உடுக்கை இழந்தவன் கை - தொடர்கதை

444 views
Skip to first unread message

Kumaran Malli

unread,
Sep 1, 2008, 3:29:57 PM9/1/08
to minT...@googlegroups.com
 

உடுக்கை இழந்தவன் கை - அத்தியாயம் 1

உவகையுடன் கூடிய உள்ளத்தினராதல் மிகப் பெரிய சிறப்பு. எல்லோருக்கும் துன்பமும் இன்பமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. குளிரும் வெப்பமும் போல் மாறி மாறி வரும் இந்த இன்பதுன்பங்களில் எல்லாம் உவகை கொண்ட மனத்துடன் இருப்பதென்பது ஒரு சிலரால் தான் முடிகிறது. கடமை புரிவார் இன்புறுவார் என்றொரு பண்டைக்கதையும் உண்டு. கடமையைச் செய்வதாலேயே இன்பம் தோன்றிவிடுகிறதா? கடமையைச் செய்து முடித்தவுடன் ஒரு நிறைவும் அமைதியும் தோன்றினாலும் உள்ளத்தில் உவகை தோன்றி நிலை நிற்பதில்லை. இப்படி இருக்க எல்லா கடமைகளையும் செய்து கொண்டே எதுவும் செய்யாத நிலையில் நிற்க வேண்டுமென்று கற்றறிந்தவர்கள் சொல்கிறார்கள். உலகத்தில் அப்படி இருப்பவர்கள் யாரேனும் உண்டா என்ன?

எல்லாமும் செய்து கொண்டிருக்கும் போதே ஒன்றும் செய்யாமல் இருக்கும் நிலையில் நிலைத்து நிற்கும் கரும யோகியைப் போல் கதிரவன் ஒளி வீசிக் கொண்டிருக்கிறான். இந்த உலகத்து உயிர்கள் எல்லாம் தழைத்து வாழ்வதற்காக என்று அவன் தன்னை எரித்துக் கொண்டு ஒளிவீசவில்லை. தானாக ஏனோ எரிந்து கொண்டிருக்கிறான். அவனின் ஒளியில் இருந்து கிடைக்கும் சக்தியால் உலகத்து உயிர்கள் எல்லாம் வாழ்கின்றன. அவனின் எரி தழலின் வீச்சினைப் பொறுத்துக் கொள்ளும் தூரத்தில் அவனை வலம் வந்து கொண்டிருக்கும் பூமி அன்னை அவனது ஒளி தரும் சக்தியால் தன்னில் பிறந்த உயிர்களுக்குத் தேவையான உணவுகளை எல்லாம் உருவாக்கித் தருகிறாள். அன்னையும் தந்தையுமாக இருவரும் உயிர்க்குலம் அனைத்தையும் உயிர்ப்பித்து வளர்த்து வருகிறார்கள்.

பன்னெடும் காலமாக இந்த உலகத்தில் உயிர்கள் எல்லாம் இப்படியே மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்று பிறந்து அதனிலிருந்து இன்னொன்று பிறந்து என்று பல்கிப் பெருகி நிற்கின்றன. இந்தத் தென்பெண்ணையாற்றங்கரையோரப் பகுதியும் அப்படித் தான் இருக்கிறது. ஆற்று நீர்ப் பாசனத்தாலும் மாதம் மும்முறை தவறாது பெய்யும் மழையினாலும் இந்தப் பகுதி முழுவதும் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்திருக்கிறது. அந்தச் செழுமை இங்கு வாழும் மக்களிடமும் தெரிகிறது. வந்தவரை எல்லாம் வரவேற்று வாழவைக்கும் பெருமக்கள் இவர்கள். காடுகள் நிறைந்த இந்த முல்லை நில மக்கள் கரியவனைத் தொழுது வாழ்பவர்கள். ஆங்காங்கே காடுகளை வெட்டி சிறு ஊர்களும் நகரங்களும் அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். ஊருக்கு நடுவே மாயோனுக்குக் கோவிலும் அமைத்துப் பரவுகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக மக்கள் அனைவரும் தம் மன்னவனின் திருமண விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். பழம்பெருமை கொண்ட குடியில் பிறந்த தங்கள் மன்னவனுக்கு ஏற்ற வகையில் இன்னொரு பழம்பெருமை கொண்ட குடியில் பிறந்த மகளிர் மனைவியராக அமைந்ததை எண்ணி எண்ணி தம்முள் ஒருவருக்கொருவர் பேசிப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். மன்னவனும் வள்ளல் என்று பெயர் பெற்றவன்; அவன் மனைவியரும் பெரும்வள்ளல் ஒருவனின் மக்கள். என்ன பொருத்தம் என்ன பொருத்தம் என்று வியக்காதவர் இல்லை. தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் பலவிதங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். வண்ணப்பொடிகளை எண்ணெயுடன் கலந்து ஒருவர் மேல் ஒருவர் தடவியும் வண்ணப்பட்டாடைகளை உடுத்தியும் மகிழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். போவோர் வருவோரை எல்லாம் வருந்தி அழைத்து விருந்து கொடுத்து மகிழ்கின்றனர்.

மகிழ்ச்சி ஒன்றைத் தவிர வேறு ஏதும் அறியாதவரைப் போல் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த மக்கள் கூட்டத்தின் நடுவில் ஒரு முதியவர் வந்து கொண்டிருக்கிறார். தம் மன்னவனின் திருமண விழாவைத் தங்கள் வீட்டு விழா போல் கொண்டாடும் இந்த மக்களின் அரச அன்பைக் கண்டு புன்னகை பூத்த முகத்துடன் வந்து கொண்டிருக்கிறார். அந்த முதியவரின் தோற்றம் அவர் கல்வி கேள்விகள் சிறந்தவர் என்று பறை சாற்றுகிறது. அறிவின் ஒளி முக மண்டலமெங்கும் வீசிக் கொண்டிருக்கிறது. அவர் தனது இடையில் அணிந்திருக்கும் வெண்ணிற பட்டாடை அவரது செல்வச் செழுமையைச் சொல்கிறது. அரசர் பெருமானிடம் செல்வாக்கு கொண்டவர் என்பதை அவரது கையில் அணிந்திருக்கும் பொன் வளை சொல்கிறது. காலில் அணிந்திருக்கும் தண்டை இந்நாட்டு மன்னவன் மட்டுமின்றி வேறு பல மன்னர்களிடமும் செல்வாக்கு பெற்றவர் என்பதைக் கூறுகிறது. கழுத்தில் காதிலும் அணிந்திருக்கும் பொன்னணிகள் பல மன்னர்களிடம் பெற்ற பரிசில்களைப் போல் தெரிகின்றன. அவரது தோற்றத்தைப் பார்த்தாலே ஒரு பெரும் புலவர் என்று தெரிகிறது. அந்தத் தோற்றத்தைக் கண்ட மக்கள் அவருக்கு முகமன் கூறி மரியாதையுடன் வழி விட்டு ஒதுங்கி நிற்கின்றனர்.

பெண்ணையாற்றங்கரையில் வந்து நின்ற அவருக்கு அந்தச் சூழல் மிகவும் பிடித்திருக்கிறது. முதல் நாள் பெய்த மழை நீர் இன்னும் இந்த ஆற்றங்கரை புற்களின் மீது தேங்கி நிற்கிறது. அந்த நீர்த்துளிகள் கதிரவனின் ஒளியில் வைரக் கற்களைப் போல் மின்னுகின்றன. இன்று காலை பெய்த பனியோ என்று ஒரு நொடி தோன்றினாலும் பனி என்றால் கதிரவனைக் கண்டவுடன் விலகியிருக்கும்; இவை இன்னும் விலகாமல் நிற்பதால் இவை மழைத்துளிகளே என்று நினைத்துக் கொள்கிறார் அந்த முதியவர்.

கடமையைப் பற்றிய எண்ணங்கள் மீண்டும் மனத்தில் வருகின்றன. தனக்குரிய கடமைகள் எல்லாம் நிறைவேறிவிட்டது என்ற மன அமைதி இருந்தாலும் ஒரு பெரும் துயரம் அவரது மனத்தை அரித்துக் கொண்டிருக்கிறது.

'ஆருயிர் நண்பனை விட்டு கடைசி வரை பிரியாதிருப்போம் என்றல்லவா நினைத்திருந்தோம். காலத்தின் கோலத்தால் இப்படி அவனை மரணத்தின் வாயிலில் தனியே விட்டுவிட்டு வர வேண்டியதாயிற்றே. வாழும் வரை வந்தவர்களுக்கு எல்லாம் வாரி வாரி வழங்கி அவனை விட்டால் மாரி ஒன்று மட்டும் தான் உலகத்தில் அவனளவு வள்ளற்தன்மை கொண்டது என்று போற்றும் படி வாழ்ந்தானே. அவனுக்கு இப்படி ஒரு கதி ஏற்பட்டதே. செய்த அறங்களை எல்லாம் பரிசிலர்க்கு வழங்கிவிட்டானோ? அவனை அவன் செய்த எந்த அறமும் காக்கவில்லையே? ஐயகோ ஐயகோ. இந்த மக்கள் எல்லோரும் மகிழ்வுடன் தங்கள் மன்னவன் திருமணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நானோ என் மன்னவன் வானுறையச் சென்றதை எண்ணி துயர் உறுகிறேனே'

பெண்ணையாற்றங்கரையில் அமர்ந்து தனிமையில் சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார் அந்த முதியவர். மனத்தை அரிக்கும் துயரங்கள் கண்களின் வழியே வெளி வந்து கன்னங்களையும் அரிக்கத் தொடங்கிவிட்டன. சிறு வயது முதல் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக அவர் மனக்கண் முன் தோன்றி மறைகின்றன.
 
(தொடரும்)

Kumaran Malli

unread,
Sep 1, 2008, 10:03:32 PM9/1/08
to minT...@googlegroups.com
 

உடுக்கை இழந்தவன் கை - 2 (பாரி வள்ளலின் கதை)

பாண்டிய நாட்டின் வடக்கே இருக்கும் இந்த சிறிய நாடு மிகவும் புகழ் வாய்ந்தது. குன்றிலிட்ட விளக்காக இந்த நாட்டின் பெருமையும் இந்த நாட்டு மன்னனின் புகழும் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பரவியிருக்கிறது. தமிழகம் முழுவதையும் தொன்று தொட்டு ஆண்டு வரும் வேளிர் குலத்தில் பெருமை வாய்ந்த ஒரு வேளிர் குலம் ஆட்சி செய்யும் நாடு இது. பறம்பு மலையின் சுற்றி அமைந்திருக்கும் நாடு என்பதால் இதற்குப் பறம்பு நாடு என்று பெயர். தேனும் தினைமாவும் கொள்ளும் எள்ளும் சந்தனமும் வேங்கைமரமும் என்று பார்க்கும் திசையிலெல்லாம் குறிஞ்சி நிலத்தின் வளமெல்லாம் இந்தப் பறம்பு நாட்டில் மிகுதியாக இருக்கிறது.

இங்கே தான் என் நண்பன் வாழ்கிறான். வள்ளல்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுபவன். வள்ளல் என்று சொன்னவுடனே எல்லோருக்கும் நினைவில் தோன்றுபவன். இந்த நாட்டின் புகழை தமிழகம் என்று பரப்பி நிற்பவன். பறம்பு மலையிலிருந்து ஆட்சி செய்யும் பாரி வேள் தான் அவன். சர்க்கரை இருக்குமிடம் நோக்கி எறும்புகளின் கூட்டம் வருவதைப் போல் எல்லாத் திசைகளிலிருந்தும் பரிசிலர்கள் இவனை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள்.

தென்மதுரையில் பாண்டினால் அமைக்கப்பட்டுப் புரக்கப்படும் தமிழ்ச் சங்கத்தில் இருந்து அழைப்பு வந்திருந்தது. அதனை ஏற்று மதுரைக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறேன். பாரியின் புகழ் சங்கப்புலவர்கள் இடையே நன்கு பரவியிருக்கிறது. நான் பாரியின் நண்பன் என்பதால் புலவர்கள் நடுவே எனக்கு ஒரு தனி மரியாதை. என் கல்விக்குத் தரும் மரியாதை என்று அவரக்ள் சொன்னாலும் அவர்கள் யாரும் கல்வியில் எனக்கு இளைத்தவர்கள் இல்லை என்பதால் பாரியின் நண்பன் என்பதால் தான் எனக்கு அந்த மரியாதை என்று எனக்குத் தெரியும். புலவர்கள் மற்ற மன்னரைப் புகழ்வதற்காகச் சொல்லும் உயர்வுநவிற்சியைப் போலின்றி பாரியைப் பற்றிச் சொல்லப்படுபவை எல்லாம் உண்மையே என்பதை உணர்ந்ததால் வந்த மரியாதை அது. பொய்களுக்கு நடுவில் உண்மைக்கு என்றுமே தனி மரியாதை உண்டு தானே.

மதுரையில் கிடைத்த ஏற்றத்தைப் பற்றி பாரியிடம் சொல்லவேண்டும். பாண்டியனே பொறாமையால் புழுங்கும் அளவிற்குத் தமிழ்ப்புலவர்கள் எல்லாம் பாரியின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ வள்ளல்கள் தமிழகம் எங்கும் இருந்தாலும் பாரிக்கு நிகர் பாரியே என்று அவர்கள் சொல்லும் போது என் நண்பன் அவன் என்று என் நெஞ்சு பெருமிதத்தால் விம்முகிறது.

நடுப்பகல் நேரமாகிவிட்டது. ஏதேனும் ஊர் தென்பட்டால் அங்கு உணவு அருந்திவிட்டு வெயில் சாயும் வரை கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும். இந்தக் காட்டுவழியில் செல்லும் போது வெயில் அவ்வளவாகத் தெரிவதில்லை தான். ஆனால் பழக்கம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? நடுப்பகலை ஒட்டி உணவருந்திவிட்டுக் கொஞ்சம் ஓய்வெடுக்கும் வழக்கம் சிறு வயதில் இருந்தே அமைந்துவிட்டது. ஓரிரு நாழிகை அப்படி ஓய்வெடுத்துவிட்டால் பின்னர் அந்தி சாயும் வரை நடக்க உடலில் தெம்பிருக்கும். இந்த வழியில் இதுவரை வந்ததில்லை. இது அணுக்கமான வழி என்று சொன்னார்கள் என்பதால் இந்த வழியில் வந்தேன். கடந்த நான்கு நாழிகைகளாக எந்த ஊரும் வரவில்லை. இன்னும் ஒரு நாழிகைக்குள் ஏதாவது ஒரு ஊர் தென்பட்டால் நன்றாக இருக்கும்.

அதோ சில வீடுகள் தெரிகின்றன. சிறிய வீடுகள் தான். ஆனால் எந்தக் குறையும் இன்றி மக்கள் வாழும் வீடுகள் என்பது நன்கு தெரிகிறது. முதலில் தெரியும் வீட்டில் உணவு அருந்த முடியுமா என்று பார்க்கவேண்டும்.

***

இந்த ஊரில் எந்தக் குறையும் இல்லை. வேண்டியது எல்லாம் கிடைக்கிறது. அஞ்சியத்தை மகள் நாகையாரும் அண்டர் மகன் குறுவழுதியாரும் இந்த ஊரில் தான் வாழ்ந்து வருகிறார்கள். பாணர் குலத்தில் பிறந்த பாணரும் பாடினியும் ஆனாலும் இது வரை எந்த மன்னரிடமும் சென்று பாடல் பாடி பரிசில் பெறவில்லை. இசையாலும் பாடல்களாலும் ஊராரை மகிழ்வித்து அவர்கள் தரும் பொருளைக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள். சில நாட்களாக நாகையாருக்கு ஒரு பெரிய பொன்னால் ஆன கழுத்தணி வேண்டும் என்று ஆசை. ஊர்ப் பெரியவரின் மகள் அப்படி ஒரு நகையை அணிந்து ஊர்த்திருவிழாவிற்கு வந்திருந்தாள். அன்று முதல் அந்த நகை பல இரவுகள் நாகையாரின் கனவில் வந்து அவளைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. எந்த மன்னரிடம் சென்று கேட்டால் அப்படிப்பட்ட பரிசில் கிடைக்கும் என்று தெரியவில்லை. குறுவழுதியோ எந்த மன்னரைத் தேடியும் செல்லும் மனநிலையில் இல்லை. அதனால் தனக்குள்ளேயே அந்த ஆசையை வைத்துக் கொண்டு காலத்தைத் தள்ளி வருகிறாள் நாகையார்.

"அன்பர்களே. அன்பர்களே"

அழைக்கும் குரலைக் கேட்டு நாகையார் வெளியே வந்து பார்த்தாள்.

"ஐயா. தாங்கள் யார்? என்ன வேண்டும்?"

"அம்மையே. நான் ஒரு தமிழ்ப்புலவன். மதுரையிலிருந்து பாரி வேளின் மாளிகைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். என் பெயர் கபிலன். இன்று பகற்பொழுதை இங்கே கழிக்கலாமா என்று கேட்கவே அழைத்தேன்"

"ஐயா. தாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தது எங்களுக்குப் பெரும்பெருமை. இந்தப் பகற்பொழுதிற்கு நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளலாம். உணவு அருந்திவிட்டீர்களா?"

"இல்லை அம்மா. இனிமேல் தான்"

"தேனும் தினைமாவும் இருக்கின்றன ஐயா. உண்கிறீர்களா?"

"ஆகட்டும் தாயே"

நாகையார் கொண்டு வந்து கொடுத்த தேனையும் தினைமாவையும் வயிறார உண்டு விட்டு நிழலாக இருக்கும் ஒரு திண்ணைக்கு வந்து அமர்ந்தார் கபிலர். சரியாக அதே நேரத்தில் . குறுவழுதியார் திரும்பி வந்தார்.

"ஐயா. இது என் வீடு தான். தங்களைப் பார்த்தால் புலவர் போல் தெரிகிறது. உணவு உண்டீர்களா?"

"ஆம் ஐயா. அம்மை உணவு தந்தாள். சுவையான உணவை இப்போது தான் உண்டு முடித்தேன். சற்று இளைப்பாறவே இங்கு அமர்ந்திருக்கிறேன்"

"மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்களைப் போன்ற புலவர்கள் எழுதித் தரும் பாடல்களைப் பண்ணில் இசைத்துப் பாடுபவர்கள் நாங்கள்."

"ஓ. பாணரோ?"

"ஆம் ஐயா. என் மனைவியும் நன்கு பண்ணிசைத்துப் பாடுவாள்"

"அம்மையின் குரலும் நன்கு இனிமையாக இருக்கிறது"

"ஆம் ஐயா. எங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையான புலவர் பெருமக்கள் எங்கள் வீட்டிற்கு வருவதை நாங்கள் மிகவும் விரும்புகிறோம்"

ஒரு செம்பில் குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து கபிலர் அருகில் வைத்துவிட்டு சிறிது இடைவெளிவிட்டு அமர்ந்திருந்த தன் கணவர் அருகில் அமர்ந்தாள் நாகையார்.

"பாணரே. நீங்கள் பரிசில் வேண்டி எந்த ஊர்களுக்குச் சென்றுள்ளீர்கள்? அந்த ஊர்களின் சிறப்புகளைச் சொல்லுங்கள்."

"புலவர் பெருமானே. பரிசில் வேண்டிப் பலவூர் செல்லும் தேவை எங்களுக்கு ஏற்படவில்லை. இவ்வூர்ப் பெருமக்களே எங்களை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். அதனால் நாங்கள் இதுவரை இந்த ஊரை விட்டு வேறு ஊர்களுக்குப் பரிசில் வேண்டிச் சென்றதில்லை"

"வியப்பிலும் வியப்பு பாணரே. பாணர்களும் புலவர்களும் பரிசில்களை வேண்டிப் புரவலர்களை நோக்கிச் செல்லுதல் தானே முறை. நம் மன்னர் பாரியை நோக்கிப் பல திசைகளில் இருந்தும் பரிசிலர்கள் வந்து கொண்டே இருக்க இந்த நாட்டில் வாழும் நீங்கள் அவனிடம் கூடவா பரிசில் வேண்டிப் பெற்றதில்லை?"

"ஐயா. அப்படியே பரிசில் வேண்டிச் செல்ல வேண்டும் என்றாலும் யார் யாரிடம் சென்றால் பரிசில் கிடைக்கும் என்று தெரியாது ஐயா. தங்களைப் போன்ற புலவர்கள் சொன்னால் அதனைக் கேட்டு அதன் படி நடப்போம்"

"அம்மையே. நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் எழுதிய சிறுபாணாற்றுப்படையில் வள்ளல்கள் ஏழு பேரைப் பற்றி சொல்லியிருக்கிறார். பாணர்களை வள்ளல்களிடம் ஆற்றுப்படுத்துவதே இந்த சிறுபாணாற்றுப்படையின் நோக்கம். அந்த நூலில் இருக்கும் செய்திகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நத்தத்தனார் சொன்ன ஏழு வள்ளல்கள் பாரி, காரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி, ஓரி என்போர்.

சுரும்புகள் (வண்டுகள்) விரும்பி உண்ணும் படி தேனைத் துளிக்கும் பூக்களை உடைய மரங்கள் நிறைந்த காட்டு வழியில் சிறிய பூக்களை உடைய முல்லைக் கொடிக்கு அது தழுவி வளர்ந்து தழைப்பதற்குப் பெரிய அழகிய தேரினைக் கொடுத்த எல்லாத் திசைகளிலும் வெள்ளிய அருவிகள் விழும் பறம்பு மலைக்கு அதிபதியான வள்ளல் பாரி.

சுரும்புண நறுவீ யுறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பிற் கோமான் பாரி


வாலாலேயே உலகத்தையெல்லாம் மருளச் செய்யும் புரவியுடைய, அன்புடன் கூடிய நல்ல சொற்களை இரவலர்களுக்குத் தந்த, நெருப்பு திகழ்ந்து விளங்கும் அச்சம் தரும் நெடிய வேலினையுடைய வீரக்கழலினையும் தொடியையும் அணிந்த நீண்ட கைகளையுடைய காரி

வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல்
கழல் தொடித் தடக்கை காரி


மழை தவறாமல் பெய்வதால் உண்டான வளத்தை உடைய மலைப்பகுதிக் காட்டிடையே திரிந்து கொண்டிருந்த மயில் கூவியதை அது குளிரால் நடுங்கிக் கூவியது என்று கருதி அருள் மிகுதியால் போர்வையைக் கொடுத்த, அருமையான வலிமையையுடைய அழகிய வடிவினையுடைய ஆவியர் குடியில் பிறந்த பெருமகன், பெரிய மலைநாட்டையுடைய பேகன்

வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன்


குளிர்ச்சி தரும் வகையில் கருநிற நாகம் கொடுத்த உடையை மனம் உவந்து ஆல மரத்தின் கீழ் அமர்ந்த இறைவற்குத் தந்த, வில்லைத் தாங்கிச் சந்தனம் பூசித் திகழும் வலிமையனா தோள்களைக் கொண்ட, அன்புடைய நன்மொழிகளை உடைய ஆய்.

நிழல் திகழ் நீல நாகம் நல்கிய கலிங்க
ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவன் தாங்கிய சாந்து புலர் திணி தோள்
ஆர்வ நன்மொழி ஆய்


பெருமையுடைய மலையில் கமழும் பூக்களையுடைய சாரலில் உள்ள நெல்லி மரத்தில் விளைந்த நீண்ட வாழ்நாளைத் தரும் அருமையான நெல்லிக்கனியை தான் உண்ணாது ஒளவைக்கு ஈந்த, சினம், நெருப்பு, ஒளி இவை மூன்றும் திகழும் நெடிய வேலினை உடைய, பெரும் அரவத்தை உண்டாக்கும் கடலினைப் போன்ற படையை உடைய அதியமான்

மால்வரைக் கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த
உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல்
அரவம் கடல் தானை அதிகன்


தம் மனத்தில் உள்ளதை மறைக்காது கூறி நட்பு செய்தவர்கள் மகிழும் படி அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான பொருட்களை நாள் தோறும் தவறாது கொடுத்த, போர் முனையில் வெற்றி பெற்று விளங்கும் நீண்ட கைகளை உடைய, மழை தவறாது பொழியும் உயர்ச்சியால் காற்று செல்லும் இடம் வேறின்றித் தங்கும் பெரிய சிகரங்களை உடைய மலைநாட்டையுடைய நள்ளி

கரவாது நட்டோர் உவப்ப நடை பரிகாரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு
நளி மலை நாடன் நள்ளி


தேன் நிரம்பிய மணம் கமழும் பூக்களை உடைய நாக மரங்கள் நிரம்பிய நல்ல நிலத்தை கோடியர்க்குத் தந்த, கரிய நிறக் குதிரையில் வலம் வரும் ஓரி

நளிசினை நறும்போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரை காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரி


இந்த ஏழு வள்ளல்களும் வருகின்ற பரிசிலர்களுக்கு எல்லாம் வேண்டியதெல்லாம் வேண்டிய அளவிற்குத் தருகிறார்கள். நீங்களும் இவர்களை நோக்கிச் சென்றால் வேண்டியதெல்லாம் பெறலாம்"

"ஐயா. ஏழு வள்ளல்களைப் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி. எனக்குப் பல நாட்களாக ஒரு பொன்னாலான நீண்ட கழுத்தணியை அடைய வேண்டும் என்று ஆசை. அது நிறைவேறுவதற்கு யாரிடம் சென்று இரக்கலாம்?"

"என்ன கேள்வி இது அம்மையே. நம் மன்னவன் பாரியிடமே சென்று பெறலாமே"

"இசையில் கொஞ்சமே எனக்குத் தேர்ச்சி உண்டு. பாடல் புனையும் திறமையும் கிடையாது. எதனை வைத்துக் கொண்டு நான் பாரி மன்னரிடம் சென்று பொன்னிழை வேண்டுவேன் புலவர் பெருமானே"

"இது தான் உங்கள் குறையா? கவலையே வேண்டாம். அதற்கு ஒரு நல்ல வழி இருக்கிறது"
 
(தொடரும்)
 

Narayanan Kannan

unread,
Sep 2, 2008, 8:39:50 AM9/2/08
to minT...@googlegroups.com
On 9/2/08, Kumaran Malli <kumara...@gmail.com> wrote:
>
> "இல்லை அம்மா. இனிமேல் தான்"
>
> "தேனும் தினைமாவும் இருக்கின்றன ஐயா. உண்கிறீர்களா?"
>
> "ஆகட்டும் தாயே"

அதெல்லாம் சரி, இந்தத் தேனும் தினைமாவும்?

யாராவது சாப்பிட்டு இருக்கிறீர்களோ? (சுபா, உங்க அடுத்த பேட்டியிலே இதோட
receipe :-)

மாவைப் போட்டு தேனில் பிசைந்தால்...எனக்கென்னவோ நன்றாக இருக்கும் என்று
தோன்றவில்ல! வெறும் சக்கரைச் சத்து! விருந்திற்கு புரதம் வேண்டாமோ?
கொஞ்சம் தொட்டுக்க ஊறுகாய்? ஆமாம் சங்ககால உணவு எப்படி இருந்திருக்கும்?

க.

Tirumurti Vasudevan

unread,
Sep 2, 2008, 11:49:54 AM9/2/08
to minT...@googlegroups.com


2008/9/2 Narayanan Kannan <nka...@gmail.com>



அதெல்லாம் சரி, இந்தத் தேனும் தினைமாவும்?

யாராவது சாப்பிட்டு இருக்கிறீர்களோ? (சுபா, உங்க அடுத்த பேட்டியிலே இதோட
receipe :-)

ஓ, சாப்டு இருக்கேனே!


மாவைப் போட்டு தேனில் பிசைந்தால்...எனக்கென்னவோ நன்றாக இருக்கும் என்று
தோன்றவில்ல! வெறும் சக்கரைச் சத்து! விருந்திற்கு புரதம் வேண்டாமோ?

தினைலேந்து கொஞ்சம் கிடைச்சுடும். ஆனா சுவை ஒரு மாதிரிதான் இருக்கும். ஒஹோன்னு சொல்ல முடியலை.


கொஞ்சம் தொட்டுக்க ஊறுகாய்? ஆமாம் சங்ககால உணவு எப்படி இருந்திருக்கும்?

யாரப்பா அங்கே ஒரு டைம் மெஷின் கொண்டாங்க.
திவா


--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

வேந்தன் அரசு

unread,
Sep 2, 2008, 2:48:34 PM9/2/08
to minT...@googlegroups.com
தினையை நீரில் ஊறவைத்து பின் உரலிடை பொடித்து வெல்ல பாகினைக் கலந்து தினைமாவு செய்வார்கள். அதை உருண்டையாக்கியும் வைத்து இருப்பார்ள். நான என் பாட்டி வீட்டில் உண்டிருக்கேன். மிக்க சுவையாக்வே இருக்கும். ஆனால் தேன் கலந்து உண்டேனா என்ற நினைவு இல்லை.



--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

வேந்தன் அரசு

unread,
Sep 2, 2008, 2:52:25 PM9/2/08
to minT...@googlegroups.com


2008/9/1 Kumaran Malli <kumara...@gmail.com>
சிறுபாண் ஆற்றுப்படை வள்ளல்கள் எழுவர், கபிலர் காலத்துக்கு பின் எழுதப்பட்டு  இருக்கலாம் என்பதே என் கருத்து

Kumaran Malli

unread,
Sep 2, 2008, 7:17:51 PM9/2/08
to minT...@googlegroups.com

"பொன்னணி பெற வழியிருக்கிறதா?"

"உண்டு அம்மையே. நம் பாரி வேள் இருக்க பயமேன்?"

"ஐயா. தங்களைப் போன்ற புலவர் பெருமக்களும் இசை வல்லுனர்களான பாணர்களும் விறலியர்களும் சென்று கேட்டால் நம் மன்னர் பரிசில் தர வாய்ப்புண்டு. நானோ இரண்டு வகைகளிலும் இல்லை. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல் எங்கள் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது"

"தயக்கமே வேண்டாம் அம்மையே. யாராக இருந்தாலும் எத்தன்மையராக இருந்தாலும் இரவலராகச் சென்றால் பாரி கட்டாயம் பரிசில் வழங்குவான்"

"எந்த வித திறமையும் இன்றி மன்னர் முன்பு சென்று இரக்க தயக்கமாகத் தான் இருக்கிறது ஐயா"

"தயக்கமே வேண்டாம். பாரியின் தன்மையை ஒரு உவமையின் மூலம் சொல்கிறேன். கேளுங்கள். பெண்மக்களும் ஆண்மக்களும் என நாம் அணியும் பூக்களில் நல்லவை தீயவை என்று சில பிரிவுகள் செய்து வைத்திருக்கிறோம் அல்லவா?"

