மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை

284 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Jul 30, 2021, 2:39:37 AM7/30/21
to மின்தமிழ்

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை

மதுரை மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புலவர் மாங்குடி மருதனார் பாடியது மதுரைக்காஞ்சி என்னும் பாடல். பத்துப்பாட்டு நூல்களுள் ஆறாவதாக அமைந்த இப்பாடல், 782 அடிகளைக் கொண்டு பத்துப்பாட்டின் பாடல்களுள் மிகப் பெரிய பாடலாக அமைந்துள்ளது. இதன் பெயருக்கேற்றவாறு, இப்பாடல் 202 அடிகளில் அன்றைய மதுரை நகரின் அமைப்பை மிக விரிவாக எடுத்தியம்புகிறது. இதிலிருந்து மதுரை நகரின் உட்பகுதி ஏறக்குறைய 2000 ஆண்டுகாலமாக, மிகப்பெரும் மாற்றங்களுக்கு உட்படாமல் இருந்து வந்திருக்கிறது என அறிகிறோம்.

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரையைப் பார்ப்பதற்கு முன்னர், இன்றைய மதுரையின் உட்பகுதியை ஓரளவு உற்று நோக்குவோம். மதுரையின் மையப்பகுதியாக இருப்பது மீனாட்சியம்மன் கோவிலாகும். இது 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் கொண்டு ஏறக்குறைய ஒரு சதுர வடிவில் சுற்றுச்சுவருடன் அமைந்துள்ளது. இந்தச் சுற்றுச் சுவருக்கு உட்புறமான நான்குபக்கங்களிலும் தெருக்கள் உள்ளன. இவை ஆடி வீதிகள் எனப்படும். இவை அமைந்திருக்கும் திசையினைப் பொருத்து, இவை (கிழக்கு ஆடி வீதி)கிழக்காடிவீதி, தெற்காடிவீதி, மேற்காடிவீதி, வடக்காடி வீதி என்று அழைக்கப்படும். இந்தச் சுற்றுச்சுவருக்கு நான்கு திசைகளிலும் வாசல்களுண்டு. மேலும் இந்தச் சுற்றுச்சுவர்களுக்கு வெளிப்பக்கமாக நான்கு திசைகளிலும் தெருக்கள் உள்ளன. இவை சித்திரை வீதிகள் எனப்படும். இவையும் கிழக்குச் சித்திரைவீதி, தெற்குச் சித்திரை வீதி எனத் தாம் இருக்கும் திசைகளைப் பொருத்துப் பெயர்களைப் பெறும். இந்தச் சித்திரை வீதிகளிக்குச் சற்றுத் தள்ளி நான்கு பக்கங்களிலும் தெருக்கள் உண்டு. அவை ஆவணிமூல வீதிகள். இந்த ஆவணிமூல வீதிகளுக்குச் சற்றுத்தள்ளி நான்கு பக்கங்களிலும் மாசி வீதிகள் உள்ளன. இந்த மாசிவீதிகளுக்குச் சற்றுத்தள்ளி நான்கு பக்கங்களிலும் வெளிவீதிகள் உள்ளன.

இந்த வீதிகளின் அமைப்பைக் காட்டும் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

6A.MATHU-1.jpg

சங்ககால மதுரையில் நகரின் மையப்பகுதியாக அரசனின் அரண்மனை இருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். இதைப் பரிபாடல் அடிகளால் அறிகிறோம். அரண்மனையைச் சுற்றி ஆடி வீதிகள், சித்திரை வீதிகள், ஆவணிமூல வீதிகள் இருந்திருக்கின்றன. ஆவணிவீதிகளுக்குச் சற்றுத் தள்ளி வெளியே நகரின் கோட்டை அமைந்திருக்கிறது. கோட்டையைச் சுற்றி அகழி இருந்திருக்கிறது. அகழியை ஒட்டி நான்கு பக்கங்களிலும் வெளிவீதிகள் இருந்திருக்கின்றன. அதாவது இன்றைய மாசி வீதிகள்தான் பாண்டியர் காலத்து வெளிவீதிகள். இதற்குச் சான்றுகள் இன்றும் இருக்கின்றன.

