டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்கள் எழுதிய ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’

502 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 5, 2022, 5:31:21 AM2/5/22
to மின்தமிழ்
நன்றி: சிறகு - http://siragu.com/டாக்டர்-மா-இராசமாணிக்கனா/

டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்கள் எழுதிய ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’

தேமொழி

Feb 5, 2022

paththuppaattu-aaraaychi_FrontImage_297-siragu.jpg

பேராசிரியர் டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்கள் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்க ஒரு நூல் ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’. தமிழ், வரலாறு, தொல்லியல், இலக்கியம், சைவம் போன்ற பல பிரிவுகளில் ஆய்வு நூல்களை எழுதிய பல்துறை தமிழறிஞராகவும் விளங்கினார் பேராசிரியர் டாக்டர் மா.இராசமாணிக்கனார். இவர் 1947 முதல் ஓர் ஆறு ஆண்டுகள் சென்னை விவேகானந்தா கல்லூரியில் விரிவுரையாளராகவும், 1953 முதல் தொடர்ந்து ஓர் ஆறு ஆண்டுகள் மதுரை தியாகராயர் கல்லூரியில் பேராசிரியராகவும் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர், 1959 முதல் தனது மரணம் வரை தொடர்ந்து ஓர் எட்டு ஆண்டுகளுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். இவரது ஆய்வு நூல்கள் ஆய்வுலகிற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தன. ‘சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர்’, ‘ஆராய்ச்சிக் கலைஞர்’, ‘சைவ இலக்கியப் பேரறிஞர்’ போன்ற பல பட்டங்கள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டார்.

வித்துவான், பி.ஓ.எல், எம்.ஓ.எல்., முனைவர் பட்டங்கள் என்று தொடர்ந்து தனது கல்வியையும் வளர்த்துக் கொண்டே உயர்நிலைப் பள்ளி முதல், உயர்கல்வி பல்கலைக் கழகம் பேராசிரியர் என நாற்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர் டாக்டர் மா.இராசமாணிக்கனார். 1930ஆம் ஆண்டு முதற்கொண்டு பள்ளி ஆசிரியப் பணியில் இருந்தபொழுதே அவர் நூல்கள் எழுதத் துவங்கினார். ஹர்சவர்தனன், முசோலினி, ஆப்ரஹாம் லிங்கன், முடியுடை மூவேந்தர்கள், பொற்கால வாசகம் போன்ற நூல்களைப் பள்ளி மாணவர்களுக்காக எழுதினார் பின்னர் பல இலக்கிய, வரலாற்று, சைவ ஆய்வு நூல்களையும் எழுதினார் மா. இராசமாணிக்கனார். அவரது அருமை மகனார் முனைவர். மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்கள் தன் தந்தையின் வாழ்க்கை வரலாறு குறித்துத் தாம் எழுதிய “வரலாற்றின் வரலாறு” என்ற நூலில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய நூல்களின் முழுமையான பட்டியலையும் நூல்கள் பதிப்பிக்கப்பெற்ற காலநிரல்படி தொகுத்து பின்னிணைப்பாக கொடுத்துள்ளார்.

‘தமிழக அரசின் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள்’ என்ற திட்டத்தில், 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு இவர் எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்கி அவை பரவலாக தமிழார்வலர்களைச் சென்றடைய ஏற்பாடு செய்தது பாராட்டிற்குரியது. இவர் தனது இறுதிக் காலம் வரை பல நூல்களை எழுதிய வண்ணமே இருந்துள்ளார். இவற்றில் ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’ (A critical study in Pathupattu) என்ற நூல் இவர் மறைவிற்குப் பிறகு சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பேற்ற நெ.து.சுந்தரவடிவேலு அவர்களால் அச்சேற்றப்பட்டது.

மா. இராசமாணிக்கனார் அவர்கள் தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆகியவற்றில் பெற்றிருந்த பெரும்புலமையைக் கண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் அவரை பத்துப்பாட்டு குறித்த ஆய்வு நூலொன்று எழுதும்படி 1959 இல் பணித்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டது. அதற்கு ஒப்புக் கொண்ட மா. இராசமாணிக்கனார் 35 தலைப்புகளில், 70க்கும் மேற்கொண்ட நூல்களின் உதவியுடன் ஆய்வு செய்து, கள ஆய்வு, கல்வெட்டு ஆய்வுகளும் மேற்கொண்டு, நான்கு ஆண்டுகள் ஆழ்ந்த ஆய்வின் விளைவாக பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலை எழுதியுள்ளார்.

சங்கத் தொகை நூல்களுள்திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன பத்துப்பாட்டு நூல்கள் எனப்படும்.

       முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
       பெருகு வளமதுரைக் காஞ்சி – மருஇனிய
       கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
       பாலை கடாத்தொடும் பத்து.
என்று பத்துப்பாட்டுள் அடங்கிய நூல்கள் எவையென ஒரு பழைய வெண்பா கூறுகிறது.

ஆற்றுப்படை இலக்கியங்களையும், சங்ககால மக்களின் வாழ்வியலை, மன்னர்களின் அரசாட்சியை, இயற்கையை, கலைகளை என்று பற்பல குறிப்புகளை உள்ளடக்கியது பத்துப்பாட்டு நூல்கள். பத்துப்பாட்டு என்னும் பெயர் இடைக்கால வழக்காகும். அகம், புறம் என்ற இரு பிரிவுகளில் அடங்கும் இந்தப் பத்துப் பாட்டுகளும் 3552 அடிகளைக் கொண்டவை.

மா.இராசமாணிக்கனார் 1964 இல் நூலை பல்கலையிடம் ஒப்படைத்தும், 6 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப் பெறாமல் இருந்தது.  இதற்கிடையில் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்கள் 1967ஆம் ஆண்டு மே திங்கள் 26ஆம் நாள் மாரடைப்பினால் மறைந்தார். பிறகு பல்கலையின் புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்ற நெ. து. சுந்தர வடிவேலு அவர்களின் கவனத்திற்குப் பிறகே இந்த நூல் 1970 இல் அச்சேறியது. நூலின் பதிப்பாசிரியர் டாக்டர் மு. வரதராசனார்.

அடுத்து வரும் குறிப்பு ஒன்றும் இணையத்தில் கிடைக்கப் பெறுகிறது.ஆனால் இச்செய்திக்கான சான்று (இக்கட்டுரை எழுதும் நேரம் வரை) கிட்டவில்லை. பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலின் கையெழுத்துப் படியை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்து அதை நூலாக வெளியிட வேண்டிக் கொண்டிருந்தார் மா.இராசமாணிக்கனார். ஆனால் அவர் மறைவிற்குப் பிறகு அவரது ஆய்வு நூல் வெளியீட்டில் பல்கலைக் கழகத்தினர் அக்கறை காட்டவில்லை. பின்னர் புதிதாகத் துணை வேந்தராகப் பொறுப்பேற்ற நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் தற்செயலாக பூட்டிக்கிடந்த அறையொன்றின் மூலையில் கவனிப்பாரின்றிப் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்த பத்துப் பாட்டு ஆராய்ச்சி நூலின் கையெழுத்துப் படிகளைக் கண்டெடுத்து, பல்கலைக்கழக வெளியீடாக 1970ஆம் ஆண்டு அச்சேற்றினார் என்று குறிப்பிடப்படுகிறது. கையெழுத்துப்படி கவனிப்பாரற்று ஏதோ ஒரு அறையின் மூலையில் கிடைத்தது என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒரு செய்தியாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

மேலும், ‘‘இவர் (இராசமாணிக்கனார்) எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சியை வெளியிட வேண்டி, தான் பணியாற்றிய சென்னைப் பல்கலைக் கழகத்தாரிடம் ஒப்படைத்ததற்குப் பதில் அவரே வெளியிட்டு இருந்தால், பணமாவது கிடைத்து இருக்கும். சென்னைப் பல்கலைக் கழகம் பத்துப்பாட்டு நூலை, யாரும் காணாத வண்ணம் பூட்டி வைத்துவிட்டது வேதனை’’ என்றும் நெ.து.சுந்தரவடிவேலு வருத்தத்துடனும் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் நெ.து.சுந்தரவடிவேலு நூலில் இவ்வாறு தனது அணிந்துரையில் குறிப்பிடவில்லை கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஆனால், நெ.து.சுந்தரவடிவேலு முயற்சி எடுக்கவில்லை என்றால் டாக்டர் மா.இராசமாணிக்கனார் எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற ஆய்வு நூலை தமிழுலகம் கண்டிருந்திருக்காது என்பது உண்மை. தான் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள் நூலை அச்சேற்றியதாகக் குறிப்பிடுகிறார் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள (9.7.1970) நெ.து.சுந்தரவடிவேலு. அத்துடன், ‘‘உண்மையான ஆராய்ச்சியாளனுக்கு நடுநிலைமையே உயிர். இவ்வுண்மைக்கு உரைகல்லாயும் இந்நூல் விளங்குகிறது’’ என்று நூலையும் நூலாசிரியரையும் பாராட்டுவதுடன், தமிழ்ப் பேரறிஞர் ஒருவரின் நூலுக்கு அணிந்துரை எழுதக் கிடைத்த வாய்ப்பிற்காக மகிழ்வதாகவும் எழுதியுள்ளார்.



நூல்:
“பத்துப்பாட்டு ஆராய்ச்சி”
ஆசிரியர்: இராசமாணிக்கனார், மா.
சென்னைப் பல்கலைக்கழகம் , 1970
தமிழிணையம் – மின்னூலகம் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய இணைப்புச் சுட்டி :
https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8jZh2#book1/

Mohanarangan V Srirangam

unread,
Feb 5, 2022, 6:32:35 AM2/5/22
to min tamil
நல்ல கட்டுரை. நூலின் பின்னால் இவ்வளவு இருக்கிறதா! உங்கள் உதவியால்தான் பல ஆண்டுகள் கழித்து நூலைப் பார்க்க முடிந்தது. 

***

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/00c3f532-1712-456f-ba57-47c7f054a3ccn%40googlegroups.com.

தேமொழி

unread,
Feb 6, 2022, 3:25:55 AM2/6/22
to மின்தமிழ்
உங்கள் கருத்துரைக்கு நன்றி அரங்கானார் 😀

தேமொழி

unread,
Feb 11, 2022, 2:44:15 PM2/11/22
to மின்தமிழ்
பத்துப்பாட்டு ஆராய்ச்சி
டாக்டர் மா. இராசமாணிக்கனார், எம்.ஏ.,எம்.ஓ.எல்.,பி.எச்.டி.

சென்னைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வெளியீட்டு எண் - 26

பொதுப்பதிப்பாசிரியர் :
டாக்டர் மு. வரதராசனார், எம்.ஏ., எம்.ஓ.எல்., பி.எச்.டி.
தமிழ்ப்பேராசிரியர்

சென்னைப்பல்கலைக்கழகம்

பத்துப்பாட்டு ஆராய்ச்சி
டாக்டர் மா. இராசமாணிக்கனார், எம்.ஏ.,எம்.ஓ.எல்.,பி.எச்.டி.
துணைத்தமிழ்ப்பேராசிரியர்
சென்னைப்பல்கலைக்கழகம்
(1959—1967)

சென்னைப்பல்கலைக்கழகம்
1970

First Published, 1970
© University of Madras, Madras, 1970

A Critical Study in Pathuppattu
Dr. M. RAJAMANICKAM, M.A., M.O.L., Ph.D.
Reader in Tamil (1959-1967)
University of Madras.

Price Rs. 20/-

Printed at:
AVVAI ACHUKKOODAM,
96, P. V. Koil Street,
Madras-13, Tamil Nadu, INDIA.

தேமொழி

unread,
Feb 11, 2022, 2:46:07 PM2/11/22
to மின்தமிழ்
SUNTHARAVADIVELU NE THU.jpg
திரு. நெ.து.சுந்தரவடிவேலு, எம்.ஏ., எல்.டி.
துணைவேந்தர், சென்னைப்பல்கலைக்கழகம்.

அணிந்துரை

உயர்திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள், எம்.ஏ., எல்.டி.
துணை வேந்தர், சென்னைப்பல்கலைக்கழகம்.

செந்தமிழ்த்தாயின் சிறந்த செல்வங்களுள் தலையாய ஒன்று பத்துப்பாட்டு. இந்நூலின் சிறப்பை,
'பத்துப்பாட் டாதி மனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே?'
என்று மனோன்மணீயம் பாடுகிறது.

'மூத்தோர் பாடியருள் பத்துப்பாட்டு' என்று தமிழ் விடு தூது முழங்குகிறது.  

பழந்தமிழர் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் விளக்கமாய்த் திகழும் இந்நூலை டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் முதன் முதலாக-முழுமையாக-1889 ஆம் ஆண்டு பதிப்பித்து உதவினார். அந்நாள் முதல் கடந்த எண்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பத்துப்பாட்டைத் துணையாகக் கொண்டு இலக்கிய வரலாற்று-ஆய்வுகள் பல நிகழ்ந்துள்ளன. அவற்றிற்கெல்லாம் மணிமுடியாய்த் திகழ்வது, சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1959 முதல் 1967 வரை துணைத் தமிழ்ப் பேராசிரியராய்த் திகழ்ந்த டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் இயற்றியுள்ள பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் இவ்வரிய பெரிய நூல்.

டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஆரம்பப் பள்ளி ஆசிரியராய் வாழ்க்கையைத் தொடங்கிச் சென்னைப்பல்கலைக்கழகத் துணைத்தமிழ்ப் பேராசிரியராய் உயர்ந்தவர்- தம் முயற்சியால், தளராத உழைப்பால். அவர்தம் முற்றிய அறிவின் பெற்றியாக-முழுமணியாக-இந்நூல் விளங்குகிறது எனலாம். அவர்தம் நூல்கள் பலவற்றுள்ளும் இறுதியானதும் உறுதியானதும்-பல்லோரும் பலகாலத்தும் பயன்படுத்தப்போவதும் இந்நூலே எனலாம்.

பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் இந்நூலுள் டாக்டர் மா.இராசமாணிக்கனார், தமிழ்ச் செல்வமாகிய பத்துப்பாட்டை 35 தலைப்புகளில் எளிய இனிய தமிழில் ஆராய்ந்துள்ளார். இத்தலைப்புகளின் பட்டியலே ஒரு பெருந்தொகை நூலை எப்படி எல்லாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்பதைத் தமிழ் இலக்கிய மாணவர்கட்குத் தெளிவுபடுத்தும். மேலும், இவ்வாராய்ச்சியினை ஆசிரியர் எழுபதுக்கு (70) மேற்பட்ட நூல்களின் துணை கொண்டு ஆராய்ந்து எழுதியுள்ளார். அதனினும் சிறப்பாயது சங்க இலக்கியச் செல்வத்தைப் புவியியல் பாதையில் - வரலாற்று வழி - கல்வெட்டுக் கண் கொண்டு
ஆசிரியர் நுணுகி நுணுகி ஆராய்ந்திருப்பதே ஆகும். இவ்வாராய்ச்சியையும் ஆசிரியர் தமது
ஆராய்ச்சியோடு (Field Study) பிணைத்திருப்பது அவருடைய உண்மை காணும் வேட்கையையும் உழைப்பின் பெருமையையும் உலகுக்கு உணர்த்தும். ஒரு நாள் காஞ்சீபுரத்தில் பெய்த பெருமழையுங்கூட (பக்கம்-139) ஆசிரியருக்கு உண்மை காண உதவியிருக்கிறது!