"ஆம் ஐயா. மணம் வீசும் மலர்கள் நல்லவை என்றும் மணமில்லாமல் ஆனால் கண்ணைக் கவரும் வண்ணங்கள் உடைய மலர்கள் அல்லவை என்றும் பிரித்து வைத்திருக்கிறோம்"

"இவற்றில் எருக்கம் பூ எந்த வகையைச் சார்ந்தது?"

"அது நல்லதும் இல்லை தீயதும் இல்லை ஐயா"

"சரியாகச் சொன்னீர்கள் அம்மா. நல்லதும் தீயதும் என்று மக்கள் அணியும் பூக்களைச் சொல்கிறோம். ஆனால் எருக்கம் பூவினை மக்கள் அணிவதில்லை. அது நல்லதும் இல்லை; தீயதும் இல்லை. ஆனால் அந்தப் பூவைக் கடவுளுக்குச் சூட்டினால் கடவுள் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்கிறதா?"


 

"இல்லை ஐயா. எருக்கம் பூவினை விரும்பி ஏற்கும் கடவுளும் உண்டு"

"அது போலத் தான் தாயே. அறிவே இல்லாதவராயினும் வறுமை கொண்டவர் வேண்டிச் சென்றால் பாரியின் கைவண்மை அவரையும் ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பியதைக் கொடுக்கும்

நல்லவும் தீயவும் அல்ல குவியிணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண்மையே
"

பாடலைக் கேட்டவுடன் பாணரின் மனம் மிக மகிழ்ந்தது. பாடலை உடனே மனத்தில் நிறுத்தி அதன் சுவையைப் பருகத் தொடங்கியது.

'ஆகா. என்ன அழகான பாடல் இது. புலவர் என்றால் இவரல்லவோ புலவர். ஒரு அழகான உவமையைக் கூறினாரே. எருக்கம் பூவை இகழ்வார் நடுவே எருக்கம் பூவினையும் ஏற்றுக் கொள்ளும் கணங்களின் தலைவனான கடவுளைப் பாரிக்கு உவமையாகச் சொன்னாரே. பெண்ணிடம் சொன்னதால் அவளுக்கு எளிதில் புரியும் ஒரு உவமையும் சொன்னாரோ? குவிந்த இணர் - குவிந்த மொட்டு, புல்லிலை - பச்சை இலை என்று எருக்கத்திற்கும் அழகு கூட்டிச் சொன்னாரே. எதுகைச் சுவையும் மோனைச் சுவையும் கூடிய இந்தப் பாடலை எளிதாக மனத்தில் நிறுத்தலாமே'

நாகையாரின் மனமோ இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

"ஐயா. நீங்கள் சொன்னது நன்கு புரிகிறது. எளியவளான நான் சென்று கேட்டாலும் நம் மன்னர் வேண்டியதைத் தருவார் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஏற்றுக் கொள்ளத் தான் இன்னும் என் மனம் மறுக்கிறது. எந்தவித சிறப்பும் இல்லாத நான் எந்த முகத்தோடு பாரிவேளிடம் சென்று பொன்னிழை இரப்பேன்?"

புன்னகை செய்தார் கபிலர். அவளது தயக்கம் நன்கு புரிந்தது. எந்தவித கையுறையும் இல்லாமல் அரசனைக் கண்டு எப்படி இரப்பது என்று தயங்குகிறாள். சிறிது நேரம் சிந்தித்ததில் ஒரு எண்ணம் தோன்றியது கபிலருக்கு.

"அம்மையே. எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. கையுறை இல்லாமல் எப்படி அரசன் முன் நின்று வேண்டுவது என்று நீ தயங்குகிறாய். ஒரு நல்ல பாடலுடன் சென்று அதனைப் பண்ணிசைத்துப் பாடினால் அவன் மனம் மகிழ்வானே. நான் ஒரு பாடலை இயற்றித் தருகிறேன். அதனைப் பாடிப் பரிசில் பெறுங்கள்"

அவர் சொல்வதும் சரி தான் என்று தோன்றியது விறலிக்கு. ஆனாலும் எப்படி வாய் திறந்து எனக்கு இந்தப் பரிசில் தான் வேண்டும் என்று கேட்பது. அரசன் கொடுப்பதை மனம் மகிழ்ந்து வாங்கிக் கொண்டு வர வேண்டுமே. குறிப்பாக இது தான் வேண்டும் என்று எப்படி கேட்பது?

தன் எண்ணத்தைக் கபிலரிடம் சொன்னாள்.

"அதற்கும் வழியிருக்கிறது அம்மையே. குறிப்பாக பொன்னிழை தான் வேண்டும் என்பதைப் பாடலிலேயே குறிப்பாக வைத்துவிடுகிறேன். இதோ பாடல்.

சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி
தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யாதாயினும் அருவி
கொள் உழு வியன்புலத்து உழைகாலாக
மால்புடை நெடுவரைக் கோடு தோறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள் பாற் பாடினை செலினே
"

பாடலைக் கேட்டவுடன் பாணர் இசையமைக்கத் தொடங்கிவிட்டார். பொன்னிழை வேண்டும் என்ற குறிப்பு பாடலின் முதல் வரியிலேயே இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தாள் நாகை. இது வரை இருந்த தயக்கமெல்லாம் நீங்கிவிட்டது. பொன்னிழை கிடைப்பது உறுதி என்றும் தெரிந்தது.

"ஐயா. தங்களின் அறிவுரைப்படியே இந்தப் பாடலுக்கு இசை அமைத்துப் பாரிவேளிடம் பாடிப் பரிசில் பெறுகிறோம். எங்களுக்காக இந்தப் பாடலைப் பாடி அருளிய தங்களுக்கு நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோம்?"

"அம்மையே. தாங்கள் அன்போடு அளித்த தேனும் தினைமாவும் தித்திப்பாய் இன்னும் என் நாவிலும் நெஞ்சிலும் நிற்கிறதே. அந்த அன்பும் ஆதரவும் போதாதா?"

மேலும் சிறிது நேரம் இருவருடனும் பேசிவிட்டு தன் வழியே தொடர்ந்து சென்றார் கபிலர்.

***

"அன்பரே. நேற்றிலிருந்து இந்தப் பாடலைப் பாடிப் பயின்று வருகிறோம். இரவு முழுவதும் இதே சிந்தனை. இந்தப் பாடலே மனத்தில் ஓடிக் கொண்டிருந்தது. இப்போது காலை உணவு ஏற்கும் நேரமும் வந்துவிட்டது. ஆனால் இன்னும் என் மனத்தில் பாடலின் சொற்கள் முழுவதுமாக நிற்கவில்லை. ஏன் இப்படி?"

"நாகை. உன் மனத்தில் பாடலின் வரிகள் நிற்காததற்குக் காரணம் ஒன்று தோன்றுகிறது எனக்கு. பாடலின் பொருள் உனக்கு முழுதும் புரிந்துவிட்டதா?"

"இல்லை அன்பரே. முதலும் கடைசியுமாக சில வரிகள் புரிகின்றன. மற்ற வரிகளுக்கு முழுப் பொருளும் புரியவில்லை."

"நல்லது. பாடலின் பொருளைச் சொல்கிறேன். கேள். பொருள் புரிந்து பாடினால் பாடலின் வரிகள் மனத்தில் எளிதாக நிற்கும்.

தட உவாய் என்றால் மிகப்பெரிய குளம். அந்தக் குளத்தில் கரிய நிற இதழ்களைக் கொண்ட குவளைப்பூக்கள் நிறைந்து இருக்கின்றனவாம். அவற்றைத் தான் தட உவாய்க் கலித்த மா இதழ்க் குவளை என்கிறார். மாயோன் என்று கரிய நிறம் கொண்டவனையும் மாயோள் என்று கரிய நிறம் கொண்டவளையும் சொல்லுவோமே. இங்கே கரிய இதழை மாயிதழ் என்று சொல்கிறார் புலவர். "


"மாயிதழ் என்பது கரிய இதழா. இப்போது புரிகிறது. குவளைப்பூவிற்கு சிறு இதழ் தானே இருக்கும் இங்கே பெரிய இதழ் என்று பாடியிருக்கிறாரே என்ற குழப்பம் இருந்தது"

"ஆமாம். முதல் பார்வையில் அப்படித் தான் தோன்றுகிறது. ஆனால் இங்கே குவளையைக் கூறியதால் சீறிதழ் என்று சொல்லாமல் மாயிதழ் என்று சொன்னது அளவைச் சொல்லவில்லை நிறத்தைச் சொன்னது என்று புரிகிறது.

அந்தக் குவளைப் பூக்களில் வண்டுகள் மொய்க்கின்றன. அப்படி வண்டுகள் மொய்க்கும் போது அந்த மலரில் இருக்கும் மகரந்தத்துகள்கள் மேலெழும்பி பறக்கின்றன. அந்த நேரத்தில் மழை பெய்தால் அந்த மழைத்துளிகளில் அந்த மகரந்தத் தூள்கள் கலந்து வண்டுகளின் மீதும் குளத்தின் மீதும் சுற்றிலும் படரும். சில காலங்களில் அப்படி மழை பெய்வதில்லை. இந்தக் கருத்துகளைத் தான் அடுத்த சில வரிகளில் சொல்கிறார். குவளை வண்டு படு புதுமலர்த் தண் சிதர் கலாவ பெய்யினும் பெய்யாதாயினும் என்று. "

"ஆமாம். மழை பெய்யும் போது மழைத்துளி மலர்களின் மேல் வண்ணம் மாறி அமர்ந்திருப்பதை நானும் கண்டிருக்கிறேன். எத்தனை நுட்பமான பார்வை. இயற்கையுடன் இணைந்திருந்து வாழ்ந்திருந்தால் தான் இப்படி எல்லாம் பாட முடியும்"


"உண்மை தான் விறலி. அப்படி மாரி பொய்த்தாலும் கொள் விதைக்கப் பட்டிருக்கும் மலை நிலத்தின் பக்கத்தில் ஓடும் வாய்க்காலாக பறம்பு மலையின் சிகரங்கள் தோறும் அருவிகள் சிறிதேனும் பெய்து கொண்டிருக்கும். மாரி பொய்த்தாலும் அருவி பொய்க்காது என்று சொல்வதற்காக கொள் உழு வியன் புலத்து உழை காலாக மால்பு உடை நெடுவரைக் கோடு தோறும் இழி தரும் அருவி என்று சொல்கிறார்"

"மழையையும் அருவியையும் இங்கே சொல்ல வேண்டிய அவசியம் என்ன?"

"அதனைத் தான் அடுத்த வரிகளில் சொல்கிறார். மழை தான் எல்லா வளங்களும் தரும் பெரும் வள்ளல் என்பது எல்லோரும் ஒத்துக் கொள்வதாயிற்றே. நீரின்றி அமையாது உலகு என்றும் பெரியோர் சொல்வார்களே. அப்படிப்பட்ட மழையும் பொய்ப்பதுண்டு. ஆனால் பறம்பு மலையில் இருக்கும் அருவிகள் பொய்ப்பதில்லை. ஒடுங்கி வாய்க்காலாக மாறினாலும் ஓடிக் கொண்டிருக்கும் தன்மை உடையவை. அவை போன்ற குணம் கொண்டவன் பாரி என்கிறார் அடுத்த வரியில். அருவி நீரினும் இனிய சாயல் பாரி வேள் என்று சொல்லி உன் மனக்குறையைத் தீர்க்கிறார். நீ அவனிடம் பாடிச் சென்றால் சேயிழை பெறுகுவை என்று முதல் வரியோடு கூட்டிக் கொள்ள வேண்டும்."

"ஆகா. அருமை அருமை. என் ஐயத்தைத் தீர்க்கும் பாடலாக இந்தப் பாடலை வடித்துவிட்டு அதில் அழகாக நான் விரும்புவதையும் குறிப்பாகச் சொன்னாரே. அருமை. அதோடு மட்டுமின்றி பாடினை செலினே சேயிழை பெறுகுவை என்று இந்தப் பாடலின் கடைசி வரியை முதல் வரியோடு இணைத்துப் பொருள் கொள்ளும் படியாக சங்கிலி போல் அமைத்து நான் விரும்புவது தங்கச் சங்கிலி என்பதை கூறும் இன்னொரு குறிப்பாக அமைத்திருக்கிறாரே. இப்போதே பொன்னிழை பெற்றது போல் உணர்கிறேன். மகிழ்ச்சி. மகிழ்ச்சி"

***
பாடற்குறிப்புகள்:

இந்த இடுகையில் இருக்கும் இரண்டு பாடல்களும் கபிலர் பாரிவேளைப் பாடியவை. இரண்டிற்கும் திணை பாடாண்திணை (தலைவனைப் பாராட்டிப் புகழ்ந்து பாடுவது); முதல் பாடலின் துறை இயன்மொழி (உள்ளதை உள்ளபடி பாடியது); இரண்டாவது பாடலின் துறை விறலியாற்றுப்படை (விறலியிடம் ஒரு வள்ளலின் இருப்பிடத்திற்கு வழி சொல்வது). முதல் பாடல் புறநானூறு 106ஆம் பாடல். இரண்டாவது பாடல் புறநானூறு 105ம் பாடல்.
 
எருக்கம் பூ விநாயகருக்கு விருப்பமானது என்ற குறிப்பை இந்தப் பகுதியில் சொல்லியிருக்கிறேன். வெள்ளெருக்கம் பூ ஈசனாருக்கும் விருப்பமானது என்பது தேவார திருவாசகங்களில் கூறப்பட்டிருக்கின்றது.

Narayanan Kannan

unread,
Sep 2, 2008, 7:56:26 PM9/2/08
to minT...@googlegroups.com
On 9/3/08, Kumaran Malli <kumara...@gmail.com> wrote:
>
> சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி
> தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை
> வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
> பெய்யினும் பெய்யாதாயினும் அருவி
> கொள் உழு வியன்புலத்து உழைகாலாக
> மால்புடை நெடுவரைக் கோடு தோறு இழிதரும்
> நீரினும் இனிய சாயல்
> பாரி வேள் பாற் பாடினை செலினே"
>
> பாடலைக் கேட்டவுடன் பாணர் இசையமைக்கத் தொடங்கிவிட்டார்.


குமுரன்:

குறளோவியம் போல் சங்கச் சித்திரம் அருமை!

எனது சிந்தனைகள் இன்னும் வேறுவிதமாக பயணிக்கின்றன.

சங்கப்பாடல்கள் புதுக்கவிதை போல் சந்தம், அலகு (meter)போன்றவைகளைக் கண்டு
கொள்ளாமல் எழுத்தப்பட்டிருக்கின்றன (விதிவிலக்குகள் இருந்தாலும் பொதுவாக
அப்படித்தான் இருக்கின்றன). அப்படி இருக்கும் போது இந்தப்பாடலுக்கு
மெட்டமைத்துப் பாடுவது மிகவும் சிரமம். சங்ககால வார்த்தைப் பிரயோகங்களும்
கடினமாக உள்ளன. கண்ணதாசன் பாடல் போல் எளிமையாய் இருப்பதில்லை.

மொழியிலேயே இசை இருப்பது உண்மைதான் என்றாலும் அவை 'இசைப்பா' அல்ல (உம்.
தேவாரம், திவ்யப்பிரபந்தம்). எனவே பாணர் இந்தப்பாட்டிற்கு எப்படி இசை
அமைத்திருப்பார் என்றொரு கேள்வி எழுகிறது. இப்போதுள்ளது போல் சிம்பொனி
இசை இல்லாத காலத்தில் பாடுவதற்கு எளிய சொற்கள், சந்தம் இருந்தால்
மெட்டிசைப்பது எளிது.

சங்கப்பாடல்களை விருத்தமாகத்தான் பாடமுடியும் போல் தோன்றுகிறது. எம்.எஸ்
அம்மா சிலப்பதிகாரம் பாடியிருக்கிறார்கள். ஆனால் அப்பாடல்
வித்தியாசமானது. மதுரை சேஷகோபாலன் அமெரிக்காவில் சிலப்பதிகாரம் பாடினார்
என்று கேள்வி.

யாராவது இப்படி புறநானூறு, கலித்தொகை பாடல்களைப் பாடியுள்ளார்களா? (gazal
பாடுவது போல்!).

க.

Kumaran Malli

unread,
Sep 2, 2008, 8:57:36 PM9/2/08
to minT...@googlegroups.com
கண்ணன் ஐயா. தேனும் தினைமாவும் நான் உண்டதில்லை. இவை குறிஞ்சி நிலத்தில் கிடைத்த உணவு வகைகளில் இரண்டு தானே. குறிஞ்சி நிலத்திலும் மற்ற நிலங்களிலும் வேறு உணவுகளும் இருந்திருக்கின்றனவே. வேறு வகை உணவுகளைப் பற்றியும் சங்க இலக்கியத்தில் தரவுகள் இருக்கின்றன. இனி வரும் பாடல்களில் அவற்றில் ஒன்றிரண்டு வரும்.

Narayanan Kannan

unread,
Sep 2, 2008, 10:09:22 PM9/2/08
to minT...@googlegroups.com
2008/9/3 Kumaran Malli <kumara...@gmail.com>:

> கண்ணன் ஐயா. தேனும் தினைமாவும் நான் உண்டதில்லை. இவை குறிஞ்சி நிலத்தில்
> கிடைத்த உணவு வகைகளில் இரண்டு தானே. குறிஞ்சி நிலத்திலும் மற்ற நிலங்களிலும்
> வேறு உணவுகளும் இருந்திருக்கின்றனவே.

தேனும், தினை மாவும் என்பது வெறும் representative உணவுதானா? இல்லை அதை
மட்டுமே உண்டு வந்தனரா?
This looks very poor in nourishment.

கண்ணன்

வேந்தன் அரசு

unread,
Sep 2, 2008, 10:31:51 PM9/2/08
to minT...@googlegroups.com
>சங்ககால வார்த்தைப் பிரயோகங்களும்
கடினமாக உள்ளன.
 
கண்ணன்
 
 சங்க காலத்தில் இவை கடினமாக இருந்திராதே!!

வேந்தன் அரசு

unread,
Sep 2, 2008, 10:35:38 PM9/2/08
to minT...@googlegroups.com
ஆகா. அருமை அருமை

குமரன்
 
தடவுவாய் என்பதன் பொருளில் என்ககு ஒரு ஐயம
 
உவாய் என்றொரு சொல்லை நான் அறிந்தது இல்லை
 
தடவு என்பது தடம் அல்லது தடாகம் என்பதன் சுருக்கமாக இருக்கலாம்
 
தடவு + வாய் கலித்த என்று இருக்கலாமோ?,

Kumaran Malli

unread,
Sep 2, 2008, 10:53:10 PM9/2/08
to minT...@googlegroups.com

வேந்தன் அரசு ஐயா,

எனக்கு சிறுபாணாற்றுப்படை எப்போது எழுதப்பட்டது என்பதில் தெளிவில்லை. ஏன் அது கபிலரின் காலத்திற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

அன்பன்,
குமரன்.

Kumaran Malli

unread,
Sep 2, 2008, 11:00:51 PM9/2/08
to minT...@googlegroups.com

அன்பான பாராட்டுகளுக்கு நன்றி கண்ணன் ஐயா.

நாம் இப்போது புரிந்து கொள்வது போல் மெட்டமைப்பது சங்க பாடல்களுக்கு கடினம் தான் ஐயா. ஆனால் பல சங்கப்பாடல்களுக்குக் கீழேயே அவற்றை எழுதியவர் யார்; பண்ணமைத்தவர் யார் என்ற குறிப்புகளும் கிடைக்கின்றன. பரிபாடலில் இதனை மிகுதியாகப் பார்க்கலாம். அதனால் இன்றைக்கு நமக்குப் புரியாத ஏதோவொரு வகையில் அந்தப் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

சங்க கால வார்த்தைகள் கடினமாக இன்றைக்குத் தோன்றினாலும் அன்றைக்கு அப்படி தோன்றியிருக்குமா என்பது ஐயமே. இன்றைக்குப் பாரதியின் பல பாடல்களே கடினமாகத் தோன்றுகிறது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் பதம் பிரித்தால் நமக்கெல்லாம் பாரதியார் பாடல்களும் ஆழ்வார் நாயன்மார் பனுவல்களும் புரிந்துவிடுகின்றன அல்லவா? அதே போல் சங்க இலக்கியங்களும் உரைகளின் துணையுடன் கொஞ்சம் உள் நுழைந்து பார்த்தால் எளிதாகப் புரிந்து விடுகின்றன.

சங்க இலக்கிய பாடல்களை இன்றைக்கு இசையமைத்துப் பாடியவர்களை யான் அறியேன்.

அன்பன்,
குமரன்.



Kumaran Malli

unread,
Sep 2, 2008, 11:17:30 PM9/2/08
to minT...@googlegroups.com

பாராட்டுகளுக்கு நன்றிகள் வேந்தன் அரசு ஐயா. தங்களின் ஐயம் சரியே. தடவுவாய் என்ற சொல்லிற்கு நேரடியான பொருள் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்த்த உரையில் இல்லை. திரண்ட பொருளில் 'பெரிய இடத்தையுடைய சுனையின் கண் தழைத்த கரிய இதழையுடைய நீலத்தினது...' என்று இருக்கிறது. அதனால் 'தடவுவாய்' என்பதற்கு 'தட + உவாய்' என்று பிரித்து பொருள் கொண்டேன். ஆனால் இப்போது நீங்கள் சொல்வது போல் தடம் என்பதற்கு குளம்/தடாகம் என்ற பொருள் இருப்பதை உணர்கிறேன்.

இப்போது மீண்டும் அந்த உரைக்குச் சென்று பார்த்த போது இன்னொரு குறிப்பும் இருப்பதைக் காண்கிறேன். அதனை இங்கே தருகிறேன் - 'தடவு - தாழியுமாம். 'தாழிவாய்க் குவளை', 'தாழிவாய் மறைக்கும் தண்ணென்றடம்பெரும் குவளைக்கண்ணார்' (சீவக. 833, 2974); தடவுவாய்: அன்மொழித்தொகை.

அன்பன்,
குமரன்.



On 9/2/08, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

Narayanan Kannan

unread,
Sep 3, 2008, 12:44:54 AM9/3/08
to minT...@googlegroups.com
2008/9/3 Kumaran Malli <kumara...@gmail.com>:

> "தயக்கமே வேண்டாம் அம்மையே. யாராக இருந்தாலும் எத்தன்மையராக இருந்தாலும்
> இரவலராகச் சென்றால் பாரி கட்டாயம் பரிசில் வழங்குவான்"
>


இது என்ன மனோபாவமென்று வியக்கிறேன்! கர்ணன் கதை கேட்டும் வியப்பதுண்டு!

"என்ன கொடுப்பான்? எவை கொடுப்பான்? என்றிவர்கள் எண்ணுமுன்னே
பொன் கொடுப்பான், பொருளும் கொடுப்பான், போதாது, போதாது என்றால்
தன்னைக் கொடுப்பான், தன் உயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே!"

இது கண்ணதாசன் வரிகள். நெஞ்சில் பதிந்த வரிகள்.

ஆனால் இப்படி யாராக இருந்தாலும் எத்தன்மையராக இருந்தாலும் இரவலராகச்
சென்றால் பாரி கட்டாயம் பரிசில் வழங்குவான்!

என்னும் போது, அவனுக்கு நிதி கொடுக்க, கஜானா எப்போதும் நிறைந்திருக்க
ஏதாவது வழி வேண்டுமே? என்ன வழியது? வியாபாரம், போர்?

தன் உயிரைத்தான் கொடுத்தல் என்பது கூர்தலியல் நியமத்திற்கு மாறாக
இருக்கிறது. தற்காத்துத் தற்கொண்டாற் பேணுதல் கூர்தலியல் தகைசார்மை.
இதற்குப் புறம்பாக வாழுதல் என்ன வாழ்வியல்?

மனித பரிணாமத்தில் மட்டுமே கலாச்சாரக் கூறு (cultural evolution)
இருக்கிறது. இது அப்பாரிணாத்தின் உச்சக்கட்டம் போலும்!

கண்ணன்

Kumaran Malli

unread,
Sep 3, 2008, 2:21:36 PM9/3/08
to minT...@googlegroups.com

உடுக்கை இழந்தவன் கை - 4 (பாரி வள்ளலின் கதை)

மாலை நேரம் ஆகிவிட்டது. பறம்பு மலையில் ஏறிக் கொண்டிருந்த கபிலருக்கு இருட்டுவதற்குள் பாரியின் மாளிகையைச் சென்றடைய வேண்டுமே என்ற கவலை. முடிந்த அளவு விரைவாக மலையேறிக் கொண்டிருக்கிறார். புலவரின் நடை வேகத்தை மலையின் ஏற்றமோ பாதையில் கிடந்த சிறு கற்களோ குறைக்க வில்லை. பாரியைக் காணும் ஆவலும் புலவரின் நடையை விரைவுபடுத்தியது. என்ன தான் நடையில் விரைவைக் காட்டினாலும் தானாகப் புலன்களின் வழியே உள் நுழைந்து மனத்தை மயக்கும் பறம்பு மலையின் இயற்கை அழகும் நறுமணமும் நல்லொலிகளும் புலவரின் விரைவை அவ்வப்போது மட்டுப்படுத்திக் கொண்டிருந்தன.

திரும்பிய திசை எல்லாம் இயற்கையின் வளம் கொட்டிக் கிடந்தது. மரங்களில் வேங்கையும் சந்தனமும் நிறைந்து வளர்ந்திருந்தன. மலர்களிலோ விதவிதமான மலர்கள். எத்தனை வண்ணங்கள். எத்தனை மணங்கள். பட்டியலிட்டு முடியாது. விதவிதமான மலர்கள் என்றென்றும் மலர்ந்து இருக்கும் என்பதற்கு அடையாளமாக மரங்கள் தோறும் தேனடைகள். எத்தனை முறை பார்த்தாலும் இந்த அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. இப்படி பிரான் மலையின் அழகை வியந்து கொண்டே முடிந்த வரை விரைவாக கபிலர் நடந்து கொண்டிருந்தார்.

இந்த மலை வளத்தை எல்லாம் காணும் போது இந்த மலையில் மாளிகை மட்டுமே பாரிக்குரியது என்பதும் மற்றபடி இந்த மலையில் இருக்கும் ஊர்களை எல்லாம் பரிசிலர்களுக்கு ஏற்கனவே பாரி வழங்கிவிட்டான் என்பதும் நினைவிற்கு வந்தது. தனக்குரியதை எல்லாம் இப்படி வாரி வழங்கிவிட்டு பெயருக்கு இந்த பறம்பு நாட்டிற்கு அரசன் என்று வாழ்கிறானே இந்த பாரி என்று தோன்றியது. இனி மேலும் புலவர்களும் பாணர்களும் வந்தால் என்ன கொடுப்பான் பாரி என்றும் கேள்வி எழுந்தது.

இந்த எண்ணங்களோடு நடந்து கொண்டிருந்த கபிலரை அருகில் இருந்த வேங்கை மரத்திலிருந்து வந்த நறும்புகை கவர்ந்தது. வேங்கை மரத்திற்கு இவ்வளவு மணமா என்று வியப்பு கூடியது.



'வேங்கை மரம் வலுவுள்ளது என்று அறிவேன். ஆனால் அது நறுமணமும் மிக்கதோ? இந்த நறும்புகை எங்கிருந்து வருகிறது? ஓ இது வேங்கையிலிருந்து வரும் புகை இல்லை. மரத்தின் அருகில் ஒரு குறத்தி குளிர் காய்வதற்காக சிறு நெருப்பு மூட்டியிருக்கிறாள். அதிலிட்ட விறகு சந்தன மர விறகானதால் இந்த நறுமணம்.'

தனக்குள் சிரித்துக் கொண்டார் கபிலர்.

'இப்படித் தானே பாரியும் நடந்து கொள்கிறான். சந்தன மர விறகு தான் எரிந்து வேங்கை மரத்திற்கு நறுமணம் ஊட்டுவது போல் பாரி தன்னிடம் இருக்கும் உடைமைகளை எல்லாம் பரிசிலர்களுக்கு அளித்து விட்டு தானும் பரிசிலாக மாறி நிற்கிறானே. என்னே இவன் பெருமை'

மனத்தில் தோன்றிய இந்த எண்ணங்கள் ஒரு பாடலாக மாறியது. அழகிய அந்த இயற்கைச் சூழலுக்கு ஏற்ற வகையில் இயன்மொழியாக அமைந்த அந்த பாடலை வாய்விட்டுப் பாடினார் புலவர்.

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலில் அம்புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினை தவழும்
பறம்பு பாடினரதுவே அறம் பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர் வரையன்னே.


(குறத்தி ஏற்படுத்திய காய்ந்த விறகின் கொள்ளி ஆரம் எனும் சந்தனம் ஆதலால் அதன் நறும்புகை அருகில் இருக்கும் சாரலில் வளர்ந்த வேங்கையின் பூவினையுடைய கிளைகளிலும் தவழும். பறம்பு மலை முழுக்க பாடிப் பரிசில் கொண்ட பாணர்களின் உடைமை. வழங்குதல் எனும் அறம் பூண்ட பாரியும் பரிசிலர் வேண்டினால் தன்னையே கொடுப்பான்; அவர்கள் பின்னே வரமாட்டேன் என்று சொல்லான். வேண்டியவர்கள் எல்லையில் சென்று நிற்பான்.)

வியப்பும் மகிழ்ச்சியும் பாடலும் பொருளும் என்று பாரியின் மாளிகையை நோக்கிச் சென்று கொண்டிருந்ததால் நடைக் களைப்பு எதுவும் தோன்றவில்லை கபிலருக்கு. அன்றைய நாள் முழு நிலவு நாளாகவும் இருந்ததால் இருள் கவியத் தொடங்கினாலும் பாதை நன்கு தெரிந்தது. இன்னும் அரை நாழிகையில் பாரியின் மாளிகையை அடைந்துவிடலாம் என்று இன்னும் நடையினை விரைவுபடுத்தினார் கபிலர்.

