காணொளி: வரலாற்று ஆய்வின் வழிகாட்டி - டாக்டர் இரா. கலைக்கோவன்

88 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 9, 2025, 9:32:51 PMJul 9
to மின்தமிழ்
டாக்டர் கலைக்கோவன் -மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம்
பேசும் தலைமை - நியூஸ் 7 தமிழ்  
Dr.Kalakikovan, Rajamanickanar institute of historic research in Peasum Thalamai | News7 Tamil
dr  kalaikovan1.jpg
வரலாற்று ஆர்வலர்கள் நேரம் ஒதுக்கி கட்டாயம் காண வேண்டிய ஒரு காணொளி
மாடக் கோயில், குடைவரை கோயில், களப்பிரர் காலம் என பற்பல தகவல்கள் !!!!!
இறுதியில் வரலாறு, வரலாற்றுத் தடயங்கள் பாதுகாப்பு  குறித்து மிக முக்கியமான அறிவுரையும்  உள்ளது.
https://www.youtube.com/watch?v=rmQ1t5q2MxA

தேமொழி

unread,
Jul 12, 2025, 4:08:59 AMJul 12
to மின்தமிழ்
காணொளி:  
நாகப்பட்டினத்தின் புகழ்பெற்ற மாடக்கோவில்கள் 
maadakoyil.jpg
டாக்டர் இரா. கலைக்கோவன் -மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம்

கோயில்களைக் கட்டிடக் கலை மற்றும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் பார்க்க  வேண்டிய  தேவை இருக்கிறது  என்பது புரிகிறது !!

தேமொழி

unread,
Jul 26, 2025, 4:25:17 PMJul 26
to மின்தமிழ்
Dr  Kalaikovan.jpg
Gangaikonda Cholapuram was established by King Rajendra Chola I

தேமொழி

unread,
Aug 5, 2025, 9:36:17 PMAug 5
to மின்தமிழ்
மதநல்லிணக்க மதுரை அன்றும் இன்றும் . . .  மகிழ்ச்சி தரும் வரலாற்றுச்  செய்தி (இணைப்பாக)

மதுரை மீனாட்சிக் கோயிலின் மகர விளக்குத் தோரணம் . . . டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்களின் கட்டுரையிலிருந்து . . .
கீர்த்திமுகத்திற்கு நேர் கீழே தாமரைமலரில் அர்த்த பத்மாசனத்தில் பின் கைகளில் தாமரை மொட்டுகளுடன் யானைத்திருமகள் (கஜலக்ஷ்மி). முன் கைகள் காப்பும் அருளும் காட்ட, அம்மையின் இருபுறத்தும் துளைக்கைகளில் நீர்க்குடங்களுடன் அலங்கரிக்கப்பட்ட யானைகள்.

கம்பீரமும் கவர்ச்சியுமாய்த் தாமரை அடுக்கென விரிந்து கண்களை நிறைக்கும் இந்த விளக்குமாலையிலும் இரண்டு எழுத்துப் பொறிப்புகளை நளினி கண்டறிந்தார். பொ. கா. 1819இல் செதுக்கப்பட்டுள்ள அவற்றுள், மத நல்லிணக்கப் பார்வையில் அமைந்திருக்கும்வலப்புறப் பொறிப்பு அக்காலத்தே மதுரைமாவட்ட ஆட்சித்தலைவராக விளங்கிய ஆங்கிலேயரான ரோஸ்பீட்டரின் ஆணைக்கிணங்க, மதுரை மாடக்குள வட்டாட்சியர் பொறுப்பிலிருந்த திரு. சையது இஸ்மாயில் அனைத்து மக்களுக்குமாக இந்த விளக்குத்தோரணத்தை அமைத்ததாக அறிவிக்கிறது.
40.jpeg
41.jpeg
42.jpeg
43.jpeg

***

தேமொழி

unread,
Aug 11, 2025, 1:21:24 AMAug 11
to மின்தமிழ்
Dr Kalaikovan.jpg

நாகபட்டிணம் மாடக்கோயில்களின் வரலாற்றுப் பங்களிப்பு
—  முனைவர்.  இரா. கலைக்கோவன்
நாகபட்டிணம் 4 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா 2025
https://www.youtube.com/live/TftvgDacL7U?t=15896s
[Time @4:27:45]