முதலாவதாக, மேல ஆவணிமூல வீதிக்கும், இன்றைய மேல மாசி வீதிக்கும் இடையில் ஒரு சிறிய வீதி மேலப் பாண்டியன் அகில் தெரு என்ற ஒரு பெயரில் இருக்கிறது. அகழி என்பது அகழ் ஆகிப் பின்னர் அது அகில் ஆகிவிட்டது. அகழி என்பது கோட்டைக்கு வெளியில் இருப்பது. எனவே பாண்டியர் காலத்தில் மேல ஆவணி மூல வீதிக்கும், மேல மாசி வீதிக்கும் இடையில் கோட்டையும், கோட்டைக்கு வெளிப்புறமாக, மேல மாசி வீதியைத் தொட்டுக்கொண்டு அகழியும் இருந்திருக்கவேண்டும். எனவே இன்றைய மேலமாசிவீதி அன்றைய வெளிவீதி என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். சங்க கால மதுரையின் மேற்கு எல்லை இதுவே. இதேபோல் மற்ற மூன்று பக்கங்களிலும் கோட்டையும் அகழியும் இருந்து, கோட்டை இடிக்கப்பட்டு அகழி தூர்க்கப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. இப்போது அந்தத் தெருக்கள் பெயர் மாற்றம் பெற்று அடையாளம் அற்றுப்போய்விட்டன. வடக்கே சங்கீத விநாயகர் கோவில் தெரு, வித்துவான் பொன்னுசாமி பிள்ளை தெரு எனப் பெயர் மாற்றம் பெற்ற இந்த வடக்குப் பாண்டியன் அகிழ்தெரு, முதலில் பள்ளத்தெரு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அகழியைச் சரியாக மூடாததால் தெரு பள்ளமாக இருந்தபோது இந்தப் பெயர் பெற்றது எனலாம். தெற்குப் பக்கத்தில் இதன் பகுதி ஜடாமுனிகோவில் சந்து எனப் பெயர்பெற்றிருக்கிறது.

கிழக்குப்பக்கம் பாண்டியர் கோட்டை இருந்ததற்கான இரண்டு அடையாளங்கள் இன்றும் உள்ளன. கீழஆவணி மூலவீதியிலிருந்து கீழமாசிவீதிக்குச் செல்லும் தெரு இப்போது அம்மன் சன்னதித் தெரு எனப்படுகிறது. இந்தப் பகுதியின் நடுவில் ஒரு உயரமான வாயில் இருக்கிறது. இதற்கு விட்டவாசல் என்று பெயர். அதாவது, நாயக்கர்கள் பாண்டியன் கோட்டையைத் தகர்த்தபோது இடிக்காமல் விட்டுவிட்ட வாசல்பகுதி இது. வரலாற்றுப் புகழ் மிக்க இந்த அமைப்பு இன்று ஆக்கிரமிப்பாளர்களால் பொலிவிழந்து பார்ப்போரின் கண்களிலிருந்து நீரை வரவழைக்கும் நிலையில் உள்ளது. இந்த வாசலின் உயரே ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. 1935-ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் முதலாம் நாள் அன்றைய நகர் நிர்வாகப் பொறியாளராக இருந்த ஜி.எம்.பிலிப் என்பவரால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு Ancient Monument என்ற தலைப்பில் இவ்வாறு கூறுகிறது.

6A.MATHU-2.jpg

THIS STRUCTURE WAS FORMERLY THE EASTERN GATE WAY OF THE OLD PANDIAN FORT. ANY PERSON DESTROYING, DEFACING, REMOVING, ALTERING OR IN ANY WAY INJURING ANY PART OF IT OR CAUSING IT TO BE SO DAMAGED WILL BE PROSECUTED. (S.D) G.M.PHILIP. 1-2-35. EXECUTIVE ENGINEER

“இந்தக் கட்டிடம் முன்னர் பண்டைய பாண்டியன் கோட்டையின் கிழக்கு வாயிலாக இருந்துள்ளது. இதை அழிக்கவோ, சிதைக்கவோ, உருமாற்றம் செய்யவோ அல்லது எவ்விதத்திலேனும் இதற்கு ஊறு விளைவிக்கவோ செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்பதே அச் செய்தி. குறைந்தது 700 ஆண்டுக்காலப் பழமையைக் கொண்ட இந்த ஒப்பற்ற வரலாற்றுச் சின்னம் நம்மவர்களாலேயே இப்போது பாழ்படுத்தப்பட்டிருப்பதைப் பாருங்கள்.

