திருவரங்கத்தில் பள்ளிகொண்ட கோலத்திலேயே பரிவானபார்வையை நம் பக்கம் திருப்பும் திருவரங்கனின் கிடந்த கோலம் ஓர் அழகென்றால்,நாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளத்தயாரானபார்வையில் இரு கைகளை இடையில் வைத்தபடி நிற்கும் பாண்டுரங்கனின் கோலம் இன்னொரு அழகு!
ஏன் இங்கு நின்றகோலம் அதுவும் இடுப்பில் இருகை வைத்தபடி?
புண்டரீகன் எனும் பக்தன், தன் தாய், தந்தையருக்குச் சேவை செய்வதில் சிறந்தவனாயிருக்கிறான். அதன் சிறப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவனுக்கு அனுகிரஹிக்க பிராட்டியுடன் வருகிறான் ஸ்ரீ கிருஷ்ணன். அப்போது தனது தாயின் பாதங்களை மெல்லப் பிடித்து விட்டுச் சேவை செய்து கொண்டிருக்கிறான் புண்டரீகன். அவனுக்கு வந்திருப்பது இறைவன் எனத்தெரியாது ஆகவே அவன், தன்னைக் காண வந்த பாண்டுரங்கனை செங்கலின் மீது சற்று நேரம் நிற்குமாறு பணிக்கிறான். இறைவனும் அதை ஏற்று அவ்வாறே அந்தச் செங்கலின் மீது ஏறி நின்று ”விட்டலன்” ஆன பெருமையை விவரிக்க வார்த்தைகள் ஏது? இங்கே பக்தன் பெருமைக்குரியவனா? அல்லது அந்த பக்தனுக்காக அவன் வரும் வரை தனது மனைவியோடு இடுப்பில் கை வைத்துக் காத்துக் கொண்டிருக்கும் பண்டரிபுர நாயகன் பெருமைக்குரியவனா?
உண்மையான ஒரு பக்தனைப் பெருமைப்படுத்த இறைவன் தான் எந்த அளவிற்கும் இறங்கி வரத் தயாராக இருக்கிறான் என்பதைத்தான் இந்தச் சம்பவம் நமக்குச்சுட்டிக்காட்டுகிறது அல்லவா?
-
கண்ணன் எனும் கரும் தெய்வம்
கரிய மேனி மிசை வெளிய நீரு சிறிதே இடும் பெரிய கோல தடம் கண்ணன்
கரு மாமுகில் போல் வண்ணன் கண்ணன்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
கார் திறள் அனய மேனி கண்ணனே உன்னை..
என்று ஆழ்வார்பெருமான் அருளியதுபோல கரும் தெய்வத்தின் திருவடிகள் பட்டதாலோ என்னவோ பண்டரீபுரமெங்கும் மண்ணின் நிறம் கருப்பாகவே தெரிகிறது. சந்திரபாகா நதியில் தற்போதி நீர் இல்லை எனினும் நதிச்சுவடு தெரிகிறது..சிறு ஊர்தான்..நகர நாகரீக வாசம் அதிகமில்லை..பாமரமக்கள் அதிகம் தெரிந்தனர்.
பக்தர்கள் விட்டலா விட்டலா என்று கூவியபடி சந்நிதிக்கு நடக்கிறார்கள்.மஹாராஷ்ட்ரமாநிலத்தில் பாண்டுரங்கனுக்கு பக்தர்கள் அதிகம். ஆடி ஏகாதசி மிகவும் விசேஷமாம். பல மைல் தொலைவிலிருந்து பக்தர்கள் தலையில் துளசிமாடத்தை அல்லது பால் தயிர்கொண்ட காவடி போன்றவைகளைக்கொண்டு நடந்தேவருவார்களாம்!
விட் என்றால் செங்கல்.
விட்டோபா செங்கல் மேல் நிற்பவர்ர் என்று அர்த்தம் சொன்னார் ஒரு தமிழ்ப்பெரியவர்.
இடுப்பில் கைகளை இரண்டுபக்கமும் வைத்து நிற்கும் மூலவரின் கோலம் காணக்கண் கோடிவேண்டும்.பக்தர்களோடு நாமும் பாண்டுரங்கவிட்டலா பண்டரிநாதவிட்டலா என்ற நாம ஜபம் செய்தபடி நடக்கிறோம்.
நாம் நம் கைகளால் பாண்டுரங்கனின்
பாதம் தொட்டு ப்ரார்த்திக்கலாம் நாலடி உயரத்தில் அருகாமையில் அண்ணலைப்பார்க்கும் பரவசத்தில் கண்கள் பனிக்கின்றன. அவர் பொன்னடியைத்தீண்டவும் நமக்குத்தகுதி உண்டோ என்ற தயக்கம் காரணமாய் கற்பீடத்தில் தலையை மட்டும் தாழவைத்து வணங்கினேன்.
அர்ச்சகர்கள் பணம் கேட்டு தொல்லை செய்வதாக சிலர் பயமுறுத்தியிருந்தனர். எங்களுக்கு அப்படி எதுவும் நேரவில்லை பிரார்த்தனையாக திருவடி அருகே வெறும் 100ரூபாய்தான் வைத்தேன் அதற்கு தேங்காயுடன் ஒரு சாமந்திமாலையை கையில் கொடுத்துவிட்டார்கள். அந்த சாமந்திமாலையை கோவில் வாசலுக்கு எடுத்துவந்தபோது ஆடுகள் சில ஏக்கமாய் பார்த்தன. ஒரே ஒரு பூவைமட்டும் எடுத்துக்கொண்டு மாலையை ஆட்டிடம் நீட்டினேன்.ஆடு தழை இலையைத்தானே தின்னும் என நினைத்தால் பண்டரிபுர ஆடுகள் பூவையும் விட்டுவைக்கவில்லை! க்ருஷ்ண ப்ரசாதமெனில் பூவும் தழையாகும் போலும்!
