பதினோரு கோடி பார்வைகளைக்
கடந்து விட்டது என்கிறார்கள்
'மெனிகே மஹே ஹிதே' என
யோகானி ராப்பகலாய்
பாடிக்கொண்டேயிருக்கிறாள்
எனக்கு ஒரு சொல்லும்
புரியாத பாடலில்
அவளது குரல் எங்கோ உடையும்போது
என்னுள்ளும் ஏதோ ஒன்று உடைகிறது
ஏதோ ஒரு இடத்தில்
அவள் குரல் தளும்பும்போது
எனக்கும் மனதின் ஆழத்தில்
ஏதோ தளும்பி விடுகிறது
சுருதி இறங்கி அந்தக் குரல்
காதலில் மருகி மயங்கும்போது
நான் கண்களை இறுக மூடிக்கொள்கிறேன்
பிரத்யேகங்களின் உலகில்
தனித்துவங்களின் காலத்தில்
வேற்றுமைகளின் பாடல்களுக்கு நடுவே
எங்கோ ஒரு சின்னஞ்சிறு தீவில்
ஒரு பாடல் காட்டுத்தீ போல கிளம்புகிறது
நாடுகள் கண்டங்களைக் கடந்து
அது முடிவற்று பரவிச் செல்கிறது
வைரல்களின் அற்புதக் காலத்தில்
எவருக்கு வேண்டுமானாலும்
ஒரு அற்புதம் நிகழும் என்கிறார்கள்
அந்த ஒற்றை அற்புதத்திற்காக
ஒவ்வொருவரும் காத்திருக்கிறார்கள்
சிலர் மரத்திற்கு மரம் தாவுகிறார்கள்
சிலர் மரத்தில் தலைகீழாகத் தொங்குகிறார்கள்
சிலர் அதீதமான குரோதத்தைக் காட்டுகிறார்கள்
சிலர் அதீதமான அவலத்தை நிகழ்த்துகிறார்கள்
யாருக்கு அந்த ஒற்றை அற்புதக் கணம்
எப்போது நிகழுமென
யாருக்குத் தெரியும்?
ஒரு இளம் சிங்களப் பாடகி
மற்ற பாடல்களைப் பாடுவதுபோல
ஒரு பாட்டைப் பாடுகிறாள்
அது சொற்களுக்கு அப்பாலிருக்கும்
உணர்ச்சியின் ரகசிய முடிச்சொன்றை
அவிழ்த்து விட்டது
காரணம் தெரியாமல் அழுபவர்கள்போல
காரணம் தெரியாமல் சிரிப்பவர்கள்போல
காரணம் தெரியாமல் ஒரு பாட்டு
ஒரு குதூகலத்தைக்கொண்டு வருகிறது
அவளுடைய அற்புதம்
அவளாலேயே நம்பமுடியாதபடி
நிகழ்ந்துகொண்டிருக்கிறது
அதற்குமுன் அந்தப் பெயரை
யாரும் அறிந்திருக்கவில்லை
அந்தக்குரலை அறிந்திருக்கவில்லை
இந்த உலகில் இன்னும்
தோன்றிய வண்ணம்தான் இருக்கின்றன
உலகத்திற்கே பொதுவான நிலவுகள்
உலகத்திற்கே பொதுவான நட்சத்திரங்கள்
எல்லாவற்றையும் மாற்ற
ஒரு தருணம்போதும்
ஒரு திறப்பு போதும்
ஒரு முத்தம் போதும்
அன்பே
ஏதோ ஒரு தருணத்தில்தான் தோன்றியது
அந்தப்பாடகி
பாடலின் ஊடே காட்டும் சிரிப்பில்
உன் சிரிப்பின் சாயலொன்று இருப்பதை
அவளது மேனரிஸம் ஒன்றில்
உன் மேனரிஸத்தின் நாடகப் பாங்கொன்றை
கண்டேன்
ஒரு பாட்டோடு வாழ
இப்படி ஆயிரம் காரணங்கள்
3.10.2021
காலை 9.29
மனுஷ்ய புத்திரன்