6A.MATHU-3.jpg

6A.MATHU-4.jpg

இந்த வாயில் ஒரு மன்னனின் கோட்டை வாயிலாக இருந்தது என்னும் அளவுக்கு அழகும் பொலிவும் உள்ளதாகத் தோன்றவில்லை என்பது உண்மையே. ஆனால் இது பல அழிவுகளைச் சந்தித்திருக்கிறது என்பதை நினவிற்கொள்ளவேண்டும். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

இப்போது கிழக்குக்கோபுரம் என்று அழைக்கப்படும் வாயிலே சங்ககாலப் பாண்டியர் காலத்தில் பாண்டியர் அரண்மனைக்கு முதன்மை நுழைவாயிலாக இருந்தது. இதனுள் நுழைந்து நேரே சென்றால் மன்னனின் அரசவை இருந்திருக்கும். களப்பிரர்க்குப் பின்னர் வந்த இடைக்காலப் பாண்டியர் காலமான 7-ஆம் நூற்றாண்டில் இதுவே சிவன் கோவில் சன்னதியாக இருந்தது. இந்தக் கிழக்குக் கோபுர வாயிலே அன்றைய கோயில் வளாகத்துக்கு ஒரே நுழைவாயிலாக இருந்திருக்கும். எனவே அதற்கு நேரே செல்லும் தெரு கோட்டை மதிலை அடையும் இடத்திலேயே கோட்டைக்குரிய முதன்மை வாசல் இருந்திருக்கும். அதன் பின்னர் பிற்காலப்பாண்டியர் காலமான கி.பி.12-ஆம் நூற்றாண்டில்தான் அம்மன் சன்னதி உருவாக்கப்படுகிறது அதற்கும் பின்னர் பிற்காலப்பாண்டியர் ஆட்சியின் இறுதிக்காலத்தில்தான் இந்த அம்மன் சன்னதி விரிவாக்கம் செய்யப்படுகிறது.

எனவே கோட்டைக்குரிய முதன்மை வாயில் இந்த அம்மன் சன்னதிக்கு நேரே இருக்கும் பண்டைய பாண்டியர் கோட்டை வாயில் அல்ல என்பது புரியும். அந்த முதன்மை வாயில் இன்றைய புதுமண்டபத்துக்கு நேர் கிழக்கே இருக்கும் ராயர்கோபுரமே என்பது தெளிவு. அதனை இப் படம் தெளிவுபடுத்தும்.

6A.MATHU-5.jpg

படத்தில் வலக்கோடியில் unfinished Gopuram என்று காட்டப்பட்டிருக்கும் பகுதியே சங்க கால மதுரை நகரின் முதன்மை வாயிலாக இருந்திருக்கும். இங்கே இருந்த அந்த அழகும் பொலிவும் மிக்க முதன்மை வாயிலை திருமலை நாயக்கர் இடித்துவிட்டு அதைவிட மேலும் பொலிவுள்ள கோபுரமாகக் கட்ட எண்ணியுள்ளார். மிகவும் அருமையான வேலைப்பாடுகளுடன் கூடிய பக்க மதில்களைக் கொண்ட இரு பெரும் தூண்களை அவர் நிறுவினார். இது இன்றும் 50 அடி உயரத்துக்குக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால் இந்தக் கோபுரம் முற்றுப்பெறவில்லை. சங்கப் பாண்டியரின் முதன்மை வாயில் இருந்த இடம் இன்று மிகவும் பொலிவிழந்து நிற்கிறதைப் பாருங்கள்.

