திருவெம்பாவை ஐந்தாம் நாள்
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மையாட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்
திருமாலும், பிரமனும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக்கொள்ள இருவரும் தாமே பெரியவர் என்று அறுதியிட்டுக் கூற, பின்னர் ஈசனிடம் சென்று கேட்டால் அவன் உண்மையுரைப்பான் எனத் தோன்ற ஈசனிடம் சென்று எங்கள் இருவரில் யார் பெரியவர் எனக் கேட்கிறார்கள். ஈசனும் அடிமுடி கண்டுபிடிக்க முடியாத பெரும் சோதி வடிவில் நின்றான். இருவரையும் இதற்கு மூலமும், முடிவும் கண்டு வரச் சொல்ல பிரம்மாவோ ஈசனின் தலையைக் காணவும், விஷ்ணுவோ அடியைப் பணியவும் தேடிச் சென்றனர். ஆனால் விஷ்ணுவால் காணமுடியாமல் திரும்பி வந்து தான் தோற்றதை ஒத்துக்கொண்டார். மேலே,மேலே, மேலே சென்ற பிரம்மாவோ,விண்ணையும் தாண்டிச் சென்றும் முடியைக்காண இயலவில்லை. அப்போது ஈசன் சடாமுடியில் சூடி இருந்த தாழம்பூ ஒன்று கீழே விழுந்தது. கீழே கீழே வந்த தாழம்பூவைப் பார்த்து மகிழ்ந்த பிரம்மா இது நிச்சயம் ஈசன் முடியிலிருந்து வந்ததால் நாம் முடியைக் கண்டோம் எனச் சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து, தாழம்பூவைச் சாட்சி சொல்ல அழைக்க, தாழம்பூவும் ஒத்துக்கொண்டது.
ஈசன் முடியைக் கண்டதாக பிரம்மா கூற ஈசன் உண்மை தெரிந்து பிரம்மாவை சபிக்கிறார். தாழம்பூவுக்கும் இனி என் வழிபாட்டில் நீ இடம்பெற மாட்டாய் என்று ஒதுக்கிவிடுகிறார். அப்படி அடிமுடி தேடிய விஷ்ணுவாலும், பிரம்மாவாலும் காண முடியாமல் நின்ற ஈசனை நாம் உணர்வோம் என்று பொய்யுரை பேசுகிறாளாம் இந்தப்பெண்.
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்= ஆஹா இனிமையான சொற்களால் பொய்யுரைகளை பேசும் வஞ்சகப் பெண் இவள் அன்றோ, வாசற்கதவைத்திறப்பாயாக!
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்= இந்த மண்ணகத்தில் உள்ளவராயினும், விண்ணகத்தில் உள்ளவராயினும் மற்றும் உள்ள எவராலும் அறிய முடியாத, காண முடியாத பரம்பொருளின்
கோலமும் நம்மையாட்கொண்டருளிக் கோதாட்டும்= திருமேனியின் அழகும், நம்மையும் நம் போன்ற எளியோரையும் ஆட்கொண்டருளும் அருட்குணத்தையும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று= ஐயனவன் சீலத்தையும் பாடி என் சிவனே என் சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்= எத்தனை முறை ஓலம் இட்டோம். அவ்வாறு கூவியும், நீ எழுந்துவரவே இல்லையே,
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்= ஈசனுக்கல்லாது உன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பெண்ணே, உன் பக்தி எங்கே போயிற்று? என்று எழுப்பவந்த தோழியர் அழைக்கின்றனர்.
*********************************************
திருவெம்பாவை ஆறாம் நாள்
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோருக்குன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே = அழகிய மான் போன்ற பெண்ணே! நாளைக்கு நானே வந்து உங்களை எல்லாம் எழுப்புவேன் என்று கூறி இருந்தாயே? அப்படிச் சொன்னதை மறந்தாயோ? எங்கே போயிற்று அந்த வார்த்தைகள்? உனக்கு நாணமாய் இல்லையா?
போனதிசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ= அவ்வார்த்தைகள் எந்தத் திசையில் சென்றன பெண்ணே, இன்னமுமா உனக்குப் பொழுது புலரவில்லை??
வானே நிலனே பிறவே அறிவரியான்= இந்த வானும் சரி, நிலமும் சரி, பிற எவ்வுலகங்களும் சரி, இறைவனைச் சரிவர அறிந்தவரில்லை. எவர் அறிவார் அவன் பெருமையை?? இது உணர்வால் மட்டுமே இயலும் ஒன்று.
தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும்= ஆனாலும் அந்தப் பரமன் தானே வலிய வந்து அவனிடம் பக்தி செலுத்தும் நம்மிடம் அன்பு பூண்டு நம்மை ஆட்கொண்டருளுகிறான்.
