(நாலடி நல்கும் நன்னெறி 29: தீயன விலக நல்லோரைச் சார்க! – தொடர்ச்சி)
நாலடி நல்கும் நன்னெறி
30. பண்பாளர் நட்பு இருப்போர் பிறப்பை வெறுப்பதில்லை.
இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்
பிறப்பினை யாரும் முனியார்; – பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.
நாலடியார் பாடல் 174; பொருட்பால் – நல்லினம் சேர்தல்
[ இறப்ப நினையும்கால் இன்னாது எனினும்
பிறப்பினை யாரும் முனியார் – பிறப்பினுள்
பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும்
நண்பு ஆற்றி நட்க பெறின். ]
பொருளுரை:
மிகவும் நினைத்துப்பார்த்துப் பிறவியைத் துன்பம் தருவதாகக் கருதினாலும், பண்பாளர் நட்பு பெற்றவர்கள் துன்பம் அடையார்; ஆதலின் பிறவியை வெறுக்க மாட்டார்.
பதவுரை:
பிறப்பினுள்=பிறப்புள்; பண்பு=நற்பண்புகளை; ஆற்றும்= கொண்டிருக்கும்; நெஞ்சத்தவர்களோடு = நன்மனமுள்ள நல்லோர்களுடன்; எஞ்ஞான்றும் = எக்காலமும்; நண்பு =நட்பு ; ஆற்றி = கொண்டு ; நட்க = நட்பை; பெறின் = பெற்றால்; இறப்ப = மிகவும்; நினையுங்கால் = நினைக்கும் பொழுது; இன்னாது =துன்பம் தருவது; எனினும் = என்றாலும்; பிறப்பினை = பிறவியை; யாரும் = எவரும்; முனியார் = வெறுக்க மாடடார்.
பிறவித்துன்பம் என்று சொல்லிப் பிறப்பையே துன்பமயமானதாக இறையன்பர்களும் மெய்யியல் அறிஞர்களும் கூறுகின்றனர். எனவேதான் “பிறவாமை வேண்டும்” என இறைவனை வேண்டுகின்றனர். எனினும் துன்பம் தரும் பிறவியை வெல்வது எப்படி? நற்பண்புடையோர் துணையே துன்பத்தைப் போக்கும். எனவே, பண்பாளர் நட்பு இருந்தால் பிறவியை வெறுக்க மாட்டார்கள்.
உலகமே பண்புடையாளர்களால்தான் இயங்குவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார்.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அஃதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். (திருக்குறள், ௯௱௯௰௬ – 996)
என்று அவர் எடுத்துரைக்கிறார்.
அத்தகு பண்புடையாளர் நட்பு இருப்பின் அவர்கள் வழிகாட்டுதலால் தீய பாதையில் சென்றிருந்தாலும் திரும்பி நல்ல பாதையில் நடைபோடுவர்; தீதில்லாச் செயல்களில் இறங்குவர்; நல்லறம் புரிவர். இவற்றால் இவ்வுலகத்தை இன்ப மயமாகமாற்றிக் கொள்வர். எனவேதான், நாலடியாரும் பண்புடையாளர் நட்பைக் கொள்ள வேண்டும் என்கிறது.
உலகம் துன்பமயமானது என்பதை உணர்ந்து வாழ்க்கைக் கடலில் அதனை ஓட்ட நற்பண்பாளர் துடுப்பு தேவை என உணரலாம். இக்காலக் கவிஞர் கண்ணதாசனும்(திரைப்படம், சுமைதாங்கி, மயக்கமா? கலக்கமா? எனத் தொடங்கும் திரைப்படப் பாடல்)
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
என வாழ்க்கை வேதனையானது எனக் கூறுகிறார்.
நட்பின் சிறப்பைக் குறிப்பிடும் நூற்றுக்கணக்கான திரைப்பாடல்கள் உள்ளன. நட்பே சிறப்பு எனில் பண்பாளர் நட்பு மேலும் சிறப்பானதாகததானே இருக்கும்.