பாண்டியர் மதுரையின் நுழைவாயிலாக இருந்த இடம் – பின்னர் முடிவுறா ராய கோபுரம் –

ஆங்கிலேயர் காலத்திலும் இன்றும் – கீழமாசிவீதியிலிருந்து கிழக்குக் கோபுரம் நோக்கி -

6A.MATHU-6.jpg

பாண்டியர் மதுரையின் நுழைவாயிலாக இருந்த இடம் – பின்னர் முடிவுறா ராய கோபுரம் –

ஆங்கிலேயர் காலத்திலும் இன்றும் – கீழ ஆவணிமூலவீதியிலிருந்து கீழமாசி வீதி நோக்கி -

6A.MATHU-7.jpg

மாசி வீதிகளுக்கும் உட்புறத்தில் பாண்டியன் அகழியும் அதனை அடுத்துக் கோட்டையும் இருந்ததற்கான சான்று இன்னொன்றும் உள்ளது. கீழேயுள்ள படத்தில் நீங்கள் காண்பது இன்றைய கீழமாசிவீதியின் ஒரு பகுதி. இங்கிருக்கும் கட்டடத்தின் ஒரு பகுதியை நீங்கள் இன்றும் பார்க்கலாம். இங்குக் காணப்படும் வீதியே கீழமாசிவீதி. அதனை அடுத்து வலப்புறம் கருப்பாக இருப்பது அங்கிருந்த அகழியை மூடியதால் ஏற்பட்ட பள்ளம். இதன்மேல்தான் இன்றை கீழமாசிவீதிக் கடைகள் கட்டப்பட்டுள்ளன.

6A.MATHU-8.jpg

இதே கட்டிடம் மீண்டும் 1880-களில் எடுக்கப்பட்டுள்ளது. கீழமாசிவீதியில் 1990-களில் எடுக்கப்பட்ட அதே இடத்துடன் ஒப்பிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

6A.MATHU-9.jpg

எனவே, சங்ககால மதுரை இன்றைய மதுரையின் நான்கு மாசிவீதிகளுக்கும் உட்பட்ட பகுதிதான் என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. கீழேயுள்ள படத்தில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

6A.MATHU-10.jpg

சிவப்புக்கோடுகள் மதுரையின் கோட்டை மதில்கள். நீலநிறக்கோடுகள் கோட்டைக்கு வெளியே அமைந்த அகழி. இடைக்காலப் பாண்டியர் காலத்துக்கும் முற்பட்ட களப்பிரர் காலத்துக்கு முந்தைய சங்ககாலப் பாண்டியர் மதுரை இதுவேதான். ஆம், இந்தச் சிவப்புக் கோட்டுப் பகுதிதான் 2000 ஆண்டுளுக்கு மேலாய் வாழ்ந்துகொண்டிருக்கும் என்றுமுள தென்மதுரையாய் விளங்கும் மதுரை மூதூர். ஒரே ஒரு வித்தியாசம். சங்ககாலப் பாண்டியர் காலத்தில் நீலக்கோடுகளுக்கு நடுவில் இருந்தது மீனாட்சி கோவில் அல்ல. அது பாண்டியன் கோயிலாக இருந்தது. கோ என்றால் அரசன். இல் என்பது இல்லம். இதுவே சங்ககாலப் பாண்டியர் அரண்மனை.

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

பூவொடு புரையும் சீரூர்; பூவின்

இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து

அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில் – பரிபாடல் திரட்டு 7/1-4

என்ற பரிபாடல் அடிகளில் காணப்படுவது போல, தாமரையின் இதழ்களாய் நான்கு பக்கங்களிலும் விரிந்து கிடக்கும் தெருக்களுக்கு மத்தியில் அதன் பொகுட்டைப்போலப் பொலிவுடன் இருந்தது மன்னனின் அரண்மனை. இங்குக் குறிப்பிடும் அண்ணல் என்ற சொல் பாண்டிய மன்னனைக் குறிப்பதாக அனைத்து உரைகாரர்களும் கூறுகின்றனர்.