வான்வார் கழல்பாடி வந்தோருக்குன் வாய் திறவாய்=அப்படிப்பட்ட ஈசனின் வீரக் கழல் அணிந்த திருவடிகளைப் பணிந்து பாடித் துதித்து இங்கே வந்துள்ள எங்களுக்கு நீ வாயைத் திறந்து உன் பதிலையாவது கூறுவாய்.
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்= ஆ, ஆ, நீ இவ்வளவு கல்நெஞ்சுக்காரியாய் இருக்கிறாயே? பரமன் பெயரை நாங்கள் சொன்னதைக் கேட்டதுமே நீ வாயையும் திறக்காததோடு உன் ஊனும் கூட உருகவில்லையே?? இது என்ன அதிசயம்? இத்தகைய நிலை உனக்கு ஒருத்திக்குத் தான் இருக்கும். அடிபெண்ணே,
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்= ஈசன் எங்களுக்கு மட்டுமல்ல, உனக்கும், உன்னைச் சேர்ந்தவர்களுக்கும், மற்றும் இவ்வுலகத்து மாந்தர் அனைவருக்கும் தலைவன் ஆவான். அவன் புகழைப் பாட இனியாவது நீ வருவாயாக.
**********************************************
திருவெம்பாவை ஏழாம் நாள்
அன்னே இவையும் சிலவோ பலஅமரர்
உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாயின்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!
இவை வெளிப்படையாகத் தூங்கும் பெண்ணை எழுப்புவதைக் குறித்தாலும் நம் மனம் விழிப்புறுதலையே குறிக்கும். நம்முள்ளே உறையும் ஈசனை நாம் கண்டு கொள்ளவேண்டும் என்பதற்காகவே மாணிக்கவாசகர் தூங்கும் ஒரு பெண்ணை எழுப்புவதுபோல் நம் அனைவரையும் ஈசனின் சச்சிதானந்தப் பெருவெள்ளத்தில் மூழ்க அழைக்கிறார்.
எவ்வளவு எழுப்பியும் இன்னமும் தூங்குகிறாள் அந்தப் பெண். மாயையில் நாம் ஆழ்ந்து கிடக்கிறதையே இது உணர்த்தும். எத்தனையோ சோதனைகள் மூலம் ஈசன் தன்னிருப்பைக் காட்டினாலும் நாம் எங்கே புரிந்து கொள்கிறோம்?? திரும்பத் திரும்ப இவ்வுலக வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளிலேயே மனம் செல்கிறது.
அன்னே இவையும் சிலவோ பல அமரர்=அம்மா, தாயே என்று சொல்வோம் அல்லவா, அத்தகையதொரு விளி இது. தாயே, இப்படியும் முன்னுக்குப் பின் முரணாகச் செய்வாயா நீயும்? உனக்கு இப்படியும் நடந்து கொள்ளத் தெரியுமா?
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்= ஈசனை உன்னி மனம் நினைக்கவும் அரியவன் ஆயிற்றே, தேவாதிதேவர்களாலும் இயலாத ஒன்றாயிற்றே, சீரும், சிறப்பும் நிறைந்தவன் அன்றோ,
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறப்பாய்= அத்தகைய பெருமை வாய்ந்த ஈசனின் திருச்சின்னங்கள் ஆன எக்காளம், சங்கு போன்றவற்றின் ஒலிகளைக் கேட்ட மாத்திரத்திலேயே நீ சிவன் நாமத்தைக் கூறுவாயே!
தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்=தென்னாடுடைய சிவன் என்பதற்காக, தென்னா என்று ஆரம்பிக்கும்போதே தீயிலிட்ட மெழுகைப் போல் உருகுவாளாம். அப்படி இருந்த நீயா இவ்வாறு மாறிவிட்டாய்?
என்னானை என் அரையன் இன்னமுதென்றெல்லோரும்= என் அப்பன், என் அரசன், என் இன்னமுது, என்று இங்கே உள்ள நாங்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஒவ்வொரு பெயரையும் சொல்லிவிட்டோம். அப்படியுமா தூக்கம்??
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளாகிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்= இப்படி கடூரமான கடின இதயம் கொண்ட அறிவிலிகளைப் போல் சும்மா படுத்துக்கிடக்கிறாயே இன்னமும்?? இந்தத் தூக்கத்தின் வலிமைதான் எவ்வளவு ஆழமாய் உள்ளது?
