பல மின்மடற் குழுக்களில் அடிக்கடி, ஒட்டக்கூத்தருக்குப் பின் வந்தவர் கம்பர் என்ற ஒரு கருத்து ‘ஆய்வுரையாக’ சொல்லப்பட்டு வருகிறது. கால ஆய்வுகளில் எனக்கு ஈடுபாடு கிடையாது. ஒம்போதாம் நூற்றாண்டா--சரி அப்படியே இருக்கட்டும்; பன்னிரண்டாம் நூற்றாண்டா... ஆஹா இருந்துட்டுப் போகட்டும் என்ற வகையில்தான் என் போக்கு இருந்திருக்கிறது. கவிதையின் ருசி போதாதோ? காலம் என்ன இதில் குறுக்கீடு?
கால ஆய்வில் ஈடுபாடு இல்லை என்று சொன்னது, நிறுவுவதற்குப் போதுமான, வலுவான ஆதாரங்கள் இல்லாமல் சகட்டுமேனிக்குக் காலத்தை நிர்ணயிக்க வழி இல்லை என்பதொன்று. கவியின் வாக்கில் காலக்குறிப்பு ஏதும் கிடைத்தால் மட்டுமே அதைப் பயனுள்ள குறிப்பாகக் கருத முடியும் என்பது பிறிதொன்று. ஆனால், செவிவழிச் செய்திகளாகவும் கட்டுக்கதைகளாகவும் தமிழிலக்கிய ‘வரலாற்றில்’ உலாப் போகும் செய்திகள் ஏராளமானவை. ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும் சில உள்ளன. அம்பிகாபதி கதையெல்லாம் நல்ல கற்பனை என்ற அளவில்தான் கொள்ள முடிகிறதே ஒழிய, அறுதியிட்டுச் சொல்லும்படியான சான்றுகளைக் கொண்டனவாக இல்லை.
ராமாயணத்தின் முதல் ஆறு காண்டங்களைத் தமிழில் இயற்றியவன் கம்பன். ‘கம்பன் என்று சொல்லப்படுகிறது’ என்று சொன்னாலும் ஆட்சேபணை இல்லை. ஏனெனில், தன்னை ஆதரித்த வெண்ணெய்நல்லூர் சடையனைப் பற்றிப் பத்துப் பாடல்களில் குறித்துள்ள கம்பன், தன்னைப் பற்றி, தன் பெயர் உட்பட, ஒரு குறிப்பையும் தான் பாடிய காப்பியத்துள் வைக்கவில்லை. சடையன் என்பவன் ஒரு வள்ளல்; அவன் வெண்ணெய்நல்லூரில் வாழ்ந்தான் என்ற இரண்டு குறிப்புகள் மட்டுமே கவி வாக்காக, கவிஞனைப் பற்றிய தகவல்களாக நமக்குக் கிட்டுகின்றன. இந்த இரண்டு தகவல்களும் உண்மையெனில், அந்த வள்ளலால் ஆதரிக்கப்பட்ட கவிஞனும் அந்த ஊரிலோ, அதன் சுற்று வட்டாரத்திலோ இருந்திருக்கலாம் என்று கொண்டுகூட்டிக் கொள்ள முடிகிறது.
ஏழாவது காண்டமான உத்தர காண்டத்தைக் கம்பன் இயற்றவில்லை. ‘இதுக்கு மேலயும் சீதை கஷ்டப்பட்டாள் என்று எழுத என்னால் முடியாது’ என்று கம்பன் நிறுத்திவிட்டானோ என்னவோ என்று என் ஆசிரியர் அமரர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் குறிப்பிடுவார். இது இன்னொரு செவிவழி என்பதையும் தவறாமல் சொல்வார். என்ன காரணமாக இருந்தாலும், உத்தர காண்டத்தைக் கம்பன் இயற்றவில்லை என்பதை நிறுவுவதற்குப் பாடுபடவேண்டிய தேவையே இல்லை. திருமுடி சூட்டுப் படலம், விடை கொடுத்த படலத்தோடு கம்பனுடைய காப்பியம் முற்றுப்பெறுகிறது என்பதில் யாருக்கும் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
உத்தரகாண்டத்தை இயற்றியது யார் என்ற கேள்வி ஒன்று எழுகிறது. வாணிதாசன் என்ற கவிஞன் இயற்றியது என்ற ஆய்வை (ரா. ராகவையங்கார் ஆய்வை) வவேசு ஐயர் மறுக்கிறார். இங்கே
http://www.tamilheritage.org/old/text/ebook/THFvavesu.pdf உள்ள “வவேஸு ஐயர் எழுதிய கம்பராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை என்ற தமிழ் இ-புத்தகத்தில் குறிப்பாக (அச்சுப் புத்தகத்தின்) பக்கங்கள் 22 முதல் 25 வரையில் பார்க்கவும். அதற்கு முன்னாலும் பின்னாலும் கூட படிக்கலாம். அருமையான நூல்.