துன்பக்கடலில் வாழ்க்கை சிக்கியிருப்பதால் அதனை வெறுக்க வேண்டா. அதிலிருந்து மீள வழி காண வேண்டும். அதுதான் பண்புடையாளர் நட்பைப் பேணுதல். எனவே, வாழ்க்கையில் வாகை சூட நற்பண்புடையோர் நட்பைப் பெற்றால் வாழ்க்கையை வெறுக்கமாட்டோம்! நேசிப்போம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1461 -1465: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1466 -1470
நிண்டெண்டோ (Nintendo) நிறுவனத்தின் காணாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் நிண்டெண்டோ காணாட்ட வெருளி.
நிண்டெண்டோ நிறுவனக் காணாட்டப் பொருள்கள் மீதான அளவு கடந்த பேரச்சம் காணாட்ட வெருளி
நிண்டெண்டோ(Nintendo) நிறுவனம் மிகுதியான காணாட்டங்களை விற்பனை செய்கிறது. இதனைப் பயன்படுத்தும் பொழுது ஒளிரும் விளக்குகளால் வலிப்பு நோய், மன நோய் முதலானவை ஏற்படுவதாக அஞ்சுகின்றனர். எனவே, நிண்டெண்டோ நிறுவனப் பொருள் மீது அளவுகடந்த பேரச்சம கொள்கின்றனர். நூற்றாண்டு பழமை கண்ட நிண்டெண்டோ நிறுவனம் முதலில் சீட்டுக்கட்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. இப்பொழுது கணிணியாட்டத்தில் இறங்கி விட்டது. இந்நிறுவனம் குறிதத பேரச்சமாகிய நிண்டெண்டோ வெருளியே இங்கே நிண்டெண்டோ காணாட்ட வெருளியாகக் குறிக்கப் பெறுகிறது.
00
நில நடுக்கம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நில நடுக்க வெருளி.
அண்மைப்பகுதிகளில் நிலநடுக்கம் நிகழ்ந்ததைக் கேள்விப்பட்டு அல்லது நில நடுக்கம் குறித்த செய்திகளைப்படித்ததால் அல்லது படக்காட்சி, செய்திக்காட்சிகளில் காண்பதால் தாங்களும் நில நடுக்கத்திற்கு ஆளாகப்போகிறோம் எனத் தேவையற்ற வரம்பற்ற பேரச்சத்திற்கு ஆளாவர்.
00
நிலக்கடலை நெய் குறித்த பேரச்சம் நிலக்கடலை நெய் வெருளி.
arachis என்னும் இலத்தீன் சொல்லுக்கு நிலக்கடலை என்றும் butyrum என்னும் இலத்தீன் சொல்லுக்கு வெண்ணெய் என்றும் பொருள்.
arachis என்பதற்குப் பட்டாணி என்னும் பொருளில் அளித்த விளக்கத்தின்படி முதலில் பட்டாணி வெருளி எனக் குறித்திருந்தேன். ஆனால் இது நிலக்கடலைநெய் என்னும் பொருளில்தான் கையாளப்பட்டுள்ளது. எனவே, நிலக்கடலை நெய் வெருளி எனக் குறிப்பிடுவதே சரி.
இதனைப்பார்த்த மாத்திரத்தில் அச்சம் வருவதில்லை. தடியப்பம் / வெதுப்பம் (இடையே வைத்து உண்ணும் பொழுது மேல்வாயில் ஒட்டிக்கொள்வதுபற்றிய பேரச்சமே இது. எனவே, இதை உணவு வகை வெருளிவகையில் சேர்ப்பது பொருத்தமாக இருக்கும்.
00
நிலத்தடித் தொடரி(subway) குறித்த வரம்பற்ற பேரச்சம் நிலத்தடித் தொடரி வெருளி.
.subway என்பது சுரங்கப்பாதை. எனினும் இங்கே சுரங்கப்பாதையில் இயங்கும் தொடர் ஊர்தியைக் குறிக்கிறது. எனவே, தெளிவு கருதி நிலத்தடித் தொடரி எனக் குறித்துள்ளேன். tube/métro/underground railway system எனவும் இத்தொடரிப் போக்குவரத்து முறைஅழைக்கப்பெறுகிறது
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5