இதுதான் சங்ககால மதுரை. இது சங்க காலத்தில் எப்படி அமைந்திருந்தது என்பதை மதுரைக்காஞ்சிப் புலவர் கூறுகின்ற வழியே பார்க்கலாம்.

அன்றைய மதுரையின் முதன்மையான நுழைவாயில் இன்றைய எழுகடல் தெருவில் இருக்கும் ராய கோபுரம் ஆகும். இந்த வாயிலை ஒட்டித் தென் வடலாக அமைந்திருக்கும் அகழி நீண்டு படுத்திருக்கும். பூமியின் அடிப்பகுதி வரை ஆழமாக அமைந்திருந்த தெளிவான நீரைக்கொண்ட பெரும் பள்ளம் - மண்ணுற வாழ்ந்த மணி நீர்க் கிடங்கு (மது 351) என்கிறார் புலவர்.

இந்த அகழியை அடுத்து கோட்டையும் வாயிலும் அமைந்திருக்கின்றன.

விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை - (352) வானளவு உயர்ந்து, அதில் பலவிதப் படைகலங்களைக் கொண்ட மதில் என்கிறார் புலவர். அகழியைத் தாண்டி உள்ளே செல்வதற்குரிய பாலத்தை அடுத்து நகருக்குள் நுழையும் வாயில் இருக்கிறது. வையை அன்ன வழக்குடை வாயில் என்கிறார் புலவர். அன்றைய வைகையில் ஓயாமல் தண்ணீரோடிக்கொண்டே இருந்தது. அதைப்போல மக்கள் ஓயாமல் நகருக்குள் செல்வதும், நகரைவிட்டு வெளியே வருவதுமாக ஓயாமல் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளே நுழைந்தவர்கள் முதலில் பார்ப்பது - ஆறு கிடந்தன்ன அகல் நெடும்தெரு - (359) அந்தக் கீழ ஆவணி மூலவீதி தென் வடலாக ஒரு பெரிய ஆற்றினைப் போல அகன்று நீண்டு கிடக்கின்றது. அதன் இரு பக்கங்களிலும் வான் வரை உயர்ந்த, பல சாளரங்களையுடைய நல்ல வீடுகள் இருக்கின்றன. முரசறைவோர் பேரொலியுடன் முரசறைந்து மக்களுக்கு செய்திகளை அறிவித்துக்கொண்டிருக்கின்றனர். மதுரையில் நுழைந்தவுடன் புலவர் நமக்குக் காட்டுவது - ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமம் (365)- ஓவியத்தில் பார்ப்பதைப் போன்ற இரண்டு பெரிய கடைத்தெருக்கள். இவை என்னவாய் இருக்கும்?. நியமம் என்பது அங்காடி. எனவே இவை நாளங்காடி, அல்லங்காடி என்ற பகல் கடைத்தெரு, இரவுக்கடைத்தெரு ஆகிய இரண்டு கடைத்தெருக்கள். இவற்றில் முதலில் நாளங்காடியைப் புலவர் முதலில் குறிக்கிறார் (430). அடுத்து வடக்கு, மேற்கு, தெற்கு ஆவணிமூல வீதிகளைச் சுற்றிவிட்டு மீண்டும் இறுதியில் அல்லங்காடியைக் காட்டுகிறார் (544) எனவே நகரில் நுழைந்து வலப்பக்கம் திரும்பினால் கீழாவணிமூல வீதியின் வடக்குப்பக்கம் இருப்பது நாளங்காடி. அப்படியே ஆவணிமூல வீதியைச் சுற்றி மீண்டும் கீழாவணிமூலவீதிக்கு வந்தால் கீழாவணிமூலவீதியின் தெற்குப்பக்கம் இருப்பது அல்லங்காடி.

இன்று பெருநகரங்களில் கூட்டமான நேரங்களில் காவல் ஊர்திகள் (Police Van) பெரும் வீதிகளில் சுற்றிவருவதுபோல, அன்றைய மதுரையில் கூட்டமான ஆவணிமூல வீதிகளில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவற்றின் நடமாட்டம் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. இனிப்புகள், பூக்கள், பூமாலைகள், இடித்த சுண்ணாம்பு, வெற்றிலை, பாக்கு, சங்கைச் சுட்ட சுண்ணாம்புத்தூள் ஆகியவற்றைத் தட்டுகளில் வைத்துக்கொண்டு தலைச்சுமையாக விற்போர் திரிந்துகொண்டிருப்பர்.