உத்தரகாண்டத்தை இயற்றியவர் ஒட்டக்கூத்தரே என்பது தற்கால ஆய்வுலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இது உண்மையாக இருக்கும் காரணத்தால்தான் வர்த்தமானன் பதிப்பகத்தார் (பதிப்பாளர் திரு ஸ்ரீசந்திரன் அவர்கள் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்) ‘ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டம்’ என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டிருக்கின்றனர். இயற்றியது வாணிதாசன் என்ற குறிப்புகூட இந்நூலில் இடம்பெறவில்லை. எனவே, அடிப்படையில் ‘ஒட்டக்கூத்தர் இயற்றியதே உத்தரகாண்டம்’ என்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தால்தான் இந்தப் பதிப்புக்கு இந்தப் பெயரை இடல் சாத்தியம். இல்லாவிட்டால் ‘வாணிதாசன் அருளிய உத்தரகாண்டம்’ என்று பெயர் வைக்க, பதிப்பகத்தாருக்கு என்ன தடை!
ஆயிற்றா. இப்போதுதான் தொடங்கியிருக்கிறேன். உத்தர காண்டத்தை வாசிக்காமல் ராமாயணானுபவம் பூர்த்தியாகாது என்பது நான் அனுபவரீதியாக உணர்ந்த உண்மை. வடமொழியில் ஒரே கவிஞருடைய வாக்கிலிருந்து வந்ததாகக் கொள்ளப்படும் ஏழு காண்டங்களை வாசிக்கிறோம் என்றால், தமிழில், முதல் ஆறு காண்டங்களை ஒரு கவிஞனும், மற்ற ஒரே ஒரு காண்டத்தை இன்னொரு கவிஞனும் இயற்றியிருக்கிறார்கள் என்பது முதலில் மனத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டியதும் அவசியமானதுமான உண்மை.
இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு கதையின் பிற்பகுதியைச் சொல்லும்போது, முற்பகுதியையும் ஆங்காங்கு சொல்லவேண்டிய அவசியம் நேரும். இந்தக் கதையோ வடமொழியில் சொல்லப்பட்டு, தமிழுக்கு எடுத்து வரப்பட்ட கதை. அதுவும் கம்பன், வால்மீகியின் காதையிலிருந்து ஆங்காங்கு மாறுபட்டிருக்கிறான்; சில இடங்களில் காளிதாசனின் ரகுவம்சத்திலிருந்து இந்த மாறுதல்களுக்கான கருவை எடுத்துக்கொண்டிருக்கிறான் என்பது நான் கண்ட உண்மை. இதற்கான எடுத்துக்காட்டுகளை வேறொரு சமயத்தில் பார்க்கலாம்.
