பிள்ளைப் பாண்டியன் என்ற ஒரு பாண்டிய மன்னன் தமிழைப் பிழையாக உரைப்போர்
தலையில் குட்டுவானாம். வில்லிபுத்தூராழ்வார் எனும் பிரசித்திபெற்ற புலவர்
பிற புலவர்களை வாதிற்கு அழைத்து, வாதில் வர்கள் தோற்றால் அவர்களது காதை
அறுத்துவிடுவாராம். மஹாபாரத காவியத்தை வில்லிபாரதம் எனும் கடின
நடையிலமைந்த தமிழ்ப் பாடல்களாக எழுதியவர் வில்லிபுத்தூராழ்வார்.
இவர்களெல்லாம் இன்று நம்மிடையே இல்லாததால் யார் வேண்டுமானாலும் தான் ஒரு
கவி என்று கூறிக்கொண்டு விளையாட்டுப் போல் தமிழில் கவிதை என்று சொல்லி
எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எடுத்துரைக்கிறது (இடித்துரைக்கிறது)
குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை
குரும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி
எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்றா முடிந்து தலை யிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துறைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே
என்ற செய்யுள்.
குலோத்துங்க சோழன் திருமணம்
குலோத்துங்கனுக்குத் தந்தையில்லாததால் அவனுக்குத் திருமணம்
செய்துவைக்கும் பொறுப்பை அவனது குரு ஒட்டக்கூத்தர் ஏற்றார். பாண்டிய
மன்னனின் மகள் மிகவும் பொருத்தமானவள் என்றறிந்து பெண் கேட்கச் சென்றார்
ஒட்டக்கூத்தர். பாண்டிய மன்னன் ஒட்டக்கூத்தரின் வேண்டுகோளைக் கேட்டதும்,
"எங்கள் பாண்டிய நாட்டில் பெண்ணெடுக்க உங்கள் சோழ மன்னனுக்கு என்ன
தகுதியிருக்கிறதென்றும், சோழநாடு பாண்டிய நாட்டை விட எவ்வாறு சிறந்ததது
என்றும் கூறுங்கள் என வினவ,
ஆருக்கு வேம்பு நிகராகுமோ அம்மானே
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே
வீரர்க்குள் வீரனொரரு மீனவனோ அம்மானே
வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே
ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே
ஒக்குமோ சோணாட்டைப் பாண்டி நாடம்மானே
என்ற பாடலைப் புனைந்து கூறினார். இதன் பொருள், "சோழ மன்னர்கள் தரிக்கும்
ஆலம்பூ மாலைக்குப் பாண்டிய மன்னர்கள் தரிக்கும் வேப்பம்பூ மாலை ஈடாகுமா?,
சோழர்களின் குலம் சூரிய குலம், பாண்டியர்கள் குலம் சந்திரகுலம்,
சூரியனுக்குச் சந்திரன் ஈடாகுமா? வீரர்களுள் சிறந்தவன் புலிக்கொடி தரித்த
சோழனேயல்லாது மீன்கொடியைத் தரித்த பாண்டியனா? சோழநாட்டின் தலைநகரான
அலைகடல் ஆர்ப்பரிக்கும் உறந்தை நகருக்குப் பாண்டியர்களின் தலைநகரான
கொற்கை நகர் ஈடாகுமா? சோழ நாட்டுக்குப் பாண்டிய நாடு ஈடாகுமா?"
என்பதாகும்.
இதனை செவிமடுத்த பாண்டிய மன்னனின் அவைக்களப் புலவர் புகழேந்தி அவர்
கூற்றுக்கெதிராக,
ஒருமுனிவன் நேரியிலோ உரைதெளித்த தம்மானே
ஒப்பரிய திருவிளையாட் டுறந்ததையிலோ அம்மானே
திருநெடுமா லவதாரஞ் சிறுபுலியோ அம்மானே
சிவன்முடியி லேறுவதுஞ் செங்கதிரோ அம்மானே
கரையெதிரல் காவிரியோ வையையோ அம்மானே
கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானே
பரவைபபரந் ததுஞ்சோழன் பதந்தனையோ அம்மானே
பாண்டியனார் பராக்கிரமம் பகர்வரிதே அம்மானே
என்ற பாடலைக் கூறினார். இதன் பொருளாவது, "அகத்திய முனிவன் தமிழைப்
படைத்தது பாண்டிய நாட்டிலுள்ள பொதிகை மலையிலா? அல்லது சோழ நாட்டிலுள்ள
நேரி மலையிலா? சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் உறந்தையிலா நடந்தன?