உண்மையான ஆராய்ச்சியாளனுக்கு நடுவு நிலைமையே உயிர். இவ்வுண்மைக்கு உரைகல்லாயும் இந் நூல் விளங்குகிறது. தம்முடைய மதிப்பிற்குரிய பெரியோர்கள் டாக்டர் சாமிநாத ஐயர், டாக்டர் சோமசுந்தர பாரதியார் போன்றோர்கள் கருத்துகளிடமும் தமக்குள்ள வேறுபாட்டைப் பணிவுடனும் துணிவுடனும் ஆசிரியர் புலப்படுத்தியிருப்பது ஆராய்ச்சிக்கு அணிகலமாகும்.

எண்ணூறு பக்க எல்லையை எட்டும் இந்நூல் காண்பதற்கும் கற்பதற்கும் அரியது, பெரியது. டாக்டர் சாமிநாத ஐயர் அவர்களால் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பெற்ற பத்துப்பாட்டுக்கு இவ்வாராய்ச்சி நூல் சிறந்த பரிசாகும். இத்தகைய ஆராய்ச்சி நூலை எழுதி உதவிய டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்களுக்குத் தமிழ் ஆராய்ச்சி உலகம் செய்யத்தக்க சிறந்த கைம்மாறு இத்தகைய-இயலுமேல், இதனினும் சிறந்த-ஆராய்ச்சி நூல்களை இன்னும் பலவாக வெளிப்படுத்து தலே ஆகும்.

பத்துப்பாட்டு ஆராய்ச்சியை ஆசிரியர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே (1964) பல்கலைக்கழகத்திடம் தந்து விட்டார்கள். அவர்கள் மறைந்தும் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. யான் பதவியேற்று ஓராண்டு முடிவதற்குள் ஆறு ஆண்டுகளாய் அச்சேறாமல் இருந்த இந்நூலை அச்சேற்ற இயன்றமைக்கு அகமிக மகிழ்கிறேன்.

கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஓர் அறிஞரின் உயர்ந்த ஆராய்ச்சி நூலுக்கு மூன்றாவது உலகத் தமிழ்மாநாட்டுக்குப் புறப்படும் நேரத்தில் அணிந்துரை வழங்க நேர்ந்தமை குறித்துத் தனி மகிழ்வு- பெருமகிழ்வு-எய்துகிறேன்!

வளர்க, வாழ்க தமிழ் ஆராய்ச்சித்திறம்!


நெ.து. சுந்தரவடிவேலு
9-7-1970

Mohanarangan V Srirangam

unread,
Feb 12, 2022, 1:35:00 AM2/12/22
to min tamil
''உண்மையான ஆராய்ச்சியாளனுக்கு நடுவு நிலைமையே உயிர். இவ்வுண்மைக்கு உரைகல்லாயும் இந் நூல் விளங்குகிறது. தம்முடைய மதிப்பிற்குரிய பெரியோர்கள் டாக்டர் சாமிநாத ஐயர், டாக்டர் சோமசுந்தர பாரதியார் போன்றோர்கள் கருத்துகளிடமும் தமக்குள்ள வேறுபாட்டைப் பணிவுடனும் துணிவுடனும் ஆசிரியர் புலப்படுத்தியிருப்பது ஆராய்ச்சிக்கு அணிகலமாகும்'' <<< 

அழகு! அருமை. நூல் மீண்டும் அச்சாகியிருக்கிறதா தெரியவில்லை. 

*** 

தேமொழி

unread,
Feb 12, 2022, 2:29:23 AM2/12/22
to மின்தமிழ்
பத்துப் பாட்டு ஆராய்ச்சி
₹285
https://www.panuval.com/paththupaattu-aaraaychi-10002214

இங்கு கிடைக்கிறது அரங்கனார் 

Mohanarangan V Srirangam

unread,
Feb 12, 2022, 4:05:45 AM2/12/22
to min tamil
அருமை! அருமை! 
ஓ! நூல்களைக் குறித்து ரெடி ரெகனராக விளங்குகிறீர்கள். 
மிக நன்று. 

***

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Feb 12, 2022, 4:08:16 PM2/12/22
to மின்தமிழ்
On Saturday, February 12, 2022 at 1:05:45 AM UTC-8 Mohanarangan V Srirangam wrote:
அருமை! அருமை! 
ஓ! நூல்களைக் குறித்து ரெடி ரெகனராக விளங்குகிறீர்கள். 

நன்றி அரங்கனார் 
'ரெடி ரெகனர்' பார்ப்பதற்கு எப்படி இருக்கும் - ஒரு மாதிரி நூல் 🤓

வியாபாரக் கணக்கடங்கல் எனும் ரெடி ரெகனர்
--- கருப்பன் செட்டியார், ஆறு., 1934
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ3jZpy.TVA_BOK_0005535/mode/2up

😁😁

தேமொழி

unread,
Feb 14, 2022, 5:49:23 PM2/14/22
to மின்தமிழ்
Dr M. Rasamanikkanar.jpg
டாக்டர் மா. இராசமாணிக்கனார், எம்.ஏ., எம்.ஓ.எல்., பி.எச்.டி
துணைத் தமிழ்ப்பேராசிரியர், சென்னைப்பல்கலைக்கழகம்
(1959-1967)


முகவுரை

தமிழ் இலக்கியம், சங்ககால இலக்கியம், இடைக்கால இலக்கியம், பிற்கால இலக்கியம் என மூவகைப்படும். பாண்டியர் வழிவழிச் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்த காலமே சங்ககாலம் என்பது. அதன் கீழ் எல்லை, ஏறத்தாழக் கி.பி. 300 என்னலாம்; மேல் எல்லை, வரையறுத்துக்கூற இயலாத பழைமையுடையது. பரந்துபட்ட அச்சங்ககாலத்தில் செய்யப்பட்ட இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் பலவாகும் என்பது, காப்பியம் என்னும் பேரிலக்கணத்தாலும் அதன் உரைகளாலும், சிலப்பதிகாரம், யாப்பருங்கலம், இறையனார் களவியல் ஆகியவற்றின் உரைகளாலும் அறியப்படும்.

பரந்துபட்ட அச்சங்ககாலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் பனையோலைகளில் எழுதப்பட்டவை. ஆதலால், அவற்றுட்பல, காலப்போக்கில் அழிந்து பட்டன. தமிழ் வளர்த்த பாண்டியர் தம் தலைநகரங்களைக் கடற்கரையில் அமைத்திருந்தனர். கடல்கோள்களால் அந்நகரங்கள் அழிந்த போது அவ்வழிவில் நூல்கள் பலவும் மறைந்தன. இங்ஙனம் பல காரணங்களால் அழிந்தன போக, இன்று எஞ்சியுள்ள நூல்கள் சிலவேயாகும். அவற்றுள் தொல்காப்பியம் என்ப பேரிலக்கண நூலாகும்; பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை என்பவை இலக்கிய நூல்களாகும். இவற்றுள் எட்டுத்தொகை என்பவை தொகுக்கப் பெற்ற எட்டு நூல்களாகும். அவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பவை. இவற்றுள் ஒவ்வொரு நூலிலும் பல காலங்களில் வாழ்ந்த புலவர் பலருடைய பாக்கள் தொகுக்கப் பட்டுள்ளன.

பத்துப்பாட்டு என்னும் நூலில் நெடும்பாடல்கள் பத்து அடங்கியுள்ளன. அவை திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,  பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பவை. அவற்றுட் சிறிய பாட்டு ‘முல்லைப்பாட்டு' என்பது அது 103 அடிகளை உடையது. மிகப்பெரிய பாட்டு 'மதுரைக்காஞ்சி' என்பது. அது 728 அடிகளை உடையது. பத்துப்பாட்டுகளும் 3552
அடிகளை உடையவை.

பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படை சமயத் தொடர்பானது. முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் அகப்பொருள் பற்றியவை. பிற பாக்கள் நெடுநிலமன்னர், குறுநில மன்னர்களைப் பற்றியவை. பொருநர் ஆற்றுப்படையும் பட்டினப்பாலையும் கரிகாலன் மீதுபாடப் பட்டவை. நெடுநல்வாடையும் மதுரைக்காஞ்சியும் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது பாடப்பட்டவை. பெரும்பாணாற்றுப்படை, தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான் திரையன் மீது பாடப்பட்டது. சிறுபாணாற்றுப்படைதொண்டை நாட்டை அடுத்த ஓய்மானாட்டை ஆண்ட நல்லியக்கோடன்மீது பாடப்பட்டது. மலைபடுகடாம் என்பது, தொண்டை நாட்டுப் பல்குன்றக் கோட்டத்தை ஆண்டு வந்த நன்னன் மீது பாடப்பட்டது. எனவே, இப்பாடல்கள் தொண்டைநாடு, ஓய்மானாடு, சோழநாடு, பாண்டி நாடு ஆகிய நாடுகளைப் பற்றியவை; அந்நாடுகளை ஆண்ட அரசர்களின் வீரச் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் ஆட்சிச் சிறப்பையும் நாட்டு அமைப்பையும் பல திறப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையினையும் படம் பிடித்துக் காட்டுபவை.

அப்பாடல்கள் அனைத்தும் கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. ஆதலால், அம்மூன்று நூற்றாண்டுகளிலும் நிலவிய தமிழ் நாட்டு அரசியல், மக்கள் வாழ்க்கை, பயிர்த்தொழில், கைத்தொழில், சமயம், நாகரிகம், பண்பாடு முதலியவற்றை அப்பாடல்களின் துணையைக்கொண்டு நன்கறியலாம்.

பத்துப்பாட்டை அரும்பாடு பட்டுப் பதிப்பித்த டாக்டர். உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தமிழர் எழுதி பாராட்டுக்கு உரியவராவர். அப்பெரியார் நல்லியக் கோடனைப்பற்றி எழுதுகையில், “இவனுடைய ஊர்களுள் மாவிலங்கை என்பது, புனனாட்டுக் வடக்கிலுள்ள அருவா நாடு, அருவாவடதலை நாடு என்ற இரண்டும் சேர்ந்த இடமென்று கூறுவர்; அவ்வூர் இன்ன தென்பது புறநானூற்றாலும் தெரிகின்றது. இவனுடைய மற்ற ஊர்களுள் எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் என்பவை தொண்டை நாட்டிலுள்ள இருபத்து நான்கு கோட்டங்களுள் மூன்று கோட்டங்களுக்குத் தலைநகரங் களாயிருந்தவை ; வேலூர், உப்புவேலூரென்று இக்காலத்து வழங்குகின்றதென்பர்," [1] என்று எழுதியுள்ளனர்.

டாக்டர் ஐயரவர்கள் இங்ஙனம் எழுதினமையால், வேலூர்க்கோட்டம், ஆமூர்க்கோட்டம், எயிற்கோட்டம் என்னும் மூன்று கோட்டங்களும் சேர்ந்தது ஓய்மானாடு கருதும் நிலை உண்டானது.  எயிற்கோட்டம் காஞ்சியைச் சுற்றியுள்ள நிலப்பகுதி. வேலூர்க்கோட்டம் என்று ஒரு கோட்டமே தொண்டைநாட்டில் இருந்ததில்லை என்பது கல்வெட்டுகளால் தெரிகிறது. ஆமூர்க்கோட்டம் என்பது செங்கற்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், மாமல்லபுரம் முதலியவற்றைக் கொண்ட நிலப்பகுதி. எனவே, ஓய்மானாடு என்பது, ஐயரவர்கள் கருத்துப்படி, செங்கற்பட்டு மாவட்டத்தில் காஞ்சீபுரப்பகுதியும் மாமல்லபுரப்பகுதியும் சேர்ந்தது என்று கொள்ளுதல் வேண்டும். அங்ஙனம் கொள்ளின், தொண்டை நாட்டின்ரண்டு கோட்டங்கள் ஓய்மானாட்டைச் சேர்ந்தனவாகக் கருதப்படும்.

ஆயின், ஓய்மானாடு என்பது திண்டிவனத்திற்கு வடக்கிலுள்ள மாவிலங்கையை வடவெல்லையாகவும், கடலைத் தென்னெல்லையாகவும், சூணாம்பேடு என்னும் ஊரையடுத்த வில்லி பாக்கத்தைக் கிழக்கெல்லையாகவும் கொண்டது. அந்நாடு மேற்கில் ஏறத்தாழ விழுப்புரம் வரையில் பரவியிருந்தது என்பது, இது வரையிற்கிடைத்துள்ள கல்வெட்டுகளால் அறியப்படும் உண்மையாகும். இந்த நான்கு எல்லைகளுக்கு உள்ளேயே எயிற்பட்டினம் இருந்தது. வேலூர், ஆமூர் என்னும் ஊர்கள் இன்றும்
இருக்கின்றன என்பது இங்கு அறியத்தகும். இன்றுள்ள மரக்காணத்தை அடுத்த கடற்கரையில் எயிற்பட்டினம் இருந்து மறைந்திருத்தல் வேண்டும் என்பது கல்வெட்டுகளிலிருந்து ஊகிக்கப்படும் செய்தியாகும். எயிற்பட்டினம் இருந்த இடத்தை அறிவதற்கு யான் இடைக்கழி நாட்டையும் அங்கிருந்து மரக்காணம் வரையில் உள்ள பாதையையும் நன்கு பார்வையிட்டேன். இன்றுள்ள திண்டிவனமே சங்ககாலக் 'கிடங்கில்' என்பது. அதற்கு வடக்கில் ஏழுகல் தொலைவிலுள்ள மேல்மாவிலங்கை, கீழ் மாவிலங்கை என்னும் இரண்டு ஊர்களும் சேர்ந்த பகுதியே பண்டைக்கால 'மாவிலங்கை' என்பது.

ஆராய்ச்சிப் பேரறிஞரான நாவலர் டாக்டர், ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள், 'பொருநர் ஆற்றுப்படைக்குரிய கரிகாலன் வேறு ; பட்டினப்பாலைக்குரிய திருமாவளவன் வேறு,' என்று ஓர் என்று ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியுள்ளார்.[2]  ஆராய்ச்சித் திறன் படைத்த அவர்கள் அந்த முடிவிற்கு வந்தது எனக்குக் குழப்பத்தை விளைத்தது. அவர்கள் தரும் சான்றுகளைப் பல முறை ஆராய்ந்து பார்த்த போது, அவர்கள் முடிவு பொருந்துவதன்று என்பது தெரிந்தது. அது பற்றிய விளக்கம் 'கரிகாலன்' என்னும் தலைப்பின்கீழ்த் தரப்பட்டுள்ளமை காண்க.