ராமாயணத்தில், அதுவும் கம்பராமாயணத்தில், தொடர்ச்சியாக ஓர் உத்தி கையாளப்படுகிறது. ஆங்காங்கு ஒரு சிறிய முன்கதைச் சுருக்கம் சொல்லப்படுகிறது. இப்படி, கம்பன் இயற்றிய ஆறு காண்டங்களிலும் முன்கதைச் சுருக்கமாக மூன்று முறை (அந்தந்தந்தக் கட்டத்துக்கு முன்வரையிலான) நிகழ்ச்சிகள் சுருக்கமாகச் சொல்லப்படுகின்றன. மூன்று முறையும் இப்படிச் சொல்பவன் அனுமன். முதன்முறை, கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவனிடத்தில் வந்து, ராமனை அறிமுகப்படுத்தும்விதமாகச் சொல்லும் சுருக்கம்; இரண்டாம் முறை சுந்தர காண்டத்தில் தற்கொலைக்குத் துணிந்த சீதையை நிறுத்துவதற்காகத் தொடங்கி, பின்னர் விரித்துச் சொல்லும் கதைச் சுருக்கம்; மூன்றாம் முறை, ராமன் வரும் நாள் தாமதித்த காரணத்தால், எரி மூட்டி, அதனுள் பாய எத்தனித்த பரதனைத் தடுத்து நிறுத்திச் சொல்லும் கதைச் சுருக்கம். ராவணனிடத்தில் ராமனைப் பற்றிச் சொல்வதையும் சேர்த்துக் கொண்டால் நான்குமுறை என்று சொல்லலாம். ஆனால், இந்தச் சுருக்கம், சுருக்கம் என்ற கணக்கிலேயே சேருமா என்பது கேள்விக்குரியது. ஐந்து அல்லது ஆறு பாடல்கள் அளவே கொண்ட இந்தப் பகுதியில், ராமன் வாலியைக் கொன்றவன் என்ற எச்சரிக்கை மட்டுமே பெரிதாக ஒலிக்கிறது.
இதைத் தவிர, கார்காலப் படலத்தில் ராமனுக்கு ஏற்படும் பழைய நினைவுகள்; நாடவிட்ட படலத்தில் அனுமனுக்குச் சீதையை அடையாளம் காட்டுவதற்காகச் சொன்ன நிகழ்வுகள்; சுந்தர காண்டத்தில் அசோக வனத்துச் சீதையின் பழைய நினைவுகளும்; ராமனுக்கு அடையாளம் சொல்வதற்காகச் சொன்ன சில நிகழ்வுகளும் என்று இந்த ‘முன் கதைச் சுருக்கத்துக்கு’ இன்னொரு விதம் உண்டு. முதல் மூன்று கதைச் சுருக்கங்களும், அதுவரையில் நிகழ்ந்தனவற்றின் சுருக்கங்கள். இந்த இரண்டாம் வகையிலோ என்றால், முன்னர், கதையில் விடுபட்டுப் போன சில நிகழ்வுகளை போகிற போக்கில் சொல்லிச் செல்லும் கூடுதல் தகவல்களுடன் கூடிய சுருக்கங்கள். இந்த விதத்தில் இந்த இரண்டாம் பிரிவு மாறுபடுகிறது.
அனுமன் சொல்லும் முன்கதைச் சுருக்கங்களை, அதற்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம். Major landmarks என்று சொல்லக்கூடிய அத்தனை விவரங்களும் இவற்றுள் இடம்பெறும். இங்கே கவிஞனுக்கு முன்னால் இருக்கும் சவால் என்னவென்றால், தான் இதுவரையில் சொல்லி வந்த கதையின் மன-வரைபடம் (mental map) அவனிடத்தில் திட்டவட்டமாக இருந்தாக வேண்டும். வால்மீகியின் கதையிலிருந்து சில அம்சங்களை மாற்றிச் சொல்வதால், இந்த விஷயத்தில் கவிஞனுடைய கவனத் திறனுடைய சுமை அதிகரிக்கிறது. வில்லை முறிப்பதற்கு முன்னரேயே சீதையும் ராமனும் ஒருவரை ஒருவர் காணுவதும், காதல் கொள்வதும் ஓர் எடுத்துக்காட்டு. இதை, பின்னால் தொடரும் சுருக்கங்களில் கவனமாகத் திரும்பச் சொல்லவேண்டும். நான் மிகச் சிறிய எடுத்துக்காட்டைத்தான் சொன்னேன். வனம் புகும் முன் தசரதனுக்கும் ராமனுக்கும் ஏற்படும் வாக்கு வாதங்களைக் கம்பன் தவிர்த்திருப்பதையும்; ‘நீ என் மனைவி இல்லை. உன்னைத் துறந்தேன். பரதனையும் துறந்தேன்’ என்று அந்தப்புரத்தில் தசரதன் சொன்ன வார்த்தையை, வசிஷ்டரும், மக்களும் கூடியிருக்கும்போது சொல்வதாக மாற்றியமைத்திருப்பதையும், அதன் காரணமாகவே, வான்மீகத்தில் பரதனே ஈமக்கிரியைகளைச் செய்ய, கம்பனில் சத்ருக்னன் செய்வதாக மாற்றி அமைக்கவேண்டி நேர்ந்திருப்பதையும்கூட இன்னோர் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மாரீச மானுக்குப் பின்னால் சென்ற ராமனுக்குத் துணை போவதற்காக சீதை லக்ஷ்மணனைச் சொன்ன அவச்சொல்லைத் தவிர்த்து, அவனுக்கு வேறுவிதத்தில் அதே அழுத்தத்தை உண்டாக்கியதையும் சொல்லலாம். இன்னும் நிறையச் சொல்லலாம்.