மஹாவிஷ்ணு மீனாகத்தான் அவடதாரம் எடுத்தாரேயன்றிப் புலியாகவா அவதரம்
எடுத்தார்? சிவபெருமானின் ஜடாமுடியில் அணியப்படுவது சந்திரனேயன்றிச்
சூரியனா? புலவர்கள் இயற்றிய நூல்களின் பெருமையை சங்கப்பலகை நீரை
எதிர்த்துக் கரைசேர்ந்து உலகுக்கு உணர்த்திய உன்னத நிகழ்ச்சி வையை
ஆற்றில்தான் நடந்தததேயன்றிக் காவிரி ஆற்றிலா? பேய் பிடித்தவர்களைக்
காப்பாற்ற, பேயை விரட்டப் பயன்படுவது வேப்பமரத்தின் இலைதானேயன்றி
ஆலிலையா? ஒரு முறை கடல் (பரவை) பாண்டிய மன்னரைப் பணிந்ததாம், அது சோழ
மன்னரைப் பணியவில்லையே. பாண்டிய மன்னர்கலின் பராக்கிரமம் சொல்லற்கரிது"
என்பதாகும்.
சிரச் சேதம் என்றால், தலையை வெட்டுவதா? இல்லை தலை முடியை வெட்டுவதா??
மாலை, குலம், கொடி, தலைநகர் இவற்றை வைத்து ஒப்புகூற முடியுமா?
முதலில் இந்த ஒட்ட கூத்தரை சிரச்சேதம் செய்ய வேண்டும். ;-)
ஒட்டக்கூத்தர் மன்னனுக்கே ஆணையிடும் இடத்தில் இருந்தார் என்று
சொல்லப்படுகிறது. கம்பரின் மகன் அம்பிகாபதி மரண தண்டனை அடையக் காரணமானவர்
அவரே என்றும் ஒரு வரலாற்றுக் கதை உள்ளது.
இக்கதைகளில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது கேள்விக்குறியே.
இலக்கிய நயம் கருதிப் பிற்காலப் புலவர்கள் சிலர் இதுபோல
இட்டுக்கட்டியிருக்கவும் வாய்ப்புள்ளது.
குலோத்துங்க சோழனுக்கும் பாண்டிய நாட்டு இளவரசிக்கும் திருமணம்
முடிந்ததும் பல விதமான சீர்வரிசைகளுடன் புகழேந்திப் புலவரையும் சீதனமாக
சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தான் பாண்டிய மன்னன். தன் பாட்டுக்கு எதிர்ப்
பாட்டுரைத்த புகழேந்திப் புலவரை எவ்வித விசாரணையுமின்றி ஒட்டக்கூத்தர்
சிறையிலடைத்துவிட்டார். அவர் மன்னனுக்கு குருவாக இருந்ததால் அவருக்கு
நாட்டில் சகல அதிகாரங்களும் இருக்கவே, அவரது செயல் எதற்கும் யாரும்
எதிர்ப்புத் தெரிவிக்க அஞ்சினார்கள்.