தேமொழி

unread,
Sep 6, 2025, 11:52:04 PMSep 6
to மின்தமிழ்

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்
- இரா. கலைக்கோவன்

3. மீனாட்சி நாயக்கர் விளக்குமாலை

அன்புள்ள வாருணி, நீ எழுதியிருப்பது சரிதான். தேவார மூவரில் நீண்ட காலம் மதுரையில் தங்கியவரும் அதைப் பாடிப் பதிகம் வளர்த்தவரும் சம்பந்தர்தான். அதனால்தான், ஆலவாய்க்கு 9 பதிகங்கள் வாய்த்துள்ளன. சம்பந்தருக்கும் மதுரைக்கும் உள்ள உறவைச் சேக்கிழார் விரிவாகப் பேசியிருக்கிறார். அது தொடர்பான பெரியபுராணக் காட்சிகள் படிக்கத் தக்கவை. பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியின் அழைப்பேற்று அரசரின் வெப்புநோய் தீர்த்ததுடன், சைவத்தின் பேரெழுச்சி யைப் பதிவுசெய்தவர் சம்பந்தர். அவரது பதிகங்களே அதற்குச்சான்று. நாவுக்கரசரும் மதுரைக் கோயிலைப் பாடியுள்ளார். சுந்தரர் பதிகந்தான் கிடைக்கவில்லை என்றாலும், சேக்கிழாரின் கூற்றை ஏற்றால் சுந்தரரும் ஆலவாய் வந்தமை புலப்படும்.

பத்திமைக் காலத்தில் பாண்டிய நாட்டின் தனிப்பெருங் கோயிலாய்த் திகழ்ந்த ஆலவாய் தொடர்ந்து வந்த அரசமரபுகளால் புரக்கப்பட்டாலும், அதன் மலர்ச்சி குன்றிய காலமும் இருக்கத்தான் செய்தது. அதனால்தான், கோயில் வளாகத்தில் பழங்கல்வெட்டுகளைக்  காணக்கூடவில்லை. நடுவணரசின் தொல்லியல்துறை இவ்வளாகத்திலிருந்து படியெடுத்துள்ள 64 கல்வெட்டுகளில் முதலாம் சடையவர்மர் குலசேகர பாண்டியரின் கல்வெட்டே (பொ. கா. 1194) காலத்தால் முற்பட்டது.

வாருணி, மதுரைக் கோயில் என்றாலே நம் நினைவுக்கு வருபவர்கள் நாயக்க அரசர்கள்தான். ஆனால், வரலாற்றுச் சான்றுகளைப் புரட்டினால், இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலமே இக்கோயிலை வளப்படுத்தியதென்பது புலப்படும். இங்குள்ள 44 கல்வெட்டுகள் அவர்தம் கொடையுள்ளம் காட்டுகின்றன. நடுவணரசின் கணக்குப்படி விஜயநகர நாயக்க அரசர்களின் பதிவுகளாய் இங்குள்ளவை 19தான். இந்தச் சூழலில்தான் வாருணி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை எங்கள் ஆய்வுமையம் அணுகியது.

ஒலி ஒளிக் காட்சிக்கான கருத்துருவைப் பெறக் கோயில் முழுவதும் உலாவந்தோம். அங்குலம் அங்குலமாக அவ்வளாகத்தை ஆராய்ந்த சூழலில்தான், அதுவரை வெளிச்சம் காணாத பல காட்சிகள் எங்களுக்காகவே காத்திருந்தாற் போல் பளிச்சென்று தோற்றம் தந்தன. கோயிலின் எல்லாப் பகுதிகளிலும் இப்படி இலைமறை காயாக இருந்து கண்காட்டியவற்றுள் இந்த விளக்குத்தோரணங்களும் அடக்கம்.

நாயக்க அரசமரபின் நாயகராக விளங்கிய திருமலை நாயக்கரைக் கேள்விப்படாதவர் இருக்கமுடியாது. அவருடைய அமைச்சர்களுள் ஒருவராக வாழ்ந்தவர்தான் மூன்றாம் மீனாட்சி நாயக்கர். அவரை ஆதி மீனாட்சி நாயக்கர் என்று பெருமைப்படுத்துகிறது கல்வெட்டு. ஆலவாய்க் கோயிலைத் திருமலை நாயக்கர் விரிவாக்கம் செய்தபோது தம் பணியாக ஒரு மண்டபத்தை எடுப்பித்தார் இவ்வமைச்சர். அவர் பெயராலேயே இன்றும் விளங்கும் அம்மண்டபத்தின் பின்பகுதியில் அதையடுத்துள்ள இருட்டு மண்டபமாம் முதலிப்பிள்ளை மண்டபத்தின் முன்னுள்ளது மூன்றாவது விளக்குத் தோரணம். அதில் நம் பேராசிரியர் நளினி கண்டறிந்த 82 வரிகளில் அமைந்த தமிழ் எழுத்துப் பொறிப்பு இந்த விளக்கு மாலையை, 'ஆதிமீனாட்சி நாயக்கர் உபயம்' என்கிறது.