The challenge here for the Poet is to have an extraordinary grip over the story and the detours that he has been making, and the necessary sequential effects on the main story line that such detours would cause on his re-telling. இந்த அசாதாரணத் திறனைக் கம்பனில் முழுக்க முழுக்கக் காணமுடிகிறது. நாடகப் பாங்கு, கட்டுக்குலையாமல், தான் உண்டாக்கிய திருப்பங்களோடு சேர்த்து, மூலக் கதையின் பிற்பகுதிகளில் (முற்பகுதி மாற்றங்களால் நேரும் விளைவுகளையும் உள்ளடக்கிய) சம்பவக் கோவையை அமைப்பது என்பது கவிஞனின் முன் உள்ள பெரிய சவால். இதைக் கம்பன் மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறான் என்பதில் யாருக்கும் மறுப்பிருக்க முடியாது.
சரி. இப்போது உத்தர காண்டத்துக்கு வருவோம். இவரோ இன்னொரு கவிஞர். இவருக்கு, இதற்கு முன்னால் உள்ள ஆறு காண்டங்களும், அவற்றில் மூல நூலில் செய்யப்பட்டுள்ள மாறுதல்களும் முழுக்க முழுக்க அத்துப்படியாகி இருந்தாலொழிய இவரால், ‘ஏதோ போகிற போக்கில் வால்மீகி சொல்வதை மட்டும் அப்படியே எடுத்துச் சொல்லிவிட்டால் நம் வேலை முடிந்தது’ என்றுதான் போயிருந்திருக்க முடியும். அந்த விதத்தில் ஒட்டக்கூத்தருக்கு முன்னால் இருந்தது, கம்பனுக்கு முன்னால் இருந்ததைக் காட்டிலும் அதிகமான சுமை என்றுதான் சொல்லவேண்டும். அவனுக்கோ, அவன் செய்த மாறுதல்களையும், அந்த மாறுதல்களால் ஏற்படும் விளைவுகளையும் மட்டும் சொன்னால் போதும். இவருக்கோ என்றால், கம்பன் செய்துள்ள ஒவ்வொரு மாற்றமும் நுணுக்கமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு சிக்கலான இடத்துக்கு வருவோம். உத்தரகாண்டத்திலும் ஒரு முன்கதைச் சுருக்கம் வருகிறது. ஆனால், இம்முறை இந்த முன்கதைச் சுருக்கத்தைச் சொல்பவர்கள் குச-லவர்கள். வான்மீகமும் இப்படித்தான் சொல்கிறது. சொல்லப்போனால், குச லவர்கள் சொல்லும் கதையை ராமன் கேட்கும் காட்சியில்தான் கதையே தொடங்குகிறது. மற்ற அனைத்தும் ஃப்ளாஷ்பேக் உத்தி. Kamba Ramayana A Study என்று ஆங்கிலத்தில் எழுதிய வவேசு ஐயர் இதை எப்படி கவனிக்காமல் விட்டுவிட்டார் என்பது ஆச்சரியமான ஒன்று. ஏனெனில், இப்படி, கதையை நடுவிலிருந்தோ அல்லது முடிவிலிருந்தோ தொடங்கி, ஃப்ளாஷ்பேக்காக மற்ற நிகழ்வுகளைச் சொல்லும் In Medias Res எனப்படும் உத்தி, இலியட் முதலான ஐரோப்பியக் காதைகளில் மட்டுமே காணப்படுவது என்று குறிப்பிட்டிருக்கிறார். சொல்லப்போனால், மஹாபாரதம் முழுக்க முழுக்கவே ஃப்ளாஷ்பேக் உத்திதான் என்பதை ஏனோ ஐயர் கவனிக்கத் தவறிவிட்டார். அர்ஜுனனுடைய கொள்ளுப்பேரனான ஜனமேஜயர் காலத்தில் அல்லவா கதையே தொடங்குகிறது!