வடவார்க்காட்டு மாவட்டத்திலுள்ள சவ்வாது மலைகள் நன்னனது மலை நாடாகும். அவற்றுக்குத்தெற்கே உள்ள 'செங்கம்' என்னும் ஊரே நன்னனது தலை நகரான 'செங்கண்மா' என்பது. இம்மலைகள் ஏறத்தாழ நாற்பது கல் நீளமும் பத்துக்கல் அகலமும் உடையவை. யான் இந்நீண்ட மலைத்தொடரைச் சுற்றிப் பார்த்தேன்; செங்கம் என்னும் ஊரையும் அவ்வூர்க்கோயிலிலுள்ள கல்வெட்டுகளையும் பார்த்தேன்.

இன்றுள்ள காஞ்சி நகரத்திற்குக் கிழக்கிலுள்ள நிலப்பரப்பிலேயே சங்ககாலக் கச்சிமாநகர் அமைந்திருந்தது போலும்! இன்றுள்ள மதுரைக்குத் தெற்கிலும் திருப்பரங்குன்றத்துக்குக் கிழக்கிலும் சங்ககால மதுரை அமைந்திருந்தது போலும்! யான் இவ்விடங்களுக்கெல்லாம் சென்று ஆராய்ந்து, கல்வெட்டுச் சான்றுகளையும் இலக்கியச் சான்றுகளையும் கண்டறிந்து, இவை பற்றிய என் கருத்துகளைப் படவிளக்கத்துடன் அவ்வப்போது ‘கலைக்கதிர்'ப் பொங்கல் மலரிலும், 'கலைமகள்' தீபாவளி மலரிலும், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில் வெளியீடுகளிலும் வெளியிட்டு வந்தேன். அவை அனைத்தும் விளக்கத்துடன் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.[3]

பாலாற்றின் போக்கும் வெஃகாவின் போக்கும் பின் நூற்றாண்டுகளில் மாறிவிட்டன. கல்வெட்டு, இலக்கியம், நேர்முக ஆராய்ச்சி ஆகிய இவற்றின் துணையால் யான் இவை பற்றிக் கண்டறிந்த உண்மைகளை இந்நூலில் எழுதியுள்ளேன்.

பத்துப்பாட்டுள் இடம் பெற்றுள்ள பிற மொழிச் சொற்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. பத்துப்பாட்டுக்கு உரை வரைந்த நச்சினார்க்கினியரது புலமைத்திறன், இறுதிப் பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராயிருந்து காலஞ்சென்ற பேராசிரியர் டாக்டர். ரா. பி. சேதுப்பிள்ளையவர்கள், 1959 ஆம் ஆண்டின் இறுதியில், 'நீங்கள் தென்னிந்திய வரலாற்றிலும் கல்வெட்டுகளிலும் பயிற்சி பெற்றிருத்தலால், மிக விரிவான முறையில் ‘பத்துப்பாட்டு' என்னும் சங்க நூலைப்பற்றிய ஆராய்ச்சி நூல் ஒன்று எழுத வேண்டும்,' என்று பணித்தார்கள். அத்திட்டத்தைப் பல்கலைக்கழக அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டார்கள்.

யான் அத்திட்டத்தின்படி கடந்த நான்கு ஆண்டுகளாகப் பத்துப்பாட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். 1963 ஆம் ஆண்டு, சூலைத்திங்கள், முதல் நாள், ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பதவி ஏற்ற பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களிடம் யான் அதுகாறும் செய்து வந்த ஆராய்ச்சியையும்  மேலும் செய்ய வேண்டியிருந்த வேலையையும் விளக்கினேன். தமிழ் ஆராய்ச்சித் துறையில் தலை சிறந்த அவர்கள், என் வேலைத்திட்டத்தைக் கேட்டு மகிழ்ந்தார்கள்; யான் சங்ககால மதுரை, சங்ககாலக் கச்சி மாநகர், எயிற்பட்டினம், மாவிலங்கை, கிடங்கில், இடைக்கழி நாடு, நன்னனது மலை நாடு என்பனவற்றை நேரிற்கண்டு ஆராய்ச்சி நிகழ்த்த வேண்டும் என்றுகூறிய போது எனக்கு மிகுந்த ஊக்கமளித்தார்கள். அவர்கள் அவ்வப்போது அளித்துவந்த ஊக்கமே இந்நூலின் பெருக்கத்திற்கும் பல புதிய செய்திகளுக்கும் அடிப்படையாகும். ஆதலின், அவர்களுக்கு எனது நன்றி உரியது.

இவ்வாராய்ச்சி புரிய எனக்கு இசைவு தந்ததுடன் இந்நூலை அச்சிட்டு உதவிய சென்னைப் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு எனது நன்றி உரித்தாகுக.

மதுரை முதலிய பல ஊர்களில் எனது ஆராய்ச்சிக்கு உதவி புரிந்த திரு. N. M. R. ஜம்புநாதன், M. A., முதலிய நண்பர் அனைவர்க்கும் எனது உளமார்ந்த நன்றி உரியது.

மா. இராசமாணிக்கம்


__________________________

குறிப்புகள்:
[1] பத்துப்பாட்டு, மூன்றாம் பதிப்பு, பாடப்பட்டோர் வரலாறு, பக். 53
[2] பழந்தமிழ் நாடு, பக். 32-49
[3] படவிளக்கங்கள் ஆசிரியரின் கையெழுத்துப் படிகளிற் காணப்படவில்லை. பதிப்பாசிரியர்.



தேமொழி

unread,
Feb 14, 2022, 5:49:59 PM2/14/22
to மின்தமிழ்
உள்ளுறை
பொருள்

அணிந்துரை
முகவுரை
1. பத்துப்பாட்டு
2. பத்துப்பாட்டின் காலம்
3. ஆற்றுப்படை இலக்கியம்
4. ஆற்றுப்படை வழிகள்
5. ஐவகை நிலங்கள்
6. நாடுகள்
7. தொண்டை நாட்டு ஊர்கள்
8. ஓய்மானாட்டு ஊர்கள்
9. சோழநாட்டு ஊர்கள்
10. பாண்டி நாட்டு ஊர்கள்
11. முருகனுக்குரிய இடங்கள்
12. கரிகாலன்
13. பெரும்பாணாற்றுப்படைக்குரிய திரையன்
14. மதுரைக்காஞ்சியில் குறிக்கப்பட்ட பாண்டிய மன்னர்
15. மதுரைக்காஞ்சியில் குறிக்கப்பட்ட மன்னர் முதலியோர்
16. ஓய்மான் நல்லியக்கோடன்
17. சிறுபாணன் குறித்த வள்ளல்கள்
18. அரசியல்
19. தொழிலும் வாணிகமும்
20. இல்லங்களும் பாத்திரங்களும்
21. உணவும் உடையும்
22. அணிகள்
23. மணப்பொருள்கள்
24. இல்வாழ்க்கை
25. விளையாட்டுகள்
26. சமயம்
27. அழகுக்கலைகள்
28. வானக்கலை.
29. நீர் நிலைகள்
30. மரஞ்செடி கொடி முதலியன
31. விலங்குகள் பறவைகள் முதலியன
32. அரிய சொற்களும் பிற மொழிச் சொற்களும்
33. பத்துப்பாட்டு ஆசிரியர்
34. புலமைத்திறன்
35. நச்சினார்க்கினியர்


பிற்சேர்க்கை :
இவ்வாராய்ச்சிக்குப் பயன்பட்ட நூல்கள்
பிற நூல்கள்
ஆங்கில நூல்கள்
 .....



தேமொழி

unread,
Feb 15, 2022, 4:53:46 PM2/15/22
to மின்தமிழ்
பத்துப்பாட்டு ஆராய்ச்சி
டாக்டர் மா. இராசமாணிக்கனார், எம்.ஏ.,எம்.ஓ.எல்.,பி.எச்.டி.

1. பத்துப்பாட்டு


தமிழ்ச்செய்யுள்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப்படும். இவை நான்கும் ஆசிரியப்பா, வெண்பா என்னும் இரண்டனுள் அடங்கும்; அஃதாவது, வஞ்சிப்பா ஆசிரியப்பாவிலும்,  கலிப்பா வெண்பாவிலும் அடங்கும். எனவே, ஆசிரியப்பாவும் வெண்பாவுமே மிக்க தொன்மை வாய்ந்தன என்பது தோற்றுகிறது. ஆசிரியப்பா மூன்றடிச்சிறுமையும் ஆயிரம் அடிப்பெருமையும் உடையது. இவை தொல்காப்பியர் கூறும் செய்திகள்[1].

ஆசிரியப்பாவில் நான்கு சீர்களைக் கொண்ட அடிகளே பெரும்பாலும் பயின்று வரும்; அகவல் ஓசை பொருந்தியிருக்கும்; இயற்சீர் பயின்றும் அயற்சீர் விரவியும், தன் தளை தழுவியும் பிற தளை மயங்கியும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் பெறாமலும் வரும்.

சங்கத் தொகை நூல்களாகிய பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காப்பியங்களும் பெரும்பாலும் அகவற்பாக்களையே பெற்றவை. ஐங்குறு நூறு, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு, பரிபாடல், கலித்தொகை என்பன ‘எட்டுத்தொகை' எனப்படும். இவற்றுள் பரிபாடல் என்னும் பாவகையில் அமைந்த பாக்களின் தொகுப்பே 'பரிபாடல்' என்பது. கலிப்பாக்களாகிய செய்யுள்களின் தொகுப்பே ' கலித்தொகை' என்பது. எஞ்சிய ஆறுநூல்களும் அகவற்பாக்களால் இயன்றவை. இவற்றுள் ஐங்குறு நூற்றுப் பாடல்கள் மூன்றடிச்சிறுமையும் ஆறடிப் பெருமையும் உடையவை; குறுந்தொகைப்பாடல்கள் நான்கடிச்சிறுமையும் எட்டடிப்பெருமையும் கொண்டவை (இரண்டு பாக்கள் மட்டும் - 307, 391 - ஒன்பதடியுடையவை). நற்றிணைப்பாக்கள் ஒன்பதடிச்சிறுமையும் பன்னிரண்டடிப் பெருமையும் உடையவை; அகநானூற்றுப் பாடல்கள் பதின்மூன்றடிச் சிறுமையும் முப்பத்தோரடிப் பெருமையும் பெற்றவை. புறநானூற்றில் நாற்பதடிப்பெருமையுள்ள பாடலும் (395) உண்டு. பதிற்றுப்பத்தில் ஐம்பத்தேழு அடிகளைக்கொண்ட பாடலும் (90)  உண்டு. ஆயின், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட நீண்ட அகவற்பாக்களும் உண்டு. அத்தகைய நீண்ட அகவற்பாக்களின் தொகுப்பே 'பத்துப்பாட்டு' என்பது.

திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டு எனப் பெயர் பெறும்.

1. திருமுருகாற்றுப்படை:
இவற்றுள் திருமுருகாற்றுப்படை என்பது 317 அடிகளையுடையது. இதன் ஆசிரியர் நக்கீரர் என்பவர். இப்பாடல் முருகனது அருளைப்பெற்ற புலவன் ஒருவன் முருகனது அருளைப்பெற அவாவும் புலவன் ஒருவனை அப்பெருமான்பால் ஆற்றுப்படுத்தும் முறையில் பாடப்பட்டதாகும்.

இப்பாடலில் முருகனுடைய திருவுருவச்சிறப்பு , மாலை விசேடங்கள்; ஊர்திகள், கொடி பற்றிய செய்திகள், அப்பெருமானுடைய மனைவியர் பூசல், சூரரமகளிர் செயல்கள், பரங்குன்றம் பழமுதிர்சோலை மலை என்பவற்றின் இயற்கைவளம், முருகனை வழிபடும் முனிவர் இயல்புகள், ஈரவுடையுடன் அருச்சகர் வழிபடுதல், முருகனுடைய ஆறுமுகங்கள் பன்னிரண்டு கைகள் ஆகியவற்றின் செயல்கள், குறமகள் முருகனை வழிபடும் முறை, அப்பெருமான் எழுந்தருளியுள்ள இடங்கள், அவன் அடியார்க்கு அருள் புரியுந்திறன் முதலியன அழகுறக் கூறப்பட்டுள்ளன.

2. பொருநர் ஆற்றுப்படை:
சோழப் பேரரசனான கரிகால் வளவனிடம் பரிசில் பெற்று மீண்ட பொருநன் ஒருவன், வறிய பொருநனை வழியிற்சந்தித்து, தான் கரிகாலனிடம் உதவி பெற்றதைக்கூறி, அவனை அவ்வேந்தன்பால் ஆற்றுப்படுத்தும் முறையில் பாடப்பட்டதே 'பொருநர் ஆற்றுப்படை' என்பது. இப்பாடல் 248 அடிகளை உடையது. இதன் ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார் என்பவர்.

வறிய பொருநனது யாழின் சிறப்பு, அவனுடன் சென்ற பாடினி வருணனை, கரிகாலன் சிறப்பு, அவன் இரவலரை வரவேற்று உண்பிக்கும் முறை, அவனது  கொடைத்தன்மை, கரிகாலன் ஆண்ட சோழநாட்டு இயற்கைவளம் முதலியன இதன்கண் பேசப்பட்டுள்ளன.

3. சிறுபாணாற்றுப்படை:
ஓய்மானாட்டை ஆண்டு வந்த நல்லியக்கோடன் என்பவனிடம் பரிசில் பெற்று மீண்டு வந்த சிறுபாணன் ஒருவன், வறிய சிறுபாணனை வழியிற்கண்டு, அவனை அவ்வள்ளல்பால் ஆற்றுப்படுத்துவதாகப் பாடப்பட்டது 'சிறுபாணாற்றுப்படை'யாகும். இப்பாட்டு 269 அடி
களைக் கொண்டது. இதனைப் பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்பவர்.

இப்பாட்டில் சேர, சோழ, பாண்டி நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும் பற்றிய செய்திகளும், நல்லியக் கோடனுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த பேகன், பாரி, காரி, ஓரி, அதியன், ஆய், நள்ளி என்ற வள்ளல்களின் கொடைத்தன்மையும், ஓய்மானாட்டுக் கடற்கரை முல்லை நிலம் மருத நிலம் பற்றிய செய்திகளும், எயிற்பட்டினம், வேலூர், ஆமூர், கிடங்கில், மாவிலங்கை ஆகிய ஊர்கள் பற்றிய விவரங்களும், நல்லியக்கோடனுடைய கொடைத்தன்மையும் பிற பண்புகளும் கூறப்பட்டுள்ளன.

4. பெரும்பாணாற்றுப்படை:
தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியைத் தலைநகராய்க் கொண்ட தொண்டை நாட்டை ஆண்டு வந்தான். அம்மன்னனிடம் பரிசில் பெற்று மீண்ட பெரும்பாணன் ஒருவன், வறிய பெரும்பாணனையும் அவன் சுற்றத்தையும் வழியிற்கண்டு, அப்பெரும்பாணனை இளந்திரையன்பால் ஆற்றுப்படுத்துவதாகப் பாடப்பட்டதே 'பெரும்பாணாற்றுப்படை'யாகும். இஃது 500 அடிகளைக் கொண்டது. இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பவர்.