ரோஸ்பீட்டர் தோரணம் போலவே கீழே யானைகள் மேலே காவலர்கள் கொண்டெழும் இந்தத் தோரணம், இருபுறத்தும் 6.89 மீட்டர் உயர்ந்து, பிறைநிலவாய் வளைந்து, கீர்த்திமுகத் தலைப்பில் முடிகிறது. வளைவின் தொடக்கத்தில் பக்கத்திற்கு ஒருவராக உச்சிக்கொண்டையிட்ட வானவமகளிர் ஒரு கையில் அகலும் மறு கையில் மணியுமாய் நிற்க, இருபுறத்தும் அவர்களைத் தொடர்பவர்களாய் உயர்த்திய முழங்காலுடன் ஊர்த்வஜாநு கரணத்தில் பக்கத்திற்கு 13 அழகியர்.

இருகைகளிலும் மலர் கொண்ட இந்தக் கரணச் செல்விகளால் நாயக்கர் தோரணம் ரோஸ்பீட்டர் படைப்பை அழகில் விஞ்சி  நிற்கிறது. செல்வியர் தலைக்கருகே நீளும் தண்டுகள் அகலேந்த, கீர்த்தி முகத்திற்குக் கீழிருக்குமாறு யானைத்திருமகள்.

மீனாட்சிநாயக்கரின் ஆதிதோரணம் சிதைந்ததால் பொ. கா. 1898 நவம்பர் 21-ஆம் நாள் சிவகங்கை ஜமீன்தார் கௌரி வல்லபதேவர், மீனாட்சி நாயக்கரின் வாரிசு பங்காரு திருமலைசாமி மேலாண்மையில் செய்து வைக்கப்பட்ட இத் தோரணம் ஆவியூரை உள்ளடக்கிய 5 ஊர்களின் வருவாயில் உருவானது. 1300 அகல்களுடன் எண்ணிக்கையிலும் வடிவமைப்பிலும் கம்பீரத்திலும் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து விளக்குமாலைகளையும் விஞ்சி ஒளிரும் இந்த அழகிய தோரணத்தைச் செய்த பெருமைக்குரியவர் திருநெல்வேலி முத்துசாமி ஆசாரியின் மகனான திரு. இராசகோபால் ஆசாரி.

கலைத்திறன் படைத்த அவரது கைவளமும் கற்பனையாற்றலும் மின்னி மிளிரும் இந்த விளக்கு மாலை 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த பித்தளைப் படைப்புகளின் செழுமைக்குச் சான்றாய் நம் கண்முன் நிற்கிறது.

இதிலுள்ள எழுத்துப் பொறிப்பு இத்தோரணத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட பித்தளையின் அளவைத் தருவதுடன், தாங்கல்கள், மரஏணி ஆகியவற்றிற்கான செலவினங்களையும் கணக்குச் சுத்தமாகப் பதிவுசெய்துள்ளது.

இந்த எழுத்துப்பொறிப்பு இல்லாது போயிருந்தாலோ அல்லது கண்டறியப்படாதிருந்தாலோ தோரணத்தின் வரலாறே இருளடைந்திருக்கும். ஒளி உமிழவே உருவாக்கப்பட்ட இந்த அகல்தோரணத்தில், அதன் வரலாற்றைப் பொறித்தவர்களுக்கும் அதைத்தம் கடினஉழைப்பால் கண்டறிந்து வெளிப்படுத்தியவருக்கும் நன்றி சொல்வோம் வாருணி. இது போன்ற பதிவுகள்தான் நமக்கு வரலாறு தருகின்றன.

அதனால், இத்தகு பதிவுகளை உருவாக்குவதுடன் உருக்குலையாமல் காப்பதும் நம் கடமை.