***

தாயில்லாப் பிள்ளைகள் என்று பெயர் தானே ஒழிய அங்கவைக்கும் சங்கவைக்கும் தாயில்லா குறையே தெரியவில்லை. தாயுமாகித் தந்தையுமாகி நல்சுற்றமுமாகி பாரி அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டான். போதாததற்கு பெரியப்பா கபிலர் வேறு. நல்லாசானாக அவர்களுக்கு நல்ல கல்வியும் கேள்வியும் அமையுமாறு பார்த்துக் கொண்டார் கபிலர். என்ன தான் தாய், தந்தை, ஆசானாக இவர்கள் இருந்தாலும் நல்ல நட்பு ஒன்றிருந்தால் வேறெந்த குறையும் தெரியாது இல்லையா? ஒத்த வயதினர் நட்பாக இருக்கும் போது நல்லது கெட்டது தெரியாமல் புரியாமல் எல்லாவற்றையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். அதுவே கொஞ்சம் வயதில் மூத்தவர் நட்பாக இருந்தால் நல்லது கெட்டது சொல்லி அன்போடு நல்வழி காட்டுவார்கள் இல்லையா? அப்படி மூத்தவர்கள் நட்பாக இருப்பது எல்லோருக்கும் அமைவதில்லை. அங்கவையும் சங்கவையும் அந்த வகையில் நல்லூழைக் கொண்டிருக்கிறார்கள். பாரியும் கபிலரும் அவர்களுக்கு நல்ல நண்பர்களாகவும் விளங்கினார்கள்.

ஒவ்வொரு முழு நிலவு இரவும் மாளிகையின் நிலா முற்றத்தில் தான் இரவு உணவு அருந்திவிட்டு நால்வரும் அமர்ந்து இரவு நான்கு நாழிகை வரையில் பேசிக் கொண்டிருப்பார்கள். இன்று முழு நிலவு நாள். மாலை மயங்கிவிட்டது. இன்னும் கபிலரைக் காணவில்லை. அவர் தமிழ் சங்க அழைப்பின் பேரில் மதுரைக்குக் கிளம்பி ஒரு பட்சம் ஆகிவிட்டது. அவர் கிளம்பிச் சென்ற சில நாட்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்லப் பாரிக்கும் அவன் பெண்களுக்கும் கபிலர் இல்லாத குறை நன்கு தெரியத் தொடங்கிவிட்டது. எப்படியும் முழு நிலவு நாளுக்குள் திரும்பி வந்துவிடுவார் என்ற உறுதி இருந்ததால் அவர் வரும் நாளையும் பொழுதையும் எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

நேரம் செல்லச் செல்ல பாரிக்கு பரபரப்பு அதிகமானது. இரு வீரர்களை அழைத்து கபிலர் வரும் வழியில் சென்று பார்க்குமாறு சொன்னான். அவர்களும் சிறிது தொலைவு சென்றுவிட்டு கபிலரைக் காணவில்லை என்று வந்துவிட்டார்கள். கபிலருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திருக்குமோ என்ற கவலையும் பாரிக்குச் சேர்ந்து கொண்டது.

முழு நிலா நாளன்று ஒரு இளமையான ஆடாகப் பார்த்து அறுத்து அதன் குருதியையும் புலாலையும் தனித் தனியே சமைத்து மிகுந்த குருதியையும் புலாலையும் இட்டு சமைத்த செஞ்சோற்றுடன் அவற்றை வேலனுக்குப் படைத்து உண்பதும் பல நாட்களாகத் தொடர்ந்து வரும் வழக்கம். இன்று மாலை வேலனுக்கு குருதியும் புலாலும் செஞ்சோறும் படைத்து வேலனின் வெறியாட்டமும் முடிந்துவிட்டது. வேலவன் கோட்டத்தில் நின்று வேலனைத் தொழுதுக் கொண்டிருந்த அந்த நேரத்திலாவது கபிலர் வந்துவிடுவார் என்று பாரி எண்ணினான். தந்தையின் பரபரப்பை அப்போது கண்ட மகள்கள் இருவரும் அவரது துடிப்பைப் புரிந்து கொண்டனர். கபிலருக்கு எந்த தீங்கும் நேரக் கூடாது என்று அவர்கள் இருவரும் கந்தனை வேண்டிக் கொண்டனர்.

இறைவனைத் தொழுது முடித்த பின்னர் பாரி உடனே அந்த இடத்தை விட்டு நகன்றுவிட்டான். பாரி மகளிர் இருவரும் சிறிது நேரம் கூடுதலாக அங்கு தங்கி இறை வழிபாட்டைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். வேலனுக்குப் படைத்த உணவு நறவுடன் சேர்த்து உண்ணப்படுவதற்காக நிலா முற்றத்திற்கும் சென்று அடைந்துவிட்டது. கபிலர் வராமல் எப்படி நிலா முற்றத்தில் உணவுண்பது என்ற தயக்கமும் கபிலருக்கு என்னவாயிற்றோ என்ற கலக்கமும் கொண்டு பாரி நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் ஒரு வீரன் ஓடி வந்து வணங்கி கபிலரின் வருகையைச் சொன்னான். சேந்தனுக்கு மனமார நன்றி சொல்லிவிட்டு கபிலரைக் காண விரைந்தான் பாரி.

"வாருங்கள் நண்பரே. ஏன் இந்த தாமதம்? எங்கே நீங்கள் இன்று வராமல் நின்றுவிடுவீர்களோ என்று தவித்துப் போனேன்"

"பாரி. அதெப்படி நான் வராமல் போவேன்? இன்று முழு நிலவு நாளல்லவா? சொன்னபடி இரவு உணவிற்கு வந்துவிட்டேன் பார்"

"கபிலரே. நீங்கள் வரத் தாமதம் ஆனதால் வீரர்களை அனுப்பி வழி பார்த்து வரச் சொன்னேன். உங்களைக் காணவில்லை என்று சொன்னார்களே?"

"அவர்கள் நான் வழக்கமாக வரும் வழியில் சென்று பார்த்திருப்பார்கள். விரைவாக இங்கு வர வேண்டும் என்பதற்காக நான் வேறு வழியின் வந்தேன் பாரி"

எல்லா பரபரப்பும் கவலையும் இப்போது நீங்கிவிட்டன. கபிலர் சொன்னதைக் கேட்டு புன்சிரிப்பு உதிர்த்தான் பாரி.

"கபிலரே. வேலன் வெறியாட்டமும் முடிந்து உணவு நிலா முற்றத்திற்குச் சென்றுவிட்டது. நீங்கள் எப்போது சொல்கிறீர்களோ அப்போது நாம் எல்லோரும் சென்று உணவருந்தலாம்"

"உடனே செல்லலாம் பாரி. நடந்த களைப்பிற்கு ஊனையும் நறவையும் உண்டால் வெகு நன்றாக இருக்கும். இதோ கை, கால், முகம் அலம்பி வருகிறேன். எங்கே என் மகள்கள்?"

"அவர்கள் இருவரும் இன்னும் சேயோனைத் தொழுது கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன்"

***

பாடற்குறிப்பு:

புறநானூறு 108ம் பாடல். திணை: பாடாண்திணை (தலைவனைப் புகழ்ந்து பாடுவது), துறை: இயன்மொழி (உள்ளதை உள்ளபடி பாடுவது); பாடியவர்: கபிலர். பாடப்பட்டவர்: பாரிவேள்.

Kumaran Malli

unread,
Sep 4, 2008, 8:28:32 AM9/4/08
to minT...@googlegroups.com

உடுக்கை இழந்தவன் கை - 5 (பாரி வள்ளலின் கதை)

நிலா ஒளி முற்றத்தில் நன்கு வீசியது. உயரம் மிகக் குறைந்த மரத்தாலான இருக்கைகளில் பாரியும் கபிலரும் அமர்ந்திருக்க பருத்தியாலும் பட்டினாலும் செய்யப்பட்ட இருக்கைகளில் பாரி மகளிர் அமர்ந்திருந்தனர். பேச்சும் சிரிப்புமாக ஊனுணவையும் தேறலையும் அருந்திக் கொண்டிருந்தார்கள்.

"பெரியப்பா. இந்த முறை மதுரைக்குச் சென்ற போது ஏதேனும் புதுமையைக் கண்டீர்களா?"

"மதுரையில் எதுவும் புதுமையாகக் காணவில்லை அங்கவை. எப்போதும் போல் தமிழ் அங்கே கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மதுரையில் தமிழின் ஆட்சி குறையவே குறையாது என்று நினைக்கிறேன். அங்கிருக்கும் தமிழின் ஆளுமை வருவோரை எல்லாம் கவர்ந்திழுத்துத் தனக்குள் புதைத்துக் கொண்டுவிடும். யவனரும் வடநாட்டாரும் தமிழை மிக அருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே சொல்லாத வரை அவர் தமிழரில்லை என்று தெரிந்து கொள்வது இயலாததொன்று. ஆனால் இந்த முறை புலவர்கள் எல்லாம் தமிழைப் பற்றிப் பேசியதை விட மற்றொன்றைப் பற்றியே அதிகமாகப் பேசினார்கள்"

"என்ன சொல்கிறீர்கள்? வியப்பாக இருக்கிறதே. தமிழ்ச்சங்கத்தில் புலவர்கள் எல்லாம் சங்கப்பலகையில் ஏறி இலக்கியத்தை ஆராய்வது தானே வழக்கம். நீங்கள் சொல்வது புதுமையாக இருக்கிறது கபிலரே"

"பாரி. வழக்கம் போல் புலவர்கள் இலக்கிய ஆராய்ச்சியில் தான் ஈடுபட்டார்கள். என்னையும் அதற்காகத் தான் அழைத்தார்கள். ஆய்வுக்காக வந்திருந்த செய்யுள்களில் சில குறிஞ்சித்திணையிலும் இருந்தன. அதனால் என்னைச் சிறப்பாக அழைத்திருந்தார்கள் என்று தான் எண்ணினேன்"

"ஆமாம். அப்படித் தான் நானும் எண்ணினேன் கபிலரே. குறிஞ்சித் திணையில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் புனைந்துள்ள உங்களைத் தானே குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்களை ஆய்வதற்கு அழைக்க வேண்டும்?!"

"நீயும் நானும் எண்ணியது தவறு பாரி. குறிஞ்சிப்பாட்டெழுதுபவன் என்ற முறையில் மட்டும் எனக்கு சிறப்பு தரப்படவில்லை அங்கே. இன்னொரு முதன்மைக் காரணமும் இருந்தது. அதனைச் சொன்னால் வியந்து போவாய்"

"நீங்கள் சொல்லும் காரணம் எனக்குத் தெரியும் பெரியப்பா"

"நினைத்தேன் குழந்தாய். சங்கவைக்கு மட்டும் அந்தக் காரணம் புரிந்திருக்கும் என்று நினைத்தேன். இளையவர்கள் அதிகம் பேசாமல் இருந்தாலும் சுற்றிலும் நடப்பதை நன்கு கூர்ந்து கவனிக்கின்றார்கள். மூத்தவர்கள் பேசிப் பேசிக் குழம்பிப் போகும் போது இந்த இளையவர்கள் பேசும் வாய்ப்பு அவ்வளவாக கிட்டாவிட்டாலும் தங்கள் கவனிப்பால் நடப்பதை நன்கு புரிந்து கொள்கிறார்கள்"

அதைக் கேட்டவுடன் அங்கவையின் முகத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டது.

'எப்போதுமே இந்தப் பெரியப்பா இப்படித் தான். தங்கையைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார். அவர் சொல்வதற்கு ஏற்றாற்போல் இன்றைக்கும் நான் தான் பேச்சை முதலில் தொடங்கினேன்'

அக்காவின் எண்ணப்போக்கை அறிந்து கொண்டாள் தங்கை.

"அக்கா. பெரியப்பா இப்படித் தான் எப்போதும் என்னைக் கேலி செய்வார். அவர் அந்தக் காரணத்தைச் சொல்லும் முன்பாகவே நான் துடுக்குத்தனமாக எனக்குத் தெரியும் என்று சொல்லிவிட்டேன் அல்லவா? அது தான் என்னைக் கேலி செய்கிறார்"

"ஹாஹாஹா. சங்கவை. அப்படி இல்லையம்மா. உனக்கு கட்டாயம் அந்தக் காரணம் தெரிந்திருக்கும் என்று தான் நினைக்கிறேன். என்ன காரணம் என்று நீ நினைக்கிறாய்? சொல்"

"பெரிய தமிழ்ப் புலவராக நீங்கள் இருந்தாலும் உங்களை ஒத்த, கல்வியில் உங்களையும் மிஞ்சிய தமிழ்ப்புலவர்கள் பலர் தமிழ்ச்சங்கத்தில் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் குறிஞ்சித் திணையில் பாட்டு எழுதுவது கை வந்த கலை. அதனால் பெரும்புலவர் என்பதால் மட்டும் உங்களுக்குத் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பு கிட்டவில்லை"

பெரும்புலவரை இப்படி நேரடியாகக் குறைத்துப் பேசுகிறாளே தங்கை என்று அக்கைக்கு வியப்பாக இருந்தது. பாரியும் 'என்ன சொல்கிறாள் இவள்?' என்ற கேள்வியுடன் பார்த்தான். கபிலர் மட்டும் அவள் சொல்வதை ஆமோதிப்பதைப் போல் தலையை அசைத்தார்.

"வடவேங்கடம் தென்குமரி இடையில் தமிழ் கூறும் நல்லுலகம் எல்லாம் போற்றும் நம் மன்னர் பாரிவேளின் திருத்தோழராக நீங்கள் இருப்பது தான் உங்களுக்குப் பெரும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது"

தான் சொன்னால் பாரி நம்பமாட்டான் என்று நினைத்திருந்த ஒன்றை அவன் மகளே சொன்னதில் கபிலருக்குப் பெரும் மகிழ்ச்சி.

"அருமையாகச் சொன்னாய் அம்மா. சிறு பெண்ணாக இருந்தாலும் கூர்மையாகக் கவனித்திருக்கிறாய். உண்மை தான். வள்ளல் என்று சொன்னாலே உன் தந்தையின் பெயரைத் தான் எல்லோரும் சொல்கிறார்கள். மற்ற வள்ளல்களின் பெயர்கள் எல்லாம் அவன் பெயருக்குப் பின்னால் தான். கொடையில் உன் தந்தையை மிஞ்ச ஆளில்லை என்பதை பாண்டியனும் உணர்ந்திருக்கிறான். முத்தமிழ்ச் சங்கங்களை அமைத்துத் தமிழை வளர்த்து வரும் மரபில் பிறந்த தனது புகழை விட பாரியின் புகழ் வானளாவிப் பரந்திருக்கிறது என்பதைப் பாண்டியனும் அறிந்திருக்கிறான். அவனுடைய சொற்களில் உன் தந்தையின் மேல் பொறாமை இழையோடுவதையும் பார்த்தேன்"

"முடியுடை வேந்தர்களில் ஒருவரான பாண்டிய மன்னருக்கு தந்தை மேல் பொறாமையா? நம்ப முடியவில்லையே பெரியப்பா"

"ஆமாம் அங்கவை. அது உண்மை தான். பாண்டியன் நேரடியாக உன் தந்தை மேல் இருக்கும் ஒளவியத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவனுக்கும் அவன் சுற்றத்திற்கும் பாரியின் புகழ் உறுத்துகிறது என்பது நன்கு தெரிகிறது. புலவர்களும் என்னைப் பார்த்தவுடன் என்னைப் பற்றியும் என் படைப்புகளைப் பற்றியும் பேசியதை விட பாரியைப் பற்றிக் கேட்டதே அதிகம். பாரியைப் புகழாத வாயில்லை"

"பெரியப்பா. தந்தையார் கொடைக்குணத்தில் யாருக்கும் குறைவில்லாதவர் தான். ஆனால் எனக்கென்னவோ உங்களைப் போன்ற புலவர்கள் தந்தையாரின் வள்ளற்தன்மையை அளவுக்கு மீறிப் புகழ்ந்து தள்ளுகிறீர்களோ என்று தோன்றுகிறது. தந்தையாரைப் போன்ற வள்ளல்கள் நானிலத்தில் எங்குமே இல்லையா என்ன?"

"ஹாஹாஹா. உண்டு அம்மா உண்டு. சங்கவை. உன் கேள்வி மிக அருமையான கேள்வி. இந்தப் புலவர்கள் எல்லோரும் பாரி பாரி என்று என்னவோ இவன் மட்டும் தான் வள்ளல் என்பதைப் போல் புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால் இவனை விட்டால் இன்னொரு வள்ளலும் உண்டு என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்"

'பாரியைப் போல் இன்னொரு வள்ளலா' என்று வியந்து போனாள் அங்கவை. கிண்டல் செய்கிறார் கபிலர் என்பது புரிந்துவிட்டது பாரிக்கு. அதனால் ஒன்றும் சொல்லாமல் அவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தான். சங்கவைக்கோ கபிலர் பகிடி செய்கிறாரா உண்மையிலேயே இன்னொருவர் இருக்கிறாரென்று சொல்கிறாரா என்று புரியவில்லை.

"யார் அது என்று சொல்லுங்கள் பெரியப்பா" ஆர்வம் குரலில் தொனிக்கக் கேட்டாள்.

"சங்கவையின் ஆர்வத்தைப் பார். சொல்கிறேன் குழந்தாய். விரட்டாதே.

பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப்புலவர்
பாரி ஒருவனும் அல்லன்..."

இங்கே சிறிது நேரம் நிறுத்தினார் கபிலர். சங்கவையால் பொறுமையாக இருக்க இயலவில்லை.

"சொல்லுங்கள் பெரியப்பா. யார் அந்த வள்ளல்?"

"மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே"

பாடலைக் கேட்டவுடன் எல்லோரும் ஒரே குரலில் ஓங்கிச் சிரித்தார்கள்.

அவர்களுடன் சேர்ந்து நிலவும் சிரித்தது. எல்லோரின் சிரிப்பும் வெகு நேரம் தொடர்ந்தது. இவர்களின் குதூகலத்தைக் கண்டு நாணியவள் போல் நிலா மெல்லிய மேகத் துணியின் பின்னர் போய் மறைந்து கொண்டாள். என்னைப் போல் இன்னொருவர் என்று எல்லோரும் பேச இங்கே இந்தப் புலவர் இன்னொருவர் போல் நான் என்று சொல்கிறாரே என்று சினந்ததைப் போல் சுணங்கிச் சுணங்கி மழையரசனும் தூறலைப் போட்டான். மலைச்சாரல் மாளிகை முற்றத்தில் அமர்ந்து கொண்டு இந்த நால்வரும் மழைச்சாரலையும் அனுபவித்தார்கள்.


***

பாடற்குறிப்பு:

புறநானூறு 107ம் பாடல். கபிலர் பாரிவள்ளலைப் பாடியது. திணை: பாடாண் திணை (தலைவனைப் புகழ்ந்து பாடுவது). துறை: இயன்மொழித் துறை (உள்ளதை உள்ளபடியே பாடுவது).

பாடலின் திரண்ட பொருள்: பாரி பாரி என்று சொல்லி அவனது பல புகழ்களையும் வாழ்த்தி அவ்வொருவனையே புகழ்வர் செவ்விய நாவினையுடைய அறிவுடையவர்கள். பாரியாகிய ஒருவன் மட்டும் அல்லன். இங்கே உலகத்தைக் காப்பதற்கு மாரியெனும் மழையும் உண்டு.

Kumaran Malli

unread,
Sep 5, 2008, 9:16:15 AM9/5/08
to minT...@googlegroups.com

உடுக்கை இழந்தவன் கை - 6 (பாரி வள்ளலின் கதை)

எப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டே தீர வேண்டும் என்பது நியதி போலும். பாரி தன் குடியைப் பற்றி கொண்டிருக்கும் பெருமித உணர்வு ஏற்கனவே கபிலருக்குத் தெரியும் என்றாலும் அதைப் பற்றிப் பேசி விவாதிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உயிரினும் மேலாகப் பழகும் நண்பர்கள் தங்களிடையே இருக்கும் கருத்து வேற்றுமைகளைக் கடைசியில் மறந்துவிட்டு ஒருவருக்கொருவர் ஆதரவாகத் தான் தொடர்கிறார்கள்.

மாளிகைத் தோட்டத்தில் பாரியும் கபிலரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மதுரைக்குச் சென்றிருந்த இரு வார காலத்தில் பறம்பில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி பாரி சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது தான் மாறி மாறி மூவேந்தர்களிடம் இருந்தும் பாரி மகளிரைப் பெண் கேட்டு வந்த விவரத்தைச் சொன்னார். மதுரையில் இருக்கும் போது பாண்டியன் இதனைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று வியந்தார் கபிலர். மொழி ஆய்வில் இருக்கும் போது அரசியலும் அந்தரங்கமும் பேசவேண்டாம் என்று விட்டுவிட்டானோ என்னவோ என்று எண்ணிக் கொண்டார்.

"இது என்ன வேடிக்கையாக இருக்கிறது பாரி?! முடியுடை மூவேந்தர்களுள் ஒருவர் உன் மக்களைப் பெண் கேட்டால் அவருக்கு மணம் செய்து கொடுக்கலாம். இப்படி மூவரும் கேட்டால் யாருக்குப் பெண் கொடுப்பது? இது என்ன சங்கடமான நிலைமை?"

"கபிலரே. மூவரும் பெண் கேட்டு வந்ததில் எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் இந்த மூவரில் யாருக்குமே பெண் கொடுக்கப் போவதில்லை"

"ஏன் பாரி? ஒருவருக்கோ இருவருக்கோ உன் மக்களை மணம் முடித்தால் மற்றவர் பகை ஏற்படும் என்பதாலா?"

"அவர்கள் பகையைப் பற்றி எனக்குக் கவலையில்லை கபிலரே. அவர்கள் யாருமே என் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் தகுதி இல்லாதவர்கள். அதனால் தான் அவர்களுக்குப் பெண் தர மாட்டேன் என்கிறேன்"

"என்ன சொல்கிறாய் பாரி? உன்னைப் போன்ற குறுநில மன்னவன் பெண்களை வழி வழியாக பெரும் நிலப்பரப்பை ஆண்டுவரும் இந்த மூவரும் பெண் கேட்டு மணப்பது நடைமுறையில் உள்ள ஒன்று தானே? இவர்களுக்கு ஏன் உன் மக்களை மணக்கும் தகுதி இல்லை என்று நினைக்கிறாய்? செல்வத்தில் குறைந்தவர்களா? வீரத்தில் குறைந்தவர்களா? புலவர்களையும் பாணர்களையும் புரப்பதில் குறைந்தவர்களா? எவ்விதத்திலும் எனக்கு அவர்களிடம் குறை தோன்றவில்லையே?!"

"கபிலரே. நான் சிற்றரசன் தான். அவர்கள் வேந்தர்கள் தான். பெரும் நிலப்பரப்பை பல்லாண்டு காலங்களாய் ஆண்டு வருபவர்கள் தான். அவர்களின் செல்வத்திலும் வீரத்திலும் பாவலர்களைப் புரப்பத்திலும் எந்த குறையும் இல்லை. ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி இன்னொரு குறை இருக்கிறது. வேளிர் குடியில் பிறந்த என் மக்களை மணக்கும் தகுதி இம்மூவருக்கும் கிடையாது"

இதனைக் கேட்டுப் பெரும் அதிர்ச்சி அடைந்தார் கபிலர்.

"பாரி. மூவரில் மூத்த குடியான பாண்டியனுக்குமா உன் மக்களை மணக்கும் தகுதி இல்லை என்கிறாய்?"

"ஆம் ஐயனே. மூவரில் முதல்வன் ஆனாலும் பாண்டியனின் குடியும் வேளிர் குடிக்குப் பிற்பட்டதே. தமிழக வரலாற்றை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை இருக்காது என்று எண்ணுகிறேன்"

"பாரி. தமிழக வரலாறு எனக்கும் தெரியும். வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்டத் தமிழ் கூறும் நல்லுலகில் முடிவேந்தர் பரம்பரை மூன்று இருக்கின்றன. வஞ்சிக்காவலன் சேரனும் புகார்க்காவலன் சோழனும் கூடல்காவலன் பாண்டியனும் என்று இந்த மூவரும் பல்லாண்டு காலமாக ஆண்டு வருகின்றனர். அவர்களுக்கு அடங்கியும் அடங்காமலும் எண்ணற்ற சிற்றரசர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அடங்காமல் தன்னாட்சி செய்துவருபவர்களில் நீயும் ஒருவன். உன் வேளிர் குடி இந்தப் பறம்பு நாட்டை மூவேந்தர்களுக்கும் முந்தைய காலம் முதல் ஆண்டு வருகிறது. அப்படி மூத்த குடியாய் இருப்பது ஒரு தனிப்பெருமை தான். ஆனால் அந்தப் பெருமை மூவேந்தர்களுக்குப் பெண் கொடுக்க மறுக்கும் அளவிற்குச் செல்ல வேண்டுமா? வேண்டாம் பாரி வேண்டாம். இது விபரீதம் விளைவிக்கும்"

"கபிலரே. எந்த விதமான தொல்லைகள் நேரிட்டாலும் நான் இந்த முடிவில் உறுதியாக இருக்கிறேன்."

"பாரி. இது சரியில்லை. மூவேந்தர்கள் ஆளத் தொடங்குவதற்கு முன்னர் தமிழகம் முழுவதும் வேளிர்கள் தானே ஆண்டார்கள். வேளிர் குடியில் பிறந்தவன் நீ மட்டும் இல்லையே? வேறு அரசர்களும் இருக்கிறார்களே. அவர்கள் எல்லாம் மூவேந்தர்களுக்கும் பெண் கொடுத்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். நீ மட்டும் ஏன் மறுக்கிறாய்?"

"கபிலரே. வேளிர் குடியில் பிறந்த மற்ற அரசர்கள் வேந்தர்களுக்குப் பெண் கொடுக்கிறார்கள் என்பதை அறிவேன். அது ஏன் என்பது உங்களுக்கும் தெரியும். வேளிர் குடிப்பெருமையை அறிந்த வேந்தர்கள் தங்கள் குடிகளுக்கும் அந்தப் பெருமை வேண்டும் என்பதற்காகத் தானே வேளிர் பெண்களை விரும்பிக் கேட்டு மணக்கிறார்கள். அவர்களின் படைவலுவைக் கண்டு வேளிர்களும் பெண் கொடுக்கிறார்கள். அப்படிப் பெண் கொடுக்கும் வேளிர்கள் யாருமே வேந்தர் குடிப் பெண்களை எடுப்பதில்லை என்பதையும் கவனித்திருப்பீர்கள். அது ஏன்? வேந்தர்களின் குடி வேளிர்களின் குடியை விடக் குறைந்தது என்பதற்காகத் தானே? நான் மட்டும் இல்லை கபிலரே. என்னைப் போல் வேந்தர்களின் படைவலிமைக்கு அஞ்சாமல் பெண் தர மறுக்கும் வேளிர்களும் இருக்கிறார்கள். அவர்களின் கருத்தினையே நானும் கொண்டிருக்கிறேன். வேளிர்கள் வேந்தர்களிடமிருந்து பெண் எடுப்பதும் கூடாது; கொடுப்பதும் கூடாது"

"பாரி. இப்படி நீ மறுத்தால் மூவேந்தர்களின் சினத்திற்கும் ஆளாக வேண்டியிருக்கும். உன் குடிப்பெருமை உன் நாட்டையும் உன்னையும் உன் சுற்றத்தையும் அழிக்கும். அது வேண்டாம் பாரி. மூவரில் ஒருவருக்கோ இருவருக்கோ உன் மக்களை மணம் முடித்து வை"

"கபிலரே. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. அவை அனைத்தையும் விட குடிப்பெருமை காக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு வேளிர் குடியில் பிறந்தவனும் நினைப்பான்."

"பாரி. வள்ளல்கள் என்றாலே வேளிர்கள் என்று சொல்லும் அளவிற்கு வேந்தர்களை விட வேளிர்கள் வள்ளல்களாக இருக்கிறீர்கள். அது தான் வேளிர்குடிக்குத் தனிப்பெருமை என்று எண்ணினேன். நீயோ மூத்தகுடி, தொன்று தொட்டு ஆண்ட குடி என்று சொல்லி வேந்தர்களுக்குப் பெண் தர மறுக்கிறாய். வேதனையாக இருக்கிறது"

"ஐயனே. உங்களைப் போன்ற நல்ல நண்பர்களை வேதனைப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன். வேந்தர்களைப் பற்றிய கவலை உங்களுக்கு இருந்தால் தாங்கள் பறம்பு நாட்டிலிருந்து விலகி பாதுகாப்பான வேறெங்காவது சென்று விடுங்கள்"

"என்ன வார்த்தை சொன்னாய் பாரி? நமக்குள் இருக்கும் நட்பு அவ்வளவு தாழ்வானதா? தமிழறிஞன் என்பதை விட உன் நண்பன் என்பதில் தானே எனக்குத் தனிச்சிறப்பு கிடைக்கிறது. அப்படிப்பட்ட நட்பைத் துறந்துவிட்டு உயிர் பிழைக்க ஓடிப் போவேன் என்றா எண்ணினாய்? நீ இவ்வளவு உறுதியாக இருந்தால் அந்த உறுதியை நானும் ஏற்றுக் கொள்கிறேன். உன் எண்ணப்படியே நடந்து கொள்வோம்"

"தாங்கள் என் அருகிலேயே இருக்க நினைப்பதை எண்ணி மகிழ்கிறேன் கபிலரே. பெண் கேட்டு வந்தவர்களிடம் மறுப்பு தெரிவித்து அனுப்பியிருக்கிறேன். இந்தத் திங்களே மூவரும் படையெடுத்து வர ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒற்றர்கள் மூலம் அறிந்தேன்."

"அப்படியா? அவையில் பரிசில் வழங்கும் உன் கைவண்மையைக் கண்டிருக்கிறேன். களத்தில் உன் கைவன்மையைக் காணும் நாளும் நெருங்கியதோ"

வருத்தத்துடன் கபிலர் சொன்னதைக் கேட்டு பாரி புன்னகை புரியும் போது அங்கவையும் சங்கவையும் தோட்டத்தில் நுழைந்தனர்.

Narayanan Kannan

unread,
Sep 5, 2008, 10:44:53 AM9/5/08
to minT...@googlegroups.com
On 9/5/08, Kumaran Malli <kumara...@gmail.com> wrote:
. மூவேந்தர்கள் ஆளத் தொடங்குவதற்கு முன்னர் தமிழகம்
> முழுவதும் வேளிர்கள் தானே ஆண்டார்கள்.