எப்படிச் சொன்னாலும் திரும்பத் திரும்ப இருளாகிய அறியாமையின் பாலே மனம் செல்கிறது. அதிலே கிடைக்கும் அற்ப சுகங்களிலே மனம் லயிக்கிறது. ஆனந்திக்கிறது. அந்த மனத்தை விழிக்கச் செய்து தன்னுள்ளே ஒளிரும் ஒளியான ஈசனைக் காணச் செய்யவேண்டும்.
***********************************************
திருவெம்பாவை எட்டாம் நாள்
கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில்விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.
பொழுது விடியும்போது சேவலும், கோழியும் கூவித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்.
கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்= அவ்வாறு கோழி மட்டும் சிலம்பவில்லை, குருகு=பறவையினங்கள் அனைத்துமே விழித்துக்கொண்டு ஒலியெழுப்புகின்றன.
ஏழில் இயம்ப இயம்பும்வெண்சங்கெங்கும்= உதய கீதங்கள் கோயிலில் இசைக்கப்படும், அவ்வொலியோடு வெண்சங்கு ஊதும் ஒலியும் கேட்கிறது.
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை= ஒளிச்சுடராய் விளங்கிய ஈசனின் ஒப்பற்ற பெரும் கருணையைப் புகழும்
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ= ஈசன் புகழ் பாடும் பொருள் கொண்ட சிறப்பான பாடல்களை நாங்கள் பாடினோமே? உனக்குக் கேட்கவில்லையா?
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்= அடி பெண்ணே இப்படிக் கிடக்கிறாயே? நீ வாழி, உனக்கு ஒன்றும் நேராமல் இருக்கட்டும், வாயைத் திறக்க மாட்டாயா?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ= ஆழி இங்கே கடல் . கடல் போன்ற அன்புள்ள ஈசனின் திருவடிக்கு அன்பு செய்யும் நெறிமுறை இதுவா??
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.= ஊழிக்காலத்திலும் அவன் ஒருவனே நிரந்தரமாய் இருப்பான். அத்தகைய உலக முதல்வனை, ஏழைகளுக்கெல்லாம் கருணை செய்பவனைப் பாடித் துதிக்கலாம் வா. இங்கே ஏழைப்பங்காளன் வெளிப்படையான பொருளில் பணமில்லாமல் சிரமப்படும் ஏழைகளுக்கும் கடவுளே தெய்வம் என்ற கோணத்தில் திக்கற்றவர்களுக்கு தெய்வம் என்றும் கொள்ளலாம். இன்னொரு பொருளில் பக்தியில் ஏழையாக இருந்தாலும் அவன் அதைக் கண்டு கொள்ள மாட்டான். நீ அவனை மனமார ஒருமுறை நினைத்தாலே போதும், உன்னைத் தடுத்தாட்கொள்வான் என்றும் கொள்ள முடியும். பொதுவாய் ஆன்றோர் கூறுவது, இங்கே ஏழை என்பது பல்வேறு அணிகள்பூண்ட உமையைக் குறிக்கும், பங்காளன்=உமைக்குத் தன் உடலில் சரிபாதி பங்கு கொடுத்த ஈசன் என்றும் பொருள் கொள்கிறார்கள். மேலும் அன்னைக்குத் தன் உடலில் சமபாகம் கொடுத்தருளிய நிகழ்வு கார்த்திகைத் திருநாளில் திருவண்ணாமலையிலேயே நடைபெற்றது. ஆகவே அதுவும் பொருந்தும்.
*********************************************
இப்போ சுபாவுக்குப் பிடித்த பாடல் ஒன்பதாம் நாள்
"முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப்ப்பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப்பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்.
முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே= இவ்வுலகம் தோன்றியதற்கெல்லாம் கால நிர்ணயம் செய்கின்றனர். மற்ற வேத, வேதாந்தங்களுக்கு, காவியங்களுக்கு அனைத்துக்குமே ஒருவாறு கால நிர்ணயம் செய்ய முடிகிறது. ஆனால் ஈசன் எப்போது தோன்றினான்? தோற்றுவித்தவர் யார்? அவன் இருப்பைக்கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்றே சொல்லலாம். அத்தகைய கால நிர்ணயமே செய்ய முடியாத காலத்துக்கும் முன்னே தோன்றிய மிகப் பழைய, ஆதியான பொருளே, அவன் தான் ஈசன்,
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே= பின்னால் எத்தனையோ புதுமைகள் தோன்றின. தோன்றுகின்றன, தோன்றவும் தோன்றும். ஆனால் இவை எதுவுமே முன்னால் இல்லைனு சொல்ல முடியுமா? இல்லைஅல்லவா? ஏற்கெனவே இருந்த ஒன்றைத் தான் நாம் கண்டு பிடிக்கிறோம். புதுமை எனச் சொல்கிறோம். அத்தகைய புதுமைகளுக்கும் புதியவனாக இனி வரும் சமூகமும் காணவேண்டிய புதிய இளையவனாக ஈசன் இருக்கிறான். ஏனெனில் அவன் இல்லை எனக் கூறுபவர்களும் அவனை உணர வைக்கும் தன்மை கொண்டிருக்கிறான் அல்லவா? அவன் ஒருவன் இருக்கிறான் என்பதாலேயே இல்லை என்ற மறுப்பும் தோன்றுகிறது. இந்த வாதம் புதியது போல் இன்று பேசப்பட்டாலும் அநாதிகாலந்தொட்டே இவையும் பேசப்படுகிறது. ஆகவே புதுமை என்றாலும் மீண்டும் மீண்டும் அதே தன்மை, பொருள் கொண்டவையாகவே இருக்கிறது. அத்தகைய தன்மை உள்ளவன் ஈசன்.