புகழேந்திப் புலவர் சிறையிலிருந்த பொழுது ஒரு நாள் அவர் சிறைக்
கட்டடத்தின் மேல் மாடியில் நின்றுகொண்டு தெருவைப்
பார்த்தவண்ணமிருக்கையில், குலோத்துங்க சோழன் ஒட்டக்கூத்தருடன்
அத்தெருவழியே நகர்வலம் வந்துகொண்டிருந்தான். புகழேந்திப்புலவரைப்
பார்த்ததும் மன்னன் பரவசமடைந்து ஒட்டக்கூத்தரை நோக்கி, "பார்த்தீரா,
அவர்தான் புகழ்மிக்க புகழேந்திப் புலவர்" என்றுரைக்க ஒட்டக்கூத்தர்,
"வேங்கைப்புலி வரக்கண்டால் மான் நிற்காமல் ஓடிவிடும், வற்றி உலர்ந்த
காட்டின் செடிகொடிகள் எரியும் தீயில் பொசுங்கிவிடும், சுறா மீன்
வரக்கண்டால் மற்ற சிறிய மீன்கள் அனைத்தும் அஞ்சி ஓடும், சூரியனைக்
கண்டால் பனி மறைந்துவிடும்" எனும் பொருள்பட,
மானிற்குமோவந்த வாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த
கானிற்குமோவவ் வெரியுந் தழல்முன் கனைகடலின்
மீனிற்குமோவவ் வெங்கட் சுரவமுன் - வீசுபனி
தானிற்குமோவக் கதிரோனுதயத்தில் தார்மன்னனே
என்ற பாடலைக் கூறினார். இதைக்கேட்ட புகழேந்திப் புலவர் அரசனை நோக்கி,
"மன்னா, இபபடலை நான் ஒட்டிப்பாடவா? வெட்டிப்பாடவா?" என்று கேட்டார்.
புலவர்களுக்குள் சண்டை வரரக்கூடாது என்ற எண்ணத்தில், "ஒட்டியே பாடுங்கள்,
வெட்டிப் பாட வேண்டாம்" என்று மன்னன் கூறவே, "இப்பாடலில் முதலில் வரும்
மான், உலர்ந்தத செடிகொடிகள், சிறு மீன்கள், பனி ஆகியவை
ஒட்டக்கூத்தனென்றும், பின்ன் வரும் வேங்கை, தீ, சுறா, சூரியன்
முதலானதெல்லாம் தானென்றும் பொருள்பட,
மானவன்நானந்த வாளரி வேங்கையும் வற்றிச்செத்த
கானவன்நானவ் வெரியுந் தழலும் கனைகடலின்
மீனவன்நானவ் வெங்கட் சுறவமும் வீசுபனி
தானவவன்நானக் கதிரோ னுதயமுந் தார்மன்னனே.
எனும் பாடலைக்கூறினார்.
பாண்டிய நாட்டின் இளவரசியாயிருந்து, பின் குலோத்துங்க சோழனின் மனைவியான
சோழ நாட்டின் மஹாராணி, தன்னுடன் சீதனமாக பாண்டிய நாட்டிலுருந்து சோழ
நாட்டிற்கு வந்திருந்த தனது ஆசானும், அருந்தமிழ்ப் புலவருமான புகழேந்தியை
ஒட்டக்கூத்தர் எவ்விதக் காரணமுமின்றிச் சிறையிலடைத்த விவரம்
கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தாள். அரசன் இது பற்றி
அறியாதிருந்தாலும், அறிந்தும் அமைதியாயிருந்தாலும் இரண்டுமே மன்னிக்க
முடியாத மாபெரும் தவறுகள் எனக்கொண்ட அவள் குலோத்துங்கன் தன்னைக் காண
அந்தப்புரத்திற்கு வருகையில் கதவைத் தாளிட்டுக்கொண்டு திறக்க
மறுத்துவிட்டாள்.