எங்கு வருகிறீர்கள் என்று தெரியவில்லை ;-) வேளிர் குலக்கொழுந்து கண்ணன்.
இவன் சங்கத்தலைமை வகித்ததாக தமிழ்.வலையில் முன்பு ஜே.பி
சொல்லியிருக்கிறார்;-)

கண்ணன்

Kumaran Malli

unread,
Sep 5, 2008, 1:42:17 PM9/5/08
to minT...@googlegroups.com

கண்ணன் ஐயா,

முழுக்கதையும் 15 பகுதிகளில் முடியும். எந்தக் கருத்தையும் முடிந்த முடிபாகச் சொல்லப் போவதில்லை. கிடைத்த தரவுகளின் படி ஒரு கதையை எழுதுகிறேன். அவ்வளவு தான். அந்தக் கதையில் சொல்லப்பட்டிருப்பதைச் சீர்தூக்கிப் பார்த்து எது சரி எது தவறு என்று சொல்ல வேண்டியது அறிஞர் பெருமக்களின் பொறுப்பு. இங்கே தாங்களும் மற்ற அறிஞர் பெருமக்களும் இருக்கிறீர்கள். எல்லோரும் சொல்வதைக் கேட்க ஆவலுடன் இருக்கிறேன். :-)

வேளிர்கள் துவரையம்பதியிலிருந்து வந்ததாக இலக்கியக் குறிப்புகள் இருப்பதாக அறிகிறேன். துவரையம்பதி என்றால் துவாரகை என்று சிலரும் துவாரசமுத்திரம் என்று சிலரும் சொல்வதாகவும் அறிகிறேன். வேளிர்கள் துவாரகையிலிருந்து வந்தவர்கள் என்றால் கண்ணனின் பரம்பரையினர் அவர்கள் என்று சொல்லலாம். திரு.ஜே.பி. அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார் என்று படிக்க ஆவல். அவரது கட்டுரைக்குச் சுட்டி இருக்கிறதா?

அன்பன்,
குமரன்.

வேந்தன் அரசு

unread,
Sep 6, 2008, 7:15:30 PM9/6/08
to minT...@googlegroups.com


2008/9/2 Kumaran Malli <kumara...@gmail.com>


வேந்தன் அரசு ஐயா,

எனக்கு சிறுபாணாற்றுப்படை எப்போது எழுதப்பட்டது என்பதில் தெளிவில்லை. ஏன் அது கபிலரின் காலத்திற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

 
குமரன்,
 
கபிலர் பாரி, காரி காலத்தவர். பாரியின் மறைவுக்கு பின் தானும் வடக்கிருந்து இன்னுயிர் துறந்தவர்.
 
ஆய், பாரி, ஓரி, காரி நள்ளி, பேகன், அதியன் என்ற எழுவர் மாய்ந்த பின்றை தோன்றிய  ஒய்மா நாட்டு மன்னனான நல்லியக்கோடன் எனும் வள்ளலை பாடும் பாட்டு சிறுபாணாற்றுப்படை.
 
எனவே தான்.

Kumaran Malli

unread,
Sep 6, 2008, 11:14:21 PM9/6/08
to minT...@googlegroups.com
வரலாற்றுத் தகவலுக்கு நன்றி வேந்தன் அரசு ஐயா.

Kumaran Malli

unread,
Sep 7, 2008, 10:30:45 AM9/7/08
to minT...@googlegroups.com

உடுக்கை இழந்தவன் கை - 7 (பாரி வள்ளலின் கதை)

மூவேந்தர்களின் முற்றுகை தொடங்கிவிட்டது. ஒரு பட்சத்திற்குள் மூவரும் படை திரட்டிக் கொண்டு வந்தது வியப்பாகத் தான் இருக்கிறது. படைகள் நாட்டிற்குள் நுழைந்த போது எந்த விதமான எதிர்ப்பும் இல்லை. மக்கள் மூவேந்தர்களின் படைகளை வரவேற்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. மூவேந்தர்களுக்கும் பாரியைப் பணிய வைத்துப் பாரி மகளிரைச் சிறை எடுத்துச் செல்வதே நோக்கம் என்பதால் மக்களைத் துன்புறுத்தாமலேயே தங்கள் படைகளை நடத்தி வந்தார்கள். பறம்பு மலையினை சுற்றித் தங்கள் படைகளை நிறுத்தி வைத்தார்கள். எந்தத் திசையிலிருந்தும் மலைக்கு மேல் எந்த விதமான உதவிகளும் உணவுப் பொருட்களும் போகாத வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.

படைகளின் நடமாட்டம் வெகுவாக இருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. மிகச்சிறிய நாடு தானே என்று மூவேந்தர்களும் அளவிற்கு மீறி படைகளையும் திரட்டிக் கொண்டு வரவில்லை. சிறிய படையைக் காட்டியே பாரியைப் பணியச் செய்துவிட முடியும் என்று நம்பினார்கள். அதனால் மலையில் முன்னேறிச் சென்று போரினைத் தொடங்காமல் மலையின் கீழ் முற்றுகை இட்டு அமர்ந்து கொண்டார்கள். முற்றுகை தொடங்கிய சில நாட்களிலேயே பாரியிடமிருந்து தூது வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் நாட்கள் தான் சென்று கொண்டிருந்தன. பாரியிடமிருந்து எந்த செய்தியும் இல்லை. முற்றுகை தொடங்கி ஒரு திங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இனி மேலும் காத்திருக்க முடியாது என்று எண்ணி மலையின் மேல் என்ன நடக்கிறது என்று அறிந்து வர சில ஒற்றர்களை அனுப்பினார்கள்.

***

"பாரி. மூவேந்தர்களின் முற்றுகை தொடங்கி ஒரு திங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் அவர்கள் முற்றுகையைத் தொடரலாம். நமக்கு ஒரு குறையும் இல்லை. ஆனால் இதனை இப்படியே விட்டுவிடுவது சரியா? ஏதேனும் செய்ய வேண்டும்"

"சரியாகச் சொன்னீர்கள் கபிலரே. முற்றுகை தொடங்கிய நாள் முதல் பரிசிலர்களும் வரவில்லை. அவர்களை வேந்தர்களின் படைகள் மலைக்குக் கீழேயே தடுத்து நிறுத்திவிடுவதாக ஒற்றர்கள் வந்து சொன்னார்கள். வேந்தர்களின் ஒற்றர்களும் மலையின் மேல் திரிவதாகச் செய்தி வந்திருக்கிறது. மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும் பரிசில் வேண்டி வருபவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் வந்து செல்லும் வண்ணம் நிலையை மாற்றுவது மிகவும் தேவையானது"

"உன்னிடம் பல முறை பேசிப் பார்த்துவிட்டேன். நீ மூவேந்தர்களுக்குப் பணிந்து உன் மக்களை மணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறாய். அதனால் முற்றுகையை முடிப்பதற்கு என்ன வழி என்று எனக்குப் புரியவில்லை. என்ன செய்யலாம் என்று நீ நினைக்கிறாய்?"

"ஐயனே. நீங்கள் பெரும் புலவர் என்பதால் மூவேந்தர்களுக்கும் உங்கள் மேல் பெரும் மதிப்பு இருக்கின்றது. அவர்களிடம் நீங்கள் சென்று நம் கருத்தினை இன்னும் தெளிவாகச் சொல்லிப் பார்க்கலாமே. பரிசிலர்களுக்கு ஏற்படுகின்ற துன்பத்தைப் பற்றியும் சொல்லிப் பாருங்கள். அவர்கள் தொடர்ந்து இங்கே வந்து சென்றால் எனக்குப் போதும். முற்றுகை எத்தனை நாள் நீடித்தாலும் கவலையில்லை"

"நீ சொல்வது சரியாகத் தான் தோன்றுகிறது பாரி. இன்றே மூவேந்தர்களைக் காண நான் செல்கிறேன். அவர்களிடம் பேசி முற்றுகையை நீக்கக் கோருகிறேன்"

மூவேந்தர்களிடம் பேசும் போது பாரியின் பெருமைக்கு எந்த வித இழிவும் வராமல் பேசுவது நண்பனாகியத் தன் கடமை என்று எண்ணிக் கொண்டார் கபிலர்.

***

ஒற்றர்களின் மூலம் மூவேந்தர்களுக்கும் பாரியிடமிருந்து கபிலர் வரும் செய்தி அறிவிக்கப்பட்டது. இறுதியில் பாரி இறங்கி வருகிறான் என்று மூவரும் மகிழ்ந்தனர். கபிலர் வருவதை எதிர்பார்த்து அவர் வரும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

"வாருங்கள் புலவர் பெருமானே. தங்கள் வரவு எங்கள் மூவருக்கும் இந்தப் பறம்பு நாட்டிற்கும் நன்மை விளைவிக்கட்டும்"

"பாண்டியா. உன் வரவேற்பிற்கு நன்றி. ஒரே நேரத்தில் உங்கள் மூவரையும் ஒரே இடத்தில் காண்பது மிகவும் அரிதான ஒன்று. அது இன்று நிகழ்ந்தது என் பெரும் பேறு தான்"

"புலவரே. நீங்கள் பாரிவேளிடமிருந்து வருவதாக அறிகின்றோம். பாரியிடமிருந்து ஏதேனும் செய்தி உண்டா?"

"புகார்க்காவலா. நீ அறிந்தது சரியே. பாரியிடமிருந்து தான் வருகிறேன். உங்கள் தூதுவர்களிடம் அவன் என்ன செய்தி அனுப்பினானோ அதே செய்தியைத் தான் என் மூலமும் அனுப்பியிருக்கிறான்"

"என்ன? இவ்வளவு நாட்கள் முற்றுகை இட்ட பின்னரும் பாரி பணியவில்லையா? பெரும் வியப்பு தான்"

"வஞ்சிக்காவலா. பாரியின் இயற்கை அது தான். அவனை வென்று இந்தக் குன்றினை நீங்கள் கொள்ளுதல் என்பது மிகக் கடினம். இப்படி முற்றுகை இடுவதை விடுத்து வேறு வகையில் இந்தக் குன்றினைக் கொள்ள வழியுள்ளதா என்று பார்க்கலாம்"

"புலவரே. இந்தச் சிறு குன்றை வெல்வது தான் எங்கள் நோக்கம் என்று நினைத்துவிட்டீர்களா? நாங்கள் நினைத்தால் ஒரே நாளில் இந்தக் குன்றை வென்றுவிடுவோம். நாங்கள் வந்த நோக்கம் என்ன என்று உங்களுக்குத் தெரியாதா?"

"நன்றாகத் தெரியும் வேந்தர்களே. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவே நிறைவேறாது. அதனால் தான் பறம்பு மலையையாவது நீங்கள் வென்றுவிடப் பாருங்கள் என்று சொன்னேன். அப்படி பறம்பு மலையை வெல்வதும் உங்கள் படை வலிமையால் நிகழாது. அதற்கு வேறு வழி உண்டு"

"எங்கள் படை வலிமையாலும் இயலாத ஒன்று வேறு வழியின் நடக்குமா? அந்த வழி எது கபிலரே?"

"மூவேந்தர்களே. இந்த கரிய பறம்பு மலை உங்கள் படைகளால் எளிதாக வெல்லக் கூடியது; ஆனால் நீங்கள் இரங்கி அதனை வெல்லாமல் விட்டு வைத்திருப்பதாகத் தானே எண்ணியிருக்கிறீர்கள்?! அது தவறு. உங்கள் வேல் வன்மையால் இந்தக் குன்றை வெல்லுதல் மிக அரிது. ஆனால் இந்தக் குன்றை வெல்வது இன்னொருவருக்கு மிக எளிது. யார் அவர் தெரியுமா? கருநிற மலரைப் போலுள்ள எல்லோரையும் விழுங்கும் கண்கள் கொண்ட சிறுபறை ஏந்திய விறலி பாடிக் கொண்டு வந்தால் அவளுக்கு அது எளிது.

அளிதோ தானே பேரிருங்குன்றே
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே
நீலத்து இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதாம் பாடினள் வரினே
"

இந்தப் பாடலைக் கேட்டதும் மூவேந்தர்களின் முகத்திலும் எள்ளல் குறி தோன்றியது.

***

பாடல் குறிப்பு:

புறநானூறு 111ம் பாடல்.

திணை: நொச்சி (அரணைக் காக்கும் வீரர்கள் அணியும் மலர் நொச்சி. இங்கே முற்றுகையைத் தவிர்க்கச் சொல்லுதால் இது நொச்சித் திணையானது). இந்தப் பாடல் காஞ்சித் திணை என்றும் சொல்லப்படுவதுண்டு. சான்றோர் அறிவுரை கூறுவது காஞ்சித் திணையாகும்.

துறை: மகண் மறுத்தல் (குலத்தின் பெருமையைக் கூறி பெண் தர மறுத்தல்)

பாடலின் பதவுரை:

அளிது: இரங்கத் தக்கது.
பேரிரும்: மிகப்பெரிய (பெருமையில் சிறந்த)
வேறல்: வெல்லுதல்
கிணை: சிறுபறை

பாடினள் வரினே என்று குறிப்பிட்டுக் கூறியது தன் பெண்மையின் அழகாலும் அவள் இந்தக் குன்றினை அடைய முடியாது; ஆனால் பாடிக் கொண்டு வந்தால் முடியும் என்று சொல்வதற்காக.

வேந்தன் அரசு

unread,
Sep 7, 2008, 8:03:47 PM9/7/08
to minT...@googlegroups.com
நல்லா போகுதுங்க பாரியின்/கபிலரின் கதை

Kumaran Malli

unread,
Sep 7, 2008, 8:22:55 PM9/7/08
to minT...@googlegroups.com
நன்றி வேந்தன் அரசு ஐயா.

Narayanan Kannan

unread,
Sep 7, 2008, 8:24:10 PM9/7/08
to minT...@googlegroups.com
2008/9/7 Kumaran Malli <kumara...@gmail.com>:

> பரிசிலர்களுக்கு ஏற்படுகின்ற துன்பத்தைப்
> பற்றியும் சொல்லிப் பாருங்கள். அவர்கள் தொடர்ந்து இங்கே வந்து சென்றால்
> எனக்குப் போதும். முற்றுகை எத்தனை நாள் நீடித்தாலும் கவலையில்லை"

இந்த உளவியல் புரியவில்லை?
நாடு முற்றுகையில் இருக்கும் போது பரிசிலருக்கு கொடுக்க என்ன இருக்கும்?
கோபியைருக்கு கிருஷ்ண கதை ஜீவனம் என்கிறார்கள்.
பாரிக்கு தானம் கொடுப்பதுதான் ஜீவனமா?
கொடுத்துச் சிவக்கும் கைகளையே பார்த்து, ரசித்து பழகிவிட்டது காரணமா?
கொடுக்க ஒன்றுமில்லை என்றால் என்னாகும்?
கர்ணன் கதையில் சாகும் தருவாயிலும் தான் இதுவரை பெற்ற தான தர்மத்தையும்
தாரை (இரதத்தால்) வார்த்துவிடுகிறான்.
பாரி, கர்ணனின் தமிழ் வார்ப்பா? பாரி எவ்வளவு தூரம் போகிறான்?

கண்ணன்

Kumaran Malli

unread,
Sep 7, 2008, 8:30:49 PM9/7/08
to minT...@googlegroups.com

உடுக்கை இழந்தவன் கை - 8 (பாரி வள்ளலின் கதை)

"கபிலரே. கவிதைக்குப் பொய் அழகு தான். அதற்காக இப்படிப் பெரும் பொய்யைச் சொல்லவும் வேண்டுமா? மூவேந்தர்களாலும் இந்தப் பறம்பு மலை வெல்லுதற்கு அரியது. விறலிக்கு எளிது. இப்படி எல்லாம் பாடினால் கேட்பதற்கு வேண்டுமானால் சுவையாக இருக்கக் கூடும். ஆனால் உண்மையாகாது"

"தமிழ்மாறா. நான் சொல்லும் தமிழ் மாறா. உங்கள் வலிமையின் மேல் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையாலும் பாரியின் வலிமையின் மேல் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மையாலும் நான் சொன்னது பொய்யாகத் தோன்றுகிறது உனக்கு"

"புலவரே. நாங்கள் உமது அச்சுறுத்தலுக்கெல்லாம் பணியப் போவதில்லை. பாரி தன் மகளிரை எங்களுக்கு மணம் செய்து தரப்போகிறானா இல்லையா என்பதை மட்டும் சொல்லிவிட்டுச் செல்லுங்கள். அவன் மகண்மறுத்தால் இந்த பறம்பு நாடும் பறம்பு மலையும் அவனும் நீறுபடுவர் என்பதை அவனிடம் சென்று சொல்லுங்கள்"

"வளவா. நான் சொல்வதெல்லாம் வழுவா?! பாரியின் குணத்தையும் வலிமையையும் நீங்கள் அறியவில்லை. அதனால் மீண்டும் சொல்கிறேன் கேளுங்கள். எதிர்ப்பதற்கு கடினமான பெரும்படையுடன் நீங்கள் மூவரும் ஒன்றுபட்டுப் போர் செய்தாலும் பறம்பு வெல்வதற்கு அரியது. பறம்பு நாட்டில் முன்னூறு ஊர்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் பரிசிலர் ஏற்கனவே பெற்றுவிட்டனர். நீங்களும் பாடிக் கொண்டு பாணர்களாகச் சென்றால் உங்கள் மூவருக்கும் தருவதற்கு பாரியிடம் மூன்று பொருட்கள் இருக்கின்றன - இந்த குன்றும், பாரியும், நானும் இருக்கிறோம்.

கடந்தடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு நீர் பாடினர் செலினே
"

"மீண்டும் அதையே சொல்கிறீர்களே கபிலரே. எங்கள் நோக்கம் பறம்பு நாட்டைக் கைப்பற்றுவது இல்லை. எங்கள் வேந்தர் குடிகளைக் குறைத்துப் பேசிக் குலமுறை கூறிப் பெண் தர மறுக்கிறானே பாரி. அதனை எதிர்ப்பது. அவனுக்கு நல்லதை அவனிடம் எடுத்துக் கூறுவதை விட்டுவிட்டு இங்கு வந்து எங்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறீர்களே?"

"வஞ்சிப்பதி. பெண்ணைப் பெற்றவன் பெண் தர மறுத்தால் அதனால் படை எடுத்து வஞ்சிப்பதா? அவன் கருத்தைத் தான் தெளிவாகச் சொல்லிவிட்டானே. இன்னும் அதனை ஏற்க மறுத்தால் எப்படி?"

"புலவரே. அவன் கருத்து அதுவானால் எங்கள் கருத்து இது தான். அவன் தன் நிலையிலிருந்து இறங்கி வரும் வரை நாங்கள் எங்கள் முற்றுகையைத் தொடருவோம். சேமித்து வைத்திருக்கும் உணவுப்பொருட்கள் எல்லாம் தீர்ந்த பின்னர் அவன் தன்னையும் தன் சுற்றத்தையும் மக்களையும் காக்க இறங்கி வந்து தானே ஆகவேண்டும்'

"மூவேந்தர்களே. பறம்பு மலையின் வளத்தை அவ்வளவு எளிதாக நினைத்துவிடாதீர்கள். பெருமையுடைய போர் முரசுகளைக் கொண்ட நீங்கள் மூவரும் முற்றுகை இட்டாலும், இந்த மலையிலிருக்கும் ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு யானையும் இருக்கும் இடமெல்லாம் தேர்களும் கொண்டு படை எடுத்தாலும் உங்கள் முயற்சியால் இந்த மலையை வெல்லமுடியாது. உங்கள் வாள்வலிமை கண்டு அவனும் தர மாட்டான். பறம்பு மலையின் வளமும் மிகப்பெரிது. உழவரால் உழப்படாமலேயே அங்கு நான்கு வகை உணவுப்பொருட்கள் விளைகின்றன. தானே விளையும் மூங்கில் நெல்லும், இனிய சுளையையுடைய பலாப் பழங்களும், வள்ளிக்கிழங்குகளும், மலைத் தேனும் என்ற இந்த நான்கும் இருக்கும் வரை உணவுப்பொருட்களுக்கு எந்த குறையும் வராது. உங்களின் முற்றுகையும் நிறைவேறாது. அதனால் முன்பே சொன்னது போல் விறலியர் பின் தொடர பாணர்களாகப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் சென்றால் நாட்டையும் குன்றையும் எல்லாவற்றையும் உடனே தந்துவிடுவான்.

அளிதோ தானே பாரியது பறம்பே
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே
வான் கணற்று அவன் மலையே வானத்து
மீன் கணற்று அதன் சுனையே ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினர் ஆயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளிற் கொள்ளலிர் வாளில் தாரலன்
யான் அறிகுவன் அவனது கொள்ளும் ஆறே
சுகிர் புரி நரம்பின் சீறி யாழ் பண்ணி
விரை ஒலி கூந்தனும் விறலியர் பின் வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே
"

"உழவர் உழாதன நான்கு வகை உணவுப்பொருட்கள் மலையில் விளைகின்றனவா?! நல்லது கபிலரே. அப்படி என்றால் இப்போதே எங்கள் முற்றுகையை நிறுத்திவிட வேண்டியது தான்"

"பாண்டியரே. என்ன சொல்கிறீர்கள்? கபிலரின் மிரட்டலுக்கு நாம் பணிவதா?"

"வேந்தர்களே. முற்றுகையை இத்துடன் நிறுத்திவிட்டு நேரடி போரில் இறங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பது என் எண்ணம்"

"ஓ. அப்படி சொல்கிறீர்களா?! நான் உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். சேரலரே. உங்கள் கருத்து என்ன?"

"மூவரும் சேர்ந்து தானே இதில் இறங்கினோம். இதில் மட்டும் மாற்றுக் கருத்து வந்துவிடுமா? நானும் உங்கள் இருவரின் கருத்தோடு உடன்படுகிறேன்"

"கபிலரே. பாரியிடம் சென்று எங்கள் முடிவினைக் கூறுங்கள். இன்னும் இரு நாட்களில் நாங்கள் மலையேறத் தொடங்கிவிடுவோம். அதற்குள் போரில் ஈடுபட முடியாத முதியவர்களையும் பெண்களையும் மலையை விட்டு நகர ஏற்பாடு செய்துவிடும் படி சொல்லுங்கள்."

"வேந்தர்களே. முற்றுகையை நீங்கள் எத்தனை நாள் தொடர்ந்தாலும் பரவாயில்லை; பரிசில் வேண்டி வருபவர்களைத் தடுக்காதீர்கள் என்று எடுத்துச் சொல்லத் தான் பாரி என்னை இங்கே அனுப்பினான். அந்த வேண்டுகோளை வைப்பதற்கே இடமில்லாமல் நீங்கள் செய்துவிட்டீர்கள். உங்கள் கருத்தைப் பாரிக்கு அறிவிக்கிறேன். நான் உங்களுக்குத் தந்த அறிவுரைகளை மீறிச் செயல்படுகிறீர்கள். நான் சொன்னவை உண்மை என்பதை நீங்களே நேரடியாகக் கண்டு கொள்வீர்கள்"

"கபிலர் பெருமானே. தங்கள் அறிவுரையை மீறி நடக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம் இல்லை. ஆனால் எங்கள் குலத்தைக் குறைத்துப் பேசிய பாரியின் அகந்தையை அடக்காமல் விட்டால் வரலாறு எங்களை மன்னிக்காது. அதனால் தான் இந்த முடிவிற்கு வந்திருக்கிறோம். நீங்கள் சினம் கொள்ளாது எங்கள் தூதுவனாகப் பாரியிடம் சென்று இந்த செய்தியை அறிவிக்க வேண்டும்"

"சேரலா. நீ மிகவும் பணிவானவன். ஆனால் சேரலாக் கூட்டத்துடன் சேர்ந்து செய்யக்கூடாதவற்றைச் செய்யத் தொடங்கிவிட்டாய். நடந்ததைப் பற்றிப் பேசிப் பயனில்லை. இனி நடக்கப் போவதைப் பார்க்கச் செல்கிறேன். வாழ்க தமிழ்"

***

பாடற் குறிப்புகள்:

1. கடந்தடு தானை என்று தொடங்கும் பாடல் புறநானூறு 110ம் பாடல். மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரைக் கபிலர் பாடியது.


திணை: நொச்சி (அரணைக் காக்கும் வீரர்கள் அணியும் மலர் நொச்சி. இங்கே முற்றுகையைத் தவிர்க்கச் சொல்லுதால் இது நொச்சித் திணையானது). இந்தப் பாடல் காஞ்சித் திணை என்றும் சொல்லப்படுவதுண்டு. சான்றோர் அறிவுரை கூறுவது காஞ்சித் திணையாகும்.

துறை: மகண் மறுத்தல் (குலத்தின் பெருமையைக் கூறி பெண் தர மறுத்தல்)

பாடலின் பொழிப்புரை:

எதிரிப்படைகளை வென்று அவற்றைக் கொல்லும் படைகளையுடைய நீங்கள் மூவரும் கூடி போர் செய்தாலும் பறம்பு கொள்ளுதற்கு அரிதானது. குளிர்ந்த பறம்பு நாடு முன்னூறு ஊர்களை உடையது. அந்த முன்னூறு ஊர்களையும் பரிசிலர் பெற்றார்கள். நீங்கள் பாடிக் கொண்டு சென்றீர்கள் என்றால் பெறுவதற்கு நானும் பாரியும் இருக்கிறோம்; பறம்பு மலையும் உண்டு.

2. அளிதோ தானே என்று தொடங்கும் பாடல் புறநானூறு 109ம் பாடல். மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரைக் கபிலர் பாடியது

திணையும் துறையும் 110ம் பாடலின் திணையும் துறையுமே.

பாடலின் பொழிப்புரை:

இரங்கத்தக்கது தானோ பாரியின் பறம்பு மலை?! பெருமையுடைய முரசுகளை உடைய நீங்கள் மூவரும் முற்றுகையிட்டாலும், உழவர் உழாமல் விளையும் உணவுப் பொருட்கள் நான்கு வகைகளாய் இருக்கின்றன. முதலாவது சிறிய இலையை உடைய மூங்கிலில் விளையும் நெல். இரண்டாவது இனிய சுளைகளைக் கொண்ட, மரத்தின் மேலிருந்து வேர் வரை விளையும் பலாவின் பழம். மூன்றாவது நன்கு படர்ந்து வளரும் கொடியைக் கொண்ட, நிலத்தின் அடியில் வெகுவாக விளையும் வள்ளிக் கிழங்கு. நான்காவது அழகிய நிறம் கொண்ட நரி பாய்ந்ததால் சிதைந்து தானே மலையிலிருந்து சொரியும் தேன். பறம்பு மலை அகல நீள உயரத்தால் வானத்தைப் போன்றது. அந்த மலையிலிருக்கும் சுனைகள் வானத்திலிருக்கும் விண்மீன்களை ஒத்தன. அந்த மலையில் இருக்கும் மரங்கள் தோறும் கட்டப்பட்ட யானைகளை உடையவராகவும் இருக்கும் புலங்கள் தோறும் நிறுத்தப்பட்டத் தேர்களை உடையவராகவும் உங்கள் முயற்சியால் இந்த மலையை நீங்கள் கொள்ளமாட்டீர்; அவனும் உங்கள் வாள்வலிமைக்குத் தர மாட்டான். அந்த மலையை அடையும் வழியை நான் அறிவேன். முடுக்கப்பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைப் பண்ணி வாசித்துக் கொண்டு நறுமணம் கொண்ட கூந்தலையுடைய உங்கள் விறலியர்களுடன் சேர்ந்து ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சென்றீர்கள் என்றால் அவன் உங்களுக்கு நாட்டையும் குன்றையும் ஆளும் உரிமையை உடனே தருவான்.

Kumaran Malli

unread,
Sep 7, 2008, 8:35:13 PM9/7/08
to minT...@googlegroups.com
நல்ல கேள்விகள் கண்ணன் ஐயா. இப்படி இருந்ததால் தான் இன்றைக்கும் வள்ளல்கள் என்றாலே கன்னனும் பாரியும் தான் நினைவிற்கு வருகிறார்களோ என்னவோ?

Kumaran Malli

unread,
Sep 9, 2008, 11:08:50 PM9/9/08
to minT...@googlegroups.com

உடுக்கை இழந்தவன் கை - 9 (பாரி வள்ளலின் கதை)

(காட்சி மாற்றம். இடம் பெண்ணையாற்றங்கரை)
 
வெயில் தாழத் தொடங்கிவிட்டாலும் மனத்தில் இருக்கும் வெம்மை குறையாமல் தகிக்கின்றது. வருபவர்களுக்கெல்லாம் வாரி வாரி வழங்கி வாழ்வாங்கு வாழ்ந்தவனின் அருகாமை கிடைத்தது எத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நாட்கள் மீண்டும் தான் வருமா? முப்பெரும் படைகளும் முற்றி நின்று போரிட்டன. ஆனாலும் என்ன? பாரியின் வண்மைக்கு ஈடு கொடுக்க முடிந்ததா? 'என் தமிழ் பொய்க்காது' என்று மூவேந்தர்களிடம் சொல்லி வந்தேனே. அது என் முன்னேயே நடந்ததே. மலை மேல் ஏறி வந்த படைகள் ஒரே பொழுதில் பாரியை வீழ்த்தி விடலாம் என்று எண்ணிக் கொண்டு வந்தன. ஆனால் ஒவ்வொரு நாளும் மலையேற முயன்று பாரியின் படைத் தாக்குதலால் நிலை குலைந்து அடிவாரத்திற்கு மீண்டும் திரும்பி என்று ஒரு பட்சம் முயன்றனரே. கடைசியில் சதி செய்தல்லவா பாரியைக் கொன்றுத் தங்கள் பழி தீர்த்துக் கொண்டார்கள் பாவிகள்.

ஐயகோ. அதனை நினைக்கவும் இயலவில்லையே. கொடுமை. கொடுமை. ஆருயிர் நண்பனைப் பலி கொடுத்துவிட்டு இன்னும் நான் ஏன் உயிரோடு இருக்கிறேன்? இறக்கும் தருவாயில் அவன் அடைக்கலமாகக் கொடுத்த மகளிருக்குச் செய்ய வேண்டிய கடமையும் செய்து முடித்தாகிவிட்டது. இனி இங்கிருக்கக் கூடாது. வடக்கிருந்து உயிரை விட வேண்டியது தான்.