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம் உன்னடியார் தாள் பணிவோம்= அப்பா, உன்னை எங்கள் தலைவனாய்ப் பெற்ற நாங்கள் உன்னை எவர் தலைவராய் நினைந்து வணங்குகிறாரோ அத்தகைய சிறப்பான அடியார்களையே அவர்கள் திருவடிகளையே பணிந்து ஏத்துவோம்.
ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார்= அவர்களுக்கே நாங்கள் உரிமை உள்ளவர்கள் ஆவோம். அப்படிப்பட்ட சிவனடியார்களையே தேடித்தேடி எங்கள் கணவராக்கிக்கொள்வோம்.
அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்= அவ்வடியார்கள் தங்கள் மனம் மகிழ்ந்து சொன்ன ஆணைகளையே நாங்கள் அவர்களுக்குச் சேவகர்களாய் இருந்து நிறைவேற்றித் தருவோம்.
இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்= எங்கள் ஈசனே எமக்கு எம் அரசனாகிய நீர் இவ்வண்ணம் அருள் புரியும்படி கேட்டுக்கொள்கிறோம். அத்தகைய அருள் பெற்றாலே நாங்கள் எக்குறையும் இல்லாதவராய் வாழ்வோம்.
***********************************************
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாண்
ஏதவன் ஊர் ஏதவன்பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே = பாதாளங்கள் என்று பூமிக்குக் கீழே ஏழு இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. மகாதலம், ரசாதலம், தராதலம், சுதலம், நிதலம், விதலம், அதலம் என்பவை அவை. இவ்வாறு இத்தனை பாதாளங்களுக்கும் கீழே கீழே ஈசனின் திருவடி வியாபித்திருக்கிறது. அப்படியும் அதைக் காண இயலவில்லை. எல்லாவற்றுக்கும் கீழே சொல்லுக்கும் அடங்காத நிலையைப் பெற்ற அந்தத் திருவடிகளையும், அழகிய புத்தம்புது மலர்களால் அலங்கரிக்கப் பட்ட அவன் திருமுடியையும் எல்லாப் பொருள்களுக்கும் ஆரம்பமும், முடிவும் அதுவே எனப் படுகிறது.
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்= அவன் உடலின் ஒருபாகத்தில் அம்பிகையும் இடம்பெற்றிருக்கிறாள். ஆகவே அவனுடைய திருமேனியும் ஒரே விதமானது அல்ல. ஒரு பக்கம் ஆணின் மேனியும், இன்னொரு பக்கம் பெண்ணின் மேனியும் கொண்டு விளங்குகிறான். இந்த அர்த்தநாரீசுவரத் தத்துவம் உள்ளார்ந்த பொருள்பொதிந்த ஒன்று. ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஆண், பெண் தன்மைகள் கலந்தே இருக்கின்றன். ஈசன் மேல் பக்தி மீதூறி, அவனைத் தியானித்து, அவன் பஞ்சாக்ஷரத்தை ஓதும் அடியார்களுக்கு, பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்குத் தங்களுக்குள்ளே உள்ள பெண் வடிவைக் காணவும் இயலும். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கண்டது போல. ஆகவே அவ்வளவு ஆழ்ந்து ஊறிப் போய் பக்தி செய்யவேண்டும்.
இப்படிப் பக்குவப்பட்ட ஆன்மா, பக்குவப்படாத மற்றவர்களைப் பார்த்து நீங்களும் விழித்தெழுங்கள், உங்களுள்ளே இருக்கும் சோதியைக் கண்ணார, மனமாரக் கண்டு மகிழுங்கள் என்பதே திருவெம்பாவையின் முழுத் தத்துவம், இது என்னோட கருத்து மட்டுமே. மாற்றுக்கருத்து இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்.