அக்காலத்தில் அரசி கோபம் கொண்டால் அவளது பிணக்கு நீங்க வேண்டிப்
புலவர்களைத் தூது அனுப்புவது மரபு. அதன்படியே குலோத்துங்கன் தன் ஆசானும்
அவைக்களப் புலவருமான ஒட்டக்கூத்தரைத் தூதனுப்பினான். ஒட்டக்கூத்தர்
அரசியின் அறை வாயிலில் வந்து நின்று,
"மென்மையான மலரிலுள்ள தேன்போன்ற இனிமையான பெண்ணே, கதவைத் திறக்கும்படி
நான் உன்னை வேண்டத் தேவையில்லை, கதவைத் திறந்து விடு, இல்லாவிடில்
ஏறுபோன்ற நடையுடைய வாள்வீரனாகிய குலோத்துங்கன் உன் வாசலுக்கு வந்தால்
தாமரை இதழ்போன்ற உனது கைகள் தாமாகவே கதவைத் திறந்துவிடும்" எனும்
பொருள்பட,
"நானேயினியுன்னை வேண்டுவதில்லை - நளினமலர்த்
தேனே கபாடந் திறந்திடு திறவாவிடிலோ
வானேறனைய வாள்விரவிகுலாதிபன் வாசல் வந்தால்
தானே திறக்குநின் கையிதழாகிய தாமரையே"
எனும் பாடலைக்கூறவே,
பாடலில் இருந்த ஆணவத் தொனியால் மேலும் கோபமுற்ற அரசி கதவின் இன்னொரு
தாழ்ப்பாளையும் தாளிட்டுக்கொண்டாள்.
இதுதான் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் எனப் பின்னர்
பிரசித்தமாகி இன்னும் வழக்கில் இருக்கிறது.
தாள் திறந்தது
ஒட்டக்கூத்தரின்மேல் அரசிக்கு ஏன் இத்தனை கோபம் என்று எண்ணிப் பார்த்த
மன்னவன் புகழேந்தி சிறையிலிருப்பதை நினைவுகூர்ந்தான். தான் பெரிய
தவறிழைத்துவிட்டோமென்று மனம் வருந்திய மன்னன் உடனடியாகப் புகழேந்திப்
புலவரை சிறையிலிருந்து விடுவித்து, அவரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டு,
அரசியின் பிணக்குத்தீர உதவும்படி வேண்டினான். அரசனின் வேண்டுகோளை ஏற்ற
புகழேந்தி அரசியின் அந்தப்புரத்துக்கு வந்தார். புகழேந்தி வருவதை அறிந்த
அரசி ஓடோடிச்சென்று கதவைத் திறந்து தம் மதிப்பிற்குரிய குருநாதரை
வரவேற்று அமரச்செய்தாள்.
அரசியின் மனம் சமாதானமாகும் விதமாக ஆறுதல் கூறிய புகழேந்தி,
"நூலிழையொன்றை இரண்டாய் வகிர்ந்ததுபோன்ற மெல்லிய இடையுடையவளும்,
பொற்குழைகள் இரண்டை ஏந்தியவளும், அழகிய கண்களுடையவளுமாகிய ஆரணங்கே, மழை
பொழிவதுபோல் இரண்டு கைகளாலும் பாணங்களைத் தன் எதிரிகள் மேல் எரியும்
ஆற்றல்பெற்ற குலோத்துங்கன் உன் அறை வாசலுக்கு வருகையில் அவன் செய்த
ஒன்றிரண்டு பிழைகளைப் பொறுத்துக்கொள்வது உயர்குடியில் பிறந்த உனக்கு
சிறப்பைத் தரும்" எனும் பொருள்பட,
"இழையொன்றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை யேந்தியபொற்
குழையொன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந்தணி
மழையொன்றிரண்டுகைப் பாணாபரண நின் வாசல் வந்தால்
பிழையொன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே"
எனும் பாடலைக் கூற, அரசியும் பிணக்குத் தீர்ந்தாள். ஒட்டக்கூத்தருக்காகப்
போடப்பட்ட இரட்டைத் தாழ்ப்பாளும் திறந்தது.
"நானேயினியுன்னை வேண்டுவதில்லை - நளினமலர்த்
தேனே கபாடந் திறந்திடு ........//
வெகு அருமை !
‘கபாடம்’ என்பது ஒட்டக்கூத்தருக்கு
மிகவும் பிடித்த சொல்லோ?
கலிங்கத்துப் பரணியிலும் கையாண்டுள்ளார்.