தமிழில் இந்தக் குச-லவ ராமாயணச் சுருக்கம் கத்தி முனையில் நடப்பதைக் காட்டிலும் அபாயகரமானதாக்கப்பட்டுவிட்டது. ஏனெனில், கம்பன் செய்த மாறுதல்கள் அத்தகையவை. இந்த மாற்றங்களில் மிகப் பெரிதும் குறிப்பிடத் தக்கவை இரண்டு. ஒன்று. வால்மீகியில், ராமன் சுவேல மலையில் வந்து இறங்கியதுமே, ஒரு மாய ராமனுடைய தலையை வெட்டி, அந்தத் தலையையும், ராமனுடைய வில்லைப் போன்ற ஒரு வில்லையும் செய்து, சீதைக்கு முன்னால் கொண்டுவந்து வைத்து, ‘உன் கணவனைக் கொன்றாகிவிட்டது. இனி உனக்கு வேறு வழியில்லை. என்னை ஏற்றுக் கொள்வது ஒன்றுதான் உன்னால் இப்போது செய்யக்கூடிய காரியம்’ என்று பெரும் மன அழுத்தத்தை உண்டாக்குகிறான் ராவணன். இந்த மன அழுத்தத்தையும் தாண்டி சீதை உறுதியாக நிற்கிறாள் என்பது நாடகப் பாங்கு சொல்லும் செய்தி.
கம்பனுக்கு இங்கே ஒரு சங்கடம் ஏற்பட்டுவிட்டது. அவனுக்கு ‘சும்மனாச்சுக்கும் கூட’ ராமனுடைய தலை வெட்டப்பட்டது என்று எழுத முடியவில்லை. இது உண்மை என்பதை நாகாஸ்திரப் படலத்திலும், பிரமாஸ்திரப் படலத்திலும், இந்த அஸ்திரங்களின் கட்டிலிருந்து ராமனைத் தனிப்படுத்தி, விலக்கியிருப்பதே சொல்லும். வான்மீகத்தில் இந்த அஸ்திரங்களின் கட்டில் ராமனும் உட்படுத்தப்பட்டிருக்கிறான்; கம்பன் படைப்பில் ராமனைத் தவிர்த்த மற்றவர் இந்த அஸ்திரங்களின் கட்டில் அகப்படுகின்றனர். ராமன் மரணமூர்ச்சை அடைந்ததைப்‘போலக்’ கிடக்கிறான். அந்த, ‘போல’ என்ற சொல்லை மனத்தில் அழுந்த வாங்கிக்கொள்ள வேண்டும்.
சரி. என்னால் பொய்யாகக்கூட, மாயத்தோற்றமாகக்கூட, ராமனுடைய தலை வெட்டுப்பட்டுவிட்டது என்று எழுதமுடியவில்லை. ஆனால், எனக்கு அந்த நாடகம் தேவைப்படுகிறதே! அந்தச் சமயத்தில் சீதை துடிக்கும் துடிப்பைச் சித்திரிக்க வேண்டியிருக்கிறதே! எவ்வளவு பெரிய அழுத்தத்தை எதிர்கொண்டு, சுமந்தபடி சீதை ஒரு துன்பமான கட்டத்தை, தன் மனத்தின் உறுதியில் சற்றும் தளர்ச்சியில்லாமல் கடந்தாள் என்பதைச் சித்திரிக்க வேண்டுமே! I do not need this scene; but I must have its effect.