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்= வேதங்களுக்கு முதல்வன் இவனே. விண்ணோரான தேவாதிதேவர்களும் சரி, மண்ணுலகில் வாழும் மக்களும் சரி, இவனைப் புகழ்ந்து எவ்வளவு பாராட்டிப் பாடினாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்= ஈசனின் புகழ்ச்சி என்பது முற்றுப் பெறா ஒன்றாகும். தொண்டர்களுக்கு எல்லாம் இவன் தோழனாகவே இருக்கிறான். சுந்தரருக்காகத் தூது போனதை அறிவோம் அல்லவா?
கோதில் குலத்து அரன் தன் கோய்ல் பிணாப்பிள்ளைகாள்= ஏ, பெண்களே, இவ்வளவு பெருமையும், புகழும் வாய்ந்த சொல்லுக்கடங்கா ஈசனின் திருக்கோயிலில் தொண்டு செய்வதையே உங்கள் முழுநேர வேலையாகக் கொண்டு சிவத் தொண்டு செய்யும் பெண்களாகிய நீங்கள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்= ஈசனின் சொந்த ஊர் எது? அவனுடைய உண்மையான பெயர் என்ன?? அவனுடைய உற்றார் உறவினர் யார்? அவனுக்கு அயல் மனிதர்கள் எவர்?
இங்கே சொல்லி இருப்பது, முன்னைப் பழம்பொருளுக்கும் பழம்பொருளான ஈசனுக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை, உற்றார், உறவினரும் இல்லை. அவனுக்குப் பெயரும் நாம் சூட்டியதே. மேலும் இவர் உற்றார், இவர் அயலார் என்று அவன் பேதம் காட்டுவதில்லை. எல்லாருக்குமே ஒரே மாதிரியாகத் தன் அருள் மழையைப் பொழிகிறான். அவனிடம் பேதம் ஏதும் இல்லை.
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்= இவ்வளவு புகழ் வாய்ந்த ஈசனைப் பாடும் தன்மை கூட நமக்குப் புரியவில்லை. நாம் ஏதோ பாடுகிறோம், அவனோ அதையும் ஏற்றுக்கொண்டு நமக்கு அருள் செய்வது ஒன்றே அவன் குறிக்கோளாக வைத்திருக்கிறான்.
**********************************************
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.
சிறந்த சிவபக்திச் செல்வத்தில் சிறந்து விளங்கிய மணிவாசகர் திருவண்ணாமலையில் தங்கி இருக்கும்போது அங்கிருந்த பெண்கள் தினமும் காலையிலே குளித்து நீராடி அருணாசலேஸ்வரரை வழிபட்டதும், அவரையே நினைந்து நினைந்து உருகியதையும் கண்டு தம்மையும் ஒரு பெண்பாலாக நினைந்து அவர் பாடிய பாடல்களே திருவெம்பாவை என்ற ஒரு கூற்றும் உண்டு. மேற்சொல்லி இருக்கும் திருவெம்பாவையில் குளத்தில் பெண்கள் அதிகாலையில் குளிப்பது பற்றிச் சொல்கையில் குளத்து நீரைக் கைகளால் அடித்துச் சத்தம் வரும்படி நீருக்குள் புகுந்து, குளித்ததாய்ச் சொல்கிறார்.
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையால் குடைந்து குடைந்து= குளத்து நீரெல்லாம் அசுத்தமாகாத பொற்காலம் அது. தாமரைகள் பூத்திருக்கும். தாமரைப் பூவின் தேனை உண்ண வண்டுகள் மொய்க்கும். அப்படி வண்டுகள் நிறைந்திருக்கும் திருக்குளத்தில் அந்தத் தண்ணீரில் தங்கள் கைகளால் முகேர் என்ற சப்தம் வரும்படி நீரை அடித்துக்கொண்டு பாய்ந்து, நீருக்குள் புகுந்து, புறப்பட்டுக் குளித்து
உன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்= என் ஈசனே, என் ஐயனே, உன் திருவடிகளின் புகழைப்பாடுகின்றோம்; பரம்பரை பரம்பரையாக உன் புகழன்றி நாங்கள் வேறொருவரை நினைத்ததில்லை. உன்னடியார்களாகவே உன்னாலேயே உன்னருளாலேயே நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.