வறிய பெரும்பாணன் காஞ்சி நோக்கிப் புறப்படும் இடத்திலிருந்து தொண்டைநாட்டுக் கடற்கரைப் பட்டினத்திற்குச் செல்லும் வழி, அங்கிருந்து காஞ்சிக்குச் செல்லும்வழி, இவ்விரு வழிகளிலும் உள்ள நில அமைப்பு, பெருவழிகள், பல வகை நிலங்களில் வாழும் மக்களின் உணவு, உடை, உறையுள், தொழில்கள், உள் நாட்டு வாணிகம், கடல் வாணிகம், இளந்திரையன் வீரச்சிறப்பு, கொடைச் சிறப்பு, இன்ன பிறவும் இந்நெடும்பாட்டில் இடம் பெற்றுள்ளன.

5. முல்லைப்பாட்டு:
தலைவன் போர் செய்வதற்குப் பிரிவான் என்பதைக் குறிப்பால் உணர்ந்த தலைவி வருந்துகிறாள். தலைவன் விரைவில் போர் முடித்து வருவதாகக் கூறி அவளது வருத்தத்தை மாற்றிப் பிரிகிறான். ஆயினும், தலைவி தலைவனது பிரிவாற்றாது வருந்துகின்றாள் ; பெருமுது பெண்டிர் தேற்றத் தேறுகிறாள். தலைவன் போர் முடித்து மீள்கிறான். இவற்றைச் சுவையுறக் கூறும் பாடலே 'முல்லைப்பாட்டு' என்பது. இது 103 அடிகளைக் கொண்டது. இதன் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் என்பவர்.

பெருமுது பெண்டிர் விரிச்சி பார்த்தல், பாசறை அமைப்பு, பாகர் யானைப் பேச்சுகளைப்பேசி யானைகளுக்கு உணவு அருத்துதல், பாசறையில் உள்ள பள்ளியறை இயல்பு, வீரமங்கையர் - நாழிகைக் கணக்கர் - மெய்காப்பாளர் என்பவர் செயல்கள், போரில் புண்பட்ட வீரர்களை எண்ணி அரசன் வருந்துதல், தலைவன் பிரிவால் தலைவி துன்புறுதல், மீண்டு வரும் தலைவன் கார்காலத்தில் காட்டு வழியில் தோன்றும் அழகிய காட்சியைக் காணல் முதலியன இப்பாடலுள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் உரைக்கப்பட்டுள்ளன.

6. மதுரைக்காஞ்சி:
'காஞ்சித்திணை' என்பது உலகம் நிலையாமை, செல்வம் நிலையாமை, வாழ்வு நிலையாமை எனப் பல்வேறு நிலையாமை பற்றிச் சான்றோர் கூறும் குறிப்பை உடையது. மதுரையிடத்து அரசனுக்குக் கூறிய காஞ்சி (நிலையாமை பற்றியது) ஆதலின், இப்பாடல் ' மதுரைக்காஞ்சி' எனப் பெயர் பெற்றது. பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் போர்களிலும் உலக இன்பங்களிலுமே தோய்ந்து போகாதிருக்க, அவனது அவைக்களப்புலவர் தலைவராகிய மாங்குடி மருதனார் என்ற புலவர் பெருமானார் அவனுக்கு அறிவுரை கூறும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளது. இஃது 782 அடிகளைக்கொண்டது. பத்துப்பாட்டுள் மிகப் பெரிய பாடல் இதுவே.

நெடுஞ்செழியன் தன் பகைவர்மீது படையெடுத்துச் சென்று அவர்தம் அரண்களையும் காவல் மரங்களையும் அழித்தல், சேர சோழரையும் குறுநில மன்னர் ஐவரையும் வெல்லல், பல ஊர்களைக் கைக்கொள்ளல், பகைவர் நாட்டிலிருந்து கொணர்ந்த பொருள்களைப் புலவர் முதலியவர்க்கு வழங்குதல், முன்னோர் சிறப்புகள், அம்முன்னோர் வழியில் நடத்தல், வாய்மை-பொற்பு-கொடை முதலிய நல்லியல்புகள் ஆகியவை இப்பாடலிற்கூறப்பட்டுள்ளன. பல்வேறு நிலையாமை கூறி மறுவுலக வாழ்க்கைக்குத் தேவையான அறவழியை ஆசிரியர் இப்பாடலிற்குறித்துள்ளார்; பாண்டிநாட்டு ஐவகை நிலங்களின் இயல்புகளையும் குறித்துள்ளார்; மதுரையின் சிறப்பைக் கூறத்தொடங்கி, வையை-மதுரைமதில்-அகழி ஆகியவற்றின் பெருமையைக் கூறியுள்ளார்; பின்பு நாளங்காடி, அல்லங்காடிகளை வருணித்துள்ளார்.

மதுரை மக்கள் ஒரு நாளில் மாலை முதல் மறு நாட்காலை வரையில் பொழுதுபோக்கும் முறைகளை விரித்துள்ளார்; மாலைக்காலத்தில் மங்கையர் செயல்கள், பரத்தையர் இயல்பு, கருவுயிர்த்தவர் செயல்கள், கள்வர் செயல், காவலர் செயல்கள், வைகறையில் அந்தணர் வேதம் ஓதுதல் போன்றவற்றைச் சுவையுறக் கூறியுள்ளார்; மதுரையில் அக்காலத்தில் நடைபெற்ற பல வகை விழாக்களையும் குறித்துள்ளார்; பாட்டின் இறுதியில், நெடுஞ்செழியன் நாட்காலையில் தன் வீரர்களுக்குப் பரிசில் வழங்குதலையும், இரவலர்க்குக் களிறு முதலியவற்றை வழங்கு தலையும் கூறியுள்ளார். சுருங்கக்கூறின், இப்பாடல் சங்ககாலப் பாண்டி நாட்டையும் அதன் தலைநகரான மதுரையையும் மதுரை மக்கள் வாழ்க்கையையும் பாண்டியர் சிறப்பினையும் படம் பிடித்துக் காட்டுவதென்னலாம்.

7. நெடுநல்வாடை:
நெடுநல்வாடை என்பது, பகைமேற்சென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு அவ்வருத்தம் நீங்கும்படி அவன் பகையை வென்று விரைவில் திரும்புமாறு வேண்டிக் கொற்றவையை வழிபடும் ஒருத்தி கூறுவதாய் அமைந்துள்ளது. இது 188 அடிகளையுடையது. இதனைப் பாடியவர் நக்கீரர் என்பவர்.

“தலைவனைப் பிரிந்திருந்து வருந்தும் தலைவிக்கு ஒரு பொழுது ஓரூழி போல நெடிதாகிய வாடையாய்ப் பாலையாகிய உரிப்பொருள் உணர்த்திற்று. அகத்து ஒடுங்கிப்போகம் நுகர்வார்க்குச் சிறந்த காலமாயினும், அரசன் போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறானாய், அப்போகத்தில் மனமற்று வேற்றுப்புலத்துப் போந்திருக்கின்ற இருப்பாகலின், அவற்கு நல்லதாகிய வாடை ஆயிற்று," என்னும் நச்சினார்க்கினியர் விளக்கம், பாட்டின் பெயர்க்காரணத்தை நன்கு விளக்குவதாகும். “இப்பாட்டுச் சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாமையின் அகப்பொருளாமேனும்,
        ''வேம்பு தலை யாத்த நோன்கா ழெஃகம்''
என அடையாளப்பூக் கூறினமையின், அகம் ஆகாதாயிற்று,” என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க.

குளிர்காலத்தில் மக்களும் விலங்குகளும் பறவைகளும் குளிராற்படுந்துன்பம், தலைவனைப் பிரிந்த தலைவி வாழும் அரண்மனை இயல்பு, அதன் வாயில் முதலியவற்றின் அழகு, தலைவியின் கட்டிலமைப்பு, தலைவன் பிரிவால் தலைவி வருந்தும் நிலை, மகளிரும் செவிலியரும் அவளை ஆற்றுதல், பாசறையில் அரசன் புண்பட்ட வீரர்களைப் பார்த்து ஆறுதல் கூறுதல் முதலியன இந்நெடும்பாட்டிற் குறிக்கப்பட்டுள்ளன.

8. குறிஞ்சிப்பாட்டு:
'குறிஞ்சி' என்பது புணர்தலும் புணர்தல் நிமித்தமு மாகிய ஒழுக்கம். இயற்கைப்புணர்ச்சியும் பின்பு நிகழும் புணர்ச்சிகட்கு நிமித்தங்களும் கூறப்படுதலின், பாடல் 'குறிஞ்சிப்பாட்டு' எனப் பெயர் பெற்றது.

தலைவிக்குக் காவல் மிகுதியானதும் தலைவன் மீது வேட்கை மிகுகின்றது. அவன் இரவில் வரும் வழியில் உண்டாகும் துன்பங்களை எண்ண எண்ண அவளது கவலை மிகுகின்றது; களவை வெளிப்படுத்தி விரைவில் மணம் புரிதலை விரும்புகிறாள்; அதனால், தன் தோழியிடம் களவை வெளிப்படுத்துகிறாள் (இதனைத் தோழி முன்பே அறிவாள். அவள் உதவியின்றிக் களவுப் புணர்ச்சி நடைபெறாது. எனினும், தலைவி தன் மணவிருப்பத்தைத் தோழியிடம் கூறி வற்புறுத்தலே 'தலைவி' தோழிக்கு அறத்தொடு நிற்றல்' எனப்படும்.) தோழி செவிலித்தாய்க்கு அதுகாறும் நடந்தவற்றைப் பக்குவமாக எடுத்துக் கூறித் தலைவி, தலைவன் ஒருவனோடு தொடர்பு கொண்டிருத்தலை நயம்பட உரைப்பாள். தோழி இங்ஙனம் கூறுதல் ‘தோழி அறத்தொடு நிற்றல்' எனப்பெயர் பெறும்.  இப்பாடல் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் முறையிற்பாடப்பட்டுள்ளது. 261 அடிகளைக் கொண்டது. குறிஞ்சித்திணை பற்றிப் பாடுவதில் புகழ் பெற்ற கபிலர் என்பவர் இதன் ஆசிரியர்.

தலைவி இற்செறிக்கப்பட்டமையால் தலைவனை எண்ணி உடல் மெலிகிறாள். இவ்வுண்மைக் காரணத்தை அறியாத செவிலித்தாய், வேலனையும் கட்டுவிச்சியையும் அழைத்துத் தலைவியின் உடல் மெலிவிற்குக் காரணம் கேட்கிறாள்.  அவர்கள் 'தெய்வத்தால் வந்த கெடுதல்' என்கின்றார்கள்.  அதனை நம்பிய செவிலி, பலதெய்வங்களுக்குப் பூசையிடுகிறாள்; அப்பூசைகளால் தலைவியின் உடல் நலம் பெறாததைக் கண்டு மனம் சோர்கிறாள்.

இந்த நிலையில் தலைவி தன் மணவேட்கையைத் தோழியிடம் கூறுகிறாள். தோழி அதனைச் செவிலியிடம் மிகவும் பக்குவமாகப் பகர்கிறாள்.

அவள் முதலில் தானும் தலைவியும் தினைப்புனத்தைக்காவல் செய்து பொழுது போக்கியதைக் கூறுகிறாள்; தலைவி தன்னுடன் தினைப்புனக்காவல் புரிகையில் ஒரு நாள் சுனையில் நீராடித் தொண்ணூற்றொன்பது வகை மலர்களைப் பறித்து மாலைகள் கட்டியதையும் தழையுடை தயாரித்ததையும் கூறுகிறாள்; அப்பொழுது  தான் வேட்டையாடிய விலங்கைத் தேடிக்கொண்டு அங்கு வந்த இளைஞனை வருணிக்கிறாள்; அவன் தன்னிடமும் தலைவியிடமும் நலமுறப் பேசியதைக் கூறுகிறாள்; அவ்வமயம் அங்கு வந்த மதங்கொண்ட யானையை அத்தலைவன் அம்பெய்து வெருட்டித் தங்களைக் காத்தமையை எடுத்து விளக்குகிறாள்; ஆற்றில் நீராடுகையில் தவறி விழுந்த தலைவியைக் காத்து ஆதரவு நல்கியதைக் கூறுகிறாள்; அவன் அவளை மணம் செய்வதாக வாக்களித்துக் களவுப்புணர்ச்சியை மேற்கொண்டதை மொழிகிறாள்; தலைவி இற்செறிக்கப்பட்டதும், தலைவன் இரவில் தன்னூரிலிருந்து தலைவியின் ஊருக்கு வருதலில் உள்ள துன்பங்களை எண்ணித் தலைவி வருந்துவதைக் கூறுகிறாள்; இங்ஙனம் யாவற்றையும் கூறி அவனை நினைந்து தலைவி வருந்துவதால் உடல் மெலிவுற்றதென்பதை உய்த்துணர வைக்கின்றாள்.

இந்நெடும்பாட்டில் தொண்ணூற்றொன்பது வகை மலர்களின் பெயர்கள், தலைவனது வருணனை, அந்திக் காலத்தில் நிகழும் மக்கள்-விலங்குகள் - பறவைகளின் செயல்கள், இரவில் வரும் தலைவனுக்கு வழியில் எவ்வுயிர் களால் துன்பம் உண்டாகலாம் என்று தலைவி எண்ணி அஞ்சுதல் என்பன சுவை மிக்கவை.

முல்லைப்பாட்டிலும் இக்குறிஞ்சிப்பாட்டிலும் பாட்டுடைத் தலைவர் எவரும் இல்லை ; எந்த நகர வருணனையும் இல்லை. இவை இரண்டும் அகப்பொருள் ஒன்றையே நோக்கமாகக்கொண்டு பாடப்பட்டவை. இதுவே இவற்றின் தனிச்சிறப்பு என்னலாம்.

9. பட்டினப்பாலை:
இது, தன் மனைவியை விட்டுப் பிரிந்து பொருள் தேடச் செல்லத் தொடங்கிய தலைவன் ஒருவன், தனது நெஞ்சை நோக்கி, 'தலைவியைப் பிரிந்து வாரேன்,'' என்று செலவு அழுங்கிக்கூறும் கூற்றாகச் சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. இப்பாடல் 301 அடிகளைக் கொண்டது.

பட்டினம்-காவிரிப்பூம்பட்டினம். பாலை-பிரிவு. பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணை ஆதலின், இப்பாடல் 'பட்டினப்பாலை' எனப் பெயர் பெற்றது. சோழநாட்டுத் தலைநகராய்ப் பல வளங்களும் ஒருங்கே பெற்ற காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய தலைவன், 'இத்தகைய பட்டினத்தைப் பெறுவேனாயினும், திருமாவளவன் தன் பகைவர்மீது எறிந்த வேலினும் வெம்மையுடையது நான் எனது வழியிற்கடக்க வேண்டும் கானம். அவ்வேந்தனது செங்கோலினும் குளிர்ச்சியுடையது என் தலைவியது மெல்லிய தோள். ஆதலால், நெஞ்சே, நான் வாரேன்,' எனக் கூறுமுகத்தான் கரிகாலனுடைய போர்ச்சிறப்பையும் ஆட்சிச் சிறப்பையும் பாராட்டியதாகப் புலவர் பாடியுள்ளமை, அவர் சோழவேந்தன்மீது கொண்ட பெருமதிப்பைப் புலப்படுத்துகிறது.