நன்றி: "இலக்கியப்பீடம்"
செப்டம்பர் 2025, பக்கம் 41 - 45


Dr. R. Kalaikovan1.jpeg
Dr. R. Kalaikovan2.jpeg

Dr. R. Kalaikovan3.jpeg
Dr. R. Kalaikovan4.jpeg
Dr. R. Kalaikovan5.jpeg

------------------------------------------------------------------

தேமொழி

unread,
Oct 6, 2025, 8:12:22 PM (2 days ago) Oct 6
to மின்தமிழ்
மதுரை மீனாட்சிக் கோயிலில்  கண்டதும் கற்றதும்
 -  முனைவர் மரு. இரா. கலைக்கோவன்

4. அம்மன் கோயில் அம்மை


அன்புள்ள வாருணி, சிவபெருமான் 108 தாண்டவங்களை நிகழ்த்தியதாக ஆகமங்கள் பேசினாலும், அவற்றுள் ஆனந்ததாண்டவமும் ஊர்த்வதாண்டவமுமே தமிழ்நாட்டுக் கோயில்களில் பரவலாகக் காட்டப்பட்டுள்ளன. சிற்றுருவச் சிற்பந்தொட்டுப் பேரளவிலான படப்பிடிப்புவரை இவ்விரு தாண்டவக் கோலங்களும் பல்லவரில் தொடங்கி நாயக்கர் காலம்வரை ஏறத்தாழ 12 நூற்றாண்டுகளாகப் பல்வேறு அளவுகளில் தமிழ்நாட்டுக் கோயில்களில் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.

இச்சிற்பங்களுள் சில ஆடல்நாயகராக சிவபெருமானை மட்டும் கொள்ள, சிலவற்றில் அந்த ஆடலைக் காண்பவராக உமையன்னையும் ஆடலுக்கு இசை கூட்டுபவர்களாக சிவபெருமானின் பூதகணங்களும் காட்சிதரக் காணலாம்.   இன்னும் சில சிற்பங்களில் இறையாடலைக் காண்பவர்களாகவும் அதற்கு இசை தருபவர்களாகவும் விஷ்ணு, நான்முகன் உள்ளிட்ட விண்ணுலகினரும் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையை இணைத்தவர் சோழஅரசி செம்பியன்மாதேவி.  

ஆனந்ததாண்டவத்தில் சிவபெருமானின் வலக்கால் தரையிலோ அல்லது முயலகன் என்னும் குறளரக்கன் மீதோ ஊன்ற, இடக்கால் உயர்ந்து முழங்காலளவில் மடிக்கப்பட்டு வலப்புறம் வீசப்பட்டிருக்கும்.  இறைவனின் முன்னிரு கைகளில் வலக்கை காக்கும் குறிப்பிலிருக்க, இடக்கை இடக்கால் போலவே வலப்புறம் வீசப்பட்டு வேழமுத்திரையில் அமையும்.

ஊர்த்வதாண்டவம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதில், இறைவனின் ஒருகால் தரையிலோ, முயலகன் மீதோ ஊன்றியிருக்கும். மற்றொரு காலோ மார்புக்கு முன் அல்லது பின்னிருக்குமாறு மேல் நோக்கி உயர்த்தப்பட்டிருக்கும். இத்தாண்டவத்திலும் வல முன் கை காக்கும் குறிப்பிலேயே அமையும். ஆனால், இட முன் கை மாறுபட்ட குறிப்புகளில் அமைவது சிற்பங்கள் காட்டும் காட்சியாகும்.

தமிழ்நாட்டிலுள்ள பல்லவக் கற்றளிகளில் சிவபெருமானின் ஊர்த்வதாண்டவம் இடம்பெற, விஜயாலய சோழர்களின் கட்டுமானங்களில் ஆனந்த தாண்டவம் கோலோச்சியது. சாளுக்கியச் சோழர் கோயில்கள் மீண்டும் ஊர்த்வதாண்டவத் திற்குத் திரும்ப, நாயக்கர்கள் அதைக் கொண்டாடிப் பின்பற்றினர். இப்படி ஆடல்நிலை மாறினாலும் பெரும்பாலான கோயில்களில் இரண்டு தாண்டவங்களில் ஒன்று தவறாமல் இடம்பெற்றது. மிகச்சில வளாகங்களே சிவபெருமானின் இரு ஆடற்கோலங்களையும் பெற்றுச் சிறந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது மதுரை மீனாட்சியம்மன் கோயில்.

இந்த வளாகத்தில் ஆய்வுசெய்தபோது சிவபெருமானின் இரண்டு அழகிய ஆனந்ததாண்டவச் சிற்பங்களையும் மூன்று ஊர்த்வதாண்டவச் சிற்பங்களையும் கண்டு மகிழ வாய்த்தது. இந்தக் கண்டுபிடிப்பின் கூடுதல் சிறப்பு, இவை ஐந்திலும் இறையாடலின் உடனிருப்பாகக் காரைக்கால் அம்மையும் இடம்பெற்றிருப்பதுதான். செம்பியன்மாதேவியால் இறையாடல் வடிப்புகளில் இடம்பெறத் தொடங்கிய அம்மை, விஜயாலய சோழமரபின் இறுதிவரை தொடர்ந்து காட்சியானார். சாளுக்கியச் சோழர்களின் இறையாடல் சிற்பங்கள் அவரை இழந்தபோதும், நாயக்கர்கள் அம்மையை விடவில்லை. மீண்டும் பற்றி, அதை இறுகிய பற்றாகவும் மாற்றினர். அதனால்தான், மீனாட்சி அம்மன் கோயிலில் இறைவன் ஆடுமிடமெல்லாம் இசைக்கலைஞராய் அம்மையும் உடனிருக்கிறார்.