ஆரழல் போல் செய்யாவெண்ணீறாடி செல்வா= மாலுக்கும், அயனுக்கும் அடிமுடிகாணமுடியா அழல் போன்ற உருவெடுத்த உன் நிறமும் அத்தகைய நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையது அன்றோ, செக்கச் சிவந்த மேனியன் அன்றோ, வெண்மையான திருநீற்றினால் அன்றோ நீ குளிக்கிறாய்
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா= சிறுத்த இடையுடன் கூடிய, மை தீட்டப் பெற்ற அழகிய அகன்ற கண்களை உடைய மடந்தையாகிய உமையின் மணவாளனே
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்= ஐயா, என் ஈசனே உன்னுடைய திருவிளையாடல்கள் எல்லையற்றவை. அவை அனைத்தும் எம்மை ஆட்கொள்ளவேண்டியே நீ நடத்துகிறாய்.
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோய்= அந்தத் திருவிளையாடல்களின் உய்யும் வழியெல்லாம் பெற்று அநுபவித்துக் கழித்துவிட்டோம்.
எய்யாமற்காப்பாய் எமையேலோர் எம்பாவாய்= எங்கள் வினையெல்லாம் தீர இனியேனும் நாங்கள் பிறவி என்னும் பெருங்கடலில் மூழ்கி இளைத்துச் சோர்ந்து போகாமல் எங்களைக் காப்பாற்றி மோக்ஷத்தை அருளுவாய்
***********************************************
ஆர்த்த பிறவித்துயர் கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.
நம் இருவினைப் பாசங்களால், அதாவது நல்வினை, தீவினை ஆகியவற்றால் கட்டுண்டு கிடக்கும் பிறவியால் ஏற்படும் துன்பம் ஒழிந்து ஈசனின் நாமம் ஒன்றே நம்மை உய்விக்கும் திறன் படைத்தது என்னும்படிக்கு அவன் நாமாவளியாகிய அமுதக் கடலில் மூழ்கும் தீர்த்தமாக ஐந்தெழுத்து மந்திரம் இங்கே விளங்குகிறது.
நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்= சுற்றிலும் நெருப்பெரிய நடுவே தில்லையம்பலத்து நடராஜர் ஆடுவதாக ஐதீகம். ஆதிரை நக்ஷத்திரமும் செக்கச் சிவந்த ஒளி பொருந்திய தோற்றம் கொண்டு விண்ணில் அசைந்து ஆடுவது ஈசன் எல்லையில்லாப் பெருவெளியில் ஆடுவது போலவே தோற்றமளிக்கும் என்பதும் கூறப்படுகிறது. அதே போல் அம்பலக்கூத்தனும் ஆடுகிறான். ஆட்டுவிக்கிறான். இது வெளிப்படையான பொருளென்றாலும் நம் உடலே பஞ்சாக்ஷரத்தால் ஆனது. அந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதி நம் உள்ளத்தினுள்ளே மனதுக்குள்ளே ஓதிக்கொண்டு வந்தோமானால் உள்ளே ஈசன் உறைந்திருப்பது கண்கூடு. மருவுந்துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் "சிவாய நம" என ஓதே." (உண்மை விளக்கம்-மாணிக்க வாசகர்)
"நமசிவாயா" என்னும் ஐந்தெழுத்துப் பஞ்சாட்சரம் தான் அவரின் உடலின் அங்கங்களும் கூட. அக்னியை ஏந்தும் கையானது "ந" என்னும் எழுத்தையும், கால்கள் "ம" என்னும் எழுத்தையும், கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கை "சி" என்னும் எழுத்தையும், டமரூ வைத்திருக்கும் கை "வ" என்னும் எழுத்தையும், அபய ஹஸ்தம் "யா" என்னும் எழுத்தையும் குறிக்கிறது.
இவ்வானும், குவலயமும் எல்லோமும் காத்தும், படைத்தும், கரந்தும் விளையாடி= எப்போப் பார்த்தாலும் ஆடுகிறாப் போல் இருக்கும் ஈசன் உண்மையில் அவன் ஆட்டத்தின் மூலமே பஞ்சத் தொழில்களையும் நடத்துகிறான் அன்றோ! டமரூவின் ஓங்கார நாதத்தில் இருந்து தான் மொழி பிறந்தது என்று சொல்கிறார்கள். சிிருஷ்டி ஆரம்பித்தது இந்த ஓங்கார நாதத்தில் இருந்து தான். அபய ஹஸ்த முத்திரை காத்தல் தொழிலைச் செய்கிறது. நெருப்பு ஏந்தி இருக்கும் கை அழித்தலைக் குறிக்கிறது. முயலகனை அழுத்தும் வலக்கால் மாயையை அழுத்துவதையும் மறைத்தல் தொழிலையும், தூக்கிநிற்கும் இடக்கால் அருளுவதையும், அந்த இடக்காலைச் சுட்டும் கை என்னிடம் வந்து சேர் என்றும் தெரிவிக்கிறது. இதில் இருந்து இந்த ஐந்தொழில்களைச் செய்பவர்கள் ஆன பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து பேரும் நடராஜருக்குள் அடங்குபவர்கள் என்றும் இவ்வுலகு அவரில்லாமல் இல்லை எனவும் தெரிய வருகிறது. தத்துவங்களும், உரைகளும், பாக்களும் அவனருளன்றி இல்லை என்பதோடு அல்லாமல் அவன் கோவில்களில் மட்டும் அடியார்கள் காணவேண்டி ஆடவில்லை. இந்த ஆட்டத்தால் தான் அவன் இவ்வுலகை மட்டுமல்லாது ஈரேழு பதினாலு உலகங்களையும் ஆட்டுவிக்கிறான் என்று சொல்கிறது.