அடுத்து, நரைத்த கூந்தலையுடைய முதுபெண்டிர் வீடுவீடாகச் சென்று பூவிற்றுத் திரிகின்றனர். தம்மை நன்கு அலங்கரித்துக்கொண்ட இளம்பெண்கள் இளைஞருடன் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கின்றனர், அந்த நாளங்காடி கடைத்தெருவானது மிகுந்த ஆரவாரம் உடையதாக விழாக்கொண்டாடும் ஊர் போலக் காட்சியளிக்கின்றது.

செல்வர்கள் தேர்களில் அங்குமிங்கும் விரைந்துகொண்டிருக்கிறார்கள். செல்வப் பெண்டிர் தம் வீட்டு மாடங்களில் இருந்தவாறு நகர்க் காட்சிகளை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறாக, வடக்காவணிமூல வீதியைக் கடந்து மேலாவணிமூல வீதிக்கு வருகிறோம். அங்கு சிவன் கோயில், பௌத்த, அந்தணர், அமண் பள்ளிகள் வரிசையாக அடுத்தடுத்து இருக்கின்றன. அவற்றை அடுத்து மன்னனின் அறங்கூறவையமும், காவிதிப் பட்டம் பெற்றோரின் மனைகளும் இருக்கின்றன. அதையடுத்து வாணிகர் பகுதி தொடங்குகிறது. மலையிலும்,நிலத்திலும், நீரிலும் விளையும் பல்வேறு பண்டங்களாகிய மணிகள், முத்துக்கள், பொன் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு, அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களை அங்கே விற்கிறார்கள். அதையடுத்து நாற்பெருங்குழுவினர் கூடுமிடம் இருக்கிறது.

 அதையடுத்து, மேலாவணிமூல வீதி முடிந்து, தெற்காவணிமூல வீதி தொடங்குகிறது. இதைக் காட்டும் புலவர்

கோடு போழ் கடைநரும் - மது-511

என்று கூறுகிறார். கோடு என்பது சங்கு. அந்தக் காலத்தில் சங்கை அறுத்து வளையல்கள் செய்வார்கள். இன்றைக்கும் மேலாவணிமூலவீதியில் தெற்கு ஓரத்தில் வளையல்காரத்தெரு இருப்பதைப்பார்க்கலாம். அதையடுத்து தெற்காவணிமூல வீதி தொடங்குகிறது. இன்றைக்கும் அந்தத் தெருவுக்கு நகைக்கடைத் தெரு என்று பெயர். அங்கு நடைபெறும் தொழில்களைப் புலவர் குறிப்பிடுகிறார் பாருங்கள்.

---------- ------------ திருமணி குயினரும்,

சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும்,

பொன் உரை காண்மரும், --- மது 511-513.

