1. புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.36-40 +++ 2. மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 33 +++ 3. தந்தை பெரியார் சிந்தனைகள் : நூலாசிரியரைப் பற்றி. . .

28 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Mar 2, 2022, 10:16:21 PM3/2/22
to thiru thoazhamai, தமிழ் மீட்சிப் பாசறை, 119maa27s...@gmail.com, Raghavendra A, Headmaster - MM Higher secondary school, Thirunagar, 40. Anuragam Kalaignaan, ap.a...@gmail.com, ayyanathan k, Balakrishnan Thirugnanam, Bharathy S, sivakumar pandari, Sivakumar P, Chandra Sekar, தமிழ் யாப்பியல் ஆய்வாளர் பேரவை, World Tamil Forum, kavia...@yahoo.co.in, Chandar Subramanian, kalvettu, ymha.vaddukoddai, Kanagu Chandran, manjula.k, mkindu, Mumbai Kumanarasa Lemuriya Publications, lankasri, ne...@tamilwin.com, online...@thehindutamil.co.in, Newsofthe Transtamils, poongundran, kunathogai kunathogai, SENTHIL KUMARAN, Dhinasari, drtami...@gmail.com, Gnanam Magazine - ஞானம், hills...@gmail.com, IE Tamil, Murugesan M., in...@tyouk.org, jeyamohan....@gmail.com, kambane kazhagam, kanagad...@gmail.com, Karthikasa...@gmail.com, 156. karu Murugesan, KaviMari Kaviarasan, kavitha directions, Kaviyodai, kovai...@gmail.com, Lakshmi Kumaresan, manaa lakshmanan, me...@tyouk.org, mgayat...@gmail.com, Mu.ilangovan ??.?????????, mullaicharamtamil, nagg...@yahoo.com, Vairamuthu, pandiya raja, puduvaibloggers kuzhu, tamil_ulagam kuzhu, kuzhu, tamilmanram kuzhu, தமிழ் சிறகுகள், thamizh...@googlegroups.com, theyva-thamizh, வல்லமை, pulavar...@gmail.com, puviya...@hindutamil.co.in, r.divyar...@gmail.com, sa...@thehindutamil.co.in, saralas_k...@yahoo.com, see...@gmail.com, su.ariv...@gmail.com, tamizham...@gmail.com, thagadoo...@gmail.com, thamizhmu...@gmail.com, thi...@journalist.com, vidutha...@gmail.com, vaani...@gmail.com, vaiyai...@gmail.com, Vijaya Raghavan, riaz66...@gmail.com, vrtami...@gmail.com, பொழிலன், p.kalai...@gmail.com, poova...@gmail.com, pon malar, yuvar...@gmail.com, ldml...@gmail.com, vydh...@yahoo.com, esukur...@gmail.com, drkadavur...@gmail.com, lalithas...@gmail.com, vathi...@gmail.com, josephse...@gmail.com, gganesh....@gmail.com, advocate....@gmail.com, gitasr...@gmail.com, ilakkanat...@gmail.com, mint...@googlegroups.com, ambikam...@gmail.com

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.36-40

 அகரமுதல





(இராவண காவியம்: 1.2.31-35 தொடர்ச்சி)


36. அடுப்பிடு சாந்தமோ டகிலின் நாற்றமும்

துடுப்பிடு மைவனச் சோற்றி னாற்றமும்

மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற்

கடைப்படு பொருளெலாங் கமழுங் குன்றமே.


37. தண்டமி ழகமெனுந் தாயின் மங்கலங்

கொண்டணி விழவயர் குறிச்சி முன்றிலிற்

றொண்டக முழங்கிடத் தோலின் யாக்கையர்

கண்டெனு மொழிச்சியர் களிப்ப வாடுவர்.


38. சந்தன முன்றிலிற் றங்கை பாவையை

மந்திகை செய்துள மகிழச் செய்யுமால்;

குந்தியே கடுவனுங் குழந்தை முன்மட

லந்திகழ் கிலுகிலி யாட்டித் தேற்றுமால்.


வேறு

39. தேனுந்தினை மாவுந்தொகு தெளிவுந்தெளி தேனை

மானுஞ்சுனை நீருங்கழை யோடைவன மடையும்

கானந்தரு கிழங்கும் பல களியுங்கனி மொழியார்

ஏனந்தனி லேநந்திட வினிதாவிருந் தயரும்.