இப்பாடலில் சோழநாட்டு இயற்கை வளம், காவிரியின் சிறப்பு, கரிகாலன் போர்ச்சிறப்பு, கொடைச்சிறப்பு, காவிரிப்பூம்பட்டினத்துக் கடல் வாணிகம், பரதவர்களின் செயல்கள், வணிகர் - வேளாளர் செயல்கள், கடைத்தெருவின் சிறப்பு முதலியன இடம் பெற்றுள்ளன.

10. மலைபடுகடாம்:
'மலைபடுகடாம்' என்பதற்குக் 'கூத்தராற்றுப்படை' என்னும் வேறு பெயரும் உண்டு. இது பரிசில் பெற்று மீண்டுவந்த கூத்தன் ஒருவன், வறிய கூத்தனையும் அவன் சுற்றத்தவரையும் செங்கண் மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் என்பானிடம் ஆற்றுப்படுத்தும் முறையில் பாடப்பட்டது. ஐந்நூற்றெண்பத்து மூன்று அடிகளையுடையது. இதனைப் பாடியவர், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்பவர்.

நன்னனது மலையடிவார வளம், மலை வழிகள், காடுகள், மலை மீது முல்லை நிலம், பாலை நிலம், மருதநிலம், மலைகளில் கேட்கும் பலவகை ஓசைகள், மலையாளிகளின் பல திறப்பட்ட உணவுப் பொருள்கள், நவிரமலை, அங்குள்ள சிவன் கோவில், மலைகளில் உள்ள அரண்கள், நாடு காவலர் இயல்புகள், நடுகற்கள், நன்னனது அரண்மனை முற்றத்தின் சிறப்பு, நன்னன் கொடைச்சிறப்பு முதலியன அழகுறப் பேசப்பட்டுள்ளன.

பத்துப்பாட்டு என்னும் பெயர்:
நக்கீரர் இறையனார் அகப்பொருட்சூத்திரங்களுக்கு உரை கண்டார் என்பதை அவ்வகப்பொருளுரை கூறுகின்றது. அவ்வுரையில் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டியன் நெடுமாறன்மீது பாடப்பட்ட பாண்டிக்கோவைச் செய்யுள்கள் காணப்படுகின்றன; நாலடியார், சீவகசிந்தாமணி முதலிய நூல்களின் கருத்துகளும் சொற்றொடர்களும் காணப்படுகின்றன. எனவே, அவ்வுரை கி. பி. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது என்னலாம் [2].  

அக்களவியலுரையில் கடைச்சங்க நூல்கள் குறிக்கப்பட்டுள்ளன. அப்பட்டியலில் 'பத்துப்பாட்டு இடம் பெறவில்லை' என்பது கவனிக்கத்தகும். அக்காலத்தில் பத்துப்பாட்டுத் தொகுக்கப்பட்டிருக்குமாயின், அத்தொகுப்பின் பெயர் அவ்வுரையில் இடம் பெற்றிருக்குமன்றோ?

இளம்பூரணர் என்பவர் தொல்காப்பிய உரையாசிரியருள் காலத்தால் முற்பட்டவர். அவர் காலம் கி.பி. 11 அல்லது 12ஆம் நூற்றாண்டு என்னலாம்[3]. அவர் பத்துப்பாட்டுள் உள்ள ஒவ்வொரு பாட்டையும் அதனதன் தனிப்பெயர் கொண்டே கூறியுள்ளார்[4]. கி. பி. 13 ஆம் நூற்றாண்டினரான பவணந்தி முனிவர்க்குப் பிற்பட்டவரான (கி. பி. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டினரான) பேராசிரியர்[5]  இத்தொகுதியைப் 'பாட்டு' என்றே (செய்யுளியல் நூற்பா 50, 80 உரை) குறித்துள்ளார். இதனை நோக்க, இப்பாடல்கள் இளம்பூரணருக்குப் பின்பும் பேராசிரியர்க்கு முன்பும் தொகுக்கப்பட்டன என்பது தெரிகிறது. ஆயின், அப்பொழுதும் இத்தொகுதிக்குப் 'பத்துப்பாட்டு' என்னும் பெயர் அமையவில்லை என்பது கவனிக்கத்தகும்.

மயிலை நாதர் என்பவர் பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலுக்கு உரை வகுத்தவர். இவர் கி. பி. 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டினர் என்னலாம் [6]. இவரே நன்னூல் நூற்பா 387 இன் உரையில் பத்துப்பாட்டு' என்பதை முதன் முதலாகக் குறித்துள்ளார்[7].  ஆதலின், பேராசிரியர்க்குப் பின்பே (கி. பி. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டிற்குப் பின்பே) இத்தொகுதிக்குப் பத்துப்பாட்டு என்னும் பெயர் வழங்கலாயிற்று எனக் கொள்வதே பொருத்தமாகும்[8].

____________________________________________________


குறிப்புகள்:
1. தொல் - செய். நூற்பா, 105, 157
2. இலக்கிய தீபம், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை, பக். 29.
3. கலைக்களஞ்சியம், தொகுதி 2, பக். 141
4. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் இளம்பூரணர் உரையை ஏடுகளிற் கண்டு, அவர் 'பத்துப்பாட்டு' என்று கூறவில்லை என்று குறித்துள்ளனர். ஆயின், அச்சிடப்பட்டுள்ள நூல்களில் செய்யுளியல் 150 ஆம் நூற்பாவின் உரையில் 'பத்துப்பாட்டு' என்பது காணப்படுகிறது; இளம்பூரணருக்குப் பின் வந்த பேராசிரியர் 'பாட்டு' என்றே பல இடங்களிற்குறித்துள்ளார்.  தமக்கு முற்பட்ட இளம்பூரணர் பத்துப்பாட்டு என்று குறித்திருப்பாராயின், பின் வந்த பேராசிரியர் அதனையே குறித்திருத்தல் இயற்கையன்றோ ? எனவே, இளம்பூரணர் ' பத்துப்பாட்டு என்று குறிக்கவில்லை' என்பதே உண்மையாகும்.
5. கலைக்களஞ்சியம், தொகுதி 7, பக். 631.
6. கலைக்களஞ்சியம், தொகுதி 8, பக். 106.
7. இலக்கிய தீபம், எஸ். வையாபுரிப்பிள்ளை, பக். 4.
8. பத்துப்பாட்டிற்கு இலக்கணம் கூறும் பன்னிருபாட்டியல் கி. பி. 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகும்.


தேமொழி

unread,
Feb 17, 2022, 3:45:13 AM2/17/22
to மின்தமிழ்
பத்துப்பாட்டு ஆராய்ச்சி
டாக்டர் மா. இராசமாணிக்கனார்,  எம்.ஏ., எம்.ஓ.எல்., பி.எச்.டி.

2. பத்துப்பாட்டின் காலம்

முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர் கரிகாலன் மீது பொருநர் ஆற்றுப்படையைப் பாடியுள்ளார்.  கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவரும் கரிகாற் சோழன்மீது பட்டினப்பாலையைப் பாடியுள்ளார். இக்கடியலூர் உருத்திரங்கண்ணனாரே தொண்டைமான் இளந்திரையன்மீது பெரும்பாணாற்றுப்படையைப் பாடியுள்ளார். ஆதலால், கரிகாலனும் இளந்திரையனும் ஏறத்தாழ ஒரு காலத்தவர் என்று கொள்வது பொருத்தமாகும். இவருள் கரிகாலன் காலத்தைக் கண்டறியின், ஏறத்தாழ இளந்திரையன் காலமும் புலப்படலாம். கரிகாலன் காலம் யாது?

கோவல கண்ணகியர் திருமணத்தின் இறுதியில், "இமயத்தில் புலிப்பொறி பொறித்த சோழன் தன் திகிரியை உருட்டுவோனாகுக,"  என்று  சொல்லித் திருமணத்திற்கு வந்திருந்தவர் வாழ்த்தினர் என்னும் பகுதியில், சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார், அச்சோழனைக் கரிகாலன் என்றே குறித்துள்ளார். கரிகாலன் பெரும்படையுடன் வடவிந்தியாவுக்குச் சென்று இமயத்தில் புலிப்பொறி பொறித்து மீண்ட பொழுது வடவிந்தியாவில் இருந்த வச்சிரநாட்டு வேந்தன் கொற்றப்பந்தரையும், மகத நாட்டு மன்னன் பட்டி மண்டபத்தையும், அவந்தி நாட்டு அரசன் தோரணவாயிலையும் கரிகாலனுக்குப் பரிசிலாக வழங்கினர் என்று சிலப்பதிகாரம் (இந்திர விழவூரெடுத்தகாதை, அடி, 90-104) குறிக்கிறது. அடுத்துக் கானல் வரியில், சோழன் கங்கை வரையிற்சென்று மீண்டமை,
"கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி ''
என்னும் அடியாற் குறிப்பாய் உணர்த்தப்படுகிறது.  கரிகாலன் ஒருவனே அக்காலச் சோழருள் பேரரசனாய் விளங்கினான் என்பது சங்கப்பாடல்களால் தெரிகிறது. எனவே, கங்கை வரையிற்சென்று மீண்ட சோழ வேந்தன் சங்க காலத்துக் கரிகாலனாய் இருந்திருத்தல் கூடும் என்பது சங்க நூற்பயிற்சியுடையார் நன்கறிந்ததே.

கடப்பை மாவட்டமும் அதனைச் சுற்றியுள்ள பகுதியும் கி. பி. 7ஆம் நூற்றாண்டில் ரேநாண்டு எனப்பட்டன. அதனை அக்காலத்தில் ஆண்டவர், தம்மைச் சோழர் என்றும் கரிகாலன் மரபினர் என்றும் பட்டயங்களிற் குறிப்பிட்டுப் பெருமை கொண்டனர். [1]  கி. பி. 7ஆம் நூற்றாண்டில் அந்நாட்டை நேரிற்கண்ட 'யுவான்சுவாங்' என்ற சீன வழிப்போக்கன் ரேநாண்டு நாட்டைச்  'சூழிய' (சோழநாடு) என்று குறித்துள்ளான்.[2]  பின் நூற்றாண்டுகளிலே சோழப்பேரரசர்க்கடங்கிய சிற்றரசராய்க் கடப்பை குண்டூர் நெல்லூர் வடவார்க்காடு செங்கற்பட்டு மாவட்டங்களை ஆண்டுவந்தவர், தம்மைத் தெலுங்கச் சோழர் என்றும் கரிகாலன் மரபினர் என்றும் கூறிக்கொண்டதைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின் றன. [3]  இந்த ரேநாண்டுச் சோழர் கடப்பை மாவட்டத்தில் எங்ஙனம் எக்காலத்தில் இடம் பெற்றனர் என்பது கூற இயலவில்லை.

கரிகாலன் காவிரியின் கரைகளை உயர்த்தியவன் என்று தெலுங்கச் சோழர் கல்வெட்டுகள் குறிக்கின்றன. கி. பி. 12 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட கலிங்கத்துப் பரணியும் (197) இந்தச் செய்தியைக் குறித்துள்ளது. வங்க நாசிக திஸ்ஸன் (கி. பி. 111 - 114) என்பவனுடைய தந்தை காலத்தில் சோழவேந்தன் ஒருவன் பெரும்படையைத் திரட்டுவதை அறிந்து, அச்சிங்கள வேந்தன் தன் நாட்டை விழிப்புடன் காத்துவந்தான்.   ஆயினும், அவன் மகனான வங்க நாசிக திஸ்ஸன் இலங்கையை ஆண்ட பொழுது, சோழ அரசை விரிவாக்கிய சோழன் ஒருவனது படையெடுப்பு இலங்கை மீது நடைபெற்றது.  'அவன் பன்னீராயிரம் சிங்களவரைச் சிறை செய்து சோணாட்டுக்குக் கொண்டு சென்றான்; அவர்களைக்கொண்டு காவிரிக்குக் கரையிடுவித்தான், ' என்று இலங்கை வரலாறு கூறுகிறது. அவ்வரலாறே, வங்க நாசிக திஸ்ஸன் மகனான முதற்கயவாகு (கி. பி. 114 - 136) சோழ நாட்டின் மீது படையெடுத்துப் பன்னீராயிரம் தமிழரைச் சிறை பிடித்து மீண்டான் என்றும் கூறுகிறது.[4]

கரிகாலனே காவிரியின் இருமருங்கும் கரையெடுப்பித்து அதனை நாட்டிற்குப் பயன்படும்படி செய்து புகழ் எய்தியவன். இது பற்றியே இவனைப் 'பொன்னிக்கரை கண்ட பூபதி' என்று கவிச்சக்கரவர்த்தியாராகிய ஒட்டக்கூத்தர் தாமியற்றிய விக்கிரம சோழனுலாவில் புகழ்ந்துள்ளனர். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வரையப் பெற்ற (ரேநான்டுச் சோழனான) புண்ணிய குமாரனுடைய மேல் பாட்டுச் செப்பேடுகளிலும், பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளி வந்த கங்கை கொண்ட சோழனுடைய திருவாலங்காட்டுச் செப்பேடுகளிலும், வீரராசேந்திர சோழனது கன்னியா குமரிக் கல்வெட்டிலும் கரிகாலன் காவிரிக்குக் கரையமைத்து அதன் வெள்ளத்தைத் தடுத்து நாட்டிற்கு நலம் புரிந்தமை குறிக்கப் பட்டுள்ளது.  இவ்வேந்தன் அவ்வரிய செயலை எந்த யாண்டில் நிறைவேற்றினான் என்பதை,
'தொக்க கலியின் மூவாயிரத்துத் தொண்ணூற்றில்
மிக்க கரிகால வேந்தனுந்தான்- பக்கம்
அலைக்கும் புகழ்ப்பொன்னி யாறுகரை கண்டான்
மலைக்கும் புயத்தானும் வந்து'

என்ற பழைய வெண்பாவினால் நன்கறியலாம். இதனை ஆதாரமாகக் கொண்டு கணக்கிடுமிடத்து, கி. மு. முதல் நூற்றாண்டின் கடைப்பகுதியில் கரிகாற்பெருவளத்தான் காவிரியாற்றிற்குக் கரை அமைத்திருத்தல் வேண்டும் என்பது கொள்ளக்கிடக்கின்றது. மேலே குறித்துள்ள வெண்பாவின் முதலடியில் 'தொக்க சகனிற் றொளாயிரத்துத் தொண்ணூற்றில்' என்ற மற்றொரு பாடமும் காணப்படுகின்றது. இதனை நோக்குங்கால், கி. பி. 1068 ஆம் ஆண்டில் கரிகாலன் என்ற பெயருடைய சோழ மன்னன் ஒருவன் காவிரிக்குக் கரை கட்டுவித்தான் என்பது புலனாகின்றது. இக்காலப் பகுதியில் சோழ இராச்சியத்தில் ஆட்சி புரிந்துகொண்டிருந்தவன் கங்கை கொண்ட சோழனுடைய புதல்வனாகிய வீரராசேந்திர சோழனேயாவன். இவ்வேந்தனுக்கும் கரிகாலன் என்ற பெயர் வழங்கியுள்ளது. எனினும், கி. பி. 7 ஆம் நூற்றாண்டினனான ரேநாண்டுச் சோழனாகிய புண்ணிய குமாரனது மேல்பாட்டுச் செப்பேட்டில் கரிகாற்சோழன் காவிரிக்குக் கரையமைத்த செய்தி காணப்படுவதால் அந்நிகழ்ச்சி கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னரே நிகழ்ந்ததாதல் வேண்டும்.