---------------- ------------- அழகிய மணிகளைத் துளையிடுவாரும்,

சுடுதலுற்ற நல்ல பொன்னால் விளங்கும் அணிகலன் செய்வாரும்,

பொன்னை (உரைத்து அதன்)மாற்றைக் காண்பாரும்,

அண்மைக் காலம்வரை தெற்காவணி மூல வீதியின் இறுதிப்பகுதியில் மத்தியஸ்தர் கடை உண்டு. ஏதேனும் நகைக்கடையில் வாங்கின தங்கத்தின் மாற்றின் மீது ஐயம் கொண்டால் இந்த மத்தியஸ்தர் கடையில் சரிபார்த்துக் கொள்ளலாம். இதைத்தான் அன்றைய பொன் உரை காண்மர் என்று புலவர் கூறுகிறார். இந்த மத்தியஸ்தர் கடையுடன் நகைக்கடைப் பகுதி முடியும், இன்றைக்கு இது நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அன்றைக்கு அங்குத் துணிக்கடைகள், செப்புப்பாத்திரக் கடைகள், பூக்கடைகள், வாசனைப் பொருள்கடைகள் ஆகியவை இருந்திருக்கின்றன. இந்தப் பகுதியை ஒட்டி அண்மைக்காலம்வரை உணவு விற்பனைசெய்யப்பட்டு வந்துள்ளது. அதற்குச் சோற்றுக்கடைத் தெரு என்று பெயர் இருந்தது. பிரபல நாடக நடிகரான தி.க.சண்முகம் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் நாடகக்கலையின் தலைமையிடமாக மதுரை திகழ்ந்தது. எனவே நாடக நடிகரான கண்ணுசாமிபிள்ளையின் குடும்பம் மதுரை சோற்றுக்கடைத் தெருவில் குடியிருந்தது. எனவே தி. க. சண்முகம் தெற்குச் சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பலம் என்னும் ஆரியவைசிய பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்தனர்” இந்தச் சோற்றுக்கடைகள் சங்ககால மதுரையிலேயே , அதுவும் இதே பகுதியில், இருந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார் (மது. 527 - 535). அதன் ஒரு பகுதி இது. .

புகழ்படப்பண்ணிய பேரூன் சோறும்

கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்

இன் சோறு தருநர் பல்வயின் நுகர - மது. 533-535

இதையடுத்து அல்லங்காடி இருப்பதாகப் புலவர் குறிப்பிடுகிறார். நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இது கீழாவணிமூலவீதியின் தெற்குப் பகுதி.

இவ்வாறாக இந்த நான்கு ஆவணிமூல வீதிகளிலும் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்திருப்பதால், அவர்கள் தங்கள் கால்களை உரசிக்கொண்டு நெருக்கியடுத்துத் திரிந்துகொண்டிருந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார்.

நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர - மது. 522.

ஆக, ஈராயிரம் ஆண்டுகட்கு மேலாக, மதுரை நகரத்தின் மையப்பகுதியான மாசிவீதிகளுக்குட்ட பகுதி சீருடனும் சிறப்புடனும் பெரிதான மாற்றங்களின்றி, நாயக்கர் கால விரிவாக்கத்திற்கு முன்னர் வரை, பொலிவுடன் திகழ்ந்தது என மதுரைக்காஞ்சி மூலம் அறிகிறோம்.

ப.பாண்டியராஜா


K R A Narasiah

unread,
Jul 30, 2021, 3:06:02 AM7/30/21
to mint...@googlegroups.com
 அழகான வர்ணனை. சிறந்த ஒரு பதிவு. நான் ஆலவாய் நூலெழுதுவதற்கு முன்னர் கிடைத்திருந்தால் மிக நன்கிருந்திருக்கும். 
நன்றி
நரசய்யா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/aec88623-e143-48d0-938a-c0e35205567dn%40googlegroups.com.

Pandiyaraja Paramasivam

unread,
Jul 30, 2021, 10:42:10 PM7/30/21
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, ஐயா!
ப.பாண்டியராஜா

S.P.SENTHIL KUMAR

unread,
Jul 31, 2021, 2:50:33 AM7/31/21
to mint...@googlegroups.com
மதுரை வரலாற்றைப் பற்றி விரிவான ஒரு நூல் எழுத வேண்டும் என்ற எண்ணம் பல நாட்கள் என்னை தூங்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக  பல தகவல்களை திரட்டி வருகிறேன். ஆனாலும் முற்று பெறுவதாக இல்லை. இந்த நிலையில் தங்களின் இந்த பதிவு எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. அரிய தகவல்கள் பல இடம்பெற்ற அருமையான ஒரு பதிவை தந்ததற்கு கோடி கோடி நன்றிகள் ஐயா..!


S.P.SENTHIL KUMAR,
(Journalist - Travel Writer - YouTuber - Blogger - Photographer)
-------------------------------------------------------------------------------------------------------------------------------
WEBSITE       :  Travels Next, Thagaval 360d
BLOG             :   கூட்டாஞ்சோறு 
TWITTER       :    https://twitter.com/SenthilMsp



Reply all
Reply to author
Forward
0 new messages