வேறு

40. துளிமிகு கூதிரிற் றுணைமை யோடுயிர்

களிமிகி யாமமெய் கலந்தங் கின்புற

அளிமிகு காதல ரணுகி யன்பது

கொளவிட மாய்மழைக் குறிஞ்சி மன்னுமால்.

குறிப்பு

36. சாந்தம்- சந்தன மரம். ஐவனம்-மலைநெல், 37. குறிச்சி–குறிஞ்சி

நிலத்தூர், தொண்டகம்-குறிஞ்சிப்பறை. 38, மடல்-

ஒலை. கிலுகிலி- கிலுகிலுப்பை , 39, தெளிவு-கனிச்

சாறு. கழை-மூங்கிலரிசி

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை

++
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 33

 அகரமுதல



(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 32 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர் 13


பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும்
காளையாந் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்புமின்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னோ?
      — 
குண்டலகேசி


வாழ்க்கையின் பொருளடக்கம் போல் வகையாக வனப்பாக அமைந்த வீதி அது. மேலக் கோபுரத்திலிருந்து மதுரை நகரத்து இரயில் நிலையம் வரையிலுள்ள வீதிக்குப் பகலும் இல்லை இரவும் இல்லை. எப்போதும் ஒரு கலகலப்பு. எப்போதும் ஒரு பரபரப்பு. கையில் கடிகாரத்தையும் மனத்தில் ஆசைகளையும் கட்டிக்கொண்டு எதற்கோஎங்கோ விரைவாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் கூட்டம் பெருகியும், தனித்தும், பொங்கியும், புடைபரந்தும், வற்றாமல், வாடாமல் உயிர்வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிற துடிப்பு, சந்தித்து விசாரித்துக் கொள்ளும் குரல்கள், பிரிந்து விடைபெறும் குரல்கள், கடைகளின் வியாபாரம், பேரம் பேசுதல்கார்கள்ரிக்ஷா, குதிரை வண்டிகள் ஓடும் ஒலிகள் – வாழ்க்கையை அஞ்சல் செய்து ஒலி பரப்புவது போல் ஒரு தொனி, இந்த வீதியில் கண்ணை மூடிக் கொண்டு நிற்பவர்களுக்குக் கூடக் கேட்கும்.

அன்று இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகியிருந்தது. இந்தக் கலகலப்பான வீதியில் இரு சிறகிலும் பொய்கள் பூத்து மின்னுவதுபோல் விளக்குகள் தோன்றின. மனத்தில் சிந்தனை முறுக்கேறி நிற்கிற சில சமயங்களில் அரவிந்தன் அச்சகத்து வாசலில் நின்று ஒருவிதமான நோக்கமுமின்றிக் கவின்கண்களால் இந்தக் காட்சிகளைப் பருகிக் கொண்டிருப்பது வழக்கம். அன்று அவனால் நெடுநேரம் அப்படி நின்று வீதியின் அழகை அனுபவித்து நோக்க முடியவில்லை. உள்ளே அவன் செய்ய வேண்டிய வேலைகள் நிறையக் கிடந்தன. அன்று காலையில் தான் அவன் வெளியூரிலிருந்து வந்திருந்தான். ஏறக்குறைய நண்பகல் வரை திருப்பரங்குன்றம் சென்று பூரணியைப் பார்த்துவிட்டுத் திரும்புவதில் நேரம் கழிந்துவிட்டது. பின்பு மாலையில் அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரத்தோடு வரவு செலவுக் கணக்கு, புதிய அச்சு இயந்திரங்கள், இவைபற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டான். திருத்த வேண்டிய அச்சுப் படிகள் குவிந்திருந்தன. உடனிருந்து அச்சுப் படிகளை ஒப்புநோக்கிப் படிப்பதற்கும் உதவுவதற்கும் முருகானந்தத்தை வரச் சொல்லியிருந்தான் அவன். இரவு ஒன்பது மணிக்கு மேல் முருகானந்தத்தையும் துணைக்கு வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் விழித்திருந்து வேலைகளை முடிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த அரவிந்தன் முருகானந்தத்தின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.

முருகானந்தம் தையல் கடையைப் பூட்டிவிட்டுச் சாவிக் கொத்தை விரலில் கோத்துச் சுழற்றிக் கொண்டே வந்து சேர்ந்த போது மணி ஒன்பதே முக்கால்.