தேவ்
ஒரு புலவர் மற்றோர் புலவரை சிறையில் அடைக்க காரணமாகிறார்
...சரி அது தான் தொழிலில் போட்டி (Professional rivalry) எனக்கொண்டால்,
அரசனும் அதற்கு துணை போகிறான்
... சரி சிறையிட்டதில் ஏதோ ஞாயம் , நீதி இல்லாதிருக்காது, அதானல் தான்
மன்னவன் புலவரை சிறையில் அடைத்தான் என்று நாமே சொல்லிக்கொண்டாலும், இளம்
மனைவி கதவை தாளிட்டுக்கொண்டாள் என புலவரை விடுவிக்கிறான் மன்னன்....
ஆக மொத்தம்..
...புலவராய் இருந்தால் ஆபத்து
...எதிரி புலவர் அரசனின் அவைப்புலவராய், சர்வாதிகாரியாய் இருந்தால்
இன்னமும் ஆபத்து
...சிறையில் இருக்கும் புலவரை காக்க தாளிட்டுக்கொள்ளும் தந்திரமான +
புத்திசாலியான பெண் வர வேண்டும் ...
...It helps to have contacts !!!!
அன்புடன்
சுப்பு
புகழேந்திப் புலவர் மஹாபாரதக் கதையின் உபகதையான நளன் சரித்திரத்தை
வெண்பாக்களாக இயற்றி, நளவெண்பா எனும் வடிவில் அரசன் குலோத்துங்க
சோழனுடைய ஆக்ஞையின்பேரில் அரங்கேற்றினார். அரங்கேற்றத்தின்போது அதில்
முக்கியப் பங்கு வகித்த ஒட்டக்கூத்தர் இடையிடையே வாய் புளித்ததோ
மாங்காய் புளித்ததோ என்பது போல் வேண்டுமென்றே குற்றங்குறை கூறி
வாங்கிக்கட்டிக்கொண்ட கதை மிகவும் ஸ்வாரஸ்யமானது.
நளவெண்பாவில் மாலைக்காலத்தை ஒரு அழகிய மங்கையாய் வர்ணிக்கும் விதமாய்
அமைந்த பாடலொன்று வருகிறது.
மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணையெறிந்து மெய்கரப்ப முல்லைமலர்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது
மல்லிகை மலரை வெண்சங்காகப் பாவித்து அதில் தேனருந்த வரும் வண்டு ஊத,
மன்மதனின் கரும்பு வில்லினால் எய்த மலர்க்கணைகள் பட்டு மாந்தர் மேனி
பரவசமடைய, முல்லை மலர்களாலான மெல்லிய மாலையதனைத் தோளில் அணிந்துகொண்டு
அம்மாலை அசையும் விதமாக மெல்ல நடந்து வந்தாளாம் அந்திப் பொழுதெனும்
இளநங்கை.
"சங்கை ஊதுபவர்கள் அதன் சூத்தைத்தான் (பிற்பகுதியை) வாயில் வைத்து
ஊதுவார்களே தவிர, சங்கின் வாய்ப் பகுதியில் வாய் வைத்து ஊதுவதில்ல. ஆனால்
வண்டு மலரின் வாய்ப்பகுதியின் வழியாகத்தானே தேனருந்துகிறது. ஆகவே
இவ்வுவமானம் தவறு. பாடலில் பொருட்குற்றமுள்ளது, அதனால் இதை
ஏற்பதற்கில்லை." என்று ஒட்டக்கூத்தர் மறுப்புத் தெரிவித்தார்.
"கட்குடியனுக்கு வாயென்றும் சூத்தென்றும் தெரியுமா? நீர்தான் சொல்லும்"
என்று புகழேந்திப் புலவர் பதிலுக்குக் கேட்க ஒட்டக்கூத்தர் பதிலேதும்
சொல்ல முடியாமல் வாயடைத்துப் போய்விட்டார்.