பாரியின் உயிர் போகும் வழியை உண்டாக்கிக் கொடுத்த பாவி நான் அல்லவோ?! பாரியின் குன்றைப் பெற வேண்டுமென்றால் பாணராகவும் விறலியாகவும் வாருங்கள் என்று பார்வேந்தர்களுக்குச் சொன்னேன். அந்தத் தார்வேந்தர்களோ தாளாத கொடுமைக்காரர்கள் என்று அறிந்திலனே. பாணர்களாகவும் விறலியர்களாகவும் படைவீரர்களை அனுப்பி பாரியைக் கொன்று போட்டார்களே. ஐயகோ. இந்தப் பழியை நான் எப்படித் தீர்ப்பேன்?!

நாம் வடக்கிருக்கிறோம் என்று தெரிந்தால் மலையமான் பேசாது இருக்க மாட்டான். அதனால் எங்காவது மனிதர் இல்லாத இடத்திற்குச் சென்று விடுவதே மேல். அதோ அங்கு ஆற்றின் குறையாக ஆற்றின் நடுவில் பெரும்பாறை தெரிகிறதே. அங்கு சென்று அமர்ந்துவிட வேண்டியது தான்.

நண்பன் பாரியின் மனக்குறை தீர அவன் விரும்பிய வண்ணம் வேளிர் குலத்தவருக்கே அவன் மக்களை மணம் முடித்துக் கொடுத்தேன். அவனைக் கொல்லும் வழி சொன்ன என் மனக்குறை தீர இந்த ஆற்றுக்குறையில் உயிர் விடுவதே வழி.

***
 
(காட்சி மாற்றம்)

பாரி இறந்துவிட்டான். பறம்பு மலையிலிருந்து அவன் அடைக்கலமாகக் கொடுத்த பாரி மகளிர் இருவருடன் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கிறார் கபிலர். பாரி இறந்தான் என்ற செய்தி கேட்டவுடன் பெரும் மகிழ்ச்சியுடன் அதனைக் கொண்டாடத் தொடங்கிய வேந்தர்கள் கபிலரையும் மற்றவரையும் மறந்துவிட்டனர். தங்கள் குலத்தைக் குறைத்துப் பேசியவன் ஒழிந்தான் என்பதே அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் கபிலர் இரு பெண்களுடன் கோட்டையை விட்டு அகன்று செல்வதை அவர்கள் தடுக்கவில்லை.

"பெரியப்பா. இது என்ன கொடுமை பெரியப்பா. தந்தையார் இறந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. இந்தப் பகைவருக்குப் பயந்து இப்படிப் பதுங்கிப் பதுங்கி நம் கோட்டையை விட்டு வெளியேறும் நிலை நமக்கு வந்ததே"

"கலங்காதே அங்கவை. இதுவும் நீங்கும். பாரியின் ஆசைப்படி உங்கள் இருவரையும் வேளிர் குலத்துதித்த வேங்கையருக்கு மணம் முடிப்பேன். இது உறுதி. நீங்கள் இருவரும் எதற்காகவும் கலங்க வேண்டாம்"

"பெரியப்பா. எங்களைச் சொல்லிவிட்டு நீங்கள் கலங்குகின்றீர்களே. நீங்கள் அழுதால் நாங்களும் அழுவோம்"

"என் செய்வது சங்கவை. உன் தந்தையுடன் நான் வாழ்ந்த நட்பு வாழ்க்கை அப்படிப்பட்டது. இதோ இந்தப் பறம்பு மலையில் எத்தனை நாட்கள் மகிழ்ச்சியோடு இருந்திருக்கிறோம்.

பறம்பு மலையே. மது இருந்த பாண்டத்தை ஒரு பக்கம் திறந்து மதுவைச் சேந்திச் சேந்தி அருந்தினோம். ஆட்டுக்கிடாயை ஒரு பக்கம் வீழ்த்தி அதன் ஊனிலிருந்து தின்றுத் தீராத அளவிற்கு துவையலும் ஊனும் சேர்ந்த சோற்றினை உண்டோம். அப்படிப்பட்ட செல்வச் செழிப்பைத் தந்து எங்களுடன் நட்பு செய்தாய் நீ. இப்போதோ பாரி மாய்ந்தான் என்று கலங்கிச் செயலற்று நீர் சொரியும் கண்களுடன் இந்தப் பெண்களுக்கு ஏற்ற மணவாளரைத் தேடிச் செல்கிறோம். நீயாவது வாழ்ந்து போ பெரும்புகழ் பறம்பே.

மட்டு வாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டான்றானாக் கொழும் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே இனியே
பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர் வார் கண்ணேன் தொழுது நிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிரும் கூந்தற் கிழவரைப் படர்ந்தே
"

***

பாடற்குறிப்பு:

புறநானூறு 113ம் பாடல். கபிலர் பறம்பு நோக்கிப் பாடியது.

திணை: பொதுவியல் (பொதுவானது)

துறை: கையறுநிலை (பெரும் இழப்பினால் செயலற்று நிற்றல்)

பொழிப்புரை: மது இருந்த பானையை வாய் திறக்கவும் இன்னொரு பக்கம் கரு நிற ஆட்டுக்கிடாயை வீழ்த்தவும் அவை சமைக்கப்பட்டு (இன்றைக்கும் மேற்கத்திய அசைவ உணவு வகைகளில் மது சிறிதளவு சேர்க்கப்படுகிறது. அது போல் சொல்கிறாரோ?) தீரவே தீராத அளவிற்கு கொழுத்த துவையலும் ஊனும் கலந்த சோற்றை தொடர்ந்து தரும் செல்வம் நிறைந்து எங்களுடன் நட்புடன் இருந்தாய் முன்னர். இனி மேலும் அப்படி இருப்பாயோ? பாரி மாய்ந்தான் என்று கலங்கிச் செயலற்று நீர் சொரியும் கண்ணுடன் உன்னைத் தொழுது பாடுகிறேன். அழகிய வளையல்களை அணிந்த இந்தப் பெண்களின் நறுமணம் வீசும் திரண்ட கூந்தலுக்கு உரியவர்களைத் தேடிச் செல்கிறோம். நீ வாழ்ந்து போவாய் பெரும் பெயர் கொண்ட பறம்பே. (இளம்பெண்களின் கூந்தலைத் தீண்டும் உரிமை கணவனுக்கு/காதலனுக்கு மட்டுமே உரியது என்பது பழந்தமிழ் மரபு. )

Narayanan Kannan

unread,
Sep 10, 2008, 3:09:38 AM9/10/08
to minT...@googlegroups.com
பாரியின் கதை சோகமாக உள்ளது.

அவ்வளவு வள்ளல் குணமுள்ள அவனால் தன் பெண்களை கன்னிகாதானம் செய்ய
முடியவில்லை என்பது முரண். குடிப்பெருமைதான் சாதீயமாக வளர்கிறது
தமிழ்நாட்டில்! "எங்கள்" குலம், குடி, சாதி என்பதன் உளவியல் அடிப்படை
ஒன்றுதான். தான் உயர்ந்தவன் அடுத்தவன் தாழ்ந்தவன் எனும் மனோபாவம். இது
இன்றளவும் தமிழ் மண்ணில் வாழ்கிறது என்பதற்கு பாரியே சாட்சி. தன்
குடிப்பெருமைக்காக தன் உயிரைக் கொடுக்கிறான்.

இப்படியாகிவிட்டதே என்று ஒரு நண்பரும் உயிரைவிடுகிறார். எவ்வளவு
செயற்கையான விஷயங்களுக்காக இன்னுயிர் மாய்கிறது, பாருங்கள்! கலாச்சாரப்
பரிணாமத்திலும் இயற்கைத் தேர்வு (natural selection agent) எப்படியோ வேலை
செய்வது ஆச்சர்யமாக இருக்கிறது. கலாச்சாரப் பரிணாமம் இல்லையெனில் பாரி
போரில் மாண்டிருப்பான். வஞ்சிக்கப்பட்டு சாவது கலாச்சாரப் பரிணாமத்தின்
கூறு.

ஹூம்...

க.>

2008/9/10 Kumaran Malli <kumara...@gmail.com>:

வேந்தன் அரசு

unread,
Sep 10, 2008, 9:55:58 AM9/10/08
to minT...@googlegroups.com
>விரை ஒலி கூந்தனும் விறலியர் பின் வர
 
"கூந்தல் நும் விறலியர்" என்றாரே
 
விறலியர் பாணர்க்குதானே உண்டு. மன்னர்க்கு ஏது?

வேந்தன் அரசு

unread,
Sep 10, 2008, 9:59:59 AM9/10/08
to minT...@googlegroups.com
>வாழ்ந்தவனின் அருகாமை கிடைத்தது எத்தனை மகிழ்ச்சியாக இருந்தது
 
இந்த அருகாமை என்ற சொல் குழப்பம்
 
அண்மை என்று சொல்லிவிடுங்கள்

வேந்தன் அரசு

unread,
Sep 10, 2008, 10:02:38 AM9/10/08
to minT...@googlegroups.com
குமரன்
 
 முற்றுகை காலத்தில் கபிலர் கிளிகளை பழக்கி வேறு புலத்தில் இருந்து தினைகதிர்களை பறம்பு மலைக்கு கொணர்வித்ததாக பிறிது ஒரு பாட்டில் செய்தி இருக்கு

வேந்தன் அரசு

unread,
Sep 10, 2008, 10:03:38 AM9/10/08
to minT...@googlegroups.com


2008/9/10 Narayanan Kannan <nka...@gmail.com>

பாரியின் கதை சோகமாக உள்ளது.

ஒவ்வொரு முறையும் கபிலர் பாடல்களை வாசிக்கும் போது கண்ணில் நீர் திரளும்

Kumaran Malli

unread,
Sep 10, 2008, 9:09:05 PM9/10/08
to minT...@googlegroups.com

உடுக்கை இழந்தவன் கை - 10 (பாரி வள்ளலின் கதை)

'பறம்பு மலையே. உன் குடுமியில் பாரி வாழும் போது நீ பெரும் புகழ் பெற்றிருந்தாய். இன்றோ அவன் இல்லை. உன் புகழும் இனி மங்கும். யானை மென்று உண்ட கவளத்தின் சிதறல் தரையெங்கும் கிடப்பதைப் போல் மது பிழிந்து போடப்பட்ட சக்கையின் சிதறல் பாரியின் மாளிகை முற்றத்தில் சிதறிக் கிடந்தன அந்தக் காலத்தில். அந்த சக்கைகளின் சிதறல்களிலிருந்தும் மது ஊறி முற்றமெங்கும் சேறாகக் கிடக்கும். அப்படி அவன் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த காலத்தில் இங்கே நின்று பார்ப்பவர்களின் கண்களுக்கு நீ தோன்றுவதைப் போல் சிறிது தொலைவில் சென்று பார்ப்பவர்களின் சிந்தைகளிலும் நீ தோன்றும் பெருமை கொண்டிருந்தாய் அல்லவா? இனி அப்படி நிகழுமா?

ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறு வரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற!
களிறு மென்றிட்ட கவளம் போல
நறவு பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்
வார சும்பொழுகும் முன்றிற்று
ஏர் வீசிருக்கை நெடியோன் குன்றே!

பாரி வாழ்ந்த காலத்தில் இந்த மலையின் ஒரு பகுதியில் நீர் அருவி கொட்டிக் கொண்டிருக்கும். மற்றொரு பக்கம் பாணர்களின் உண்கலத்தில் மதுவை வார்ப்பதற்காக வடிகக்ப்பட்ட இனிய கள்ளின் தேறல் அருவி கற்களை எல்லாம் உருட்டி ஓடிக் கொண்டிருக்கும். வேற்படையுடையவனும் யானைப்படையைக் கொண்டிருக்கும் வேந்தர்களுக்கு இன்னானும் ஆகிய நமக்கு இனியவன் வாழ்ந்த போது நிகழ்ந்த இவை இனி நிகழாதே.

ஒரு சார் அருவி ஆர்ப்ப ஒரு சார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
வாக்க உக்க தேக்கள் தேறல்
கல்லலைத்து ஒழுகும் மன்னே! பல்வேல்
அண்ணல் யானை வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே!
"

"பெரியப்பா. எத்தனை தான் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வரோ? சென்றதும் மீளுமோ? வாருங்கள் பகல் வீழும் காலமும் ஆனது. இன்றிரவு தங்கும் இடம் ஏதேனும் தென்படுகிறதா பார்க்கலாம்"

"ஆமாம் சங்கவை. நீ சொல்வது சரி தான். மாலை மயங்கி வருகிறது. இன்று முழுமதி நாள் என்பதால் இருக்கை தேடி விரைய வேண்டாம். மெதுவாகத் தேடுவோம்"

"அப்படியே செய்வோம் பெரியப்பா. அருகில் ஏதேனும் ஊர் உண்டா?"

"மலையின் அடிவாரத்தில் ஒரு சிற்றூர் உண்டு அம்மா. இரு திங்களுக்கு முன்னர் அந்த ஊரில் ஒரு பாணரின் வீட்டில் தான் நண்பகல் தங்கினேன். இரவு முதல் நாழிகைக்குள் அங்கே சென்றுவிடலாம் என்று எண்ணுகிறேன்"

***

"வாருங்கள் புலவரே. வாருங்கள்"

"பாணரே. நலமா? தங்கள் மனையாளும் நலமா?"

"தங்கள் ஆசிகளினால் நாங்கள் நலமாகத் தான் இருக்கிறோம் புலவரே. நம் மன்னர் மறைந்ததே இப்போது பெரும் குறை."

"நாடும் நகரமும் நன்கறிந்தது தானே அது பாணரே. இதோ இந்த இரு பெண்களும் பாரி மகளிர். இவர்களுக்குத் தகுந்த மணவாளனைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறோம். இன்றிரவு இங்கே தங்க இயலுமா என்றறியவே வந்தோம்"

"இது என்ன கேள்வி கபிலரே. எங்கள் மன்னன் மகளிர் எங்கள் குடிசையில் தங்க வந்தது எங்களின் பெரும்பேறல்லவா? இங்கேயே நீங்கள் விரும்பும் நாட்கள் வரை தங்கியிருக்கலாம். உள்ளே வாருங்கள். உணவு அருந்திய பின்னர் அமர்ந்து உரையாடலாம்"

***

உணவு அருந்திய பின்னர் அனைவரும் முற்றத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கின்றனர். பாரி மகளிரிடம் மன்னரைப் பாடித் தான் பெற்ற தங்க நாணைப் பற்றி விறலி சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொல்லச் சொல்ல அந்த நாள் நினைவுகளால் இரு பெண்களின் கண்களிலும் நீர் நிரம்பின.

***
பாடற்குறிப்புகள்:

ஈண்டு நின்றோர்க்கும் என்று தொடங்கும் பாடல் புறநானூறு 114ம் பாடல். ஒருசார் அருவி ஆர்ப்ப என்று தொடங்கும் பாடல் புறநானூறு 115ம் பாடல். இரண்டும் கபிலர் பறம்பு நோக்கிப் பாடியது.

திணை: பொதுவியல்; துறை: கையறுநிலை. (விளக்கத்திற்கு சென்ற பகுதியைப் பார்க்கவும்). இரண்டு பாடல்களுக்கும் ஒரே திணையும் துறையும்.

 

வேந்தன் அரசு

unread,
Sep 10, 2008, 10:19:41 PM9/10/08
to minT...@googlegroups.com
>ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறு வரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற!
 
இந்த அடிகளுக்கு சரியான் பொருள் தெரியாமல் இருந்தேன். மிக்க நன்றி குமரன்

Kumaran Malli

unread,
Sep 10, 2008, 11:05:00 PM9/10/08
to minT...@googlegroups.com

ஐயா. சில இடங்களில் மட்டுமே நானே பொருளைச் சொல்கிறேன். பெரும்பாலும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கும் உரை நூலில் இருக்கும் பொருளையே சொல்கிறேன். இந்த அடிகளின் பொருளும் அங்கு படித்ததாகவே நினைவு.

நன்றி.

அன்பன்,
குமரன்.



Kumaran Malli

unread,
Sep 10, 2008, 11:05:44 PM9/10/08
to minT...@googlegroups.com

அந்தப் பாடலைப் பற்றிய குறிப்பைத் தாருங்கள் ஐயா. இணையப் பல்கலைக்கழக நூலகத்தில் தேடிப் படிக்கிறேன்.

அன்பன்,
குமரன்.



Kumaran Malli

unread,
Sep 10, 2008, 11:09:07 PM9/10/08
to minT...@googlegroups.com

நீங்கள் சொல்வது சரி தான். அருகாமை என்றால் குறைவற்றல் என்ற பொருளையும் தருகிறது இல்லையா? இனிமேல் அருகாமை என்று எழுதத் தோன்றும் போது அண்மை என்று எழுதிப் பழகுகிறேன்.

நன்றி ஐயா.

Kumaran Malli

unread,
Sep 10, 2008, 11:11:21 PM9/10/08
to minT...@googlegroups.com
நல்ல கேள்வி ஐயா. மன்னர்களைப் பாடிச் செல்ல சொன்னதால் அவர் தம் மகளிரை (மனைவியரை) ஆடிச் செல்லும் விறலியர்கள் என்று சொன்னார் என்று எண்ணினேன். உங்கள் விளக்கம் என்ன?

Kumaran Malli

unread,
Sep 10, 2008, 11:18:25 PM9/10/08
to minT...@googlegroups.com

கண்ணன் ஐயா.

பாரி குடிப்பெருமை கொண்டிருந்தான் என்பதற்கும் மூவேந்தர் பாரியை சதி செய்து கொன்றனர் என்பதற்கும் நேரடியான இலக்கியச் சான்றுகள் உள்ளனவா என்று தெரியவில்லை. இருந்தால் அறிந்தவர் சொல்லுங்கள்.

பாரி வேளிர் குலத்தவன்; அவன் மூவேந்தர்களுக்கு மகண்மறுத்தான்; அவன் மகளிரை கபிலரிடம் அடைக்கலமாகக் கொடுத்தான்; கபிலர் வேளிர் குலத்தவரான மன்னர்களிடம் சென்று பாரி மகளிரை மணக்கும் படி இரக்கிறார்; இறுதியில் வேளிர் குலத்தவனான மலையமானைப் போற்றுகிறார் - இவற்றிற்கே இலக்கிய சான்றுகள் இருக்கின்றன. கடைசியில் கபிலர் குன்றில் வடக்கிருந்து உயிரை விட்டார் என்பதற்கு இராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுச் சான்று இருக்கிறது. இவற்றை வைத்து இந்தக் கதையை எழுதியிருக்கிறேன்/எழுதுகிறேன். பாரியின் குடிப்பெருமையைப் பற்றியும் கபிலரின் பாடல்களில் கிடைத்த குறிப்பை வைத்து மூவேந்தர் சதி செய்து பாரியைக் கொன்றனர் என்பதும் கிடைத்த இந்த சான்றுகளை வைத்தே உய்த்துணர்ந்து எழுதினேன். அவற்றிற்கு நேரடியான சான்றுகளை நான் இன்னும் காணவில்லை என்பதை இங்கே சொல்லி வைக்க விரும்புகிறேன்.

அன்பன்,
குமரன்.



வேந்தன் அரசு

unread,
Sep 10, 2008, 11:40:21 PM9/10/08
to minT...@googlegroups.com


2008/9/10 Kumaran Malli <kumara...@gmail.com>

அந்தப் பாடலைப் பற்றிய குறிப்பைத் தாருங்கள் ஐயா. இணையப் பல்கலைக்கழக நூலகத்தில் தேடிப் படிக்கிறேன்.

 
குமரன்
 
 அகநானூற்றின், அவ்வையார் பாடிய, 303 ஆம் பாடலில்
 
 
வரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும்
உரைசால் வண்புகழ் பாரி பறம்பின்
நிரைப்பறை குரீஇயினம் காலை போகி
முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் ஒராங்கு
இரைதேர் கொட்பினவாகி பொழுதுபட
 
என்ற வரிகளில் காணலாம்
 
இதில் கபிலர் பெயர் சொல்லப்படாவிடினும் புலியூர் கேசிகன் பாடினோர் வரலாற்றில் கபிலர் குருவிகளை பழக்கியதாக சொல்லுகிறார்.
 
 
 

Kumaran Malli

unread,
Sep 11, 2008, 2:45:07 PM9/11/08
to minT...@googlegroups.com

உடுக்கை இழந்தவன் கை - 11 (பாரி வள்ளலின் கதை)

தங்க நாணை பாரியிடமிருந்து பரிசிலாகப் பெற்ற கதையை விறலி சொல்லச் சொல்ல அங்கவை, சங்கவை இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டன. இன்றும் முழுநிலவு காய்கிறது. அன்றைக்கும் முழு நிலவு காய்ந்ததே. சோகமான குரலில் அங்கவை ஒரு பாட்டைப் பாடத் தொடங்கினாள். அவளுடைய பாடலுக்கு ஏற்ப பாணரும் விறலியும் தத்தமது யாழ்களை மீட்டத் தொடங்கினர்.

"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்
"

இதற்கு மேல் அங்கவையால் பாட இயலவில்லை. சங்கவை தொடர்ந்தாள்.

"இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே
"

இந்தப் பெண்களின் உணர்வுகள் இந்தப் பாடலில் பெருக்கெடுத்ததால் இந்தப் பாடல் பல்லாயிரம் வருடங்கள் மக்கள் நினைவில் நிலை நின்று பாரியின் புகழையும் பாரி மகளிரின் இழப்பையும் கூறி நிற்கும் என்று கபிலருக்குத் தோன்றியது. தன்னுடைய கவிதைகளிலும் உணர்வுகள் வெளிப்படுவதுண்டு. ஆனால் தனது புலமையின் விளைவாக அந்த உணர்வுகள் உவமைகள் என்னும் அணிகளைக் கொண்டே வெளிப்படுவதால் வருங்காலம் பாடல்களில் இருக்கும் உணர்வுகளை விட உவமைகளையே நினைவில் நிறுத்தும். உவமைகளைச் சுவைக்கத் தொடங்கிய உடனேயே அந்த உவமைகளைச் சொன்னவர் யார்; அந்த உவமைகள் வெளிப்படுத்திய உணர்வுகள் என்ன என்பவை மறந்து போகத் தொடங்கி அந்த உவமைகளை மட்டும் நினைவில் நிறுத்தி அவற்றைத் தாங்களும் எடுத்தாளத் தொடங்குவார்கள். அப்படி எல்லாம் நிகழும் போது முதல் கவிதை மறந்து போகும். தன் கவிதைகளுக்கு நேரக்கூடிய இவை இந்தப் பெண்கள் பாடிய இந்தக் கவிதைக்கு நேராது என்று கபிலருக்குத் தோன்றியது. ஒப்புமைக்காக மூன்றே பொருட்களை எடுத்துக் கொண்டு தங்கள் உள்ளக் குமுறல்களையும் கையறு நிலையையும் இந்தப் பெண்கள் மிக அழகாகச் சொல்லிவிட்டார்கள். எந்த வித உவமைகளும் இல்லை; அலங்காரங்களும் இல்லை. இப்படிப்பட்ட நேரடியான உணர்வுகள் மிகும் பாடல்கள் மக்கள் மனத்தில் நீங்காத இடம் கொண்டு நிலைத்து நிற்கும் தானே.

தந்தையாரின் இறப்பால் மனம் மிக நொந்து வருந்தும் இளம்பெண்கள் இருவரையும் விறலி அணைத்துக் கொண்டு தேற்றினாள். எத்தனை தான் தேற்றினாலும் மறைந்துவிடக்கூடிய இழப்பா அது? மறந்துவிடவும் முடியுமா? ஆனாலும் மூத்தவள் ஒருத்தியின் அணைப்பு கொஞ்சம் மன அமைதியைக் கொடுத்ததென்னவோ உண்மை. மாண்டவர் மீள்வரோ என்றெல்லாம் அறிவு சான்ற மூத்தோர் எத்தனை சொன்னாலும் ஆதரவுடன் ஒருவர் அணைத்துக் கொண்டு தேற்றும் போது கிடைக்கும் அமைதி அந்த அறிவுரைகளில் கிடைப்பதில்லையே. உணர்வுகள் மிஞ்சும் போது அறிவுரைகளால் அவற்றை ஓரளவிற்குத் தான் அமைதிபடுத்த முடிகின்றது.

நிலவொளியில் அமர்ந்து வெகு நேரம் பாரியின் பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர் ஐவரும். பேசியும் அழுதும் களைத்து ஒவ்வொருவராக நிலா முற்றத்திலேயே உறங்கத் தொடங்கிவிட்டனர். கபிலரும் பாணரும் ஒவ்வொருவர் மேலும் ஒரு போர்வையைச் சாற்றிவிட்டுத் தாங்களும் படுத்து உறங்கத் தொடங்கினர். இன்றைக்கு தன் மனத்தை உருக்கிப் பல பாடல்களைப் பெற்ற பறம்பு மலையை இனி வாழ்நாளில் எப்போது காணப்போகிறோமோ என்று எண்ணிக் கொண்டே உறங்கிப் போனார் கபிலர். நாளை முழுவதும் பறம்பு நாடு தன்னிடம் பல பாடல்களைப் பெறப் போகிறது என்பதை அறியாமல் போனார் அவர்.

***

"இந்த பறம்பு நாடு இது வரை பெற்றிருந்த பேறு தான் என்னே? எத்தனை கொடிய அறிகுறிகள் தோன்றினாலும் உங்கள் தந்தை செங்கோல் வழுவாது ஆண்டிருந்ததால் எந்தக் குறையும் இன்றி இருந்ததே. இனி என்னாகுமோ?"

"பெரியப்பா. கொடிய அறிகுறிகள் என்று சொன்னீர்களே. அவை என்ன? நாங்கள் கண்டதில்லையே?"

"சங்கவை. நீ பிறந்த பின்னரும் அந்த அறிகுறிகள் தோன்றியுள்ளன. ஆனால் அவற்றின் பாதிப்பு பறம்பு நாட்டிற்கு இல்லாமல் போனதால் உனக்கு அவை தெரியவில்லை. கருநிறம் கொண்ட கோள்மீனான காரியாம் சனி புகையுடன் வானில் தோன்றுவதும் புகையை வாலாகக் கொண்ட தூமகேது வானில் தோன்றுவதும் தெற்கு திசையில் வெள்ளி தோன்றுவதும் நாட்டிற்குக் கேட்டை விளைவிக்கும் அறிகுறிகள். பாரியின் ஆட்சியில் பறம்பு நாடு இருந்த போது பல முறை அவை தோன்றியிருக்கின்றன. ஆனால் அவனுடைய செங்கோல் திறம்பாமை அந்த அறிகுறிகளின் பாதிப்பில் இருந்து நாட்டைக் காப்பாற்றிவிட்டன".

"நீங்கள் சொன்ன இந்த அறிகுறிகளால் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படும் பெரியப்பா?"

"மழை பொய்த்துப் போகும். அதனால் வயல் வெளிகளில் பயிர் விளைவது குன்றும். புல்லும் முளைக்காத நிலை தோன்றும். அழகிய கன்றினை ஈன்ற பசுக்கள் தின்று இளைப்பாறப் புற்களும் இல்லாமல் துயருறும். இவை பொதுவாகத் தோன்றக்கூடிய பாதிப்புகள். இவற்றை எல்லாம் விட மன்னவன் இறந்துபட நேரிடும் என்பதே பெரும்பாதிப்பு"

"இவ்வளவு கொடிய பாதிப்புகள் ஏற்படாமல் மன்னவனது செங்கோல் தடுத்ததா? அது எப்படி பெரியப்பா?"

"முறையோடு மன்னவன் ஆண்டு வந்தால் அந்த நாட்டில் சான்றோர்கள் வாழ விரும்பி வந்து கூடுவார்கள். சான்றோர் ஒருவர் இருந்தாலே அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்று கேட்டிருப்பீர்களே. உன் தந்தையை அண்டி வாழ சான்றோர் பலரும் வரும் போது இந்த இயற்கைக் குறிகளால் என்ன செய்ய முடியும்? செங்கோல் வளையாமையால் சான்றோர் மிகுந்தனர். சான்றோர் மிகுந்ததால் மழை பொய்க்கவில்லை

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயலகம் நிறையப் புதற்பூ மலர
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடுநிரை நன்புல் ஆரக்
கோல் செம்மையில் சான்றோர் பல்கிப்
பெயல் பிழைப்பறியாப் புன்புலத்ததுவே
பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே
"

***

பாடற்குறிப்புகள்:

1. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் என்று தொடங்கும் பாடல் புறநானூறு 112ம் பாடல். பாரி மகளிர் பாடியது.

திணை: பொதுவியல்; துறை: கையறுநிலை.

பொழிப்புரை: அன்றொரு நாள் முழுநிலவில் எங்கள் தந்தையையும் நாங்கள் பெற்றிருந்தோம் எங்கள் குன்றத்தையும் பிறர் அடையவில்லை. இன்று இந்த முழுநிலவு நாளில் வென்று பகைவரை வீசி எறியும் முரசினைக் கொண்ட வேந்தர்கள் எங்கள் குன்றை அடைந்தார் எங்கள் தந்தையையும் நாங்கள் இழந்தோமே.

2. மைம்மீன் என்று தொடங்கும் பாடல் புறநானூறு 117ம் பாடல். பறம்பு நாட்டைக் கபிலர் பாடியது.

திணை: பொதுவியல்; துறை: கையறுநிலை.

பொழிப்புரை: கரிய நிற கோள் மீனான காரி புகையுடன் கூடித் தோன்றினாலும், தூமகேதுவான புகைக்கொடி தோன்றினாலும், தெற்கு திசை ஓரமாக வெள்ளி ஓடினாலும், வயலகம் நிறைய புதற்பூவாகிய நெல் விளையும்; வீட்டில் முதல் மகவை ஈன்ற அழகிய கண்களையுடைய பசுவின் கூட்டம் புற்களை ஆர உண்ணும்; பாரியின் செங்கோல் செம்மையால் சான்றோர்கள் பல்குவர். அதனால் மழை பொய்க்காத பெருமை கொண்ட நாடு இது. இளம்பூனையின் முற்களைப் போன்ற பற்களை ஒத்த முல்லைப் பூவினை சூடிய வளையல்கள் அணிந்த பாரிமகளிரின் தந்தை நாடு இனி பாரியின்றி என்ன பாடுபடுமோ?

'கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும் விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்' என்று இந்த மூன்று காரணங்களையும் சிலப்பதிகாரத்திலும் காணலாம்.

'முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்' என்ற குறளையும் 'ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவானெனின்' என்ற குறளையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

Kumaran Malli

unread,
Sep 11, 2008, 2:45:55 PM9/11/08
to minT...@googlegroups.com
நன்றி ஐயா.

On 9/10/08, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

Narayanan Kannan

unread,
Sep 11, 2008, 7:04:28 PM9/11/08
to minT...@googlegroups.com
2008/9/12 Kumaran Malli <kumara...@gmail.com>:

> "சங்கவை. நீ பிறந்த பின்னரும் அந்த அறிகுறிகள் தோன்றியுள்ளன. ஆனால் அவற்றின்
> பாதிப்பு பறம்பு நாட்டிற்கு இல்லாமல் போனதால் உனக்கு அவை தெரியவில்லை. கருநிறம்
> கொண்ட கோள்மீனான காரியாம் சனி புகையுடன் வானில் தோன்றுவதும் புகையை வாலாகக்
> கொண்ட தூமகேது வானில் தோன்றுவதும் தெற்கு திசையில் வெள்ளி தோன்றுவதும்
> நாட்டிற்குக் கேட்டை விளைவிக்கும் அறிகுறிகள். பாரியின் ஆட்சியில் பறம்பு நாடு


இதை வைத்து துல்லியமாகப் பாரியின் காலத்தைச் சொல்லிவிட முடியுமே! நம்ம
கணக்குப் புலிகள் யாராவது முயன்றுள்ளார்களா?

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்....புகை போல் பள்ளிநாட்கள் நினைவிற்கு
வருகின்றன. எத்தனை நூற்றாண்டுகள் அழிந்து போயினும் இப்பாடல் இன்னும்
வாழ்கிறதே!

வாழ்த்துக்கள் குமரன். நல்ல கதை சொல்லி!

க.>

வேந்தன் அரசு

unread,
Sep 11, 2008, 8:36:54 PM9/11/08
to minT...@googlegroups.com


2008/9/11 Narayanan Kannan nka...@gmail.com

 
இதை வைத்து துல்லியமாகப் பாரியின் காலத்தைச் சொல்லிவிட முடியுமே! நம்ம
கணக்குப் புலிகள் யாராவது முயன்றுள்ளார்களா?

க்ண்ணன்
 
மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
 
 
if  என்றுதான் கபிலர் சொல்லி இருக்கார். இவை எல்லாம் தோன்றின என்று பொருள் இல்லை. ஆனால் இவை தோன்றினால் வரட்சி ஏற்படும் என்ற நம்பிக்கை தெரிகிறது

Narayanan Kannan

unread,
Sep 11, 2008, 8:44:37 PM9/11/08
to minT...@googlegroups.com
2008/9/12 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

>
> if என்றுதான் கபிலர் சொல்லி இருக்கார். இவை எல்லாம் தோன்றின என்று பொருள்
> இல்லை. ஆனால் இவை தோன்றினால் வரட்சி ஏற்படும் என்ற நம்பிக்கை தெரிகிறது
>

ஓ! நம்ம கதை சொல்லி அவை நடைபெற்றதாக அல்லவோ சொல்கிறார் ;-)
மன்னனின் செங்கோல் அதைக் காத்தது என்றும்.....

க.;-)

Kumaran Malli

unread,
Sep 11, 2008, 9:55:43 PM9/11/08
to minT...@googlegroups.com
வாழ்த்துகளுக்கு நன்றி கண்ணன் ஐயா.

Kumaran Malli

unread,
Sep 11, 2008, 9:57:10 PM9/11/08
to minT...@googlegroups.com

வேந்தன் ஐயா. வரட்சியா வறட்சியா? நாளிதழ்களில் எல்லாம் வறட்சி என்று படித்ததாக நினைவு.

 
On 9/11/08, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
வரட்சி
 

Kumaran Malli

unread,
Sep 11, 2008, 9:57:56 PM9/11/08
to minT...@googlegroups.com
உண்மை தான். கதை சொல்லி அப்படித் தான் அந்தப் பாடலைப் புரிந்து கொண்டிருக்கிறார். :-)

On 9/11/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:

வேந்தன் அரசு

unread,
Sep 11, 2008, 10:21:28 PM9/11/08
to minT...@googlegroups.com


2008/9/11 Kumaran Malli <kumara...@gmail.com>


வேந்தன் ஐயா. வரட்சியா வறட்சியா? நாளிதழ்களில் எல்லாம் வறட்சி என்று படித்ததாக நினைவு.
 
வறள், வற்றல், வறை, வறட்சிதான்
 
வரட்சி என்றும் சிலபோது வரலாம்போல் தெரிகிறது,
 
வரட்டு கவுரவம் பார்க்காமல் நீங்க சொல்லுவதை ஏத்துக்குறேன்.(:
 

Narayanan Kannan

unread,
Sep 11, 2008, 10:26:53 PM9/11/08
to minT...@googlegroups.com
2008/9/12 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> வறள், வற்றல், வறை, வறட்சிதான்
>
> வரட்சி என்றும் சிலபோது வரலாம்போல் தெரிகிறது,
>
> வரட்டு கவுரவம் பார்க்காமல் நீங்க சொல்லுவதை ஏத்துக்குறேன்.(:
>
>

அப்படியே....

நிருவாகம், நிறுவாகம்

இந்த "ர" "ற" பிறழ்சி பற்றி முன்பு ரெ.கா எழுதியிருக்கிறார்.

கல்வெட்டுக்களில் இது அதிகம்! நாறாயண! நாறாயண! (றஞ்சி மன்னிப்பாராக!)

க.;-)

Kumaran Malli

unread,
Sep 11, 2008, 10:27:56 PM9/11/08
to minT...@googlegroups.com

வரட்டுத்தனம் இல்லை என்று சொன்னதற்கு நன்றிகள் ஐயா. தட்டுப்பிழையாக இருந்து நான் இப்படி கேட்டதால் மனம் வருந்தியிருந்தால் சீறி அருளாதீர்கள்.

அன்பன்,
குமரன்.



On 9/11/08, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:


-~----------~----~----~----~------~----~------~--~---


வேந்தன் அரசு

unread,
Sep 12, 2008, 11:03:50 AM9/12/08
to minT...@googlegroups.com


2008/9/11 Kumaran Malli <kumara...@gmail.com>

வரட்டுத்தனம் இல்லை என்று சொன்னதற்கு நன்றிகள் ஐயா. தட்டுப்பிழையாக இருந்து நான் இப்படி கேட்டதால் மனம் வருந்தியிருந்தால் சீறி அருளாதீர்கள்.

 
அப்படி எல்லாம் இல்லை குமரன்
 
>>வரட்டு கவுரவம் பார்க்காமல் நீங்க சொல்லுவதை ஏத்துக்குறேன்.(:
 
 வரட்டு, வறட்டு எது சரி?
ஒரு காட்டாக அந்த சொற்றொடர் எழுதினேன்

ஒரு கல் இரு கனி
 

Kumaran Malli

unread,
Sep 13, 2008, 11:23:26 PM9/13/08
to minT...@googlegroups.com

உடுக்கை இழந்தவன் கை - 12 (பாரி வள்ளலின் கதை)

"பெரியப்பா. சான்றோர்கள் மிகுந்திருந்ததால் மழை பொய்க்காமல் இருந்தது என்றீர்கள். இனி அவ்வாறு நடக்காது என்று நினைக்கிறீர்களா?"

"ஆமாம் சங்கவை. உன் தந்தை இல்லாத நாட்டில் இனி சான்றோர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் பாவம் இந்தப் பறம்பு நாடு தான் படாத பாடு படப் போகிறது.

எட்டாம் நாள் நிலவைப் போல் அரைவட்டமாக இருக்கும் குளங்கள் அழிந்து போவதைப் போல் முல்லைக்குத் தேர் தந்த பாரியின் நாடு அழிந்து போகப் போகிறது. ஐயோ பாவம்.

அறையும் பொறையும் அணந்த தலைய
எண்ணாட்டிங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
கூர்வேல் குவைஇய மொய்ம்பிற்
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே
"

"குளங்கள் அழிவது போல் நாடு அழியும் என்றீர்களே. ஏன் பெரியப்பா?"

"மகளே. உன் தந்தை ஏந்திய கூர்வேலைப் போல் கூர்மையுடைய பாறைகளும் சிறு குன்றுகளும் நிறைய தெளிந்த நீர்க்குளங்கள் புரப்பவர் இருக்கும் வரை தெளிந்த நீரக் கொண்டிருக்கும். காப்பாற்றுவார் இல்லாத பொழுது நீரில் பாசி படர்ந்து குளம் அழிந்து போகும். கூரிய வேலைத் தாங்கிய உன் தந்தையின் பாதுகாப்பை இழந்த இந்த தண்பறம்பு நாட்டிற்கும் அதே கதி தானே என்று ஏங்குகிறேன்"

"அப்பா இறந்தாலும் ஆள்வதற்கு வேந்தர்கள் இருக்கிறார்களே பெரியப்பா. அவர்களின் ஆட்சியில் பாதுகாப்புடன் இந்த நாடு இருக்குமே. அவர்களுடன் சேர்ந்து சான்றோர்களும் இருப்பார்களே. அதனால் பறம்பு நாட்டிற்கு அழிவொன்றும் நேராது பெரியப்பா"

"சங்கவை. உன் தந்தை முரசினையுடைய இந்த மூவேந்தர்களைக் காட்டிலும் மிகுதியாக இரவலர்களுக்கு வழங்கியவன். நிழலே இல்லாத நீண்ட நெடிய வழியில் நிழல் தரும் தனி மரம் போல் இருந்தவன். அவன் நீங்கிய பின் சான்றோர் இங்கே நில்லார். அவன் ஆளும் போது மழை பெய்து நின்றபின்னர் புளிமாங்காயை மோரில் சேர்த்துச் சமைத்த புளிங்கறியை ஆசையுடன் உண்டோம். சான்றோர் நீங்கியதால் மழையும் பெய்யாது. ஆசையுடன் உண்ட புளிங்கறியும் கிடைக்காது.

கார்ப்பெயல் தலைஇய காண்பின் காலைக்
களிற்று முக வரியில் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்னலைப் புளித்து
மென்றினை ஆணர்த்து நந்தும் கொல்லோ
நிழலின் நீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே
"

"பெரியப்பா. நீங்கள் சொல்லச் சொல்ல வருத்தம் கூடுகிறது. நாம் இங்கேயே இருந்துவிடலாமே. நான் பிறந்த இந்த நாட்டின் நிலை இனி மேல் இப்படி கெட்டுப் போகும் என்றால் அதனை நிகழாமல் செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நாம் இங்கேயே இருந்துவிடலாம் பெரியப்பா"

"அம்மா. உன் தந்தைக்கு நான் தந்த உறுதிமொழியை நீ அறிவாய். உங்கள் இருவருக்கும் தகுந்த மணாளர்களைத் தேடித் தானே நாம் இப்போது வடக்கு நோக்கி செல்கிறோம். நான் தந்த உறுதிமொழியை நானும் மீற முடியாது. உங்கள் தந்தையாரின் விருப்பத்தை நீங்களும் மீறமுடியாது. அதனால் நாம் தொடர்ந்து நம் வழியே செல்வோம்"

தொடர்ந்து வடக்கு நோக்கி நடக்கின்றனர். வேளிர் ஆளும் நிலங்களுக்கு எல்லாம் சென்று பாரி மகளிரை மணக்கும் படி கபிலர் வேண்டுகிறார். மூவேந்தர்களுக்கு அஞ்சி எல்லோரும் மறுத்துவிடுகின்றனர். இப்படியே ஒவ்வொரு நாடாக சென்று கொண்டிருக்கிறார்கள்.


***


பாடற்குறிப்புகள்:

இரண்டு பாடல்களும் பொதுவியல் திணையிலும் கையறுநிலைத் துறையிலும் அமைந்திருக்கின்றன. இரண்டும் கபிலர் பறம்பு நாட்டைப் பாடியது.

1. அறையும் பொறையும் என்று தொடங்கும் பாடல் புறநானூறு 118ம் பாடல்.

பொழிப்புரை: பாறையும் சிறு குன்றுகளும் நிறைந்த அஷ்டமி (எட்டாம் நாள்) திங்களைப் போல் வளைந்த கரையையுடைய தெளிந்த நீர்க் குளம் பாதுகாப்பார் இன்மையால் அழிவது போல் கூரிய வேலையேந்திய திரண்ட தோள்களைக் கொண்ட தேரினை முல்லைக்கு வழங்கிய வள்ளலாகிய பாரியின் தண்பறம்பு நாடும் அழியுமோ?

2. கார்ப்பெயல் என்று தொடங்கும் பாடல் புறநானூறு 119ம் பாடல்.

பொழிப்புரை: கார்காலத்து மழை பெய்து முடித்த பின்னர் யானையின் முகத்தில் இருக்கும் வரிகளைப் போல் தோன்றும் புளிமாங்காயின் பூக்கள் நிறைய பூக்க அந்த செம்மை மிகுந்த மரத்தில் விளைந்த காயை இனிய மோருடன் கூட்டிச் செய்த புளிங்கறியை மெல்லிய தினையுடன் சுவைத்த நாட்கள் குறைந்து போகுமோ? நிழலில்லாத நீண்ட வழியில் தனியாக நிற்கும் மரத்தைப் போல் பெரும்படையுடன் முரசினையும் உடைய வேந்தர்களை மிகுத்து இரவலர்களுக்கு ஈயும் வள்ளன்மை உடைய பாரியின் நாடும் அது போல் குறைந்து போகுமோ?

வேந்தன் அரசு

unread,
Sep 14, 2008, 5:11:52 PM9/14/08
to minT...@googlegroups.com
>அறையும் பொறையும் அணந்த தலைய
 
அறையும் பொறையும் மணந்த தலைய
 
மணந்த என்றால் கலந்த. 
கன்னாபின்னனை ஆகி இருக்கலாம்.
 
>செம்புற்று ஈயலின் இன்னலைப் புளித்து
மென்றினை ஆணர்த்து நந்தும் கொல்லோ

 
செம்புற்று ஈயலின் இன்னளைப் புளித்து
மென்தினை யாணர்த்து நந்தும் கொல்லோ

>இனிய மோருடன் கூட்டிச் செய்த புளிங்கறியை மெல்லிய தினையுடன்
 
ஈயலும் தயிரும் கலந்த செய்த புளிக்குழம்பு என்லாம்
 
யாணர்த்து = நுகர்ச்சி ??

Kumaran Malli

unread,
Sep 20, 2008, 8:49:25 AM9/20/08
to minT...@googlegroups.com

வேந்தன் அரசு ஐயா.

என்னுடைய தவறு தான். மூலத்தில் 'மணந்த' என்று தான் இருக்கிறது. உரைநூலும் பாறையும் சிறுகுவடும் கூடிய என்று தான் பொருள் சொல்கின்றது.

அதே போல் 119ம் பாடல் வரிகளும் நீங்கள் சொன்னது போலவே இருக்க வேண்டும்.

செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து

மென் தினை யாணர்த்து நந்தும் கொல்லோ
 
யாணர்த்து என்ற சொல்லிற்கு 'உடையது' என்று உரை நூல் பொருள் சொல்கிறது.

தவறுகளைத் திருத்தி உதவியதற்கு நன்றிகள்.

அன்பன்,
குமரன்.

2008/9/14 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

Kumaran Malli

unread,
Sep 20, 2008, 8:58:14 AM9/20/08
to minT...@googlegroups.com

உடுக்கை இழந்தவன் கை - 13 (பாரி வள்ளலின் கதை)

பாரி வள்ளல் மூவேந்தர்களின் சதியால் கொல்லப்பட்ட பின்னர் பாரியின் நண்பரான புலவர் கபிலரும் பாரி மகளிரான அங்கவையும் சங்கவையும் பறம்பு நாட்டிலிருந்து கிளம்பி பறம்பு நாட்டின் வடக்கிலிருக்கும் வேளிர்களால் ஆளப்படும் நாடுகளுக்குச் சென்றார்கள். ஒவ்வொரு நாடாகச் சென்று பாரி மகளிரை அறிமுகம் செய்து அந்த நாட்டை ஆளும் வேளிரிடம் அந்த மகளை மணம் செய்து கொள்ள கபிலர் வேண்டினார். மூவேந்தர்களுக்குப் பெண் தர மறுத்து அதனால் உயிர் இழந்த பாரியின் மக்களை மணம் கொண்டு மூவேந்தர்களின் சினத்திற்கு ஆளாக அந்த வேளிர் அரசர்கள் விரும்பவில்லை. சிலர் நேரடியாகவும் பலர் மறைமுகமாகவும் தங்கள் இயலாமையை கபிலரிடம் சொல்லிவிட்டனர். அப்படி ஒவ்வொரு நாடாக வரும் போது கபிலரும் பாரி மகளிரும் விச்சிக்கோ என்னும் வேளிர் அரசன் ஆளும் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். அரசவைக்கு அங்கவையையும் சங்கவையையும் அழைத்துக் கொண்டு வந்து அரசனுக்கு அறிமுகப்படுத்துகிறார் கபிலர்.

***

"மன்னவா. உன்னுடைய மலை மிகவும் குளிர்ச்சி உடைய மலை. மிகவும் உயர்ந்த மலை. நீ தாங்கிய வேலோ பகைவர்களின் ஊனை உண்டு நெருப்பு போல் ஒளி வீசும் தன்மை கொண்டது. பெரிய யானைகளை உடையவன் நீ. விச்சிக்கோவே. இந்தப் பெண்களைப் பற்றிக் கூறுகிறேன் கேள். நாத்தழும்பேறும் அளவிற்குப் பாடும் பாணர்களுக்குப் பல பரிசில்களைக் கொடுக்கும் வள்ளல்கள் உண்டு. அப்படி பாடாமல் போனாலும் நலிந்து நிற்கிறதே என்று முல்லைக்குத் தேர் தந்தானே பாரி அவனுடைய மக்கள் இவர்கள். நான் ஒரு புலவன்; அந்தணன். யான் உனக்குத் தர நீ இவர்களை மணம் முடித்துக் கொள்வாய். அவர்கள் தந்தை விரும்பியது போல் நீ வீரம் மிகுந்த வேளிர் குலத்தில் உதித்தவன். அதனால் இந்தப் பெண்களை மணக்கத் தகுதியுடையவன்.

பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந்துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி
மழை மிசை அறியா மால்வரை அடுக்கத்துக்
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடுவேல்
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே
இவரே பூத்தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத்தழும்பிருப்பப் பாடாதாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப்போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே
"

விச்சிக்கோன் கபிலரின் பாடலையும் வேண்டுதலையும் கேட்டு தன் அவையோருடன் கலந்து பின்னர் பாரி மகளிரை மணக்க மறுத்துவிட்டான். கபிலரும் மன வருத்தத்துடன் இருங்கோவேளின் ஊருக்குச் சென்று அவனிடம் பேசுகின்றார்.

"வாருங்கள் புலவரே. தங்களைப் பார்த்தால் பாணராகத் தெரியவில்லை. இந்தப் பெண்களைப் பார்த்தாலும் விறலியர்களாகத் தெரியவில்லை. தாங்கள் யார்? இங்கே வந்த காரியம் என்ன?"

"மன்னவா. இவர்கள் யார் என்று கேட்கிறாய். சொல்கிறேன் கேள். இரந்து வந்தவர்களுக்கு ஊர்களையே பரிசாகக் கொடுத்தவனும் வாடி நின்ற முல்லைக்கொடிக்குத் தன் தேரைத் தந்தவனும் என்றும் அழியாத புகழை உடையவனும் ஆன பறம்பு நாட்டரசன் பாரியின் மக்கள் இவர்கள். நான் அவர்களின் தந்தையின் தோழன். அதனால் அவர்கள் என் மக்களும் ஆவர். நான் ஒரு அந்தணப் புலவன். என் பெயர் கபிலன்"

"பறம்பு அரசர் பாரியின் மக்களா? மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இங்கே வந்ததன் நோக்கம் என்ன கபிலரே?"

"மன்னவா. நாற்பத்தொன்பது தலைமுறைகளுக்கு முன் துவரைப்பதியை ஆண்டு பெரும் புகழ் கொண்ட வேளிர்களின் வழி வந்தவனே. துவரையை ஆண்ட மாலின் வழி வந்த நீயும் புலியைக் கொன்று புலிகடிமால் என்று பெயர் பெற்றாய். வேளிர் குலத்திற்கு ஏற்பத் தேடி வரும் பாணர்களுக்கு எல்லாம் பரிசில்களை வாரி வழங்கும் வள்ளலே. இருங்கோவேளே. இந்தப் பெண்களை நான் இங்கே அழைத்து வந்த காரணத்தைக் கூறுகிறேன் கேள். இவர்கள் தந்தை பெரும் புகழ் கொண்ட வேளிர் குலத்துதித்தவர்க்கே இந்தப் பெண்களை மணம் முடித்துத் தர விரும்பினான். அவன் விரும்பிய படி பெரும் புகழ் கொண்ட வேளிர் குலத்தில் பிறந்த உனக்கு நான் தர இவர்களை நீ மணந்து கொள்ள வேண்டும்.

இவர் யார் என்குவை ஆயின் இவரே
ஊர் உடன் இரவலர்க்கு அருளி தேர் உடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை
படுமணி யானைப் பறம்பின் கோமான்
நெடுமா பாரி மகளிர் யானே
தந்தை தோழன் இவர் என் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே
நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை ஆண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங்கோவே
ஆண்கடன் உடைமையில் பாண் கடனாற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான் தர இவரைக் கொண்மதி வான் கவித்து
இருங்கடல் உடுத்த இவ்வையகத்து அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ வென் வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே
"

"ஐயனே. தாங்கள் சொல்வதெல்லாம் வியப்பாக இருக்கிறது. பாரி வள்ளல் வேந்தர்கள் சதியால் இறந்ததை அறிந்துள்ளேன். பாரி மன்னர் பெண் தர மறுத்ததால் படை எடுத்து பழி தீர்த்தனர் வேந்தர்கள் என்றும் அறிந்துள்ளேன். அந்தப் பெண்களை இன்று நீங்கள் என் அவைக்கு அழைத்து வந்திருப்பதைக் கண்டு என் மனம் துணுக்குறுகிறது. தங்களுக்குத் தகுந்த பதிலை என் அவை முன்னவர்களிடம் கலந்து கொண்டு தருகிறேன். அது வரை தாங்கள் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்"


***

பாடற்குறிப்புகள்:

இரு பாடல்களும் பாடாண் திணையிலும் (பாடப்படுபவரது பெருமைகளைக் கூறுதல்) பரிசில் துறையிலும் (பரிசை வேண்டிப் பாடுவது) அமைந்திருக்கின்றன.

1. பனிவரை நிவந்த என்று தொடங்கும் பாடல் கபிலர் விச்சிக்கோ வேளைப் பாடியது. புறநானூறு 200வது பாடல்.

பொழிப்புரை: குளிர்ந்த மலையின் மீது ஓங்கி வளர்ந்த பச்சை இலையையுடைய பலா மரத்தினது கனியைக் கவர்ந்து உண்ட கரிய விரலையுடைய கடுவன் (ஆண் குரங்கு) சிவந்த வாயையுடைய தன் மந்தியொடு (பெண் குரங்கு) விற்றிருக்கும். பார்க்கும் போது மலையின் உச்சி வெகு தூரத்தில் விளங்கும். மேகங்களும் இந்த மலையின் உச்சியை அறியாமல் மலையின் இடையில் தவழ்ந்து கொண்டிருக்கும் (மலை அவ்வளவு உயரமானது). ஆனால் அந்த மலை உச்சியில் மூங்கில்கள் முழைத்துப் பரவியிருக்கும். அப்படிப்பட்ட மலையை உடையவனே. பகைவர்களின் உடலைக் கிழித்ததால் பெற்ற நிணத்தை உண்டு அதனால் செருக்கிய நெருப்பினைப் போல் ஒளிவீசிச் சுடும் தலையையுடைய வேலை உடையவன் நீ. போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்டு கனல் வீசும் கடிய கண்களையுடைய யானைகளைக் கொண்டவன் நீ. ஒளி வீசும் மாணிக்கங்களைக் கொண்ட வளைந்த அணிகலன்களை உடைய விச்சிக்கோவே! இவர்கள், எப்போதும் பூக்கள் பூத்துக் குலுங்கும் முல்லைக் கொடி நாத்தழும்பேறும் படி பாடாது ஆயினும் ஒலிக்கும் மணிகளையுடைய பெரிய தேரினை கொழுகொம்பாகக் கொள்க என்று கொடுத்த எல்லாத் திசைகளிலும் பரந்து ஓங்கி நிற்கும் புகழை உடைய பாரி வள்ளலின் மகளிர். நான் பரிசினை வேண்டி வந்திருக்கும் பரிசிலன். அந்தணனும் ஆவேன். நீயோ தகுந்த போர் முறைகளால் பகைவரை தாழச் செய்யும் வாளினை உடையவன். உனக்கு நான் இவர்களைத் தர நீ மணம் கொள்வாய். சினத்தால் போர் செய்து அடங்காத பகையரசர்களை அடக்கும், அளவில்லாத விளைச்சலைத் தரும் நாட்டையுடைய தலைவனே!

கடுவன் மந்தியோடு மகிழ்ந்திருப்பதைப் போல் நீ இந்தப் பெண்களுடன் மகிழ்ந்து இருக்கலாம் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

முகம் என்ற சொல் வடசொல் என்றும் தமிழில் அந்தச் சொல் இல்லை என்றும் சிலர் கூறக் கேட்டுள்ளேன். இங்கே செம்முகம் என்ற சொல் பயின்று வந்துள்ளது. அதனால் இது சங்ககாலத்திலேயே இருந்த தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.

2. இவர் யார் என்குவை என்று தொடங்கும் பாடல் கபிலர் இருங்கோவேளைப் பாடியது. புறநானூறு 201வது பாடல்.

பொழிப்புரை: இவர் யார் என்று வினவுவாய் ஆயின், இவர்கள், இரப்பவர்களுக்கு ஊர்களையே உடனே அருளி தேரினை முல்லைக்கு உடனே தந்து என்றும் மறைந்து போகாத நல்ல புகழை உடைய ஒலிக்கும் மணிகளைக் கழுத்தில் அணிந்த யானைகளை உடைய பறம்பு நாட்டின் தலைவனும் நெடியவனும் ஆன பாரியின் மகளிர். நான் இவர்கள் தந்தையின் தோழன்; அதனால் இவர்கள் என் மகளிரும் ஆவர். அந்தணனும் புலவனும் ஆகிய நான் இவர்களைக் கொண்டு வந்தேன். நீயோ வடதிசையில் ஒரு முனிவருடைய வேள்வித்தீயில் தோன்றி உயர்ந்த நெடிய செம்பினால் ஆனது போன்ற மதிலை உடைய துவரைப் பதியை என்றும் குறையாத ஈகைக் குணத்துடன் ஆண்டவர்களின் வழியில் நான்பத்தொன்பது தலைமுறைக்குப் பின்னர் வந்திருக்கும் வேளிர்களில் சிறந்த வேளே! வெற்றியைத் தரும் போரினைச் செய்யும் அண்ணலே! தார் என்னும் மலர் மாலையை அணிந்த யானைகளை உடைய பெரிய இருங்கோவே! உன்னுடைய ஆண்மைக்கு ஏற்ற கடமையாக பாணர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எப்போதும் செய்து, தழைந்த மாலைகளைச் சூடிய புலிகடிமாலே! நான் தர இவர்களை மணம் கொள்வாய்! வானத்தால் கவிழப்பட்டும் பெரும்கடல்களால் ஆடையைப் போல் சூழப்பட்டும் இருக்கும் இந்த உலகத்தில் அருமையான வலிமையையுடைய பொன்விளைக்கும் மிக உயர்ந்த மலைக்குத் தலைவனே1 வெற்றி வேலுடன் பகைவர்கள் நடுங்கும் படையைக் கொண்ட கேடில்லாத நாட்டினை உடைய தலைவனே!

இரு பாடல்களிலும் 'நான் புலவன். பரிசிலன். அந்தணன்' என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் கபிலர். பெண் கேட்டு வரும் போது அதனை ஏற்றுப் பெண் கொடுப்பது முறையாக அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது. அந்த முறையை மீறி இப்போது தானே வந்து பெண்களைத் தருகிறேன்; பெற்றுக் கொள் என்று வேண்டி நிற்பதால் இது பரிசில் துறை ஆயிற்று. அப்படிப் பரிசில் வேண்டுவதால் தன்னைப் பரிசிலன் என்றும் புலவன் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். வேறெங்கும் அந்தணன் என்று சொல்லாமல் 'பெண் கொடுக்கிறேன். கொண்மதி' என்னும் போது மட்டும் தன்னை அந்தணன் என்று சொல்வதைப் பார்த்தால் 'அந்தணர் தர மன்னர் பெறுதல்' முறையுடையது என்ற குறிப்பைத் தருகிறதோ என்று தோன்றுகிறது. இங்கே அந்தணன் என்பது குணத்தால் வந்ததா பிறப்பால் வந்ததா என்ற குறிப்பு இல்லை. பலரும் பிறப்பால் வந்த பெயர் என்றே பொருள் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாம் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் துவரைப்பதி கருநாடகத்திலிருக்கும் துவாரசமுத்திரம் என்று சிலரும் துவாரகை என்று சிலரும் பொருள் கொள்கிறார்கள். தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் 'துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதிணென்மரையும் பதிணென்குடி வேளிர் உள்ளிட்டோரையும் கொண்டு போந்து' என்றும் 'மலையமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதிணென்வகைக் குடி பிறந்த வேளிர்' என்றும் சொல்லுபவை இந்த இரு வகைக் கருத்துக்கும் துணை நிற்கிறது. துவரைப் பதி துவாரகை தான் என்று எண்ணுபவர்கள் நச்சினார்க்கினியர் சொல்லும் 'நிலங்கடந்த நெடுமுடியண்ணல்' வாமன திரிவிக்கிரம அவதாரத்தில் உலகை அளந்தவனாகக் கூறப்படும் மாயோனாகிய கண்ணன் என்று பொருள் கொள்கிறார்கள். கண்ணனின் வழி வந்தவர்களே வேளிர்கள் என்ற கருத்து அவர்களுடையது. துவரைப்பதி துவாரசமுத்திரம் என்று எண்ணுபவர்கள் நச்சினார்க்கினியர் கூறும் 'நிலம் கடந்தவர்' அகத்தியர் என்று பொருள் கொள்கிறார்கள். வடக்கிலிருந்து அகத்தியரால் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள் வேளிர்கள் என்று இவர்கள் கருதுகிறார்கள். வேளிர் குடியினர் வேந்தர் குடியினரை விட காலத்தால் மூத்தவர்கள் என்ற செய்தியைக் கொண்டு பார்க்கும் போது இந்த இருவிதமான கருத்தும் சுவையாக இருக்கின்றன.