“இங்கே வேலை முடிய அதிக நேரம் ஆகும். நீ சாப்பிட்டாயிற்றா முருகானந்தம்?” என்று கேட்டான் அரவிந்தன்.

“அதெல்லாம் வரும்போது உணவகத்தில் முடித்துக் கொண்டு தான் வந்தேன். உன்னை நம்பி இங்கே வந்தால் நீ நாலு நிலக்கடலைப் பருப்பையும் பாதி வாழைப் பழத்தையும் கொடுத்துப் பட்டினி போடுவாய். முன்னெச்சரிக்கையாக நானே சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்துவிட்டேன். படுக்கை இங்கே தான். வீட்டுக்குச் சொல்லியனுப்பியாயிற்று” என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினான் முருகானந்தம். அவனுடைய வீடு பொன்னகரத்தின் நெருக்கமான சந்து ஒன்றில் இருந்தது. முருகானந்தத்தின் குடும்பத்தில் அத்தனை பேரும் உழைப்பாளிகள். தாயார், தகப்பனார், சகோதரி மூவருக்கும் ஆலையில் வேலை. அவன் தான் அந்த வழியிலிருந்து சிறிது விலகித் தையல் கடை வைத்திருந்தான். உள்ளங்கை அகலத்துக்கு ஓர் இடத்தில் ஒரே தையல் இயந்திரத்தோடு அந்தக் கடையைத் தொடங்கினான் அவன். தொடக்கத்தில் அளவு எடுப்பதிலிருந்து பித்தான்களுக்குத் துளை போடுவதுவரை எல்லா வேலைகளையும் ஒரே ஆளாக இருந்துகொண்டு செய்தவன், திறமையாலும் சுறுசுறுப்பாலும் படிப்படியாக வளர்ந்து இன்று தன்னோடு இரண்டு தையற்காரர்களை உடன் வைத்துக் கொண்டு வேலை வாங்குகிற அளவு முன்னேறியிருந்தான். ஒவ்வோர் ஊரிலும் குறிப்பிட்ட தொழிலில் பலர் இருந்தாலும் சிலருக்குத்தான் அந்தத் தொழிலில் பெரும் புகழும் வந்து பொருந்தும். மதுரையில் அத்தகைய பேரும் புகழும் பொருந்திய சில தையற்காரர்களில் முருகானந்தம் முதன்மை பெற்றிருந்தான்.

அரவிந்தனின் நட்பும், பழக்கமும் முருகானந்தத்திற்குத் தமிழ்ப் பற்றும் அறிவு உணர்ச்சியும் அளித்திருந்தன. ஆவேசம் நிறைந்த மேடைப் பேச்சாளனாகவும் அவன் உருவாகியிருந்தான். பொன்னகரம், பிட்டுத்தோப்பு, ஆரப்பாளையும், மணிநகரம் ஆகிய பகுதிகள் மதுரை நகரத்தின் உழைக்கும் மக்கள் பெரும்பாலோர் வசிக்கும் இடம். கைகளில் உழைப்பும், மனத்திலும் வீட்டிலும் ஏழ்மையுமாக வாழும் அந்தத் தொழில் உலகத்தில் முருகானந்தம் ஒரு பிரமுகர் போல் மதிப்புப் பெற்றிருந்தான். இத்தனை சிறு வயதில் அவ்வளவு பெருமை வருவதற்குக் காரணம் அவன் மற்றவர்களோடு பழகுகிற எளிய முறைதான். கூசாமல் எங்கே துன்பத்தைக் கண்டாலும் புகுந்து உதவுகிற மனம், எந்த இடத்திலும் யாருக்கு அநியாயம் இழைக்கப்பட்டாலும் தனக்கே இழைக்கப்பட்டது போல் உணர்ந்து குமுறிக் கொதிக்கிற பண்பு, சுற்றித் திரிந்து பல இடங்களில் அலைந்து பலரோடு பழகும் இயல்பு, இவற்றால் முருகானந்தம் உழைக்கும் மக்கள் நிறைந்த பகுதியில் அப்படி ஒரு செல்வாக்கைப் பெற்றிருந்தான். வெளியில் இவ்வளவு செல்வாக்குப் பெற்றிருந்த அவன் அரவிந்தனிடம் பழகிய விதமே தனிப்பட்டது. கருத்துகளையும் இலட்சியங்களையும் கற்கும்போது ஆசிரியனுக்கு முன் பணிவான மாணவனைப் போல் அவன் பழகினான். நண்பனாகப் பழகும்போது தோளில் கைபோட்டுக் கொண்டு உரிமையோடு பழகினான். உதவி செய்ய வருகிறபோது வேலைக்காரனைப் போல் கூப்பிட்டவுடன் வந்து உதவினான். ஆனால் அரவிந்தனுக்கும் முருகானந்தத்துக்கும் உள்ள வேறுபாடு இலட்சியங்களைச் செயல்படுத்துகிற விதத்தில் இருந்தது. ஒழுங்கையும் மனத் திடத்தையும் கொண்டு இலட்சியங்களை நிறைவேற்ற ஆசைப்பட்டான் அரவிந்தன். முரட்டுத்தனத்தையும் உடல் வன்மையையும் கொண்டு இலட்சியங்களை உருவாக்க ஆசைப்பட்டான் முருகானந்தம். அதற்கேற்ற உடல்கட்டும் அவனுக்கு இருந்தது.