முதலில் ஆனந்ததாண்டவச் சிற்பங்களைப் பார்ப்போம் வாருணி. இரண்டு இடங்களில் இவை உள்ளன. இரண்டு தூண்களுக்கு இடைப்பட்ட சுவரில் மகரதிருவாசிக்கு நடுவில் வலக்காலை முயலகன் முதுகின் மீதும் உயர்த்தி வீசிய இடக்காலை அம்முயலகன் கையிலிருந்து சீறி வளர்ந்தோங்கி படம் விரித்திருக்கும் பாம்பின் மீதும் இருத்தி ஆனந்த   நடமிடும் இறைவனின் இடமுழங்காலை மற்றொரு பாம்பு சுற்றிப் படமெடுத்துள்ளது. அதன் தலை தொட்டவாறே இறைவனின் இட முன் கை வேழக்கையாக வீசப்பட்டுள்ளது.

பின் கைகளில் துடியும் தீயகலும் அமைய, வல முன் கையோ காக்கும் குறிப்பில், மலர்ந்த முகத்துடன் ஆடும் இறைவனின் இடப்புறத்தே அழகே உருவாய் உமை. அவரது வலப்புறம் குடமுழவுடன் நந்தியெம்பெருமான். இறைவனின் தூக்கிய திருவடிக்கருகில் தாம் விரும்பி ஏற்ற பேயுருவில் கைகளில் செண்டுதாளங்களுடன் காரைக்காலம்மை. இலலிதாசனத்தில் இடக்கால் மடித்து வலக்காலைக் குத்துக்காலாக்கி முகமெல்லாம் மலர, தம் பேற்றுக்குத் தாமே மகிழ்ந்து அம்மை தாளமிசைக்கும் அருமையான படிப்பினையம்மா இது.

வாருணி, இச்சிற்பத்தை அடியொற்றியே மற்றொரு பதிவும் அமைந்துள்ளது. எனினும், மாற்றங்கள் இல்லாமல் இல்லை இதுவும் தூண்களுக்கிடையிலான சுவரில்தான் உள்ளது. ஆனால், அந்தத் தூண்களை யாளிகள் தாங்குகின்றன. நந்திகேசுவரரின் குடமுழவை இருத்தத் தன்னையே தளமாக்கிச்சுருண்டுள்ள பாம்பு முழவின் முன்பகுதியில் படமெடுத்துள்ளது.

வலக்காலை நீட்டி, இடக்காலை மடக்கி மிக இயல்பாக அமர்ந்துள்ள நந்தியெம்பெருமான் சாய்ந்தாடி முழவிசைக்கும் அழகே அழகு. முதல் பதிவில் தாம் பாடினாற் போலவே செடித்தலைப் பேயாகக் காட்சி தரும் அம்மை, இதில் படிய வாரிய தலையராய் வடிவம் மாறியுள்ளார். முதல் பதிவு இறையாடலில் மூழ்கி மகிழ்ந்திருக்கும் முத்தாய்ப்புக் கோலம் என்றால், இந்த இரண்டாம் பதிவை ஆடலில் மயங்கிய அம்மையின் பெருங்களிப்பு நிலையாகக் குறிக்கலாம்.

குடமுழவிற்குத் தளமாகி அந்தக் கருவி எழுப்பும் தாள ஒலிக்குப் படமெடுத்தாடும் இந்தப் பாம்புப் பதிவு தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் காணமுடியாதது வாருணி. சிற்பிகளின் கற்பனையாற்றல் எப்படியெல்லாம் பெருகிப் பாயும் என்பதற்கு இந்தப் பாம்புத்தளமும் அதன் தலைவிரிப்பும் சரியான சான்றுகளம்மா.

நன்றி:  "இலக்கியப்பீடம்"
அக்டோபர் 2025  (43 - 46)

4-43.jpeg
4-44.jpeg
4-45.jpeg
4-46.jpeg

----
Reply all
Reply to author
Forward
0 new messages