வேந்தன் அரசு

unread,
Sep 20, 2008, 9:01:42 AM9/20/08
to minT...@googlegroups.com
குமரன்
 
பள்ளிகாலத்தில் நம் விடைத்தாள்களை பார்த்து எழுதுபவரால் சில நன்மைகளும் உண்டு அல்லவா.
 
நாம் செய்த சிறு த்வறுகளை அவர்கள் சுட்டிகாட்டுவார்கள்
 


 
2008/9/20 Kumaran Malli <kumara...@gmail.com>

Kumaran Malli

unread,
Sep 20, 2008, 9:04:44 AM9/20/08
to minT...@googlegroups.com
அப்படி என்றால் இங்கே எனக்கு நடப்பது தேர்வு என்று சொல்கிறீர்கள். அது சரி தான். ஆனால் நீங்களும் இங்கிருக்கும் மற்ற அறிஞர்களும் விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியர்கள் என்று நினைக்கிறேன். இந்தத் தொடர் நிறைவு பெற்ற பின்னர் நான் தேறினேனா இல்லையா என்று நீங்கள் எல்லோரும் சொல்லவேண்டும். :-)

2008/9/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Sep 20, 2008, 9:09:22 AM9/20/08
to minT...@googlegroups.com


2008/9/20 Kumaran Malli <kumara...@gmail.com>

அப்படி என்றால் இங்கே எனக்கு நடப்பது தேர்வு என்று சொல்கிறீர்கள். அது சரி தான். ஆனால் நீங்களும் இங்கிருக்கும் மற்ற அறிஞர்களும் விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியர்கள்
 
 
ஹி ஹீ
 
நான் தான் உங்கள் தாளை பார்த்து எழுதும் அந்த மாணவன்
 
(ஆசிரியர் கேள்வி கேட்கையில் அவர்/ என் தாளை பார்த்து (தலை கவிழ்ந்து) நின்றவனும் நானே)

Narayanan Kannan

unread,
Sep 20, 2008, 9:19:14 AM9/20/08
to minT...@googlegroups.com
On 9/20/08, Kumaran Malli <kumara...@gmail.com> wrote:
>
> நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
> செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
> உவரா ஈகைத் துவரை ஆண்டு
> நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
> வேளிருள் வேளே விறற்போரண்ணல்
> தாரணி யானைச் சேட்டிருங்கோவே
> ஆண்கடன் உடைமையில் பாண் கடனாற்றிய
> ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்


முக்கியமான தடயம் கிடைத்திருக்கிறது!

நம்மாழ்வார் "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன்" என்று
சொல்வதற்கு மேலும் பொருள் கூடுகிறது.

நீங்க பரீட்சையிலே பாஸ் :-))

கண்னன்

வேந்தன் அரசு

unread,
Sep 20, 2008, 9:21:13 AM9/20/08
to minT...@googlegroups.com
"அருங்குரைய" என்ற சொல்லின் சரியான பொருள்?

புலிகடிமால் எனறதால் மால் என்பது கண்ணனின் பெயர். எனவே இது குஜராத் துவரை யாக இருக்கவேண்டும்.

இந்த 49 என்ற எண் உதைக்கிறது. தமிழர்களுக்கு 49 மிக பிடித்தமான எண்.
 
ஒரு தலைமுறைக்கு 30 ஆண்டுகள் கொண்டால் 49 X 30 =  1470. சங்க காலத்துக்கு 1500 ஆண்டுகள் முந்தி என்றால் சிந்து நாக்ரிக காலமாக இருக்கலாம்.
 
குஜராத் சிந்துவெளியின் ஒரு பகுதிதானே.
 
 
--

வேந்தன் அரசு

unread,
Sep 20, 2008, 10:42:44 AM9/20/08
to minT...@googlegroups.com


2008/9/20 Narayanan Kannan nka...@gmail.com



நீங்க பரீட்சையிலே பாஸ் :-))
 
இனி என்ன குமரன். !பாஸே சொல்லிட்டார். நீங்க பாஸ்னு

--

Narayanan Kannan

unread,
Sep 20, 2008, 6:05:10 PM9/20/08
to minT...@googlegroups.com
> இனி என்ன குமரன். !பாஸே சொல்லிட்டார். நீங்க பாஸ்னு
> --

வேந்தரே!

சங்கத்தில் நீங்கள் அல்லவோ பாஸ் ;-)
துவரம்பதி பற்றி ஓர் ஆய்வாளரை சமீபத்தில் சென்னையில் சந்தித்தேன். அவர்
தந்த வெளியீடுகளை மீண்டும் வாசித்து ஒத்த தகவல் இருந்தால் தருகிறேன்.
ஜேப்பி சொன்ன சங்கத்தலைவன் கண்ணன் என்பதற்கு எந்த ஆதாரமும் கை வசமில்லை.
தமிழ்.வலையில் தேடினால் அவரது இடுகை கிடைக்கலாம்.
உங்கள் கணக்கும் சுவாரசியமாக உள்ளது. 49 தலைமுறைகளில் சிந்து மக்கள்
எப்படித் தென்னகம் வந்தனரோ அதே போல் ஜெர்மனிவரை போயிருப்பதாக ஒரு
விரிவுரை ஜெர்மனியில் கேட்டுள்ளேன்.

கண்ணன்

Kumaran Malli

unread,
Oct 15, 2008, 7:20:48 PM10/15/08
to minT...@googlegroups.com

உடுக்கை இழந்தவன் கை - 14 (பாரி வள்ளலின் கதை)

'பெரியப்பா. வெகு நாட்களாக இந்த ஊரில் தங்கியிருக்கிறோமே. ஏன்?'

'சங்கவை. நானும் அதைப் பற்றி தான் வியந்து கொண்டிருக்கிறேன். அவை முன்னவர்களிடம் கலந்து கொண்டு நமக்கு ஒரு பதிலைத் தருவதாகச் சொன்ன இருங்கோ வேள் இத்தனை நாளாகியும் நம்மை அழைத்து ஒரு விடையும் சொல்லவில்லை. பதில் சொல்லாமல் இருப்பதைப் பார்த்தால் இவனும் தயங்குகிறான் என்றே தோன்றுகிறது. நாளை காலை நான் மட்டும் அரசவைக்குச் சென்று அவனைப் பார்த்துவர எண்ணியிருக்கிறேன்'.

'சரி பெரியப்பா'.

***

இருங்கோவேள் தனியே இருக்கும் போது அவனைக் காண முயன்று தோற்ற கபிலர் அவையில் அவன் இருக்கும் போது அவைக்குள் வருகிறார்.

கபிலரைக் கண்ட இருங்கோவேளின் முகம் களையிழக்கிறது. அவையில் நுழைந்த புலவரை வருக என்று வரவேற்காமல் அவை அலுவலில் ஈடுபட்டவனைப் போல் வேறு திசை நோக்கிப் பேசிக் கொண்டிருக்கிறான்.

'ஹும். இவனாவது பாரி மகளிரை மணந்து கொள்வான் என்று எண்ணினேன். ஆனால் இவனோ வேண்டி வந்ததைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தினான். அப்படிக் காலம் தாழ்த்தியதிலேயே இவனுடைய எண்ணத்தைப் புரிந்து கொண்டு சென்றிருக்கவேண்டும். அப்படி சென்றிருந்தால் இப்போது இங்கே வந்து இப்படி அவமானப்பட வேண்டியிருக்காது.'

"வேளிர் தலைவா"

இப்படி கபிலர் நேரடியாக விளித்த பின்னர் கவனிக்காமல் இருக்க இருங்கோவேளால் முடியவில்லை.

"ஓ. கபிலரா. வருக வருக"

"மன்னா. வழி வழியாக வரும் செல்வத்தைக் கொண்டிருக்கிறாய் நீ. பார்வைக்குப் புலியைப் போல் தோன்றும் பாறைகளை உடைய மலையை உடையவன் நீ. உன்னிடம் வந்து இவர்கள் பெரும்வள்ளலாம் பாரியின் மக்கள் என்று சொல்லி யாசித்த என் அறிவின்மையை பொறுத்துக் கொள்வாய்.

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல் ஏறு
கடறுமணி கிளரக் சிதறு பொன் மிளிரக்
கடிய கதழு நெடுவரைப் படப்பை
வென்றி நிலைஇய விழுப்புகழ் ஒன்றி
இருபாற் பெயரிய உரு கெழு மூதூர்க்
கோடி பலவடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள் இனி
நுந்தை தாய நிறைவுற எய்திய

ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல்
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை
இகழ்ந்ததன் பயனே இயல் தேர் அண்ணல்
எவ்வி தொல் குடிப் படீஇயர் மற்றிவர்
கைவண் பாரி மகளிர் என்ற என்
தேற்றாப் புன்சொல் நோற்றிசிற் பெரும
விடுத்தனென் வெலீஇயர் நின் வேலே அடுக்கத்து
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டொள் வீ தாயது உறுகல்
இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
பெருங்கல் வைப்பின் நாடு கிழவோயே.


இப்போது நான் விடைபெறுகிறேன். நின் வேல் வெல்லட்டும்".

***

பாடற்குறிப்பு:

இப்பாடல் பாடாண் திணையிலும் பரிசில் துறையிலும் அமைந்திருக்கிறது. கபிலர் இருங்கோ வேளைப் பாடியது. புறநானூறு 202வது பாடல்.

இப்பாடலில் சில வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறுகிறார் கபிலர். அவை என்ன என்று சங்க இலக்கியங்களைத் தேடினால் கிடைக்கலாம். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பொழிப்புரை:

வெட்சிப்பூவைச் சூடிய காட்டில் வாழும் வேடுவர்கள் விரட்டிக் கொண்டு வர புகலிடம் தேடி எல்லாத் திசைகளிலும் ஓடும் மாடுகள் தங்கள் கழுத்தில் சூடிய மணிகளிலிருந்து பெரும் ஓசை கிளம்பவும் தங்கள் உடலில் சூடிய பொன்னணிகள் பல இடங்களில் சிதறவும் விரைந்து ஓடும் படி அமைந்திருக்கும் நெடிய மலைப் பக்கம். அந்த மலையில் வெற்றியென்பது என்றும் நிலை பெற்ற சிறந்த புகழ் பொருந்திய சிற்றரையம் பேரரையம் என்று இருபகுதியாகப் பெயர் பெற்ற பகுதிகள் கொண்ட பழைய மூதூர். அந்த ஊரில் பல கோடியாக அடுக்கப்பட்டப் பொன்னை உனக்கு உதவும் அரையத்தின் கேட்டை இனி கேட்பாய்.

உனக்கு வழி வழியாக உன் தந்தையின் மூலமாக வந்த செல்வ நிறைவைப் பெற்ற தழைத்த மாலையையுடைய புலிகடிமாலே! அந்த அரையம் கெடுதற்குக் காரணத்தைக் கேட்பாய். உன்னையொக்கும் அறிவை உடைய உன்னவருள் ஒருவன் புகழப்பெற்ற செய்யுளையுடைய கழாஅத்தலையரென்னும் புலவரை உண்டான பயனே அது. நன்கு செய்யப்பட்ட தேரினை உடைய தலைவா! இவர்கள் எவ்வியினுடைய பழைய குடியில் பிறந்தவர்கள். அப்படியிருக்க இவர்களைப் பெரும் வள்ளலான பாரியின் மகளிரென்று உன்னிடம் சொல்லிய தெளியாத என் புன் சொல்லைப் பொறுப்பாயாக. பெருமானே! உன்னிடம் இருந்து விடை பெறுகிறேன். நின் வேல் வெல்லட்டும். மலையில் அரும்பே இல்லாமல் எல்லா மலர்களும் மலர்ந்து நிற்கும் கரிய காலையுடைய வேங்கைமரத்தின் ஒளிவீசும் பூவானது உதிர்ந்துக் கிடக்கும் கல் பார்ப்பதற்கு வரிகளைக் கொண்ட பெரும்புலியைப் போல் தோன்றும். அப்படித் தோன்றும் பாறைகளைக் கொண்ட மலைநாட்டிற்கு உரியவனே!

விளக்கம்:

வெட்சியைச் சூடி ஒரு அரசனின் படை வீரர்கள் இன்னொரு அரசனின் எல்லைக்குள் சென்று அந்தப் பகையரசனின் மாடுகளை விரட்டி கவர்ந்து வருதல் வெட்சித் திணையின் பகுதி. இந்தப் பாடலின் தொடக்கத்தில் கானத்து வேடுவர்கள் வெட்சி அணிந்து கடமா நல்லேற்றை விரட்டுகிறார்கள் என்று சொன்னதைப் படித்தால் முதலில் அது இருங்கோவேளைப் புகழ்வது போல் தோன்றுகிறது. ஆனால் பாடலின் மற்ற பகுதிகளைப் பார்த்தால் பகையரசனின் படைகள் இருங்கோவேளின் எல்லைக்குள் வந்து மாடுகளை விரட்டுவதைச் சொல்கிறாரோ என்று தோன்றுகிறது.

அந்த மலைப்பக்கத்து இது வரை வெற்றி என்பது நிலையாக நின்றதும் உனக்கு கோடிப்பொன் உதவியதும் ஆன அரையம் கொண்ட மூதூர் இனி வெற்றியை இழந்து கெட்டுப் போகும் என்று சொல்கிறார். அதற்குக் காரணம் உன்னவரில் ஒருவன் முன்பு இன்னொரு புலவரை அவமதித்தது போல் நீ என்னை அவமதித்தது என்கிறார்.

உனக்குக் குடிப்பெருமை மட்டுமே தான் இருக்கிறது; உன் சொந்த முயற்சியால் பெற்ற செல்வம் எதுவும் இல்லை என்ற இகழ்ச்சி தோன்ற 'உன் தந்தையின் வழி வந்த செல்வம் உனக்கு நிறைவாக இருக்கிறது' என்கிறார்.

வேங்கைமரத்தின் உதிர்ந்த பூக்கள் கொண்ட பாறைகள் பார்ப்பதற்கு வரிகளைக் கொண்ட புலியைப் போல் காட்சி தருகின்றது என்று சொன்னதும் 'பார்வைக்கு மட்டுமே நீ புலி' என்று இகழ்ச்சி தோன்றக் கூறுவதாகத் தோன்றுகிறது.

Kumaran Malli

unread,
Feb 26, 2009, 1:18:45 PM2/26/09
to minT...@googlegroups.com

உடுக்கை இழந்தவன் கை - 15 (பாரி வள்ளலின் கதை)

‘எத்தனை ஊர்களுக்குத் தான் செல்வது? வீரர்கள் என்றும் வள்ளல்கள் என்றும் பெரும் புகழ் கொண்ட இந்த வேளிர்கள் எல்லாம் வேந்தர்களின் பொல்லாப்பு நமக்கெதற்கு என்று அரசவையினர் கூறும் அறிவுரையை ஏற்றுக் கொண்டும் வேந்தர்களுக்குப் பெண் கொடுப்பது வேளிர்களின் வழக்கம் தானே; பின் ஏன் பாரி வேள் பெண் தர மறுத்தான் என்று கேள்வி கேட்டும் பாரிமகளிரை மணக்க மறுக்கின்றனர்.

எங்கும் நிறைந்த இறையே. என் நண்பன் பாரி சென்ற வழியே நானும் செல்ல மனம் துடிக்கின்றது. அவனுக்குத் தந்த வாக்கினை மட்டும் நிறைவேற்றிவிட்டேனென்றால் போதுமே. பிரிவெனும் துயரைத் துடைத்து எறிந்து விடலாமே. அதற்கு ஒரு வழி காட்ட மாட்டாயா?

இன்னும் ஓரிரு வேளிர்கள் தான் இத்தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களிடமும் சென்று என் மக்களை மணக்கக் கேட்கிறேன். அவர்களும் மறுக்காமல் இருக்க நீயே அருள் புரியவேண்டும்'

அருகில் அமைதியாக படுத்திருக்கும் அங்கவை, சங்கவை இருவரையும் பார்த்தபடியே மனத்தில் இறையை வேண்டிக் கொள்கிறார் கபிலர். பெண்ணையாற்றங்கரையில் இருக்கும் மலையமானின் இந்நகரத்திற்கு வந்த பின் இங்கிருக்கும் சத்திரத்தில் தரப்பட்ட உணவை ஏற்றுக் கொண்டு அங்கேயே தங்கியிருக்கிறார்கள் மூவரும். இந்த முறை தான் மட்டும் தனியே அரசவைக்குச் சென்று மலையமானைப் பற்றி முதலில் நன்கு தெரிந்து கொண்டு பின்னரே தன் ஆவலை வெளியிட வேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறார் கபிலர்.

***

'இன்றைக்கு நல்ல நாளாக இருக்கிறது. இன்றே மலையன் அவைக்குச் சென்று அவனைப் பாடுவோம்.

அடடா. இதென்ன புள் நிமித்தம் தடுக்கின்றதே. இன்றைக்குச் செல்ல வேண்டாமோ? பல முறை பெற்ற தோல்வியே நம் மன உறுதியைக் குலைக்கும் புள் நிமித்தமாக நின்று தடுக்கின்றதோ? இருக்கலாம். உள்ளே இருப்பவை தானே வெளியே தென்படுகின்றன. இந்தப் புட்கள் நின்று தடுத்தாலும் இன்றே மலையமானைச் சென்று பார்ப்போம். இனி மேலும் இந்தப் பெண்களின் துயரத்தைக் கண்டு கொண்டிருக்க முடியாது'

'மாளிகை வாசலுக்கு வந்துவிட்டோம். இதென்ன புலவர்களின் பெரும் கூட்டம். இன்றைக்கு ஏதேனும் முக்கியமான நாளா? மலையனின் பிறந்த நாளோ? அவன் ஏதேனும் போரில் வென்று வெற்றி விழா கொண்டாடுகின்றானா? நகரத்தில் எந்த வித கொண்டாட்டமும் தென்படவில்லையே. மாளிகை வாசலில் மட்டும் ஏன் இந்தக் கூட்டம்?

ம்ம்ம். அருகில் வந்துப் பார்த்தால் இவர்களில் பலர் புலவர்கள் இல்லை போலிருக்கிறதே. ஏதேனும் பரிசு பெற்றுச் செல்ல வந்திருக்கும் வறியவர்கள் போல் தான் இருக்கிறார்கள்'.

"காவலர்களே. இன்று ஏதேனும் முக்கிய விழாவா? மாளிகை வாசலில் இவ்வளவு பேர் நிற்கின்றார்களே"

"ஐயா. இது நாள்தோறும் காணும் காட்சியே. நம் அரசர் பெருமான் வேண்டும் என்று கேட்டு வந்தோருக்கெல்லாம் வாரி வாரி வழங்கும் வள்ளல் பெருமான். ஒவ்வொரு நாளும் அவரை வந்துப் பார்த்து ஏதேனும் இரந்து பெறுபவர்களும் உண்டு; அவரைப் பாடிப் பரிசில் பெறுபவர்களும் உண்டு"

'நாள்தோறும் காணும் காட்சியா? பரவாயில்லையே?! பாரியின் மாளிகை வாசலில் ஏதேனும் முக்கிய நாட்களில் மட்டும் தான் இவ்வளவு கூட்டம் கூடும்'

"புலவர்களும் இரவலர்களும் தனித்தனியே மன்னனைக் காண்பார்களோ?"

"இல்லை ஐயா. அனைவருமே ஒன்றாகத் தான் உள்ளே செல்வார்கள். அனைவருக்கும் பரிசு உண்டு"

"யார் எவர் என்று கூட பார்ப்பதில்லையா?"

"இல்லை ஐயா. எந்த வித வேறுபாடும் இல்லை. அனைவருக்கும் ஒரே மரியாதை தான்"

'என்ன இது? காவலர்கள் சொல்வதைப் பார்த்தால் மலையனிடம் கற்றவருக்கும் மற்றவருக்கும் ஒரே மரியாதை தான் போலிருக்கிறதே? இது தவறல்லவா? இவன் பரிசினை வழங்கி வள்ளல் என்ற பெயரைப் பெறும் நோக்கம் மட்டுமே கொண்டவனோ? தமிழையும் புலமையையும் மதிக்காதவனோ? இது என்ன கொடுமை?'

"காவலரே. நான் ஒரு தமிழ்ப்புலவன். பெயர் கபிலன். நானும் மன்னனைக் கண்டு பரிசில் பெற வந்திருக்கிறேன்"

"மகிழ்ச்சி ஐயா. நல்ல இடத்திற்குத் தான் வந்திருக்கிறீர்கள். இதோ வரிசையில் நில்லுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் மாளிகை வாசலைத் திறப்பார்கள். அவைக்குச் சென்று மன்னரைக் காணலாம்"

கபிலர் வரிசையில் சென்று நிற்கிறார். புலவர்களும் வறியவர்களும் ஒரேயடியாகக் குழுமி இருக்கும் அந்த இடம் இரைச்சலாக இருக்கிறது. நான் முன்னே நான் முன்னே என்று ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். வாசற்கதவு திறந்ததும் அனைவரும் உள்ளே நுழைய முயன்று நெருக்கிக் கொள்கிறார்கள்.

உள்ளே அரசவையில் அவையினருடன் மன்னன் அமர்ந்திருக்கிறான். அவைக்காவலர்கள் வந்தவர்களை ஒழுங்குப்படுத்தி ஒவ்வொருவராக மன்னவனிடம் அனுப்புகிறார்கள்.

உள்ளே சென்ற ஒவ்வொருவருக்கும் பரிசு கிடைக்கின்றது. புலவர்கள் என்றால் அவர்கள் பாடி முடிக்கும் வரை கேட்டுவிட்டுப் பின்னர் பரிசு கொடுக்கிறான் மலையன். மற்றவர் என்றால் அவர்கள் வாழ்த்தி முடித்த உடனே பரிசு கிடைக்கின்றது. பலர் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். சிலர் நினைத்தது கிடைக்காமல் மன வருத்தத்துடன் செல்கின்றனர்.

"மன்னவர் வாழ்க. திருக்கோவலூர் மலையமான் வாழ்க.

மன்னவா. நான் ஒரு தமிழ்ப்புலவன். பெயர் கபிலன். அந்தணன். உன்னைப் பாட வந்திருக்கிறேன். "

"மிக்க மகிழ்ச்சி புலவரே"

"நாள் அன்று போகிப் புள் இடைத் தட்பப்
பதன் அன்று புக்குத் திறன் அன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொளப்
பாடான்று இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையற் பாடியோரே
"

"நல்ல பாடல் புலவரே. தங்களுக்கு ஒரு தேரை வழங்குகிறேன்"

"திருமுடிக்காரி. நான் தேரினை வேண்டி வந்தேன் என்று நினைத்தாயா? அவரவர் தகுதி அறிந்து அவரவர் வேண்டியதை வழங்குவது தானே முறை. அப்படியின்றி வருவோர்களுக்கெல்லாம் அவர்களின் தகுதியினைக் கருத்தில் கொள்ளாமல் மனம் போன போக்கில் வழங்குவது தகுமா?

ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மா வண் தோன்றல்!
அது நன்கு அறிந்தனை ஆயின்
பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!"


"ஐயனே. மிகப்பெரும் உண்மையைச் சொன்னீர்கள். வேளிர்கள் என்றாலே வள்ளல்கள் என்று வழிவழியே வரும் பெயருக்கேற்ப நடந்து கொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வருபவர்களின் வரிசை அறியாமல் ஈந்து வந்தேன். இன்றைக்கு ஒரு நல்லுரையைக் கூறி நல்லறிவு புகட்டினீர்கள்"

"மன்னவா. இது நான் சொல்லும் அறிவுரை மட்டும் இல்லை. பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அது நோக்கி வாழ்வார் பலர் என்று பொய்யாமொழியும் சொல்கிறதே"

"கற்றபின் நிற்க மறந்துவிட்டேன். கற்றலினும் கேட்டல் நன்று என்று எனக்காகத் தான் சொன்னார்களோ.

தாங்கள் ஒரு பெரும் புலவர் என்று நினைக்கிறேன். தங்களைப் பற்றி மேலும் அறிய விழைகிறேன்"

"மன்னவா. முன்னரே சொன்னது போல் நான் ஒரு தமிழ்ப்புலவன். அந்தணன். பெயர் கபிலன். அகத் திணைகளில் குறிஞ்சித் திணையில் நிறைய பாடல்கள் இயற்றியிருக்கிறேன்"

"ஐயனே. நீங்கள் தான் குறிஞ்சிக்குப் புகழ் தந்த கபிலரா? இறையனாரும் முருகப்பெருமானும் கட்டிக் காத்த தமிழ்ச்சங்கத்தில் முதன்மை பெற்று இருப்பவர் தாங்கள் தானா? என் குலக்கடவுள் மாயோனின் திருவருளால் நீங்கள் என் மாளிகைக்கு வந்தீர்கள். உங்கள் பெருமை அறியாமல் நடந்து கொண்ட சிறியேனை மன்னிக்க வேண்டும்.

புலவர் பெருமானே. இந்த ஆசனத்தில் அமர வேண்டும்."

அவன் தந்த ஆசனத்தில் அமர்ந்தார் கபிலர்.

"மன்னவா. சிலர் எத்தனை முறை சொன்னாலும் நல்லவற்றைக் கேட்க மாட்டார்கள். நீ ஒரு முறை சொன்னவுடனேயே புரிந்து கொண்டாய். கூர் மதி படைத்தவன் நீ. என்னை மட்டுமின்றி இனி இங்கே வரும் எல்லோரையும் அவரவர் தகுதி அறிந்து அவர்களைப் பெருமை செய்வாய். அதனால் உன் பொருளும் புகழும் குலமும் வளரும்"

"அப்படியே செய்கிறேன் ஐயனே. தாங்கள் என்னிடம் பரிசில் பெற வந்ததாகத் தெரியவில்லை. என்னை நோக்கி வந்த காரணத்தைச் சொல்லி அருளுங்கள்"

"மலையமான். உன்னுடைய குலத்திற்குத் தகுந்த குலம் பாரி வள்ளலின் குலம். அந்தப் பாரிவேள் எனது நெருங்கிய தோழன். அவனது மக்கள் இருவரையும் நீ மணந்து கொள்ள வேண்டும்"

"ஐயனே. நானோ சிறியவன். எனக்கு எது நன்மை தரும் என்பதை சான்றோராகிய நீங்களே அறிவீர்கள். தங்கள் ஆணைப்படியே நடந்து கொள்கிறேன்"

"திருமுடிக்காரி. பாரிவேள் மூவேந்தர்களுக்கு பெண் தர மறுத்து இறந்து பட்டதை நீ அறிவாய் தானே?"

"அறிவேன் ஐயனே. வேந்தர்களுக்குப் பெண் தரும் வழக்கம் வேளிர் நடுவே இருந்தாலும் தர மறுக்கும் வேளிர்களும் உண்டு. அவர்களின் குல வழக்கத்தை நான் மதிக்கிறேன். வள்ளல் பாரிவேளின் குல வழக்கமும் அப்படியே அமைந்தது போலும். அதனால் அவர் பெண் தர மறுத்திருக்கலாம். இப்போது தங்களின் ஆணைப்படி வேளிர்களின் ஒருவனான நான் அப்பெண்களை மணந்து கொள்கிறேன்"

"வேந்தர்களிடம் உனக்கு பயம் இல்லையா?"

"ஐயனே. பெண் கேட்பது அவர்கள் உரிமை. தர மறுப்பது பாரிவேளின் உரிமை. பெண் தரவில்லையாயின் ஒதுங்கிச் செல்வதே வேந்தர்களுக்கு அழகாக இருந்திருக்கும். அதனை மீறி அவர்கள் பறம்பு நாட்டின் மேல் படையெடுத்தார்கள். சூழ்ச்சியால் வென்றார்கள்.

பாரிவள்ளல் தங்களிடம் அவர் மக்களை அடைக்கலமாகத் தந்தார். என்னிடம் அப்பெண்களை மணக்க வேண்டுவது உங்கள் உரிமை. அதனை ஏற்றுக் கொள்வது என் கடமை. அதனால் வேந்தர்கள் வெகுண்டால் அவர்களுக்குத் தகுந்த பதிலை மலையமான் அளிப்பான். அதனை அவர்களும் அறிவார்கள். அவர்களின் சூழ்ச்சி என்னிடம் செல்லாது"

"மன்னவா. உன் வீரத்தைக் கண்டு மிக்க மகிழ்ந்தேன். விரைவில் ஒரு நல்ல நாளில் உனக்கும் பாரி மகளிருக்கும் திருமணம் நடைபெறும்"

"தங்கள் ஆணை ஐயனே"

“குலம், கல்வி, செல்வம் என்று எல்லா வகைகளிலும் தகுதியுடைய கிழத்தியை மேற்கூறிய எல்லா வகைகளிலும் சமமான தகுதிகள் உடைய கிழவனுக்கு மணமகளின் பெற்றோர் மகிழ்வுடன் தர மணமகளின் பெற்றோர் மகிழ்வுடன் அருகில் நிற்க நடக்கும் திருமணம் கற்பு மணம் என்று சான்றோர் சொல்லுவர். அப்படிப்பட்ட கற்பு மணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உங்கள் திருமணம் திகழட்டும்"

***

பாடற்குறிப்புகள்:

1. 'நாள் அன்று போகி' என்று தொடங்கும் பாடல் புறநானூற்றின் 124 ஆம் பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண்திணை (பாடப்பெறுபவரது பெருமைகளைக் கூறும் திணை); துறை: இயன்மொழி (உள்ளதை உள்ளபடியே கூறும் துறை).

பொழிப்புரை: நாள் நல்ல நாளாக அமையாமல், புள் நிமித்தம் இடையே நின்று தடுக்க, முறைப்படி மாளிகைக்குள் நுழையாமல், திறமையொன்றும் இல்லாமல் தகாத சொற்களைச் சொன்னாலும் வறுமையுடன் செல்லமாட்டார்கள், நெறிகளுடன் கூடிய இன்னிசையை எழுப்பிக் கொண்டு வீழும் அருவியை உடைய பெருமை பொருந்திய மலையை உடையவனைப் பாடியவர்கள்.

