குறுந்தொகையில் பாலைக்காட்சிகள்!

38 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Dec 27, 2008, 6:04:25 PM12/27/08
to Min Thamizh
பாலைக்கென்று தனியாய் நிலம் கிடையாது. குறிஞ்சியும், முல்லையும் மழையின்றி வாடும்போது, அது பாலையாய் பரிணமிக்கிறது.
 
இதை சிலப்பதிகாரம்,
 
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல் இயல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்.

என்று உரைக்கிறது.

பாலை என்பது பகலவன் ஆட்சி செய்யும் இடம். வெய்யோனின் வெப்பத்தால் மரங்களெல்லாம் இலையை இழந்துவிட்டு, நிழல் தர முகில் வருமோ என்று வானம் பார்த்து வாழுமிடம். விலங்குகள் கூட, வில்லங்கமான விளங்காத இடம் என அஞ்சி பதுங்கும் இடமே இப்பாலை நிலம்.

கலித்தொகை காட்டும் பாலைக் காட்சி ஒன்று இதோ;

 
இன்னிழ லின்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலை

வெப்பத்தின் கொடுமையை தாங்காத பெண் மானை தன்நிழலில் ஓய்வு கொள்ளச் செய்கிறது ஆண்மான். இப்படி வாழ்வதற்கரிய பாலையில் கூட மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கடப்பதற்கரிய இந்த பாலை நிலத்தை ஆடவன் பொருள் தேடச் செல்லும்போது கடப்பான் தன் இல்லறத்தாலின் இன்பத்தை நிலைநாட்ட. மனமொத்த காதலர்கள் மனமொன்றி மணம்கொண்டு வாழ்வதற்காக வீடு துறந்து உடன்போக்கு செய்வதுண்டு செல்வதற்கரிய பாலையைக் கடந்து. இதை புலவர்கள் காட்சிப் படுத்தியிருப்பது கற்பனையின் அற்புதமா? இல்லை, நிகழ்வுகளின் கோர்வை. நம் முன்னோர்களின் வாழ்வியலுக்கான பார்வை.

 
அறந் தலைப் பட்ட நெல்லியம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோளிடங் கறங்கும்
இறப்பருங் குன்றம் இறந்த யாமே
குறுநடைப் பலவுள் ளலமே நெறிமுதல்
கடற்றில் கலித்த முட்சினை வெட்சித்
தளையவிழ் பல்போது கமழும்
மையிருங் கூந்தல் மடந்தை நண்பே (பா - 209)

பாலை பாடுவதில் தன்னிகரற்ற தலைவன் பெருங்கடுக்கோ பாடிய தலைவன் கூற்றாய் அமைந்தது இப்பாடல்.

வழிப்போவாரது உயிரை தாங்குதற்குரிய அறத்தைச் செய்யும் நெல்லி மரத்தினது அழகிய பசுங்காய்கள், வலிமை மிகுந்த புலிக்குட்டிகள் வாழ்வதற்குரிய இடத்தில், உதிர்ந்து உருளுகின்ற கடத்தற்கரிய மலைகளை கடந்து சென்ற யாம் அங்ஙனம் சென்றவிடத்து பல பொருள்களை நினைத்தேமல்லேம். வழியினிடத்தே தழைத்த வளைந்த கிளைகளையுடைய வெட்சியினது முறுக்கழிந்த பல பேரரும்புகள் மணக்கின்ற மை போன்ற கரிய கூந்தலை உடைய தலைவியினது நட்பையே நினைத்திருந்தோம்.

தற்செயலாய் சந்தித்துக் கொண்ட அவனும் அவளும் கண்டவுடனே காதல் கொண்டு இன்பமாய் சுற்றித் திரிகிறார்கள். மணம் புரிவதற்கு பொருள் தேடி தலைவியை பிரிந்து செல்கிறான் தலைவன். இத்தனை நாள் இன்பமாய் இனிதாய் பொழுதைக் கழித்தவர்கள் பிரிவுத் துன்பத்தில் வாடுகிறார்கள். தலைவன் குடிப்பதற்கு நீர்கூட இல்லாத பாலை நிலத்தில் கொடிய விலங்குகள் வாழும் காட்டில், கதிரவனின் கடும் சூட்டையும் பொறுத்துக் கொண்டு முட்களும் கற்களும் நிறைந்த பாதையில் தலைவியை எண்ணிக் கொண்டே பொருள் தேடச் செல்கிறான். தலைவன் எவ்வளவு பெரிய செல்வரின் மகனாய் இருந்தாலும் தானே பொருள் தேடி தலைவியை மணக்க வேண்டும் என்பது சங்ககால முறைபோலும்.

கச்சிப்பேட்டுக் காஞ்சிக்கொற்றன் என்பவர் பாடிய தோழி கூற்றாய் அமைந்த பாடல் இது.