ஆகவே, கி. மு. முதல் நூற்றாண்டிலிருந்த சோழன் கரிகாற்பெருவளத்தானாகிய திருமாவளவனே காவிரியாற்றிற்கு முதலிற் கரை அமைத்துச் சோழ மண்டலத்தை வளப்படுத்தியவன் என்பது தெளிவாம். இவ்வளவர் பெருமான் சோழ மண்டலத்தில் 'காடுகொன்று நாடாக்கிக்- குளந்தொட்டு வளம் பெருக்கி'னான்' என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் தம் பட்டினப்பாலையில் கூறியிருத்தல் உணரற்பாலதாகும். திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள அல்லூர், வடகுடி என்ற ஊர்களிலும், தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருநெய்த்தானம், திருப்பழனம் என்ற ஊர்களிலும் ஆதித்தன், முதற்பராந்தகன் ஆகிய சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டுள்ள சில கல்வெட்டுகள் காவிரிக்கரையைக் 'கரிகாலக் கரை என்று கூறுகின்றன. இக்கல்வெட்டுகளால் அவ்வேந்தர்களின் காலமாகிய கி. பி. ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் காவிரியாற்றின் வடகரையைக் 'கரிகாலக்கரை' என்றே மக்கள் வழங்கி வந்தார்கள் என்பது தெள்ளிதிற் புலனாகும். எனவே, கடைச்சங்க காலத்தில் பெரும் புகழுடன் நிலவிய சோழன் கரிகாற்பெருவளத்தான் காவிரிக்கு முதலிற் கரை அமைத்தவன் என்பதும்,  அதற்குத்  தக்க சான்றில்லை என்று சிலர் என்று சிலர் கருதுவது எவ்வாற்றானும் பொருந்தாது என்பதும் நன்கு துணியப்படும்.”[5]

இதுகாறும் கூறிய உண்மைகளைக் கொண்டு, கரிகாலன் காலம் கி. பி. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியு மென்று கொள்ளலாம். ஏறத்தாழ இக்காலமே காஞ்சியை ஆண்ட இளந்திரையன் காலமென்றும் கூறலாம்.

மாங்குடி மருதனார் என்ற புலவர் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் மீது மதுரைக் காஞ்சியைப் பாடியுள்ளார். நக்கீரர் என்ற புலவரும் அப்பாண்டியன் மீது நெடுநல்வாடையைப் பாடியுள்ளார் நக்கீரர் அகநானூற்று 141 ஆம் செய்யுளில்,
"செல்குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் "
என்று குறித்துள்ளார். இவர் கரிகாலன் காலத்தவர் என்பதற்குச் சான்றில்லை. எனவே, இவர் கரிகாலனுக்குப் பிற்பட்டவர் என்பதே பொருத்தமாகும். ஆகவே, நக்கீரராற்பாடப்பட்ட நெடுஞ்செழியனும் கரிகாலற்குப் பிற்பட்டவன் என்று கொள்வதே பொருத்தமாகும்.  கரிகாலனைப் பாடிய புலவருள் ஒருவரேனும் இந்நெடுஞ்செழியனைப் பாடாமையும் இவ்வுண்மையை உறுதிப்படுத்துகிறது என்னலாம்.[6]

பெருங்கௌசிகனார் என்ற புலவர் நன்னன் சேய் நன்னனைப் பற்றி மலைபடுகடாம் பாடியுள்ளார். இந் நன்னன் சிறந்த கொடை வள்ளல் என்று மலைபடுகடாம் (அடி 71 - 72) புகழ்வதை நோக்க, மதுரைக்காஞ்சியில் வரும்,
"பேரிசை நன்னன் பெரும் பெயர் நன்னாட்
சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு''
என்னும் அடிகள் (318 - 319) இந்நன்னனைக் குறிப்பவை என்று கருதுதல் பொருத்தமாகும் [7]. இங்ஙனம் கொள்ளின், மாங்குடி மருதனார் காலத்திலோ, சிறிது முற்பட்டோ, மலைபடுகடாம் பாடப்பட்டது என்று  கருதலாம்.

பதிற்றுப்பத்து என்னும் நூலில் உள்ள எட்டுப்பத்துகளும் கால முறைப்படி அமைந்துள்ளன. அவற்றுள் ஐந்தாம்பத்தைப் பரணர் பாடியுள்ளார். ஏழாம்பத்தைக் கபிலர் பாடியுள்ளார்.  இவ்விருவரும் பேகனைப் பாடியுள்ளனர் [8].   பரணர் கரிகாலன் தந்தையாகிய உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியைப் பாடியுள்ளார் (புறநானூறு, 4). எனவே, கபிலர் ஏறத்தாழக் கரிகாலன் காலத்தில் குறிஞ்சிப்பாட்டைப் பாடினார் என்று சொல்லுதல் பொருத்தமாகும். மேலும், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரவேந்தன், மதுரைக்காஞ்சிக்குரிய பாண்டியன் நெடுஞ்செழியனிடம் தோற்றவன். அவன் தனது பாட்டில் (புறம். 53),“கபிலன் இன்றுளனாயின், நன்றுமன்," என்று கூறியுள்ளான்.  இதனால், அவன் காலத்தில் - மதுரைக்காஞ்சி பாடப்பட்ட காலத்தில் கபிலர் இல்லை என்பது வெளிப்படை. ஆகவே, பொருநர் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு ஆகிய நான்கும் ஏறத்தாழ ஒரு காலத்தன என்று கூறலாம். மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை என்ற மூன்றும் ஏறக்குறைய ஒரு காலத்தன என்று கூறலாம்.

முல்லைப்பாட்டில் யவனரைப் பற்றியும், மிலேச்சரைப்பற்றியும் குறிப்புகள் உள்ளன. (அடி, 60-66). நெடுநல்வாடையிலும் இவ்விருவரைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன (அடி,31, 35, 101). ஆதலால், இவ்வகைக் குறிப்புகளைக் கொண்டுள்ள நூல்கள் கால முறையில் அடுத்தடுத்துத் தோன்றின என்று கொள்ளுதல் பொருத்தமே.   எனவே, நெடுநல்வாடையை அடுத்து முல்லைப்பாட்டுத் தோன்றியிருத்தல் கூடும்.[9]

பதிற்றுப்பத்தில் பத்தாம் பத்து யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியதாய் இருத்தல் கூடும் என்று அறிஞர் கருதுகின்றனர்.[10] அவன் ஐங்குறு நூற்றைத் தொகுப்பித்தவன். ஆதலால், அவன் மீது புலவர் ஒரு பத்தைப் பாடியிருக்கலாம். அவன் இறுதிப்பத்துக்கு உரியவனாயின், ஐந்தாம் பத்துக்குரிய செங்குட்டுவனுக்கு மிகவும் பிற்பட்டவனாவன்.  தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அச்சேரனைப் போரில் வென்றதைப் புறநானூற்றுச் செய்யுள் (17) ஒன்று  கூறுவதால், இப்பாண்டியன் நெடுஞ்செழியன் செங்குட்டுவனுக்குப் பிற்பட்டவன் என்று கூறலாம். பதிற்றுப்பத்தின் வைப்பு முறையை நோக்க, சேரனை வென்ற இவன் காலம் ஏறத்தாழக் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு என்னலாம்.[11] இங்ஙனம் கொள்ளின், இப்பாண்டியனைப் பற்றிய நெடுநல்வாடையும், மதுரைக்காஞ்சியும், நெடுநல்வாடையை ஒத்துள்ள முல்லைப்பாட்டும் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு நூல்கள் என்னலாம்.

சிறுபாணாற்றுப்படையில் பாரி முதலிய வள்ளல்கள் எழுவர் வரலாறுகள் இறந்த காலச் செய்திகளாய்க் கூறப்பட்டுள்ளன. இவ்வள்ளல்கள் கபிலர், பரணர், முடமோசியார், ஒளவையார் என்னும் புலவர்களால் பாடப்பட்டவர்கள்.  எனவே, இப்புலவர்களுக்குப் பிற்பட்ட காலத்தில் நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் சிறுபாண் ஆற்றுப்படையைப் பாடினார் என்று கொள்வது பொருத்தமாகும்.  எனவே,  சிறுபாணாற்றுப்படை ஏறத்தாழக் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டதெனக் கொள்ளலாம்.

இதுகாறும் கூறப்பட்ட செய்திகளைக்கொண்டு,
(1) குறிஞ்சிப்பாட்டு, பொருநர் ஆற்றுப்படை, பட்டினப் பாலை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நான்கு பாடல்களும் ஏறத்தாழக் கரிகாலன் காலத்தவை என்றும்,
(2) மலைபடுகடாம், நெடுநல்வாடை, 'மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு ஆகிய நான்கும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகலாம் என்றும், அனைத்திற்கும் இறுதியிற்பாடப்பட்ட சிறுபாணாற்றுப்படை கி. பி. 3 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் இயற்றப்பட்டதாகலாம் என்றும் கொள்வது பொருத்தமாகும். வேறுதக்க சான்றுகள் கிட்டும் வரையில் இம்முடிபைக் கொள்ளுதல் தகும். இனிப் பத்துப்பாட்டுள் எஞ்சியிருப்பது திருமுருகாற்றுப்படை ஒன்றேயாகும். இதன் காலத்தை ஆராய்வது நலம்.

திருமுருகாற்றுப்படையின் காலம்:
தொல்காப்பியர், 'கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகிய நால்வரையும் பொருளுதவி புரியும் வள்ளல்பால் ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படை,' எனக்கூறினார்.  பாணனை ஆற்றுப்படுத்துவது 'பாணாற்றுப்படை' எனவும், பொருநரை ஆற்றுப்படுத்துவது  'பொருநர் ஆற்றுப்படை' எனவும், கூத்தரை ஆற்றுப்படுத்துவது  'கூத்தர் ஆற்றுப்படை'  எனவும், விறலியை ஆற்றுப்படுத்துவது 'விறலி ஆற்றுப்படை' எனவும் பெயர்பெறும். இதனால், புலவரை ஆற்றுப்படுத்துதல் தொல்காப்பியர்க்கு முன்பும் அவர் காலத்திலும் வழக்கில் இல்லை என்பது தெளிவாகிறது. இந்நிலையில் மனிதனைத் தெய்வத்தினிடம் ஆற்றுப்படுத்தும் வழக்கம் அக்காலத்தில் அறவே இல்லை என்பது தெளிவாகும்.

புலவராற்றுப்படையின் இலக்கணம் பின் வந்த நூல்களிற்கூறப்பட்டுள்ளது.
(1) புறப்பொருள் வெண்பாமாலை ஏறத்தாழக் கி. பி. 11 ஆம் நூற்றாண்டு நூலாகும். [11a ] அந்நூலுள் புலவராற்றுப்படை என்ற பிரபந்தத்தின் இலக்கணம் முதன் முதல் கூறப்பட்டுள்ளது.
"புலவராற்றுப்படை புத்தேட்கும் உரித்தே.'' (204)

(2) பன்னிருபாட்டியல் கி. பி. 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்பது முன்பு கூறப்பட்டதன்றோ? அதிலும் புலவராற்றுப்படை இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
"இருங்கண்வானத் திமையோருழைப்
பெரும்புலவனை ஆற்றுப்படுத்தன்று''
- பாடாண் படலம், 42.

(3) கி. பி 17 ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்ட இலக்கண விளக்கம் என்னும் நூலிலும் இது கூறப்பட்டுள்ளது. [11b]
"விரும்பிய தரூஉம் விண்ணவர் தம்முழை
அரும்பெறற் புலவரை ஆற்றுப் படுத்தலும்''
-நூற்பா, 245[11c]

திருமுருகாற்றுப்படை பத்தி நூல். முருகன் அருளைப் பெற்ற புலவர் ஒருவர், பத்தி மிகுந்த மற்றொரு புலவரை அம்முருகன்பால் ஆற்றுப்படுத்துதல் முருகாற்றுப்படையின்  பொருளாகும்.  "பிற ஆற்றுப்படைகள் ஆற்றுப்படுத்தப்படுபவர்களது பெயரோடு சார்த்தி வழங்கப்படும்; ஆனால், திருமுருகாற்றுப்படை பாட்டுடைத் தலைவன் பெயரோடு சார்ந்து வழங்கும். பிறவற்றிற்காணப்படுவனவாகிய ஆற்றுப்படுத்துவானை விளித்தலும், தனது நிலையை விளக்கலும், ஆற்றுப்படுத்துவான் தனது பழைய நிலை, பரிசில் பெற்ற முறை என்பவற்றைக் கூறுதலும் இதில் விளக்கப்படாமல் உய்த்துணரவைக்கப்பட்டிருக்கின்றன.[12]

பத்துப்பாட்டைப் பதிப்பித்த டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்களுக்குக் கிடைத்த பெரும்பான்மையான ஏடுகளுள் திருமுருகாற்றுப்படை சேர்க்கப்பட்டிருக்கவில்லை. [13]  மேலும், நெடுநல்வாடை பாடிய பாடிய நக்கீரர், பேரரசர்களையும் சிற்றரசர்களையும் பாடியவர் ; திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர்,  கடவுள் பத்தியிற் சிறந்து விளங்கினவர். இவர் பாடிய திருமுருகாற்றுப்படை 11 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டிருப்பதும் இவர் பிற்காலத்தினர் என்பதையே ஆதரிக்கின்றது.  இதன் ஆசிரியரை 'நக்கீரதேவ நாயனார்' என்று 11 ஆம் திருமுறை கூறுகின்றது. [14]

இனி இப்பாடற்செய்தியைக்கொண்டு இதன் காலத்தை இங்கு ஆராய்வோம்.

பரிபாடலில் முருகன் பிறப்பு:
சிவபெருமான் உமையம்மையுடன் நெடுங்காலம் தொடர்ந்து இன்புற்றிருந்தமையால், இந்திரன் சென்று இறைவனிடம் ஒரு வரம் தருமாறு வேண்டினான்.  இறைவன் இசைவு தந்தவுடன், உமையைக்  கூடாதிருக்கும்படி சிவனை வேண்டினான்; அசுரரை அழிக்கத் தகும் சிவசத்தி பொருந்திய பிள்ளையை அருளும்படி வேண்டினான். சிவன் அவ்வேண்டுகோளுக்கு இசைந்து, தனது வீரியத்தை வெளிப்படுத்தி, அதைச் சேதப்படுத்தி, ஒரு கூறு மட்டும் இந்திரனிடம் கொடுத்தான்.

