மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்
- முனைவர் மரு. இரா. கலைக்கோவன்
4. அம்மன் கோயில் அம்மைஅன்புள்ள வாருணி, சிவபெருமான் 108 தாண்டவங்களை நிகழ்த்தியதாக ஆகமங்கள் பேசினாலும், அவற்றுள் ஆனந்ததாண்டவமும் ஊர்த்வதாண்டவமுமே தமிழ்நாட்டுக் கோயில்களில் பரவலாகக் காட்டப்பட்டுள்ளன. சிற்றுருவச் சிற்பந்தொட்டுப் பேரளவிலான படப்பிடிப்புவரை இவ்விரு தாண்டவக் கோலங்களும் பல்லவரில் தொடங்கி நாயக்கர் காலம்வரை ஏறத்தாழ 12 நூற்றாண்டுகளாகப் பல்வேறு அளவுகளில் தமிழ்நாட்டுக் கோயில்களில் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.
இச்சிற்பங்களுள் சில ஆடல்நாயகராக சிவபெருமானை மட்டும் கொள்ள, சிலவற்றில் அந்த ஆடலைக் காண்பவராக உமையன்னையும் ஆடலுக்கு இசை கூட்டுபவர்களாக சிவபெருமானின் பூதகணங்களும் காட்சிதரக் காணலாம். இன்னும் சில சிற்பங்களில் இறையாடலைக் காண்பவர்களாகவும் அதற்கு இசை தருபவர்களாகவும் விஷ்ணு, நான்முகன் உள்ளிட்ட விண்ணுலகினரும் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையை இணைத்தவர் சோழஅரசி செம்பியன்மாதேவி.
ஆனந்ததாண்டவத்தில் சிவபெருமானின் வலக்கால் தரையிலோ அல்லது முயலகன் என்னும் குறளரக்கன் மீதோ ஊன்ற, இடக்கால் உயர்ந்து முழங்காலளவில் மடிக்கப்பட்டு வலப்புறம் வீசப்பட்டிருக்கும். இறைவனின் முன்னிரு கைகளில் வலக்கை காக்கும் குறிப்பிலிருக்க, இடக்கை இடக்கால் போலவே வலப்புறம் வீசப்பட்டு வேழமுத்திரையில் அமையும்.
ஊர்த்வதாண்டவம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதில், இறைவனின் ஒருகால் தரையிலோ, முயலகன் மீதோ ஊன்றியிருக்கும். மற்றொரு காலோ மார்புக்கு முன் அல்லது பின்னிருக்குமாறு மேல் நோக்கி உயர்த்தப்பட்டிருக்கும். இத்தாண்டவத்திலும் வல முன் கை காக்கும் குறிப்பிலேயே அமையும். ஆனால், இட முன் கை மாறுபட்ட குறிப்புகளில் அமைவது சிற்பங்கள் காட்டும் காட்சியாகும்.
தமிழ்நாட்டிலுள்ள பல்லவக் கற்றளிகளில் சிவபெருமானின் ஊர்த்வதாண்டவம் இடம்பெற, விஜயாலய சோழர்களின் கட்டுமானங்களில் ஆனந்த தாண்டவம் கோலோச்சியது. சாளுக்கியச் சோழர் கோயில்கள் மீண்டும் ஊர்த்வதாண்டவத் திற்குத் திரும்ப, நாயக்கர்கள் அதைக் கொண்டாடிப் பின்பற்றினர். இப்படி ஆடல்நிலை மாறினாலும் பெரும்பாலான கோயில்களில் இரண்டு தாண்டவங்களில் ஒன்று தவறாமல் இடம்பெற்றது. மிகச்சில வளாகங்களே சிவபெருமானின் இரு ஆடற்கோலங்களையும் பெற்றுச் சிறந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது மதுரை மீனாட்சியம்மன் கோயில்.