அரவிந்தனுக்கு அச்சுப் படிகள் படித்துத் திருத்துவதற்கு உதவும் நாட்களில் இரவில் நீண்ட நேரம் வரை கண்விழிக்க வேண்டியிருக்குமாகையால் முருகானந்தம் அவனோடு அச்சகத்திலேயே படுத்துக் கொண்டுவிடுவான். வேலை முடிந்து படுத்துக் கொண்ட பிறகும் படுக்கையில் கிடந்தவாறே பல செய்திகளைப் பற்றிப் பேசிவிட்டுக் கண்கள் சோர்ந்த பின்பே அவர்கள் உறங்குவார்கள். அன்றைக்கோ அவர்கள் உள்ளே போய் உட்கார்ந்து வேலையைத் தொடங்கும்போதே ஏறக்குறைய இரவு பத்துமணி ஆகிவிட்டது. இரண்டாவது ஆட்டம் திரைப்படத்துக்குப் போகிற கூட்டமும், முதல் ஆட்டம் விட்டு வருகிற கூட்டமுமாக வீதி பொலிவிழக்காமலிருந்தது.

“நீ கொஞ்சம் விரைவாகவே வந்துவிடுவாய் என்று எதிர்பார்த்தேன். நேரமாக்கிவிட்டாய் முருகானந்தம்… இந்தா, இதை நீ வைத்துக்கொண்டுப் படி. நான் சரி பார்க்கிறேன். முடிந்த வரை பார்த்துவிட்டுப் படுக்கலாம்” என்று சொல்லிவிட்டுக் கையெழுத்துப் படிகளாகிய மூலத்தாள்களை முருகானந்தத்திடம் கொடுத்தான் அரவிந்தன்.

அவற்றைக் கையில் வாங்கிக் கொண்டு “தையல் கடையில் இன்றைக்கு ஒரு வம்பு வந்து சேர்ந்தது. துணியைத் தைத்துக் கொண்டு கடன் சொல்லுகிறவர்களையும் பேரம் பண்ணுகிறவர்களையும் அதிகம் பார்த்திருக்கிறேன். காலையில் ஒரு வெளியூர் மனிதன் தைத்த துணியை வாங்கிக் கொண்டு போகிற போது ‘மணிபர்சை’ மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டான். வாங்கிக் கொண்டு போக வருவானோ என்று நானாகவே சிறிது அதிக நேரம் காத்திருந்தேன். வழக்கமாக வருகிற மனிதனுமில்லை அவன். ஆனால் எனக்குக் கடையின் நாணயமோ, பேரோ கெட்டுவிடக் கூடாதென்று பயம். அதுதான் காத்துப் பார்த்தேன். ஆள் வரக்காணோம். பையைத் திறந்து பார்த்தால் ஏதோ கடிதம், புகைப்படங்கள். இரண்டு மூன்று நூறு உரூபாய்த் தாள்கள் எல்லாம் இருக்கின்றன. அதற்காகவே வழக்கமாகக் கடைப் பூட்டுகிற நேரத்துக்கு மேலும் திறந்து வைத்துக் கொண்டு இருந்தேன். இல்லாவிட்டால் ஒன்பது மணிக்கே இங்கு வந்திருப்பேன்” என்று தாமதத்துக்குக் காரணம் சொன்னான் முருகானந்தம்.