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்=அப்படிப்பட்ட ஈசனின் திருநாமத்தைப்பேசிக் கைவளைகள் ஒலிக்கும்படியும், இடையில் அணிந்துள்ள மேகலாபரணங்கள் ஒலிக்கும்படியும், நீண்ட கருங்கூந்தலில் வண்டுகள் மொய்க்கும்படியும்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.=பூக்கள் மலர்ந்து மணம் பரப்பி, பூக்களால் நிரம்பிய குளமோ என்னும்படிக்குஇருக்கும் இக்குளத்து நீரில் மூழ்கிக் குளித்து ஈசன் திருநாமத்தைப் பேசி மகிழ்வோம். பாடி ஆடுவோம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் = குவளை மலர்களின் கருங்குவளைப் பூக்கள் நிறைந்தும், செந்தாமரை மலர்கள் நிறைந்தும் காணப்படும் திருக்குளத்தில், நீர்ப்பறவைகளும் நிறையவே இருந்தனவாம். குருகினம் என்றால் பறவையினம். அவைகள் போடும் கீச் கீச்சென்ற சப்தமும் நிரம்பிக் குளக்கரையே சல்லென்ற சப்தத்தால் நிரம்பி இருந்ததாம். ஒருபக்கம் வண்டுகளின் ரீங்காரம், மற்றொரு பக்கம் பறவைகளின் கலகலத்வனி. இன்னொரு பக்கம் குளிக்க வரும் பெண்களின் கைவளைகள் சப்தம், கால் சிலம்புகள் சப்தம், இதற்கு நடுவே மரங்களின் மர்மர சப்தம், அத்தனைக்கும் நடுவே குளிக்கும் பெண்களின் நமசிவாய என்னும் மந்திர சப்தம், என நிரம்பி இருக்கும் குளக்கரையில்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த= இதை வெளிப்படையாய்ப் பார்த்தால் மலம் கழித்துவிட்டு வந்து கழுவுவதை குறிப்பிடுவது போல் தோன்றினாலும் நம் மும்மலமாகிய ஆணவன், கன்மம், மாயை போன்றவற்றையே குறிக்கும். அத்தகைய மும்மலங்களை இத்திருக்குளத்தில் நீராடி ஈசன் திருநாமத்தை உச்சரித்து அவனையே தியானிப்பதன் மூலம் கழுவலாம் என்பது மணிவாசகர் கூற்று. இங்கே திருக்குளத்தைப் பிராட்டியும் ஈசனும் போல எனக்குறிப்பிட்டிருப்பதும் பொருந்தி வரும். பொதுவாக நீர்நிலைகளைப் பெண்ணாகவே வழிபடுகிறோம். திருக்கைலையும், மானசரோவர் ஏரியும் ஈசனும் அம்மையும் இணைந்திருப்பதாகவே ஐதீகம். அதேபோல் மாணிக்கவாசகர் திருவண்ணாமலை ஐயனின் உருவமாக வழிபட்டதால், திருக்குளத்தை அம்பிகையாக எண்ணி இருவரும் இணைந்திருக்கும் அர்த்தநாரீசுவரக் கோலம் என்று கூறுகிறார். மேலும் குவளை மலரின் கரிய நிறமானது அம்பிகையின் கரிய நீண்ட கண்களையும் செந்தாமரை மலரின் செந்நிறமானது ஈசனின் சிவந்த திருமேனியையும் சுட்டுவதாயும் கூறுகிறார். அதோடு குருகு என்பதும் அம்பிகையின் கைவளையல்களையும் அவை எழுப்பும் சப்தத்தையும் குறிப்பதோடு அரவம் என்பது இங்கே பாம்பையும் குறிப்பதால் நீர்ப்பாம்புகள் ஐயனின் ஆபரணங்களாய்த் தோற்றமளித்ததாயும் கூறுகிறார்.
பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!= ஊற்றிலிருந்து நீர் பொங்கிப் பொங்கி மேலெழுந்து வருகிறதாம். குளங்களுக்குள்ளே ஆழமாக மடுவென்று ஒரு இடம் உண்டு. அதுதான் ஊற்றுக்கண் என்பார்கள். அந்த ஊற்றுக்கண் ஆழம் அதிகம் என்பதால் மடுப்பக்கம் போகவேண்டாம் என்பார்கள். ஆனால் இங்கேயோ இந்தப் பெண்கள் அத்தகைய ஆழமான பொங்கும் மடுவுக்குள்ளும் பாய்ந்து புகுந்து அவர்கள் கால் சிலம்புகள் சப்திக்கவும், ஈசன் திருநாமத்தைச் சொல்லி நீராடும்போது பூரிக்கும் மனதையும் கூறுகிறார். இத்தகைய பூரிப்பான மகிழ்வான எண்ணங்களோடு குடைந்து குடைந்து நீராடும்போது குளத்து ஆழத்து நீரும் மேலெழும்பும். அவாறு குளித்து ஈசன் புகழைப்பாடுவோம் என்கிறார் மாணிக்கவாசகர். இங்கே கொங்கைகள் என மார்பைச் சுட்டி இருப்பது பக்தியின் குறியீடு. பக்தி மேலீட்டினால் இதயம் விம்முவதையும், மகிழ்வினால் விம்முவதையும், நாம் பலமுறை உணர்ந்திருப்போம் அல்லவா?
***********************************************காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப்புனலாடிச் சிற்றம்பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத்திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
காதார் குழையாடப்பைம்பூண் கலனாடக்= காதில் அணிந்திருக்கும் குழைகள் ஆடவும், கழுத்தில் அணிந்திருக்கும் மற்ற அணிகலன்கள் ஆடவும்,
கோதை குழலாட வண்டின் குழாமாடச்= அழகிய பெண்களின் நீண்ட குழல் விரிந்து பரந்து ஊஞ்சல் ஆடுவதைப் போல் ஆடவும், அப்போது அந்தக் கூந்தலில் அந்தப் பெண்கள் சூடி இருக்கும் மலர்களும் சேர்ந்து ஆடவும் அதைக் கண்ட வண்டுகளின் கூட்டம் அந்தப் பூக்களின் தேனை மாந்தும் நோக்கத்தோடு ர்ரூம்ம்ம்ம்ம் என ரீங்காரமிட்டுக்கொண்டு ஆடிக்கொண்டே சுற்றிச் சுற்றி வரவும்
சீதப் புனலாடிச் சிற்றம்பலம்பாடி= இந்த அழகிய தண்மையான குளிர்ந்த நீரில் மூழ்கி நாமும் ஆடுவோம். அதுமட்டுமா? ஆடும்போது அந்தச் சிற்றம்பலத்தானைக் குறித்துப் பாடி ஆடுவோம்.
வேதப் பொருள்பாடி அப்பொருளாமாபாடிச் = வேதங்களின் பொருளாகவே அமைந்த அந்த சர்வேசனின் புகழைப் பாடி, அவர்தம் பெருமைகளைப் புகழ்ந்து கூறும் பாடல்களைப் பாடி, அனைத்துக்கும் அவனே காரணமும், காரியமுமாய் அமைந்ததைக் குறித்து வியந்து பாடுவோம்.
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி= இறைவன் சோதி வடிவானவன். அத்தகையவனின் சோதியின் திறம் பற்றி நம்மால் இயன்றவரை எடுத்துப் பாடுவோம் அவன் சூடும் கொன்றாஇ மலர்களால் ஆன மாலையைப்பாடுவோம்
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்= ஆதியும் அவனே, அந்தமும் அவனே, அவனே முதலும், முடிவும் அவனே. இதையும் நாம் உணர்ந்து பாடுவோம்.
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்= நம் ஒவ்வொருவரின்கர்ம வினைக்கேற்றவாறும், இயல்புக்கேற்றவாறும் நம்மை வகைப்படுத்தி, வேறுபடுத்தி நம்மை வளர்த்து ஆளாக்கும் அன்னை , அவள் கைகளின் வளையல்களும் ஆட,
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.= அவள் திருவடிகளின் பெருமையையும் புகழ்ந்து பாடி ஆடுவோமாக.
இங்கே மாணிக்க வாசகர் தில்லையில் இடைவிடாது ஆடிக்கொண்டே தன் கூத்தின் மூலம் இவ்வுலகை ஆட்டி வைக்கும், இயக்கும் நடராஜப் பெருமானின் ஆட்டத்தையும், அதன் உள்ளார்ந்த தத்துவத்தையும் குறித்துப் பாடுகிறார். அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் இவ்வுலகம் இயங்குவதையும் குறிப்பிடுகிறார்.