இன்னுமொரு பாடலில் சந்திரனும் விண்மீன்களும் நிறைந்த வானத்தைக்
குறித்துப் பாடுகையில் புகழேந்தி கூறுகிறார்:
செப்பிளம் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக்
கொப்புளங்கொண்ட குளிர்வானை எப்பொழுதும்
மீன்பொதித்து நின்ற விசும்பென்பதென்கொலோ
தேன்பொதித்த வாயாற்றெரிந்து
"செம்பினைப் போன்ற இளம் கொங்கைகளுடைய பெண்களே, சந்திரனின் கதிர்கள்
பட்டதால் உண்டான கொப்புளங்களான நட்சத்திரங்கள் நிறைந்த குளிர்ந்த
வானத்தை விண்மீன்கள் பொதித்த வானம் என்று தங்கள் தேன்போன்ற சொற்களைப்
பேசும் வாயால் தெரிந்தே சொல்வதேனோ?"
எனக் கேட்கிறார்.
"வானத்தில் கொப்புளங்கள் உண்டானால் அதிலிருந்து சீழாவது சிலைநீராவது
வடிய வேண்டுமே" அதனால் இப்பாடல் பொருட்குற்றமுள்ளது. ஏற்க முடியாது என
ஒட்டக்கூத்தர் மறுதலித்தார்.
"சீழ் வடியவில்லை, சிலைநீர் வடிகிறது, அதுதான் விண்ணிலிருந்து பெய்யும்
பனி" எனப் புகழேந்தி மறுமொழி கூறவே ஒட்டக்கூத்தர் கப்சிப்பென்று
அடங்கிவிட்டார். நளவெண்பா அரங்கேற்றமும் இனிதே நிறைவேறியது.
On Jan 5, 10:40 pm, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
"சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம்"
........
"ஆயிரம் உண்டிங்கு சாதி அதில்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரரன்றோ?"
..........
"பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை"
போன்ற பாடல்களின் கருத்துக்களாலும் பிற சான்றோர்களின் முயற்சியாலும்
அமைந்துள்ள
சாதி மத பேதமற்ற சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம் என்பது உண்மையாதலால்
இங்குத் தரப்படும் செய்திகள் இலக்கிய நயம் கருதி மட்டுமே என்பதைக்
கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
இந்நிலையில் ஒரு நாள் ஒட்டக்கூத்தர் மன்னனுடன் சிறைச்சாலைக்கு
வருகைதந்தார். சிறையில் இருக்கும் கைதிகளை ஒருவர் பின் ஒருவராக அழைத்து
அவர்களிடம் வினாக்கள் கேட்டு அவர்களின் தமிழறிவை சோதித்தார். தவறாக பதில்
தருபவர் சிரச்சேதம் செய்யப்படுவது உறுதி என்ற நிலையில் அனைவரும் பயந்து
நடுங்கிக்கொண்டிருந்தனர்.
முதலில் குயவன் முன்னால் வர, அவனை நோக்கி ஒட்டக்கூத்தர், எதுகை மோனை
முதலிய நயங்கள் கொண்ட இயல், இசை, நாடகமெனும் முத்தமிழான மதங்கொண்ட
யானையாகிய என் முன்னால் வந்து எதிர்த்தவர் யார்? எனும் பொருள்பட,
"மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி
யானை முன்வந்தெதிர்த்தவன் யாரடா?"
என்று கேட்டார். அதற்குக் குயவன் சற்றும் தயங்காமல், நானா? நான்
களிமண்ணால் குவளைகள், குடங்கள், சட்டிகள் முதலியவற்றை உருவாக்கும்
சிறப்புடைய குயவன், யானையை அடக்கவல்ல அங்குசமும் ஆவேன் எனும் பொருள்பட,
"கூனையுங்குடமும் குண்டு சட்டியும்
பானையும் பண்ணும் அங்குசப்பயல் நான்"
என்று பதிலிறுக்கவே, அவன் பாடலில் தக்க மறுமொழியிருக்கவும் அவன் விடுதலை
செய்யப்பட்டான்.