“சரி… சரி… நீ படிக்க ஆரம்பிக்கலாம். இன்னும் ஏதாவது கதையளந்து நேரத்தை வீணாக்காதே” என்று அரவிந்தன் துரிதப்படுத்தவே முருகானந்தம் பேச்சை நிறுத்திவிட்டுப் படிக்கத் தொடங்கினான். பூரணியின் தந்தை பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் எழுதிய ‘தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை நெறி’ என்னும் புத்தகத்துக்கான அச்சுப்படிதிகள் அவை. முதல் திருத்தத்துக்கான காலி புரூஃப்கள்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்

++

தந்தை பெரியார் சிந்தனைகள் : நூலாசிரியரைப் பற்றி. . .

 அகரமுதல



(தந்தை பெரியார் சிந்தனைகள் 42 இன் தொடர்ச்சி)

இந்நூலாசிரியரைப் பற்றி. . .

85 அகவையைக்(பிறப்பு: 27.8.1916) கடந்த நிலையிலுள்ள இந்நூலாசிரியர் பி.எசு.சி., எம்.ஏ., எல்.டி, வித்துவான், பிஎச்.டி., டி.லிட் பட்டங்கள் பெற்றவர். (குறிப்பு – இக்குறிப்பு நூல் வெளிவந்த பொழுது எழுதப்பெற்றது. முனைவர் ந.சுப்பு(ரெட்டியார்) 2006 மேத்திங்கள் முதல் நாள் மறைந்தார். )

ஒன்பதாண்டுகள் துறையூர் உயர் நிலைப்பள்ளி நிறுவனர், தலைமை யாசிரியராகவும் (1941-50), காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் – துறைத் தலைவராகவும் (1950-60), பதினேழு ஆண்டுகள் – திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் நிறுவனர், பேராசிரியர் – துறைத்தலைவராகவும் (1960-77) பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

1978 சனவரி 14இல் சென்னையில் குடியேறிப் பதினைந்து மாதங்கள் (1978 பிப்பிரவரி – சூன் 1979) தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் முதன்மைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் மூன்று மாதங்கள் மதிப்பியல் பேராசிரியராகவும், 1989 மே முதல் 1990 அட்டோபர் முடிய 18 திங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் – காஞ்சித் தத்துவ மையத்தில் தகைஞராகவும் பணியாற்றி, 1200 பக்கத்தில் ‘வைணவச் செல்வம்’ என்ற ஒரு பெரிய ஆய்வு நூலை உருவாக்கி வழங்கியவர். முதற்பகுதி 1995இல் 575 பக்கத்தில் வெளி வந்துள்ளது. இரண்டாவது பகுதி அச்சேறும் நிலையில் உள்ளது (த.ப.க. வெளியீடு). 1986 முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் மதிப்பியல் பேராசிரியராக (வாழ்நாள் வரை)வும் இருந்து வருபவர். ஆய்வு மாணவர்கட்கு வழிகாட்டியாகவும் இருப்பவர். 1996-பிப்பிரவரி முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபு வழிப் பண்பாட்டு நிறுவனத்தில் மதிப்பியல் இயக்குநராகவும் பணியாற்றுபவர்.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆய்ந்து ‘டாக்டர்’ (பி.எச்டி.,) பட்டம் பெற்றவர். அந்த ஆய்வு நூல் ஆங்கிலத்தில் 940 பக்கங்களில் திருவேங்கடவன் பல்கலைக் கழக வெளியீடாக வெளிவந்துள்ளது. எம்.ஃபில்., பி.எச்.டி., மாணாக்கர்களை உருவாக்கியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவர். பெரும்பாலும் இவை நூல் வடிவம் பெற்றுள்ளன, பெற்றும் வருகின்றன. தவிர, ஆசிரியம், கல்வி உளவியல் (5), இலக்கியம் (22), சமயம், தத்துவம் (35), வாழ்க்கை வரலாறு, தன் – வரலாறு (13), திறனாய்வு (21), அறிவியல் (20), ஆராய்ச்சி (6), ஆக 122 நூல்களை வெளியிட்டவர்.