இதற்காகக் கம்பன் படைத்ததுதான் (வான்மீகத்தில் இல்லாத) மாயா சனகப் படலம். ஒரு பெண்ணுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கத்தை வகிப்பவர்கள் அவளுடைய தந்தை; அதற்கு அடுத்ததும் இறுதியுமாக அவளுடைய கணவன். அங்கே மாயா ராமப் படலத்தில் இழந்த நாடகத்தை, மாயா சனகப்படலத்தால் ஈடு செய்தான் கம்பன். மாயா சனகனைச் சங்கிலியால் பிணைத்து, சீதையின் முன்னால் இழுத்துவந்து நிறுத்தி, அவனைத் துன்புறுத்தி, கொன்றுவிடப் போவதாக அச்சுறுத்தி, தனக்கு இணங்கினால், சனகனுக்கு மூவுலக ஆதிபமும் தருவதாகக் கூறி... தன்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சனகனை சீதையின் கண்முன்னாலேயே கொல்வது மட்டுமல்லாமல், மிதிலைக்கும் அயோத்திக்கும் பெரும் அரக்கப்படை ஏற்கெனவே புறப்பட்டுப் போயாயிற்று என்றெல்லாம் பொய்யாட்டம் ஆடி, சீதையின் துடிப்பையும், அந்த நிலையிலும் கருத்து மாறா நிலைப்பாட்டையும் காட்டும்போது, இடையில் மாயா சனகன் புகுந்து தப்பாட்டம் (foul-play) ஆடிவிடுகிறான். இதற்கு ஒருபாடல் முன்னால், சீதையைக் கொல்ல வாளை உருவி ராவணன் மிரட்டிக்கொண்டிருக்கிறான் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். இந்தச் சமயத்தில் நம்ம சனகர் சொல்றார்:
அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க, 'ஆவி
பொன்றினன் ஆகும்' என்னத் தரையிடைக் கிடந்த பொய்யோன்,
'இன்று இது நேராய் என்னின், என்னை என் குலத்தினோடும்
கொன்றனை ஆதி' என்னா, இனையன கூறலுற்றான்
(மகோதரன்,பெண்ணைக் கொல்ல வேண்டாம் என்று தடுத்தான். ராவணனும்) தன்னுடைய ஆசனத்துக்குப் போனான். (மாயா) சனகன், ‘இவனுக்கு இணங்காவிட்டால் என்னை மட்டுமில்லை, என் குலத்தையும் கொன்றுவிட்டவளாகிறாய்’ என்று பேசத்தொடங்க, ‘அடச்சீ நாயே! நீ சனகனா? சனகன் இப்படிப் பேச மாட்டான். ஒருவேளை நீ சனகனாகவே இருந்தாலும் இருந்துவிட்டுப் போ. இவன் உன்னைக் கொன்றால் செத்துத் தொலை. இல்லாவிட்டால், என் கணவன் என்னை மீட்கும்போது உன்னை மன்னித்தால் பிழை’ என்று சீதை தூற்றிக் கொண்டிருக்கிற சமயத்தில்தான், தூதர்கள் வந்து அங்கே போர்க்களத்தில் கும்பகர்ணன் மாண்டுபோன செய்தியைச் சொல்கிறார்கள். ராவணன் கதறுகிறான். அலறுகிறான். துடிக்கிறான். கடைசியில் கவி சொல்கிறான்:
அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து,
பண்டைத் தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தான்;
தொண்டைக் கனிவாய் துடிப்ப, மயிர் பொடிப்ப,
கெண்டைத் தடங் கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள்.
(அண்டமெல்லாம் கிடுகிடுக்கும் அளவுக்கு வாய்விட்டு அலறியவன் என்ற பொருளுள்ள ராவணன் என்ற தன்னுடைய) பெயருக்குக் காரணம் பழைய நாளில் ஏற்பட்டதை உறுதிப்படுத்துவதைப் போல மறுபடியும் அப்படி அலறிக் கொண்டு ராவணன் ஓடினான். அங்கே ஒரு சொல் போட்டான் பாருங்கள்--கெண்டைத் தடங் கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள்.’ உள்ளே அப்படிக் குளிர்ந்ததாம் சீதைக்கு. மாயா சனகப் படலம், கும்பகர்ண வதச் செய்தி ராவணனை வந்தடைவதோடு முடிவடைகிறது.
சரி. அப்படியானால், மூலத்திலிருந்து ஒரு சர்க்கம் விடுபட்டிருக்கிறது; இன்னொரு சர்க்கம் சேர்க்கப்பட்டிருக்கிறது. நாடகத்தின் தன்மையோ, பாங்கோ, நேர்த்தியோ, பாத்திரங்களின் தன்மையோ ஒரு துளியும் சிதைவின்றி வெகு லாகவமாக இந்த மாற்றம் கையாளப்பட்டுள்ளது.