அடுத்து அம்பட்டன் முன்னால் வர, அவனை நோக்கி, வானில் பறக்கின்ற கொககு
பருந்தினைக் கண்டால் எவ்வாறு பயத்தால் நடுநடுங்குமோ அவ்வாறு நடுங்கிக்
கொண்டு பதைபதைக்கும் மனத்துடன் என் முன் நிற்பவனே, பொட்டைக் கண்ணா,
சொல்வாய் எனும் பொருள்பட,
"விண்பட்ட கொக்கு வல்லூறு கண்டென்ன விலவிலக்கப்
புண்பட்ட நெஞ்சொடு மிங்கு நின்றாய் பொட்டையாய் புகலாய்"
என்று ஒட்டக்கூத்தர் மொழிய அதற்கு உத்தரமாக, நான் பொட்டைக் கண் உடையவனாக
இருப்பினும் அம்பட்டனாகிய நான் பண்ணில் உயர்ந்த செந்தமிழ்ப் பாடல்களை
நீயும் திடுக்கிடும் வண்ணம் பாடும் வல்லமை படைத்தவன் எனும் பொருள்பட,
"கண்பொட்டையாயினும் அம்பட்டன் நான் கவி வாணர் முன்னே
பண்பட்ட செந்தமிழ் நீயும் திடுக்கிடப் பாடுவனே"
என்றான். அவனது பதிலும் முகத்தில் அறைந்தாற்போல் ஆணித்தரமாக இருக்கவே
அவனும் விடுதலை செய்யப்பட்டான்.
அடுத்து வந்தான் கொல்லன். அவனிடம் பாடலாகக் கேளாமல் வசன நடையில், "நீ
யார்? உன் தகப்பன் பெயர் என்ன? உன் தொழில் என்ன? சொல்வாய் எனக்கேட்டார்
ஒட்டக்கூத்தர். அதற்கு அவன், " என் தந்தை பெயர் செல்லப்ப ஆசாரி, என்
பெயர் திருவேங்கடாச்சாரி. நான் உலகுக்கே குருவாக விளங்குபவன். கொல்லனாகிய
என் கவிதையில் குறை சொன்னவரை அவரது பல்லைப் பிடுங்கி, ஆட்டி அலைக்கழித்து
அவரது பகைவர்கள் எள்ளி நகையாடும் வண்ணம் என் கவிதையாகிய இருப்பாணியாலேயே
அடிப்பேன் எனும் பொருள்பட,
"செல்வன் புதல்வன் திருவேங்கடவன் செகத்குருவாம்
கொல்லன் கவியைக் குறைசொன்ன பேரைக் குறடுகொண்டு
பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டாம் ஆட்டிப் பகைவர் முன்னே
அல்லும் பகலும் அடிப்பேன் கவியிருப்பாணி கொண்டே"
என்று கூறவே அவனும் விடுவிக்கப் பட்டான்.
அடுத்து வேளாளன் வந்து, கேள்வி கேட்கு முன்னரே ஒட்டக்கூத்தரையும்
மன்னனையும் பார்த்து, "பல தேசங்களைக் கட்டியாளும் மாமன்னர்களைக் கண்டு
சிறு நாடுகளை ஆளும் குறுநில மன்னர்கள் கடலுக்கடியில் சென்று ஒளிந்து
கொள்ளவில்லை. பூக்களின் அரசனெனப் போற்றப்படும் தாமரை மலர் மலர்வதனால்
அருகில் சிறு சிறு கொட்டி மலர்கள் பூவாமல் இருப்பதில்லை, உலகைக் காக்கும்
மன்னா! கவி ஒட்டக் கூத்தா! உங்கள் பாடல்களைக் கேட்டு பிற புலவர்கள்
பாடாமல் இருந்து விடுவார்களா?" எனும் பொருள்பட,
கோக்கண்டு மன்னவர் குறைகடற் புக்கிலர் கோகனகப்
பூக்கண்டு கொட்டியும் பூவாதொழிந்தில பூதலமேற்
காக்கின்ற மன்னவ, கவியொட்டக் கூத்த நும்
பாக்கண்டொளிப்பர்களோ தமிழ் பாடிய பாவலரே
எனும் பாடலைக் கூறவே அவனும் விடுதலை செய்யப்பட்டான். ஒட்டக்கூத்தரின்
செருக்கு ஓரளவு அடங்கியது.
> > போடப்பட்ட இரட்டைத் தாழ்ப்பாளும் திறந்தது.- Hide quoted text -
>
> - Show quoted text -