இவர்தம் அறிவியல் நூல்களுள் மூன்றும், சமய நூல்களுள் நான்கும் தமிழக அரசுப் பரிசுகளையும், அறிவியல் நூல்களுள் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசினையும், அறிவியல் நூல்களுள் ஒன்று தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசினையும் ஆக 10 நூல்கள் பரிசுகள் பெற்றன.

இவர்தம் அறிவியல் நூல்களைப் பாராட்டிக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ‘அருங்கலைக்கோன்’ என்ற விருதினையும் (1968), வைணவ நூல்களைப் பாராட்டிப் பண்ணுருட்டி வைணவ மாநாடு ‘சிரீசடகோபன் பொன்னடி’ என்ற விருதினையும் (1987), தமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழக அரசு ‘திரு.வி.க.’ விருதினையும் (10,000 வெண்பொற்காசுகள் – 1987), இவர்தம் தமிழ்ப்பணியைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினையும் (1991), இராசா சர் அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை கல்வி, இலக்கியம், அறிவியல் என்ற மூன்று துறைகளில் இவர்தம் பணியைப் பாராட்டி ‘இராசா சர் முத்தையவேள்’ விருதினையும் (50,000 வெண் பொற்காசுகள் – 1994), இவர்தம் கம்பன் பணியைப் பாராட்டிச் சென்னைக் கம்பன் கழகம் ‘பேராசிரியர் இராதாகிருட்டிணன்’ விருதினையும் (1994 – 1000 வெண்பொற்காசுகள்), சென்னை  ஆழ்வார்கள் ஆய்வு மையம் இவர்தம் வைணவ வெளியீடுகளைச் சிறப்பிக்கும் முறையில் ‘சிரீ இராமாநுஜர்’ விருதையும் (1996 – 25,000 வெண் பொற்காசுகளையும்) வழங்கிச் சிறப்பித்துள்ளன.

இவர்தம் இயற்றமிழ்ப் பணியைப் பாராட்டித் தமிழ் இயல் இசை நாடக மன்றம் (அரசு) ‘கலைமாமணி’ என்ற விருதினையும் (1999 – 3 சவரன் தங்கப் பதக்கம்), இவர்தம் வாழ்நாள் பல்துறைப் பணிகளைப் பாராட்டி மதுரை – காமராசர் பல்கலைக் கழகம் ‘டி.லிட்’ (மதிப்பியல்) பட்டத்தையும் (1999), இவர்தம் தமிழ் – சமயப் பணியைப் பாராட்டி காஞ்சி – காமகோடி பீட அறக்கட்டளை ‘சேவாரத்னா’ விருதையும் (1999 – ஆயிரம் வெண்பொற்காசுகள்), (1941-50)களில் இவர் முயற்சியால் நான்கு உயர்நிலைப் பள்ளிகளை (தாம் தலைமையாசிரியராகப் பணியாற்றிய உயர்நிலைப் பள்ளியைத் தவிர) நிறுவி கிராமப்புறங்களில் உயர்கல்வி ஏற்பட வசதி செய்ததைப் பாராட்டும் வகையில் துறையூர்த் தமிழ்ச் சங்கமும் அவ்வூர் நகராண்மைக் கழகமும் இணைந்து சிறந்ததோர் வரவேற்பினை நல்கிச் (செட்டம்பர்) சிறப்பித்தன. இவர்தம் வைணவ – இலக்கியப் பணியைப் பாராட்டிச் சென்னை கோயம்பேடு ‘மனிதநேய வைணவ இயக்கம்’ ‘வைணவ இலக்கிய மாமணி’ விருதையும் (2001), இவர்தம் வாழ்நாள் ஒட்டுமொத்தமான தமிழ்ப் பணியைப் பாராட்டி ‘தினத்தந்தி அறக்கட்டளை’ ‘சி.பா. ஆதித்தனார் ‘மூதறிஞர் விருதையும்’ (2001 – ஓர் இலட்சம் வெண்பொற்காசுகள்) வழங்கிச் சிறப்பித்தன.

இனிமை, எளிமை, தெளிவு இவர்தம் படைப்புகளின் சிறப்பியல்புகள்.