(கதையில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் இப்பாடலை அடிப்படையாகக் கொண்டே சொல்லப்பட்டன).

2. 'ஒரு திசை ஒருவனை' என்று தொடங்கும் பாடல் புறநானூற்றின் 121வது பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண்திணை. துறை: பொருண்மொழிக்காஞ்சி (நீதிநெறிகளைக் கூறும் துறை)

பொழிப்புரை: ஒரு திசையில் 'வள்ளல் என்றாலே இவன் தான்' என்று சொல்லும்படி விளங்கும் ஒருவனிடம் பரிசில் பெற நினைந்து நான்கு திசைகளில் இருந்தும் பரிசு பெற விரும்புபவர்கள் வருவார்கள். அவர்களின் தகுதிகளை அறிவது மிக அரிது. அவர்களுக்கு ஈதலோ மிக எளிது. பெரிய வள்ளல் தன்மை உடைய தலைவனே! தகுதியின் படி ஒருவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற நெறியினை நீ நன்கு அறிந்தாய் ஆயின் ஒரே தரமாகப் புலவர்களையும் பார்ப்பதை தவிர்ப்பாய்.

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2009, 5:17:46 PM2/26/09
to minT...@googlegroups.com
Excellent.
 
Thanks Kumaran

2009/2/26 Kumaran Malli <kumara...@gmail.com>
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
If truth is God then God is on my side.

Kumaran Malli

unread,
Feb 26, 2009, 6:27:55 PM2/26/09
to minT...@googlegroups.com
நன்றி ஐயா.

2009/2/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
Excellent.
 
Thanks Kumaran

Narayanan Kannan

unread,
Feb 26, 2009, 6:58:30 PM2/26/09
to minT...@googlegroups.com
2009/2/27 Kumaran Malli <kumara...@gmail.com>:

> அடடா. இதென்ன புள் நிமித்தம் தடுக்கின்றதே. இன்றைக்குச் செல்ல வேண்டாமோ? பல
> முறை பெற்ற தோல்வியே நம் மன உறுதியைக் குலைக்கும் புள் நிமித்தமாக நின்று
> தடுக்கின்றதோ? இருக்கலாம். உள்ளே இருப்பவை தானே வெளியே தென்படுகின்றன. இந்தப்
> புட்கள் நின்று தடுத்தாலும் இன்றே மலையமானைச் சென்று பார்ப்போம். இனி மேலும்
> இந்தப் பெண்களின் துயரத்தைக் கண்டு கொண்டிருக்க முடியாது'
>

ஏதோ மர்மமாக இருக்கிறதே! நல்நிமித்தம் இல்லாத போதும் கபிலன் சென்று அங்கு
வேண்டியதைப் பெறுகிறானே. இதன் ரகசியம் என்ன?

க.>

Kumaran Malli

unread,
Feb 26, 2009, 7:35:51 PM2/26/09
to minT...@googlegroups.com
அடுத்த வரியிலேயே விடை இருக்கிறதே ஐயா. நம் மனவுறுதி நன்கு இருக்கும் போது எல்லா நிமித்தங்களும் நன்றாகவே தெரிகின்றன. மனவுறுதி குறைவாக இருக்கும் போது எல்லா நிமித்தங்களும் தீயதாகவே தெரிகின்றன. அந்த மறைபொருள் தெரிந்திருந்ததால் கபிலர் பாரிமகளிரின் துயரமும் நண்பனுக்குத் தந்த வாக்கும் உந்தித் தள்ள முன்னேறிச் சென்று மன்னனைக் காண்கிறார். அங்கே தன் புலமையால் மன்னனைத் திருத்திப் பணிகொள்கிறார். சரி தானா? :-)

2009/2/26 Narayanan Kannan <nka...@gmail.com>

Narayanan Kannan

unread,
Feb 26, 2009, 7:43:58 PM2/26/09
to minT...@googlegroups.com
2009/2/27 Kumaran Malli <kumara...@gmail.com>:

> அடுத்த வரியிலேயே விடை இருக்கிறதே ஐயா. நம் மனவுறுதி நன்கு இருக்கும் போது
> எல்லா நிமித்தங்களும் நன்றாகவே தெரிகின்றன. மனவுறுதி குறைவாக இருக்கும் போது
> எல்லா நிமித்தங்களும் தீயதாகவே தெரிகின்றன. அந்த மறைபொருள் தெரிந்திருந்ததால்
> கபிலர் பாரிமகளிரின் துயரமும் நண்பனுக்குத் தந்த வாக்கும் உந்தித் தள்ள
> முன்னேறிச் சென்று மன்னனைக் காண்கிறார். அங்கே தன் புலமையால் மன்னனைத்
> திருத்திப் பணிகொள்கிறார். சரி தானா? :-)
>


அவ்வளவுதானா :-)
சரி, சரி இது பகுத்தறிவு பிரவச்சனமா? ;-)
இந்தப் புள் நிமித்தம் காட்சிக்கு எதை ஆதாரமாகக் கொள்கிறீர்கள்?

க.>

Kumaran Malli

unread,
Feb 26, 2009, 8:12:39 PM2/26/09
to minT...@googlegroups.com
'நாள் அன்று போகிப் புள் இடை தட்ப' என்று தொடங்கும் புறநானூறு 124வது பாடல் தான். இந்தப் பகுதியில் இந்தப் பாட்டும் இருக்கிறது.

2009/2/26 Narayanan Kannan <nka...@gmail.com>

Narayanan Kannan

unread,
Feb 26, 2009, 8:32:24 PM2/26/09
to minT...@googlegroups.com
2009/2/27 Kumaran Malli <kumara...@gmail.com>:

> 'நாள் அன்று போகிப் புள் இடை தட்ப' என்று தொடங்கும் புறநானூறு 124வது பாடல்
> தான். இந்தப் பகுதியில் இந்தப் பாட்டும் இருக்கிறது.
>

அப்படி வாங்க! சங்கத்தமிழன் நல் நிமித்தம் நல்லது செய்யும் என்று
நம்பினான் எனில் அப்படித்தான் கதைப்போக்கும் இருக்க வேண்டும் ;-)

கலைஞர் குறளோவியம் போலல்லாவா ஆகிவிடும் :-))

க.>

பிகு: கோவிச்சுக்காதீங்க குமரன். இதிலே ஒரு சின்ன சூடசுமம் இருக்கு.
புரியும் என்று நம்புகிறேன்;-)

Kumaran Malli

unread,
Feb 27, 2009, 9:12:52 PM2/27/09
to minT...@googlegroups.com

கண்ணன் ஐயா,

 

கலைஞர் கருணாநிதியின் குறளோவியம் படித்ததில்லை. அதனால் நீங்கள் எதனைக் குறிக்கிறீர்கள் என்று சரியாகத் தெரியவில்லை. வலிந்து 'இறை மறுப்பு, வினை மறுப்பு' போன்றவற்றை தரவிற்கு முரணாகத் தருகிறேன் என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரியா? இந்தப் புரிதலுடன் நான் சொல்லும் விளக்கம் இதோ.

 

சங்கத் தமிழனுக்கு நிமித்தங்களில் நம்பிக்கை உண்டு என்பது தான் தரவுகள் சொல்வது. இங்கும் நிமித்தங்களில் நம்பிக்கை இல்லை என்றோ நிமித்தங்கள் வருங்காலம் சொல்லாது என்றோ சொல்லவில்லை. -'னாள் நல்லதாக இல்லாமல் போனாலும், புள் நிமித்தம் நின்று தடுத்தாலும், முறையின்றிப் புகுந்தாலும், திறனில்லாதவை சொன்னாலும் மலையனிடம் பொருள் வேண்டி வந்தவர் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றதில்லை' என்று சொன்ன பாடலைப் படிக்கும் போது அதனைக் கதையில் எப்படி சொல்லலாம் என்று சிந்தித்ததில் அமைந்தது இந்த கதையாடல்.

 

'எப்பாடும் பேர்ந்து உதறி' அவனை வேண்டிச் சென்றால் அவர்கள் வெறுங்கையுடன் திரும்பிச் செல்லமாட்டார்கள் என்று 'பூவை நிலை'யில் மலையனைச் சொன்னது போன்றும் தோன்றுகிறது.

 

'இன்று நல்ல நாள்' என்று சொல்லிக் கிளம்புகிறார் கபிலர். ஆனால் புள் நின்று தடுக்கிறது. நாம் செல்லும் காரியம் மிக முக்கியம் என்றால் நாளும் கோளும் புள்ளும் நின்று தடுத்தாலும் ஏதேனும் சமாதானம் சொல்லிக் கொண்டு முன்னேறிச் செல்வது நாமும் இப்போது செய்வது தானே. அந்த உளவியல் இங்கே சொல்லப்பட்டது. ஆனால் நிமித்தங்களில் தமிழர்களுக்கு நம்பிக்கை இருந்ததில்லை என்றோ நிமித்தங்கள் வருங்காலம் உரைக்கா என்றோ சுட்டப்படவில்லை. அப்படிச் சொன்னால் தரவுக்கு ஏற்றதாக கதை அமையவில்லை என்று சொல்லலாம்.

 

'இன்று நல்ல நாள். ஆனால் நல்ல நாளாக இல்லாமல் போயிருந்தாலும் மலையனிடம் வேண்டியது கிட்டியிருக்கும். புள் நின்று தடுத்தது. ஆனாலும் மலையனிடம் வேண்டியது கிட்டும். முறை தவறி முண்டி மோதிக் கொண்டு புலவர்களும் இரவலர்களும் நுழைந்தனர். ஆனாலும் மலையனிடம் வேண்டியது பெற்றனர். இரவலர்கள் மொழிப்புலமை இல்லாததால் தப்பும் தவறுமாக திறனில கூறினார்கள். ஆனாலும் மலையனிடம் வேண்டியது பெற்றனர்' பாடலைக் கொண்டு கதையின் போக்கு அமைந்தது இப்படியே.

 

அடுத்தப் பாடல் எப்படி கதையின் போக்கினைச் சொன்னது என்றும் விளக்கலாம். வேண்டுமாயின்.

 

அன்பன்,

குமரன்.

Narayanan Kannan

unread,
Feb 27, 2009, 9:20:24 PM2/27/09
to minT...@googlegroups.com
>> அடுத்தப் பாடல் எப்படி கதையின் போக்கினைச் சொன்னது என்றும் விளக்கலாம்.
>> வேண்டுமாயின்.
>>
>>

வேண்டுமாயின்.....;-)
வேண்டற்பாலது!
நன்றி.

க.>

annamalai sugumaran

unread,
Feb 27, 2009, 9:49:56 PM2/27/09
to minT...@googlegroups.com

மயிலை சினி வேங்கடசாமி எழுதிய   சங்க கால தமிழக வரலாறு என்ற பொத்தகத்தில் பல்யானை குட்டுவன்  ஒரு போரில் உன்னமரத்தை வெட்டிச்சாய்தான் என குறிபிடுகிறார் .

உன்ன மரம் தன் இலையை உதிர்த்து தன் மன்னனுக்கு வரும் தீங்கினை முன்பே அறிவிக்கும் திறன் வாய்த்தது என ஒவ்வொரு மன்னரும் அதை அரண்மனையில் வளர்ப்பது வழக்கமாம் .
இவ்வாறு சங்ககாலத்தில் பல நிமித்தங்கள் பார்க்கப் பட்டதற்கு பல குறிப்புகள் இருப்பதாக நினைக்கிறன் .
நிமித்தம் பார்ப்பது தமிழர் வாழ்வில் சங்க காலம் தொட்டு உள்ளது .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்

2009/2/28 Kumaran Malli <kumara...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Feb 27, 2009, 9:58:16 PM2/27/09
to minT...@googlegroups.com


2009/2/27 annamalai sugumaran <amirth...@gmail.com>


நிமித்தம் பார்ப்பது தமிழர் வாழ்வில் சங்க காலம் தொட்டு உள்ளது .

கண்  துடித்தல், பலலி சொல்லுதல் எல்லாம் உண்டு

சிலம்பில் மாதரிக்கு பல நிமித்தங்கள் தென்படுமே

devoo

unread,
Feb 27, 2009, 10:07:39 PM2/27/09
to மின்தமிழ்
முனைவர் இரா.முருகன்

பண்பு வேறு; பண்பாடு வேறு. தனி மாந்தனின் இயல்பைப் பண்பு என்கிறோம்.
மக்கள் இனத்தின் இயல்பைப் பண்பாடு என்கிறோம். தமிழ் இனத்துக்கு உரிய
மொழி, இலக்கியம், கலைகள், கட்டடத் தொழில்நுட்பம், மருத்துவம், விழாக்கள்,
வழிபாட்டுமுறை, சடங்குகள், கொள்கைகள், உணவு முறை, உடை முறை, அணிகலன்கள்,
தட்டுமுட்டுகள், விளையாட்டுகள், விழாக்கள், பழக்க வழக்கங்கள்,
நம்பிக்கைகைள் முதலிய அனைத்தும் தமிழ்ப் பண்பாட்டில் அடங்கும். இவை நமது
தமிழ் இனத்துக்கு அடையாளமாக உள்ள கூறுகள் ஆகும். இந்த அடையாளத்தை நமது
இனம் மரபு வழியாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறது. இந்தப் பண்பாட்டை
இழந்தால் நமது இனம் தமிழர் என்ற பெயரை இழந்து, மக்கட் கடலில் கலந்த
நீர்த்துளிகளாகி முகவரி இல்லாமற் போய்விடும். இனித் தமிழ்ப் பண்பாட்டுக்
கூறுகளில் சிலவற்றை விரிவாகக் காண்போம்.

நம்பிக்கைகள் : வேப்பமரமும் அரசமரமும் இணைந்து வளர்ந்திருந்தால் அங்கே
தெய்வம் இருப்பதாக நம்புதல், பிள்ளை இல்லாதவர்கள் அரசமரத்தைச் சுற்றுதல்,
நல்லநாள், இராகுகாலம், குளிகைகாலம் பார்த்தல், சகுனம் பார்த்தல்,
கனவுகளுக்கு விளைவு உண்டு என்று நம்புதல், பிறந்த குழந்தைக்கு மண் பொட்டு
இடுதல், மணம் முடிந்து வரும் பெண் வலக்காலை எடுத்துவைத்துப் புக்ககத்தில்
நுழைதல், தும்மினால் வாழத்துதல், கணவனை இழந்தோர் மஞ்சள் பூ, பொட்டு,
வளையல்களை விலக்குதல், ஆண்கள் புதன் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய்
வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகல், கிரகணம்
பிடித்திருக்கும் நேரத்தில் உணவு உண்ணாமை, அப்போது, கருவுற்ற பெண்கள்
துரும்பைக் கிள்ளினால் கருச் சிதையும் என்றெண்ணுதல் முதலியன சில
நம்பிக்கைகள்.

http://www.thamizhkkaaval.net/0708/thamizh.html

Kumaran Malli

unread,
Jun 5, 2009, 10:56:04 PM6/5/09
to minT...@googlegroups.com

உடுக்கை இழந்தவன் கை - 16 (பாரி வள்ளலின் கதை)

பெரியோர்கள் குறித்தபடி ஒரு நல்ல நாளில் மலையமான் திருமுடிக்காரிக்கும் பாரிமகளிருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் தன் வழியே செல்ல விரும்பிய கபிலரைத் தடுத்து சில காலமேனும் தங்களுடன் தங்கியிருந்து நல்லறிவுரைகளைக் கூறி நல்வழிப்படுத்த வேண்டுமென்று மலையன் வேண்டிக் கொண்டதால் கபிலர் திருக்கோவலூரில் தங்கியிருக்கிறார்.

'நண்பா பாரி. நீ விரும்பியபடியே குலத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் உன் மக்களுக்கு ஒத்த ஒருவனுக்கே அவர்களை மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். இவர்கள் வாழும் வாழ்க்கையைக் காண மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. காமனும் இரதியும் போல, மாயோனும் நப்பின்னையும் போல, உமையும் உமையொருபாகனும் போல, வள்ளியும் முருகனும் போல, வசிட்டனும் அருந்ததியும் போல இவர்கள் வாழ்கிறார்கள். வள்ளல் என்று பெரும் புகழ் பெற்ற உன்னையும் மிஞ்சும் படியான வண்மை உன் மருகனுக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் கண்டு பெருமிதம் கொள்ள நீ உயிருடன் இல்லாமல் போய்விட்டாயே.

இவர்கள் வாழும் கற்பு வாழ்க்கையைப் பற்றி உன்னிடம் கூற விரைந்து வருகிறேன். உன் மக்களின் விருப்பப்படி சிறிது நாட்களே இங்கு தங்கியிருக்கப் போகிறேன். இனி மேலும் உன் பிரிவினை என்னால் தாங்க இயலாது'

"புலவர் பெருமானே. மன்னர் திருவோலக்கத்து வீற்றிருக்கப் புறப்பட்டுவிட்டார். தாங்களும் அரசவைக்கு எழுந்தருளி திருவோலக்கத்தைப் பொலிவு பெறச் செய்ய வேண்டும் என்பது மன்னரின் வேண்டுகோள்"

"அமைச்சரே. இன்னும் ஒரு நாழிகைக்குள் அரசவைக்கு வருகிறேன். மன்னரின் அரசவையை நான் கண்டதுண்டு. இப்போது என் மருகனாய் என் மக்கள் இருவரையும் இருபுறமும் அமர்த்திக் கொண்டு அவன் அரசுக்கட்டிலில் வீற்றிருக்கும் அழகைக் காண்பதற்காக விரைந்தோடி வருகிறேன்"

***

'இதென்ன. என்றுமில்லா திருநாளாக எங்குமில்லா வழக்கமாக மூவேந்தர்களின் அமைச்சர்களின் கூட்டம் அலைமோதுகின்றதே. புலவர்களும் இரவலர்களும் மட்டுமே வந்திருப்பார்கள் என்றல்லவோ நினைத்தேன். மன்னன் மணம் புரிந்த பின்னர் முதன்முதலில் அரசவைக்கு வருவதால் அவனை வாழ்த்துவதற்காக அந்தணர்களும் வந்திருக்கிறார்கள். அதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் மூவேந்தர்களின் தூதுக்குழுக்களும் இங்கே வந்த காரணமென்ன? ஒருவேளை பாரி மகளிரை மலையன் மணந்ததால் அவன் மீது மூவரும் போர் தொடுக்கின்றார்களோ?'

"வாருங்கள் கபிலரே. இங்கே வலப்புறத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து அருளுங்கள்" அங்கவை சங்கவை இருவருடன் மலையமான் எழுந்து கை கூப்பி கபிலரை வரவேற்றான்.

"வாழ்க மன்னவா" என்று வாழ்த்திவிட்டு கபிலர் அவன் காட்டிய இருக்கையில் அமர்கிறார்.

மூவேந்தர்களின் விருதுகளையும் உரக்கச் சொல்லிக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக மூவேந்தர்களின் அமைச்சர்களும் அரசனுக்கு முன்னர் வந்து மலையமானின் திருமணத்திற்கு வேந்தர்கள் அனுப்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துப் பரிசுப் பொருட்களை வழங்குகிறார்கள். வந்தவர்கள் தேரும், பரியும், யானையும், அணிகளும் என பலவிதமான பரிசுகளை அறிவித்தார்கள். போரினை அறிவிக்க வந்தவர்களோ என்ற ஐயத்தில் இருந்த கபிலருக்கு இக்காட்சி மிக வியப்பாக இருந்தது. மலையமானின் வீரச்சிறப்பைக் கேள்விப்பட்டிருந்த கபிலர் இன்று அதனை நேரிலேயே கண்டார். மற்றவர் வியக்கும் படைசிறப்பினை உடைய வேந்தர்களும் வியக்கும் வெற்றிச் சிறப்பு இவனிடம் இருப்பதால் இவனது துணை வேண்டி இப்படி மூவேந்தர்களும் தனித்தனியே பரிசுகள் அனுப்பியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார்.

மூவேந்தர்களிடமிருந்தும் வந்த பரிசுப் பொருட்களை ஏற்றுக் கொண்டு திருமுடிக்காரி அவரவர்களுக்குத் தகுதியான இருக்கைகளைத் தந்து அமரச் செய்தான். பின்னர் அங்கிருந்த அந்தணர்கள் முன் வந்து வாழ்த்து மொழிகளைக் கூறினர். அவர்கள் முன் அரசன் வணங்கி தன் நாடு முழுவதுமே அவர்களுக்கே உரியது என்று மரியாதைச் சொல் சொல்லி அவர்களை விடுத்தான்.

பின்னர் புலவர்களும் இரவலர்களும் ஒவ்வொருவராக வந்து வாழ்த்துகளையும் பாடல்களையும் கூறி மன்னனைச் சிறப்பித்தார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதியறிந்து அவரவர் வேண்டி வந்ததை வரையாது வழங்கினான் மன்னன். மூவேந்தர்களிடம் இருந்து வந்த பரிசுப் பொருட்கள் எல்லாம் இப்படி வந்தவர்களுக்கெல்லாம் தந்தான் அரசன். சில மன்னர்கள் அதிகாலையில் எழுந்து கள்ளருந்தி அந்த மகிழ்வினால் தேரும் பரியும் என பரிசுகள் வழங்குவதை கபிலர் கண்டதுண்டு. ஆனால் அப்படி இன்றி எந்த வித மயக்கமும் இல்லாத நிலையிலும் தேரினையும் பரியினையும் அணிகளையும் வாரி வாரி வழங்கும் மலையமானைப் பாட வேண்டும் என்ற ஆவலுடன் எழுந்தார் கபிலர்.

"நாள் கள் உண்டு நாள் மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த விழை அணி நெடுந்தேர்
பயன் கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே
"


"புலவர் பெருமானே".

"சொல்லுங்கள் அரசியாரே"

"பெரியப்பா. இதென்ன கொடுமை? என்னை எப்போதும் போல் சங்கவை என்றே அழைக்கலாமே. ஏன் அரசியார் என்று அழைக்கிறீர்கள்"

"அம்மா சங்கவை. நீ என்னை புலவர் பெருமானே என்று விளித்தாய். நான் அதற்குத் தகுந்த மரியாதையாக அரசியாரே என்றேன். இப்போது பெரியப்பா என்றாய்; நானும் உன் பெயரைச் சொன்னேன்"

"சரி தான். போட்டிக்குப் போட்டியா? அது போகட்டும். மன்னவரைப் புகழ்வது போல் வேறு யாரையோ இகழ்வது போல் தோன்றுகிறதே. நம் மன்னவர் கள்ளருந்தும் வழக்கம் இல்லாதவர். அதனால் அவரைப் பற்றி பாடிய பாடல் அடிகள் பொருத்தமானவை. ஆனால் கள்ளுண்டு அந்த மகிழ்ச்சியில் தேரினை வழங்கியவர் என்று யாரைக் குறிக்கிறீர்கள்? உங்கள் அருமை நண்பரையா?"

"அடடா. என் அருமை நண்பன் பாரியைப் பற்றி அப்படி பேசுவேனா அம்மா? என்ன வார்த்தை சொன்னாய்? அவனும் பல இரவலர்களுக்குத் தேரினை ஈந்தவன் தான். ஆனால் அவனுடைய புகழ் அதனால் கிட்டியதில்லையே! உன் தந்தைக்கு வான் புகழ் கிட்டியது வாடிக்கிடந்த முல்லைக்கொடிக்குத் தேரினை அவன் ஈந்ததால் தான் அம்மா. ஆறறிவு கொண்ட மக்களுக்கு இரங்குபவரே இங்கு அரிதாக இருக்கும் போது ஓரறிவு கொண்ட முல்லைக் கொடிக்கு இரங்கியதால் தான் அம்மா உன் தந்தையார் வள்ளல்களில் முதன்மையிடத்தைப் பெற்றான். அந்த நேரத்தில் அவன் கள்ளும் உண்ணவில்லை. அதனால் நான் பாடிய பாடலின் அடிகள் அவனைக் குறிக்கவும் இல்லை"

"எனக்கு தெரியும் பெரியப்பா. ஆனால் பாடலைக் கேட்டவர் யாரேனும் நீங்கள் பறம்புக் கோமானைப் புறம்பாகப் பேசிவிட்டீர்களோ என்று எண்ணலாம் என்பதால் தான் விளக்கம் கேட்டேன்"

"அங்கவை. சங்கவை. நீங்கள் பட்ட துன்பங்களுக்கு எல்லாம் சேர்த்து கிடைத்த நற்பயனாக உங்களுக்கு இந்த மலையமான் கணவனாக அமைந்திருக்கிறான். பாரியின் மக்களாகப் பிறந்த பயனை இவனை மணந்து பெற்றீர்கள். நீங்கள் எந்தக் குறையும் இல்லாதவர்கள். ஆனால் உங்கள் கணவனான இம்மன்னன் அப்படியில்லை. அவனிடம் இருக்கும் செல்வமோ குறைவு. ஆனால் அவனுக்கு இருக்கும் பெருமிதமோ மிகுதி"

"பெரியப்பா. இதென்ன விந்தை. எங்கள் தந்தையாரைக் குறையாகப் பேசவில்லை என்று மகிழ்ந்து ஒரு நொடியே ஆகிறது. அதற்குள் எங்கள் மணாளனைக் குறைவாகப் பேசுகிறீர்களே. இது என்ன விந்தை? முறை தானா இது?"

"அங்கவை. பார் மலையனும் சங்கவையும் உன் சினம் கண்டு தமக்குள் நகைக்கிறார்கள். பாட்டு பாடினால் தான் நான் சொல்ல வந்தது புரியும் போலும்.

கடல் கொளப்படாஅது உடலுநர் ஊக்கார்
கழல் புனை திருந்து அடிக் காரி நின் நாடே
அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே
வீயாத் திருவின் விறல் கெழு தானை
மூவருள் ஒருவன் உறுப்பாகியர் என
ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
வடமீன் புரையும் கற்பின் மடமொழி
அரிவை தோள் அளவு அல்லதை
நினது என இலை நீ பெருமிதத்தையே

இப்போது புரிகிறதா அம்மா நான் சொல்ல வந்தது?"

"புரிகிறது பெரியப்பா. இகழ்வது போல் புகழ்ந்திருக்கிறீர்கள்".

"இல்லாததைச் சொல்லிப் புகழவில்லை அம்மா. நான் என் கண்களால் கண்டவற்றைக் கொண்டே புகழ்கிறேன். கோழி கூவ துயில் எழும் மக்கள் உள்ள ஊர் உறையூரும் வஞ்சியும்; அழலை ஓம்பும் அந்தணர் மறை மொழி முழங்க துயில் எழும் மக்கள் உள்ள ஊர் எங்கள் ஊராம் மதுரை என்று பெருமை கொண்டிருந்தேன். ஆனால் தழலைப் போற்றும் அந்தணர் பெற்ற பெருமையை இங்கே கண்டேன். அவர்களுக்குத் தன் நாட்டையே தருவதாக மன்னவன் சொன்ன மொழியையும் கேட்டேன். அப்படி ஒவ்வொன்றும் இயல்பாக நடந்தவற்றைக் கொண்டே இந்தப் பாடல் பாடப்பட்டது அம்மா"

"உண்மை தான் பெரியப்பா. இன்று மாலையிலும் சில பாடல்களைப் பாடி எங்களை மகிழ்விக்க வேண்டும்"

"ஆமாம் புலவர் பெருமானே. இப்போது சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டு இன்று மாலை தாங்கள் அரண்மனை நந்தவனத்திற்கு வந்து அருள வேண்டும்"

"ஆகட்டும் திருமுடிக்காரி. அப்படியே செய்கிறேன்".

***
பாடற்குறிப்புகள்:

1. 'நாள் கள் உண்டு' என்று தொடங்கும் பாடல் புறநானூறு 123-ஆவது பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண் திணை (பாடப்படுபவரது புகழைக் கூறுவது); துறை: இயன்மொழித் துறை (இயல்பாக அமைந்த குணங்களைக் கூறுவது).

பொழிப்புரை: அதிகாலையில் கள்ளினை உண்டு நண்பர்களுடன் கூடி மகிழும் மகிழ்ச்சியுடன் இருந்தால் தேரினைத் தருவது யாருக்கும் எளிது. என்றும் குறையாத நல்ல புகழுடன் விளங்கும் மலையமான் அப்படி மது நுகர்ந்து மகிழாது ஈத்த பொற்படைக்கலன்களுடன் கூடிய உயர்ந்த தேர்கள், பயன் பொருந்திய முள்ளூர் மலையுச்சியின் மீது பெய்த மழையின் துளிகளிலும் பல. ஏனையோர் வழங்குவது செயற்கை. இவன் கொடை இயற்கை.

2. 'கடல் கொளப்படாஅது' என்று தொடங்கும் பாடல் புறநானூறு 122-ஆவது பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண் திணை (பாடப்படுபவரது புகழைக் கூறுவது); துறை: இயன்மொழித் துறை (இயல்பாக அமைந்த குணங்களைக் கூறுவது).

பொழிப்புரை: கடலாலும் கொள்ளப்படாது (இயற்கையால் அழிவில்லை); பகைவர்களும் அதனைக் கொள்ள வேண்டும் என்று எண்ண மாட்டார்கள் (செயற்கையாகவும் அழிவில்லை). உடலமைப்பு இலக்கணங்களின் படி திருத்தமாக அமைந்த கால்களை உடைய காரி! உனது நாடே அப்படிப்பட்டது. அது வேள்வித் தீயைப் பாதுகாக்கும் அந்தணர்கள் உடையது. அழியாத செல்வத்தினையும் வெற்றி பொருந்திய படைகளையும் உடைய மூவேந்தர்களுக்குள் ஒருவருக்குத் துணையாக வேண்டுமென்று வேண்டி அவர்களிடம் இருந்து வந்தவர்கள் தனித் தனியே புகழ்ந்து உனக்குத் தரும் கூழாகிய பரிசுகள் உனது குடியின் பெருமையை வாழ்த்தியவர்களாக வரும் பரிசிலர்களுக்கு உரியது. வடமீனாம் அருந்ததியைப் போல் கற்பு நெறியில் சிறந்த இந்தப் பெண்களின் தோள் அளவல்லது வேறு எதையும் உனது என்று கூறிக் கொள்ள இயலாது. ஆனாலும் நீ பெருமிதம் கொண்டிருக்கிறாயே!
Reply all
Reply to author
Forward
0 new messages