இப்போது, ஒட்டக்கூத்தருக்கு வருவோம். அவருடைய குச-லவ ராமாயணச் சுருக்கம்தான் நமக்கு இந்தக் கவிஞருடைய மனோதர்மத்துக்கான உரைகல். இவர், கம்பன் செய்துள்ள மாற்றங்களை கவனத்தில் கொண்டுதான் செய்திருக்கிறாரா, இல்லை, ‘வேலை முடிந்தால் போதும்’ என்று வால்மீகியை அப்படியே அடியொற்றிவிட்டுப் போய்விட்டாரா? இங்கேதான் அமிலச்சோதனை நிகழ்கிறது. குச லவர்கள் சொல்லும் சுருக்கத்தில் பின்வரும் பாடலைப் பாருங்கள்:
அப்புறத்தினில் மருத்தனைச் சனகர்கோ னாக்கி
குப்புறுத்தினன் மகோதரன்; சீதையும் குலைந்தாள்
எப்புறத்தினும் இராவணன் செவியெலாம் கேட்க
இப்புறத்தின் நின்று ஆர்த்தது இராகவன் சேனை.
கும்ப கன்னன் குறைந்தமை கூறினார்.
தம்பியோ என்ற ரற்றித் தசமுகன்
அம்பொன் தேர் அதிகாயனை ஏவினான்.
எம்பிராற்கு இளையோன் எதிர் தாக்கினான்.
ஒட்டக்கூத்தர் எந்த அளவுக்குக் கம்பனை ஆழமாகப் படித்திருக்கிறார்?
- மாயா ராமனுடைய தலை வெட்டப்பட்ட காட்சி இல்லை
- மாயா சனகப் படலம் (மூலத்தில் இல்லாத, கம்பன் செய்த மாறுதல்) இடம்பெற்றுள்ளது
- கம்பன் மாயாசனகப் படலத்தை எப்படி முடித்திருக்கிறானோ, அப்படியே, கும்பகர்ணன் இறந்த செய்தியோடு, இந்தப் படலத்தைப் பற்றிய சுருக்கம் முடிவடைகிறது.
இது மட்டுமல்லாமல், மூலத்தில் ராவணனை, கும்பகர்ணன் கண்டித்தது இருக்கிறது. சீதையைத் திரும்ப அனுப்பாதது தவறு என்ற சொன்னது இருக்கிறது. ஆனால், விபீஷணன், கும்பகர்ணனை, ராமன் பக்கத்துக்கு வந்து சேர்ந்துவிடும்படிச் சொன்னது இல்லை. ஒட்டக்கூத்தருடைய குச-லவ கதைச் சுருக்கம் சொல்கிறது:
வியந்து வீடணன் அழைத்தலும் வெய்யவன் மறுத்து
வயந்தனைப் பிசைந்து.....
விபீஷணன் ராமன் பக்கத்துக்கு வந்துவிடும்படி அழைத்தான்; கும்பகர்ணன் வர மறுத்தான். பிறகு வசந்தன் என்னும் வானரனுடன் போர் தொடங்கினான்.. என்று விவரிப்பு செல்கிறது.
இப்போது எதைச் சொல்வது என்று புரியாமல் திகைக்கிறேன். இவ்வளவு அதிநுட்பமாகக் கம்பன் செய்திருக்கும் ஒவ்வொரு மாறுதலையும் கவனத்தில் கொண்டு, தன்னுடைய படைப்பில் அதே நிகழ்வுகளை, அதே மாற்றங்களை அப்படியே கொண்டுவந்து வைத்திருக்கிறார் என்றால்---
- கம்பனைப் படித்திராவிட்டால் இப்படி மாற்றங்களைச் செய்ய ஒட்டக்கூத்தரால் முடியுமா?
- கம்பனுக்குக் காலத்தால் முற்பட்டவராக இருந்தால், இந்த மாற்றங்களையெல்லாம் எப்படித் தன்னுடைய படைப்புக்குள் கொண்டுவந்தார்?
இது சான்று. தீர்ப்பு உங்கள் கையில். யார் முன்னால், யார் பின்னால்?
--
அன்புடன்,
ஹரிகி.