 
நசைநன் குடையார் தோழி ஞெரே ரெனக்
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்
பசிப்பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந்த தரல்
ஒழியின் உண்டு வடுவின் நெஞ்சில்
தெரிந்து நடை மரபில்தன் மறிக்கு நிழலாகி
நின்று வெயில் கழிக்க என்ப நம்
வின்துயில் முனிநர் சென்ற வாறே (213)

தலைவர் நின்பால் மிக விருப்பம் உடையவர். நம்மோடு செய்யும் இனிய துயிலை வெறுத்துப் பிரிந்து சென்ற அவர் போன வழியில், விரைவாக கிளைத்த கொம்பை உடைய தலையைப் பெற்ற முதிய ஆண்மான் காலால் உதைத்து பசிநோயைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு விளைந்த பருத்த பெரிய மரப் பட்டையை தனது குட்டி உண்டபின் எஞ்சினால் தான் உண்டு, குற்றம் இல்லாத நெஞ்சினோடு துள்ளி நடக்கும் இயல்பினை உடைய தனது குட்டிக்கு நிழலாகி நின்று வெயிலை நீக்கும்.

தலைவன் ஊடல் கொண்டு தலைவியை பிரிந்து செல்கிறான். அதனால் தலைவி துன்பத்தில் துவண்டு போகிறாள். தலைவியின் நிலையைக் கண்ட தோழி, தலைவர் உன்மேல் மிகுந்த விருப்பம் உடையவர். அவர் செல்கின்ற இடமாகிய பாலை நிலம் வரண்டு மரங்களெல்லாம் கிளைகளோடு இருக்கும். உணவும் நீரும் உண்ணக் கிடைக்காது. ஆனால் அவர் செல்லும் வழியில் பல காட்சிகளைக் கண்டு செல்வர். மழையின்றி வறண்டு போனதால் உண்ண எதுவும் கிடைக்காமல் ஆண்மானானது தனது பசிப்பிணியையும் தன் குட்டியின் பசிப்பிணியையும் போக்கிக் கொள்ளும் பொருட்டு, பருத்த மரங்களின் பட்டைகளை விரித்து தன் குட்டிக்குத் தரும். குட்டி உண்டபின் எஞ்சியிருந்தால் தான் உண்ணும் இயல்பினுடையதாக அந்த ஆண்மான் இருக்கும். மேலும் வெயிலின் தாக்கம் மிகுதியான காரணத்தால் ஓடித் திரியும் குட்டியானது களைத்துப் போகும். வெயிலின் மிகுதி தாளாது குட்டியானது ஓய்வுகொள்ளும் பொருட்டு தன் நிழலில் அதை ஓய்வு கொள்ளச் செய்யும். இக்காட்சியைக் கண்ட நம் தலைவர் ஊடல் நீங்கி திரும்பி வருவார் என்று கூறுகிறாள் தோழி.

அன்பும் பண்பும் ஒருங்கே அமையப்பெற்ற தலைவி தலைவன் மேல் கொண்ட அன்பால் அவனோடு செல்கிறாள். வளமான குடும்பத்தில் பிறந்த தலைவி தலைவன் மேல் கொண்ட காதலால் கடப்பதற்கரிய பாலை நிலத்தை எப்படிக் கடப்பாளோ என்று செவிலித்தாய் கவலையுறுகிறாள். ஏனென்றால், பாலை உண்பது கூட அவளுக்கு கடிய செயலாய் இருந்திருக்கிறது. இப்போது பாலையை கடக்கும் துணிவு எப்படி வந்ததோ? எனப் புலம்புகிறாள்.

 
பாலை பாடலின் அடிப்படைக் கட்டமைப்பு என்பது, பொருள் தேடித் தலைவன் தலைவியை பிரிந்து செல்வான். அவ்வழியே அவன் காணும் காட்சிகள் எல்லாம் தலைவியை நினைவுபடுத்தும் விதமாகவே அமையும். மனமொத்த காதலர்கள் மணம் செய்ய வீட்டிற்கு தெரியாமல் இப்பாலை வழியே செல்வர். உடன்போக்கை மேற்கொண்ட தலைவியின் செவிலித்தாய் தலைவி இங்கு செல்வச் செழுப்பில் வாழ்ந்த நிலையையும் பாலை நிலத்தின் கொடிய காட்சிகளையும் மனதில் இருத்தி கவலை கொள்வாள். ஆனால் தலைவியோ தலைவன் மேல் கொண்ட காதலால் கொடிய துன்பங்களை எல்லாம் இன்பமாய் கொண்டு அவனோடு செல்வாள்.
 
அநன்
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

Reply all
Reply to author
Forward
0 new messages