அது தேவசேனாபதியாகும் தகுதி உடையதென்று முனிவர் எழுவர் தமது யோகசத்தியால் உணர்ந்து, அதனை இந்திரனிடமிருந்து பெற்றுச்சென்று, வேள்வித் தீயிலிட்டு, அதன் வேகத்தைக் குறைத்து, அதனைத் தம் மனைவியரை உட்கொள்ளச் சொல்லினர். அருந்ததி ஒழிந்த அறுவர் அதனை உண்டு சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளைப் பெற்றனர்.

இந்திரன் பொறாமை கொண்டு அக்குழந்தைகளின் மீது தன் வச்சிராயுதத்தை எறிய, குழந்தைகள் ஆறும் ஆறு முகமும் பன்னிரண்டு கைகளும்  உடைய ஒரே குழந்தையாய் மாறிவிட்டன. கடுவன் இளவெயினனார் என்ற புலவர் இச்செய்தியினை 5 ஆம் பரிபாடலில் (அடி, 26 - 55 ) கூறியுள்ளார்.

இக்கதையை ஒப்புக்கொண்டாற்போலவே ஆசிரியர் நல்லந்துவனார் எட்டாம் பரிபாடலில் (அடி, 127 - 128),
"மறு மிடற் றண்ணற்கு மாசிலோன் தந்த
     நெறிநீர் அருவி அசும்புறு செல்வம்''
என்று பாடியுள்ளார்.

முருகன் பிறந்தவுடன் இந்திரன் பொறாமை கொண்டு அக்குழந்தையைத் தன்  வச்சிராயுதத்தால் தாக்கினான் என்று கடுவன் இளவெயினனார் பாடியதற்கேற்பவே, கேசவனார் தம் பாடலில் (பரிபாடல் 14, அடி, 25-26),
"பிறந்த ஞான்றே நின்னை யுட்கிச்
     சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே"
என்று பாடியுள்ளது நோக்கற்பாலது.
 
திருமுருகாற்றுப்படையில் முருகன் பிறப்பு:
திருமுருகாற்றுப்படையில் (அடி, 254 - 255),
"ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
     அறுவர் பயந்த ஆறமர் செல்வ"
என்னும் அடிகள் முருகனது பிறப்பைக் குறிக்கின்றன.  நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஆகிய ஐவருள் ஒருவன் தன் உள்ளங்கையில் (சிவன் தந்ததைப்) பெற்றான். சிவன் எதைத் தந்தான் என்பது, மூலத்தில் இல்லை.  இப்பகுதிக்கு உரையும் விளக்கமும் வரைந்துள்ள நச்சினார்க்கினியர், “ஐவருள் ஒருவன் தீ. அவன் 'அங்கையேற்ப' என்றது, இறைவனிடத்தினின்றும் இந்திரன் வாங்கிய கருப்பத்தினை முனிவர் வாங்கித் தமக்குத் தரிக்கலாகாமையின், இறைவன் கூறாகிய முத்தீக்குண்டத்து இட்டதனைக் கூறிற்று," என்று விளக்கம் தந்துள்ளார். நச்சினார்க்கினியர் பரிபாடல் 5ஆம் பாடலின் கருத்தை இங்குள்ள முதலடிக்கு ஏற்றிக் கூறியுள்ளார். இதே கருத்தினை 50 ஆம் அடியின் உரை அடியிலும் எழுதி, “இதனை, 'பாயிரும் பனிக்கடல்' என்னும் பரிபாட்டான் உணர்க. இவ்வாறன்றி, வேறு வேறு புராணம் கூறுவாரும் உளர்." என்றும் எழுதியுள்ளமை நோக்கற் பாலது.

இதனை நோக்க, நச்சினார்க்கினியர் காலத்திலேயே முருகன் பிறப்புப் பற்றிப் பரிபாடற்செய்தியினும் வேறுபட்ட வரலாறு கூறப்பட்டமை தெளிவாம். அவ்வேறு பட்ட செய்தி யாது?

கந்தபுராணத்தில் முருகன் பிறப்பு:
கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம் திருவவதாரப்படலத்தில் முருகன் பிறப்புப் பற்றிக் கூறும் செய்தி பின் வருமாறு :

பிரமன் திருமால் இந்திரன் முதலியோர். சிவனைக் கண்டு, சூரன் முதலிய அசுரரை அழிக்கத்தக்க மைந்தனை உதவும்படி வேண்டினர் (செ. 42). அப்பெருமான் உடனே  தன் கண் ஆறு முகங்களைத் தோற்றுவித்தான் (செ. 43).  அவற்றிலுள்ள ஆறு நெற்றிக் கண்களிலிருந்தும் ஆறுதீப்பொறிகள் வெளிப்பட்டன (செ. 45). "இப்பொறிகள் ஒரு மைந்தன் உருவத்தைப் பெறும். அம்மைந்தன் அசுரரை வெல்வான். நீங்கள் இப்பொறிகளைக் கங்கையில் விடுங்கள். கங்கை சரவணப் பொய்கையில் இவற்றை உய்க்கும்,” என்றனன் (55); காற்றுத்தேவனையும் தீத்தேவனையும் நோக்கி, "நீவிர் இருவீரும் இப்பொறிகளைக் கங்கையில் விடுமின்,” என்று பணித்தான் (66 - 67).  காற்றுத்தேவன் சிவனை வணங்கி, அத்தீப்பொறிகளைத் தன் தலை மீது தாங்கிக்கொண்டு தீக்கடவுளுடன் சென்றான்(77);  வழியில் அவற்றைத் தீக்கடவுள் தலைமீது வைத்தான் (84). தீக்கடவுள் அவற்றைக் கொண்டு சென்று கங்கையில் இட்டான் (85).   கங்கை அவற்றைச் சரவணப் பொய்கையில் உய்த்தது (87).

இறைவன் அருளால் அப்பொறிகள் ஆறு முகங் களையும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரு குழந்தையாய் விளங்க, அக்குழந்தை தாமரை மலர்மீது வீற்றிருந்தது (92 - 96).   அதனைக் கண்ட அரி முதலிய அமரர் குழந்தையைப் பாலூட்டி வளர்க்கும்படி கார்த்திகை மாதர் அறுவரை ஏவினர் (114 - 115). அவ்வறுவரும் தன்னை நோக்கி அன்புடன் வருதலைக் கண்ட ‘அறுமுக ஒருவன் வேறாய் அச்சிறார் உருவம் கொண்டான்' (செ. 116).

திருமுருகாற்றுப்படை குறிக்கும் முருகன் பிறப்பும் வளர்ப்பும்:
சிவபிரானிடமிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகளை முதலில் ஏற்றவன் காற்றுக்கடவுள் (ஐவருள் ஒருவன்) என்பது கந்தபுராண வரலாற்றால் தெரிகிறது. அவன் அவற்றை முதலில் தன் அங்கையில் ஏற்ற பின்னரே தலை மீது வைத்திருத்தல் இயல்பாகும். முருகன் கார்த்திகைப் பெண்கள் தன்னை அடைதற்கு முன்பு ஆறு முகங்களைக் கொண்ட ஒரே குழந்தையாய் இருந்தான். பின்னரே தாய்மார் அறுவர்க்கு ஏற்ப ஆறு குழந்தைகளாய் மாறினான் என்பது கந்தபுராண வரலாறு. ஆயினும்,  முனிவர் மனைவியர் அறுவரே ஆறு பிள்ளைகளைப் பெற்றனர் என்பது பரிபாடற்செய்தியாகும்.
"அறுவர் பயந்த ஆறமர் செல்வ"
என்று திருமுருகாற்றுப்படையில் குறித்தமை, ஆறு தீப்பொறிகளிலிருந்து பிறந்த முருகனை அறுவர் பாலூட்டி வளர்த்தமை பற்றி உபசார வழக்காய் அமைந்ததாகும்.

கண்ணனைப் பெற்றவள் தேவகி;  வளர்த்தவள் யசோதை.   ஆயினும், யசோதை கண்ணனை நோக்கி, 'பெற்ற எனக்கருளி' (1:5:8) என்று கூறியதாகப் பெரியாழ்வார் பாடியுள்ளார்.

“என்ன நோன்பு நோற்றாள் கொலோ
     இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த
     இருடி கேசா முலையுணாயே'' (2:2:6)
என்று யசோதை கண்ணனைப் பாலருந்த அழைத்ததாகப் பெரியாழ்வார் பாடியுள்ளமை காணத்தக்கது. 'உன்னைப் பெற்ற குற்றமல்லால்' (3:1:7) என்று பிறிதோரிடத்திலும் யசோதை கூறுவதாகப் பெரியாழ்வார் பாடியுள்ளார். இவ்வுபசார வழக்குப் பற்றியே 'வளர்த்த கார்த்திகை மகளிர் அறுவரும் முருகனைப் 'பயந்தவர்' என்று நக்கீரர் பாடியதாகக் கொள்வதே இங்குப் பொருத்தமாகும்.

முருகன் சிவனது வீரியத்திலிருந்து பிறந்ததை விளக்கமாகக் கூறும் (அடி, 26-55) பரிபாடல் (செ-5), 81 அடிகளை உடையது. நக்கீரர் இக்கதையையே கூற விரும்பியிருப்பின், 317 அடிகளைக் கொண்ட திருமுருகாற்றுப்படையில் பரிபாடலைப் போலவே இந்நிகழ்ச்சியை விரித்துக் கூறியிருக்கலாம். அவர் அங்ஙனம் கூறாது,
"ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ"
என இரண்டே அடிகளிற் கூறியிருத்தல், முருகன் பிறப்புப் பற்றிய பரிபாடற்செய்தி அவர்க்கு உடன் பாடன்மையை உய்த்துணர வைப்பதாகும்.

"ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப," என்பது, சிவனிடமிருந்து முதன் முறையாக வீரியத்தையோ அல்லது தீப்பொறிகளையோ தன் கைகளிற்பெற்றுக் கொண்ட ஐவருள் ஓருவனையே உணர்த்தும். பரிபாடற் கதைப்படி சிவனிடமிருந்து வீரியத்தை முதலிற் பெற்றவன் இந்திரன். இந்திரன் ஐவருள் ஒருவனாகான். அவனிடமிருந்து முனிவர் அதனைப் பெற்றனர். அவர்கள் அதனை வேள்வித்தீயில் இட்டார்கள். இங்ஙனம் இரண்டு கைம்மாறிய செய்தியை நக்கீரர் குறிக்க விரும்பியிருப்பின், அதனைத் தெளிவாகக் குறித்திருக்கலாம். இவர் அங்ஙனம் குறிக்கவில்லை. கந்தபுராணச் செய்திப்படி சிவனுடைய பொறிகள் ஆறனையும் தன் தலைமீது வைத்துக்கொண்டவன் காற்றுக்கடவுளாவன். அவன் அவற்றைக் கையில் வாங்கித் தானே தன் தலைமீது வைத்திருத்தல் கூடும்! எனவே, கந்தபுராணச் செய்தியே இவ்வடிகளுக்குப் பொருத்தமென்பது தெரிகிறது என்று கூறலாம்.

பரிபாடலில் முருகனைப்பற்றி எட்டுப் பாடல்கள் உள்ளன. அவற்றைப் புலவர் எழுவர் பாடியுள்ளனர். 5 ஆம் பாடலைப் பாடிய கடுவன் இளவெயினனார் போலவே, ஆசிரியர் - நல்லந்துவனார் 8ஆம் பாடலில், முருகன் சிவனுக்கும் உமையம்மைக்கும் பிறந்தவன் (அடி, 127 - 128) என்று கூறியுள்ளார். சிவனுடைய தீப்பொறிகளிலிருந்து முருகன் பிறந்தான் என்று கந்தபுராணம் கூறும் செய்தி முருகனைப் பற்றிய எட்டுப் பரிபாடல்களிலும் இல்லாமை கவனிக்கத்தகும். இந்தப் பிற்செய்தி சங்க காலத் தமிழகத்தில் வழக்குப் பெற்றிருப்பின், மேலே சொல்லப்பட்ட புலவர் எழுவருள் ஒருவரேனும் இதனைக் கூறியிருப்பர் அல்லரோ? அங்ஙனம் ஒருவரும் குறிப்பிடாமையை நோக்க முருகன் சிவனுக்கும் உமைக்கும் பிறந்தவன் என்ற கதை ஒன்றே சங்க காலத் தமிழகத்தில் வழக்குப் பெற்றிருந்தது என்பதே பொருந்துவதாகும்.

அடுத்து நக்கீரர் முருகனை, 'மலைமகள் மகனே', 'கொற்றவை சிறுவ', 'பழையோள் குழவி' என்று கூறியுள்ளமை, அப்பெருமான் சிவபிரானுக்கு மகனாதலின் என்க. கணவனான சிவபிரான் அருளாற்பிறந்த முருகன், அச்சிவபிரான் மனைவியான உமாதேவிக்கும் மகன் என்று உபசார வழக்காய்க் கூறுதல் பொருத்தமேயாகும்.

முருகனும் கடவுளர் பிறரும்:
புறநானூற்றில் (செ. 56) இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனைப்' பாடிய நக்கீரர், அவனை நோக்கி,
"நீ பகைவரை அழித்தலில் சிவனையொப்பாய்; வலிமையில் பலராமனையொப்பாய்; புகழில் திருமாலையொப்பாய்; முன்னியது முடிப்பதில் முருகனையொப்பாய்.  இந்நால்வுரும் ஞாலம் காக்கும் காலமுன்பினை உடையவர்; தோலா நல்லிசை உடையவர்,'' என்று  கூறியுள்ளார். இந்நக்கீரர் இப்பாடலில் சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய நால்வரையும் சமப்படுத்தியுள்ளமை தெளிவு. திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரர், "மும்மூர்த்திகளும் தத்தம் தொழில்புரியும் தலைவராகும்படி முருகன் தோன்றினான்," (அடி, 162, 172 - 176) என்று பாடியுள்ளார். இதனால், முருகன் மும்மூர்த்திகளினும் மேலானவன் என்பது இந்நக்கீரர் கருத்தென்பது தெரிகிறது.

புறநானூற்றுப்பாடலில் (56),
"ஞாலம் காக்கும் கால முன் பின்
தோலா நல்லிசை நால்வர்"
என்று நால்வரையும் சமநிலையினராகவே நக்கீரர் கூறியுள்ளார்.  அ.: தாவது, ஞாலங்காக்கும் ஞாலங்காக்கும் காலமுன்பும் தோலா நல்லிசையும் இந்நால்வர்க்கும் இயற்கையாகவே அமைந்துள்ளன என்பதை இப்பாடலில் நக்கீரர் குறித்துள்ளார். ஆயினும், திருமுருகாற்றுப்படையில் நக்கீரர், 'முருகன் தோன்றிய காரணத்தால் மும்மூர்த்திகள் தங்கள் தொழில் புரியும் தலைவர்களானார்கள்,' என்று கூறியுள்ளார். இங்ஙனம் முருகன் பிறந்த காரணத்தால் மும்மூர்த்திகள் தொழில் புரியும் தலைவர்களானார்கள் என்பதனால், அம்மும்மூர்த்திகளின் தலைமை செயற்கையாய் அமைந்தது என்பது தெரிகின்றது.