இந்த வளாகத்தில் ஆய்வுசெய்தபோது சிவபெருமானின் இரண்டு அழகிய ஆனந்ததாண்டவச் சிற்பங்களையும் மூன்று ஊர்த்வதாண்டவச் சிற்பங்களையும் கண்டு மகிழ வாய்த்தது. இந்தக் கண்டுபிடிப்பின் கூடுதல் சிறப்பு, இவை ஐந்திலும் இறையாடலின் உடனிருப்பாகக் காரைக்கால் அம்மையும் இடம்பெற்றிருப்பதுதான். செம்பியன்மாதேவியால் இறையாடல் வடிப்புகளில் இடம்பெறத் தொடங்கிய அம்மை, விஜயாலய சோழமரபின் இறுதிவரை தொடர்ந்து காட்சியானார். சாளுக்கியச் சோழர்களின் இறையாடல் சிற்பங்கள் அவரை இழந்தபோதும், நாயக்கர்கள் அம்மையை விடவில்லை. மீண்டும் பற்றி, அதை இறுகிய பற்றாகவும் மாற்றினர். அதனால்தான், மீனாட்சி அம்மன் கோயிலில் இறைவன் ஆடுமிடமெல்லாம் இசைக்கலைஞராய் அம்மையும் உடனிருக்கிறார்.
முதலில் ஆனந்ததாண்டவச் சிற்பங்களைப் பார்ப்போம் வாருணி. இரண்டு இடங்களில் இவை உள்ளன. இரண்டு தூண்களுக்கு இடைப்பட்ட சுவரில் மகரதிருவாசிக்கு நடுவில் வலக்காலை முயலகன் முதுகின் மீதும் உயர்த்தி வீசிய இடக்காலை அம்முயலகன் கையிலிருந்து சீறி வளர்ந்தோங்கி படம் விரித்திருக்கும் பாம்பின் மீதும் இருத்தி ஆனந்த நடமிடும் இறைவனின் இடமுழங்காலை மற்றொரு பாம்பு சுற்றிப் படமெடுத்துள்ளது. அதன் தலை தொட்டவாறே இறைவனின் இட முன் கை வேழக்கையாக வீசப்பட்டுள்ளது.
பின் கைகளில் துடியும் தீயகலும் அமைய, வல முன் கையோ காக்கும் குறிப்பில், மலர்ந்த முகத்துடன் ஆடும் இறைவனின் இடப்புறத்தே அழகே உருவாய் உமை. அவரது வலப்புறம் குடமுழவுடன் நந்தியெம்பெருமான். இறைவனின் தூக்கிய திருவடிக்கருகில் தாம் விரும்பி ஏற்ற பேயுருவில் கைகளில் செண்டுதாளங்களுடன் காரைக்காலம்மை. இலலிதாசனத்தில் இடக்கால் மடித்து வலக்காலைக் குத்துக்காலாக்கி முகமெல்லாம் மலர, தம் பேற்றுக்குத் தாமே மகிழ்ந்து அம்மை தாளமிசைக்கும் அருமையான படிப்பினையம்மா இது.
வாருணி, இச்சிற்பத்தை அடியொற்றியே மற்றொரு பதிவும் அமைந்துள்ளது. எனினும், மாற்றங்கள் இல்லாமல் இல்லை இதுவும் தூண்களுக்கிடையிலான சுவரில்தான் உள்ளது. ஆனால், அந்தத் தூண்களை யாளிகள் தாங்குகின்றன. நந்திகேசுவரரின் குடமுழவை இருத்தத் தன்னையே தளமாக்கிச்சுருண்டுள்ள பாம்பு முழவின் முன்பகுதியில் படமெடுத்துள்ளது.
வலக்காலை நீட்டி, இடக்காலை மடக்கி மிக இயல்பாக அமர்ந்துள்ள நந்தியெம்பெருமான் சாய்ந்தாடி முழவிசைக்கும் அழகே அழகு. முதல் பதிவில் தாம் பாடினாற் போலவே செடித்தலைப் பேயாகக் காட்சி தரும் அம்மை, இதில் படிய வாரிய தலையராய் வடிவம் மாறியுள்ளார். முதல் பதிவு இறையாடலில் மூழ்கி மகிழ்ந்திருக்கும் முத்தாய்ப்புக் கோலம் என்றால், இந்த இரண்டாம் பதிவை ஆடலில் மயங்கிய அம்மையின் பெருங்களிப்பு நிலையாகக் குறிக்கலாம்.
குடமுழவிற்குத் தளமாகி அந்தக் கருவி எழுப்பும் தாள ஒலிக்குப் படமெடுத்தாடும் இந்தப் பாம்புப் பதிவு தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் காணமுடியாதது வாருணி. சிற்பிகளின் கற்பனையாற்றல் எப்படியெல்லாம் பெருகிப் பாயும் என்பதற்கு இந்தப் பாம்புத்தளமும் அதன் தலைவிரிப்பும் சரியான சான்றுகளம்மா.
நன்றி: "இலக்கியப்பீடம்"
அக்டோபர் 2025 (43 - 46)