 பேராசிரியர் முனைவர் ந.சுப்புரெட்டியாரின் நூல்கள்

ஆசிரியம் (5)

       1. தமிழ் பயிற்றும் முறை

      2. அறிவியல் பயிற்றும் முறை

      3. கவிதை பயிற்றும் முறை

     4. கல்வி உளவியல் கோட்பாடுகள்

    5. யுனெசுகோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்

 

இலக்கியம் (15)

  1. கவிஞன் உள்ளம்
    7. காலமும் கவிஞர்களும்
    8. காதல் ஒவியங்கள்
    3. அறிவுக்கு விருந்து
    10. அறிவியல் தமிழ்
    11. திருக்குறள் கருத்தரங்கு மலர். 1974 பதிப்பு
    12. கம்பனில் மக்கள் குரல்
    13. முத்தொள்ளாயிர விளக்கம் (பதிப்பு)
    14. காந்தியடிகள் நெஞ்சுவிடுதூது (பதிப்பு)
    15. திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்
    16. தமிழ் இலக்கியங்கள்- அறம், நீதி முறை
    17. புதுவை(மை)க் கவிஞர்-சுப்பிரமணிய பாரதியார்: ஒரு கண்ணோட்டம்
    18. பாவேந்தர் பாரதிதாசன்: ஒரு கண்ணோட்டம்
    19. திருக்குறள் தெளிவு
    20. வாய்மொழியும் வாசகமும்

சமயம், தத்துவம்

(அ) விளக்க நூல்கள் (29)

  1. முத்திநெறி (தமிழக அரசு பரிசு பெற்றது)
    22. சைவ சமய விளக்கு
    23. சைவ சித்தாந்தம்- ஓர் அறிமுகம்
    24. சைவமும் தமிழும்
    25. வைணமும் தமிழும்
    26. ஆன்மீகமும் அறிவியலும்
    27. வைணவ உரைவளம் (ஐதிகம், இதிகாசம், சம்வாதம்)
    28. கலியன்குரல்
    29. கீதைக்குறள் (பதிப்பு)
    30. கண்ணன் எழில் காட்டும் கவிதைப் பொழில் (பதிப்பு)
    31. ஆண்டாள் பாவையும் அழகு தமிழும் (பதிப்பு)
    32. கண்ணன் துதி பதிப்பு)
    33. இராம தோத்திரம் (பதிப்பு)
    34. முருகன் துதியமுது (பதிப்பு)
    35. திருப்பாவை விளக்கம்
    36. நவவித சம்பந்தம்
    37. அர்த்த பஞ்சகம்
    38. அர்ச்சிராதி
    39. ஐந்து இரகசியங்கள்

(ஆ) திருத்தலப் பயணநூல்கள்

  1. மலைநாட்டுத் திருப்பதிகள்
    41. தொண்டை நாட்டுத் திருப்பதிகள்
    42. பாண்டி நாட்டுத் திருப்பதிகள்
    43. வடநாட்டுத் திருப்பதிகள்
    44. சோழ நாட்டுத் திருப்பதிகள் – முதற்பகுதி (த.அ. பரிசு பெற்றது)
    45. சோழநாட்டுத் திருப்பதிகள் – இரண்டாம் பகுதி (த.அ. பரிசு பெற்றது)
    46. தம்பிரான் தோழர்
    47. நாவுக்கரசர்
    48. ஞானசம்பந்தர்
    49. மாணிக்க வாசகர்

திறனாய்வு (24)

  1. பாட்டுத்திறன்
    51. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை
    52. கம்பன் படைத்த சிறுபாத்திரங்கள்
    53. அகத்திணைக் கொள்கைகள்
    54. கவிதையநுபவம்
    55. அண்ணல் அநுமன்
    56. புதுக்கவிதை போக்கும் நோக்கும்
    57. கண்ணன் பாட்டுத் திறன்
    58. பாஞ்சாலி சபதம்- ஒரு நோக்கு
    59. பாரதீயம் (த. அ. பரிசு பெற்றது)
    60. குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு
    61. உயிர் தந்த உத்தமன் (பதிப்பு)
    62. ஆழ்வார்கள் ஆரா அமுது
    63. விட்டு சித்தன் விரித்த தமிழ்
    64. சடகோபன் செந்தமிழ்
    65. பரகாலன் பைந்தமிழ்
    66. பாவேந்தர் பாட்டுத்திறன்
    67. பாண்டியன் பரிசு: ஒரு மதிப்பீடு
    68. கவிஞர் வாலியின் அவதார புருசன்: ஒரு மதிப்பீடு
    69. கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி: ஒரு மதிப்பீடு
    70. வாழும் கவிஞர்கள்
    71. அறிவியல் நோக்கில்-இலக்கியம், சமயம், தத்துவம்
    72. தந்தை பெரியார் சிந்தனைகள்
    73. பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்
    74. இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்