'பலரும் புகழ்கின்ற அயன், அரி, அரன் என்னும் மூவரும் தத்தமக்குரிய தொழில்களை முன்பு போல நிகழ்த்தித் தலைவராக வேண்டித் தம்முடைய சீரிய படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களைப் பண்டு போலப் பெறுமுறையினைக் குறை வேண்டிச்சேர வந்து காணும்படி முருகன் தெய்வயானையாருடன் திருவாவி நன்குடியில் இருத்தலுமுரியன்,'' என்பது நச்சினார்க்கினியர் உரை. இங்ஙனம் பொருள் கொள்ளினும், முருகன்  மும்மூர்த்திகளினும் மேலானவன் என்னும் பொருளே பெறப்படுதல் காணலாம்.

புறநானூற்றுப் பாடலில் அந்நால்வர்க் கும் அத்தொழில்கள் இயற்கையாய் அமைந்தன என்று கூறிய நக்கீரர் (அவரே திருமுருகாற்றுப்படை ஆசிரியராயின்) தம் கூற்றுக்கு மாறுபடத் தமது திருமுருகாற்றுப் படையில் கூறியிருப்பாரா?

சங்ககாலப்புலவர், நன்மாறனைப் பாடிய நக்கீரர் போலவே கடவுளர் பலரையும் சிறப்பித்தே பாடுவர்.  சான்றாகக் கடுவன் இளவெயினனார் பரிபாடலில் திருமாலையும் முருகனையும் தனித்தனி பாடலில் பாராட்டியுள்ளார். சங்ககாலப் புலவர் பெருமக்கள் பிற்காலத்தார் போல ஒரு தெய்வத்தை உயர்த்துவதற்குப் பிற தெய்வங்களைத் தாழ்த்திப் பாடினமைக்குச் சான்றில்லை.

திருமாலையும் பலதேவனையும் ' இருபெருந் தெய்வம்' என்று புறநானூற்றுப் பாடலொன்று (செ-58) காரிக்கண்ணனாரால் பாடப்பட்டது. திருமாலையும் சிவனையும் 'இருபெருந் தெய்வம்' என்று அகநானூற்றுப் பாடல் ஒன்று (செ. 360) மதுரைக் கண்ணத்தனாராற்பாடப் பட்டது. சிலப்பதிகாரம் பாடிய இளங்கோ அடிகள் சிவனையும் முருகனையும் திருமாலையும் வாயாரப் பாராட்டிப் பாடியுள்ளமையே ஏற்ற சான்றாகும்.

பரிபாடலில் (8) முருகனைக்காண மும்மூர்த்திகளும் மற்றத்தேவரும் திருப்பரங்குன்றம் வந்தனர் என்பது கூறப்பட்டுள்ள தே?' எனின், அங்கு அம் மூவரும் அவரைக் குறையிரக்க வந்தனர் என்று அப்பாடல் ஆசிரியர் கூறவில்லை; ‘நின்னைக்காண்பது காரணமாக வந்தனர்' என்றே கூறியுள்ளார். வள்ளி திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றதை 19 ஆம் பாடலைக்கொண்டு அறியலாம்.

மேலும், சிவபிரான் பிள்ளையாகிய முருகனை முழு முதற்கடவுளாக்கிச் சிவபெருமானே அவனிடம் சென்று வரம் வாங்கியதாகப் பிற்காலத்தார் பாடியது போலச் சங்ககாலப் புலவர் யாண்டும் சிவபிரானை முருகனுக்குத் தாழ்ந்தவனாகக் கூறாமையும் அறிதற்பாலது.

மும்மூர்த்திகளுக்குத் தலைமை தரும் நிலையில் முருகன் பிறந்தான் என்பது, முருகன் மும்மூர்த்திகட்கும் உயர்ந்தவன் என்று பொருள் படுவதாகும். இங்ஙனம் சங்க காலப் புலவர் யாண்டும் பாடவில்லை. முருகனை முழுமுதற்கடவுளாகக் கருதும் நிலை (கௌமார சமயம்) சங்ககாலத்திற்குப் பிற்பட்டதாகும். ஆகவே, முருகனை முழு முதற்கடவுளாகப் பாடியுள்ள திருமுருகாற்றுப்படையாசிரியரான நக்கீரர், சங்க கால நக்கீரரின் வேறாவர் என்று கொள்வதே பொருத்தமாகும்.

ஆவி நன்குடி:
சங்க கால வேளிருள் ஆவி என்பவனும் அவன் குடியினரும் ஒரு வகையினர். அவர்கள் பழநிமலை நாட்டையாண்டார்கள். வேள் ஆவி என்பவன் அவருள் முதல்வன். வேளாவியின் மரபில் வந்தவனே வையாவிக் கோப்பெரும்பேகன் என்பவன். இவன் 'ஆவியர் கோ' (புறம். 147) எனப்பட்டான். ஆவி நன்குடி என்பதற்கு (வேள்) ஆவி (க்கோவின்) நல்ல குடியிருப்பு என்பது பொருள். ஆயின், திருமுருகாற்றுப்படைப் பதிப்புகளில் 'ஆவினன்குடி' என்பதே காணப்படுகிறது. ஆ (பசு), இனன் (சூரியன்) வழிபட்டுப் பேறு பெற்ற குடியிருப்பு என்ற புராண வரலாற்றைத் தழுவி (ஆ + இனன் + குடி) ஆவினன்குடி எனப் பிற்காலத்தார் ஏடுகளில் எழுதியிருக்கலாம் என்று கொள்வது பொருத்தமாகும். அது திருத்தம் பெறாமல் அச்சிடப்பட்டுள்ளது. 'ஆவினன்குடி' என்று திருமுருகாற்றுப்படையில் கூறப்படும் இடப்பெயர் சங்ககால நூல்களில் இல்லை.

செந்தில் முருகனுக்கு உரியதாக மதுரை மருதன் இளநாகனார் புறநானூற்றில் (செ.55) பாடியுள்ளார், பரங்குன்றத்தில் முருகன் எழுந்தருளியிருப்பதாக மதுரை மருதன் இளநாகனாரும் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனாரும் அகநானூற்றில் (செ. 59, 149) பாடியுள்ளனர்.

'அலைவாய்' என்பது முருகனுக்குரியதெனப் பரணர் அகநானூற்றிற் (செ. 266) பாடியுள்ளார். திருமுருகாற்றுப்படையிலும் 'அலைவாய்' கூறப்பட்டுள்ளது. இது, 'நாமனூர் அலைவாய்' என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இதுவே செந்தில் என்பது அறிஞர் கருத்து.

செந்தில், செங்கோடு, வெண் குன்றம், ஏரகம் என்பவை முருகற்குரிய இடங்கள் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. இங்கு ஏரகம் குறிப்பிடப்பட்டுள்ளது. நவிரமலையில் காரியுண்டிக்கடவுள் கோவில் இருந்தது என்று மலைபடுகடாம் பகர்கின்றது. அக்காலத்தில் ஆவிநன்குடியில் முருகன் கோவில் இருந்திருக்குமாயின், அச்செய்தி ஐந்நூற்றுவர்க்கும் மேற்பட்ட சங்ககாலப் புலவருள் ஒருவராலேனும் குறிக்கப்பட்டிருக்குமன்றோ? மேலும், ' ஆவி நன் குடி' என்னும் பெயரே சங்ககாலப் பாக்களில் இடம் பெறவில்லை என்பதும் இங்குக் கவனிக்கத்தகும்.

அயிரை மலையைப் பாடும்போது, அம்மலை கொற்றவைக்குரிய மலையெனச் சங்ககாலப் புலவராற் பாடப் பட்டுள்ளது (பதிற்றுப்பத்து, 79). இவ்வாறே பரங்குன்றமும், செந்திலும் முருகனுக்குரியனவாகப் பாடப்பட்டுள்ளன.  பரணர் வரலாற்றுக்குறிப்பை அமைத்தே செய்யுள் பாடும் இயல்புடையவர். அவர் பேகனைப் பாடியுள்ளார். அப்பாட்டில் ஆவி நன்குடி பற்றிய பேச்சே இல்லை. அவர் காலத்தில் செந்திலைப் போலவும் பரங்குன்றம் போலவும் ஆவி நன்குடி முருகன் தலமாகச் சிறப்புற்றிருக்குமாயின், அவர் கூறாதிரார் என்பது உறுதி. இவை அனைத்தையும் நோக்கி, சங்ககாலத்தில் ஆவி நன்குடி முருகனுக்குரிய ஒரு தலமாய் இருந் திருத்தல் இயலாது என்று கருதுதல் பொருத்தமாகும்.

முடிவுரை
இவை அனைத்தையும் நடுவுநிலையிலிருந்து ஆராய்ந் தால், 'திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரர் சங்ககால  நக்கீரரின் வேறாவர் ; காலத்தாற்பிற்பட்டவர்,' என்பது தெளிவாகும்.

'திருமுருகாற்றுப்படை சங்ககாலத்திற்பாடப்பட்ட தாயினும், சைவசமயத் தொடர்பு கருதிப் பதினோராம் திருமுறையிற் சேர்க்கப்பட்டது,' என்று சிலர் கூறுவர். அங்ஙனமாயின், சங்க காலத்திலேயே முருகன்மீது பாடப்பட்டவை என்பது தெளிவாகத் தெரியும் எட்டுப் பரிபாடல்களும் அப்பதினோராந்திருமுறையிற்சேர்க்கப் படாமைக்குக் காரணம் யாது ? திருமுருகாற்றுப்படை மட்டும் அத்திருமுறையிற் சேர்க்கப்பட்டமைக்குக் காரணம் யாது?

நெடுநல்வாடையில் உள்ள சொற்கள் சிலவும் சொற்றொடர்கள் சிலவும் சிலவும் திருமுருகாற்றுப்படையிலும் வருவதால், இப்பாடல்களையும் சங்ககால நக்கீரரே பாடியிருக்கலாம் என்பது சிலர் கருத்து. சிலப்பதிகாரச் சொற்களும் தொடர்களும் மணிமேகலையில் வருவதை அறிஞர் நன்கு அறிவர்; எனவே, அவ்விரு நூல்களையும் பாடியவர் ஒருவரே என்று சொல்லக்கூடுமா? காலத்தால் முற்பட்டவருடைய சொற்களையும் தொடர்களையும் சிறந்த கருத்துகளையும் பிற்காலப் புலவர் தம் பாக்களிற் கையாளுதல் இயல்பென்பதை அறிஞர் அறிவர். இவை அனைத்தையும் நோக்கத் திருமுருகாற்றுப்படை சங்ககால நக்கீரராற் பாடப்பட்ட தன்று என்று கொள்வதே பொருத்தமாகும்.

திருமுருகாற்றுப்படையின் நடை சங்கச் செய்யுள்களின் நடையை ஏறத்தாழ ஒத்துள்ளது; சங்ககாலக் குறிஞ்சி நிலமக்களது முருகவழிபாட்டை நன்கு படம் பிடித்துக்காட்டுகிறது; கி. பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருமுறைப்பாடல்களிற் குறிப்பிடப்பட்ட ‘திரு' என்னும் அடைமொழியைத் திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டுள்ள தலங்கள் பெறவில்லை.

முருக வணக்கம் சங்ககாலத்திற் சிறப்புற்றிருந்தது. பரிபாடலில் முருகனைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கி. பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் உண்டான நூற்றாண்டுகளில் சிவவணக்கமே சிறப்புறலாயிற்று என்பதற்குப் பன்னிரு திருமுறைகளே ஏற்ற சான்றாகும். இவை அனைத்தையும் நோக்க, திருமுருகாற்றுப்படை சங்ககாலத்திற்குப் பின்பும் (கி. பி. 300க்குப் பின்பு) அப்பர் சம்பந்தர்க்கு முன்பும் (கி. பி. 600க்கு முன்பு) பாடப்பட்டிருக்கலாம் என்று கூறுதல் பொருத்தமாகும். [15]


________________________________________________________

குறிப்புகள்:
1. Epigraphia Indica, Vol. XI, p. 340.
2. Watters, Vol. 1, pp. 225 and 341.
3. History of the Tamils, P. T. S. Aiyangar, pp. 359-360.
4. History of Ceylon, Vol. I, part I, pp. 175-195.
5. பிற்காலச் சோழர் சரித்திரம், T. V. சதாசிவ பண்டாரத்தார், மூன்றாம் பகுதி, பக். 84 - 86.
6. History of Tamil Language and Literature, S. Vaiyapuri Pillai, pp: 33-34.
7. கொண்கானங்கிழானாகிய நன்னன் பெண்கொலை புரிந்தவனாதலின், அவனையும் அவன் மரபினரையும் புலவர் பாடாதொழிந்தனர் (புறம். 151). ஆதலின், இந்த நன்னன் அந்த நன்னன் மரபினரினும் வேறானவன்  எனக் கொள்வது பொருத்தமாகும்.  இவன்  செங்கண்மா (செங்கம்)  நகரை ஆண்டவன்  என்று கொள்வதே ஏற்புடையது என்னலாம்.
8. புறம். 143-144.
9. இலக்கிய தீபம். எஸ். வையாபுரிப்பிள்ளை, பக். 8-9.
10. History of Tamil Language and Literature, S. Vaiyapuri Pillai, p. 37.
11. பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையவர்கள் இந்தப் பாண்டியன் காலம் ஏறத்தாழக் கி. பி. 250 என்று குறித்துள்ளனர். Vide his History of Tamil Language and Literature, pp. 35-36.
11a. Ibid. 55
11b. Tamil Lexicon, Vol. I, p. 338
11c. இந் நூற்பாவின் இடையில் தொல்காப்பியர் ஆற்றுப்படை பற்றிக்கூறிய ('கூத்தரும் பாணரும்... தெரிந்த' என வரும்) அடிகள் அங்ஙனமே தரப்பட்டுள்ளன ; இருபது அடிகளுக்குப் பின்னர்ப் புலவராற்றுப்படைக்குரிய (மேலே காட்டப்பட்ட) இரண்டு அடிகள் தரப்பட்டுள்ளன. இங்ஙனம் வேறு பிரித்துக் கூறலே புலவராற்றுப்படை தொல்காப்பியர்க்குப் பிற்பட்டது என்பதை நன்கு உணர்த்துவதாகும்.
12. பத்துப்பாட்டு, மூன்றாம் பதிப்பின் முன்னுரை, பக். 12
13. History of Tamil Language and Literature, S. Vaiyapuri Pillai, p. 34.
14. இலக்கிய தீபம், எஸ். வையாபுரிப்பிள்ளை, பக். 32-39
15. The poem on all sides is admitted to be anterior to Tevaram and other Saivite works.--Professor T. P. Minakshisundaram's 61st Birth day Commemoration Volume, p. 70.


Reply all
Reply to author
Forward
0 new messages