திருநறுங்கொன்றை.
திருநறுங்கொண்டை, திருநறுங்குன்றம், திருநறுங்குணம், திருநறுங்கொன்றை–எந்தப் பெயரால் அழைக்கலாம்?
இங்குக் குன்றின்மீதுதான் சமணக் கோயில்கள் அமைந்துள்ளன. எனவே, திருநறுங் குன்றம் என அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
ஆனாலும், 1994இல் வெளியிடப்பட்ட விழுப்புரம் மாவட்ட அரசிதழில் “திருநறுங் கொன்றை” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு சுமார் 60 அடி உயரம் உள்ள பாறைக் குன்றில் பார்சுவ நாதர் மற்றும் சந்திர நாதர் கோயில்கள் ஒருங்கே அமைந்துள்ளன.
பார்சுவநாதர், அப்பாண்டை நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
அப்பாண்டை நாதர் உலா மற்றும் திருநறுங்கொண்டை மலைப்பதிகம் போன்ற நூல்கள் இத்தலத்தின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றன.
இப்பகுதியில் சமணத் துறவிகளின் வீரச்சங்கம் நிறுவப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது. இதனை இங்குள்ள 12 கற்படுக்கைகள் மற்றும் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
இந்தத் துறவிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சமண மதத்தைப் பரப்பியுள்ளனர்.
அப்பாண்டை நாதர் கோயிலில் சோழர் காலத்தைச் சார்ந்த சந்திர நாதர், நேமிநாதர், தரும தேவி உள்ளிட்டோரின் உலோகத் திருமேனிகள் காணப்படுகின்றன.
முதலாம் இராசராசன், விக்கிரமச் சோழன், மூன்றாம் குலோத்துங்கன், ஏழிசை மோகன காடவராயன், சடையவர்மன் சுந்தர பாண்டியன், மாறவர்ம விக்கிரம பாண்டியன் ஆகியோரதுக் காலங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
சமணக் கோயிலுக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்ட விவரங்களைத் தெரிவிக்கின்றன இக்கல்வெட்டுகள்.
குன்றின் அருகில் உள்ள ஏரியின் பெயர், குந்தவைப் பேரேரி என்பதாகும்.
திருநறுங்கொன்றையைப் பற்றி பேசும்போது, இராமலிங்க அடிகளாரின் அணுக்கத் தொண்டராக இருந்த கல்பட்டு ஐயா நினைவுக்கு வருகிறார். அய்யாவுக்கு அடிகளார் காட்சி கொடுத்து அவரை ஆட்கொண்டத் தலம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருநறுங்கொன்றை
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மடப்பட்டு, பெரிய செவலை, பிள்ளையார்குப்பம் வழியாகச் சென்று இந்த ஊரை அடையலாம்.