட்டிருக்கும். வலப்பக்கம் திறந்திருக்கும். குழலில் மொத்தமாக ஒன்பது துளைகள் உண்டு. வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது முத்திரைத்துளை என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும்.
புல்லாங்குழல் இசைத்தல்
குழலின் ஏழு துளைகள் மீது ஏழு விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். எட்டாவது கடைசித்துளை பாவிப்பது இல்லை.
இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும் நீக்கி எஞ்சியுள்ள மூன்று விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற நான்கு விரல்களையும் ஏழு துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது. புல்லாங்குழலின் நீளம், உள்கூட்டின் அளவு கூடும் போது சுருதி குறையும்.
புல்லாங்குழலில் ஏழு சுரங்களுக்கு ஏழு துளைகள் இருந்தாலும் வாசிப்பவரின் மூச்சின் அளவைக் கொண்டே நுட்ப சுரங்களை சரியாக ஒலிக்க முடியும்.
இசைத்தமிழ் வரலாறு : இசையமுதம் – தொடர் – 23
சிறீ சிறீஸ்கந்தராஜா
06/06/2014