,ருக்மணி சத்யபாமாவிற்கு தனித்தனி சந்நிதிகள் ருக்மணியும் இங்கே கருந்தெய்வமாய் ஒளிப்புன்னகையுடன் நிற்கிறாள்.
பாண்டுரங்கனின் சந்நிதிக்குப்போகும் வழியிலேயே முக்கோடி தேவர்கள் பக்தர்கள் பாண்டுரங்கனின்
நடனத்தை தரிசனம் செய்த இடத்தில் வெள்ளிக் கவசம் போட்ட தூண் இருக்கிறதுஅதிலே கண்ணனின்
நடனத்தை அனைவரும் தரிசித்தார்கள் என்று சொல்கிறார்கள், ப்ஜனை பாடிக்கொண்டு
ஆடிவரும் பக்தர்கள் இந்தத் தூண் அருகே பக்தியுடன் ஆடுகிறார்கள் தூணை இருகைகளாலும் கட்டிக்கொள்கிறார்கள்.
நான் அரைகுறை ஹிந்தியில் அதற்கு விளக்கம் கேட்டபோது தூய மராட்டியில் அவர்கள் பதில் சொன்னார்கள் சுத்தமாய் புரியவில்லை!
என் கணவர் ‘புனா பம்பாயில் நான் பெங்களூர் வருமுன் வேலைபார்த்திருக்கிறேன் ஹிந்தி மராட்டி லேசா குஜராத்திகூட தெரியும்’ என அடிக்கடி பெருமையடித்துக்கொள்வார் அவரும் அந்த மராட்டியர்கள் கூறியதை சரியாக மொழிபெயர்க்கவில்லை”ரொம்பநாளாச்சா மராட்டி இப்போ நை மாலும்’ என்று சமாளித்துவிட்டார்!
வெள்ளிப் பாதுகைகள் நாமதேவுருடையது சந்நிதி செல்லும் வழியில் போற்றி பாதுகாக்கின்றனர்.பாண்டுரங்கபக்தனின் பாதுகைகளில் நம் சிரம் விழுந்து வணங்குகிறது. எல்லாக்கோயில்களிலும் இறைவன் தான் உள்ளடங்கி நின்றுகொண்டு தன் பக்தர்களை அடியார்களை முதலில் அடையாளம் காட்டுகிறான். அவனது அடியார்களை நாம் வணங்கிவிட்டுப்பிறகு அவனை தரிசிப்பதுதான் முறைபோலும்!
சாந்த சக்குபாய் எனும் பாண்டுரங்கபக்தை வீடு கோபால்பூரில் உள்ளது, சக்குபாய் புக்கத்தில் ஒரு
பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தாள்,அங்கே கண்ணன் காட்சி
கொடுத்ததை இன்றும் சித்தரித்து வைத்து உள்ளார்கள் என்றார்கள் நேர நெருக்கடி காரணமாய் அங்கே போக முடியவில்லை.
அங்கே சக்குபாய் மாவு அரைத்த
யந்திரம்,மற்றும் ருக்மிணி சமேதராக பாண்டுரங்கன் காட்சி கொடுத்ததையும் சிவன் பார்வதி
நந்தியுடன் சக்குபாய் பக்தைக்கு்
தரிசனம் கொடுத்து அங்கே கோவில் கொண்டு இருப்பதையும் பார்க்கலாம் என்றார்கள்.
சிவனாகவும் பாண்டுரங்கனாகவும் நரஹரி என்னும் சிவபக்தருக்கு காட்சிகொடுத்தாராம் கண்ணன்.
பண்டரீபுரக்கதைகள் நிறைய இருக்கிறது
. ஸ்யாம சுந்தர மதன மோஹன
ஜே...ஜே...பாண்டுரங்கா! பாண்டுரங்கா!
பாண்டுரங்கவிட்டல! ஸ்ரீஹரி பண்டரி விட்டல!
விட்டல, விட்டல பாண்டுரங்கா! ஜே! புண்டரீக வரத விட்டல!
யாரோ பாடிக்கொண்டே போனார்கள். கச்சேரி ஒன்றில்
அருணாசாயிராமி்ன்
தீர்த்த விட்டல ஷேத்திர விட்டல என்ற அபங்க் நினைவிவிற்குவந்தது
ஏனோ ஆழ்வார்கள் யாருமே இங்கு வந்து பாண்டுரங்கனை போற்றிப்பாடவில்லை போலும்! தொண்டரடிப்பொடிப்பொடிபொடியாக நான் சந்நிதியில் மனதுக்குத்தோன்றிய வரிகளைப்போட்டு இப்படி ஒருபாட்டு எழுதிப்பாடியும் வந்துவிட்டேன்
இதுதான் அந்தப்பாட்டு
ராகம் காபி(காலை எழுந்ததும் குடிப்பது அல்ல)
பல்லவி
பண்டரிபுரம் செல்வோமே பாண்டு
ரங்கனைதரிசிக்க(பண்டரி)
அனுபல்லவி
அண்டர்குலத்ததிபதியை அவனியைக்காப்பவனை
தொண்டர்மனக்காவலனை தொழுதுநாம் ஏத்திடவே(பண்டரி)
சரணம்.
நாமதேவருக்கு மோட்சம் அளித்தவன்
நம்பிவந்தோரை என்றும் ரட்சிப்பவன்
காமக்குரோதங்கள் கடிதில் விலகிடவே
கண்ணனின் பாதமதைப்பற்றவே நாமும்(பண்டரி)
...
்
்