வரலாறு, தன் வரலாறு (15)

  1. நினைவுக் குமிழிகள்- முதற் பகுதி
    76. நினைவுக் குமிழிகள்- இரண்டாம் பகுதி
    77. நினைவுக் குமிழிகள்- மூன்றாம் பகுதி
    78. நினைவுக் குமிழிகள்- நான்காம் பகுதி
    79. நினைவுக் குமிழிகள்- ஐந்தாம் பகுதி
    80. மலரும் நினைவுகள்
    81. நீங்காத நினைவுகள்
    82. வேமனர்
    83. குரசாட
    84. சி. ஆர். இரெட்டி
    85. தாயுமான அடிகள்
    86. பட்டினத்தடிகள்
    87. வள்ளல் இராமலிங்க அடிகள்
    88. இராமாநுசர்
    89. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள்
    90. தமிழ்க்கடல் இராய.சொ.
    91. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்

அறிவியல் (15)

  1. மானிட உடல்
    93. அணுவின் ஆக்கம்
    94. இளைஞர் வானொலி
    95. இளைஞர் தொலைக்காட்சி
    96. அதிசயமின்னணு
    97. நமது உடல் (த. அ. பரிசு பெற்றது)
    98. அம்புலிப் பயணம்
    99. தொலை உலகச் செலவு
    100. அணுக்கரு பெளதிகம் (செ.ப.க. பரிசு பெற்றது)
    101. இல்லறநெறி
    102. வாழையடி வாழை
    103. அறிவியல் விருந்து (தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றது)
    104. தமிழில் அறிவியல்- அன்றும் இன்றும்
    105. விண்வெளிப் பயணம் (த. அ. பரிசு பெற்றது)
    106. இராக்கெட்டுகள் (த. அ. பரிசு பெற்றது)
    107. தமிழில் அறிவியல் செல்வம்

ஆராய்ச்சி (7)

  1. கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி
    109. வைணவச் செல்வம்-முதற்பகுதி (தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு)
    110. வைணவச் செல்வம்-இரண்டாம்பகுதி (தமிழ்ப் பல்கலைக் கழகவெளியீடு)
    111. வடவேங்கடமும் திருவேங்கடமும்
    112. Religion and Philosophy of Nalayiram with Special Reference to Nammalvar
    113. Studies in Arts and Science (61st Birth Day commemoration volume)
    114. Collected Papers

பேராசிரியர் ரெட்டியாரைப் பற்றி அறிஞர் சிலர் புகழாரங்கள் . . . .

‘சாதி அமைப்பு ஒழிக்கப் பெறாதவரை நாட்டிற்குக் கதி மோட்சம் இல்லை ’ என்பது இவர் கொள்கை. தந்தை பெரியார் அடிச்சுவட்டை ஓரளவு பற்றியவரல்லவா?

– சிலம்பொலி செல்லப்பன் (இவர் மாணவர்)

நெம்புகோல் விஞ்ஞானம் கற்ற ஆசான்
நெடுமாலின் திருவருளால் தமிழைச் சேர்ந்தார்
அம்பலத்தில் ஆடாமல் அறைக்குள் ஆய்ந்தே
அறிவுலகப் பலதுறையில் நூல்கள் யாத்தார்’

ஆழ்வார்கள் பாசுரத்தில் மூழ்கி மூழ்கி
ஆழங்கால் படுவதவர் பிறவிப்பேறு
;
வாழ்விற்கும் கருவிதரும் விஞ்ஞானத்தில்
வைத்திருக்கும் பேரறிவு கல்விப்பேறு;

ஆழ்வாரின் தலைமணியாம் நம்மாழ்வாரை
அருகணைய வாய்த்ததுவே ஆய்வுப்பேறு;
பால்வார்க்கும் தாய்போல துறைகள் தோறும்
பலநூல்கள் அவர்யாத்தால் தமிழர் பேறே.

– முனைவர் அ. சிங்காரவேலன், தமிழ்ப்பேராசிரியர்

(ஓய்வு) தேவக்கோட்டை சேவுகன் அண்ணாமலைக்

– கல்லூரி (ரெட்டியாரின் மாணாக்கர்)

 

(நிறைவு)


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓடேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages