தமிழ்மணி - பழகு தமிழ் - வேருக்கு நீர் வார்த்தவர்கள்!

1,677 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Aug 14, 2011, 3:01:37 AM8/14/11
to Min Thamizh
"தமிழ்" என்ற பயிருக்கு மிகச்சிறந்த தமிழறிஞர்கள் பலர் தங்களை வருத்திக்கொண்டு முன்பு நீர்வார்த்த காரணத்தால்தான், அப்பயிர் செழித்து வளர்ந்து இன்றைக்கு "செம்மொழி" என்னும் தகுதி பெற்றிருக்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை. 

இவ்வறிஞர்கள் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் முத்தமிழுக்கும் நீர்வார்த்து உரமிட்டவர்கள். அவ்வாறு அவர்கள் நீர் வார்க்காது போயிருந்தால்... "நம் தாய்மொழியின் நிலைமை இன்று என்னவாகியிருக்கும்?" என்று ஒவ்வொரு தமிழரும் தங்களுக்குள்ளேயே வினா தொடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பர். 

அவ்வறிஞர்கள், "தமிழ்" மொழி (முத்தமிழ்) பற்றி படைத்தளித்த செம்மையான சில அரிய கட்டுரைகள் அவர்களது சிந்தனைச் சிதறல்களான எழுத்துகள் ஒன்றுகூட மாறுபடாமல் "வேருக்கு நீர் வார்த்தவர்கள்" என்ற இந்தப் புதிய பகுதியை அப்படியே அலங்கரிக்க  உள்ளன. 

தினமணி ஆசிரியர்

தமிழகத்தில் பல நாடுகள் உண்டு; பல குலங்கள் உண்டு.

ஒரு நாட்டுத் தமிழுக்கும் இன்னொரு நாட்டுத் தமிழுக்கும் வேற்றுமையே இல்லை என்று கூற முடியாது.

ஒரு குலத்தார் பேசுந்தமிழ் மற்றொரு குலத்தார் பேசுந்தமிழை எல்லா வகையிலும் ஒத்திருக்கும் என்று சொல்ல முடியாது. 

"பந்தல்" என்ற சொல்லின் ஆட்சியைப் பார்ப்போம்:-

திருமணத்திற்குப் பந்தல் போடும் வழக்கம் இந்நாட்டில் சாலப் பழமை வாய்ந்தது. காவிரிப்பூம்பட்டினத்திலே செல்வக் குடியிற் பிறந்த கண்ணகிக்கும், கோவலனுக்கும் முத்துப் பந்தலிலே திருமணம் நிகழ்ந்தது.

"மாலை தாழ் சென்னிவயிரமணித் தூணகத்து நீல விதானத்து நித்திலப் பூம்பந்தர்'' என்று அப்பந்தலைச் சிலம்பு பாடிற்று. கோடையிலே வழிநடந்து செல்வார்க்கு நீரும் நிழலும் தரும் பந்தலைத் "தண்ணீர்ப் பந்தல்" என்பர். 

இத்தகைய மேன்மையான சொல் தனவணிகர் நாடு என்னும் செட்டிநாட்டிலே அமங்கலச் சொல்லாகக் கருதப்படுகின்றது.

பந்தல் என்பது அந்நாட்டிலே மணப்பந்தலைக் குறிப்பதில்லை; பிணப் பந்தலையே குறிக்கும். இழவு வீட்டில் போடுவது பந்தல்; கல்யாண வீட்டில் போடுவது "காவணம்" அல்லது "கொட்டகை".

இலக்கியத்தில் வழங்கும் "காவணம்" என்ற சொல் செட்டிநாட்டிலே பழகு தமிழாய்ப் பயில்கின்றது. 

இனி, "தொண்டு" என்ற தொன்மையான சொல்லைப் பார்ப்போம்: தொண்டு என்பது சேவை. நாட்டுக்குச் செய்யும் சேவை "தேசத்தொண்டு" எனப்படும். இறைவனுக்குச் செய்யும் சேவை "திருத்தொண்டு" எனப்படும்.

"தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே'' என்னும் வாய்மொழி (ஒ
வையார்) பண்டைக் காலத்தே தமிழ்நாட்டில் எழுந்தது.

இத்தகைய சொல், கொங்கு நாட்டிலே இப்பொழுது இழிந்த பொருளில் வழங்குகின்றது.

ஒழுக்கம் கெட்டவரைக் குறிக்கின்றது அச்சொல். 

"பையச் சென்றால் வையத் தாங்கும்'' என்பது இந்நாட்டிலே ஒரு பழமொழி.

பைய என்றால், மெல்ல என்பது பொருள்.

"பையப் போ'' என்ற சொல் பாண்டிய நாட்டிலே பெருவழக்குடையது.

தேவாரத்தில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் சிவனடியார் திருமடத்தில் தீயோர் வைத்த தீயை அரசனிடம் செலுத்தத் திருவுளங்கொண்ட திருஞானசம்பந்தர், "பையவே சென்று பாண்டியற்கு ஆகவே'' எனப் பணித்ததாகத் தேவாரம் கூறும்.

இத்தகைய சிறந்த ஆட்சியுடைய சொல் இப்போது சென்னை முதலிய இடங்களில் வழங்குவதில்லை. 

அங்காடி என்பது முன்னொரு காலத்தில் தமிழ் நாடெங்கும் வழங்கிய சொல். (தஞ்சை மாவட்டத்தில் அங்காடிக்காரி என்ற சொல் வழக்கில் உள்ளது. தெருவிலே கூவி விற்றுச் செல்வோரை அது குறிக்கிறது) இக்காலத்தில் "பசார்" என்று சொல்லப்படும் இடமே முற்காலத்தில் அங்காடி எனப்பட்டது.

பெரிய நகரங்களில் அந்தியும், பகலும் அங்காடி நடைபெற்றது.

அந்தியில் நடைபெற்ற அங்காடியை "அல்லங்காடி" என்றும், பகலில் நடைபெற்ற அங்காடியை "நாளங்காடி" என்றும் அழைத்தனர். 

பட்டினத்தடிகள், அங்காடி என்ற சொல்லை எடுத்தாள்கின்றார்.

"அங்காடி நாய்போல் அலைந்து திரிந்தேனே'' என்பது அவர் பாட்டு.

கன்னடத்திலும், தெலுங்கிலும் இன்றும் "அங்கடி" என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்திலும் அங்காடி உண்டு.

தமிழ் மொழியில் அங்காடியை மீண்டும் ஆட்சியில் (மொழியில்) அழைத்தால் எத்துணை அழகாக இருக்கும்?

செந்தமிழில் ஆர்வமுடைய செட்டியார் ஒருவர் தமது காசுக்கடைக்கு "அணிகல அங்காடி" என்று பெயரிட்டுள்ளார். சென்னையிலுள்ள மூர் மார்க்கட்டை, "மூரங்காடி" என்று வழங்கும் நாள் எந்நாளோ? 

பைத்தியக்காரனுக்குத் தமிழ்நாட்டிலே பல பெயர்கள் உண்டு. படிக்காதவர்கள் அவனைப் "பித்தன்" என்பார்கள்; பித்துக்கொண்டவன் என்னும் பொருள் நன்றாகத் தோன்றும்படி "பித்துக்கொள்ளி" என்றும் சொல்லுவார்கள். கிறுக்கன் என்பதும் அவனையே குறிக்கும். திருநெல்வேலியிலே பைத்தியக்காரனைக் "கோட்டிக்காரன்" என்பர்.

கோட்டி என்பது நல்ல தமிழ்ச் சொல். கோட்டம் என்றால், வளைவு அல்லது கோணல். மனத்திலே உள்ள கோணல் "மனக்கோட்டம்" எனப்படும். பேச்சிலே வளைவு நெளிவு காணப்பட்டால் அதைச் "சொற்கோட்டம்" என்பர். இவ்விருவகைக் கோட்டத்தையும் திருவள்ளுவர் எடுத்துக் காட்டியுள்ளார்.   

"சொற்கோட்டமில்லது செப்பம்; ஒரு தலையா 
  உட்கோட்ட மின்மை பெறின்'' (குறள் - 119)
  

என்பது திருக்குறள்.

எனவே, அறிவிலே கோட்டம் உடையவனைக் "கோட்டி" என்று சொல்வது பாண்டிய நாட்டு வழக்கு. 

கோட்டியைத் தீர்க்கும் குற்றால அருவியைச் சிறிது பார்ப்போம்:-

மலையினின்று விழும் அருவியைக் காண்பது கண்ணுக்கு இன்பம்; அருவியில் நீராடுவது உடலுக்கு இன்பம். திருநெல்வேலியில் உள்ள திருக்குற்றலாத்திலே அருமையான பல அருவிகள் உள்ளன.

- தேனருவி என்பது ஓர் அருவியின் பெயர்.
- வட அருவி என்பது மற்றோர் அருவி;
- ஐந்தலை அருவி என்பது இன்னோர் அருவி.

அருவியை நினைக்கும்பொழுதே கவிகள் உள்ளத்தில் ஆனந்தம் பிறக்கும்; கவிதை பொங்கும்.

"வீங்குநீர் அருவி வேங்கடம்" என்று திருப்பதியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் சிலப்பதிகார ஆசிரியர்.

"பொங்கருவி தூங்கும் மலை பொதிய மலை என் மலையே", என்று செம்மாந்து பாடினாள் பொதியமலைக் குறத்தி.

"தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்" என்று பாடினாள் திருக்குற்றாலக் குறவஞ்சி.

இத்தகைய பழமையான சொல் இன்றும் திருநெல்வேலியில் வழங்குகின்றது. ஆனால், சென்னை முதலிய இடங்களில் அருவி என்றால் தெரியாது; நீர் வீழ்ச்சி என்றால்தான் தெரியும். நீர்வீழ்ச்சி என்பது "water-fall" என்ற ஆங்கிலப் பதத்தின் நேரான மொழிபெயர்ப்புபோல் காணப்படுகின்றது. 

மலையிலே வாழ்கின்ற ஒரு குலத்தாரை மலைப் பளிங்கர் என்பர். வேடர் வகுப்பைச் சேர்ந்தவர் அல்லர்; மலைநாட்டுப் பழங்குடிகள். பளிங்கன் என்ற சொல்லை ஆராய்ந்தால், அஃது ஒரு பழமையான தமிழ்ச் சொல்லின் சிதைவு என்பது புலனாகும்.

தமிழ் இலக்கியத்தில் மலையில் வாழும் வகுப்பார்க்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று "புளிஞர்" என்பது. புளிஞர் என்ற சொல்லைக் கம்பர் எடுத்தாள்கின்றார். மறைந்து நின்று அம்பெய்த இராமனை நோக்கி,   

"வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து 
  வில்லால் எவ்விய தென்னை''
  

என்று வாலி கேட்டான் என்பது கம்பர் பாட்டு.

புளிஞன் என்ற சொல்லே பளிங்கன் என்று மருவி வழங்குகின்றது. 

தமிழ்நாட்டுப் பழங்குடிகளின் மற்றொரு வகுப்பார் பரதவர். கடற்கரையூர்களில் வாழ்பவர் பரதவர் என்று தமிழ் இலக்கியம் கூறும். பழங்காலத்தில் சிறந்திருந்த காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலிய துறைமுக நகரங்களில் பரதவர் செழித்து வாழ்ந்தார்கள். காவிரிப்பூம்பட்டினம் பரதவர் மலிந்த பயன் கெழு மாநகரமாக விளங்கியது. கொற்கைக் கடலில் மூழ்கி முத்தெடுத்து, "தென்னாடு முத்துடைத்து" என்று எந்நாட்டவர்க்கும் காட்டியவர் பரதவரே. பரதவர் என்பது பரதர் என்று குறுகி, பரவர் என்று மருவி வழங்குகின்றது. தூத்துக்குடியில்  பரவர் குலத்தார் இன்றும் செழுமையுற்று  வாழ்கிறார்கள்.

இடைமருதூர் கி.மஞ்சுளா

நன்றி:- தினமணி

Kannan Natarajan

unread,
Aug 20, 2011, 4:03:39 PM8/20/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 2: முத்தமிழ்த்திறம்!


"முத்தமிழ் வித்தகர்" க.வெள்ளைவாரணர்



மக்களுடைய புலமைச் செல்வத்தின் குன்றாத நிலைக்களமாக விளங்குவது அவர்கள் பேசும் மொழியாகும். மொழியின் உதவியினாலேயே மக்களது கல்வி உருவாகின்றது. மக்கள் தாம் எண்ணிய எண்ணங்களை மற்றவர்களுக்கு விளங்க எடுத்துரைப்பதற்கும், பிறர் எண்ணியவற்றைத் தாம் கேட்டறிதற்கும் அவர்களால் பேசப்படும் மொழியே இடைநின்று துணை செய்கின்றது. மாந்தரது எண்ணத்தின் வெளிப்பாடாகிய மொழி, அவர்தம் கருத்து வளர்ச்சிக்கும் சொல் வளர்ச்சிக்கும் துணை செய்யும் சிறப்புடையது என்பதனை நுண்ணிதின் உணர்ந்த பண்டைத் தமிழ் மக்கள், தம்மால் பேசப்படும் தாய்மொழியாகிய "தமிழை" இயல், இசை, நாடகம் என முத்தமிழாக அமைத்துக் கொண்டனர்.

உலகப் பொருள்களின் இயல்பினை உள்ளவாறு விளக்குதற்குரிய சொல்லமைப்பினை உடையது இயற்றமிழ் எனப்படும். மக்களது மனத்திலே தோன்றிய பல்வேறு எண்ணங்களை உருவாக்கிச் செயற்படுத்தற்குரிய இயல்பினை வெளிப்படுத்தும் திறன் இயற்றமிழுக்குரியது.

தான் சொல்லக் கருதியவற்றைக் கேட்போர் உள்ளம் மகிழ இனிய ஓசையோடு கூடிய இசைத்திறத்தால் புலப்படுத்தும் மொழிநடை இசைத்தமிழ் எனச் சிறப்பித்துரைக்கப்படும்.

தம் எண்ணங்கள் தமது உடம்பிற் காணப்படும் மெய்ப்பாடு முதலியவற்றால் வெளிப்பட்டு, புறத்தார்க்குப் புலனாக நடித்துக் காட்டுதற்கு ஏற்றவாறு அமைந்த மொழிநடை நாடகத் தமிழென வழங்கப்படும்.

  • எப்பொருளையும் தெளிவாக எண்ணியறியும் உள்ளத்தின் இயல்பினை வளர்த்தற்குரிய மொழியமைப்பினை இயற்றமிழ் என்றும்,
  • கேட்போர் உள்ளத்தினைக் குளிரச் செய்யும் இன்னோசை மிக்க உரையின் இயல்பினை இசைத்தமிழ் என்றும்,
  • மக்கள் சொல்வன அவர்களது உடம்பிற்தோன்றும் மெய்ப்பாடுகளால் பிறர்க்குப் புலப்படும்படி அமைந்த மொழிநடையினை நாடகத்தமிழென்றும்,
மிகப் பழமையான காலத்திலேயே தமிழ் முன்னோர் வகுத்துள்ளனர்.

மாந்தர் தங்கள் உடம்பின் செயலால் விளங்கிக் கொண்டவற்றை உரையினால் பிறர்க்கு அறிவுறுத்தவும், பிறர் உரையினால் அறிவித்தவற்றைத் தம் உள்ளத்தால் உய்த்துணரவும் துணை செய்யும் கருவியாகத் தமிழ்மொழி அமைந்தமையால் அதனை "முத்தமிழ்" என்ற பெயரால் முன்னையோர் வழங்குவராயினர்.

ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே முத்தமிழ்த்திறம் பற்றிய இலக்கண நூல்கள் பல இருந்தன. அவை எழுத்து, சொல், பொருள் என்னும் இயற்றமிழ் மாத்திரத்தோடு அமையாது
  • இசையிலக்கணங்களும்
  • கூத்திலக்கணங்களும்
அமைந்திருந்தன.

ஆசிரியர் தொல்காப்பியனார் முத்தமிழுள் இயற்றமிழ் இலக்கணத்தை மட்டும் பிரித்து விளக்கும் முறையில் தொல்காப்பியத்தை இயற்றியருளியுள்ளார்.

இச்செய்தி,"வடக்கின்கண் வேங்கடமும், தெற்கின்கண் குமரியும்" ஆகிய அவ்விரண்டெல்லைக்குள்ளிருந்து தமிழைச் சொல்லும் நல்லாசிரியரது வழக்கும் செய்யுளுமாகிய அவ்விரண்டையும் அடியாகக் கொள்ளுகையினாலே, அவர் கூறும் செந்தமிழ் இயல்பாகப் பொருந்திய செந்தமிழ் நாட்டிற்கு இயைந்த வழக்கோடே முன்னை இலக்கணங்கள் இயைந்தபடியை முற்றக் கண்டு, அவ்விலக்கணங்களெல்லாம் சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினோர்க்கு அறியலாகாமையின், "யான் இத்துணை வரையறுத்து உணர்த்துவல்" என்று அந்நூற்களிற் கிடந்தவாறன்றி, அதிகார முறையான் முறைப்படச் செய்தலை எண்ணி அவ்விலக்கணங்களுள் எழுத்தினையும், சொல்லினையும், பொருளினையும் ஆராய்ந்து பத்துவகைக் குற்றமும் தீர்த்து, முப்பத்திரண்டு வகை உத்தியோடு புணர்ந்த இந்நூலுள்ளே அம்மூவகை இலக்கணமும் மயங்கா முறைமையிற் செய்கின்றமையின் எழுத்திலக்கணத்தை முன்னர்காட்டி, ஏனையிலக்கணங்களையும் தொகுத்துக் கூறினான்'' எனப் பனம்பாரனார் பாயிரத்திற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரைப்பகுதியால் இனிது விளங்கும்.

முத்தமிழுள், இயற்றமிழ் இலக்கணத்தை மட்டும் உணர்த்த எடுத்துக்கொண்ட ஆசிரியர் தொல்காப்பியனாரும், முத்தமிழ்த் திறம்பற்றிய பழைய வழக்கினை ஒரோவிடத்து மேற்கொண்டு தமது நூலிலுள்ளும் இசைநூன் முடிபுகள் சிலவற்றை ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்கின்றார்.

அளபெடை கூறுமிடத்து,

"அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீட்டலும்
 உளவென மொழிப இசையோடு சிவணிய
 நரம்பின் மறைய என்மனார் புலவர்''.
                                                                           (தொல்.நூன்மரபு - 33)

எனவரும் நூற்பா, எழுத்துக்களில் உயிர்க்கண்ணும் மெய்க்கண்ணும் மாத்திரை கடந்து மிக்கொலித்தல் இசையோடு பொருந்திய யாழ்நூல் இடத்தன எனப் பிறன்கோட் கூறலென்னும் உத்தியால், எழுத்திற்காவதோர் இசை மரபினைக் குறித்தல் காணலாம்.

பிறன்கோட் கூறலென்னும் உத்தியினை விளக்கவந்த பேராசிரியர்

"பிறன்கோட் கூறல் - தன்னுலே பற்றாக, பிறநூற்கு வருவதோர் இலக்கணங்கக் கூறுமாறு கூறுதல் அது".

"அரையளபு குறுகல் மகரம் உடைத்தே
 இசையிடன் அருகும் தெரியுங் காலை''. (13)

"அளபிறந்த துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்''. (33)

"பண்ணைத் தோன்றிய எண்நான்கு பொருளும்
 கண்ணிய புறனே நால்நான்கு என்ப''. (1195)

என இவை அவ்வந் நூலுள் கொள்ளுமாற்றால் அமையும் என்றவாறாயின'' எனத் தொல்காப்பியத்திலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்கள் தந்து விளக்கியுள்ளார்.

ஈண்டு தன்னூல் என்றது, ஆசிரியர் தொல்காப்பியனார் முத்தமிழுள் இயற்றமிழுக்கு இலக்கணமாகச் செய்த தொல்காப்பியத்தை; பிறநூல் என்றது ஏனை இசைத்தமிழ், நாடகத் தமிழுக்குரிய இலக்கண நூல்களை. இவற்றுள்,

"அரையளபு குறுகல் மகரமுடைத்தே
 இசையிட னருகும் தெரியுங் காலை''. (13)

என்னும்,

இந் நூற்பாவிற்கு

"மகரமெய் தனக்குரிய அரை மாத்திரையினும் குறுகி வருதலையுடைத்து; இசைத்தமிழின் கண் தனக்குரிய அரை மாத்திரையினும் பெருகி (மிக்கு) ஒலிப்பதாகும்; அதன் ஒலியளவினை ஆராயுங் காலத்து'' எனப் பேராசிரியர் பொருள் கொண்டுள்ளார்.

இதன்கண் அருகும் என்னும் சொல், பெருகும் (நீண்டொலிக்கும்) என்னும் பொருளில் பயின்றுள்ளது. இசையின்கண் மகரமெய் பெருகி ஒலிக்கும் எனப் பேராசிரியர் சுட்டிய இசைத்தமிழ் மரபு இங்கு நோக்கத்தகுவதாகும்.

மூலாதாரத்திலிருந்து இசையினை எழுப்புமிடத்து, மகர மெய்யினாலே சுருதியைத் தோற்றுவித்துக் குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் நாதத்தைத் தொழில் செய்து பாடுதல் தொன்றுதொட்டு வழங்கிவரும் இசைமரபாகும்.

இவ்வாறு இசைச் சுருதியினை மூலாதாரத்திலிருந்து தோற்றுவித்து, ஆளத்தி (ஆலாபனை) செய்தற்கு "மகரமெய்" துணையாகப் பயன்படும் திறத்தினை,

"மகரத்தி னொற்றாற் சுருதி விரவும்
 பகருங் குறில்நெடில் பாரித்து - நிகரிலாத்
 தென்னாதெனா வென்று பாடுவரேல் ஆளத்தி
 மன்னாவிச் சொல்லின் வகை''.

எனவரும் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரைமேற்கோள் வெண்பாவில், மகரத்தின் ஒற்றால் சுருதி விரவும் என்ற தொடரால் நன்குணரலாம்.

இம்முறை சங்க காலத்திலும் தேவார ஆசிரியர்கள் காலத்திலும் வழக்கிலிருந்ததென்பது, "இம்மென விமிரும்" என்ற சங்கவிலக்கியத் தொடராலும், "மும்மென்றிசை முரல் வண்டுகள்" (1-11-3) என வரும் தேவாரத் தொடராலும் இனிது புலானாகும்.

இத்தொடர்களில் "இம்ம்", "மும்ம்" என மகரவொற்றால் சுருதியினைத் தோற்றுவிக்கும் முறை குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம்.

இயற்றமிழ் பற்றாக மகரம் தன் அரைமாத்திரையிற் குறுகுதலைக் கூறவந்த தொல்காப்பியர், இசைத்தமிழ் பற்றாக மகரம் தன் அரைமாத்திரையிற் பெருகியொலித்தல் இசையில் சுருதியைத் தோற்றுவிக்கும் நிலையில், மகரமெய் ஒன்றற்கேயுரிய சிறப்பிலக்கணம் எனவும், இவற்றின் வேறுபாட்டினைத் தெரிந்துணர்க என்பார்,

"நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்பாடல் சான்ற புலனெறி வழக்கம்''.    
                                                                                                 - (அகத்திணை - 52)

எனப் புனைந்துரை வகையாகிய நாடக வழக்கினாலும், உலக வழக்கினாலும் புலவரால் பாடுதற்கமைந்த புலனெறி வழக்கமாகிய அகத்திணை நெறியிணை ஆசிரியர் தொல்காப்பியனார் குறிப்பிடுதலால், அவர் காலத்து நாடகத்தமிழ் பற்றிய நூல்களும் வழங்கியுள்ளமை புலனாகும்.

தொல்காப்பியனார்க்குக் காலத்தால் முற்பட்ட அகத்தியனார் மூன்று தமிழுக்கும் இலக்கணம் செய்தார் என்பதனைப் பண்டை உரையாசிரியர் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

தென் மதுரைத் தலைச்சங்கத்து இயலிசை நாடகம் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணமாக அகத்தியனாரால் செய்யப்பட்ட "அகத்தியம்" என்றதொரு தமிழிலக்கண நூல், இறையனார் களவியல் உரையிலும் இளம்பூரணர் உரையிலும் சிறப்பித்து உரைக்கப்படுகின்றது.

"அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழினும்'' எனவும்,

"தோன்று மொழிப் புலவரது பிண்டமென்ப'' என்றதனால், பிண்டத்தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்டம் உளதென்பது, அது முதனூலாகிய அகத்தியமே போலும்; என்னை? அஃது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத்தையும் அடக்கி நிற்றலின்'' எனவும் கூறுவார் பேராசிரியர்.

"அகத்தியம், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்றுறுப்பினையும் அடக்கி நிற்றலின், அது பிண்டத்தினை அடக்கிய வேறொரு பிண்டம்'' என்பார் நச்சினார்க்கினியர்.

மேல் எடுத்துக்காட்டிய உரைத் தொடர்களால் அகத்தியம் முத்தமிழுக்கும் இலக்கண நூல் என்பது நன்கு தெளியப்படும்.

"நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம், முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன'' என அடியார்க்கு நல்லார் கூறுதலால், முத்தமிழிலக்கண நூலாகிய அகத்தியம் பன்னூற்றாண்டுகட்கு முன்னரே இறந்தொழிந்தமை பெறப்படும்.

இவ்வாறு பன்னெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் இயல், இசை, நாடகம் என வளம்பெற்று வளர்ந்த "முத்தமிழ்"த் திறங்களையும் இனிது விளக்கும் இலக்கியமாக இளங்கோவடிகளால் இயற்றப்பெற்றது சிலப்பதிகாரமாகும். முத்தமிழ்க் காப்பியமாகிய இதனை, "பழுதற்ற முத்தமிழின் பாடல்'' எனப் போற்றுவார் அடியார்க்கு நல்லார்.

Geetha Sambasivam

unread,
Aug 21, 2011, 10:16:48 AM8/21/11
to mint...@googlegroups.com
வெள்ளைவாரணரின் சிதம்பரம் குறித்த கட்டுரைத் தொகுப்புத் தான் படித்திருக்கிறேன்.  பகிர்வுக்கு நன்றி.

2011/8/21 Kannan Natarajan <thar...@gmail.com>
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 2: முத்தமிழ்த்திறம்!


"முத்தமிழ் வித்தகர்" க.வெள்ளைவாரணர்



முத்தமிழ்க் காப்பியமாகிய இதனை, "பழுதற்ற முத்தமிழின் பாடல்'' எனப் போற்றுவார் அடியார்க்கு நல்லார்.

நன்றி:- தினமணி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Thevan

unread,
Aug 22, 2011, 12:00:21 AM8/22/11
to mint...@googlegroups.com
அருமையான கட்டுரை

2011/8/14 Kannan Natarajan <thar...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
வீரத்தை மறந்தவன் கோழையாகிறான்.
உரிமையை மறந்தவன் அடிமையாகிறான்.
அரசியலை கைப்பற்றுவோம்
அதிகாரத்தை கையில் எடுப்போம்.

Regards,
P. A. Thevan, Mumbai.

 


Kannan Natarajan

unread,
Sep 2, 2011, 6:40:45 PM9/2/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 3:- தமிழ்ச் சொல்லியல்!




வித்துவான் ம.இராசமாணிக்கனார்

"மலைமீது ஏரினேன்" என்றெழுதியிருந்தான் மாணவன் ஒருவன்.

"ஏறினேன்" என்னும் சொல்லின் பகுதியை மட்டும் தனித்து எழுது எனக் கேட்டேன்.

"ஏறு" எனத் தன்னை அறியாமலேயே எழுதித் தான் செய்த
தவற்றினையும் உணர்ந்தான் போன்று நின்றான். 

"ஏறு" என்னும் சொல்லின் வளர்ந்த நிலைதான் ஏறினேன் என்பது; ஆகவே, வல்லினமிட்டே எழுதவேண்டுமென்றேன். இந்தச் சொல் மட்டுமன்று, எந்தச் சொல்லாயினும் சரி; எழுதும்பொழுது ஐயந்தோன்றுமேயானால் பகுதியை மட்டும் எழுதிப் பாருங்கள்; ஐயம் உங்களிடமிருந்து விடைபெறுமென்றேன்.

ஓரளவு தெளிவு பெற்றான் போன்றே அவன் காணப்பட்டான். ஆனால், அவனருகிலிருந்த நண்பன் ஒருவன் எழுந்து,

"ஏறு" என்பதற்கு ஏன் வல்லினமிட்டு எழுதவேண்டும்; "ஏரு" வென எழுதினால் வரும் இழுக்கென்ன?'' என்றான். 

வினா நல்ல வினாவே.

ஏறுதலும், இறங்குதலும் எளிய செயல்களல்ல; உயிருக்கு இறுதியை விளைவிக்கக் கூடிய கடிய செயல்களே. ஆகவே அவற்றை எழுதும்பொழுது வல்லினமிட்டுத்தான் எழுதவேண்டும். 

இறத்தலும், பிறத்தலும் இவற்றைப் போன்று அரிய செயல்களே. அவற்றின் கடுமையை உணர்ந்துதான் அடியவர்கள் அனைவரும் பிறப்பும் வேண்டேன்; இறப்பும் வேண்டேன் எனப் பாடியிருக்கின்றார்கள். ஆகவே, அவற்றை எழுதும்பொழுது வல்லினமிட்டுத்தானே எழுதவேண்டும்!

பெரியவர்கள் என்னும் சொல்லை ஆராய்ந்து பாருங்கள். மென்குணம் வாய்ந்தவர்கள் என்னும் பொருளைத் தருகின்றதன்றோ! பெரியவர்கள் என எழுதும்பொழுது இடையினமிட்டுத்தானே எழுதவேண்டும்?

சிறியோர் என்பது சிறுமைக்குணமும், கடிய பண்பும் வாய்ந்தவர்களெனப் பொருள் தருதலால், அதை வல்லினமிட்டே எழுதவேண்டும். 

"அறைந்தான்" என்னும் சொல் உள்ளத்திற் பதிய வன்மையாக உரைத்தான் என்னும் பொருள் தருதலால், அறைந்தான் என்பதற்கு வல்லினமிட்டே எழுதவேண்டியிருக்கின்றது. 

"செய்தி பரவியது" என்னும் தொடரில் வரும் பரவியதற்கு இடையினமிட்டு எழுதுகின்றோம்.

செய்தி எவ்வாறு பரவும்?

ஒருவரிடமிருந்து ஒவ்வொருவரிடமாக மெல்லப் பரவுமன்றோ?

மெல்ல விரிந்தது என்னும் பொருளைத் தருதலால் பரவியதற்கு இடையினமிட்டு எழுதுகின்றோம். அரம் அரிக்குமே யன்றி அறுத்தல் செய்யாது. அரிவாளும் அரிக்குமே யன்றி அறுத்தலைச் செய்யாது. ஆகவே அவற்றை எழுதும்பொழுது இடையின "ர"கரம் எழுதுகின்றோம். மனம் இரங்கினார் என்னுமிடத்தும், "இரங்குதல்" என்பது, உள்ளங் கசிந்துருகும் மென்மை உணர்த்துவதால் இடையின "ர"கரமே  இடம்பெறுகின்றது. 

"சலசலப்பு" என்னும் சொல்லைக் கேட்கும்பொழுதே ஓசை நினைவு உண்டாகின்றதன்றோ!

தமிழே அறியாத வேற்று மொழியாளரிடத்துச்

- சலசலப்பு
- விறுவிறுப்பு

முதலிய சொற்களைச் சொல்லி, அவற்றின் பொருளாக அவர்கள் அறிவன யாவை என அறிந்து பாருங்கள். 

"ஏர்" என்னும் சொல்லின் முதலெழுத்தில் நீங்கள் உழுக்கலப்பையைக் காண்கின்றீர்களன்றோ!

"குடம்" என்னும் சொல்லின் முதலெழுத்தைக் கண்ட அளிவிலேயே குடத்தின் உருவம் உங்கள் முன் வரத்தான் செய்யும்.

"ஒட்டகம்" என்னும் சொல்லின் முதலெழுத்து ஒட்டகத்தை உங்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றதன்றோ!

"மறவர்கள்" என்னும் சொல்லைக் கேட்ட அளவிலேயே, கடிய பண்புடைய வீரர்கள் உங்களின் நினைவில் இடம்பெறுவார்கள்.

"ஈ" என்னும் சொல்லைக் காணும்பொழுது இரப்போனின் முகக்காட்சி உங்கள் கண்ணெதிரே நிற்கின்றதன்றோ!

"பறை"யென்னும் சொல்லைக் கேட்ட அளவிலேயே அதிலிருந்து வரும் வலிய ஓசை உங்கள் காதுகளைத் துன்புறுத்தும். 

தமிழ்ச் சொற்களிலே அவற்றாற் குறிக்கப்படும் பொருள்கள் இவ்வாறு பொதிந்து கிடக்கின்றன. சொல்லைக் கேட்ட அளிவிலேயே பொருளின் உருவமோ, பண்போ உளக்கண்முன் ஓடி வருகின்றது. இன்ன பொருளை இன்ன சொல்லாற் குறிக்க வேண்டுமெனக் காரணமின்றி வரும் இடுகுறிச் சொற்களல்ல, தமிழ்ச்சொற்கள்.
பொருளின் உருவங்களையோ, பண்புகளையோ அடிப்படையாகக் கொண்டெழுந்தனவே அனைத்தும். 

முதல் முதலில் பொருள்கட்குப் பெயரிட்ட மக்களின் உள்ளங்களை அப்பொருள்களின் உருவங்களோ, பண்புகளோ கொள்ளை கொண்டிருக்கும். அவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் அவற்றிற்குப் பெயரிட்டிருப்பர். 

தமிழ் எழுத்துக்களைத் சித்திர எழுத்துக்களின் வகையின என்பர்.

"ஐ" என்னும் எழுத்தைப் பாருங்கள். பெரியவர் ஒருவர் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருக்கும் காட்சியைக் காணுகின்றீர்களன்றோ!

"ஆ" என்னும் எழுத்தும் அதைப்போன்றே ஆவும், கன்றும் அணைந்து செல்கின்ற காட்சியைக் கொண்டு வருகின்றதன்றோ!

அவையே பிற்காலத்தில் ஓரெழுத்தொரு மொழிகள் எனப்பட்டன.

குடத்தினை முன்னாளில்  "கு" வென்ற எழுத்தால் குறித்திருப்பர். பின்னாளில் அவ்வுருவெழுத்து வளர்ந்து குடம் என்றானது.

தமிழ்ச் சொற்கள் அனைத்தும் தம்மால் உணர்த்தப்படும் பொருள்களின் உருவத்தையோ, பண்பையோ சித்திரம் போன்று நம் கண்முன் காட்டுகின்றன. ஆகவே தமிழ்ச் சொற்களைச் சித்திரச் சொற்கள் எனக் கூறுவதில் தடையேதுமன்று.

எழுத்துக்கள் சித்திர எழுத்துக்களாயின், சொற்களும் சித்திரச் சொற்களாகவே அமைந்திருக்கும் அல்லவா! 

தமிழ் மிகப்பழைய மொழியாயினமையால் அதன்கண் பயிலும் சொற்களுள் பலவற்றிற்கு இன்று நம்மால் பொருள் அறிந்துகொள்ள இயலவில்லை. காரணமின்றி எழுந்தனவோ இவை என்று ஐயுறும் அளவிற்குப் பல சொற்கள் திரிபுகளைப் பெற்றுவிட்டன. எனினும் குறிப்பாகவேனும் அவை பொருள்களை உணர்த்தலின்றும் நீங்கா. அணி அன்னும் சொல்லின் பொருளைத் தெளிவாக உணர்ந்து கொள்கின்றோம். 

மரம் என்பதற்குரிய பொருளை நம்மால் அறிந்துகொள்ள இயலவில்லையே என்பதைத் தவிர, மரம் என்னும் சொற்குக் காரணமில்லை என்பதன்று. மரம் என்னும் சொல் உருவத்தையோ, பண்பையோ வெளிப்படையாகக் காட்டிய காலம் ஒன்றிருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் இன்று அது குறிப்பாகப் பொருளை உணர்த்தும் நிலையை அடைந்திருக்கின்றது.

மரம் என்னும் சொல் தென்னை மரம், மாமரம் முதலிய நிற்கும் பொருள்கள் அனைத்தினும் சேர்ந்து வருகின்றது. உலக வழக்கிலேயும் அசைதலின்றி நிலைத்து நின்றானை "மரம்போல் நின்றான்" என வழங்கக் காண்கின்றோம். எனவே மரம் என்னும் சொல் நிலையாக நிற்கும் பொருளை உணர்த்துவது என்பதைக் குறிப்பால் அறியலாம். இதைப்போன்றே தென்னை என்னும் சொல்லும் குறிப்பால் பொருள் உணர்த்துதலைக் காணலாம். தேன் என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றியது தென்னை என்பதை அறியலாமன்றோ!

இங்ஙனம் சொற்கள் பொருள்களைக் குறிப்பாக அறிவிக்கின்றன என்றே கொள்ளல் வேண்டும். அங்ஙனம் கொண்டாலன்றிச் சொற்களின் பொருள்களை நுணித்தறியும் ஊக்கந் தோன்றாது. 

இடுகுறிப் பெயரென்றோ, காரணப் பெயரென்றோ பெயர்களைக் குறித்தல் நுணித்தறிய விரும்பும் நுழைப்புலத்திற்குக் கதவடைத்தல் செய்வது போலாம். எனவே சொற்கள் பொருள்களை உணர்த்தும் நெறி இருவகைப்படும்.

- வெளிப்படை
- குறிப்பு

என்பனவே அவை என்று கொள்ள வேண்டும்.

இது பெயர் வினையாகிய இரண்டிற்கும் ஏற்கும்.

வினையின் கண் செயல் வெளிப்படையாகவே புலப்படுகின்றமையால் வினைச்சொற்கள் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் உணர்த்தும் என்பது காலத்தையேயாகும்.

- வெளிப்படையாகக் காலங்காட்டி வரும் வினைகளைத் தெரிநிலைவினை எனவும்,
- குறிப்பாகக் காலங்காட்டி வரும் வினைகளைக் குறிப்புவினை எனவும்

கூறுவர்.

பெயராயின் காரணத்தை வெளிப்படையாகக் காட்டுவனவும் குறிப்பாகக் காட்டுவனவும் என இருவகைப்படும்.

இதுவே தொல்காப்பியர் போன்ற பேராசிரியர்களுக்கும் உடன்பாடாகும். 

"எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே'' என்பார் தொல்காப்பியர்.

எனவே பொருள் குறியாது வரும் - இடுகுறியாய் வரும் சொல் ஒன்று மின்று என்பது அவர் கருத்தாகின்றது.

பின்னும் அவரே, "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா'' என்று கூறியிருத்தலால் தெளிவாகச் சில சொற்களுக்குக் காரணம் அறியப்படும்; குறிப்பாகச் சில சொற்களுக்குக் காரணம் புலப்படும் என்பது தெளிவாகின்றது.

எனவே, இடுகுறிச் சொல்லென எதனையும் பெயரிட்டழைத்தல் ஆசிரியருக்குக் கருத்தன்று என்பதறியப்படும். 

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே'' என்று தொடங்கிய ஆசிரியர் சொல் பொருளை உணர்த்தும் நெறியினை,   

"தெரிபுவேறு கிளத்தலும் குறிப்பிற்றோன்றலும் 
 இருபாற்றென்ப பொருண்மை நிலையே''.  

என்று விளக்கினார்.

பெயர்கள் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் பொருளைத் தோற்றுவிக்கும் இருநிலைகளை உடையன என்பதே இதன் பொருள்.

சுருங்கச் சொல்வதானால்

- வெளிப்படைப் பெயர்
- குறிப்புப் பெயர்

எனப் பெயரிட வேண்டுமென ஆசிரியர் நினைத்தார் என்பதற்கு ஏது (எ.கா) யாண்டுமில்லை. 

- குறிப்பாகக் காலங்காட்டும் வினையைக் குறிப்புவினை எனவும்,

-வெளிப்படையாகக் காலங்காட்டும் வினையயைத் தெரிநிலைவினை

எனவும் கொண்ட பிற்கால ஆசிரியர்கள், காரணத்தைக் குறிப்பாகக் காட்டும் பெயரைக் குறிப்புப் பெயரெனவும், வெளிப்படையாகக் காட்டுவனவற்றைத் தெரிநிலைப் பெயரெனவும் கொள்ளாது போயினர்; பெயரை இடுகுறிப் பெயரெனவும் காரணப் பெயரெனவும் வகுத்து மொழி வளர்ச்சிக்கு ஒரு வகையில் ஊறு தேடினர். 

சொற்களின் பொருளை மக்கள் நன்றாக உணர்ந்தாலன்றிச் சொற்கள் வளர்ச்சியடைதல் இல. சொற்களின் பொருள்களை மக்கள் உணரவும் வேண்டும். உணர்வதற்குரிய ஊக்கத்தையும் ஆசிரியர்கள் அளித்தல் வேண்டும். குறிப்புப் பெயரெனின் அதைப் பற்றி யாரும் கவலையுறார். காலப்போக்கில் அத்தகைய சொற்கள் இறந்துபடும். பொருள்களோடு வழங்கும் சொற்களே என்றும் நிலைபெறும். பொருளற்ற சொற்கள் எனக் கூறப்படுவன விரைவில் அழிந்துபோகும். 

இம்முறையில் இடுகுறிப்பெயரென ஒருவகையினைக் கொள்வது மொழி வளர்ச்சிக்கு ஏலாத தொன்றென்றே கொள்ள வேண்டும். அங்ஙனம் வகுத்தார் சொற்களுக்கு வருத்தத்தை வகுத்தாரே யாவர்.

Kannan Natarajan

unread,
Sep 10, 2011, 4:47:06 PM9/10/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 4:- தமிழ்மொழியின் தொன்மையும், மாண்பும்!

வித்துவான் பாலூர் து.கண்ணப்ப முதலியார்



தமிழ்மொழி தொன்மையானது என்பது வான்மீக ராமாயணமும், வியாசர் மகாபாரதமும் கூறுமாற்றால் அறியலாம். பாரதத்தில் பாண்டிய நாட்டைப் பற்றிய குறிப்பு வருகிறது.

வானரங்களுக்குச் சுக்ரீவன், "நீங்கள் மலைய மலையின் சிகரத்தில் அகத்தியரைக் காண்பீர்கள். அவர் ஆணை பெற்றுப் பாண்டியர்க்கு உரித்தான கபாடபுரத்தைக் காண்பீர்கள்'' என்று கூறிய குறிப்பு வான்மீக
ராமாயணத்தில் வருதல் காண்க.

பாண்டியர்களைப் பற்றிய குறிப்பு அந்நூலில் காணப்படுதலின், அவர்களின் மொழியாகிய தமிழின் பழமையும் இதன் வழி அறியவருகிறது. பாண்டியநாடு தமிழ் வளர்த்த நாடு என்பது,

"சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும்
 செ
ந்தர பாண்டியன் எனும் தமிழ் நாடனும்
 சங்கப் புலவரும் தழைத்தினி திருந்த
 மங்கலப் பாண்டி வளநா டென்ப''.

என்னும் செய்யுளால் தெரிகிறது.

பாரதத்திலும் தமிழ்நாட்டின் சிறப்பும், பாண்டியர் தமிழ் நாட்டை ஆண்ட தொன்மையும் கூறப்பட்டுள்ளன. உதியஞ்சேரலாதன், பாரதப் போரில் பஞ்ச பாண்டவர்கட்கு உணவு கொடுத்து ஊக்கியதைப் புறநானூறு,

"அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
 நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
 ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
 பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்''.

என்கிறது.

இந்நிகழ்ச்சியை அகநானூறு,

"முதியங் பேணிய உதியம் சேரல்,
 பெருஞ்சோறு கொடுத்து ஞான்றை''.

என்றும்,

சிலம்பு,

"ஓர் ஐவர் ஈர்ஐம்பதின்மர் உடன் எழுந்த போரில்
 பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த சேரன்''.

என்றும் கூறுதல் காண்க.

இச்சேர மன்னன் நாட்டில் பேசிய மொழி தமிழே ஆகும்.

பதிற்றுப்பத்து என்னும் நூல் தமிழில் அமைந்திருத்தல் காண்க.

சோழ நாட்டிலும் தமிழ் வளர்த்த நிலையினை,

"மன்ற வாணன் மலர்திரு அருளால்
 தென்தமிழ் மகிமை சிவணிய செய்த
 அடியவர் கூட்டமும் ஆதிச் சங்கமும்
 படியின்மாப் பெருமை பரவுறு சோழனும்
 சைவமா தவரும் தழைத்தினி திருந்த
 மையறு சோழ வளநா டென்ப''.

என ஒரு செய்யுள் கூறுதல் காண்க.

இம் மூவேந்தர்களைப் பற்றிய குறிப்பினைத் தொல்காப்பியர்,

"போந்தை வேம்பே ஆர்என வரூஉம்
 மாபெருந் தானையர் மலைந்த பூவும்''.

என்று மூவேந்தர் சூடிய மலர்களைக் குறித்துள்ளார்.

தொல்காப்பியம் தமிழ் மொழியால் ஆனது.

"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
 பண்பில் தலைபிரிதல் இன்று''.

என்று குறளின் விசேட உரையில் பரிமேலழகர்,

"பழங்குடி தொன்று தொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார். தொன்றுதொட்டு வருதல் சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்'' என்று விளக்கினார்.

அகத்தியர்க்கு இறைவர் தமிழ் மொழியை உணர்த்தினார் என்பது,

"ஆதியில் தமிழ் நூல் அகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகன்'' என்றும்,

"விடைஉ கைத்தவன் பாணினிக் கிலக்கணம் மேனான்
 வடமொ ழிக்குரைத் தாங்கியல் மலையமா முனிக்குத்
 திடமு றுத்திஅம் மொழிக்குஎதிர் ஆக்கிய தென்சொல்''.

என்றும்,

"வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கு இணையாகத் தொடர்புடைய தென்மொழியைக் குறுமுனிக்கு வகுத்துரைத்தார் கொல்ஏற்றுப் பாகர்'' என்று வருதல் காண்க.

இத்தமிழை முருகப்பெருமானும், அகத்தியருக்கு அறிவுறுத்தினார் என்பதை அருணகிரியார்,

"சிவனைநிகர் பொதியவரை முனிவன் அகம் மகிழஇரு
 செவிகுளிர இனிய தமிழ் பகர்வோனே''.

என்றும் பாடியிருக்கின்றனர்.

இனித் தமிழ்மொழியின் சிறப்பைக் காண்போம்.

முதலாவது இம்மொழி தெய்வீகத்தன்மை வாய்ந்தது. இறைவனே தமிழ் வடிவினன். இவற்றைத் தேவாரத்தாலும், பிரபந்தத்தாலும், பரஞ்சோதியார் வாக்காலும் அறியலாம்.

"தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை
 உண்ட பாலனை அழைத்ததும், எலும்புபெண் ணுருவாக்
 கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்
 தண்ட தமிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்''.

என்பது பரஞ்சோதியார் பாடல்.

வழிபாட்டிற்கும் இம்மொழி உரியது என்பதை,

"தமிழ்ச் சொலும், வடசொலும் தாள் நிழல் சேர'' எனத் திருமந்திரத்தும்,

"அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் நம்மேல் சொற்றமிழ் பாடுக'', என்று பெரியபுராணத்தும் கூறப்பட்டிருத்தல் காண்க.

முத்திக்கு வித்தானது தமிழ் என்பதை,

"தித்திக்கும் தெள்ளமுதமாய்த் தெள்ளமுதின் மேலான
 முத்திக் கனியே என் முத்தமிழே''.

எனத் தமிழ்விடு தூதும் கூறுதல் காண்க.

தமிழ் மொழியினிடத்துத் தெய்வங்கட்குப் பெருவிருப்பம் உண்டு என்பது இலக்கியங்களால் அறிய வருகின்றன.

"கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
 பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ்''.

என்பது பரஞ்சோதியார் வாக்கு.

"முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்'' என்பார் அருணகிரியார்.

"கடுக்க வின்பெறு கண்டனும் தென்திசை நோக்கி
 அடுக்க வந்துவந் தாடுவான் ஆடலின் இளைப்பு
 விடுக்க ஆரம்மென் கால்திரு முகத்திடை வீசி
 மடுக்க வும்தமிழ் திருச்செவி மாந்தவும் அன்றோ''.

என்பது திருவிளையாடற் புராணம்.

"பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலே'' என்பது குமரகுருபரர் வாக்கு.

இன்னோரன்ன காரணங்களால் தமிழ் தெய்வங்களால் பெரிதும் விரும்பப்பட்டதை நன்கு தெளியலாம்.

தமிழ் என்னும் சொல் தமிழே அன்றித் திராவிடம் என்னும் சொல்லின் திரிபன்று.

தொல்காப்பியத்தில், "தமிழெனும் கிளவி'' என்ற தொடரே தமிழ் என்னும் சொல் இருத்தலைக் காட்டுகிறது.

"தமிழ் கூறும் நல்லுலகென்பதை", தொல்காப்பியப் பாயிரத்தும் காண்க.

"செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி'' என்னும் தொடரையும் காண்க.

"செந்திறத்த தமிழ் ஓசை வடசொல்லாகி'' என்னும் நாலாயிர திவ்யப் பிரபந்தத் தொடரால், வடமொழிக்கும் துணையாய் இருப்பது செந்தமிழ் என்பதையும் அறியவும்.

தமிழ்மொழியே தீராத ஐயங்களையும் தீர்க்கவல்லது என்பதை வேதாந்த தேசிகர்,

"செய்யதமிழ் மறைஅனைத்தும் தெளிய ஓதித்
 தெரியாத மறைநிலங்கள் தெரிக்கின் றோமே''.

என்று கூறுதல் காண்க.

இதன் வழி, தமிழ் மறைகள் இருந்தமையும், உணர்வோமாக. கம்பர்,

"ஆரணத்தின் மும்மைத் தமிழ்''

என்று அறிவித்தலை ஓர்க.

தமிழ்மொழி இனிமையானது என்பது இதில் அமைந்துள்ள சொற்களின் உச்சரிப்பு மூலம் அறியலாம்.

இஃது ஓதற்கெளிதாய், உணர்தற்கு இன்பமாய் அமைந்த மொழி. ஏன்?

இனிமை என்னும் பொருளையே தரும் சொல்லாகவும் தமிழ்ச்சொல் திகழ்கிறது.

"இனிமையும், நீர்மையும் தமிழ் எனல் ஆகும்'',

என்பது பிங்கல நிகண்டு.

இக்கருத்தைக் கீழ்வரும் இலக்கியத் தொடர்களைக் கொண்டும் அறிந்துகொள்ளலாம்.

"தமிழ் தழீஇய சாயலவர்'' என்று சிந்தாமணியும்,
"தமிழ் மாருதம்'' என்று பெரியபுராணமும்,
"வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே'' என்று கம்பராமாயணமும்,

"தமிழ்" என்னும் சொல்லை "இனிமை" என்ற பொருளில் அமைத்திருத்தலைக் காண்க.

திரு.இராகவ ஐங்கார் அவர்கள்,

"இனிமை என்னும் பொருள்படும் தமிழ் என்னும் சொல்லே, நம்நாட்டு மொழிகளுள் தொன்மையும், முதன்மையும் பெற்று இத்தென்னாட்டுத் தாய் மொழிக்குப் பெயராய்ப் பண்டைக்காலம் தொடங்கி வந்தது''

என்று கூறியுள்ளார்.

தமிழ்மொழி,

- எழுத்து நுட்பமும்
- சொற் பெருக்கமும்
- பொருட்பொலிவும்
- யாப்பமைதியும்
- அணியழகும்
- ஒலி இனிமையும்
- தெய்வத் தன்மையும்

அமைந்தது.

தமிழ்மொழியின் மேன்மையைக் குறித்து மேற்கு நாட்டவர்கள் நன்கு சிறப்பித்துக் கூறியுள்ளனர்.

-
கால்டுவெல்
- கிரியர்ஸ்ன்

போன்ற மொழிநூல் பேராசிரியர்கள், தமிழ்மொழியின் ஒலி அமைப்பு, வரி அமைப்பு முதலிய சிறப்பு இயல்புகளை மிக மிகப் பாராட்டி எழுதியுள்ளனர்.

தமிழ்மொழியின் சாயல் பிற மொழிகளிலும் சேர்ந்துள்ளது. ஹீப்ரு மொழியில் "துக்கி" எனப்படுவது "தோகை" என்னும் தமிழ்ச் சொல்லே ஆகும்.

இங்ஙனம் தமிழ்மொழி பிறமொழிகளில் கலந்திருப்பதை ரைஸ் டேவிஸ் (Rhys Davies) என்பவரும், ரெவ. ஹெரஸ் (Rev.Heras) என்பவரும் கூறியுள்ளனர்.

தமிழ் என்னும் சொல்லின் "த" என்னும் வல்லினமும், "மி" என்னும் மெல்லினமும், "ழ்" என்னும் இடையினமும் சேர்ந்து "தமிழ்" மொழியின் ஓசையின் சிற்பியல்புகளை எடுத்துக் காட்டிக்கொண்டிருப்பதைக் காண்க; தமிழர்க்கே உரிய சிறப்பெழுத்துக்களாகிய ற, ழ, எ, ஓ என்பனவற்றுள் "ழ" எம்மொழியிலும் இல்லாச் சிறப்புடன் துலங்குதலை உணர்க.

இன்னோரன்ன வளமிக்க தமிழ் மொழியையும், தமிழகத்தையும், தமிழ் நூல்களையும் சிறப்பாகப் பாதுகாத்துக் கொள்வதோடு, பொதுவாக இந்தியாவையும் எவர் கையகத்தும் அகப்படாதவாறு முன்னணியில் நின்று எல்லா வகையாலும் காக்க வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

Geetha Sambasivam

unread,
Sep 10, 2011, 9:10:29 PM9/10/11
to mint...@googlegroups.com
புதுமையானதொரு விளக்கம்.

2011/9/3 Kannan Natarajan <thar...@gmail.com>
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 3:- தமிழ்ச் சொல்லியல்!




இம்முறையில் இடுகுறிப்பெயரென ஒருவகையினைக் கொள்வது மொழி வளர்ச்சிக்கு ஏலாத தொன்றென்றே கொள்ள வேண்டும். அங்ஙனம் வகுத்தார் சொற்களுக்கு வருத்தத்தை வகுத்தாரே யாவர்.


நன்றி:- தினமணி

--

Geetha Sambasivam

unread,
Sep 10, 2011, 9:12:52 PM9/10/11
to mint...@googlegroups.com
நன்றி.

2011/9/11 Kannan Natarajan <thar...@gmail.com>
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 4:- தமிழ்மொழியின் தொன்மையும், மாண்பும்!

வித்துவான் பாலூர் து.கண்ணப்ப முதலியார்

நன்றி:- தினமணி

--

Kannan Natarajan

unread,
Sep 15, 2011, 6:02:45 AM9/15/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 5:- தமிழுக்கு முதல் இடம்!


முனைவர் மு வரதராசனார்

ஒரு நாட்டில் பெரும்பாலான மக்கள் என்ன மொழி பேசுகின்றார்களோ அந்த மொழியிலேயே ஆட்சி முதல் ஆடல், பாடல் வரையில் எல்லாம் நடைபெறுதல் வேண்டும்.

அப்படி இல்லையானால், அது அந்த நாட்டிற்கே தீமையாக விளையும்.

அந்த நாட்டு மொழி பல வகையிலும் குறைபாடு உடைய மொழியாகவும் இருக்கலாம். வேறு நாட்டுமொழி அதைவிடச் சிறப்பு உடையதாகவும் இருக்கலாம். ஆனாலும் அந்த நாட்டின் வாழ்வில் நாட்டு மொழிக்கே முதன்மையான இடம் இருக்க வேண்டும்.

ஓர் இரு துறைகளில் மட்டும் அல்லாமல் பல துறைகளிலும் முதல் இடம் இருக்க வேண்டும். வேற்று நாட்டு மொழி எவ்வளவு சிறப்பு உடையதாக இருந்தாலும் முதல் இடம் பெறக்கூடாது. அதனால் விளையும் பயன் கருதி அதற்கு இரண்டாம் இடம் தரலாம். அவ்வாறு செய்தால்தான் அந்த நாட்டு மக்களின் வாழ்வு, உட்பகையும், பிளவும், குழப்பமும் இல்லாததாக இருக்க முடியும்.

குறிப்பிட்ட சில பயன் கருதி வேற்றுமொழிக்கு இடம் கொடுத்தால், நிகழ்காலத்தில் தீமையற்ற நன்மை விளைவதுபோல் தோன்றும். ஆனால், காலப்போக்கில் நன்மையும் தீமையாக மாறி விளைந்துவிடும். ஆகையால் அப்போதைக்கு ஏற்படும் பயனை மட்டும் கருதாமல் நாட்டின் எதிர்கால வாழ்வையும் கருதி நிலையான நன்மைக்கே வழி வகுக்க வேண்டும்.

பல நூற்றாண்டுக்கு முன்னே தமிழ்நாட்டில் கோயில்களில் தமிழ்மொழிக்கு இடம் தராமல் வடமொழியை அங்கு விளங்க வைத்தார்கள். அதனால் அன்று ஒரு தீமையும் ஏற்படவில்லை. அந்த விதை காலப்போக்கில் முளைத்து வளர்ந்து இன்று தீமைகளை விளைத்து வருகின்றது. தமிழ்நாட்டில் இன்று உள்ள வகுப்புப் பூசலுக்கும், வடமொழி - தென்மொழி போராட்டத்திற்கும் அன்று செய்த அந்தத் தவறே காரணம் எனலாம். அன்று விதையாக இருந்தது இன்று மரமாக வளர்ந்துள்ளது. இன்று காணும் இந்தப் பெரிய மரத்திற்கு அன்று கண்ட விதை காரணம் அன்று என்று சிலர் கருதலாம். வேறு காரணமும் கூற முயலலாம். அந்த முயற்சியால் பயன் இல்லை. உண்மையை உணர்ந்தால்தான் பயன் உண்டு.

ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழ்பாடி வளர்த்த அந்தக் கோயில்களில் தமிழுக்கு முதல் இடம் அளித்திருந்தால், இன்று எத்தனையோ வம்புகள் விளையாமல் தடுத்திருக்க முடியும். கோயில்களில் தமிழ் முழங்க வேண்டும் என்ற கிளர்ச்சிக்கே இடம் இல்லாமல், அதை ஒட்டி வளரும் பூசலுக்கும் இடம் இல்லாமல் அமைதி நிலவியிருக்கும்.

அன்று செய்த தவறு போலவே நேற்றும் ஒரு தவறு செய்தோம்!

இசைத் துறையில் தலைமுறை, தலைமுறையாகத் தமிழ்நாடு வளர்த்து வந்த பண்கள் பல. அந்தத் தமிழ் இசை பிற்காலத்தில் கருநாடக சங்கீதமாக வளர்ந்து, மாறி இன்றும் போற்றப்பட்டு வருகின்றது. ஆனால் பழைய பெயர்கள் இல்லை. அதனால் புதியதொரு கலைபோல் பலர் மருள்கின்றார்கள். பழைய பண்களின் இலக்கணம் இன்று விளங்கவில்லை. அவற்றின் பெயர்களும் கேட்டறியாத புதுப்பெயர்கள்போல் உள்ளன. இங்குள்ள
ராகங்களின் பெயர்களோ தமிழுக்குத் தொடர்பு இல்லாதவைகளாக உள்ளன. கருநாடகத்தைக் கண்டு பலர் மருளுதலுக்குக் காரணம் அதுதான். இவ்வளவு மாறுதலும் ஏற்பட்டதற்குக் காரணம், இசைத் துறையில் தமிழ்மொழிக்கு முதல் இடம் இல்லாமல்போன குறைதான். அன்று நேர்ந்த அந்தக் குறையே இன்று தமிழ் இசைப் போராட்டம் நடக்கக் காரணம் ஆயிற்று. அதன் தொடர்பாக ஏற்பட்டு இன்றும் அங்கங்கே இருந்துவரும் சிறு பூசல்களுக்கும் அதுவே காரணம் ஆகும்.

இராகங்களின் பெயர் மாறியது ஒரு புறம் நிற்க, அந்த
ராகங்களுக்கு உரிய பாட்டு, தமிழர் பொருள் உணரக்கூடிய தமிழ்ப் பாட்டாக இல்லாமல் போனதுதான் குறை. கருநாடக சங்கீதத்தில் எல்லாப் பாட்டும் தமிழாக இருக்க வேண்டும் என்பது கருத்து அன்று.

கருநாடக சங்கீதம், தெலுங்கு நாட்டில் வளரும்போது தெலுங்குப் பாட்டுக்களின் துணை வேண்டும். மைசூரில் வளரும்போது கன்னடப் பாட்டுக்களின் துணை வேண்டும். ஒருகால் வங்காள மாகாணத்தில் வளர்வதாக இருந்தால், வங்காளிப் பாட்டுக்களின் துணையே வேண்டும். தமிழ்நாட்டில் வளரும்போது தமிழ்ப் பாட்டுக்களின் துணையே வேண்டும் என்பதுதான் கருத்து ஆகும்.

கல்யாணி 
ராகத்தைத் தமிழர்கள் தமிழ்ப் பாட்டின் துணைகொண்டு அனுபவிக்க வேண்டும். அதுபோலவே தெலுங்கு மக்கள் அனுபவிப்பதற்குத் தியாகராயர் பாடல் முதலான தெலுங்குப் பாட்டுக்கள் மிகுந்த நன்மை பயக்கும். இந்த அளவிற்குத் தெளிவும், உரிமையும் வளரவிட்டிருந்தால் இன்று இசைத்துறையில் மொழிப் போராட்டம் தலையெடுத்திருக்காது.

போராட்டம் வளரும்போது போராடும் மக்களைப் பார்த்துக் குறை கூறுவதனால் பயன் இல்லை. அதற்குக் காரணமான தவறு முன்னமே நேர்ந்துவிட்டதை எண்ணி வருந்த வேண்டும். விளைத்தது விளைந்தே தீரும்.

அதற்குப் பிறகு நேர்ந்த தவறு ஆட்சித் துறையில் தமிழுக்கு முதல் இடம் அளிக்காமல் போனது ஆகும். அதற்காக நாம் யாரை நொந்துகொள்வது?

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் அடிமைத்தனத்தையே நொந்துகொள்ள வேண்டும். அடிமை வாழ்வு நீங்கி, உரிமை வாழ்வு பெற்றுள்ள நாம் இனியேனும் அந்தக் குறை தீர வழிவகுக்க வேண்டும். உரிமை பெற்ற எந்த நாட்டிலும் அந்நிய மொழி ஆட்சி மொழியாக இருப்பது இல்லை. ஆகவே இங்கும் இருப்பது பொருந்தாது.

ஆட்சி மொழிக்கு எப்போதும் செல்வாக்கு மிகுதி.

ஒரு மொழி ஆட்சித் துறையைக் கைப்பற்றிவிட்டால் மற்ற துறைகள் தாமே வந்து அதனிடம் சேரும். ஒலியிலும், இலக்கணத்திலும், சொல் வகையிலும் மிக்க குறைபாடு உள்ள மொழியாக இருந்தும், ஆங்கிலம் உலக மொழியாக வளர்ந்துள்ளதற்குக் காரணம் அதுதான்.

"அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி", என்ற பழமொழி மொழித் துறைகளுக்கும் பொருந்தும். ஆட்சித் துறையில் உள்ள எந்த மொழியோ அந்த மொழியே கல்வி, தொழில், வாணிபம், கலை, பொழுதுபோக்கு முதலான எல்லாத் துறைகளிலும் செல்வாக்குப் பெற்றுவிடும்.

நாடோடிகளாய்த் திரியும் நரிக்குறவர் மொழியாக இருந்தாலும் அதை ஆட்சிமொழி ஆக்கிவிட்டால், ஒரு நூற்றாண்டு அளவில் அதுவே பல துறைகளிலும் வளர்ந்த ஒரு மொழியாகிவிடும். அவ்வாறே எவ்வளவு சிறப்புடைய மொழியாக இருந்தாலும் ஆட்சித்துறையில் அதற்கு இடம் இல்லையென்றால் மற்ற துறைகளில் அதன் வாழ்வு தானாகவே மங்கிவிடும். அது இயற்கை.

தமிழ் நாட்டில் பத்திரிகைத் துறையில், நேற்று வரையில் தமிழ் பிற்போக்காக இருந்ததற்குக் காரணம், ஆட்சி மொழியான ஆங்கிலத்திற்கு இருந்த செல்வாக்கே ஆகும். இவ்வாறு பத்திரிகைத் துறையில் தமிழ் செல்வாக்குடன் விளங்க முடியாமல் இருந்ததனாலும் நாட்டிற்குத் தீமை விளைந்தது; இன்னும் விளைந்து வருகின்றது. என்ன தீமை?

தமிழ்நாட்டில் ஆங்கிலப் பத்திரிகைகள்தான் மிகச் செம்மையாக வளர்ந்துள்ளன; பெரிய அளவில் விற்பனையும் ஆகின்றன. அந்தப் பத்திரிகைகள் நாட்டுமொழித் தொடர்பு இல்லாத காரணத்தால் நாட்டு மக்களின் உள்ளத் தொடர்பை இழந்துவிட்டன. அதனால் தமிழ்நாட்டுச் செய்திகளைவிட வெளி உலகச் செய்திகளுக்கே சிறப்பிடம் தருகின்றன; நாட்டில் நெருக்கடியான போராட்டம் நடக்கும்பொழுதும் தமிழ் மக்களின் நன்மையைப் பெரிதாகக் கருதாமல் வெளியுலகத்து மதிப்பையே பெரிதாகக் கருதி வாய்மூடிக் கிடக்கின்றன. அந்தப் பத்திரிகைகள் வாழ்வது தமிழ்நாட்டில்; ஆனால், தமிழ் மக்களின் போராட்டங்களில் அவை தீண்டாமையை மேற்கொள்கின்றன.

மொழி வழியாகத் தமிழ்நாடு அமைக்கும் முயற்சி, சென்னைத் தமிழருக்கு உரியதாக ஆக்கிய போராட்டம், வடக்கெல்லையாகிய சித்தூர் மாவட்டத் தமிழர்களின் கூக்குரல், தெற்கே நாஞ்சில் நாட்டுத் தமிழ் மக்களின் உரிமை வேட்கை, தமிழைக் கல்வி மொழியாக்கச் செய்யப்படும் முயற்சி முதலிய பலவற்றிலும் இந்த ஆங்கிலப் பத்திரிகைகள் அமாவாசை சாமியார்களாகவே நடந்துகொண்டன; நடந்துகொண்டு வருகின்றன.

இதன் பயனாக இன்று தமிழ் மக்கள் பெரும்பாலோர் உள்ளத்தில் அந்தப் பத்திரிகைகள் பற்றி நல்ல எண்ணம் இல்லாமல் போயிற்று. இவ்வளவிற்கும் காரணம் என்ன?

பத்திரிகைத் துறையில் தமிழுக்கு முதல் இடம் இல்லாமல்போன குறைதான். ஆனால் இன்றைய நிலைமை நேர்மாறாக உள்ளது. சில தமிழ்ப் பத்திரிகைகளும் ஆங்கிலப் பத்திரிகைகளுக்குப் பின்பாட்டுப் பாடி "அமாவாசை சாமியார்"களாக வாழ முயல்கின்றன. இந்த நிலைமை நீடிக்காது என்பதை விரைவில் காண்போம்.

தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாகிவிட்டால், பத்திரிகைத் துறையிலும் தமிழ் முதல் இடம் பெற்றுவிடும். மேலே சொன்ன குறையும், கசப்பும் குழப்பமும் நீங்குவதற்கு வழி அதுதான்.

இக்கட்டுரை வெளிவந்த ஆண்டு ஜனவரி 1956

Kannan Natarajan

unread,
Sep 18, 2011, 6:51:00 PM9/18/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 6:- தமிழின் சிறப்பியல்பு!



                                                   நா.மு.வேங்கடசாமி நாட்டார்

உலகிலே ஏனையுயிர்களினின்றும் மக்களை வேறுபடுத்திக் காட்டுவதாய், மக்களின் அறிவு விளக்கத்திற்குச் சிறந்த கருவியாவதாய் உள்ளது மொழி. அன்றியும் மொழியானது அதனைப் பேசிவரும் மக்களின் கருத்துப் பொருள்களைத் திரட்டி வைத்திருக்கும் கருவூலமாயிருத்தலின், அதன் அமைப்பு முதலியன கொண்டே அம்மக்களின் நாகரிக நிலையை உணர்தலும் சாலும்.

இப்பொழுது எத்தனையோ பலநூறு மொழிகள் உலகத்தில் வழங்குவன என்ப எனினும், தமிழ், எபிரேயம், கிரிக்கு, இலத்தீன் முதலிய சில மொழிகளே மிக்க பழமையும் பெருமையும் உடையனவாக அறிஞர்களாற் கொள்ளப்படுகின்றன.

இவற்றுள் இருவகை வழக்கினும் நின்று நிலவுவது தமிழ்.

தமிழின் சிறப்பியல்பு என்னின், பிற மொழியிலின்றித் தமிழில் மட்டுமேயுள்ள தன்மையென்றாகும்.

பிறமொழி என்பது தமிழ் அல்லாத எல்லா மொழியையும் குறிக்குமாயினும் ஈண்டு, தமிழுக்கு எதிராக நிறுத்தி ஆராய்தற்குரியது சமஸ்கிருதம் எனப்படும் ஆரிய மொழியேயாகும்.

பரத கண்டத்து வழங்கும் மொழிகளுக்குள்ளே தென்மொழி என்றும், வடமொழி என்றும் திசைப் பெயரெடுத்து எதிர் நின்று வழங்கப்பெறுவன தமிழும், ஆரியமுமே யன்றோ?

தமிழின் தனித் தன்மையையோ, உயர்வையோ கூறப்புகின், அது மற்றொன்றை வெறுப்பதோ இழிவுபடுத்துவதோ ஆகுமெனச் சிலர் கருதுகின்றனர்.

அத்தகைய மனப்பான்மையினர் இவ்வவையின் கண் இரார் என எண்ணுகிறேன்.

எல்லா மொழிக்கும் ஆரியமே தாயாகுமென்றும், அம்முறையே தமிழும் ஆரியத்தினின்றே தோன்றியதாகுமென்றும் கொள்ளும் ஆராய்ந்து துணியாத கொள்கையினை யுடையார் சிலர் சின்னாளின் முன்புதொட்டு இருந்து வருகின்றனர்.

மொழியாராய்ச்சி யென்பது புதியகலை முறைகளில் ஒன்றாகி உண்மையை விளக்கி வருகின்ற இந்நாளில் அக்கொள்கை அருகிவிட்டதென்பதில் ஐயமில்லை. எனினும், அக்கொள்கை அறவே ஒழியுமாறு, தமிழின் சிறப்பியல்புகளை உள்ளவாறு எடுத்துக் காட்டித் தெருட்டுதல் நம்மனோர் கடன்.

மொழிநூல் ஆராய்ச்சியாளர் மொழிகளை அவற்றின் பண்புகள் கொண்டு வெவ்வேறு குடும்பம் அல்லது குழுவாகப் பாகுபடுத்தியிருக்கின்றனர்.

வடமொழி, தென்மொழி என்னும் பெயர் வழக்கே அவை வெவ்வேறு தனி மொழியாமென்பதுணர்த்தி நிற்கவும், வடக்கினின்று தெற்கு உதித்ததென்பார் போல வடமொழியினின்று தென்மொழி வந்ததென்பார் சிலர் தோன்றினமை பரிவுறற்பாலதே. அதிலும் தமிழ் இலக்கணங்களைத் துறைபோகக் கற்று "இலக்கணக் கொத்து" இயற்றிய சுவாமிநாத தேசிகர் "ஐந்தெழுத்தாலொருபாடை யென்றறையநாண அறிவுடையோர்'' என்று கூறியதுதான் பெரிதும் இரங்கற்குரியது.

இருமொழிப்புலமையும் ஒருங்குடைய பெரியோராகிய சிவஞான முனிவர் தாம் இயற்றிய தொல்காப்பியப் பாயிர விருத்தியில் "ஐந்திரம் நோக்கித் தொகுத்தானெனின், தமிழ் மொழிப் புணர்ச்சிக்குட்படுஞ் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறமென்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுலிலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும்'' என எழுதிய உரை சிந்திக்கற்பாலது.

தொல்காப்பியத்திற்கு முதனூல் "ஐந்திரம்" எனக் கூறிய சுப்பிரமணிய தீக்கிதர் கூற்றையே ஆசிரியர் சிவஞான முனிவர் இங்ஙனம் மறுத்துரைத்தாராவார்.

தமிழிலக்கணத்திற்கு வடமொழி இலக்கணம் முதனூலாதல் எவ்வாற்றானும் பொருந்தாதென்பது இதனால் வலியுறுத்தப்பட்டது. தேசிகர் கூற்றும் இதனானே மறுக்கப்பட்டமை ஓர்க.

வடமொழியிற் பெறப்படாத தமிழ்ச் சிறப்பியல்புகள் இவையெனத் தமிழிலக்கணப் பகுதிகள் பலவற்றைக் கிளந்தெடுத்தோதிய ஆசிரியர், அதனோடமையாது, "இன்னோரன்ன பிறவும்" எனவும் கூறிப்போந்தனர்.

வடமொழியிற் பெறப்படும் தமிழியல்புதான் வேறு யாதுளது?

பெயர்ச்சொல், வினைச்சொல், வினைமுதல், செயப்படுபொருள், பயனிலை, என்னலாமோ?

இவையில்லாத மொழிகளே உலகத்திலில்லை.

உவகையில் இன்சொல்லும், வெகுளியில் வன்சொல்லும் எழுதல்போல இவையெல்லாம் எல்லா மொழியினும் இயல்பிலே அமைதற்குரியன.

இவற்றை ஒன்றினின்று மற்றொன்றிற்கு வந்தனவென்று கூறுவோன்

"மருந்திற் றணியாத பித்தனென் ரெள்ளப்படுவான்''

என்பது தேற்றம்.

இனி, "ஐந்தெழுத்தாலொரு மொழியெனவும் அறிவுடையோர் நாணுவர்'' என்னுங் கூற்றை இன்னுஞ் சிறிது ஆராயாது விடுதல் தக்கதன்று.

தமிழெழுத்துக்கள் முப்பத்து மூன்றென ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியிருப்பவும், அதனைச் சிறிதும் சிந்தியாது ஐந்தெழுத்தென்று கூறியது என் கருதி?

தமிழ் முதலெழுத்துக்கள் முப்பதில் இருபத்தைந்தெழுத்து வடமொழியிலிருத்தலின் அவற்றைக் கழித்து, எஞ்சிய ஐந்துமே தமிழுக்குரியவாகக் கூறலாயிற்றெனின், வடமொழி எழுத்துக்கள் யாவும் பிறமொழிகளில் காணப்படுதலின் வடமொழிக்கென ஓரெழுத்தேனும் இன்றென ஏன் கூறுதல் கூடாது?

இனி அவர் எள்ளிக்கூறிய ஐந்தெழுத்தும் அத்துணை எளிமையுடையனவல்ல வென்பதையும் ஓர் எடுத்துக்காட்டில் வைத்து விளக்குகின்றேன்.

"நற்றா டொழா அரெனினன்''

என்பது ஓர் குறட்பாவின் பின்னடி.

இவ்வடியை வடமொழியில் எழுதுதல் சாலுமோ?

இதன் முதலிலுள்ள "ந" என்னும் ஒன்றன்றி மற்றைய எழுத்துக்கள் எழுதப்படாவாயின் வடமொழியன்றோ பெரிதும் எழுத்துக் குறைபாடுடையதென இது காட்டா நிற்கும்?

இப்பொழுது ஐந்தெழுத்து எத்துணைப் பெருமையுடையன வென்பது காண்க.

தமிழானது பகுத்தறிவுடைய மக்கள் முதலிய உயிரை உயர்திணை என்றும், பகுத்தறிவில்லாத உயிரையும், உயிரில் பொருளையும் அஃறிணை என்றும் அறிவுபற்றிப் பாகுபாடு செய்திருப்பதுபோல வடமொழி செய்யவில்லை; வேறு எம்மொழியும் செய்யவில்லை.

இவ்விருவகைப் பெயர்களே தமிழ் மக்களின் உயரிய அறிவையும், கொள்கையையும், தமிழின் தனி மாண்பையும் விளக்குதற்குப் போதியனவாகும்.

தமிழ் எழுத்துக்களில் மொழிக்கு முதலில் வருவன இவை, இறுதியில் வருவன இவை, இவற்றோடு மயங்குதற்குரியன இவை எனச் செய்திருக்கும் வரையறையும், தமிழ்ச் சொற்கள் நிறுத்தச் சொல்லும் குறித்து வரும் கிளவியுமாகப் புணரும்பொழுது உண்டாகும் மெய் பிறிதாதல், மிகுதல், குன்றல் என்னும் திரிவுகளும், இயல்பும் எல்லாம் தமிழுக்குச் சிறப்பாகவுரியவை.

ஒலியியல்பிற்கு மாறுபடாதவை.

தமிழ் இலக்கணம் கூறுகின்ற சந்தியும் இளஞ்சிறார் உள்ளிட்ட மக்கள் பேச்சினுள் சந்தியும் ஒன்றே; வடமொழிச்சந்தி அன்னதன்று.தமிழிலுள்ள பால் வகுப்பில் முறைப்பிறழ்வு சிறிதுமில்லை.

வடமொழிலுள்ள பால் வகுப்போ சொன்னோக்கங்கொண்டு ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும், இரண்டையும் அலியாகவும் கூறும் பிறழ்ச்சியுடையது.

ஒருமை பன்மை என்பது தமிழ் வழக்கு.

ஒருமை, இருமை, பன்மை என்பது வடமொழி வழக்கு; வடமொழியிலே ஒரு பெயரைச் சார்ந்து நிற்றற்குரிய வேற்றுமை யுருபு அதன் அடைமொழிகள் எல்லாவற்றோடும் கூடியிருக்கும். அங்ஙனம் வருவது தமிழ் வழக்கன்று; பின் வருவதை எடுத்துக் காட்டாகக் கொள்க:-

"கடற்கரையில் உள்ளதும் பாவங்களை அழிப்பதும் முனிபுங்கவர்களுக்கு அநுகூலமானதுமாகிய சுகந்தம் என்னும் மலையினது குகையில் வசிப்போனும் தன் ஒளியால் விளங்குவோனும் மக்களின் துன்பத்தைப் போக்குவோனும் ஆகிய முருகனை வழிபடுகின்றோம்", என்று தமிழில் வரற்பாலது, "கடற்கரையில் உள்ளதில் பாவங்களை அழிப்பதில் முனிபுங்கவர்களுக்கு அநுகூலமானதில் சுகந்தம் என்னும் மலையில் குகையில் வசிப்போனை தன் ஒளியால் விளங்குவோனை மக்களின் துன்பத்தைப் போக்குவோனை முருகனை வழிபடுகின்றோம்", என வடமொழியில் வரும்.

மற்றும் வடமொழியில் வேற்றுமை ஏழேயாகத் தமிழின் கண் எட்டாகும்.

"இந்திரன் எட்டாம் வேற்றுமை யென்றனன்", என்பார் உளரேனும் வடமொழியின் போக்கு விளியைத் தனி வேற்றுமையாகக் கொண்டதன்று; தமிழிலே விளி வேற்றுமை பரந்திருப்பதொன்று; தொல்காப்பியர் "விளிமரபு" என ஓர் இயல் கொடுத்து முப்பத்தேழு சூத்திரங்களாலே அதனை விரித்து விளக்குதலும் காண்க.

தமிழிலுள்ள வினைச்சொற்கள் திணை, பால், இடம், காலம் என்பவற்றை ஒருங்குணர்த்தும் சிறப்புடையன; வேறு எம்மொழியிலும் அத்தகையச் சிறப்பு காணப்படவில்லை.

"கண்டான்" என்னும் வினைமுற்றிலே, முதனிலையானது காண்டலாகிய தொழிலையும், இறுதி நிலையாகிய உயர்திணை ஆண்பால் படக்கை வினை முதலையும், இடை நிலையானது இறந்த காலத்தையும் வெளிப்படையாகக் காட்டி நிற்றல் காண்க.

இங்ஙனமாக எழுத்து, சொல் இலக்கணங்களில் காணப்படும் வேறுபாடுகளும் தமிழின் தனிமாண்புகளும் பலவாம்.

இனி, வடமொழியினும், பிறமொழிகளிலும் இலக்கணம் என்று கூறப்படுவது எழுத்து சொல்லமைதி யளவேயாகும்.

வடநூலார் இலக்கணத்தைச் "சத்தநூல்" என வழங்குதலும் காண்க.

தமிழிலக்கணமோ எழுத்துஞ் சொல்லுமாகிய ஒலியளவில் அடங்குவதன்று; மக்கள் உறுதிப்பொருள் செய்துணர்த்தும் பொருட் பகுதியையுடையது. பொருளிலக்கணம் வேறெம்மொழியிலுமின்றித் தமிழில் மட்டுமே யுள்ளதென்பது அனைவராலும் நன்கறியப்பட்டது.

தமிழானது பிற இலக்கணங்களைக் காட்டினும் பொருளிலக்கணத்தையே சிறந்ததாகவும், இன்றியமையாததாகவும் கொண்டுள்ள தென்பது,

"எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே பொருளதிகாரம் பெறேமேயெனின் இவை பெற்றும் பெற்றறிவே''

என்னும் இறையனாரகப் பொருள் உரையானும் அறியப்படும்'.

பொருளிலக்கணம் அகம், புறம் என்னும் இருகூறுடையதாகி அகம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் நுதலுவது.

அகமானது,
  1. குறிஞ்சி
  2. முல்லை
  3. மருதம்
  4. நெய்தல்
  5. பாலை
  6. கைக்கிளை
  7. பெருந்திணை
என்னும் ஏழு திணைகளையும்,

புறமானது,
  1. வெட்சி
  2. வஞ்சி
  3. உழிஞை
  4. தும்பை
  5. வாகை
  6. காஞ்சி
  7. பாடாண்திணை
என்னும் ஏழு திணைகளையும் ஒவ்வொரு திணையும் பற்பல துறைகளையும் உடையன.

தமிழிலுள்ள சான்றோர் செய்யுட்களெல்லாம் அகத்திணை துறைகளோடு பொருந்தியனவாகவே இருக்கும்.

ஒரு செய்யுளேனும் பொருளிலக்கணத்திற்கு இலக்கியமாகாத தாயிராது. பொருளிலக்கணம் தமிழுக்கேயுரியது.

எனவே அவ்விலக்கணத்துடன் பொருந்த எழுந்த செய்யுட்களெல்லாமும் தமிழுக்குரியன வென்பது கூறாதேயமையும்.

இவ்வுண்மை யுணர்வார்க்குத் தமிழானது வேறெம்மொழிக்கும் கடமைப்பட்டிராத "தனிச் செம்மொழி" யென்பது புலப்படும்.

உணராதாரே பலவாறு பிதற்றாநிற்பர்!

Geetha Sambasivam

unread,
Sep 18, 2011, 8:33:49 PM9/18/11
to mint...@googlegroups.com
அனைவரின் மேலான கருத்தை எதிர்நோக்கி.............

2011/9/19 Kannan Natarajan <thar...@gmail.com>
360.gif

Kannan Natarajan

unread,
Sep 25, 2011, 8:44:50 PM9/25/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 7:- தமிழில் வழங்கும் வடமொழி இலக்கணம்!






                                                               அ.கி.பரந்தாமனார்

வடமொழிச் சந்திகள்:

தமிழில் பல வடமொழித் தொடர்கள் வந்து வழங்குகின்றன. அவை பெரும்பாலும் அவ் வடநூல் புணர்ச்சியையே பெறும். தமிழில் வரும் வடமொழித் தொடர்களைப் பிழையின்றி எழுத இவற்றைத் தெரிந்து கொள்வது நன்று. 

புணர்ச்சியை வடநூலார், "சந்தி" என்பர்.

தமிழில் தீர்க்க சந்தி, குண சந்தி, விருத்தி சந்தி என்னும் மூன்று வடமொழிச் சந்திகள் வந்து வழங்குகின்றன. மிகுதியாக வழங்குபவை முதலிரண்டு சந்திகளே. இச்சந்தி முறை வடசொற்களுக்கே உரியது என்றறிக.   

1. தீர்க்க சந்தி
 தீர்க்க சந்தி மூன்று வகையாக வரும். 

(1) நிலைமொழியீற்றில் "அ" அல்லது "ஆ" இருந்து வருமொழி முதலில் "அ" அல்லது "ஆ" வந்தால் நிலைமொழியில் உள்ள உயிரும் வருமொழியில் உள்ள உயிரும் ஆகிய இரண்டும் கெடச் சந்தியில் ஓர் "ஆ" தோன்றும்.    ("ஆ" தோன்றுதல்) 

- குண+அனுபவம் = குணானுபவம் 
- சர்வ + அதிகாரி = சர்வாதிகாரி 
- அமிர்த + அஞ்சனம் = அமிர்தாஞ்சனம் 
- வேத + ஆகமம் = வேதாகமம் 
- சேனா + அதிபதி = சேனாதிபதி 

குறிப்பு:- பால் + அபிஷேகம் = பாலபிஷேகம். இத்தொடரைப் பாலாபிஷேகம் என்றெழுவது தவறு.   

(2) நிலை மொழியீற்றில் "இ" அல்லது "ஈ" இருந்து வருமொழி முதலில் "இ" அல்லது "ஈ" வந்தால், அவ்விரண்டும் கெட ஓர் "ஈ" தோன்றும்.    ("ஈ" தோன்றுதல்) 

- கவி + இந்திரன் = கவீந்திரன் 
- கிரி + ஈசன் = கிரீசன் 
- மஹீ + இந்திரன் = மஹீந்திரன் 
- நதீ + ஈசன் = நதீசன்   

(3) நிலைமொழியீற்றில் "உ" அல்லது "ஊ" இருந்து வருமொழி முதலில் "ஊ" வந்தால், அவ்விரண்டும் கெட ஓர் "ஊ" தோன்றும்.    ("ஊ" தோன்றுதல்) 

- குரு + உபதேசம் = குரூபதேசம் 
- சுயம்பு + ஊர்ஜிதம் = சுயம்பூர்ஜிதம் (சிவநிலை)   

2.குண சந்தி
:-

(1) நிலைமொழியீற்றில் "அ" அல்லது "ஆ" இருந்து வருமொழி முதலில் "இ" அல்லது "ஈ" வந்தால், அவ்விரண்டும் கெடச் சந்தியில் "ஏ" தோன்றும்.    ("ஏ" தோன்றுதல்) 

- ராஜ + இந்திரன் = ராஜேந்திரன் 
- தேவ + இந்திரன் = தேவேந்திரன் 
- மகா + ஈஸ்வரன் = மகேஸ்வரன் 
- யதா + இச்சை = யதேச்சை (மனம்போன போக்கு) 
- கங்காதர + ஈஸ்வரர் = கங்காதரேஸ்வரர்   

(2) நிலைமொழியீற்றில் "அ" அல்லது "ஆ" இருந்து வருமொழி முதலில் "உ" அல்லது "ஊ" வந்தால், அவ்விரண்டும் கெடச் சந்தியில் ஓர் "ஓ" தோன்றும்.    ("ஓ" தோன்றுதல்) 

- சர்வ + உதயம் = சர்வோதயம் 
- சூரிய + உதயம் = சூரியோதயம் 
- சந்திர + உதயம் = சந்திரோதயம் 
- சக + உதரன் = சகோதரன் (உடன் பிறந்தவன்) 
- ஞான + உதயம் = ஞானோதயம்   

3. விருத்தி சந்தி:-

(1) நிலைமொழியீற்றில் "அ" அல்லது "ஆ" இருந்து வருமொழி முதலில் "ஏ" அல்லது "ஐ" வந்தால், அவ்விரண்டும் கெட ஓர் "ஐ" தோன்றும்.  ("ஐ" தோன்றுதல்

- லோக + ஏகநாயகன் = லோகைகநாயகன் 
- சர்வ + ஐஸ்வர்யம் = சர்வைஸ்வர்யம் 
- தேவதா + ஐக்கம் = தேவதைக்யம் 
- தேவதா + ஏகத்வம் = தேவதைகத்வம்   

(2) நிலைமொழியீற்றில் "அ" அல்லது "ஆ" இருந்து வருமொழி முதலில் "ஒ" அல்லது "ஒ
" இருந்தால், அவ்விரண்டு கெட ஓர் "ஒள" தோன்றும். ("ஒள" தோன்றுதல்

- வந + ஓஷதி = வநெ
ஷதி  (காட்டு மூலிகை) 
- பரம + ஒ
ஷதம் = பரமெஷதம் 
- மகா + ஓஷதி = மகெளஷதி   

உபசர்க்கங்கள்:-
 

உபசர்க்கம் என்பது வடமொழியில் வினைச்சொல்லுக்கு முதலில் சேர்ந்து வருவது. தமிழ் உபசர்க்கங்கள் மிகமிகச் சில. வடமொழி உபசர்க்கங்கள் தமிழில் வந்து வழங்குகின்றன. அவற்றைத் தெரிந்து கொள்வது பிழையின்றி எழுதுவதற்கும் பொருள் தெரிந்து கொள்வதற்கும் பயன்படும்.   

தமிழ் உபசர்க்கம்:
-  தலை, கை - தலை சிறந்த, கைக்கொள்.   

வடமொழி உபசர்க்கம் - (இன்மைப்பொருள் தருவன):- 

அப, அவ, நிஷ், நிர், வி. 

- அப = அபகீர்த்தி 
- அவ = அவமானம் 
- நிஷ் = நிஷ்காரணம், நிஷ்காமிய கர்மம் 
- வி = விரக்தி (ரக்தி-பற்று; விரக்தி-பற்றின்மை)   

பற்பல பொருள் தருவன:- 

- அதி - மேல், மிகுதி = அதிரூபம், அதிவிநோதம் 
- அதோ - கீழை = அதோமுகம், அதோகதி 
- அநு - பின், கூட = இராமாநுஜன், அநுகூலம் 
- அபி - மிகுதி = அபிவிருத்தி 
- உப - துணை = உபகரணம் (துணைக்கருவி) 
- கு - அற்ப, வீண், இழிவான = குக்கிராமம், குதர்க்கம், குலேசன். 
- சக - கூட = சகவாசம் 
- சம் - கூட = சம்பந்தம்  சம் - நல்ல = சம்பாஷணை 
- சன், சு - நல்ல = சன்மார்க்கம், சுமதி. 
- துர் - கெட்ட = துர்க்குணம், துர்மந்திரி, துராலோசனை (துன்மந்திரி, துன்மார்க்கம் என்பவை தவறுகள்). 
- பரி - முழுதும் = பரிபூரணம், பரிபாலனம். 
- பிரதி - பதில், திரும்ப = பிரதியுபகாரம், பிரதிபிம்பம். 
- வி - வேறு, மேலான = விதேசி, விநாயகன் (விநாயகன் - மேலான நாயகன்) வினாயகன் என்று எழுதுவது தவறு).   

தந்திதாந்த நாமங்கள்
:-

வடமொழியிலுள்ள "தந்திதாந்த நாமம்" தமிழ் மொழியில் வந்து வழங்குகின்றது. தந்திதாந்த நாமம் என்பது, பெயரினின்று தோன்றிய பெயர் (தத் + ஹித + அந்த + நாமம்). 

1. முதலில் அகரத்தையுடைய சொற்கள் ஆகாரமாகத் திரிந்து வரும். 

- தசரதன் - தாசரதி (தசரதன் மகன்-இராமன்) 
- பகீரதன் - பாகீரதி - கங்கை (பகீரதனால் கொண்டு வரப்பட்டது). 
- பரதன் - பாரதம் - இந்தியா (பரதனால் ஆளப்பட்டது பாரதம்) 

2. முதலில் ஆகாரத்தையுடைய சொற்கள் முதல் திரியாமலேயே வரும்.

- சாரதி - சாரத்யம். 

3. முதலில் இகர ஈகாரத்தையுடைய சொற்கள் ஐகாரமாகத் திரிந்து வரும். 

- மிதிலா - மைதிலி (சீதை) 
- தீரம் - தைர்யம் 

4. முதலில் உகர ஊகாரத்தையுடைய சொற்கள் ஒ
காரமாகத் திரிந்து வரும். 

- சுகம் - செளக்யம் 
- சுந்தரம் - செளந்தர்யம் 
- சூரம் - செளர்யம் 

5. முதலில் ஏகாரத்தையுடைய சொற்கள் ஐகாரமாகத் திரிந்து வரும். 

- ஏகம் - ஐக்யம் 
- வேதம் - வைதிகம் 

6. முதலில் ஓகாரத்தையுடைய சொற்கள் ஒ
காரமாகத் திரிந்து வரும். 

- லோகம் - லெளகிகம் 
- கோசலம் - கெளசலை

Geetha Sambasivam

unread,
Sep 26, 2011, 9:01:55 AM9/26/11
to mint...@googlegroups.com
நன்றி. பயனுள்ள தொகுப்பு.

2011/9/26 Kannan Natarajan <thar...@gmail.com>
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 7:- தமிழில் வழங்கும் வடமொழி இலக்கணம்!





- லோகம் - லெளகிகம் 
- கோசலம் - கெளசலை


நன்றி:- தினமணி

--

Kannan Natarajan

unread,
Oct 8, 2011, 8:17:34 PM10/8/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 8:- தமிழில் பிறமொழிச் சொற்கள்!





                                       குருதேவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்

கொடுக்கல், வாங்கல் உயிருள்ள மொழிகள் வழக்கில் இருக்கும்போது கொடுக்கல், வாங்கல் இருக்கவே செய்யும். பல பொருள்கள் ஒரு மொழி பேசுபவரிடையே சிறந்திருக்கும். அவற்றை மற்றொரு மொழி பேசுவோர் பயன்படுத்த வருவது உலக இயற்கை. ஆங்கிலேயர் வழியாக "மோட்டார் கார்" நம் நாட்டிற்கு வந்தது; அதனோடு "கார்" என்ற சொல்லும் தமிழுக்குள் நுழைந்தது. எனவே கொடுத்தும், வாங்கியும் வாழ்வது மக்கள் பண்பாட்டு வளர்ச்சியையே காட்டுகிறது.

வடமொழி "மயில்" இந்திய நாட்டுப் பொருள். திராவிட மொழியைச் சேர்ந்த சொல். இது தெய்வீகம் என்று கருதப்படுகின்ற வடமொழியிலும் மயூரம் எனப் போய்ப் புகுந்ததும் இயல்புதானே! இந்திய - ஐரோப்பிய மொழியில் இதற்கு ஒரு பெயர் அப்போது இருந்ததில்லை. மயிலின் அழகில் சொக்கியவர்கள் இதன் பெயரையும் கேட்டு மகிழ்ந்து அதனையே தம் மொழியிலும் வழங்கினார்கள். இப்படியே இன்னும் எத்தனை, எத்தனையோ மொழிகள் வடமொழியில் போயுள்ளன. அப்போது வடமொழியில் இருந்தும் உயிருள்ளவையாய் வழக்கில் இருந்த சொற்கள் தமிழில் வந்துதானே வழங்கும்!

இந்திய மத ஒருமைப்பாடு எழுந்தபோது இவ்வாறு பல சொற்கள் பொதுச் சொற்களாக ஆகிவிட்டன. புத்தர், அருகர் முதலியோர் கொள்கைகள் தமிழ் நாட்டில் பரவியபோது இந்தக் கொள்கையில் பழகிவந்த சொற்கள் தமிழ் மொழியில் எத்தனையோ வந்துவிட்டன.

புத்தர் என்ற பெயர் தமிழல்ல என்று தள்ள முடியுமா?

இவையெல்லாம் சங்க காலத்திலேயே தமிழில் புகுந்துள்ளன. தமிழிற் புகுந்த வடசொற்களை எண்ணி முடியாது. இரண்டாயிரத்துக்கு மேல் இருக்கும் தொடர்களை இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

முண்டாவடமொழி - இந்த நாட்டிற்கு வருவதற்கு முன்பு "முண்டா" இனத்து மொழிகள் இந்தியாவில் வழங்கியிருத்தல் வேண்டும். அம்மொழிகளைப் பேசுவோரோடு தொடர்புகொள்ள வந்தபோதெல்லாம் ஒருசில சொற்களேனும் அவர்களிடமிருந்து தமிழில் நுழையாதிருக்க முடியுமா?

- வழுதுணங்காய்
- தவளைக்காய்
- மீசை

முதலியன அத்தகையன என்று கருதுகிறார்கள்.

இளநீர் என்று சொல்லுகிறோமே அந்தப் பெயரை எண்ணிப் பார்த்தோமோ?

இளந்தேங்காய் என்பதுதானே அதன் பொருள்.

அப்படியானால் "நீர்" என்பது தேங்காயை அல்லவா குறிக்க வேண்டும்.

அப்படி, தேங்காய் என்ற பொருளிலேயே "நீர்" என்ற சொல் "முண்டா" மொழியில் வழங்குகிறது.

கீழை நாடுகள்பிற நாட்டினரோடும் நம்முடைய தமிழ்நாடு பழங்காலத்திலிருந்து உறவு கொண்டாடியது. கீழைத் தீவுகளிலிருந்து பல நறுமணப் பொருள்கள் நம் நாட்டில் வந்து நம் மக்கள் மனத்தையும், மூக்கையும் கவர்ந்தன.

தக்கோலி, அருமணவன் முதலியவை அந்நறுமணப் பொருள்களில் ஒருசில. இவை, தாம் விளையும் இடத்தின் பெயரையே தம் பெயராகக் கொண்டவை என்று அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டுகிறார். இவற்றை எப்படி ஒழித்துத் தள்ளுவது?

நாம் நம்முடைய பண்பாட்டை அங்கெல்லாம் பரப்பினோம் என்பதற்கு நிலையான சின்னங்களாக அங்கிருந்து வந்த சொற்கள் இன்றும் விளக்குகின்றன. நாம் மிகமிக இன்று விரும்பிச் சுவைக்கும் முருங்கைக்காய் சாம்பாரில் விளங்கும் "முருங்கை", சிங்களவர்கள் நமக்குக் கொடுத்த அன்பின் காணிக்கை.

இப்படி வாங்கிக் கொள்வதற்கு ஈடாக எவ்வளவு மொழிகளை அவரவர்கட்குக் கொடுத்திருக்கிறோம்.

சீனர்களோடு நமக்குத் தொடர்பு உண்டு. படகு வகையைச் சேர்ந்த "சம்பான்" சொல்லும், பெரிய மண்கலத்தைக் குறிக்கும் "காங்கு" என்ற சொல்லும், "பீங்கான்" என்ற சொல்லும் நாம் விரும்பும் சீனப்பட்டைப்போலச் சீன நாட்டிலிருந்து வந்தவையே ஆகும்.

கிரேக்கர், நம்முடைய "தந்தமும், முத்தும்" மேனாட்டிற்குப் போனதுபோல, கிரேக்க மொழிச் சொற்களும் தமிழில் வந்துள்ளன. சாட்டையைக் குறிக்கும் "மத்திகை" என்பதும், தரைக்குள்ளே செல்லும் வழியைக் குறிக்கும் "சுருங்கை" என்ற சொல்லும், "கன்னல்" என்ற நாழிவட்டிலின் பெயரும், இரண்டரை நாழிகையைக் குறிக்கும் "ஓரை" என்பதும் கிரேக்கச் சொற்களேயாம்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் 891 அரபிச் சொற்கள் வந்துள்ளன. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சொற்களும் இவற்றில் நிறைய வருகின்றன. வசூல், தபா (முறை),
ரஜா, இமாம், இலாகா, பிஸ்மில்லா, உருசு, காயம் (உறுதி), ஜேப்பி, சைத்தான், தகவல், தாக்கீது, தவாலி, நகரா, மக்கர், மால் (மகால்) முதலிய பல சொற்கள் அன்றாடப் பேச்சில் புகுந்து தமிழோடு தமிழாய் வழங்குகின்றன.

பாரசீகம், முகமதிய அரசு தமிழ்நாட்டிலும் பரவியபோது ஏறக்குறைய 65 சொற்கள் பாரசீகத்திலிருந்து தமிழிற் புகுந்துள்ளன. இவற்றில் சில - சுபேதார், முலாம் முதலியவை அரபியிலிருந்து வந்தவை.

"துப்பாக்கி" என்பது துருக்கிய மொழியிலிருந்து பாரசீக மொழி வழியாகத் தமிழ்நாட்டில் புகுந்தது.

சிப்பந்தி, தாவாலி, தம் பிடித்தல், தர்கா, நாஸ்தா, மஜா, மாலீசு, மோரை, லங்கர், லுங்கி, ஜமுக்காளம், ஜன், சால் (வை), ஜோக்கு, சர்க்கார் முதலியவை தமிழாகவே ஆகிவிட்டன.

"சுமார்" என்ற சொல்லைத் தமிழென்றே பலர் கருதுகிறார்கள். ஆனால் அது பாரசீகச் சொல்.

உருது, தென்னிந்தியாவில் முஸ்லீம்கள் ஆண்டபோது தெக்காணி உருது அவர்களால் ஓங்கியது. இதன் பயனாக 961 உருதுச் சொற்கள் தமிழில் வந்துள்ளன. இங்கே நாம் உருது மொழியை இந்தியிலும் வேறாகக் கொள்ளவில்லை.

அக்கப்போர், அக்கரகாரம், அக்கு, சல், ஆசாமி, ஆசாரவாசல், அண்டா, அணா, அபினி, அம்பர், அம்பாரம், அம்பாரி, அமுல், அலக்கலக்காக, அலாதி, அமீன், இந்துஸ்தான், ராஜினாமா, ராட்டினம், லங்கோடு, இனாம், ஊதா, ஊதுவத்தி, ஐவேஜு, கச்சா, கச்சேரி, கஜானா, கசகசா, கசாப்பு, குத்தகை, குலாம், சந்தா, சப்பரம், சர்க்கா, சராசரி, சாமான் முதலிய எத்தனையோ சொற்களை ஒவ்வொரு நாளும் பேசி வருகிறோம்.

போர்த்துக்கீசியம், மேல் நாட்டார் 15ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழ்நாட்டில் தலைகாட்டத் தொடங்கினார்கள். முதலில் வந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். அவர்கள் கொண்டுவந்த பொருள்களில் பலவற்றின் பெயர் இன்று "பறங்கி" என்ற முந்து நிலையோடு வழங்குகின்றன.

பறங்கிக்காய், பறங்கிச்சக்கை, பறங்கிப்பட்டை, பறங்கிமா முதலியவற்றில் காண்க.

ஊர்களின் பெயரிலும் போர்த்துக்கீசியத் தொடர்பைப் பறங்கிமலை, பறங்கிப்பட்டை முதலியவற்றில் காணலாம்.

அலமாரி, கோப்பை, ஜன்னல், அன்னாசி, கடுதாசி, அல்பனாத்தி, கிராத்தி, கொரடா, த்ராவி, பாதிரி, பீப்பாய், மேசை, மேஸ்திரி, வராந்தா முதலிய சொற்கள் போர்த்துக்கீசிய மொழியிலிருந்து வந்தவையே.

ஆங்கிலத்திலிருந்து வந்ததாகச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி கூறும் சொற்களில் பிஸ்கோத்து, புனல், பொத்தான் முதலியன போர்த்துக்கீசிய மொழியின் உச்சரிப்போடு ஒத்துள்ளன.

டச்சும், பிரெஞ்சும் அவர்களுக்குப்பின் டச்சுக்காரர்கள் வந்தார்கள். இவர்கள் வழியாகத்தான் கக்கூஸ், சாக்கு, துட்டு, பம்பிளிமாஸ் முதலிய சொற்கள் தமிழுக்குள் புகுந்தன.

பின்னே ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் வந்தார்கள். 23 சொற்கள் பிரெஞ்சிலிருந்து தமிழில் வந்த கதையைப் பல்கலைக்கழக அகராதி வெளியிடுகிறது.

ஆசு, குசினி டாக்குத்துரை, பீரோ, லாந்தர் முதலியவை பிரெஞ்சு மொழியிலிருந்து நாம் பெற்ற பேறுகள்.

ஆங்கிலம், பல்கலைக்கழக அகராதி 219 சொற்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் வந்தனவாகக் குறிக்கிறது. ஆனால், இன்று மாணவர்கள் பேசும் பேச்சில் இவற்றைவிட எத்தனையோ மடங்கு ஆங்கிலச் சொற்கள் வழங்கி வருகின்றன.

ஆடுதன், ஆர்மோனியம், இஞ்சினியர், உயில், ஊக்கு, ஏக்கர், ஓட்டல், ஒயின், காப்பி, காரட்டு, கிறிஸ்துமசு, கிளாவர், கோச்சு, கோட்டு, சம்மன், சவரன், சிமிட்டி, சினிமா, சீல், மோதிரம், டாலர், டை, தார், நம்பர், பவுண்டு, பாங்க், பிராந்தி, பேப்பர், போலீஸ், மைல், மைனர், மோட்டார், வெல்வெட்டு, லீவு முதலிய பல சொற்கள் இன்றியமையாத தமிழ்ச் சொற்கள் ஆகிவிட்டன.

மராத்தியர்கள் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் சிலகாலம் ஆண்டார்கள். அவர்கள் விரும்பிய உணவு வகைகள், உடை வகைகள் முதலியன இன்றும் நமக்கு இனிக்கின்ற சொற்களாக வழங்குகின்றன.

அட்டவணை, கைலாகு, கச்சாயம், அபாண்டம், காமாட்டி, கில்லாடி, குண்டான், கேசரிபாத், கோகும்பரி, சாம்பார், சவுக்கார், சாவடி, சேமியா, பட்டாணி, பேட்டை, லாவணி, ரசவாங்கி, வில்லங்கம், சொஜ்ஜி முதலிய பல சொற்கள் மராட்டியர் வளர்ந்த பண்பாட்டை இன்னும் பேசி வருகின்றன. இந்த வகையில் 60க்கு மேற்பட்ட சொற்கள் வழங்குவதாகப் பல்கலைக்கழக அகராதி கணக்குக் கொடுக்கிறது.

கன்னட மொழியிலிருந்து 38 சொற்கள் தமிழில் வந்த கதையைப் பல்கலைக்கழக அகராதி பாடுகிறது.

அட்டிகை, இதா, எகத்தாளம், எட்டன், சமாளித்தல், ஒரு "சிறை", அரிசி, சொத்து, பட்டாக்கத்தி, பம்பு (மூங்கில்), பீக்கலாட்டம் முதலானவை கன்னடச் சொற்களேயாம்.

தெலுங்கு, பல்கலைக்கழக அகராதியின்படி 335 சொற்கள் தெலுங்கிலிருந்து தமிழில் வந்துள்ளன.

அக்கடா, அந்தரங்க வைபவம், அட்டி, அண்ணு, டாப்பு (அட்டவணை), இண்டிமாமா, ரெட்டி,
ரவிக்கை, ராயசம், காவடம், ரேக்கு, லஞ்சம், லாகிரி, உத்தி, உப்பசம், உம்மச்சு, ஒட்டாரம், ஒயில், கட்டடம், கட்டப்பாறை, கந்தை, கண்ணராவி, கபோதி, கம்பந்தம், கம்பல், கரிசை, கலப்படம், கவுனி, காட்டம் (காரம்), குப்பம், கும்பு, கெடுவு, கொப்பி (கும்பி), கொலுசு, சந்தடி, சலவை, ஜளிப்பு (ஜலதோஷம்), சிட்டிகை, சிமிளி, உருண்டை, சுங்கு, ஜண்டை(சதை), சொக்கா, சொட்டு, சவுத்தி, த்ராபை, தடவை, திப்பி, திமிசு, தும்பு, தெப்பல் (அடி), தெலுங்கு தொட்ட(பெரிய), தோவத்தி(வேட்டி), நீச்சு (மீன்நாற்றம்), பட்டறை, பண்டைப் பேச்சு, பலப்பம், பவிசு, வாணலி, பால்மாறுதல், பிருடை, பூஞ்சைக் காளான், வெல்தி, ஜப்பை, ஜாஸ்தி, சந்து, சுளுவு முதலியன எல்லாம் தமிழ் நாட்டிற்கு வந்த ரெட்டிமாரோடும், நாயக்கர்மாரோடும், தெலுங்கு நாட்டுப் பார்ப்பனரோடும் தமிழ் நாட்டில் குடியேறிய சொற்கள்.

மலையாள மொழி திராவிட மொழி இனத்தைச் சேர்ந்தது.

கச்சவடம், காலன், கொச்சி, சொக்கன் (குரங்கு), தளவாடம், நெரியல், பிரதமன் (பாயாசம்), வஞ்சி முதலியன மலையாளத்திலிருந்து வந்த சொற்கள். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி 26 சொற்கள் மலையாளத்திலிருந்து தமிழில் வந்திருக்கின்றன என்று காட்டுகிறது.

வீண் ஆரவாரம்:-

தமிழில் இல்லாத சொற்கள் மேலே கண்டபடி எல்லாம் வருவதைத் தடுக்க முடியாது. ஆனால், நல்ல தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது அதை விட்டுவிட்டு ஆங்கில அறிவையோ, வடமொழி அறிவையோ காட்டுவதற்காக மட்டும் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவது கேலிக்கூத்தாகும்.

தண்ணீர் இருக்கும்போது ஜலம் என்று சொல்வானேன்?

ஆனால், தெய்வீக நீர் என்று உணர்த்தத் "தீர்த்தம்" என்று சொல்வதில் பொருளுண்டு. இடத்திற்கு ஏற்றபடி சில சொற்களை எந்த மொழியிலிருந்து வந்தனவென்று பாராமலே பயன்படுத்துவது ஓர் அழகாகலாம்.

"பயம்" என்பது வடமொழிச் சொல்தான்; ஆனால், ஆழ்ந்த நிலையைக் குறிக்காமல் குழந்தையின் பொருளற்ற பயத்தையும் குறிக்கலாம். ஆகவே ஆழ்ந்த நிலையைக் குறிக்க பாரதியார் பயத்தையும் "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்று பாடினார். அந்த ஆழ்ந்த நிலையைக் குறிக்காதபோது "ஜயமுண்டு பயமில்லை மனமே" என்றே பாடினார்.

எனவே, வடமொழிச் சொல்லாக இருந்தாலும், தூய தமிழ்ச் சொல்லாக இருந்தாலும் இடமறிந்து பயன்படுத்தும் அழகை நாம் உணர வேண்டும்.

ஆனால், பொதுமக்களுக்கு என்று எழுதும் நூலில் நிறைய பிறமொழிச் சொற்களே இருக்குமானால் அவர்களுக்கு என்ன விளங்கும்?

கல்லூரிப் பாடநூல்கள் வேறு; பொதுமக்கள் படிக்கும் நூல்கள் வேறு; பொதுமக்களுக்கு அவர்கள் அறிந்த சொற்களைக் கொண்டே தெளிவாக எழுதி விளக்க வேண்டும். இங்கே மணிப்பிரவாளம் பயன்படாது. இதனாலேயே இந்த நாட்டுப் பழைய மணிப்பிரவாள நடை வேர் கொள்ளாது மறைந்து விட்டது.

இலத்தீனில்தான் கருத்துக்களைத் தெரிவிக்க முடியுமென்று நியூட்டனும் எழுதினார். இப்போதோ அந்த நிலை மாறி ஆங்கிலத்தில் எழுதும் காலம் வந்துள்ளது. அந்த நிலை தமிழில் ஓராண்டு ஈராண்டில் வராது. கற்றவர்கள் பொதுமக்களுக்காக எழுதும்போது இந்த நிலை படிப்படியாக வளரும். அது வரையிலும் ஆங்கிலத் - தமிழ் மணிப்பிரவாள நடை வழக்கத்தில் இருந்து கொண்டுதான் வரும்.

Kannan Natarajan

unread,
Oct 8, 2011, 8:34:27 PM10/8/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 9:- "தமிழ்"

வடலூர் இராமலிங்க அடிகள் தமிழ், வடமொழி மற்றும் பல மொழிகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இராமலிங்க அடிகளார் சென்னையில் இருந்தபோது ஒருமுறை காஞ்சி மகா பெரியவரைச் சந்தித்து உரையாட நேர்ந்ததாம். அந்த உரையாடலில் உள்ள சம்ஸ்கிருத சொற்களை மட்டும் தமிழாக்கித் "தமிழ்" என்ற தலைப்பில் வெளியான, "ஜோதி வழியில் வள்ளலார்" என்ற நூலிலிருந்து...

தமிழ் என்பது ஒரு சாதாரண வெறும் சொல் அல்ல. அது பஞ்சாட்சர மந்திரச் சொல். பஞ்சாட்சரம் என்றால், ஐந்து அட்சரங்களை, அதாவது ஐந்து எழுத்துக்களை உடையது. தமிழ் என்ற சொல்லில் த்-அ-ம்-இ-ழ் என்ற ஐந்து எழுத்துக்கள் இருக்கின்றன. இதனால்தான் "தமிழ்" ஒரு பஞ்சாட்சரம் என்று சொல்கிறோம். த், ம், ழ் என்ற மூன்று எழுத்துக்களும் மெய்யெழுத்துகள். அ, இ என்ற இரண்டு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள்.

"ஓம்" என்ற பஞ்சாட்சரம் இரண்டு எழுத்துக்களைக் கொண்டதுபோலத் தோன்றினாலும், அது உண்மையில் ஐந்து எழுத்துக்களை உடையது. இதில் உள்ள ஐந்து எழுத்துக்கள் என்னென்ன?

உ-அ-ம்-ஒளி-ஒலி என்ற ஐந்து எழுத்துக்களால் ஆனது "ஓம்" என்ற பஞ்சாட்சர மந்திரம். "அட்சரம்" என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு "அழியாதது" என்று பொருள். ஓர் எழுத்தின் வரி வடிவம் மாறக்கூடியது. ஆனால், அந்த எழுத்தின் ஒலி வடிவமோ காலத்தால் மாறாதது-அழியாதது-நிலைபெற்றது.

அ-உ-ம் என்ற எழுத்துக்களைப்போல ஒளியும் ஒலியும் எழுத்துக்களா?

என்ற சந்தேகம் எழலாம்.

வரிவடிவத்தில் எழுதுவது மட்டும் எழுத்தல்ல. ஒலியாகவோ, ஒளியாகவோ ஓங்கு எழுவதும் எழுத்துத்தான். இங்கு எழும் ஒளியும், ஒலியும் அழியாதவை; எல்லை காணாதவை; முடிவற்றவை. முடிவற்ற இந்த ஒளியும், ஒலியும் ஓங்கி எழும் ஆற்றல் உள்ளதால் அவையும் அட்சரங்களாய் அழியாத எழுத்துக்களாக ஆகின்றன.

இந்த "ஓம்" என்ற பஞ்சாட்சரத்தில் அந்த இரண்டு எழுத்துக்களும் சேர்ந்து எண்ணப்படுகின்றன.

"இ" என்ற உயிரெழுத்து "அ" என்ற உயிரெழுத்தை எப்போதும் விட்டுப் பிரியாமல் இருப்பது. "அ" என்று வாயைத் திறந்து உச்சரிக்கும்போதுதான் "ஆ" என்ற உயிரெழுத்து எழுகிறது. "அ" என்று வாயைத் திறந்த நிலையிலேயே "இ" என்று பல்லைக்காட்டி உச்சரித்தால் "இ" என்ற உயிரெழுத்தும் எழுந்து ஒலிக்கும். எனவே, "அ" என்ற உயிரெழுத்தும் "இ" என்ற உயிரெழுத்தும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதவை.

"அ" என்ற உயிரெழுத்து கடவுளின் செயலைக் குறிக்கும். "இ" என்ற உயிரெழுத்து உயிர்களின் செயலைக் குறிக்கும். உயிர்கள் எப்போதும் இறைவனுடன் இணைந்தே செயல்படுகின்றன. அதுபோல் "இ" என்ற எழுத்தும் "அ" என்ற எழுத்துடன் எப்போதும் இணைந்தே செயல்படும்.

"தமிழ்" என்ற சொல்லில் உள்ள மூன்று எழுத்துக்களாகிய த், ம், ழ் என்பவை அ, இ முதலிய உயிரெழுத்துக்களுக்கு உடலைப்போல இருக்கின்றன. "மெய்" என்றால் உடல் என்று பொருள். "உயிர் விளக்கம்" பெறுவதற்கு கடவுள் ஆதாரமாக இருக்கிறார். அதைப்போல "உடல் விளக்கம்" பெறுவதற்கு உயிர் ஆதாரமாக இருக்கின்றது. மெய்யெழுத்துக்கள் விளக்கம் பெறுவதற்கு உயிரெழுத்துக்கள் ஆதாரமாகின்றன. அதாவது, மெய்யெழுத்துக்களை உயிரெழுத்துக்களின் துணையின்றி உச்சரிக்க முடியவே முடியாது. மேலே சொன்ன மூன்று மெய்யெழுத்துக்களுக்கும் விரிவான விளக்கத்தைப் பார்க்கலாம்.

- "த்" என்பது 7வது மெய்யெழுத்து
- "ம்" என்பது 10வது மெய்யெழுத்து
- "ழ்" என்பது 15வது மெய்யெழுத்து

"தமிழ்" என்ற சொல்லில் உள்ள "த" என்ற உயிர்மெய்யெழுத்து "த், அ" என்ற இரண்டு எழுத்துக்களும் இணைந்து சேர்வதால் உருவாகிறது. "த்" என்ற மெய்யெழுத்து பதினெட்டு மெய்யெழுத்துக்களின் வரிசையில் ஏழாவதாக அமைந்திருக்கின்றது. தத்துவ உருவம் முதலிய தச காரியங்களில் அதாவது, பத்துக் கட்டளைகளில் இது ஏழாவதாக உள்ள "சிவ உருவம்" என்ற கட்டளையாகும்.

தத்துவ உருவம், தத்துவ தரிசனம், தத்துவசுத்தி, ஆன்ம உருவம், ஆன்ம தரிசனம், ஆன்மசுத்தி, சிவஉருவம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் ஆகியவை பத்துக் கட்டளைகள்.

இவை உலகம், உயிர், இறைவன் ஆகிய இவற்றின் இயற்கை உண்மையை விளக்கும் கட்டளைகளாகும்.

"க்" முதல் "ன்" வரையில் உள்ள பதினெட்டு மெய்யெழுத்து வரிசையில் ஏழாவதாக இருக்கும் "த்" என்பது, இயற்கை உண்மையான "சிவ" உருவத்தைக் குறிக்கும். "த்" என்ற மெய்யெழுத்துடன் சேர்ந்திருக்கும் "அ" என்ற உயிரெழுத்து எங்கும் நிறைந்திருக்கும் அறிவு விளக்கத்தைத் தரும் "ஓம்" என்ற பஞ்சாட்சரத்தின் உட்பொருளை எடுத்துக்காட்டும் முதல் எழுத்தாகும்.

"அ" முதல் "ஒ
" வரையில் உள்ள பன்னிரெண்டு உயிரெழுத்துக்களின் வரிசையில் முதல் எழுத்து "அ" என்பது. இந்த "அ" என்ற எழுத்து மற்ற பதினோரு உயிர் எழுத்துக்களுக்கும் மூலகாரணமாய் உள்ளது.

இது, பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன், ஒளி, ஒலி, பரசிவம் வரையில் உள்ள நவநிலைகளுக்கும் மூலகாரணமாயுள்ள முழுமுதற் பொருளான இறைவனின் இயற்கை உண்மை உருவத்தைச் சுட்டிக் காட்டுவதாகும். எனவே, சிவ உருவம் என்ற தகர ஆகாசத்தில் சுத்த சிவமான அருட்ஜோதி இணைந்துள்ளது. இது பூரண இன்ப வடிவமாக இருக்கும் இறைவனைச் சுட்டிக்காட்டுவதாகும்.(தகராகாசம் என்றால் என்ன? "த" என்ற எழுத்தை எண்ணாக எழுதினால் அதற்கு ஆயிரம் என்று பொருள். ஆயிரம் இதழ்கள் உள்ள தாமரையுடன் ஒப்பிட்டு நமது மூளையைக் குறித்துப் பேசுவார்கள் சித்தர்கள். மூளைதான் அறிவு விளக்கம் தரும் இடம். இந்த இடத்தைத்தான் தகராகாசம் (தகர ஆகாசம்) என்று குறிப்பிடுகிறார் வள்ளலார்)

ஏழாவது கட்டளையாகிய சிவ உருவத்தைக் காண்பதற்கு எங்கும், எதிலும் இறைவன் கலந்து இருக்கிறான் என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்குத்தான் முடியும் என்பதை இந்த "த" என்ற உயிர்மெய்யெழுத்து குறிக்கிறது.

"மி" என்ற உயிர்மெய்யெழுத்து - ம், இ என்ற இரண்டு எழுத்துக்களும் சேர்வதால் உருவாகிறது. கடவுள் அனுபவம் பெற்றவர்களுக்கு ஒளி அளிக்கும் வடிவமாகவும், எப்போதும் இன்பம் தரும் "ஓம்" என்ற மந்திரச் சொல்லில் ஒரு மந்திர எழுத்தாகவும் "ம்" என்ற மெய்யெழுத்து இருக்கிறது. கடவுள் அனுபவம் பெறாதவர்களுக்கோ "
ம்"என்ற மெய்யெழுத்து தனித்து இருந்து இருள் வடிவத்துடன் தோன்றி துன்பத்தைத் தருகிறது.

ஊழிக்காலத்தின் முடிவில் அதாவது, உலகமே மறைந்து போகும் காலத்தின் முடிவில் "ம்" என்ற இந்த மெய்யெழுத்து அழிக்கும் சக்தி உடைய "ஓம்" என்ற மந்திரச் சொல்லாக, படைத்தல் முதலிய ஐந்தொழிலைப் பெற்று உலகம் உயிர் பெற்று எழும்போது "ம்" என்ற இந்த மெய்யெழுத்து "சிவபோகம்", என்ற பத்தாவது இறை உண்மைக் கட்டளையைப் பெற்று நிலைபெறுகிறது.

"இ" என்ற உயிரெழுத்து, உயிரெழுத்து வரிசையில் மூன்றாவதாக இருக்கிறது. இது உயிர்கள் மூன்று வகைப்படுவன என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. பொதுமக்கள், முயற்சியுடைய மக்கள், தெளிவுபெற்ற மக்கள் என்று மக்கள் மூன்று வகையாக இருக்கின்றனர். "இ" என்ற உயிரெழுத்து, உயிரெழுத்து வரிசையில் மூன்றாவதாக இருப்பதால், மக்களில் முதல் இருவகை மக்களையும் கடந்து தெளிவுபெற்ற மக்களாகிய மூன்றாவது பிரிவினரை "இ" என்ற உயிரெழுத்துக் குறிப்பிடுகிறது.

உயிரெழுத்து வகையில் மூன்றாவதாக உள்ள "இ" என்ற இந்த எழுத்து, மெய்யெழுத்து வரிசையில் பத்தாவதாக உள்ள "ம்" என்ற மெய்யெழுத்துடன் சேர்ந்து "மி" என்ற உயிர்மெய் எழுத்தாகிறது. பத்தாவது கட்டளையாகிய சிவபோகம் பெறுவதற்கு தெளிவுபெற்ற மக்கள் எல்லாருக்கும் உரிமை உண்டு என்பதை இந்த "மி" என்ற உயிரெழுத்து குறிப்பிடுகிறது.

"ழ்" என்ற மெய்யெழுத்து, மெய்யெழுத்து வரிசையில் பதினைந்தாவதாக இருக்கிறது. இது வளர்பிறையின் நிறைவைக் காட்டும் பெüர்ணமியை அதாவது, முழுநிலவைக் குறிக்கிறது. நமது பரதகண்டம் சிவபோக பூமி. இதில் உள்ள நாடுகள் ஐம்பத்தாறு என்று பெ
ராணிகத் தத்துவம் கூறும். அதில் தமிழ் நாடும் ஒன்று. தமிழ்நாட்டைத் தவிர மற்ற ஐம்பத்தைந்து நாடுகளில் உள்ள மொழிக்கு இல்லாத தனிச்சிறப்பு "தமிழ்" எழுத்துக்கே உரிய "ழ" என்ற எழுத்துக்கு உண்டு.

பதினெட்டு மொழிகள் என்
றும்; செந்தமிழ், கொடுந்தமிழ் என்றும்; இயல், இசை, நாடகம் என்றும்; இருக்கு, யஜுர், சாமம் என்றும் கூறுகின்ற மொழிகளும், சாத்திரங்களும் தருகின்ற அனுபவத்தை எளிதில் பெற்று அனுபவிப்பதற்கு வழிகாட்டும் மொழி தமிழ் என்பதை "தமிழ்" என்ற சொல்லில் உள்ள மூன்றாவது எழுத்தான "ழ்" எழுத்து குறிக்கிறது.

திருமூலர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய ஞானியர்கள் தமிழில் இயற்றியுள்ள தோத்திரங்களான திருமந்திரம், தேவாரம், திருவாசகம் ஆகியவை கடவுள்
ரகசியத்தை மிக எளிதாக மக்கள் உணர்வதற்கு வழி காட்டுகின்றன. சமஸ்கிருதமோ பலநாள் பல வகையில் முயன்று அரிதில் அழியக் கூடியது. பலநாள் மிக உழைத்து ஓதினாலும் சமஸ்கிருதம் பாடம் (மனப்பாடம்) ஆவது மிகவும் கடினமாகும். அத்தகைய சமஸ்கிருதம், மராட்டியம், ஆந்திரம் போன்ற மொழிகளைப்போல் ஆகாமல், பெரும்பாலும் கற்பதற்கு எண் அளவு சுருக்கமாகவும், ஒலி லேசாகவும், கூட்டு என்னும் சந்தி மிக சுலபமாகவும் உள்ளது தமிழ்.

எந்த மொழிகளின் ஒலிகளையும் தன்னுள் அடக்கி ஆளுகின்ற ஆண் தன்மையை உடையது தமிழ். தனக்கென்றே சிறப்பாக அமைந்த ழ், ற், ன் என்னும் முடி, நடு, அடிச் சிறப்பியல் எழுத்துக்களையும் கொண்டது தமிழ். அவைகளில் முடிநிலை எழுத்தாகிய "ழ்" இன்ப அனுபவ சுத்தமெüனம் கடந்ததை சுட்டறச் சுட்டுவது. இயற்கை உண்மை தனித் தலைமையின் பெருமை சிறப்பியலில் ஒலியையும் உடையது.

தமிழ் என்னும் இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழிக்கு த்-அ-ம்-இ-ழ் என்ற ஐந்து அலகு நிலையும், உயிர், உடல் என்று இருவகைக் கலைநிலையும், த், ம், ழ் என்ற மூன்று மெய் நிலையும் அமைந்துள்ளன. அருள் ஆற்றல் நிரம்பிய ஞானிகளால் சுத்த சித்தாந்த முறைப்படி கடவுளின் கட்டளையால் முறைப்படி கற்பிக்கப்பட்டது தமிழ்.

எந்த மொழிகளுக்கும் "தந்தை மொழி" என்று ஆன்றோர்களால் போற்றிக் கொண்டாடப்பட்டது தமிழ். இடைவிடாமல் திருநடம் புரியும் இறைவனின் இன்பத்தை எளிதில் அடையும்படி செய்யும் அபூர்வ ஆற்றல் பெற்றது தமிழ்.

இதுவரையில் தமிழ் என்ற சொல்லுக்கு நான் சொன்ன விளக்கங்கள் சுத்த சித்தாந்த முப்பதவுரையாகும். மருட்சி தரும் இயற்கை ஆணவ இருளை தமிழ் அதற்கென்றே சிறப்பாக உள்ள ஆற்றலால் அருள் ஒலியாக மாற்றுகிறது.

"தமிழ்" என்னும் சொல்லில் அமைந்திருக்கும் அறிவுக் கலையைக்கொண்டு உயிர் தூய்மையைப் பெற்று உயர்கிறது. அது அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவ ஆனந்த நிறைவைப் பெறுகிறது. வானவெளியில் நடமிடும் அருட்பெருஞ்ஜோதியையும், ஞானவெளியில் நடமிடும் அருட்பெருஞ்ஜோதியையும் தமிழில் காணலாம். சொல்லுக்கு அடங்காமல் சுத்த மெ
னமாக இருந்து அனுபவிக்கும் இயற்கை உண்மைதான் தமிழ். தமிழ் என்ற சொல்லுக்கு இதுவரை கூறியது சுத்த சித்தாந்த முப்பதவுரைக்குப் பொழிப்புரை. தமிழ் என்ற சொல்லுக்குக் கருத்துரை, தமிழ் மொழிதான் மிகமிக எளிதாக சுத்த சிவ அனுபவத்தைக் கொடுக்கும் ஆற்றலை உடையது.

அருட்பிரகாச வள்ளலார்

N. Kannan

unread,
Oct 8, 2011, 8:49:28 PM10/8/11
to mint...@googlegroups.com
>
> சீனர்களோடு நமக்குத் தொடர்பு உண்டு. படகு வகையைச் சேர்ந்த "சம்பான்" சொல்லும், பெரிய மண்கலத்தைக் குறிக்கும் "காங்கு" என்ற சொல்லும், "பீங்கான்" என்ற சொல்லும் நாம் விரும்பும் சீனப்பட்டைப்போலச் சீன நாட்டிலிருந்து வந்தவையே ஆகும்.
>

கண்ணனாரின் சேகரங்கள் ‘கண்’ போன்றவை என்று சொல்லவும் வேண்டுமோ?

நேற்று கொரிய நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது புதிதாக எங்கள்
ஆய்வுக்குழுவிற்குள் நுழையும் ஏமானியப் பெண் ஆய்வாளர் கேட்டார், ஏன்
‘நான்கு’ எனும் கொரியச் சொல் அதிகப்பயன்பாட்டில் இல்லை அல்லது அதை அதிகம்
சொல்வதில்லை என்று கேட்டார்.

நான்கு எனும் எண்ணின் பலுப்பல் ‘மரணம்; எனும் சொல்லின் பலுப்பலை ஒத்து
இருப்பதால் அதை ‘அமங்கலமாகக்’ கருதுவதாக கொரிய நண்பர் சொன்னர்!

அந்த மூலச் சீன ஒலி என்ன?

“சா” என்பதே அது!

நாம் கூடத்தான் ‘சா’ செத்து ஒழி, நீ ஏண்டா இருக்கே? சாவேண்டா? என்று
வழக்கில் சொல்வதில்லையா?

’சா’(வு) எனும் தமிழ் சொல்லும், சீனச்சொல்லும் ஒன்று என்பது ஆச்சர்யமாக உள்ளது!

நா.கண்ணன்

Geetha Sambasivam

unread,
Oct 13, 2011, 10:20:20 PM10/13/11
to mint...@googlegroups.com
அருமையான விளக்கங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றி.

2011/10/8 Kannan Natarajan <thar...@gmail.com>
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 9:- "தமிழ்"

அருட்பிரகாச வள்ளலார்


நன்றி:- தினமணி

--

Kannan Natarajan

unread,
Oct 16, 2011, 2:12:24 AM10/16/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள்-10:- தமிழும், ஆரியமும்!



                                                   பேராசிரியர் சி.இலக்குவனார்

மக்கள் நன்மைக்காக மக்களாற் படைத்துக் கொள்ளப்பட்டவற்றுள் மாண்பு மிக்கு விளங்குவது மொழியொன்றே. மக்களை விலங்குகளினின்றும் வேறுபடுத்தி உயர்த்துவதும் மொழியே. மக்களை மக்களாக வாழச்செய்வதும் மொழியே. மொழியின்றேல் உலகில் ஒன்றுமே இன்று (இல்லை) எனக் கூறலாம். 

ஆரியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர், இமயம் முதல் குமரி வரை வழக்கில் இருந்த மொழி "தமிழ்"தான் என்பது நடுநிலை தவறாத ஆராய்ச்சியாளர் நூல்களால் அறியப்படும் உண்மையாகும். ஆரியம் தமிழோடு கொண்ட கலப்பின் பயனாகவே இன்று நம் பரதகண்டத்தில் உலவும் மொழிகள் உருவாகி வளர்ந்துள்ளன. ஆதலின், இந்திய மொழிகளின் தந்தையாக ஆரியத்தையும், தாயாகத் தமிழையும் ஆராய்ச்சியாளர் சிலர் உருவகப்படுத்திக் கூறுவர்.

ஆரியத்தைத் தந்தையென அழைத்து அதற்கு முதன்மை கொடுப்பதாக எண்ணி மகிழ்ந்தாலும், "இந்திய மொழிகளின் தாய் - தமிழ்" என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது; ஆரியமே இந்திய மொழிகளின் அன்னை என்ற கொள்கை உண்மைக்கு மாறுபட்டது என்பது வெளிப்பட்டுவிடுகின்றது. 

"சதுர்மறை ஆரியம் வருமுன் 
 சகமுழுது நினதாயின் 
 முதுமொழி நீ அநாதியென 
 மொழிகுவதும் வியப்பாமோ''. 

என்னும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூற்று, மொழிப்பற்று மிக்க புலவர் கூற்று எனப் புறக்கணித்துவிடல் இயலாது. பரதகண்டம் முழுவதும் பரவி வழங்கிவந்த பழந்தமிழோடு, ஆரியம் கலப்புற்றுப் பல்வேறு கிளைமொழிகள் உருவாகியுள்ளன. வடஇந்திய மொழிகள் தமிழ்க்குழு மொழிகளோடு வேறுபட்டன போல் தோன்றினும், தமிழ்மொழி அடிப்படையிலேயே அவை உருவாகி வளர்ந்துள்ளன என்பது நுணுகி ஆராய்வார்க்குத் தெள்ளிதிற் புலனாகும். 

"வடாது பனிபடு நெடுவரையும், தெனாது உருகெழு குமரிக்கடலும்'', எல்லைகளாகக்கொண்டு வழங்கிவந்த பழந்தமிழ், ஆரிய மொழிக் கலப்பால் சிதைவுண்டு காலப்போக்கில் பல்வேறு கிளைமொழிகளாகக் கிளைத்தது. ஆரிய மொழித்தன்மை மிகுந்துள்ள மொழிகள் "ஆரியக் குடும்ப மொழிகள்" எனவும், தமிழ்த்தன்மை மிகுந்த மொழிகள் "தமிழ்க் குடும்ப மொழிகள்" (திராவிடக் குடும்ப மொழிகள்) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆரிய மொழிகளும் அதனைச் சார்ந்துள்ள மொழிகளும் தமிழ்த் தன்மைகளை மிகுதியான அளவில் இன்றும் கொண்டு விளங்குகின்றன. அன்றியும் ஆரிய மொழி, எழுத்துக்களைப் படைத்துக் கொண்டதே அது தமிழோடு தொடர்பு கொண்ட பின்னர்தான் என்பது இருமொழி எழுத்துக்களையும் நுணுகி ஆராய்ந்தால் தெள்ளிதின் புலனாகும். 

இரு மொழிகளும் வேறுபட்ட இனத்தனவாயிருந்தும் இரண்டிலும் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒ
என்னும் பத்து உயிர்களும்; க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள என்னும் பதினைந்து மெய்யெழுத்துக்களும் ஒத்திருக்கின்றனவே!

எதனால் இவ்வொற்றுமை?

ஒன்றைத் தழுவி இன்னொன்று அமைத்துக் கொண்டாலன்றி இவ்வொற்றுமை ஏற்பட இயலாதன்றோ?

எதனைத் தழுவி எது அமைத்துக் கொண்டது? 

வடமொழியில் உள்ள ஐவ் வருக்கங்களை நோக்கினால், தமிழினைத் தழுவித்தான் ஆரியமொழி தன் எழுத்துக்களை அமைத்துக்கொண்டது என்பது புலனாகும். ஐந்து வருக்கங்களிலும் முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் இரண்டு மொழிகளிலும் ஒன்றே. இடையில் உள்ள மூன்று எழுத்துக்களும் ஆரியம் மிகுதியாகப் பெற்றுள்ளது. தமிழிலும் அவ்வொலிகள் உண்டு. ஆனால், அவ்வொலிகளைக் காட்டும் தனி வரி வடிவங்கள் இல்லை. கடன் பெற்ற கூர்த்த மதியுடைய ஆரியம், புதிய வரி வடிவங்களைப் படைத்துத் தன் நெடுங்கணக்கினை விரிவுபடுத்திக் கொண்டது; வரி வடிவக் குறைபாடற்ற மொழியாகிவிட்டதாகக் காட்டிக்கொண்டது. நன்றாகச் செய்யப்பட்டது "சமஸ்கிருதம்" - என்று தன்னை அழைத்துக் கொண்டது.  ஏன்?

தமிழ்மொழி ஆரியத்தைத் தழுவித் தன் நெடுங்கணக்கை அமைத்துக் கொண்டது என்று கூறினால் பொருந்தாதோ எனின், முற்றிலும் பொருந்தாது.

கடன் கொடுப்பான் ஒருவன் வேண்டியன பெற்றுக்கொள் என்று உரிமையளிக்குங்கால், குறைவாகப் பெறுவார் இருப்பாரோ?

இரார்.

அங்ஙனமே தமிழ் ஆரியத்தினின்றும் கடன் பெற்றிருக்குமேல் குறைபாடுடைய முறையில் கடன்பெறக் காரணம் இல்லை. ஆரிய நெடுங்கணக்கைப்போல் அமைத்துக் கொண்டிருக்கலாமே. தமிழினின்றும் உருமாறிப் பிரிந்த தெலுங்கு, மலையாளம் பிற்றை நாளில் அவ்வாறு செய்துகொள்ளவில்லையா?

ஆதலின் தமிழ் நெடுங்கணக்கைக் கண்டபின்னரே அமைத்துக்கொண்டது என்பதே சாலப் பொருந்தும்.  ஆரியர் இந்நாட்டுக்கு வந்த காலம் கி.மு.2000 முதல், 1500 வரை என்பார்கள். அக் காலத்திலேயே தமிழ்மொழி எழுத்துக்களைப் பெற்றிருந்த "செம்மொழி"யாகும். தமிழ் எழுத்துக்களைக் கண்டே ஆரியமும், பொனீஷியர் மொழியும், எகிப்தியர் மொழியும் எழுத்துக்களை அமைத்துக்கொண்டன என்று கூறுதலே பொருந்தும். இதற்கு மாறாகச் சிலர் கருதுவது உண்மைக்கு மாறானதாகும். 

குமரியொடு வடவிமயத்து ஒருமொழியாய் வழங்கி வந்த தமிழ், ஆரியத்தின் கலப்பால் பல மொழிகளாகப் பிரிந்தது. தொல்காப்பியர் காலமாம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு அளவில் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடையே தமிழ்", எனும் பெயருடன் தனியே நிலவியது.  குமரியென்று கூறப்படுவது இப்பொழுதுள்ள குமரிமுனை (கன்னியாகுமரி) அன்று எனவும், இலங்கைக்குத் தெற்கே பூமையக் கோட்டை ஒட்டியிருந்த குமரி மலையெனவும், குமரியாறெனவும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

அன்றுள்ள தமிழின் நிலையைத் தொல்காப்பியத்தின் துணைகொண்டு நன்கு அறியலாகும்.  தொல்காப்பியத்தின் நூற்பாக்கள் இருவகையாக அமைந்திருக்கக் காணலாகும்.

சில விதிகளைத் தொல்காப்பியர் தாமே கூறுவதுபோல் அமைந்திருப்பது ஒரு வகை;

பிறர் கூற்றினை மேற்கொண்டு கூறுவதுபோல் அமைந்திருப்பது இன்னொரு வகை.

தமக்கு முன்பு நிலவிய வழக்கைக் கூறுங்கால் பிறர் கூற்றாகவே கூறுவார். தமிழுக்கு எழுத்துக்கள் முப்பது என்பதும், அவை அகர முதல் னகர இறுவாய் எண்ணப்பட்டு வந்தன என்பதும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உள்ள செய்திகள் என்பது அவர் நூற்பாவால் அறியலாம். 

"எழுத்தெனப் படுப அகரமுதல் 
 னகர இறுவாய் முப்பது என்ப''. 

என்று கூறுவதை நோக்குமின்.

ஆனால், வடமொழிச் சொற்கள் தமிழில் கலக்குங்கால் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்று கூறும்போது தாமே கூறுவதுபோல் நூற்பா அமைந்துள்ளது. 

"வடசொற் கிளவி வடவெழுத்து ஒரூஇ 
 எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே''. 

என்னும் நூற்பாவில், "என்ப", "என்மனார்" போன்ற சொற்கள் இல்லாமையால், வடசொற்கள் தமிழில் கலக்குங்கால் வடவெழுத்துக்குரிய ஒலியால் எழுதப்பட வேண்டும் என்று விதி வகுத்தவர் தொல்காப்பியரேயாவார்.

இன்றும் இவ்விதி, பிறமொழிச் சொற்களை எவ்வாறு எடுத்தாளவேண்டும் என்பதற்கு நமக்கு வழிகாட்டுகின்றது. 

ஆரியம், தமிழைக் கண்டு தம் ஒலி வடிவ எழுத்துக்களை அமைத்துக் கொண்டமையால் இருபத்தைந்து எழுத்துக்கள் இரண்டிலும் ஒன்றாய் உள்ளன. தமிழில் உள்ள எழுத்துக்கள் இருபத்தைந்தையும் ஏற்றுக்கொண்டு எ, ஒ, ற, ன, ழ என்னும் ஐந்து எழுத்துக்களை விட்டுவிட்டது ஆரியம். ஆகவே, எ, ஒ நீங்கிய உயிர் பத்தும்; க-ங, ச-ஞ, ட-ண, த-ந, ப-ம முதலிய பத்தும்; ய, ர, ல, வ, ள முதலிய ஐந்தும் ஆக, இருபத்தைந்தும் இரண்டுக்கும் பொதுவாம்.

தொல்காப்பியர் காலத்தில் எ, ஒ என்ற இரண்டும் புள்ளி பெற்று எழுதப்பட்டு வந்துள்ளன. எழுதுங்கால் புள்ளி விட்டும் எழுதியிருப்பர். அதனால், ஆரியர் குறில்களை விடுத்து, நெடில்களை அமைத்துக்கொண்டனர் போலும். தமிழ் மொழியின் ஈரோசைச் சட்ட இயல்பு அறியாது, ஒரு வரிவடிவம், ஒரே ஒலியைத்தான் குறிப்பிடவேண்டுமென்று கருதி, ஐவருக்கங்களிலும் மும்மூன்று எழுத்துக்களையும் பிற எழுத்துக்களையும் படைத்துக் கொண்டனர். 

இரு மொழிக்கும் உரிய பொதுவெழுத்துக்களால் ஆன சொற்கள் இரண்டு மொழிகளிலும் தடையின்றிப் பயிலத் தொடங்கின. தமிழ்ச் சொற்கள் பல ஆரியத்துள் சென்றன. ஆரியச் சொற்கள் தமிழிலும் புகுந்தன. ஆரியர்கள் செல்வாக்கு இந்நாட்டில் பெருகப் பெருகத் தம் மொழியில் புகும் தமிழ்ச் சொற்களை உருமாற்றி வடமொழிச் சொற்கள் எனக் கருதுமாறு ஆக்கிக்கொண்டனர். வடமொழியைக் கடவுள் மொழி (தேவ பாஷை) என்றும், ஏனைய மொழிகளைப் பேய்மொழிகள் என்றும் (பைசாச பாஷை) அழைத்தனர். வடமொழியானது கடன் கொடுக்குமேயன்றிக் கடன் கொள்ளாது என்றும் பறைசாற்றினர். தமிழ்மொழியாளர்கள் வடமொழியாளர்கள் மருட்டலில் மயங்கி, வடசொற்களைக் கலந்து பேசலே நாகரிகத்தின் உயர்வுக்கு அறிகுறி என்று தமிழ்மொழியில் வடசொற்களைக் கலந்து பேசலை மகிழ்ந்து ஏற்றனர்.

தொல்காப்பியர் விதியையும் மறந்தனர். ஆரியத்தைக் கற்று அதில் நூல்களையும் இயற்றினர். ஆரியர்கள் இந்நாட்டு மக்களில் சிறுபான்மையினராக இருந்தமையால், இந்நாட்டு மக்கள் மொழியை அழித்துவிட முடியவில்லை. இந்நாட்டு மக்கள் ஆரிய மொழியின் சொற்களைத்தான் ஏற்றுக்கொண்டனரேயன்றி, மொழியின் அடிப்படை அமைப்பை மாற்றிக்கொண்டாரிலர். இந்நாட்டு மொழியமைப்பில் ஆரியமொழிச் சொற்கள் மிகுந்து புதுமொழிகள் தோன்றின. ஆனால் ஆரியம் மறைந்துவிட்டது. வட இந்திய மொழிகள் தமிழின் அமைப்பின் மீது வடசொற்களைக் கொண்டு கட்டப்பட்டவைகளாம். தென்னிந்திய மொழிகள் ஆரிய மொழியைப் பின்பற்ற முயன்றபோதும் தம் சொற்களை இழந்துவிடவில்லை. ஆதலின் தமிழ்த் தன்மை மிகுந்துள்ளன. வடஇந்திய மொழிகளினின்றும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. 

வடஇந்திய மொழிகளும், தென்னிந்திய மொழிகளும் இன்று ஆரியக் குடும்ப மொழிகள் என்றும், திராவிடக் குடும்ப மொழிகள் என்றும் மொழிநூலாரால் அழைக்கப்படுகின்றன. எல்லாம் தமிழ்த் தாயினின்றும் தோன்றியனவேயாம். ஆரியம் உலக வழக்கழிந்து ஒழிந்ததுபோல் தமிழ் ஒழியாது. தமிழுக்குரியோர் இந்நாட்டு மக்கள். எங்கும் பெரும்பான்மையினராய் உள்ளனர். பெரும்பான்மையினர் மொழியை - இலக்கண அமைப்பும் இலக்கிய வளமும் கொண்ட மொழியை -  சிறுபான்மையினர் மொழி அழித்தல் இயலாது. ஆகவே, தமிழும் அதன்வழிப் பிறந்த மொழிகளும் ஒருநாளும் அழியா. 

இன்று இந்தியாவின் ஆட்சிமொழியாக இருப்பதற்கு உரிமையுடையது தமிழேயாகும். இந்தி அதன் சொற்களால் ஆரியத்தின் வழிமொழியே என்றாலும், கட்டமைப்பால் தமிழேயாகும். கலப்பு மொழியாகும். அதற்குள்ள உரிமை தாய்மொழியாம் தமிழுக்கு இல்லையே! தமிழுக்கு முழு உரிமை அளிக்காது போயினும், இந்தியோடு வீற்றிருக்கும் சம உரிமையாவது அளிக்கலாம் அன்றோ?

ஆகவே, இந்திய அரசின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாகத் தமிழையும் ஆக்குதல் வேண்டும்.  இந்தியர்கள் அனைவரும் தமிழைக் கற்பதற்குரிய வசதிகளையும் கல்வித் திட்டத்தில் ஏற்படுத்துதல் வேண்டும். வட இந்தியர்கள் தமிழையும் தென்னிந்தியர்கள் வடமொழியையும் கற்றல் வேண்டும். தமிழும், ஆரியமும் கற்கப்பட்டால் வடக்கு, தெற்கு என்ற வேறுபாடு மறைந்து அனைவரும் ஒற்றுமையுற்று வாழும் நிலை தோன்றும்.

தமிழே "இந்திய மொழிகளின் தாய்" என்றும், ஆரியக் கலப்பால்தான் தமிழ் இவ்வாறு பல மொழிகளாகக் கிளைத்தது என்றும் அறியும் நிலை ஏற்படும். இருவேறுபட்ட இனத்தைச் சார்ந்த இரண்டும் இணைந்து தன்னியல் மாற்றம் உறாமல் தனித்தனியே வளர்ச்சியுற வழியமைத்தல் வேண்டும். குமரியொடு வட இமயத்து ஒரு மொழியாய் வாழ்ந்த தமிழ், ஆரியத்தால் அழிவுண்டது; ஆரியம் மறைந்துவிட்டது. அழிவுற்று உரிமையிழந்த தமிழை அரியணையில் ஏற்றுவதற்கு ஆவன செய்தல் அனைவர்க்கும் உரிய கடனாகும்.

(இக்கட்டுரை வெளியான ஆண்டு 21.8.1961). 

Vij

unread,
Oct 16, 2011, 5:56:52 AM10/16/11
to mint...@googlegroups.com
இந்த கட்டுரையில் தாய்மொழி மைய வாத, இனமொழி பிதற்றல்கள் பல உள்ளன.  தமிழ்நாட்டிற்க்கு வெளியே இதை யாரும் துப்பிக்கூட பார்க்கமாட்டார்கள்.
 
விஜயராகவன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Oct 16, 2011, 8:00:56 AM10/16/11
to மின்தமிழ்

On Oct 16, 4:56 am, "Vij" <vcvi...@hotmail.com> wrote:
> இந்த கட்டுரையில் தாய்மொழி மைய வாத, இனமொழி பிதற்றல்கள் பல உள்ளன.  தமிழ்நாட்டிற்க்கு வெளியே இதை யாரும் துப்பிக்கூட பார்க்கமாட்டார்கள்.
>
> விஜயராகவன்
>

பேராசிரியர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழாக்கள்
உலகெங்கிலும் அண்மைக் காலத்தில் கொண்டாடப்படுகின்றன.

தொல்காப்பியத்தை முதலில் மொழிபெயர்த்தவர்களில்
சி. இலக்குவனார் முதன்மையானவர். தமிழுக்கும், வடமொழிக்கும்
உள்ள தொடர்புகளை அறிய அவரது ‘தொல்காப்பிய
ஆராய்ச்சி’ அனைவரும் படிக்கவேண்டும். தமிழ்நாட்டின்
தலைசிறந்த ஆய்வாளர்கள் பலரும் பேராசிரியர் இலக்குவனார்
ஆய்வு நெறிமுறைகளை மேலும் செம்மைப்படுத்தியுள்ளனர்.

நா. கணேசன்


> From: Kannan Natarajan
> Sent: Sunday, October 16, 2011 8:12 AM
> To: Min Thamizh
> Subject: [MinTamil] தமிழ்மணி - பழகு தமிழ் - வேருக்கு நீர் வார்த்தவர்கள்!
>
> வேருக்கு நீர் வார்த்தவர்கள்-10:- தமிழும், ஆரியமும்!
>

>                                                    பேராசிரியர் சி.இலக்குவனார்
>
> மக்கள் நன்மைக்காக மக்களாற் படைத்துக் கொள்ளப்பட்டவற்றுள் மாண்பு மிக்கு விளங்குவது மொழியொன்றே. மக்களை விலங்குகளினின்றும் வேறுபடுத்தி உயர்த்துவதும் மொழியே. மக்களை மக்களாக வாழச்செய்வதும் மொழியே. மொழியின்றேல் உலகில் ஒன்றுமே இன்று (இல்லை) எனக் கூறலாம்.  
>
> ஆரியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர், இமயம் முதல் குமரி வரை வழக்கில் இருந்த மொழி "தமிழ்"தான் என்பது நடுநிலை தவறாத ஆராய்ச்சியாளர் நூல்களால் அறியப்படும் உண்மையாகும். ஆரியம் தமிழோடு கொண்ட கலப்பின் பயனாகவே இன்று நம் பரதகண்டத்தில் உலவும் மொழிகள் உருவாகி வளர்ந்துள்ளன. ஆதலின், இந்திய மொழிகளின் தந்தையாக ஆரியத்தையும், தாயாகத் தமிழையும் ஆராய்ச்சியாளர் சிலர் உருவகப்படுத்திக் கூறுவர்.
>
> ஆரியத்தைத் தந்தையென அழைத்து அதற்கு முதன்மை கொடுப்பதாக எண்ணி மகிழ்ந்தாலும், "இந்திய மொழிகளின் தாய் - தமிழ்" என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது; ஆரியமே இந்திய மொழிகளின் அன்னை என்ற கொள்கை உண்மைக்கு மாறுபட்டது என்பது வெளிப்பட்டுவிடுகின்றது.  
>
> "சதுர்மறை ஆரியம் வருமுன்  
> சகமுழுது நினதாயின்  
> முதுமொழி நீ அநாதியென  
> மொழிகுவதும் வியப்பாமோ''.  
>
> என்னும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூற்று, மொழிப்பற்று மிக்க புலவர் கூற்று எனப் புறக்கணித்துவிடல் இயலாது. பரதகண்டம் முழுவதும் பரவி வழங்கிவந்த பழந்தமிழோடு, ஆரியம் கலப்புற்றுப் பல்வேறு கிளைமொழிகள் உருவாகியுள்ளன. வடஇந்திய மொழிகள் தமிழ்க்குழு மொழிகளோடு வேறுபட்டன போல் தோன்றினும், தமிழ்மொழி அடிப்படையிலேயே அவை உருவாகி வளர்ந்துள்ளன என்பது நுணுகி ஆராய்வார்க்குத் தெள்ளிதிற் புலனாகும்.  
>
> "வடாது பனிபடு நெடுவரையும், தெனாது உருகெழு குமரிக்கடலும்'', எல்லைகளாகக்கொண்டு வழங்கிவந்த பழந்தமிழ், ஆரிய மொழிக் கலப்பால் சிதைவுண்டு காலப்போக்கில் பல்வேறு கிளைமொழிகளாகக் கிளைத்தது. ஆரிய மொழித்தன்மை மிகுந்துள்ள மொழிகள் "ஆரியக் குடும்ப மொழிகள்" எனவும், தமிழ்த்தன்மை மிகுந்த மொழிகள் "தமிழ்க் குடும்ப மொழிகள்" (திராவிடக் குடும்ப மொழிகள்) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆரிய மொழிகளும் அதனைச் சார்ந்துள்ள மொழிகளும் தமிழ்த் தன்மைகளை மிகுதியான அளவில் இன்றும் கொண்டு விளங்குகின்றன. அன்றியும் ஆரிய மொழி, எழுத்துக்களைப் படைத்துக் கொண்டதே அது தமிழோடு தொடர்பு கொண்ட பின்னர்தான் என்பது இருமொழி எழுத்துக்களையும் நுணுகி ஆராய்ந்தால் தெள்ளிதின் புலனாகும்.  
>
> இரு மொழிகளும் வேறுபட்ட இனத்தனவாயிருந்தும் இரண்டிலும் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் பத்து உயிர்களும்; க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள என்னும் பதினைந்து மெய்யெழுத்துக்களும் ஒத்திருக்கின்றனவே!
>
> எதனால் இவ்வொற்றுமை?
>
> ஒன்றைத் தழுவி இன்னொன்று அமைத்துக் கொண்டாலன்றி இவ்வொற்றுமை ஏற்பட இயலாதன்றோ?
>
> எதனைத் தழுவி எது அமைத்துக் கொண்டது?  
>
> வடமொழியில் உள்ள ஐவ் வருக்கங்களை நோக்கினால், தமிழினைத் தழுவித்தான் ஆரியமொழி தன் எழுத்துக்களை அமைத்துக்கொண்டது என்பது புலனாகும். ஐந்து வருக்கங்களிலும் முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் இரண்டு மொழிகளிலும் ஒன்றே. இடையில் உள்ள மூன்று எழுத்துக்களும் ஆரியம் மிகுதியாகப் பெற்றுள்ளது. தமிழிலும் அவ்வொலிகள் உண்டு. ஆனால், அவ்வொலிகளைக் காட்டும் தனி வரி வடிவங்கள் இல்லை. கடன் பெற்ற கூர்த்த மதியுடைய ஆரியம், புதிய வரி வடிவங்களைப் படைத்துத் தன் நெடுங்கணக்கினை விரிவுபடுத்திக் கொண்டது; வரி வடிவக் குறைபாடற்ற மொழியாகிவிட்டதாகக் காட்டிக்கொண்டது. நன்றாகச் செய்யப்பட்டது "சமஸ்கிருதம்" - என்று தன்னை அழைத்துக் கொண்டது.  ஏன்?
>
> தமிழ்மொழி ஆரியத்தைத் தழுவித் தன் நெடுங்கணக்கை அமைத்துக் கொண்டது என்று கூறினால் பொருந்தாதோ எனின், முற்றிலும் பொருந்தாது.
>
> கடன் கொடுப்பான் ஒருவன் வேண்டியன பெற்றுக்கொள் என்று உரிமையளிக்குங்கால், குறைவாகப் பெறுவார் இருப்பாரோ?
>
> இரார்.
>

> அங்ஙனமே தமிழ் ஆரியத்தினின்றும் கடன் பெற்றிருக்குமேல் குறைபாடுடைய முறையில் கடன்பெறக் காரணம் இல்லை. ஆரிய நெடுங்கணக்கைப்போல் அமைத்துக் கொண்டிருக்கலாமே. தமிழினின்றும் உருமாறிப் ...
>
> read more »

N. Ganesan

unread,
Oct 16, 2011, 8:40:46 AM10/16/11
to மின்தமிழ்
தமிழ்நாட்டில் தமிழ் பாட புத்தகங்களில் பேரா. சி. இலக்குவனார்
அவர்கள் கட்டுரை இடம்பெற வேணுமாய்க் கோரிக்கை
எழுந்துள்ளது.

விரைவில் நடக்க வேண்டி வாழ்த்துவோம்.

நா. கணேசன்

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamil%20Mani&artid=492621&SectionID=179&MainSectionID=179&SEO=&Title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10:%20%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!

இந்தக் கட்டுரையை வெளிப்படுத்தியதன் மூலம் தினமணி ஆசிரியர் குழுவினர்
தங்கள் தமிழ்ப்பற்றையும் தமிழே இந்திய மொழிகளின்தாய் என்னும் உண்மையை
வெளிப்படுத்தும் ஆர்வத்தையும் வெளிப்படுததி உள்ளனர். செந்தமிழ் மாமணி
பெரும்பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் கட்டுரையை
வெளியிட்டமைக்குத் தினமணிக்குப் பாராட்டுகள். இக் கட்டுரை பாட நூல்களில்
இடம் பெறுவது மொழி ஒற்றுமைக்கு வழி வகுக்கும். அன்புடன் பொறுப்பாளர்க்ள,

இலக்குவனார் இலக்கிய இணையம் & இலக்குவனார் இலக்கிய மன்றம்.

>
> > வேருக்கு நீர் வார்த்தவர்கள்-10:- தமிழும், ஆரியமும்!
>
> >                                                    பேராசிரியர் சி.இலக்குவனார்
>
> > மக்கள் நன்மைக்காக மக்களாற் படைத்துக் கொள்ளப்பட்டவற்றுள் மாண்பு மிக்கு விளங்குவது மொழியொன்றே. மக்களை விலங்குகளினின்றும் வேறுபடுத்தி உயர்த்துவதும் மொழியே. மக்களை மக்களாக வாழச்செய்வதும் மொழியே. மொழியின்றேல் உலகில் ஒன்றுமே இன்று (இல்லை) எனக் கூறலாம்.  
>
> > ஆரியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர், இமயம் முதல் குமரி வரை வழக்கில் இருந்த மொழி "தமிழ்"தான் என்பது நடுநிலை தவறாத ஆராய்ச்சியாளர் நூல்களால் அறியப்படும் உண்மையாகும். ஆரியம் தமிழோடு கொண்ட கலப்பின் பயனாகவே இன்று நம் பரதகண்டத்தில் உலவும் மொழிகள் உருவாகி வளர்ந்துள்ளன. ஆதலின், இந்திய மொழிகளின் தந்தையாக ஆரியத்தையும், தாயாகத் தமிழையும் ஆராய்ச்சியாளர் சிலர் உருவகப்படுத்திக் கூறுவர்.
>
> > ஆரியத்தைத் தந்தையென அழைத்து அதற்கு முதன்மை கொடுப்பதாக எண்ணி மகிழ்ந்தாலும், "இந்திய மொழிகளின் தாய் - தமிழ்" என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது; ஆரியமே இந்திய மொழிகளின் அன்னை என்ற கொள்கை உண்மைக்கு மாறுபட்டது என்பது வெளிப்பட்டுவிடுகின்றது.  
>
> > "சதுர்மறை ஆரியம் வருமுன்  
> > சகமுழுது நினதாயின்  
> > முதுமொழி நீ அநாதியென  
> > மொழிகுவதும் வியப்பாமோ''.  
>
> > என்னும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூற்று, மொழிப்பற்று மிக்க புலவர் கூற்று எனப் புறக்கணித்துவிடல் இயலாது. பரதகண்டம் முழுவதும் பரவி வழங்கிவந்த பழந்தமிழோடு, ஆரியம் கலப்புற்றுப் பல்வேறு கிளைமொழிகள் உருவாகியுள்ளன. வடஇந்திய மொழிகள் தமிழ்க்குழு மொழிகளோடு வேறுபட்டன போல் தோன்றினும், தமிழ்மொழி அடிப்படையிலேயே அவை உருவாகி வளர்ந்துள்ளன என்பது நுணுகி ஆராய்வார்க்குத் தெள்ளிதிற் புலனாகும்.  
>
> > "வடாது பனிபடு நெடுவரையும், தெனாது உருகெழு குமரிக்கடலும்'', எல்லைகளாகக்கொண்டு வழங்கிவந்த பழந்தமிழ், ஆரிய மொழிக் கலப்பால் சிதைவுண்டு காலப்போக்கில் பல்வேறு கிளைமொழிகளாகக் கிளைத்தது. ஆரிய மொழித்தன்மை மிகுந்துள்ள மொழிகள் "ஆரியக் குடும்ப மொழிகள்" எனவும், தமிழ்த்தன்மை மிகுந்த மொழிகள் "தமிழ்க் குடும்ப மொழிகள்" (திராவிடக் குடும்ப மொழிகள்) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆரிய மொழிகளும் அதனைச் சார்ந்துள்ள மொழிகளும் தமிழ்த் தன்மைகளை மிகுதியான அளவில் இன்றும் கொண்டு விளங்குகின்றன. அன்றியும் ஆரிய மொழி, எழுத்துக்களைப் படைத்துக் கொண்டதே அது தமிழோடு தொடர்பு கொண்ட பின்னர்தான் என்பது இருமொழி எழுத்துக்களையும் நுணுகி ஆராய்ந்தால் தெள்ளிதின் புலனாகும்.  
>
> > இரு மொழிகளும் வேறுபட்ட இனத்தனவாயிருந்தும் இரண்டிலும் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் பத்து உயிர்களும்; க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள என்னும் பதினைந்து மெய்யெழுத்துக்களும் ஒத்திருக்கின்றனவே!
>
> > எதனால் இவ்வொற்றுமை?
>
> > ஒன்றைத் தழுவி இன்னொன்று அமைத்துக் கொண்டாலன்றி இவ்வொற்றுமை ஏற்பட இயலாதன்றோ?
>
> > எதனைத் தழுவி எது அமைத்துக் கொண்டது?  
>
> > வடமொழியில் உள்ள ஐவ் வருக்கங்களை நோக்கினால், தமிழினைத் தழுவித்தான் ஆரியமொழி தன் எழுத்துக்களை அமைத்துக்கொண்டது என்பது புலனாகும். ஐந்து வருக்கங்களிலும் முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் இரண்டு மொழிகளிலும் ஒன்றே. இடையில் உள்ள மூன்று எழுத்துக்களும் ஆரியம் மிகுதியாகப் பெற்றுள்ளது. தமிழிலும் அவ்வொலிகள் உண்டு. ஆனால், அவ்வொலிகளைக் காட்டும் தனி வரி வடிவங்கள் இல்லை. கடன் பெற்ற கூர்த்த மதியுடைய ஆரியம், புதிய வரி வடிவங்களைப் படைத்துத் தன் நெடுங்கணக்கினை விரிவுபடுத்திக் கொண்டது; வரி வடிவக் குறைபாடற்ற மொழியாகிவிட்டதாகக் காட்டிக்கொண்டது. நன்றாகச்
>

> ...
>
> read more »

Vij

unread,
Oct 16, 2011, 12:14:28 PM10/16/11
to mint...@googlegroups.com
தினமணி சி.இலக்குவனார் பற்றி ஒருவர் கட்டுரையை போட்டதால் , உடனே தினமணி தன்
“தமிழ்பற்றை கான்பிக்கிறது” என சர்டிபிகேட் கொடுப்பது இலக்குவனாரின் பிள்ளை
தன் தந்தை புகழ் பாடுவதுதான்.

தமிழ் பற்றிய விவாதங்கள் எல்லாம் “தமிழ்பற்று” என உணர்ச்சி கொக்கியைப் போட்டு
, எமோஷனல் பிளாக்மெயில் செய்வது.
தன் இன-மைய, தமிழ்-மைய கருத்துகளை சொன்னால் “தமிழ்பற்று” சர்டிபிகேட்
கொடுக்கணும். தமிழை மொழியியல் பார்வையில் ஆய்வு செய்தால் தமிழனத் துரோகி என்ற
பட்டம். இப்படி செய்தே தமிழர்களின் மொழி அறிவு ப்ரிமிடிவ் ஆக “தமிழ் அறிஞர்கள்”
வைத்துள்ளனர்.


இனி இலக்குவனாரின் சில பிதற்றல்களை பார்ப்போம்:

1. முதல் வரியே “ ஆரியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர், இமயம் முதல்

குமரி வரை வழக்கில் இருந்த மொழி "தமிழ்"தான் என்பது நடுநிலை தவறாத

ஆராய்ச்சியாளர் நூல்களால் அறியப்படும் உண்மையாகும்.” இப்படி எந்த இந்திய
சரித்திராசிரியரும், எந்த இந்தாலஜிஸ்டும் நம்பவில்லை. இப்படி பொய்
சொல்லிவிட்டு, அதற்கு சர்டிபிகேட் வேற ”நடுநிலை தவறாத ஆராய்ச்சியாளர் ..”

யாரை இப்படி பொய் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறார் இலக்குவனார்; நான் 20 இந்திய
சரித்திர ஆய்வாலர்களை கொடுக்க முடியும், ஆனால் ஒருவர் கூட இப்படி பிதற்றல்களை
நம்புவதில்லை

2. “இந்திய மொழிகளின் தந்தையாக ஆரியத்தையும், தாயாகத் தமிழையும் ஆராய்ச்சியாளர்
சிலர் உருவகப்படுத்திக் கூறுவர். ” யார் இந்த சிலர் ?? இப்படி பேர் தெரியாத
ஆசாமிகளை , அனானிமஸ் “ஆரய்ச்சியாளர்களை” ஆதரவுக்கு வைக்க வேண்டியது. அதற்குப்
பிறகு இன்னொரு பிதற்றல் “ "இந்திய மொழிகளின் தாய் - தமிழ்" என்பதை
ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது;” இலக்குவனார் கற்பனைக்கு வெளியே
எந்த ஆய்வாளரும் அப்படி “ஏற்றுக் கொள்வதில்லை”

3. இந்த உளரல்களுக்கு யார் ஆதவை தேடுகிறார் - மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.
கட்டுரை எழுதியது 1961ல், அவருக்கு 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் நாடக
ஆசிரியரை விட மொழி ஆராய்ச்சியில் யாரும் ஆதரவு கிடைக்கவில்லை. வேலிக்கு ஓணான்
சாட்சி.

4. “ஆரியம், தமிழைக் கண்டு தம் ஒலி வடிவ எழுத்துக்களை அமைத்துக்
கொண்டமையால்...”

5. “வட இந்திய மொழிகள் தமிழின் அமைப்பின் மீது வடசொற்களைக் கொண்டு
கட்டப்பட்டவைகளாம்...”

6. ”(இந்திய மொழிகள்) எல்லாம் தமிழ்த் தாயினின்றும் தோன்றியனவேயாம்.”

7. “ தமிழே "இந்திய மொழிகளின் தாய்" என்றும், ஆரியக் கலப்பால்தான் தமிழ்
இவ்வாறு பல மொழிகளாகக் கிளைத்தது என்றும் அறியும் நிலை ஏற்படும்.”

8. “குமரியொடு வட இமயத்து ஒரு மொழியாய் வாழ்ந்த தமிழ், ஆரியத்தால் அழிவுண்டது”


கணேசரே , இலக்குவனார் உளரல்களை பிட்டு பிட்டு வைத்து விட்டேன். அதற்கு உங்கள்
பதில் என்ன ?

இலக்குவனாரின் கட்டுரைகளை தமிழ் பாட புத்தகங்களில் போட்டால், அறிவுத்தரம் அதள
பாதாளம் சென்றுவிடும் என நீங்கள் நம்புகிறீர்கள் என எதிர்பார்க்கிறேன்

விஜயராகவன்

நா. கணேசன்

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamil%20Mani&artid=492621&SectionID=179&MainSectionID=179&SEO=&Title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10:%20%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!

--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.

Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our

N. Ganesan

unread,
Oct 16, 2011, 12:24:32 PM10/16/11
to மின்தமிழ்

விஜய் ஸார்,

எனக்கு ஒன்றுமே தெரியாது. எல்லாம் வெள்ளைக்காரங்க
சொல்றதை காப்பி-பேஸ்ட் தான். இல்லையா?

தமிழ்நாட்டு பாடப் புஸ்தகத்தில் இக்கட்டுரை இடம்பெற
தமிழ்ச் சங்கங்கள் முழுமுயற்சி எடுக்கும். த்ராவிடஸ்தானில்
தெலுங்கு, கன்னடம், மலையாள பாட புஸ்தகங்களிலுனம்
பேரா. இலக்குவனார் கட்டுரை இல்லாவிடில் போராட்டம்
தொடங்க வேண்டும் என்பார்கள்.


பஜனைகள், சினிமா - தமிழினம் மீளுமா?
நா. கணேசன்

தெலுங்கு, கன்னடம், மலையாலம், ஹிந்தி, வடமொழி
படிக்க க்ரந்தலிபியை ஆதரிப்போம்.

> -----Original Message-----
> From: N. Ganesan
> Sent: Sunday, October 16, 2011 2:40 PM
> To: மின்தமிழ்
> Subject: [MinTamil] Re: தமிழ்மணி - பழகு தமிழ் - வேருக்கு நீர் வார்த்தவர்கள்!
>
> தமிழ்நாட்டில் தமிழ் பாட புத்தகங்களில் பேரா. சி. இலக்குவனார்
> அவர்கள் கட்டுரை இடம்பெற வேணுமாய்க் கோரிக்கை
> எழுந்துள்ளது.
>
> விரைவில் நடக்க வேண்டி வாழ்த்துவோம்.
>
> நா. கணேசன்
>

> http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamil%20Mani&...


>
> இந்தக் கட்டுரையை வெளிப்படுத்தியதன் மூலம் தினமணி ஆசிரியர் குழுவினர்
> தங்கள் தமிழ்ப்பற்றையும் தமிழே இந்திய மொழிகளின்தாய் என்னும் உண்மையை
> வெளிப்படுத்தும் ஆர்வத்தையும் வெளிப்படுததி உள்ளனர். செந்தமிழ் மாமணி
> பெரும்பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் கட்டுரையை
> வெளியிட்டமைக்குத் தினமணிக்குப் பாராட்டுகள். இக் கட்டுரை பாட நூல்களில்
> இடம் பெறுவது மொழி ஒற்றுமைக்கு வழி வகுக்கும். அன்புடன் பொறுப்பாளர்க்ள,
>
> இலக்குவனார் இலக்கிய இணையம் & இலக்குவனார் இலக்கிய மன்றம்.
>
> > > வேருக்கு நீர் வார்த்தவர்கள்-10:- தமிழும், ஆரியமும்!
>
> > >                                                    பேராசிரியர்
> > > சி.இலக்குவனார்
>
> > > மக்கள் நன்மைக்காக மக்களாற் படைத்துக் கொள்ளப்பட்டவற்றுள் மாண்பு மிக்கு
> > > விளங்குவது மொழியொன்றே. மக்களை விலங்குகளினின்றும் வேறுபடுத்தி
> > > உயர்த்துவதும் மொழியே. மக்களை மக்களாக வாழச்செய்வதும் மொழியே. மொழியின்றேல்
> > > உலகில் ஒன்றுமே இன்று (இல்லை) எனக் கூறலாம்.
>
> > > ஆரியர்கள்
>

> ...
>
> read more »

DEV RAJ

unread,
Oct 16, 2011, 1:38:04 PM10/16/11
to மின்தமிழ்
>>> வடமொழியிலுள்ள "தந்திதாந்த நாமம்" தமிழ் மொழியில் வந்து வழங்குகின்றது. <<<

தத்திதாந்த நாமம் - சரியானது
தாரகையாருக்கு நன்றி.

அணு - 'ஆணவ' :
தத்திதாந்த நாமமா ?
விசேஷணமாகுமா ?
எனும் ஐயம் வெகுநாள்களாக

"மஹாகாவ்ய நாடகாதி ப்ரிய" டாக்டர் கணேசர் இருக்கும்போது என்ன கவலை ?
அவரே விளக்கி அருள்வாராக


தேவ்

On Sep 26, 5:44 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 7:- தமிழில் வழங்கும் வடமொழி இலக்கணம்!
>

> அ.கி.பரந்தாமனார்
>

> *வடமொழிச் சந்திகள்:*-


>
> தமிழில் பல வடமொழித் தொடர்கள் வந்து வழங்குகின்றன. அவை பெரும்பாலும் அவ் வடநூல்
> புணர்ச்சியையே பெறும். தமிழில் வரும் வடமொழித் தொடர்களைப் பிழையின்றி எழுத
> இவற்றைத் தெரிந்து கொள்வது நன்று.
>
> புணர்ச்சியை வடநூலார், "சந்தி" என்பர்.
>
> தமிழில் தீர்க்க சந்தி, குண சந்தி, விருத்தி சந்தி என்னும் மூன்று வடமொழிச்
> சந்திகள் வந்து வழங்குகின்றன. மிகுதியாக வழங்குபவை முதலிரண்டு சந்திகளே.

> இச்சந்தி முறை வடசொற்களுக்கே உரியது என்றறிக.    *
>
> 1. தீர்க்க சந்தி*  தீர்க்க சந்தி மூன்று வகையாக வரும்.


>
> (1) நிலைமொழியீற்றில் "அ" அல்லது "ஆ" இருந்து வருமொழி முதலில் "அ" அல்லது "ஆ"
> வந்தால் நிலைமொழியில் உள்ள உயிரும் வருமொழியில் உள்ள உயிரும் ஆகிய இரண்டும்

> கெடச் சந்தியில் ஓர் "ஆ" தோன்றும்.   * ("ஆ" தோன்றுதல்)*


>
> - குண+அனுபவம் = குணானுபவம்
> - சர்வ + அதிகாரி = சர்வாதிகாரி
> - அமிர்த + அஞ்சனம் = அமிர்தாஞ்சனம்
> - வேத + ஆகமம் = வேதாகமம்
> - சேனா + அதிபதி = சேனாதிபதி
>
> குறிப்பு:- பால் + அபிஷேகம் = பாலபிஷேகம். இத்தொடரைப் பாலாபிஷேகம் என்றெழுவது
> தவறு.
>
> (2) நிலை மொழியீற்றில் "இ" அல்லது "ஈ" இருந்து வருமொழி முதலில் "இ" அல்லது "ஈ"

> வந்தால், அவ்விரண்டும் கெட ஓர் "ஈ" தோன்றும்.   * ("ஈ" தோன்றுதல்)*


>
> - கவி + இந்திரன் = கவீந்திரன்
> - கிரி + ஈசன் = கிரீசன்
> - மஹீ + இந்திரன் = மஹீந்திரன்
> - நதீ + ஈசன் = நதீசன்
>
> (3) நிலைமொழியீற்றில் "உ" அல்லது "ஊ" இருந்து வருமொழி முதலில் "ஊ" வந்தால்,

> அவ்விரண்டும் கெட ஓர் "ஊ" தோன்றும்.   * ("ஊ" தோன்றுதல்)*


>
> - குரு + உபதேசம் = குரூபதேசம்

> - சுயம்பு + ஊர்ஜிதம் = சுயம்பூர்ஜிதம் (சிவநிலை)    *
>
> 2.குண சந்தி*:-


>
> (1) நிலைமொழியீற்றில் "அ" அல்லது "ஆ" இருந்து வருமொழி முதலில் "இ" அல்லது "ஈ"

> வந்தால், அவ்விரண்டும் கெடச் சந்தியில் "ஏ" தோன்றும். *   ("ஏ" தோன்றுதல்)  *


>
> - ராஜ + இந்திரன் = ராஜேந்திரன்
> - தேவ + இந்திரன் = தேவேந்திரன்
> - மகா + ஈஸ்வரன் = மகேஸ்வரன்
> - யதா + இச்சை = யதேச்சை (மனம்போன போக்கு)
> - கங்காதர + ஈஸ்வரர் = கங்காதரேஸ்வரர்
>
> (2) நிலைமொழியீற்றில் "அ" அல்லது "ஆ" இருந்து வருமொழி முதலில் "உ" அல்லது "ஊ"

> வந்தால், அவ்விரண்டும் கெடச் சந்தியில் ஓர் "ஓ" தோன்றும்.   * ("ஓ" தோன்றுதல்)*


>
> - சர்வ + உதயம் = சர்வோதயம்
> - சூரிய + உதயம் = சூரியோதயம்
> - சந்திர + உதயம் = சந்திரோதயம்
> - சக + உதரன் = சகோதரன் (உடன் பிறந்தவன்)

> - ஞான + உதயம் = ஞானோதயம்    *


>
> 3. விருத்தி சந்தி:-

> *


> (1) நிலைமொழியீற்றில் "அ" அல்லது "ஆ" இருந்து வருமொழி முதலில் "ஏ" அல்லது "ஐ"

> வந்தால், அவ்விரண்டும் கெட ஓர் "ஐ" தோன்றும்.  (*"ஐ" தோன்றுதல்*)


>
> - லோக + ஏகநாயகன் = லோகைகநாயகன்
> - சர்வ + ஐஸ்வர்யம் = சர்வைஸ்வர்யம்
> - தேவதா + ஐக்கம் = தேவதைக்யம்
> - தேவதா + ஏகத்வம் = தேவதைகத்வம்
>
> (2) நிலைமொழியீற்றில் "அ" அல்லது "ஆ" இருந்து வருமொழி முதலில் "ஒ" அல்லது "ஒள"

> இருந்தால், அவ்விரண்டு கெட ஓர் "ஒள" தோன்றும். (*"ஒள" தோன்றுதல்*)


>
> - வந + ஓஷதி = வநெளஷதி  (காட்டு மூலிகை)
> - பரம + ஒளஷதம் = பரமெளஷதம்

> - மகா + ஓஷதி = மகெளஷதி    *
>
> உபசர்க்கங்கள்:-*


>
> உபசர்க்கம் என்பது வடமொழியில் வினைச்சொல்லுக்கு முதலில் சேர்ந்து வருவது. தமிழ்
> உபசர்க்கங்கள் மிகமிகச் சில. வடமொழி உபசர்க்கங்கள் தமிழில் வந்து வழங்குகின்றன.
> அவற்றைத் தெரிந்து கொள்வது பிழையின்றி எழுதுவதற்கும் பொருள் தெரிந்து

> கொள்வதற்கும் பயன்படும்.    *
>
> தமிழ் உபசர்க்கம்:*-  தலை, கை - தலை சிறந்த, கைக்கொள்.


>
> வடமொழி உபசர்க்கம் - (இன்மைப்பொருள் தருவன):-
>
> அப, அவ, நிஷ், நிர், வி.
>
> - அப = அபகீர்த்தி
> - அவ = அவமானம்
> - நிஷ் = நிஷ்காரணம், நிஷ்காமிய கர்மம்
> - வி = விரக்தி (ரக்தி-பற்று; விரக்தி-பற்றின்மை)
>
> பற்பல பொருள் தருவன:-
>
> - அதி - மேல், மிகுதி = அதிரூபம், அதிவிநோதம்
> - அதோ - கீழை = அதோமுகம், அதோகதி
> - அநு - பின், கூட = இராமாநுஜன், அநுகூலம்
> - அபி - மிகுதி = அபிவிருத்தி
> - உப - துணை = உபகரணம் (துணைக்கருவி)
> - கு - அற்ப, வீண், இழிவான = குக்கிராமம், குதர்க்கம், குலேசன்.
> - சக - கூட = சகவாசம்
> - சம் - கூட = சம்பந்தம்  சம் - நல்ல = சம்பாஷணை
> - சன், சு - நல்ல = சன்மார்க்கம், சுமதி.
> - துர் - கெட்ட = துர்க்குணம், துர்மந்திரி, துராலோசனை (துன்மந்திரி,
> துன்மார்க்கம் என்பவை தவறுகள்).
> - பரி - முழுதும் = பரிபூரணம், பரிபாலனம்.
> - பிரதி - பதில், திரும்ப = பிரதியுபகாரம், பிரதிபிம்பம்.
> - வி - வேறு, மேலான = விதேசி, விநாயகன் (விநாயகன் - மேலான நாயகன்) வினாயகன்

> என்று எழுதுவது தவறு).    *
>
> தந்திதாந்த நாமங்கள்*:-

DEV RAJ

unread,
Oct 16, 2011, 1:40:43 PM10/16/11
to மின்தமிழ்
>> "வடாது பனிபடு நெடுவரையும், தெனாது உருகெழு குமரிக்கடலும்'',
எல்லைகளாகக்கொண்டு வழங்கிவந்த பழந்தமிழ், ......<<


"வட வேங்கடம் எங்கே , எங்கே ?" என்று சேசாத்திரியார்
தேடிக்கொண்டிருந்தார்.
புரட்டாசி முடியவும் ஏழுமலையான் சேஷாத்ரி நாதன் அநுக்ரஹத்தால்
வடவேங்கடம்
இமயமலையில் இருக்கிறது என்று தெரிந்து விட்டது. கட்டுரைக்கு நன்றி


தேவ்

On Oct 16, 11:12 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
>  வேருக்கு நீர் வார்த்தவர்கள்-10:- தமிழும், ஆரியமும்!
>

> என்பார்கள். அக் காலத்திலேயே ...
>
> read more »

Geetha Sambasivam

unread,
Oct 16, 2011, 1:45:59 PM10/16/11
to mint...@googlegroups.com
புரட்டாசி முடியவும் ஏழுமலையான் சேஷாத்ரி நாதன் அநுக்ரஹத்தால்
வடவேங்கடம்
இமயமலையில் இருக்கிறது என்று தெரிந்து விட்டது. கட்டுரைக்கு நன்றி//
 
 
சிரிக்கமுடியலை;  வயித்தை ரொம்பவே வலிக்கிறது. 

2011/10/16 DEV RAJ <rde...@gmail.com>
>> "வடாது பனிபடு நெடுவரையும், தெனாது உருகெழு குமரிக்கடலும்'',
எல்லைகளாகக்கொண்டு வழங்கிவந்த பழந்தமிழ், ......<<


"வட வேங்கடம் எங்கே , எங்கே ?" என்று சேசாத்திரியார்
தேடிக்கொண்டிருந்தார்.
புரட்டாசி முடியவும் ஏழுமலையான் சேஷாத்ரி நாதன் அநுக்ரஹத்தால்
வடவேங்கடம்
இமயமலையில் இருக்கிறது என்று தெரிந்து விட்டது. கட்டுரைக்கு நன்றி


தேவ்

rajam

unread,
Oct 16, 2011, 4:58:50 PM10/16/11
to mint...@googlegroups.com, Vijay Vanbakkam
அன்புள்ள விஜயராகவன்,
உங்கள் கேள்வி என்னை நோக்கியது இல்லை என்றாலும் இலக்குவனாரின் மாணவி என்ற முறையில் என் கருத்தை முன்வைக்க விருப்பம். ஏற்பன கொண்டு தள்ளுவன தள்ளவும்! :-)

இலக்குவனாரின் கட்டுரைகளை தமிழ் பாட புத்தகங்களில் போட்டால், அறிவுத்தரம்  அதள பாதாளம் சென்றுவிடும் என நீங்கள் நம்புகிறீர்கள் என எதிர்பார்க்கிறேன்
"இலக்குவனாரின் கட்டுரைகளை தமிழ் பாட புத்தகங்களில் போட்டால், ..." என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

1. இலக்குவனாரின் கட்டுரைகளைத் தமிழ்ப் பாட நூல்களில் போடவேண்டுமா?
---------------------------------------------------------------------------------------
ஏன் கூடாது? எந்த ஒரு தமிழ் அறிஞரின் கருத்தையும் எந்த ஒரு தமிழனும் படித்துத் தெரிந்துகொள்ளத் தடை என்ன? 

2. இலக்குவனாரின் கட்டுரைகளைத் தமிழ்ப் பாட நூல்களில் போடத் தடை செய்யலாமா?
---------------------------------------------------------------------------------------------------
அப்படித் தடை செய்வது தேவையில்லை. அது கூடவும் கூடாது. அது ... கிரந்த எழுத்துக்களை ஒருங்குறிக் கணினி மொழியில் (unicode) தடை செய்வது போன்றது. "இது இருந்தால்தானே மக்கள் பயன்படுத்துவார்கள்; இதை இல்லாமல் செய்துவிடவேண்டும்" என்று சிலர் முயலுவதுபோல ... ஒரு பக்கத்தில் சாரும் நெறியாக இருக்கும். "எங்களிடம் இருப்பதைத் தெரிவிப்போம் ... வேண்டியவர் வேண்டுவதை எடுத்துக்கொள்ளட்டும்" என்பது சண்டையில்லாத வழக்கு, இல்லையா? எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.  

3. இலக்குவனாரின் கட்டுரைகளைத் தமிழ்ப் பாட நூல்களில் போட்டால் என்ன ஆகும்?
-------------------------------------------------------------------------------------------------
ஒரு மண்ணும் ஆகாது. புதிய கருத்துக் குழப்பம் ஒன்றும் ஏற்படாது. ஏற்கனவே இருக்கும் குழப்பம் இருந்துகொண்டே இருக்கும், தீராது. 

4. இலக்குவனாரின் கட்டுரைகளைத் தமிழ்ப் பாட நூல்களில் போட்டால் என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
"முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவம்" என்பதைப் பின்பற்றுவதோடு ... ஆராய்ச்சி முறையை நெறிப்படுத்த வேண்டும். இலக்குவனார் சொன்னதை அவர் மாணவியாகிய நான் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால் .... என் கருத்துக்களை முன்வைக்க எனக்கு உரிமை வேண்டும். அதைத் தமிழகம் மதிக்க வேண்டும்.
இலக்குவனாரே அவருடைய ஆசிரியர் பி. சா. சுப்பிரமணிய சாத்தியாரின் கருத்துக்களை 100% ஏற்றுக்கொள்ளவில்லை, தமிழுலகம் அறிந்த உண்மை! அதே முறைப்படித்தானே ... இலக்குவனாரும் அவருடைய மாணவர்களை, அவரைப் பின்பற்றுவோரைப் பற்றியும் எதிர்பார்த்திருப்பார்?!
சுருக்கமாகச் சொன்னால் ...
ஆராய்ச்சி முறை என்பதை நெறிப்படுத்தி ஒருவருடைய கருத்தை நேர்மையுடன் வெளிப்படுத்துவதற்கு ஏற்ற வழி வகுக்கவேண்டும்.

பிற பின்னர்,
ராஜம்

Vij

unread,
Oct 16, 2011, 6:59:00 PM10/16/11
to mint...@googlegroups.com
அன்புள்ள முனைவர் ராஜம்
 
உங்கள் குருபக்தி புரிகிறது.
 
 
நான் ஒரு கூடை பழத்திற்க்கு ஒரு பழம் சாம்பிள் என பார்ப்பவன்.  நான் பார்த்த – படித்த – பழம்,  இந்த இழையில் வைக்கப்பட்ட கருத்து அழுகிய பழம். நீங்கள் கூடையில் மற்ற பழங்களை பார்க்கிறீர்கள் போலுள்ளது. அப்படியே இருக்கட்டும்.
 
 
நாம் பள்ளிக்கூட பாடதிட்டத்தை பற்றிதான் பேசுகிறோம், அதில் பள்ளி மாணவர்களுக்கு எளிதாக மொழி பற்றிய அறிமுகம் தேவை அவ்வளவுதான். அதில் இலக்குவனார் போன்ற ஒரு ஐடியாலஜி பிரச்சாரங்கள் தேவையற்றவை. ஒரு பள்ளி மாணவி தமிழ்தான் இந்திய மொழிகளுக்கு தாய், சமஸ்கிருதம் தமிழை அழித்தது என்ற Victimization stories பற்றி படித்தால், மொழியைப் பற்றிய ஒரு அறிவும் வளராது, அறிவு வளர்ச்சிக்கு தடங்கலாகத்தான் இருக்கும்.
 
 
”தடை செய்வது”  உங்கள் வார்த்தை , என வார்த்தை அல்ல., என் பிரச்சினை அல்ல. அது உங்கள் கேள்வி. 
 
நீங்கள் ஏற்கனவே தமிழ் பாட புத்தகங்கள் குழப்பத்தை விளைவிக்கின்றன, அதனால் இலக்குவனாரின் கருத்து இன்னும் குழப்புவதற்க்கு ஒன்றும் இல்லை, என்றால் சரி, அப்படியே இருக்கட்டும்.
 
 
விஜயராகவன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

rajam

unread,
Oct 16, 2011, 9:12:05 PM10/16/11
to mint...@googlegroups.com
:-) :-) :-)

செல்வன்

unread,
Oct 16, 2011, 9:37:26 PM10/16/11
to mint...@googlegroups.com
ஆரிய தமிழ் பாட நூல், திராவிட தமிழ்பாட நூல், அணிசேரா தமிழ்பாட நூல் என மூன்று நூல்களை கொண்டுவரலாம்.

மாணவர்கள் எதை படிப்பது என்பதை சாய்சில் விடலாம்.

--
செல்வன்



rajam

unread,
Oct 16, 2011, 9:43:40 PM10/16/11
to mint...@googlegroups.com
எனக்குத் தெரியும், செல்வனிடம் ஒரு தெளிவு இருக்கும் என்று! Leave it to Beaver! :-) :-) :-) 

செல்வன்

unread,
Oct 16, 2011, 9:51:02 PM10/16/11
to mint...@googlegroups.com


2011/10/16 rajam <ra...@earthlink.net>

எனக்குத் தெரியும், செல்வனிடம் ஒரு தெளிவு இருக்கும் என்று! Leave it to Beaver! :-) :-) :-) 

:-))))

இம்சை அரசன் படத்தில் "வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே" என சொல்லுவார் வடிவேலு.அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது அம்மா.

லெமூரியா, கிமு 14 பில்லியன் பிசி எல்லாம் பசங்க படிச்சுதான் ஆகணும்.அவர்களுக்கும் நம் வரலாறு தெரியவேண்டாமா?:-)

rajam

unread,
Oct 16, 2011, 9:57:38 PM10/16/11
to mint...@googlegroups.com
நல்ல வேளை செல்வன், இனிமே பள்ளிக்கூடம் போகும் தேவை எனக்கு இல்லை, நான் பிழைத்துக்கொண்டேன்!
இதுலெ என்ன வேடிக்கை-னா ... தமிழிலிருந்து ஆரிய எழுத்துக்கள் பிறந்தன என்றால் ... ஆரியமும் தமிழ்தானே? லாஜிக் எப்படி? நம்ம வீட்டுப் பொண்ணெக் கலியாணம் செஞ்சு கொடுத்தா ... அவ வயித்துப் பேரப்பிள்ளைகள் நம்ம பிள்ளைகள் ஆகாதா? இலக்குவனார் இன்னிக்கி இருந்தா நானே நல்லாக் கேப்பேன்!
:-) :-) :-)

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2011, 9:58:19 PM10/16/11
to mint...@googlegroups.com
யாரடிச்சுச் சொல்லுவார் அவரிஷ்டம் நாரதரே.  மின் தமிழில் தனிக் கருத்தை உரிமையுடன் உரக்கச் சொல்ல என்றுமே தடை கூடாது.  ஆயினும் சமகாலத்தில் வாழ்ந்து மரைந்த அறிஞர்கள் (மனிதர்கள்) பற்றித் திறனாய்வு செய்து எழுதாமல் தனிக் கருத்தை எழுதும்போது அவருடைய மாணவர்கள் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மனம் படிக்கும்போது வேதனைப் படக்கூடாது என்பதை எழுதுவோர் நினைவில் நிறுத்துதல் நலம்
கல்லறைக்குச் சென்று அங்கே எழுதப்பட்டிருக்கும் வாசகத்தைப் படியுங்கள் தமிழன் மறைந்தவர் பற்றி நலினமாகவே பேசி எழுதி வந்திருக்கிறான்
இலக்குவனாருடன் 1960-களில் தொடர்பில் இருந்தவன் என்ற முறையில் மாணவர்கள் இந்தி எதிர்ப்பு என்பதைவிடத் தாய்மொழிப்பற்று என்பதைத் தூண்டி எரிய விட்ட மொழிக்காவலர் என்பதை அறிவேன்.  அவர் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக ஆட்சியாளர்களால் உரிய மதிப்புக் கொடுக்காமல் மறைக்கப் பட்டவர் என்பது உண்மை.
கட்டுரை காலத்தின் கண்ணாடி.  இப்படிக் கலர்க் கண்ணாடி போட்டுக்கொண்டு படித்தால் எல்லாம் நிறம் மாறித்தோன்றும் காட்சிப்பிழை உருவாகிவிடும்
நாகராசன்

2011/10/17 rajam <ra...@earthlink.net>

Geetha Sambasivam

unread,
Oct 16, 2011, 10:00:21 PM10/16/11
to mint...@googlegroups.com
இது நல்ல தெளிவான கருத்து.

2011/10/16 செல்வன் <hol...@gmail.com>

Raja sankar

unread,
Oct 16, 2011, 10:27:59 PM10/16/11
to mint...@googlegroups.com
தமிழில் இருந்து ஆரியம் வந்து என்று சொல்கிறார்கள், கூடவே ஆரியர்கள் தமிழர்களை அடிமைப்படுத்தினார்கள் என்றும் சொல்கிறார்கள். என்ன லாஜிக்கோ என்னமோ தமிழ்பல்கலைகழத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கே புரியும்.

:-)))))

ராஜசங்கர்



2011/10/17 rajam <ra...@earthlink.net>

Geetha Sambasivam

unread,
Oct 16, 2011, 10:31:23 PM10/16/11
to mint...@googlegroups.com
கூடவே ஆரியர்கள் தமிழர்களை அடிமைப்படுத்தினார்கள் //
 

"கைபர் கணவாய் வழியாக வந்து"
2011/10/16 Raja sankar <errajasa...@gmail.com>

செல்வன்

unread,
Oct 17, 2011, 12:21:07 AM10/17/11
to mint...@googlegroups.com


2011/10/16 rajam <ra...@earthlink.net>

நல்ல வேளை செல்வன், இனிமே பள்ளிக்கூடம் போகும் தேவை எனக்கு இல்லை, நான் பிழைத்துக்கொண்டேன்!
இதுலெ என்ன வேடிக்கை-னா ... தமிழிலிருந்து ஆரிய எழுத்துக்கள் பிறந்தன என்றால் ... ஆரியமும் தமிழ்தானே? லாஜிக் எப்படி? நம்ம வீட்டுப் பொண்ணெக் கலியாணம் செஞ்சு கொடுத்தா ... அவ வயித்துப் பேரப்பிள்ளைகள் நம்ம பிள்ளைகள் ஆகாதா? இலக்குவனார் இன்னிக்கி இருந்தா நானே நல்லாக் கேப்பேன்!
:-) :-) :-)


நான் பள்ளியில் படித்த காலங்களில் பொன்மன செம்மல் எம்ஜிஆர் என பாடங்களை படித்த நினைவு எல்லாம் வருது:-)

செல்வன்

unread,
Oct 17, 2011, 12:21:26 AM10/17/11
to mint...@googlegroups.com


ஸ்காலர் என்றால் அவர் எந்த துறையில் ஸ்காலர் என முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.உதாரணமாக ஒருவர் கணிதத்தில் முனைவர் என்றால் கணிதம் பற்றி அவர் சொல்வதை நம்பலாம்.அதே வரலாறு,புவியியல் என அவர் எதையாவது சொன்னால் நம்பவேண்டியதில்லை.காரனம் அது அவர் துறை அல்ல.அந்த துறைகளில் அவருக்கு இருக்கும் ஞானம் நம்மை போன்றதே.

அதனால் மொழி,வரலாறு,புவியியல் என அனைத்து துறைகளிலும் கலந்துகட்டி அடிக்கும் அறிஞர்கள் சொல்வதை ஒரு சிட்டிகை உப்புடன் சேர்த்து தான் நாம் உட்கொள்ள வேண்டும்.

rajam

unread,
Oct 17, 2011, 12:45:21 AM10/17/11
to mint...@googlegroups.com, Hari Krishnan

அதனால் மொழி,வரலாறு,புவியியல் என அனைத்து துறைகளிலும் கலந்துகட்டி அடிக்கும் அறிஞர்கள் சொல்வதை ஒரு சிட்டிகை உப்புடன் சேர்த்து தான் நாம் உட்கொள்ள வேண்டும்.
அதனாலன்றே "உப்பமைந்தற்றால் புலவி" என்று கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே ... இல்லெ அதுக்கும் முன்னாலெயா ... நம் ஐயன் உரைத்தது!

நம் அமெரிக்க-ஆங்கில மொழிச் செல்வன் உணர்த்துவது என்ன-ங்குறாபோல?

எங்கே ஹரி?
:-) :-) :-)

DEV RAJ

unread,
Oct 17, 2011, 12:51:28 AM10/17/11
to மின்தமிழ்
அங்கம் வடசொல் என முடிவு செய்து ஓரங்கட்டுவதும் அவரவர் இஷ்டம்.
அங்கத்தினரை 'உறுப்பினர்' என்று தமிழ் செய்வதும் அவரவர் இஷ்டம்.
அங்கத்தின் எதிர்மறை அநங்கனை அணங்கிலிருந்து பிறந்தவன் எனக்காட்டுவதும்
அவரவர் இஷ்டம்.


யாரடிச்சுச் சொல்லுவார் அவரிஷ்டம் நாரதரே !

தேவ்

Hari Krishnan

unread,
Oct 17, 2011, 12:58:35 AM10/17/11
to rajam, mint...@googlegroups.com


2011/10/17 rajam <ra...@earthlink.net>

எங்கே ஹரி?
:-) :-) :-)

உப்புன்னா என்னன்னு ‘முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரர்’ நாமக்கல்லைக் கேட்டு அர்த்தம் சொல்லுவார்.  அதுக்கப்புறம் புலவி என்பதிலிருந்துதான் புலாவ் என்று இன்றைக்குச் சொல்லப்படும் புலவு வந்தது என்பதை நிறுவுவார்.  அதுக்கும் அப்புறம், இந்தப் புலாவ்ல இருந்துதான் ‘கூப்பிடு’ என்னும் பொருளுள்ள ஹிந்தி bhuலாவ் உண்டானது என்று விளக்குவார்.  அதுக்கு நூறாயிரம் வெளிநாட்டு அறிஞர்கள் பெயர்களைக் கடகடவென உதிர்ப்பார்.  பூரி உbபி இருக்கிறதல்லவா, அந்த குஷ்பு ubbu தான் இந்த உப்பு அப்படின்னும் சொல்லக்கூடும்.  

எல்லாம் முடிஞ்சப்புறம், புலவியை வெறுத்தொதுக்கிய சமணர்கள் உப்பையும் ஒதுக்கினார்கள் என்று முடியும்.  தொட்டுக்கொள்ள பானுகுமாரைக் கூப்பிடுவார். 

எல்லாம் அரங்கேறி முடிஞ்சாகட்டும்.  அதுக்குள்ள ஹரிக்கென்ன hurry?
--
அன்புடன்,
ஹரிகி.

செல்வன்

unread,
Oct 17, 2011, 1:00:37 AM10/17/11
to mint...@googlegroups.com


2011/10/16 rajam <ra...@earthlink.net>

அதனாலன்றே "உப்பமைந்தற்றால் புலவி" என்று கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே ... இல்லெ அதுக்கும் முன்னாலெயா ... நம் ஐயன் உரைத்தது!

நம் அமெரிக்க-ஆங்கில மொழிச் செல்வன் உணர்த்துவது என்ன-ங்குறாபோல?


மனிதனின் வரம்புகளை எடுத்துரைப்பது அன்றி வேறு என்ன சொல்ல போகிறேன்? அதனால் என்னை பற்றி நான் உரைப்பது மட்டுமே பொருத்தமாக இருக்கும்:-)

நான் பலதுறைகளை பற்றியும் ஆணித்திரமாக எழுதுவேன்.ஆனால் அவற்றில் சந்தை,வணிகம் தவிர்த்து நான் வேறு எதை எழுதினாலும் அதை ஒரு சிட்டிகை....சொல்லபோனால் ,சில சமயங்களில் ஒரு பெரிய தேக்கரண்டி உப்புடனே அனைவரும் உட்கொள்ள வேண்டும் என பணிவன்புடன் வேண்டுகோள் விடுத்து அமர்கிறேன்

rajam

unread,
Oct 17, 2011, 1:09:10 AM10/17/11
to Hari Krishnan, mint...@googlegroups.com

அதுக்குள்ள ஹரிக்கென்ன hurry?
"ஹா ஹா"-காரம் ஓங்காரம்போல் ஒலிக்கவே!!
:-) :-) :-)

Innamburan Innamburan

unread,
Oct 17, 2011, 1:12:24 AM10/17/11
to mint...@googlegroups.com
என்ன தான் ஹர்ரி இருந்தாலும், ஹரி எதையும் பர்ரி பண்ணமாட்டார். சரியா?
இன்னம்பூரான்

செல்வன்

unread,
Oct 17, 2011, 1:13:09 AM10/17/11
to mint...@googlegroups.com


2011/10/16 Hari Krishnan <hari.har...@gmail.com>

உப்புன்னா என்னன்னு ‘முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரர்’ நாமக்கல்லைக் கேட்டு அர்த்தம் சொல்லுவார்.  அதுக்கப்புறம் புலவி என்பதிலிருந்துதான் புலாவ் என்று இன்றைக்குச் சொல்லப்படும் புலவு வந்தது என்பதை நிறுவுவார்.  அதுக்கும் அப்புறம், இந்தப் புலாவ்ல இருந்துதான் ‘கூப்பிடு’ என்னும் பொருளுள்ள ஹிந்தி bhuலாவ் உண்டானது என்று விளக்குவார்.  அதுக்கு நூறாயிரம் வெளிநாட்டு அறிஞர்கள் பெயர்களைக் கடகடவென உதிர்ப்பார்.  பூரி உbபி இருக்கிறதல்லவா, அந்த குஷ்பு ubbu தான் இந்த உப்பு அப்படின்னும் சொல்லக்கூடும்.  

எல்லாம் முடிஞ்சப்புறம், புலவியை வெறுத்தொதுக்கிய சமணர்கள் உப்பையும் ஒதுக்கினார்கள் என்று முடியும்.  தொட்டுக்கொள்ள பானுகுமாரைக் கூப்பிடுவார். 


நான் சொன்னது இலக்குவனாரை.

தமிழறிஞர்கள் என்பதற்காக அவர்கள் வரலாற்றை பற்றி எழுதினால் அதை நாம் "இலக்குவனாரே சொல்லிவிட்டார்" என  ஏற்ருகொள்வதை விட ஒரு சிட்டிகை உப்புடன் அதை உட்கொள்வதே நலம் என குறிப்பிட்டேன்.ஆனால் ஆட்டம் பானுகுமாருக்கு ஓடிடுச்சு..:-)

Banukumar Rajendran

unread,
Oct 17, 2011, 1:16:52 AM10/17/11
to mint...@googlegroups.com
//ஆனால் ஆட்டம் பானுகுமாருக்கு ஓடிடுச்சு..:-)
//


ஒரு பழமொழி உண்டு!

போவது போவட்டும் சமணன் தலைக்கே!

:-)))



இரா.பானுகுமார்,
சென்னை

2011/10/17 செல்வன் <hol...@gmail.com>

Vijay Vanbakkam

unread,
Oct 17, 2011, 3:27:26 AM10/17/11
to mint...@googlegroups.com
 

Date: Mon, 17 Oct 2011 07:28:19 +0530

Subject: Re: [MinTamil] Re: தமிழ்மணி - பழகு தமிழ் - வேருக்கு நீர் வார்த்தவர்கள்!


யாரடிச்சுச் சொல்லுவார் அவரிஷ்டம் நாரதரே.  மின் தமிழில் தனிக் கருத்தை உரிமையுடன் உரக்கச் சொல்ல என்றுமே தடை கூடாது.  ஆயினும் சமகாலத்தில் வாழ்ந்து மரைந்த அறிஞர்கள் (மனிதர்கள்) பற்றித் திறனாய்வு செய்து எழுதாமல் தனிக் கருத்தை எழுதும்போது அவருடைய மாணவர்கள் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மனம் படிக்கும்போது வேதனைப் படக்கூடாது என்பதை எழுதுவோர் நினைவில் நிறுத்துதல் நலம்
 
நாம் ஒருவரின் கருத்துகளைப் பற்றித்தான் விவாதிக்கின்றோம் , அவருடைய குணாதிசியங்கலையோ தனிமனித வாழ்க்கை விவரங்களையோ விமர்சிக்கவில்லை. ஒருவருடைய கருத்தை விவாதிப்பதில் , அவருடைய நண்பர்களின் மனம் நோகிறது என்பது விவாதங்களை உணர்ச்சிகளினால் தடுப்பதாகும்.  
 
விஜயராகவன்
 
 

Subashini Tremmel

unread,
Oct 17, 2011, 3:48:48 PM10/17/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
2011/10/17 செல்வன் <hol...@gmail.com>
ஆரிய தமிழ் பாட நூல், திராவிட தமிழ்பாட நூல், அணிசேரா தமிழ்பாட நூல் என மூன்று நூல்களை கொண்டுவரலாம்.


மாணவர்கள் எதை படிப்பது என்பதை சாய்சில் விடலாம்.

முதலில் மாணவர்களுக்கு இவை மூன்றின் வேறுபாடுகள் என்ன என்று தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. மாணவர்களை விடுவோம்.. எத்தனை கல்லூரி ஆசிரியர்களுக்கு தமிழக வரலாறு, தமிழ் ஆய்வுகள் பற்றி விவரங்கள் தெரிந்திருக்கின்றன என்பதும் சந்தேகமே.. ஆசிரியர்களை குறைத்து மதிப்பிடுவதாக என்ன தவறாக நினைக்க வேண்டாம்.. நேரடி அனுபவத்தில் தான் சொல்கிறேன்.. உணர்வுகள் அடிப்படையில் முடிவை செய்து விட்டு ஆய்வு செய்யும் பழக்கம் அதிகரித்து உள்ளது..

சுபா

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Innamburan Innamburan

unread,
Oct 17, 2011, 3:59:58 PM10/17/11
to mint...@googlegroups.com
அன்பின் ஸுபாஷிணி,
நீங்கள் சொல்வது சரியே. மின் தமிழ் உலகில் சில புலவர்கள், நல்லாசிரியர்கள் இருக்கின்றனர். நாம் ஒரு இலக்கிய இழை ஒன்றை ஒரு முன்மாதிரியாக,[ மாடல்] நடத்திகாட்டினால், நலம் பயக்கும்.

செல்வன்

unread,
Oct 18, 2011, 2:13:00 AM10/18/11
to mint...@googlegroups.com
2011/10/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

முதலில் மாணவர்களுக்கு இவை மூன்றின் வேறுபாடுகள் என்ன என்று தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. மாணவர்களை விடுவோம்.. எத்தனை கல்லூரி ஆசிரியர்களுக்கு தமிழக வரலாறு, தமிழ் ஆய்வுகள் பற்றி விவரங்கள் தெரிந்திருக்கின்றன என்பதும் சந்தேகமே.. ஆசிரியர்களை குறைத்து மதிப்பிடுவதாக என்ன தவறாக நினைக்க வேண்டாம்.. நேரடி அனுபவத்தில் தான் சொல்கிறேன்.. உணர்வுகள் அடிப்படையில் முடிவை செய்து விட்டு ஆய்வு செய்யும் பழக்கம் அதிகரித்து உள்ளது..


ஆய்வு யார் வேண்டுமானாலும் செய்யலாம். அது அறிஞர் சபை ஏறுமா என்பது வேறு விஷயம்.

தமிழ்நாட்டு கல்வி தந்தைகளின் கையில் கல்வி போனபிறகு தந்தைகளுக்கு கல்லூரி நடத்தி போரடித்துவிட்டது.அவற்றை பல்கலைகழகமாக மாற்ற விரும்புகின்றனர்.நிறைய நிகர்நிலை பல்கலைககங்கள் உருவாகின்றன.மேனேஜிங் டிரஸ்டியாக இருந்தவர்கள் பல்கலைக்ழக வேந்தர்களாக உருமாற்றம் பெற்றுவிட்டனர்.விஜய்,கமல் போன்ற நடிகர் திலகங்கள் டாக்டர் பட்டம் பெற்றனர்.

கல்லூரி பல்கலைகழகமாக் ஆனால் ஆசிரியர்கள் ஆராய்ச்சி நடத்த வேண்டியது அவசியம்.அதனால் பேராசிரியர்களை ஆய்வு நடத்த தூண்டுகின்றனர். நிறைய கல்லூரிகள் ஆராய்ச்சி ஜர்னல்களை வெளியிடுகின்றன.அவற்றில் இந்த ஆய்வுகட்டுரைகள் வெளியாகின்றன.கான்பரன்ஸ்களையும் அடிக்கடி நடத்துகிறார்கள்.ஆசிரியர்களை நூல் எழுத சொல்லி விரட்டுகின்ரனர்.அதனால் ஆசிரியர்கள் அச்சகங்களை அணுகி காசு கொடுத்து செல்ஃப் பப்ளிஷ் செய்துகொண்டிருந்தனர்.பிடிஎப்ப்பும்,ப்ரிண்டரும்,ஜெராக்ஸ் மெஷினும் இருந்தால் நூல் ரெடி தானே?அதன்பின் விழித்துகொண்டு "ஐ.எஸ்.பி.என் நம்பர் வாங்கின நூலை தான் ஏற்றுகொள்வோம் என்றார்கள்.ஐயாயிரம் ரூபாய் கொடுத்தால் ஐ.எஸ்.பி.என் நம்பர் கிடைக்கும் என்ற தகவல் கிடைத்ததால் அந்த சிக்கலும் தற்போது தீர்ந்துவிட்டது.

கூகிள் இருப்பதால் ஆராய்ச்சி செய்ய,கட்டுரை எழுத நல்ல வாய்ப்பு.கட் செய்து பேஸ்ட் செய்வதால் தான் அதை கட்டுரை என அழைக்கிறார்களோ என்னவோ?

Innamburan Innamburan

unread,
Oct 18, 2011, 3:09:10 AM10/18/11
to mint...@googlegroups.com
நாம் வேறு வேறு அலை வரிசைகளில் அளவளாவுகிறோம், செல்வன். 

‘...கூகிள் இருப்பதால் ஆராய்ச்சி செய்ய,கட்டுரை எழுத நல்ல வாய்ப்பு.கட் செய்து பேஸ்ட் செய்வதால் தான் அதை கட்டுரை என அழைக்கிறார்களோ என்னவோ?...’


~ பொழிப்புரை அளித்து, இடம், பொருள், ஏவல் பகர்ந்து, கருத்துக்கள் உரைத்து, விரிவுரை அளித்தால், மின் தமிழ் இலக்கிய உலகம் பயன் பெறும்.

நன்றி, வணக்கம்.

Nagarajan Vadivel

unread,
Oct 18, 2011, 10:47:13 AM10/18/11
to mint...@googlegroups.com
இப்பவெல்லாம் கூகிள் வெறும் ஜுஜுப்பி.  எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் கூகிளாண்டவரை மதிப்பதில்லை.  இப்பவெல்லாம் கட்டுரை ஆய்வுக்கட்டுரை எழுத மென்பொருள் வாடகை மங்கைத்தாயார் இணையத்தில் கிடைக்கிறது
கட்டுரைத் தலைப்பைச் சொன்னால மென்பொருளே இணையத்தைத் தேடி கட்டுரை எழுதிவிடும்.  அது போலவே ஆய்வுக் கட்டுரைகளும்
ஆய்வுக்கட்டுரை எழுதும் மென்பொருள் பற்றி அறிய

http://pdos.csail.mit.edu/scigen/

இந்த நிகழ்வு பற்றிய விழியம்

http://video.google.com/videoplay?docid=-4970760454336883347
இதன் தொடர்ச்சியாக கட்டி ஒட்டும் கட்டுரைகளைக் கண்டிபிடிக்கும் வேலை ஆசிரியர்களிடமும் மற்ற கண்கானிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன
காப்பியா என்று கண்டறியும் மென்பொருளை நான் பயன் படுத்துகிறேன்.  அதைக்கொண்டு கட்டி ஒட்டும் கட்டுரை தயார் செய்யப்பட்டதா என்று அறிந்து மத்ப்பீடு செய்வது ஆசிரியரின் கடமை என்றாகிவிட்டது
என்ன கொடுமையடா இது ஆராய்ச்சி மாணவ்ர்களை ஆற்றுப்படுத்துவதைவிட்டு இரும்புத்தொப்பி பர்மா போலீஸாக மாறிப்போய் விட்டேனே
நாகராசன்

2011/10/18 Innamburan Innamburan <innam...@gmail.com>
--

rajam

unread,
Oct 18, 2011, 2:26:06 AM10/18/11
to mint...@googlegroups.com
On Oct 17, 2011, at 11:13 PM, செல்வன் wrote:

2011/10/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
முதலில் மாணவர்களுக்கு இவை மூன்றின் வேறுபாடுகள் என்ன என்று தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. மாணவர்களை விடுவோம்.. எத்தனை கல்லூரி ஆசிரியர்களுக்கு தமிழக வரலாறு, தமிழ் ஆய்வுகள் பற்றி விவரங்கள் தெரிந்திருக்கின்றன என்பதும் சந்தேகமே.. ஆசிரியர்களை குறைத்து மதிப்பிடுவதாக என்ன தவறாக நினைக்க வேண்டாம்.. நேரடி அனுபவத்தில் தான் சொல்கிறேன்.. உணர்வுகள் அடிப்படையில் முடிவை செய்து விட்டு ஆய்வு செய்யும் பழக்கம் அதிகரித்து உள்ளது..


ஆய்வு யார் வேண்டுமானாலும் செய்யலாம். அது அறிஞர் சபை ஏறுமா என்பது வேறு விஷயம்.

தமிழ்நாட்டு கல்வி தந்தைகளின் கையில் கல்வி போனபிறகு தந்தைகளுக்கு கல்லூரி நடத்தி போரடித்துவிட்டது.அவற்றை பல்கலைகழகமாக மாற்ற விரும்புகின்றனர்.நிறைய நிகர்நிலை பல்கலைககங்கள் உருவாகின்றன.மேனேஜிங் டிரஸ்டியாக இருந்தவர்கள் பல்கலைக்ழக வேந்தர்களாக உருமாற்றம் பெற்றுவிட்டனர்.விஜய்,கமல் போன்ற நடிகர் திலகங்கள் டாக்டர் பட்டம் பெற்றனர்.

கல்லூரி பல்கலைகழகமாக் ஆனால் ஆசிரியர்கள் ஆராய்ச்சி நடத்த வேண்டியது அவசியம்.அதனால் பேராசிரியர்களை ஆய்வு நடத்த தூண்டுகின்றனர். நிறைய கல்லூரிகள் ஆராய்ச்சி ஜர்னல்களை வெளியிடுகின்றன.அவற்றில் இந்த ஆய்வுகட்டுரைகள் வெளியாகின்றன.கான்பரன்ஸ்களையும் அடிக்கடி நடத்துகிறார்கள்.ஆசிரியர்களை நூல் எழுத சொல்லி விரட்டுகின்ரனர்.அதனால் ஆசிரியர்கள் அச்சகங்களை அணுகி காசு கொடுத்து செல்ஃப் பப்ளிஷ் செய்துகொண்டிருந்தனர்.பிடிஎப்ப்பும்,ப்ரிண்டரும்,ஜெராக்ஸ் மெஷினும் இருந்தால் நூல் ரெடி தானே?அதன்பின் விழித்துகொண்டு "ஐ.எஸ்.பி.என் நம்பர் வாங்கின நூலை தான் ஏற்றுகொள்வோம் என்றார்கள்.ஐயாயிரம் ரூபாய் கொடுத்தால் ஐ.எஸ்.பி.என் நம்பர் கிடைக்கும் என்ற தகவல் கிடைத்ததால் அந்த சிக்கலும் தற்போது தீர்ந்துவிட்டது.
என்ன அசிங்கமான கேவலமான கொடுமை இது, செல்வன்?
எப்படி இதெயெல்லாம் தடுக்க முடியும்? தடுக்க முடியுமா? தடுக்கணுமா? அப்படியே விட்டுறணுமா? அதோடெ ... நாம யாரு, வெளிநாட்டு ஆட்கள், கேக்கிறது, இல்லையா?
சரி, இப்பொ நான் தூங்கப்போறேன். :-) 


கூகிள் இருப்பதால் ஆராய்ச்சி செய்ய,கட்டுரை எழுத நல்ல வாய்ப்பு.கட் செய்து பேஸ்ட் செய்வதால் தான் அதை கட்டுரை என அழைக்கிறார்களோ என்னவோ?

--
செல்வன்




செல்வன்

unread,
Oct 18, 2011, 12:15:31 PM10/18/11
to mint...@googlegroups.com


2011/10/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

http://video.google.com/videoplay?docid=-4970760454336883347
இதன் தொடர்ச்சியாக கட்டி ஒட்டும் கட்டுரைகளைக் கண்டிபிடிக்கும் வேலை ஆசிரியர்களிடமும் மற்ற கண்கானிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன
காப்பியா என்று கண்டறியும் மென்பொருளை நான் பயன் படுத்துகிறேன்.  அதைக்கொண்டு கட்டி ஒட்டும் கட்டுரை தயார் செய்யப்பட்டதா என்று அறிந்து மத்ப்பீடு செய்வது ஆசிரியரின் கடமை என்றாகிவிட்டது
என்ன கொடுமையடா இது ஆராய்ச்சி மாணவ்ர்களை ஆற்றுப்படுத்துவதைவிட்டு இரும்புத்தொப்பி பர்மா போலீஸாக மாறிப்போய் விட்டேனே


ஆம் ஐயா..இதுபோன்ற சாப்ட்வேர்கள் இப்போது பரவலாக பயன்படுத்தபடுகின்றன.ஆசிரியர் வேலை இப்போது துப்பறியும் நிபுணர் வேலை போல் ஆகிவிட்டது

செல்வன்

unread,
Oct 18, 2011, 12:24:21 PM10/18/11
to mint...@googlegroups.com


2011/10/18 rajam <ra...@earthlink.net>

என்ன அசிங்கமான கேவலமான கொடுமை இது, செல்வன்?
எப்படி இதெயெல்லாம் தடுக்க முடியும்? தடுக்க முடியுமா? தடுக்கணுமா? அப்படியே விட்டுறணுமா? அதோடெ ... நாம யாரு, வெளிநாட்டு ஆட்கள், கேக்கிறது, இல்லையா?


இதில் பல தரப்புகளில் தவறுகள் நடக்கின்றன அம்மா...கல்லூரியை நிகர்நிலை பல்கலைகழகமாக ஆக்கியே தீர்வது என கல்விதந்தைகள் துடிக்கின்றனர்.அதிகரிக்கும் போட்டியால் நாக் (NAAC) போன்ற அமைப்புகளின் தரகட்டுபாட்டை பெறுவதும் முக்கியம் ஆகிறது.அதனால் ஆசிரியர்களை ஆராய்ச்சி செய்ய சொல்லி விரட்டுகின்றனர்.அவர்களுக்கு எந்த நிதி உதவி, டேட்டா பேஸ் செர்ச் ஆகியவற்றுக்கும் உதவ முன்வருவதில்லை.முன்வந்தாலும் அதற்கு கட்டவேண்டிய பணம் பெரும்தொகையில் இருக்கிறது.இப்படி கூழ்க்கும் ஆசை,மீசைக்கும் ஆசை என்ர நிலையில் கல்விதந்தைகள் இருப்பதால் ஆசிரியர்களும் இம்மாதிரி செய்யும் நிலை உருவாகிறது.

இந்த சூழலை முழுக்க மாற்ர நம்மால் முடியாது.ஆனால் ஒரு சில நல்ல மாற்றங்களை கொண்டுவர இயலும்.என்னால் முடிந்தவரை சில தமிழக ஆசிரியர்களின் பி.எச்டிக்கு உதவி வருகிறேன்.இந்திய கருத்தரங்குகளில் ரிவ்யூவர் ஆக இருந்து கட்டுரை தரத்தை உயர்த்த ஆலோசனைகள் கூறுகிறேன்.பல ஆசிரியர்களின் கட்டுரைகளை ஜர்னல்களில் பதிப்பிக்க ஆலோசனை,பீட்பேக் அளிக்கிறேன்.நான் பார்த்தவரை ஆசிரியர்களிடம் செய்யவேண்டும் என்ற துடிப்பு கானபடுகிறது.ஆனால் அதற்கான சரியான வழிகாட்டல் இல்லை.நிதி உதவி மற்றும் போதுமான பயிர்சி இருந்தால் அவர்களில் பலரும் நல்ல படைப்புகளை படைப்பார்கள் என நம்புகிறேன்.

rajam

unread,
Oct 18, 2011, 1:04:55 PM10/18/11
to mint...@googlegroups.com, செல்வன்
நல்லது செய்கிறீர்கள், பாராட்டுகிறேன் செல்வன்! தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் துறையாவது முன்னேறட்டும்.

என் கதை வேறு மாதிரி. பென்சில்வேனியாவில் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்தபோது தமிழகத்திலிருந்து அடிக்கடி ... பி.எச்டி ஆய்வுக்கட்டுரைகள் மதிப்பீட்டிற்கு வரும். மிகவும் கருத்தோடு நேரம் செலவழித்துப் படித்துக் கருத்துரையும் பரிந்துரையும் அனுப்பிவைப்பேன். (ஒரு நாளும் ஒரு கட்டுரைக்குக்கூட அதைப் படித்து மதிப்பிட்டுக் கருத்துத் தெரிவித்ததற்காக அவர்கள் தருவதாகச் சொன்ன பணம் தந்ததில்லை என்பது வேறு செய்தி!) ஒரு முறை டி.லிட் கட்டுரை கூட மதிப்பீட்டுக்காக வந்தது.
பல்கலைக்கழகத்து வேலையை விட்டு நானாக வெளியேறின பிறகு ... தமிழகத்திலிருந்து மதிப்பீட்டுக்காக என்று கட்டுரைகள் எனக்கு வருவதில்லை! அது எதைத் தெரிவிக்கிறது என்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள்!
சில ஆண்டுகளுக்கு முன்னர் ... பொன்னியின் செல்வனையும் Three Musketeers- ஐயும் ஒப்பிடும் ஆய்வுக்கட்டுரைக்கு உதவமுடியுமா என்று யாரோ கேட்டார்கள். சரி என்று சொன்னேன். ஒரு பேச்சையும் காணோம். பிறகு அதே கட்டுரையை மதிப்பீடு செய்ய முடியுமா என்று கேட்டார்கள். சரி என்று சொன்னேன். அதற்கும் மறுமொழி இல்லை. அண்மையில் அங்கே போனபோதுதான் தெரிந்தது -- "யுனிவர்சிட்டி அஃபிலியேஷன் இல்லெ-ங்க்றதாலெ அனுப்பலெ"-னு சொன்னாங்க!
பாத்துக்கோங்க. பேரளவில் மட்டுமே ஆசிரியர் ஆனாலும் ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தோடு ஒட்டிக்கொண்டிருந்தால் தமிழகமெங்கும் புகழ்மாலை சூட்டுவார்கள்! நீங்கள் பேரளவில் மட்டுமே ஆசிரியர் என்று நான் சொல்லவில்லை; தயவுசெய்து தவறாக நினைக்கவேண்டாம். பல கழிசடை ஆசிரியர்கள்/ஆய்வாளர் பற்றி எனக்குத் தெரியும். அதனால் இப்படித் துணிச்சலாகச் சொல்கிறேன்.

 
:-) :-) :-)

Nagarajan Vadivel

unread,
Oct 18, 2011, 2:20:22 PM10/18/11
to mint...@googlegroups.com
காலம் மாறுது கருத்தும் மாறுது.  செல்வன் அவர்களின் பார்வை ஏதோ இது தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது என்பது போல் பார்க்கும் பார்வை.  ஐயோ என்ன கொடுமை இது என்று கதறித்தள்ளிவிட்டார். 
நல்லா நாணயமாக இருந்த தமிழர்கள் கட் அண்ட் பேஸ்ட்டுக்குத் தள்ளி விட்டவர் யார்?
அமெரிக்காவில் யாரோ ஒருத்தன் எழுதி அதை மற்றவருக்கு பி.எல்.ஆர் எம்.எம்.ஆர் போன்று அனுமதிகளை வழங்குகிறார்கள்.  அதன்படி அந்த நூலில் ஆசிரியர் பெயர் என்று வாங்கியவர் பேரைப் போட்டுக்கொள்ளவும் அதைப் பிரித்து மேய்ந்து வலைத்தளங்களில் கட்டுரையாகவும் போட்டுக்கொள்ள நாடறிய விற்பவர்கள் அமெரிக்கர்கள்
தலைப்பைக் கொடுத்தால் கட்டுரை எழுதிக்கொடுக்க நிறைய முகமூடி எழுத்தாளர்கள் இணையத்தில் தங்கி இ- வணிகம் செய்பவர்களும் அமெரிக்கர்களே
தமிழன் கண்ணில் உள்ள தூசியைச் சரி செய்வதற்குமுன் அமெரிக்கக் கண்களில் உள்ள உத்திரங்களையும் கொஞ்சம் பாருங்கள்
தமிழகத்தில் அறிவுத்திறம் வாய்ந்த ஆய்வு மனப்பான்மையுள்ள முதுகலை மாணவர்கள் ஆய்வுக்கு வருவதில்லை என்பது பெருங்குறை
மூன்றாம்தர முதுகலை மாணவர்கள் இரண்டாம்தர வழிகாட்டிகளைக்கொண்டு முதல்தர ஆய்வாளர்களாக ஆவது எப்படி?
அமெரிக்காவில் டாக்டர் பட்டத்தின் முடிவு ஆய்வாளர்களாக வளருவதன் தொடக்கம்
தமிழகத்தில் டாக்டர் பட்டம் ஆராய்ச்சியாளன் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டான் என்பதன் அடையாளம்
செல்வன் சார் எங்களைப் போட்டுத் தாக்குவதற்குமுன் கொஞ்சம் உங்களைச் சுற்றிப் பாருங்கள் அங்கே என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா என்ன
நாகராசன்

2011/10/18 rajam <ra...@earthlink.net>

Innamburan Innamburan

unread,
Oct 18, 2011, 2:23:45 PM10/18/11
to mint...@googlegroups.com
நான் பார்த்தவரை ஆசிரியர்களிடம் செய்யவேண்டும் என்ற துடிப்பு கானபடுகிறது.ஆனால் அதற்கான சரியான வழிகாட்டல் இல்லை.நிதி உதவி மற்றும் போதுமான பயிர்சி இருந்தால் அவர்களில் பலரும் நல்ல படைப்புகளை படைப்பார்கள் என நம்புகிறேன்.
-- I commend you, Selvan. Do demand my services, if I can help. I can guide one on Qualitiative Research methodologies and on Harvard -APA etc. Citations. I am,but, a very strict task master, even according to the Staffordshire University. I have no scholastic qualifications.
Regards,
InnambUran

rajam

unread,
Oct 18, 2011, 2:35:38 PM10/18/11
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel
பேராசிரியர் ஐயா,
கட்டாயமாக, நாம் ஒரு தனி இழையில் இதை உரையாடவேண்டும் என வேண்டுகிறேன். தயவுசெய்து செய்யுங்கள். இந்த இழையில் உங்கள் கருத்து கவனிக்கப்படாமல் போகலாம் என்று தயங்குகிறேன். 
அமெரிக்காவில் டாக்டர் பட்டத்தின் முடிவு ஆய்வாளர்களாக வளருவதன் தொடக்கம்
தமிழகத்தில் டாக்டர் பட்டம் ஆராய்ச்சியாளன் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டான் என்பதன் அடையாளம்

இது எவ்வளவு ஆழமான உண்மை என்பது பலருக்கும் தெரியாது, ஐயா!
தமிழகத்தில் என் பழைய மாணவியர் பலரும் பி.எச்டி. பலரும் ஊதிய உயர்வுக்காகவே அதை மேற்கொண்டதாகத் தெரிகிறது. ஒரே ஒருத்தி மட்டும் ... "தமிழ் நமக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறது, மிஸ். அதுக்கு நான் திருப்பிக் கொடுக்காட்டி நல்லதில்லெ"-னு சொல்லி இன்னும் ஏதோ அவளாலெ முடிஞ்சதெச் செஞ்சுக்கிட்டு இருக்கா! இத்தனைக்கும் அவள் தாய்மொழி உருது!
:-) :-) :-) 

Innamburan Innamburan

unread,
Oct 18, 2011, 3:15:18 PM10/18/11
to mint...@googlegroups.com
அமெரிக்காவில் டாக்டர் பட்டத்தின் முடிவு ஆய்வாளர்களாக வளருவதன் தொடக்கம்
தமிழகத்தில் டாக்டர் பட்டம் ஆராய்ச்சியாளன் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டான் என்பதன் அடையாளம்

இது எவ்வளவு ஆழமான உண்மை என்பது பலருக்கும் தெரியாது, ஐயா!
~ ஆம். இது உண்மை. முதல் கோணல், முற்றும் கோணல். ஆய்வின் இடம், பொருள், ஏவல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அதற்கும், வழிகாட்டியின் பற்றுதல்களுக்கும் இணைப்பு தேவையாகக் கருதபடுவதில்லை. ஆய்வு திட்டங்கள் வகுப்பது குறைவு. Most of them ask what is 'Mind Mapping'. ஆனால், இது எல்லாம் தற்காலம். என் நண்பர் தான் மு.வ. அவர்களிடம் பயின்றதை பற்றி சொன்னார். உழைப்பு தேவையாக இருந்தது. இத்தனைக்கும் ஆசானை பார்ப்பது சுலபமில்லை. எனக்கு அது குறையாகத்தான் பட்டது.

செல்வன்

unread,
Oct 18, 2011, 11:51:40 PM10/18/11
to mintamil


2011/10/18 rajam <ra...@earthlink.net>

நல்லது செய்கிறீர்கள், பாராட்டுகிறேன் செல்வன்! தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் துறையாவது முன்னேறட்டும்.


நன்றி அம்மா.


என் கதை வேறு மாதிரி. பென்சில்வேனியாவில் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்தபோது தமிழகத்திலிருந்து அடிக்கடி ... பி.எச்டி ஆய்வுக்கட்டுரைகள் மதிப்பீட்டிற்கு வரும். மிகவும் கருத்தோடு நேரம் செலவழித்துப் படித்துக் கருத்துரையும் பரிந்துரையும் அனுப்பிவைப்பேன். (ஒரு நாளும் ஒரு கட்டுரைக்குக்கூட அதைப் படித்து மதிப்பிட்டுக் கருத்துத் தெரிவித்ததற்காக அவர்கள் தருவதாகச் சொன்ன பணம் தந்ததில்லை என்பது வேறு செய்தி!)

அடடா..:-(((

தற்போது அந்த நிலை இல்லை அம்மா.பணம் வருகிறது.ஆனால் ஏழெட்டு மாதம் கழித்து வருகிறது.உண்மையை சொல்லபோனால் நான் அதை எல்லாம் டிராக் செய்வது இல்லை.நான் பாட்டுக்கு திருத்தி அனுப்பி வைப்பேன்.பல மாதம் கழித்து டிராப்ட் வரும்.அது எந்த தீசிசுக்கு வந்தது என்பது கூட அப்போது நினைவில் இருக்காது.ஆனால் முன்பு அந்த காசை கூட அனுப்பாமல் உங்களை வாட்டியது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.:-(


இதை நாம் யாரும் காசுக்காக செய்வதில்லை.படிக்கும் யாரும் காசு வரவில்லை என புலம்புகிறார்கள் என நினைக்கவேண்டாம்:-)).முதலில் சினாப்சிஸ் வரும்.அதை படித்து அதை நாம் திருத்துகிறோமா இல்லையா என தபாலில் கையெழுத்து போட்டு பதில் அனுப்பவேண்டும்.அப்புறம் தீசிசை படித்து திருத்தி பதில் அனுப்பவேண்டும்.அதுவும் தபாலில்....சாதா தபாலில் அனுப்பினால் பெரும்பாலும் போய் சேர்வது இல்லை.விரைவு தபாலில் அனுப்பி வைக்கவேண்டும்.அந்த தபால் செலவுக்கு தான் இந்த தீசிஸ் திருத்தும் காசு சரியாக இருக்கும்.அதுவும் பல சமயம் 45 நாளுக்கும் அனுப்பு, 30 நாளுக்குள் அனுப்பு என நிபந்தனை போடுவார்கள்.

இத்தனை செலவு செய்வதுக்கு பதில் தீசிசை பிடிஎப் ஆக மின்னஞ்சலில் அனுப்பலாம்.நாமும் மின்னஞ்சலில் நம் கருத்தை அனுப்பலாமே என நான் பலமுரை நினைத்ததுண்டு.ஆனால் இந்திய பல்கலைக்ழகங்களில் அதுபோன்ற விதிகள் இல்லை.பெட் எக்ஸுக்கும் , கூரியருக்கும் பல்லாயிரம் ரூபாய்களை இந்திய பல்கலைக்ழகங்கள் தேவையற்று செலவழிக்கின்றன.இணைய புரட்சி,மின்னஞ்சல் எல்லாம் இன்னும் அங்கே எட்டிபார்க்கவில்லை போல:-(((


பல்கலைக்கழகத்து வேலையை விட்டு நானாக வெளியேறின பிறகு ... தமிழகத்திலிருந்து மதிப்பீட்டுக்காக என்று கட்டுரைகள் எனக்கு வருவதில்லை! அது எதைத் தெரிவிக்கிறது என்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள்!
சில ஆண்டுகளுக்கு முன்னர் ... பொன்னியின் செல்வனையும் Three Musketeers- ஐயும் ஒப்பிடும் ஆய்வுக்கட்டுரைக்கு உதவமுடியுமா என்று யாரோ கேட்டார்கள். சரி என்று சொன்னேன். ஒரு பேச்சையும் காணோம். பிறகு அதே கட்டுரையை மதிப்பீடு செய்ய முடியுமா என்று கேட்டார்கள். சரி என்று சொன்னேன். அதற்கும் மறுமொழி இல்லை. அண்மையில் அங்கே போனபோதுதான் தெரிந்தது -- "யுனிவர்சிட்டி அஃபிலியேஷன் இல்லெ-ங்க்றதாலெ அனுப்பலெ"-னு சொன்னாங்க!

இப்படி எல்லாம் நடக்காமல் இருந்தால் தான் அம்மா நான் ஆச்சரியபடுவேன்:-((

பொன்னியின் செல்வன் எழுதின கல்கி முனைவரா அல்லது திரீ மஸ்கடீர்ஸ் எழுதின அலெசாந்தர் டூமாஸ் பல்கலைக்ழக பேராசிரியரா என எனக்கு தெரியவில்லை:-))முனைவர்,பேராசிரியர் அல்லாத அவர்கள் எழுதினதை வைத்து பிஎச்டி வாங்க முயல்கிறார்கள்.ஆனால் உங்கள் உதவியை வேண்டாம் என்கிறார்கள்..சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை.

பாத்துக்கோங்க. பேரளவில் மட்டுமே ஆசிரியர் ஆனாலும் ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தோடு ஒட்டிக்கொண்டிருந்தால் தமிழகமெங்கும் புகழ்மாலை சூட்டுவார்கள்! நீங்கள் பேரளவில் மட்டுமே ஆசிரியர் என்று நான் சொல்லவில்லை; தயவுசெய்து தவறாக நினைக்கவேண்டாம். பல கழிசடை ஆசிரியர்கள்/ஆய்வாளர் பற்றி எனக்குத் தெரியும். அதனால் இப்படித் துணிச்சலாகச் சொல்கிறேன்.

நீங்கள் இதுவிஷயத்தில் அடைந்த துன்பங்கள் இங்கே வெளிப்படுகின்றன.மிகுந்த மனவேதனை அடைகிறேன்.தமிழை வளர்க்க கோடிக்கணக்கில் மாநாடு நடத்துவதை விட இம்மாதிரி குறைகளை முதலில் சரி செய்தால் பயன் இருக்கும்.

செல்வன்

unread,
Oct 19, 2011, 12:02:24 AM10/19/11
to mint...@googlegroups.com


2011/10/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

காலம் மாறுது கருத்தும் மாறுது.  செல்வன் அவர்களின் பார்வை ஏதோ இது தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது என்பது போல் பார்க்கும் பார்வை.  ஐயோ என்ன கொடுமை இது என்று கதறித்தள்ளிவிட்டார். 


நான் பிறந்த மண் ஐயா...எனக்கு இருக்கும் தொடர்புகள் எல்லாம் இங்கேதான்.மும்பை,டெல்லியில் நிலை என்ன என எனக்கு தெரியாது.தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை.நம் வீட்டில் குறைகள் இருந்தால் அதை நாம் தானே எடுத்து சொல்லவேண்டும்?

அமெரிக்காவில் குறைகள் உள்ளன.ஆனால் அவை வேறுதளத்தில் உள்ளன.அணுகுண்டை தயாரிக்க அமெரிக்கா முடிவு செய்ததும் அந்த ஆய்வை நடத்தும் பொறுப்பை அமெரிக்க அரசு சிகாகோ பல்கலைகழகத்திடம் அளித்தது என்றால் பார்த்துகொள்ளுங்கள்...அங்கே பல்கலைக்ழகங்களில் ஆராய்ச்சி தரம் எப்படி இருக்கிறது என.பல அமெரிக்க பல்கலைக்ழகக பேராசிரியர்கள் நோபல் பரிசு வாங்குவதை காண முடியும்.அதனால் அமெரிக்க பல்கலைக்ழகங்களில் ஆய்வுகளில் குறை இல்லை என பொருள் இல்லை.குறை உண்டு.ஆனால் நாம் இங்கே விவாதிக்கும் தளத்தில் அந்த குறைகள் இல்லை.



அமெரிக்காவில் டாக்டர் பட்டத்தின் முடிவு ஆய்வாளர்களாக வளருவதன் தொடக்கம்
தமிழகத்தில் டாக்டர் பட்டம் ஆராய்ச்சியாளன் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டான் என்பதன் அடையாளம்

ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொன்னீர்கள் ஐயா

ராஜம் அம்மா சுட்டிகாட்டியதுபோல பல தமிழக பல்கலைகழகங்களில் பிஎச்டிக்கு எந்த மதிப்பும் இல்லை,.பிஎச்டி முடித்தால் 75 ரூபாய் இன்க்ரிமெண்ட் போடும் கல்லூரிகள் உண்டு.பல பல்கலைகழகங்களில் பிஎச்டி படித்தால் கூட லெக்சரர் வேலைக்கு (கவனிக்க புரபசர் அல்ல.லெக்சரர்) அது தகுதியாக கருதபடாது!!!

இப்போதுதான் சற்று விழிப்புணர்வு வந்து யுஜிசியின் நெருக்குதலால் பிஎச்டி,ஜர்னல்,ஆய்வு என ஆரம்பித்துள்ளார்கள்.ஒரு விதத்தில் பார்த்தால் அதை நினைத்து மகிழ்ச்சியடைய தோன்றுகிறது.

செல்வன்

unread,
Oct 19, 2011, 12:05:52 AM10/19/11
to mint...@googlegroups.com


2011/10/18 Innamburan Innamburan <innam...@gmail.com>

I commend you, Selvan. Do demand my services, if I can help. I can guide one on Qualitiative Research methodologies and on Harvard -APA etc. Citations. I am,but, a very strict task master, even according to the Staffordshire University. I have no scholastic qualifications.


Definitely sir.I will ask Indian students who need help with qualitative research,  referencing and writing style to contact you.

Kannan Natarajan

unread,
Oct 22, 2011, 11:18:06 PM10/22/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள்-11:- தொ.ரா.பத்மநாபய்யர்

தமிழ், ஹிந்தி, செளராஷ்டிரம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் புலமை பெற்றவர் தொ.ரா.பத்மநாபய்யர். இவர், ஸ்ரீவிளம்பி ஆண்டு பங்குனி 23ஆம் தேதி (4.4.1899) பிறந்தவர்.

செளராஷ்டிரரான இவர் பல தெய்வீக நூல்களை எளிய செந்தமிழ் நடையில் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய "கீதை வெண்பா" மிகவும் சிறப்பான நூலாகப் போற்றப்படுகிறது. இவரை "கீதை அஷ்டாவதானி", "வெண்பாப் புலி" என்றும் போற்றுவர். இப்புலவர் இயற்றிய 15 வெண்பாக்கள் கொண்ட - அந்தாதித் தொடையில் அமைந்த "தமிழின் பெருமை" என்ற இப்பாடல்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷமாகும். இப்பாடல் வெளிவந்த ஆண்டு 1949.

எண்ணுமெழுத் தென்னுமிவை ஏற்றமுற மாந்தர்க்குக்
கண்ணிரண் டாகுமிவை கல்லாதார் - புண்ணிரண்டு
தம்முகத்தே கொண்டவராய்த் தாங்கணிக்கப் பட்டுள்ளதை எம்மகத்தே கொள்வோம் இனிது.

இனிமை பழைமை எழில்யாவும் கொண்ட
தனிமொழித் தண்டமிழே தக்கோர் - உனுமொழி
தென்மொழி மேலாஞ் சிவன் தந்த செல்வமாம்
நன்மொழி கொண்டதிந் நாடு

நாட்டி லுயர்ந்ததெந் நாட்டின் பெருமையினை
ஏட்டில் வரையத்தான் ஏலுமோ - மேட்டிமையாய்
மூவேந்தர் ஆட்சி முறையாகத் தானடத்திப்
பாவேந்தர்க் கீந்தார் பரிசு
பரிசுகள் பொன்மழையாய்ப் பாவேந்தர்க் கீய
வரிசையாய் நூலியற்றி வந்தார் - துரிசிலா
நூற்களும் கூடினவால் நுண்பொருள் கொண்டனவாய்
மேற்கணக்குங் கீழ்கணக்கு மே
மேவுமே ழேழ்புலவர் வித்தகமாய் வீற்றிருக்கக்
காவலனும் அங்கு கலந்திருந்து - நாவலர்கோன்
நற்கீரர் போன்றவர்கள் நற்றலைமை தன்னிலே
பொற்பீடத் துற்றாள் புகழ்
புகழ்பரவு பொற்றா மரைத்தடந் தன்னில்
திகழ்பலகைப் பண்பதனைச் செப்பின் - நிகழுருவம்
கூட்டக் குறைக்கத் தகுதியுள தெய்வீகம்
நாட்டியநாள் அந்நாள் நவில்
நவிலுந் தமிழ்மணம் நாடெங்கும் வீசக்
கவலைதான் இன்றிக் கவிஞர் - நுவலுந்தம்
நோக்கம் நுடங்காது நுண்மையாய் நூலுக்கே
ஆக்கியநாள் அந்நாளே யாம்
ஆமந்த நாளை அடைவாகக் காண்பதற்கே
நாமும் உழைத்திடுவோம் நண்பர்காள் - காமனைக்
கண்ணழலார் காய்ந்தோன் கலசமுனிக் கேயருள
மண்ணிடை வந்தவள்தன் மாண்பு
மாண்புடனே நல்ல வடமொழியைப் பாணினிக்குச்
சேண்பரவத் தந்த சிவன்றானே - ஈண்டிதற்குந்
தந்தையாமென்பார் தரணிமிசை இம்மொழிக்குச்
சொந்தமிலார் யாரிதனைச் சொல்
சொல்லிற் சுருங்கச் சுவைத்திடச் சொல்லுதலால்
கல்லுங் கரையுங் கனிமொழியால் - வல்லதமிழ்
பாடை தனக்குநிகர் பாடை மிகச்சிலவே
ஈடுசொல் வாய்க்குமால் இங்கு
இங்கிதஞ் செய்வாள் இயலிசை நாடகமென்
றெங்கும் புகழோ டிருப்பாளே - எங்கள்
அருந்தமி ழன்னை அனவரதந் தேடு
மருந்தனாள் மானிலத்தே மற்றுமற்றுந்
தொடர்பாடு மங்கையர்
மண்பொருள்மேல்
சற்றும் பொருந்தாத சற்சனர்கள் - கற்றும்
தெளிந்தும் இதன் சுவையைத் தீரவா ராய்ந்தும்
உளந்தனிற் கொள்வார் உவப்பு
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரியும்
புவிப்பொறை பூண்ட புனிதர் - தவப்பேறாய்த்
தாமடையவெண்ணும் தனித்தமிழின் இன்சுவையை
நாமடைய வேண்டும் நனிது
நனிதே துதியுரைகள் நாயகனுக் காக்கில்
இனிதே மகிழ்வார் இறையும் - புனிதமாம்
பேறெல்லாந் தந்து பிறப்பிறப் பற்றதொரு
ஈறில் பதமளிப்பார் ஈண்டு
ஈண்டறம் வீடளிக்கும் இன்பம் பொருளளிக்கும்
வேண்டுவன யாவும் மிகவளிக்கும் - மீண்டும்
எலும்பையும் பெண்ணாக்கும் ஈசனைத்தூ தாக்கும்
நலம்பலவுங் கொண்டதென நாடு.


நன்றி:- தினமணி

Geetha Sambasivam

unread,
Oct 23, 2011, 6:17:09 AM10/23/11
to mint...@googlegroups.com
பத்மநாபய்யர் குறித்த பகிர்வுக்கு நன்றி.  செளராஷ்டிரர் எனத் தெரியாது.

2011/10/22 Kannan Natarajan <thar...@gmail.com>
வேருக்கு நீர் வார்த்தவர்கள்-11:- தொ.ரா.பத்மநாபய்யர்

தமிழ், ஹிந்தி, செளராஷ்டிரம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் புலமை பெற்றவர் தொ.ரா.பத்மநாபய்யர். இவர், ஸ்ரீவிளம்பி ஆண்டு பங்குனி 23ஆம் தேதி (4.4.1899) பிறந்தவர்.

செளராஷ்டிரரான இவர் பல தெய்வீக நூல்களை எளிய செந்தமிழ் நடையில் இயற்றியுள்ளார். இவர் நன்றி:- தினமணி

Geetha Sambasivam

unread,
Oct 23, 2011, 6:17:43 AM10/23/11
to mint...@googlegroups.com
வேருக்கு நீர் வார்த்தவர்கள் பற்றி மேலும் அறியக்காத்திருக்கேன்.

2011/10/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Kannan Natarajan

unread,
Oct 30, 2011, 12:43:46 AM10/30/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 12:- தமிழில் வடசொல்!



                                                         கி.வா.ஜகந்நாதன்

தமிழில் சொல் வளம் மேலும் மேலும் வளர்ச்சி பெற்றதற்குரிய காரணங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. தமிழர் வாழ்வில் புறவாழ்க்கைக்குரிய பொருள்களும் சிந்தனைக்குரிய கருத்துக்களும் நாளடைவிலே பெருகி வந்தது ஒரு காரணம்.
2. புலவர்கள் இலக்கியங்களை சிருஷ்டி செய்யும்போது பல திரி சொற்களை ஆக்கிக்கொண்டது மற்றொரு காரணம்.
3. வேற்று நாட்டுப் பொருளும் கருத்தும் இலக்கியமும் தமிழர் வாழ்க்கையிலே கலந்தது மூன்றாவது காரணம்.

வாழ்க்கை விரிய விரிய, மனிதன் உலவும் இடம் விரிகிறது. அவனுடைய நோக்கம் விரிகிறது. அவனுக்குப் பழக்கமான மக்கள் விரிகின்றனர். ஆகவே, அவனுடைய பேச்சும் இவற்றுக்கு ஏற்றபடி விரிகிறது. தமிழ் மொழியிலே சொல் வளம் நிரம்பியிருப்பதற்குக் காரணம் தமிழர்களுடைய பரந்த நோக்கமே ஆகும். இந்தியாவில் வழங்கும் மொழிகளுக்குள் தமிழே சொல் வளத்தில் தலைசிறந்து நிற்கிறது.

மொழியைப் பற்றி ஆராயும் புலவர்கள் சிலசில மொழிகளை இனம் பிரித்திருக்கிறார்கள். இந்தியாவில் முக்கியமான இரண்டு இனங்களைக் காணலாம்.

1. வடநாட்டிலே வழங்கும் மொழிகளிலே பெரும்பான்மை ஓர் இனத்தைச் சேர்ந்தவை. அவற்றை உடன்பிறந்தார் என்று வைத்துக் கொள்ளலாம்.ஆங்கிலம் அந்த இனத்துக்குத் தாயாதியாகும். நெடுங்காலத்துக்கு முன் ஒரு குடும்பமாக இருந்து பிறகு பிரிந்துபோன மொழி அது. இந்த மொழியினத்தை "இந்திய ஐரோப்பிய மொழிக்கூட்டம்" என்று மொழி வரலாற்றை ஆராய்ச்சி செய்கிறவர்கள் குறிப்பார்கள்.

2. தென்னாட்டில் உள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பவற்றைத் "திராவிட மொழிக் கூட்டம்" என்று குறிக்கிறார்கள்.

பழங்காலத்தில் இந்த முறையிலே வகைப்படுத்தவில்லை. ஆனால், இலக்கண அமைதியில் வடநாட்டு மொழிகளுக்கும் தென்னாட்டு மொழிகளுக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று வகையிலும் தமிழுக்கென்று சிறப்பான அமைதி ஒன்று இருப்பதை அவர்கள் கவனித்தார்கள்.

ஒருமொழி இன்ன இனத்தைச் சேர்ந்தது என்று தெரிந்து கொள்வதற்கு அதன் வாக்கிய அமைப்பே சரியான உதாரணமாக இருக்கும். வெறும் சொற்களை மாத்திரம் வைத்துக்கொண்டு இந்த மொழி இன்ன குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொல்ல முடியாது.

"நாத தத்துவத்திலிருந்து படிப்படியாக மற்ற தத்துவங்கள் உண்டாயின", "சூரிய மண்டலமாகிய பெரிய அக்கினி உருண்டையிலிருந்து பூமி முதலிய உருண்டைகள் சிதறுண்டு பிறந்தன", என்ற செய்திகள் சமய நூலிலும் விஞ்ஞான நூலிலும் கண்ட உண்மைகள். அவற்றை நாம் தெரிந்து வைத்துக்கொள்கிறோம்.

நம்முடைய வாழ்க்கை முறையும் அந்தப் பழைய நிலையும் ஒன்றுக்கொன்று பயன்படும் என்று சொல்வதற்கில்லை. அப்படித்தான் வடமொழியும், தென்மொழியும் ஒன்றன் முகத்தை மற்றொன்று நோக்காமல், இயற்கையான பிரிவுக்கு உட்பட்டு வழங்கின என்று சொல்லும் நிலையும் சரித்திரத்துக்குப் பயன்படும்; நமக்குப் பயன்படாது.

சரித்திர காலத்துக்கு முந்தியே தமிழ் இலக்கிய காலம் தொடங்கிவிட்டது. சரித்திரத்துக்கு எட்டாத காலத்தில் இயற்றப்பெற்றது தொல்காப்பியம். அதாவது, அதன் காலத்தை ஆராய்வதற்குரிய சாதனங்கள் சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் கிட்டவில்லை. அத்தகைய தொல்காப்பியத்திலே வடமொழித் தொடர்பு தமிழ் நாட்டில் எவ்வளவு வேரூன்றி இருக்கிறதென்பது புலப்படுகிறது.

வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்கும், தென்னாட்டில் இருந்து வடநாட்டுக்கும் மக்கள் சென்று தங்கி வாழ்ந்தார்கள். இந்த வாழ்க்கைக்கு இயற்கையிலும், செயற்கையிலும் தடையொன்றும் இருக்கவில்லை. மக்கள் தம்முள்ளே கலந்து வாழ்ந்தால், கருத்துக் கலப்பும் மொழிக் கலப்பும் அமைவது இயற்கையே. ஆனால், தமிழ்மொழி தன் மரபை மாற்றிக் கொள்ளவில்லை. வடமொழியிலிருந்து நாளடைவில் அது எவ்வளவோ விஷயங்களைப் பெற்றுக்கொண்டது. இன்று நாம் ஆங்கிலத்திலிருந்து சொல்லும் பொருளும் பெறவில்லையா? எந்த நாட்டிலும், எந்த மொழியிலும் இத்தகைய கலப்பைக் காணலாம்.

கலப்பு இல்லாத நிலை வாழ்க்கையின் அறிகுறி அல்ல; விரிவு உண்டாவது கலப்பினால்தான்; ஒடுக்கம் ஏற்படுவது பிரிந்து தனித்து நிற்பதனால்.

தமிழ் தன் வாக்கிய மரபை இழக்கவில்லை. அதனோடு சார்ந்த தெலுங்கு முதலியவைகளும் வாக்கிய மரபில் இன்றும் தமிழைப் பின்பற்றியே நடக்கின்றன. எழுத்திலும், சொல்லிலும் வடமொழியிலிருந்து அதிகமாக அவை கடன் வாங்கிக்கொண்டன. தமிழ் அந்த அளவுக்கு வாங்கிக் கொள்ளவில்லை. இயற்கையான செல்வம் படைத்தவர்கள் கடன் வாங்க யோசிப்பார்கள் அல்லவா? ஆனால், அடியோடு கதவைச் சாத்தி மூடி உள்ளே வராதே என்று சொல்லவில்லை. ஏனெனில், வடமொழி எங்கிருந்தோ வரவில்லை. இமயம் முதல் குமரி வரையில் மொழிகள் வேறாக இருந்தாலும் உள்ளம் ஒன்றாகத்தான் இருந்தது.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப் பொருள்களைப் பற்றி இந்திய நாடாகிய நாவலந் தீவு முழுவதும் ஒரே மாதிரியாக எண்ணியது. இலக்கியத்திலே வெவ்வேறாக இருந்தாலும் சாத்திரங்களிலே இந்தியா ஒருமைப்பாட்டைக் காட்டியது.

பழங்காலத்தில் சமய நூல், பிற சாத்திரங்கள் யாவும் பெரும்பாலும் வடமொழியில்தான் இருந்தன. காரணம் என்ன?

அது அறிவைப் பொதுவாக்கும் கருவியாக உதவியது.

இமயம் முதல் குமரி வரை வடமொழி வல்லார் பலர் இருந்தனர். தமிழ் நாட்டிலும் பலர் இருந்தனர். தொல்காப்பியரே சிறந்த வடமொழிப் புலவர். சமய சாத்திரங்களும், பிற கலைகளும் மனித சாதிக்கே பொதுவானவை. இந்தியா அனைத்தும் ஒன்று என்ற நினைவிலே இந்த நாட்டுக்கு ஒரு தனிச் சால்பு அமைந்திருந்தது. அதை வற்புறுத்தும் சாத்திரங்கள் இந்தியர் அனைவருக்கும் பயன்பட வேண்டுமானால், பொது மொழி ஒன்றில்தானே இருக்க வேண்டும்? ஆதலின் சமய நூல்களும் பிறவும் வடமொழியில் எழுந்தன. அந்த நூல்களில் மொழி பிரதானம் அன்று; கருத்தே பிரதானம்.புலமையுள்ளவர்கள் படித்து அறிந்தார்கள்; பிறருக்கும் தெரிவித்தார்கள். ஆகவே, மண்டல மொழிகளில் இலக்கிய வளம் மாத்திரம் தடையின்றி வளர்ந்து வந்தது. இப்படி அமைந்த வாழ்வில் தமிழுக்கென்று ஒரு தனி இடம், வடமொழிக்கென்று ஒரு தனி இடம் அமையவில்லை. இரண்டும் அடுத்தடுத்தே வளர்ந்தன. இரண்டு மொழிகளிலும் வல்லார் பலர் இருந்தனர். ஆகவே, மொழிக் கலப்பு இயற்கையாகவே அமைந்தது. வடமொழியிலிருந்து பல சொற்கள் மண்டல மொழிகளில் கலந்தன; தமிழிலும் கலந்தன.

சமயம், இந்தியா அனைத்துக்கும் பொதுவான கலைகள் ஆகிய இத்துறைகளிலே பல சொற்கள் வந்து கலந்தன; பலவகையிலும் கலந்தன. வடமொழி இந்தியாவின் சாத்திர மொழி, தமிழ்நாடு நாவலந் தீவைச் சேர்ந்ததுதானே? ஆகவே, அதன் தொடர்பு தமிழுக்கு முரணாக இருக்கவில்லை. ஆனால், தமிழ் தன் மரபு கெடாமல் சொற்களை மாத்திரம் வடமொழியிலிருந்து பெற்றது. பல சொற்களைத் தன்னுடைய இயற்கைக்குப் பொருந்த மாற்றிக்கொண்டது. பல சொற்கள் தமிழா, வடமொழியா என்று தெரிந்துகொள்ள முடியாதபடி மாற்றம் அடைந்தன.

வடமொழிக்கும் தமிழ்ச் சொற்கள் சென்றன. அம்மொழியைத் தனியே பேசும் கூட்டத்தினர் இல்லாமையால் அதில் அதிகக் கலப்பு ஏற்படவில்லை. இயற்கையாக இணைந்து பழகும் வாழ்க்கையிலேதான் கலப்பு நிகழும்; பேச்சு மொழியிலும் கலப்பு ஏற்படும். நூலளவில் நின்ற மொழியில் அவ்வளவு கலப்பு நிகழாது.

"வடசொற்களைத் தமிழில் சேர்த்துக் கொண்டது எப்போது?" என்று காலக்கணக்காகக் குறிப்பது எளிதன்று. பழங்காலத்தில் நூலளவில் வடமொழிக் கலப்புக் குறைந்தும், பேச்சில் மிகுந்தும் இருந்திருக்க வேண்டும். இன்றும் பேச்சில் அதிகமாகவே இருக்கிறது.

வெறும் நூல் வழக்கிலே உள்ள வடசொற்களை மாத்திரம் பார்த்தால், ஏதோ திடீரென்று வடசொற்கள் தமிழில் படையெடுத்து வந்தது போலத்தான் தோன்றும். நூல் வழக்கைக் காட்டிலும், பேச்சு வழக்கில் வடசொற்கள் மிகுதியாக வழங்கியதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இதற்குச் சிறந்த சான்றாக இருப்பவை சாசனங்கள்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் உண்டான நூலை எடுத்து அதில் உள்ள வடசொற்களைக் கணக்கிட்டுப் பாருங்கள்; அதே காலத்தில் எழுந்த கல்வெட்டுகளில் உள்ள வடசொற்களைப் பாருங்கள். கல்வெட்டுகளில் அவை மிகுதியாகவே இருப்பது தெரியவரும்.வடசொல் தமிழில் புகுந்தது இயற்கையான நெறி. அதனைத் தொல்காப்பியர் அறிந்து இலக்கணம் வகுத்திருக்கிறார். "வடமொழிக்கே உரிய எழுத்துகளை விட்டுத் தமிழுக்கும், வடமொழிக்கும் பொதுவான எழுத்துகளால் அமைந்த வட சொற்கள் தமிழிலே செய்யுளிலே வரும்'' என்றும், "தமிழில் இல்லாத ஒலியாக இருந்தாலும் வேறுவிதமானாலும் தமிழின் இயல்புக்கு ஏற்றபடி சிதைந்து வழங்கலாம்; அது புலவர்களுக்கு உடன்பாடே'' என்றும் சொல்கிறார்.

கிருஷ்ணனைக் "கண்ணன்" என்றும், சிவ: என்பதைச் "சிவன்" என்றும், ஆக்ஞை என்பதை "ஆணை" என்றும் திரித்துக் கொண்டது இந்த இலக்கணத்திலே அமையும். இந்த இரண்டு வகையையும் முறையே "தற்சமம்" என்றும் "தற்பவம்" என்றும் பிற்காலத்து இலக்கணக்காரர்கள் குறிப்பார்கள். தென்மொழி, வடமொழியிலிருந்து சொற்களை ஏற்றுக்கொண்டது இன்று நேற்றல்ல; தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே அது நிகழ்ந்து வருகிறதென்பதற்குத் தொல்காப்பியம் சாட்சியாக நிற்கிறது.

காரணப்பெயர்களுள் சில...


அடுப்பு - அடுதலுக்கு (சமைத்தலுக்கு) உரியது.
அண்ணன் - குடும்பத்தில் தலைமை நிலை எய்தும் பெருமைக்கு உரியவன் (அண்ணல் - பெருமை).
அமக்களம் - அமர்க்களம் என்னும் சொல்லின் சிதைவு.
அமர்க்களம் - போர் நடக்கும் இடத்தில் காணப்படும் அடி, குத்து, பேரோசை.
அரவணைத்தல் - பாம்புகள் ஒன்றோடு ஒன்று தழுவிக்கொண்டு அணைத்து இன்புறுமாம். (அரவு+ அணைத்தல்) அதனால் அரவணைத்தல் என்னும் தொடர், அன்புடன் தழுவி வாழ்தலுக்குக் கூறப்படுகிறது.
அரை - ஒவ்வொருவர் உயரத்தில் அரைப் பகுதியாக இருப்பதால் இடுப்பு, "அரை" எனப்படும்.
அறை - வீட்டு அறை. பகுதி பகுதியாக பகுக்கப்படுவதால், ஒரு பகுதி "அறை" எனப்பட்டது.
ஆறு - வழியை அறுத்துக் கொண்டு ஓடுவது ஆறு.
இடுக்கண் - கண் இடுக்கும்படியாக உள்ள அளவுகடந்த துன்பம்.
உலகம் - நீர் உலர்வதால் ஏற்பட்டது உலகம்.
உள்ளம் - மனம் உள்ளுவதற்கு - நினைப்பதற்கு இடமாய் இருப்பது. (மனம் என்பது மூளையில் இருப்பது. இருதயத்தில் இருப்பதாக நினைப்பது தவறு).
ஊருணி - ஊராரால் உண்ணப்படும் நீரை உடையது.
எருது - ஏர் உழுவதற்கு உரியது.
ஒத்திகை - ஒத்து இருக்கை. நாடகம் நல்ல முறையில் ஒத்திருக்கிறதா என்று பார்த்தல்.
ஓநாய் - கோணாய் என்பது ஓநாய் என மருவிற்று (கோள் + நாய் = கோணாய். கோள் - வலிமை).
கடல் - கடப்பதற்கு அரியது என்று முற்காலத்தில் கருதப்பட்டதால் கடல் எனப்பட்டது.
கரி - கருநிறமுடையது கரி (யானை) எனப்படும்.
கிழக்கு - பள்ளமாய் இருக்கும் திசை கிழக்கு.
குடை - குடைவாய் இருப்பது.
குடம் - உட்பகுதி குடைவாய் - வளைந்து இருப்பது.
குடுவை - குறுகிய வாயை உடையது.
குளம் - குளிப்பதற்கு உரியது.
சோறு - சொல்-நெல். சொல்லுள் (நெல்லுள்) இருப்பது சோறு.
தட்பம் - தண்மை (குளிர்ச்சி) உடையது.
தந்தை, தாய் - தன்னைத் தந்தவன் - தந்தவள்
தாலாட்டு - தால் + நாக்கு. நாவை ஆட்டிப் பாடுவது.
தோப்பு - மரங்களின் தொகுப்பு. தொகுப்பு என்பதன் மரூஉ தோப்பு.
படை - படு-கொல். கொல்லும் கருவிக்குப் படை என்பது பெயர்.
புடைவை - புடை-பக்கம். பக்கத்தில் கொய்சகம் வைத்துக் கட்டுவது. புடவை என மருவி வழங்குகிறது.
புடலங்காய் - புழல்-துவாரம். துவாரமுடைய காய். "ழ"கரம்,"ட"கரமாயிற்று.
முன்தானை - சேலையின் முற்பகுதி.
தானை - துணி.
வண்ணான் - இச்சொல் மலையாளத்தில் "மண்ணான்" என வழங்குகிறது. மண்ணுதல் -கழுவுதல். துணியைத் துவைத்துத் தருபவன். தமிழில் "ம"கரம் "வ"கரமாயிற்று.
விதவை - கணவனோடு வாழும் தவம் இல்லாதவள்.
விழா - விழைந்து (விரும்பி) நடத்துவது.

Geetha Sambasivam

unread,
Oct 30, 2011, 5:27:30 PM10/30/11
to mint...@googlegroups.com
நன்றி.

2011/10/29 Kannan Natarajan <thar...@gmail.com>
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 12:- தமிழில் வடசொல்!


புடலங்காய் - புழல்-துவாரம். துவாரமுடைய காய். "ழ"கரம்,"ட"கரமாயிற்று.
முன்தானை - சேலையின் முற்பகுதி.
தானை - துணி.
வண்ணான் - இச்சொல் மலையாளத்தில் "மண்ணான்" என வழங்குகிறது. மண்ணுதல் -கழுவுதல். துணியைத் துவைத்துத் தருபவன். தமிழில் "ம"கரம் "வ"கரமாயிற்று.
விதவை - கணவனோடு வாழும் தவம் இல்லாதவள்.
விழா - விழைந்து (விரும்பி) நடத்துவது.


நன்றி:- தினமணி

--

Kannan Natarajan

unread,
Nov 6, 2011, 4:11:23 AM11/6/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 13:- தமிழ்த் தெய்வம்!


                                    புலவர் வடிவேல் முதலியார்

இயற்கை மொழி:-

உலகில் பல்வேறு மொழிகள் வழங்குகின்றன. அவற்றுள் எவையும் செந்தமிழ் மொழிபோல் அத்துணைச் சிறப்புற்ற இயற்கை மொழியாக விளங்கக் காண்கிலோம். மேல்நாடு முதல் எந்நாட்டிலுள்ள பசுவும் "அம்மா" என்று அகவுவது கொண்டு, செந்தமிழ் மொழியின் இயற்கைச் சிறப்புத் தெள்ளிதின் விளங்கும். அன்றியும், "தெய்வத்தமிழ்" என்று கூறுவதுபோல், எந்த மொழியுடனும் தெய்வத் தொடர்பை உடன் கூட்டிக் கூறக்காண்கிலோம். நிற்க; தமிழ்த் தெய்வமாக விளங்குவது யாது என்று ஆராயப்புகுவோம்.   

அருணகிரிநாதர்
:- 

"திருப்புகழ் வித்தகர்" எனப் பாராட்டப்பெறும் அருணகிரிநாதர், முருகப்பெருமானைப் பின்வருமாறு துதிசெய்கிறார்.   

"ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே 
 ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே 
 கூறுமடி யார்கள் வினை தீர்த்தமுக மொன்றே 
 குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே 
 மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே 
 வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே 
 ஆறுமுக மானபொருள் நீஅருளல் வேண்டும் 
 ஆதியருணாசல மமர்ந்த பெருமாளே''.   

என்பதாம்.

இதற்குப் பலரும், ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு முகம் செய்வதாகக் கூறியுள்ளார் என்றே பொருள்கொள்வர். ஆனால், இறுதியடியில் "ஆறுமுகமான பொருளே யருளல் வேண்டும்'' எனக் கூறியிருப்பாராயின் அனைவரும் கொள்ளும் பொருள் சரியெனக் கொள்ளலாம்.

அவ்வாறின்றிப் "பொருள் நீ அருளல் வேண்டும்'' எனத் தனியாக "நீ" என விளி கொடுத்துக் கூறியிருப்பதால், புலவர் பெருமக்கள் பின்வருமாறு பொருள் கொள்கின்றனர்.   

புலவர் உரை:-
 

"முருகப்பெருமானே! தேவரீர் மயில் மீது ஏறித் திருவிளையாடல் புரிந்தபோதும் ஒருமுகத்துடன் தானே இருந்திருக்கிறீர்; சிவபெருமானுக்கு அருமறை பகர்ந்தபொழுதும் ஒருமுகத்துடன் தானே இருந்திருக்கிறீர்; அடியார்களுடைய துன்பங்களைப் போக்கும்போதும் ஒருமுகத்துடன்தானே இருந்திருக்கிறீர்; கிரவுஞ்ச கிரியின் மீது வேலெறிந்தபோதும் ஒருமுகத்துடன் தானே இருந்திருக்கிறீர்; சூரபன்மனாதியரை வதை செய்தபோதும் ஒருமுகத்துடன்தானே இருந்திருக்கிறீர். இவ்வாறு ஒரே முகத்துடன் இருந்து பல திருவிளையாடல்கள் புரிந்த தேவரீர்! ஆறுமுகத்துடன் எழுந்தருளிய காரணம் யாது?

அதனைத் தேவரீர் எனக்கு அருளிச் செய்ய வேண்டும்", என்பதே அதன் பொருளாகும்.

அவ்வாறாயின், முருகப்பெருமான் அருணகிரியாருக்கு அளிக்கும் விடை யாது?   

முருகப்பெருமான் அருணகிரியாருக்கு அளிக்கும் விடை,
"அப்பனே நின்ஐயம் அனைவருமே யுணர 
ஆதாரம் ஆகையினால் அறைந்திடுவோம் கேண்மின் 
செப்புகின்ற அறுசமயத் தெய்வதமும் யாமே 
சிவன் அயன்மால் மூவர்களின் திரளுருவும் யாமே 
இப்புவியில் சிவம்சக்தி யெனுமுருவும் யாமே 
இயம்புகின்ற தமிழ்மொழியின் வடிவமும்யாம் என்னும் 
அப்பெரிய உண்மையினை அகிலமெலா முணர 
ஆறுமுகம் கொண்டிட்டோம் அறிந்திடுக நீயே''.   

என்கிறார்.

இவற்றுள்; சைவம், வைணவம், சாக்தேயம், காணாபத்யம், கெ
மாரம், செரம் என்கின்ற ஆறு சமயத்திலுள்ள கடவுளும் யாமே என்கிறார். அன்றிச் சிவன் முகம் ஒன்று, பிரமன் முகம் நான்கு, மால் முகம் ஒன்று ஆக, மூவரின் உருவமும் திரண்டு ஆறுமுகம் கொண்டு விளங்குகிறோம் என்கிறார். அதுவேயுமன்றிச் சிவபெருமானுக்கு ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்கள் உள்ளன ஆகையால், அம்பிகையின் முகம் ஒன்றும் சேர்ந்து அம்மையப்பனாக ஆறுமுகம் கொண்டு விளங்குகின்றோமென்கிறார். இவைகள் நமக்கு ஒருவாறு விளங்குகின்றன. எனினும், அதற்கடுத்தாற்போல் "தமிழ் மொழியின் வடிவம் யாம்" என்பது என்ன என்பது சிந்திக்கற்பாலது.   

தமிழ்மொழியின் வடிவம்:-

தமிழ் மொழியில் உயிரெழுத்துப் பன்னிரண்டு ஆகும். ஆறுமுகப் பெருமானுக்குள்ள பன்னிரண்டு விழிகளையும் பன்னிரண்டு உயிரெழுத்துகளாகக் கொள்ளலாம். ஆனால், உயிரெழுத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அது, ஆறு ஆறாகப் பிரிக்கப்படாமல் குற்றெழுத்து ஐந்தும், நெட்டெழுத்து ஏழுமாகவுள்ளது; அவை எவ்வாறு பொருந்துமெனின்,   

உயிரெழுத்துகள்:-
 

அம்மையப்பனாக விளங்கும் முருகப்பெருமானுக்கு உள்ளவற்றில் ஐந்து முகங்கள் அப்பனுடையதும் ஒரு முகம் அம்மையுடையதுமாகும். அர்த்தநாரீசுரனாக விளங்கும் சிவபெருமானது வலது பாகம் சிவபெருமானுக்கு உரியதாகையால், அதிக முயற்சியின்றியே உச்சரிக்குங்கால் குற்றெழுத்துகள் தோன்றுகின்றன. சக்திக்கு உரியதான நெட்டெழுத்துக்கு சிறிது முயற்சி வேண்டும் ஆகையால், வலது பக்கமுள்ள கண்களைக் குற்றெழுத்துகளாகவும், இடது பக்கமுள்ள கண்களை நெட்டெழுத்துகளாகவும் கொள்ளலாம். அவ்வாறு கணக்கிடின், ஐந்து குற்றெழுத்துகளும் ஐந்து நெட்டெழுத்துகளும் ஆகும். அடுத்துள்ள அம்பிகையின் கண்கள் இரண்டும் நெட்டெழுத்துகளாகையால் அம்முறையில் குற்றெழுத்துகள் ஐந்தும் நெட்டெழுத்துகள் ஏழுமாகக் கொள்ளக் கிடக்கின்றன.   

மெய்யெழுத்துகள்:-
 

ஆறுமுகச் செவ்வேளின் திருமுகங்கள் ஆறும், இருபுறங்களிலும் ஆறு ஆறு ஆக, திருக்கரங்கள் பன்னிரண்டும் ஆகப் பதினெட்டும் மெய்யெழுத்துகளாகக் கொள்ளலாம். அவை முப்பிரிவுகளாகவே அமைந்துள்ளன.   

ஆய்த எழுத்து  முருகப்பெருமான் திருக்கரத்தில் விளங்கும் வேலாயுதத்தையே ஆய்த எழுத்தாகக் கொள்ளலாம். இம்முறையில், முருகப்பெருமான் செந்தமிழின் வடிவமாக உள்ளார் என்பது மேற்கூறிய காரணங்களால் தெளிவாம். அதனை விளக்கும் பாடல் பின்வருவதாகும்:-

"அந்தமிகு சென்னியில் இலங்குபன் னிருவிழியும் 
 அகரமுத லாக வெண்ணி 
 அலகிடும் குறிலைந்தும் நெடிலேழு மாகிய 
 அமைந்தவுயிர் பன்னி ரண்டாய்ச் 
 சிந்தனை செய் சென்னியோடு சேவகம் புரிகரமும் 
 சேர்ந்துமுப் பிரிவ தாகச் 
 செப்பிடும் வலியாறு மெலியாறு இடையாறு 
 செய்யபதி னெட்டு மெய்யாய் 
 குந்தமெனும் அயிலொன்றும் ஆயுதம தாக்கொண்ட 
 குறைவிலாத் தமிழெ ழுத்தாய்க் 
 கூறிடும் வடிவமுடன் ஆடல்செய்நின் பெருமை 
 குவலயம் கூற வெளிதோ 
 செந்தமிழின் வடிவான தெய்வமே வள்ளியொடு 
 தெய்வானை மகிழும் அமுதே 
 சேவேறு பரமனுமை மீதேறி விளையாடு 
 திருவெண்ணெய் வடிவே லனே!''   

இக்கட்டுரையின் மூலம் அருணகிரிநாதர் பாடலுக்குப் புத்துரையும், முருகப்பெருமானே "தமிழ்த் தெய்வ
ம்"என்பதும் அறிந்து மகிழ்வோமாக! (இக்கட்டுரை வெளியான ஆண்டு 21.8.1961)

Kannan Natarajan

unread,
Nov 13, 2011, 12:19:11 AM11/13/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 14:- தமிழின் சிறப்பு!



                      யாழ்ப்பாணப் புலவர் ந.சி.கந்தையா பிள்ளை

"கண்ணுதற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
 பண்ணுறத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
 மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
 எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ''.

என்று ஆன்றோர் கூறிய பொருள் சிற்சில மொழிகளை ஒப்பிட்டு நோக்குவார்க்கும் இனிது விளங்கும். பண்டைக் காலந்தொட்டு நூல் வழக்கினும் உலக வழக்கினும் திருத்தமடைந்து மக்களறிவின் முதிர்ச்சிக்குப் பெரிதும் உதவி செய்வனவாய்ப் போதரும் பழைய மொழிகள் சிலவேயாம். இப்பழைய மொழிகளுள் தமிழ்மொழியை ஒழித்து ஒழிந்தவற்றிற் பெரும்பாலன உலகவழக்கின்றி இறந்தொழிந்தன. தீஞ்சுவை விளைக்கும் முப்பழத்தினும் இனிய மெல்லிய ஓசை இன்பம் வாய்ந்த செந்தமிழ் மொழியோ, எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் தன் இளமை கெடாது கழிபெரு மகிழ்ச்சியோடும் உலவி வருதலை உற்று நோக்குங்கால் அதனை வழங்கிவந்த நன் மக்கள் எவ்வளவு நுண்ணறிவும், எவ்வளவு அமைதியான தன்மையும், எவ்வளவு நாகரிகமும் உடையவர்களாய் இருந்திருக்க வேண்டுமென்பதை அறிகின்றோம்.

பழைய நாள்களில் வேறு பல மொழிகளைப் பேசி வந்த மக்கள், நுண்ணறிவிலும் அமைந்த குணத்திலும் நாகரிகச் சிறப்புள்ளவர்களாக யில்லாமையினால், அவர்கள் வழங்கிய மொழிகள் எல்லாம் ஆண்டுகடோறும் மாறுதல்கள் பல எய்தி, இலக்கண வரம்பில் அகப்படாவாய்ப் பயனின்றிக் கழிந்தன.

தமிழைச் சூழ இஞ்ஞான்று நடைபெறும் பல மொழிகளை ஆராய்ந்து பார்ப்பவர்க்கு அம்மொழிகள் ஓர் இலக்கண வரம்பில்லாமல் பலபடச் சிதறி ஒழுங்கின்றிக் கிடத்தல் தெள்ளிதிற் புலனாகும்.

"தமிழ் கிரேக்க மொழியினும் நயமான செய்யுள் நடையுடையது;   
லத்தீன் மொழியினும் பூரணமானது'' (வின்ஸ்லோ)

"மனிதராற் பேசப்படுகின்ற மிகப் பொலிவும் திருத்தமும்
 சீருமுடைய மொழிகளுள் தமிழும் ஒன்று'' (டெய்லர்)

தமிழின் சிறப்பை உணர்த்தும் செய்யுட்கள்:-

"பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்
 திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை
 நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோ ரேன
 மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்''- (வில்லிபாரதம்)

"கடுக்கவின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி
 அடுக்கவந்துவந் தாடுவா னாடலி னிளைப்பு
 விடுக்கவாரமென் கால்திரு முகத்திடை வீசி
 மடுக்கவுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ''.

"தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை
 உண்ட பாலனை யழைத்தது மெலும்பு பெண்ணுருவாக்
 கண்டதும் மறைக்கதவினைத் திறந்ததுங் கன்னித்
 தண்டமிழ்ச் சொல்லோ மறுபுலச் சொற்களோ  சாற்றீர்''. - (திருவிளையாடற் புராணம்)

"தமரநீர்ப் புவன முழுதொருங் கீன்றாள்
 தடாதகாதேவி யென் றொருபேர்
 தரிக்கவந் ததுவுந் தனிமுத லொருநீ
 சவுந்தர மாறனா னதுவுங்
 குமரவேள் வழுதி யுக்கிரனெப்பேர்
 கொண்டதுந் தண்டமிழ் மதுரங்
 கூட்டுண வெழுந்த வேட்கையா லெலிலிக்
 கொழிதமிழ்ப் பெருமையா ரறிவார்''. - (மதுரைக் கலம்பகம்)

"ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
 ஏங்கொலிநீர் ஞாலத் திருள்கடியும் - ஆங்கவற்றுள்
 மின்னேர் தனி யாழி வெங்கதிரொன் றேனையது
 தன்னே ரிலாத தமிழ்''. - (தண்டி-உரை-மேற்கோள்)

"வேலையில் வீழ்த்த கல்லு மென்குடம் புகுத்த வென்புஞ்
 சாலையிற் கொளுவுந் தீயுந் தரங்கநீர் வைகை  யாறுஞ்
சோலையாண் பணையும் வேதக் கதவமுந் தொழும்பு கொண்ட
வாலையாந் தமிழ்ப்பூஞ் செல்வி...''.- (திருக்குற்றாலத் தலபுராணம்)

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்
அத்தில வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே''. - (மனோன்மணீயம்)

இவ்வகைப் பாடல்கள் எழுதற்குரிய காரணங்கள்:-

தாசுக்கள், ஆரியர் எனப்படும் மக்களிடையே நடந்த யுத்தங்களைப் பற்றி வேத பாடல்கள் கூறுகின்றன. தாசுக்கள் எனப்பட்டோர் தமிழர். இவ்வுணர்ச்சியின் வேகம் நீண்டகாலம் இருந்து வந்தது. இதனால் தமிழை ஆரியத்திலும் தாழ்ந்ததாகக் கூறும் கட்சியொன்றும் தமிழ்நாட்டில் நீண்டகாலம் தொட்டு இருந்து வருவதாயிற்று.

சமயகுரவர் காலத்தும் இவ்வகை உணர்ச்சி யிருந்தமையினாலேயே இரு கட்சியினரையும் சந்து செய்தற் பொருட்டுத் தேவாரத்தில், "ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்'' எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழை இழிவுபடுத்தும் கொடுமை நாளுக்கு நாள் வளர்வதாயிற்று. அதில் பட்டு மயங்கிய மக்கள் தமிழின் உயர்வையும் அதன் இன்றியமையாமையும் அறியாது அதனை இகழ்வாராயினர். கல்வியிற் பெரிய கம்பனே "தேவ பாடையின் இக்கதை செய்தவர்'' எனக் கூறி வடமொழிக்குப் பணிகின்றமை காண்க. பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை முதலானோர் அம்மக்களின் அறியாமைக்கு இரங்கி, அவர்கள் மனங்கொண்டு தமிழில் பற்று உண்டாகுமாறு அதன் பெருமையை உரைத்து வந்தனர். இம்மாறுபட்ட உணர்ச்சி இன்றும் முற்றாக அவிந்துவிடவில்லை. நீறு பூத்த நெருப்புப்போல் அடங்கிக் கிடக்கின்றது எனலாம்.தொல்காப்பியப் பொருளதிகார உரையில் (தொல்.பொருள்-490)

"ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த
 காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய
 அந்தண் பொதியில் அகத்தியனா ராணையால்
 செந்தமிழே தீர்க்க சுவா''.

எனக் காட்டியுள்ள உதாரணச் செய்யுளாலும் இவ்வுணர்ச்சி தமிழ்நாட்டில் நீண்டநாள் உள்ளதென்பது நனி விளங்கும்.

Kannan Natarajan

unread,
Nov 21, 2011, 6:54:52 AM11/21/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 15:- அழிந்துபோன அருந்தமிழ் நூல்கள்!



இயல் நூல்கள்:-

அகத்தியம், அடிநூல், அணிவியல், அவிநயம், அவிநந்த மாலை, ஆசிரிய மாலை, ஆசிரியமுறை, ஆசிரிய முறி, ஆன்மவியல், ஆட்சிநூல், இந்திரம், இந்திரகாளியம், இளந்திரையம், எதிர்நூல் ஐந்திரம், ஒப்பு நூல், ஓவிய நூல்.

கச்சபுடம், கடகண்டு, கணக்கியல், கலியாணகாதை, கலைக்கோண்டுதண்டி, கலிப்பாடல், கவிமயக்கிறை, களிரியாவிரை, களவு நூல், கனவு நூல், காலகேசி, காக்கைபாடினியம், குருகு, குண்டலகேசி, கோள் நூல், சங்க யாப்பு, சயந்தம், சாத வாகனம், சிந்தம், சிற்பநூல், சிறு குரீ இயுறை, செயன் முறை.

தந்திரவுரை, தகடூர்யாத்திரை, தும்பிப்பாட்டு, தேசிக மாலை, நாககுமாரகாவியம், நிலகேசி, பஞ்சமரபு, பதினாறு படலம், பரிநூல், பழைய பரிபாடல்கள், பல்காப்பியம், கல்காயம், பண்மணி மாலை, பன்னிரு படலம், பறவைப் பாட்டு, பாண்டியன் மரபு, பாட்டுமடை, பாண்டியன் பாரதம், பெருபாரதம், புணர்பாவை, புதையல் நூல், பூதபுராணம், பெரிய பமமம், பெருவல்லம், பெருவஞ்சி, போக்கியல்.

மணியாரம், மந்திர நூல், மயேச்சுரயாப்பு, மாபுராணம், மார்க்கண்ட காஞ்சி, முதுநாரை, முதுகுருகு, முத்தொள்ளாயிரம், முப்பெட்டுச் செய்யுள், மூவடி முப்பது, யயோதர காவியம், வஞ்சிப்பாட்டு, வளையாபதி, வாய்ப்பியம், வியாழமாலை, விசாகன் பாரதம், வீரமாலை, வீரவிளக்கம், வீரவணுக்கம், வெண்டாளி, வேந்தியன் முறை, வைப்பியம், வைரமாலை, வஞ்சத் தொள்ளாயிரம்.

இசை நூல்கள்:-

சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசை நுணுக்கம், இசை விளக்கம், பஞ்சமரபு, பஞ்சமாபாரதீயம், பண்ணமைதி, பண்விரி விளக்கம், பாட்டும் பண்ணும், ஆளத்தியமைப்பு, கருவியிலக்கணம், தாள சமுத்திரம், தாளவகை யோத்து, இசைக்கூறு, பாடற்பண்பு.

நாடக நூல்கள்:-

கூத்து வரிருள நூல், சயந்தம், செயிற்றியம், பரதம், பரதனோயதீபம், மதிவாணர் நாடகத் தமிழ்நூல், முறுவல் விளக்கத்தார் கூத்து, அடிவைப்பு, அடிவரிசை, உறுப்பாட்சி, முத்திரை விளக்கம், மெய்ப்பாட்டியல், முகக்குறி முறை, கைக்குறி முறை தாளக்கட்டு, நாட்டிய விளக்கம், நிருத்த முறை.

மருத்துவ நூல்கள்:-

அகத்தியர் பன்னிரு காண்டம், போகர் எண்ணாயிரம், கோரக்கர் மூலிகைப்பயன் ஆயிரம், கொங்கணவர் மூவாயிரத்து நூறு, கோரக்கர் வெண்பா ஏழாயிரம், மச்சமுனி ஏழு காண்டம், சிவவாக்கியர் ஐந்து காண்டம், காசிபர் வண்ணம் ரோமமுனி வடுகம்,
ராமதேவர் சாந்தப்பா, நந்தீசர் சந்தம், சங்குமாமுனிக் கலித்துறை, திருமூலர் திருமந்திரம் எண்ணாயிரம், பதஞ்சலி ஏழு காண்டம், சட்டமுனி நிகண்டு, சட்டமுனி இரண்டாயிரத்து எழுநூறு, காலங்கிநாதர் நாலு காண்டம், போகர் எழுநூறு.

இந்நூல்கள் அனைத்தும் தமிழ் மொழியில், தமிழ் அறிஞர்களால் தோற்றுவிக்கப் பெற்றவை. இவை அனைத்தும் அழிந்துபோயின என்று சிற்சில பாடல்கள் கிடைத்திருப்பதினாலும், வேறு பல நூல்களில் மேற்கோள்களாக வந்து இருப்பதினாலும் அறிய முடிகிறது.

இதைத் தவிர இன்னும் எத்தனை நூல்கள் இருந்தனவோ? அவற்றின் ஆசிரியர் யார் யாரோ? அறிய முடியவில்லை. அவை அனைத்தும் இன்று இருந்திருந்தால் தமிழ் மொழி எத்தனை சிறப்பில் மின்னிக் கொண்டிருக்கும்?

தமிழர்களின் பொக்கிஷங்களாக விளங்கிய இந்த அரும்பெரும் நூல்கள் தமிழகத்தில் அடுத்தடுத்துத் தோன்றிய கடற்கோள்களால் அழிந்தவை சில! தமிழ் மன்னர்களின் ஆட்சி அழிந்தபோது அழிந்தவை சில! குறுநில மன்னர்களின் ஆட்சி அழிந்தபோது அழிந்தவை சில! பரம்பரைப் புலவர் பெருமக்கள் அழிந்தபோது அழிந்தவை சில! ஜாதி வெறியால் அழிந்தவை சில! சமய வெறியால் அழிந்தவை சில! மொழி வெறியால் அழிக்கப் பெற்றவை சில! நாலந்தா நூல் நிலையம் தீக்கு இரையானபோது எரிந்துபோனவை சில! கரையான்கள் தமிழ்ச் சுவடிகளைச் சுவைக்கத் தொடங்கியதால் அழிந்தவை சில!

பழஞ்சுவடிகளைக் கொண்டுபோய் ஆடிப் பதினெட்டாம் பெருக்கில் கொட்டினால், புண்ணியம் என்ற கொள்கை ஒன்று தமிழகத்தில் பரப்பப்பெற்று வந்ததால், தமிழர்கள் தங்கள் கையாலேயே அள்ளிக்கொண்டுபோய் ஆறுகளில் கொட்டிவந்த வழக்கத்தினால் அழிந்துபோனவை பல...பல...!

இந்நூல்கள் அழியத் தொடங்கி 2000, 3000, 5000, 7000, 11,000 ஆண்டுகளாயின என்று பல பேராசிரியர்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். இவர்களுக்குத் துணை செய்து வருவது இலக்கியச் சான்றுகள். மேலை நாட்டு அறிஞர்கள் "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும்" என்று கூறுகின்றனர். இவர்களுக்குத் துணை செய்வது மொழியறிவும், வரலாற்று உண்மையும், கல்வெட்டுகளும், புதை பொருள் ஆராய்ச்சியும் ஆகும். எனினும், அவை அழிந்துபோன காலத்தைத் துணிந்து கூறியதாக இல்லை.

நம் தமிழ் நூல்கள் அழிந்த காலத்தையே அறியமுடியாதபோது, அவை தோன்றிய காலத்தை எவ்வாறு அறிந்து கூறுவது? ஒரு மொழிக்கு இலக்கணம் கூறுவதுதான் இறுதியாக இருக்கும். தமிழ் இலக்கண நூலாகிய "பேரகத்தியம்" தோன்றிய காலம் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு இல்லையென முடிவாகத் தெரிகிறது.

அதற்கு முன் அது தோன்றிய காலம் எப்போதோ? அதற்கு முன் இலக்கியங்கள் தோன்றிய காலம்? அதற்கு முன் உரைநடை தோன்றிய காலம்? அதற்கு முன் எழுத்துத் தோன்றிய காலம்? அதற்கு முன் மொழி தோன்றிய காலம் எப்போது? எவர் கண்டு கூறுவது? எவ்வாறு கூறமுடியும்?

தமிழ் நூல்களில் இறந்தன போக இன்று இருப்பவை 36 நூல்களே. அவை பத்துப்பாட்டு - எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு எனப் பெயர் பெறும் இவற்றுள்ளும் சில முழுவதும் இல்லை.

பரிபாடல்கள் 200க்கு மேற்பட்டவை. இன்று கிடைத்திருப்பன 70 பாடல்களே. ஐம்பெரும் காப்பியங்களுள் ஐந்துக்கு இரண்டு பழுதாகிவிட்டது. 2,700 பாடல்களைக் கொண்ட முத்தொள்ளாயிரத்தில் இன்று கிடைத்திருக்கும் பாடல்கள் 230 மட்டுமே. இவ்வளவு அழிந்துபோன பின்பும் தமிழ் அழியவில்லை.

எத்தனையோ மன்னர்கள் படையெடுத்து வந்தும், வேற்றுமொழி மக்கள் தமிழ் மக்களை ஆண்டும், எத்தனையோ மொழிகள் தமிழகத்தை ஆட்சி செய்து, எத்தனையோ பிறமொழிச் சொற்களும், பிறமொழி எழுத்துக்களும் தமிழ் மக்களின் சமய நூல்களில், வழிபாடுகளில், இலக்கியங்களில், கலைகளில், கல்வியில், தினசரி பத்திரிகைகளில் புகுத்தப் பெற்றும் தமிழ்மொழியானது எழிலும் வளமும் குன்றாது, இன்றும் அழியாது இருந்து வருவது வியப்புக்குரிய ஒன்று. இது தமிழ் மொழிக்கே உரிய தனிச்சிறப்பாகும்!

N. Kannan

unread,
Nov 21, 2011, 9:09:51 AM11/21/11
to mint...@googlegroups.com, coral shree, Subashini Kanagasundaram, Geetha Sambasivam
2011/11/21 Kannan Natarajan <thar...@gmail.com>

> இயல் நூல்கள்:-
>
> அகத்தியம், அடிநூல், அணிவியல், அவிநயம், அவிநந்த மாலை, ஆசிரிய மாலை, ஆசிரியமுறை, ஆசிரிய முறி, ஆன்மவியல், ஆட்சிநூல், இந்திரம், இந்திரகாளியம், இளந்திரையம், எதிர்நூல் ஐந்திரம், ஒப்பு நூல், ஓவிய நூல்.
>
> கச்சபுடம், கடகண்டு, கணக்கியல், கலியாணகாதை, கலைக்கோண்டுதண்டி, கலிப்பாடல், கவிமயக்கிறை, களிரியாவிரை, களவு நூல், கனவு நூல், காலகேசி, காக்கைபாடினியம், குருகு, குண்டலகேசி, கோள் நூல், சங்க யாப்பு, சயந்தம், சாத வாகனம், சிந்தம், சிற்பநூல், சிறு குரீ இயுறை, செயன் முறை.
>
> தந்திரவுரை, தகடூர்யாத்திரை, தும்பிப்பாட்டு, தேசிக மாலை, நாககுமாரகாவியம், நிலகேசி, பஞ்சமரபு, பதினாறு படலம், பரிநூல், பழைய பரிபாடல்கள், பல்காப்பியம், கல்காயம், பண்மணி மாலை, பன்னிரு படலம், பறவைப் பாட்டு, பாண்டியன் மரபு, பாட்டுமடை, பாண்டியன் பாரதம், பெருபாரதம், புணர்பாவை, புதையல் நூல், பூதபுராணம், பெரிய பமமம், பெருவல்லம், பெருவஞ்சி, போக்கியல்.
>
> மணியாரம், மந்திர நூல், மயேச்சுரயாப்பு, மாபுராணம், மார்க்கண்ட காஞ்சி, முதுநாரை, முதுகுருகு, முத்தொள்ளாயிரம், முப்பெட்டுச் செய்யுள், மூவடி முப்பது, யயோதர காவியம், வஞ்சிப்பாட்டு, வளையாபதி, வாய்ப்பியம், வியாழமாலை, விசாகன் பாரதம், வீரமாலை, வீரவிளக்கம், வீரவணுக்கம், வெண்டாளி, வேந்தியன் முறை, வைப்பியம், வைரமாலை, வஞ்சத் தொள்ளாயிரம்.
>
> இசை நூல்கள்:-
>
> சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசை நுணுக்கம், இசை விளக்கம், பஞ்சமரபு, பஞ்சமாபாரதீயம், பண்ணமைதி, பண்விரி விளக்கம், பாட்டும் பண்ணும், ஆளத்தியமைப்பு, கருவியிலக்கணம், தாள சமுத்திரம், தாளவகை யோத்து, இசைக்கூறு, பாடற்பண்பு.
>
> நாடக நூல்கள்:-
>
> கூத்து வரிருள நூல், சயந்தம், செயிற்றியம், பரதம், பரதனோயதீபம், மதிவாணர் நாடகத் தமிழ்நூல், முறுவல் விளக்கத்தார் கூத்து, அடிவைப்பு, அடிவரிசை, உறுப்பாட்சி, முத்திரை விளக்கம், மெய்ப்பாட்டியல், முகக்குறி முறை, கைக்குறி முறை தாளக்கட்டு, நாட்டிய விளக்கம், நிருத்த முறை.
>
> மருத்துவ நூல்கள்:-
>
> அகத்தியர் பன்னிரு காண்டம், போகர் எண்ணாயிரம், கோரக்கர் மூலிகைப்பயன் ஆயிரம், கொங்கணவர் மூவாயிரத்து நூறு, கோரக்கர் வெண்பா ஏழாயிரம், மச்சமுனி ஏழு காண்டம், சிவவாக்கியர் ஐந்து காண்டம், காசிபர் வண்ணம் ரோமமுனி வடுகம், இராமதேவர் சாந்தப்பா, நந்தீசர் சந்தம், சங்குமாமுனிக் கலித்துறை, திருமூலர் திருமந்திரம் எண்ணாயிரம், பதஞ்சலி ஏழு காண்டம், சட்டமுனி நிகண்டு, சட்டமுனி இரண்டாயிரத்து எழுநூறு, காலங்கிநாதர் நாலு காண்டம், போகர் எழுநூறு.
>


இந்நூல் பட்டியலை நம் விக்கி தேனிக்கள் சேகரித்து வைக்குமா?

>
> இந்நூல்கள் அழியத் தொடங்கி 2000, 3000, 5000, 7000, 11,000 ஆண்டுகளாயின என்று பல பேராசிரியர்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். இவர்களுக்குத் துணை செய்து வருவது இலக்கியச் சான்றுகள். மேலை நாட்டு அறிஞர்கள் "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும்" என்று கூறுகின்றனர். இவர்களுக்குத் துணை செய்வது மொழியறிவும், வரலாற்று உண்மையும், கல்வெட்டுகளும், புதை பொருள் ஆராய்ச்சியும் ஆகும். எனினும், அவை அழிந்துபோன காலத்தைத் துணிந்து கூறியதாக இல்லை.
>

காலக்கணக்குதான் கொஞ்சம் உதைக்கிறது. ஊர்ஜிதப்படுத்த வேண்டும்!

நா.கண்ணன்

விஜயராகவன்

unread,
Nov 21, 2011, 11:56:07 AM11/21/11
to மின்தமிழ்
தமிழ்மணி வேண்டுமென்றே படிப்பவர்களை குழப்புகிறார். "இந்நூல்கள் அழியத்

தொடங்கி 2000, 3000, 5000, 7000, 11,000 ஆண்டுகளாயின என்று பல
பேராசிரியர்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். இவர்களுக்குத் துணை செய்து
வருவது இலக்கியச் சான்றுகள் "


யார் அந்த "பல பேராசிரியர்கள் " , இந்த இலக்கிய சான்றுகள் என்ன என்பதை
பற்றி ஒன்றும் சொல்லமட்டார்.


விஜயராகவன்

On Nov 21, 3:09 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/11/21 Kannan Natarajan <thara...@gmail.com>

> நா.கண்ணன்- Hide quoted text -
>
> - Show quoted text -

Subashini Tremmel

unread,
Nov 21, 2011, 4:01:09 PM11/21/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/11/21 விஜயராகவன் <vij...@gmail.com>

தமிழ்மணி வேண்டுமென்றே படிப்பவர்களை குழப்புகிறார்.  "இந்நூல்கள் அழியத்
தொடங்கி 2000, 3000, 5000, 7000, 11,000 ஆண்டுகளாயின என்று பல
பேராசிரியர்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். இவர்களுக்குத் துணை செய்து
வருவது இலக்கியச் சான்றுகள் "


யார் அந்த "பல பேராசிரியர்கள் " , இந்த இலக்கிய சான்றுகள் என்ன என்பதை
பற்றி ஒன்றும் சொல்லமட்டார்.


நானும் இதை வாசித்த போது யோசித்தேன். பொதுவாக இப்படி வருஷங்களை உயர்த்தி சொல்வது ஒரு சிலரது எழுத்து முறையாக இருக்கிறது. 
ஆனாலும் இந்தப் பட்டியல் பதிந்து வைக்க வேண்டிய தகவல் ..

நமது சேகரிப்பில் மறைந்த நூல்களைப் பதிப்பித்தல் என்ற ஒரு அருமையான கட்டுரை இருக்கின்றது. வாசித்துப் பாருங்களேன்.
சுபா

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Subashini Tremmel

unread,
Nov 21, 2011, 4:04:09 PM11/21/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அன்பு தாரகையார்,

இந்தக் கட்டுரையின் ஆசிரியர் யார்? இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்களா ?

சுபா

2011/11/21 Kannan Natarajan <thar...@gmail.com>

தாரகை

unread,
Nov 21, 2011, 6:18:39 PM11/21/11
to மின்தமிழ்
> இந்தக் கட்டுரையின் ஆசிரியர் யார்? இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்களா ?

சுபா அவர்களே,

ஆசிரியர் பெயரைக் குறிப்பிடவில்லை இணையத்தில் தினமணியாளர்கள்.
செய்தித்தாளில் ஆசிரியரின்
பெயரைக் குறிப்பிட்டுள்ளனரா என்று தமிழகத்தில் உள்ளோர் தெரிவித்தால் நலம்
பயக்கும்.

நன்றி.

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

Kannan Natarajan

unread,
Dec 3, 2011, 12:33:43 AM12/3/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 16:- கன்னித் தமிழ்!


                                                சாமி.சிதம்பரனார்

பழமையானது, பயன் தருவது. என்றும் குன்றாத தன்மையுள்ளது. வாடாத வனப்பும் வாய்ந்தது. இத்தகைய பொருள்கள் எதுவாயினும் மக்களால் மகிழ்ச்சியுடன் போற்றப்படும்; எந்நாளும் பாராட்டப்படும். காலங்குறிப்பிட முடியாதது குற்றாலத்து நீர்வீழ்ச்சியும், பொதியமலையும், பொதியத் தென்றலை இன்றும் இலக்கியங்கள் போற்றுகின்றன. அருவியும் அப்படியே. 

பொதியத்தைப் போலவே இமயத்தையும் தமிழிலக்கியங்கள் பாராட்டியிருக்கின்றன. அதுவும் காலங்கடந்து. காவிரி, தாமிரபரணி, கங்கை போன்ற ஆறுகளும் காலங்கடந்தவை. அவற்றை இலக்கியங்கள் போற்றுகின்றன; கவிஞர்கள் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். 

இவ்வாறு பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய் பொலிவுறும் பொருள்கள் என்றும் போற்றப்படும். இவை எந்நாளும் அழியாமல் நிற்பவை; நடப்பவை; இருப்பவை. இத்தகைய பழமையும் புதுமையும் பொருந்தியது பல்லாண்டுகளாகப் பலராலும் பாராட்டப்படுவது, பயன் தருவது - நமது பண்டைக் கன்னித் செந்தமிழ். 

தமிழின் பெருமை:- 

செந்தமிழ் பழமைக்கும் பழமையானது; புதுமைக்கும் புதுமையானது; வடமொழி ஒரு காலத்தில் திருத்தமற்ற மொழியாக வழங்கியது. பின்னால்தான் திருத்தியமைக்கப்பட்டது. இப்பொழுதுள்ள வடமொழி திருத்தியமைக்கப்பட்ட மொழி.

"சம்ஸ்கிருதம்" என்றால் திருத்தியமைக்கப்பட்டது என்று பொருள். தமிழ், செந்தமிழாகவே பிறந்தது; செந்தமிழாகவே வளர்ந்து வருகின்றது. "உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாமல்" ஓங்கி வளர்வது. இந்தச் சிறப்பை எண்ணித்தான் இதற்குக் "கன்னித் தமிழ்" என்ற பெயரையும் வைத்தனர் ஆன்றோர்கள். 

தமிழர்கள் "தமிழ்" என்று குறிப்பிடும்போது அதனோடு மற்றொரு சொல்லையும் சேர்த்து வழங்குவார்கள். பேசும்போது தமிழ் என்று தனியாகக் குறிப்பிட்டாலும், எழுதும்போது அதனுடன் ஒரு சிறப்புச் சொல்லை இணைத்தே எழுதுவார்கள். இது பழந்தமிழர் பண்பு. தமிழோடு இணைத்து எழுதுகின்ற அச்சொல் தமிழின் சிறப்பை - தன்மையை - விளக்குவதாகவே அமைந்திருக்கும்.   

- செந்தமிழ்
- பைந்தமிழ்
- தண்டமிழ்
- நற்றமிழ்
- இன்றமிழ்
- வண்டமிழ்
- தன்றமிழ்
- முத்தமிழ்
- தெய்வத்தமிழ்
- அன்னைத் தமிழ்
- கன்னித் தமிழ்
- அருந்தமிழ்.   

செந்தமிழை இத்தகைய அடைமொழிகளோடு இணைத்தே சொல்லுவார்கள். இதைக்கொண்டே தமிழர்கள் தங்கள் தாய்த் தமிழை எவ்வளவு அருமையாக, இன்னுயிரைப்போல் போற்றி வந்தனர் என்பதைக் காணலாம். 

இவற்றிலே கன்னித் தமிழ் என்னும் தொடர் மிகவும் அருமையானது; அழகானது; தமிழின் அழியாத தன்மையை அறிவிப்பது. உலகம் தோன்றிய காலத்திலே தோன்றியது; உலகம் உள்ள வரையிலும் உயிருடன் வாழ்வது தமிழ் என்னும் உண்மைப் பொருள் பொதிந்த தொடர். இத்தொடர் பொருட்செறிவாயுள்ள பொன்மொழியாகும். 

மணமாகாத பெண் கன்னிப் பெண். கன்னிகையின் வனப்பு என்றும் வாடாத மலர். அவள் அழகு, காண்போர் கண்ணையும் கருத்தையும் கவரும். அது பெண் தன்மை குன்றாத பேரழகு. இவை மட்டும் அன்று; கன்னிகைக்கு மற்றொரு தனிச் சிறப்பும் உண்டு. அவள் யாருக்கும் அடிமைப்படாதவள்; வேண்டுமானால் - விரும்பினால் - அவள் பிறரைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்ளலாம். அவள் யாருக்கும் அடிமையாகமாட்டாள்; தன்மையும், தூய்மையும் குன்றாமல் தலைநிமிர்ந்து அவளால் வாழ முடியும். இது கன்னிகைக்குள்ள ஒரு தனிச் சிறப்பும் பண்புமாகும்.  நலம் எல்லாம் நிறைந்தது. 

தமிழ்மொழியும் கன்னிப் பெண்ணைப்போல் விளங்குவது; கன்னிப் பெண்ணுக்குள்ள நலமெல்லாம் கனிந்து நிரம்பித் ததும்புவது. அழகிலே - இனிமையிலே - பயனிலே - எம்மொழிக்கும் அடிமையாகாத தன்மையிலே - தமிழுக்கு நிகரான மொழி தரணியில் வேறு ஒன்றுமேயில்லை. தமிழுக்கு நிகர் - சமம் - ஒப்பு - தமிழேதான்! 

நிற்பது திருவள்ளுவர் மொழி என்று கூறினார் ஒரு புலவர். "என்றும் வாடாது; எவ்வளவு நாள்களானாலும் அன்றலர்ந்தது போலவே காட்சியளிக்கும்; தேனைச் சிந்தி. குறையாத, செழுமையான தளிர்களையுடைய கற்பக மரத்தின் மலர் இத்தகைய தெய்வத் தன்மையும் அழகும் நிறைந்தது. இது போன்றது வள்ளுவர் வாய்மொழி" என்று திருக்குறளுக்குக் கூறிய இப்பாராட்டு, கன்னித் தமிழுக்கும் பொருந்துவதாம்.   

"உன்-சீர் இளமைத் திறம் வியந்து 
 செயல் மறந்து வாழ்த்துதுமே''   

உன்னுடைய சிறந்த கன்னித் தன்மையைப் புகழ்ந்து எங்கள் செயலை மறந்து, உன்வசமாகி, உன்னை, "கன்னித் தமிழ்" என்று வாழ்த்துகின்றோம்''. இது "மனோன்மணீயம்" என்னும் நாடகத் தமிழ் நூலை இயற்றிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் பாட்டு. இப்படி மனமார, வாயாரப் புகழ்ந்து தமிழ்த்தாயை வாழ்த்துகின்றார். அவர் தான் மட்டும் வாழ்த்துவதாகச் சொல்லவில்லை; தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து இறைஞ்சுகிறோம் என்று பாடுகின்றார். 

கன்னித் தமிழே முத்தமிழ்:- 

செந்தமிழை முத்தமிழ் என்று பாராட்டுகின்றோம். செந்தமிழ் எப்போது முத்தமிழ் ஆயிற்றோ! அதை அறிவார் யார்?

அதன் காலத்தைக் கணக்கிட முடியாது.

தொல்காப்பியத்திலே முத்தமிழ் முழங்குகின்றது. தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்; இன்றுள்ள தமிழ் நூல்களில் காலத்தினால் முற்பட்டது தொல்காப்பியம் ஒன்றேதான். தொல்காப்பிய காலத்திலே தண்டமிழ்மொழி முத்தமிழாக வழங்கியதென்றால், முத்தமிழ் பிறந்த காலத்தைக் கணக்கிடுவது எப்படி? 

முத்தமிழ் - மூன்று வகையான தமிழ். மூன்று பிரிவான தமிழ், மூன்று இனமான தமிழ் என்று மட்டும் பொருள் சொல்லுவது பொருந்தாது. செந்தமிழின் சிறந்த தன்மையை அதன் ஒப்பற்ற பண்பை - மாசுமறுவற்ற கன்னித் தன்மையைக் கண்டறியாதவர் சிலர் உண்டு. அவர்கள்தான் செந்தமிழ், கருந்தமிழ், கொடுந்தமிழ் என்று குருட்டாம்போக்கிலே கூறுவர். முத்தமிழுக்குப் பொருள் இதுதான் என்று மொழிவர். இவர்கள் செந்தமிழின் கன்னித் தன்மையைக் கண்டுணராதவர்கள். 

முத்தமிழ் - மூன்று துறையில் பயன்படும் தமிழ் மூன்று வகையில் உதவி புரியும் தமிழ்; மூன்று வகைப்பட்ட மக்களுக்கும் அறிவும் இன்பமும் சுரக்கும் தமிழ். இதுதான் முத்தமிழின் பொருள். இந்த முத்தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று மூன்று துறைகளில் பயன்படும் தமிழாகும். 

படிக்கும் தமிழ்:- 

இயற்றமிழ் என்பவர்கள் கற்றவர்கள் மட்டும் எளிதிலே பொருள் தெரிந்துகொள்ளும்படி நிற்பது, இயற்றமிழிலே பேச்சு வழக்கில் இல்லாத சொற்களும் கலந்து வழங்கும். இயற்றமிழைப் "படிக்கும் தமிழ்" என்று சொல்லிவிடலாம். 

கேட்கும் தமிழ்:- 

இசைத் தமிழ் என்பது பண்ணோடு கூடியது. இசை - பண்; சங்கீதம். இசைக் கருவிகளின் துணையுடனோ, துணையில்லாமலோ பாடும்படி அமைந்திருப்பது இசைத்தமிழ். படித்தவர்களின் உள்ளத்தையும் இசைத்தமிழ் கவரும். படிக்காதவர்களின் நெஞ்சையும் இசைத்தமிழ் இழுத்துக்கொள்ளும். இசையோடு சேர்ந்த தமிழ், இசைத்தமிழ் . இசைத்தமிழைக் "கேட்கும் தமிழ்" என்று இயம்பலாம். 

பார்க்கும் தமிழ்:- 

நாடகத் தமிழ் என்பது ஒரு நிகழ்ச்சியைக் கண்ணாற் காணும்படி நடத்திக் காட்டுவதற்கு உதவுவது. பிறர் பேசியதை அப்படியே - அவரைப்போலவே - சொல்லிக் காட்டுவது; நடந்த ஒரு வரலாற்றை அல்லது புதிதாகப் புனைந்த ஒரு கதையை மற்றவர்கள் கண்டு சுவைக்கும்படி நடித்துக் காட்டுவதற்கு உதவுவது நாடகத் தமிழ். ஒருவரைப் பார்த்துப் பேசுவது, ஒருவரோடு ஒருவர் உரையாடுவது நாடகத் தமிழில் அடங்கும். இவ்வாறு உயர்ந்த படிப்பாளிகள் சிறிது கற்றவர்கள், கற்காதவர்கள் ஆகிய இம் முத்திறத்தாரையும் நல்வழிப்படுத்தவே செந்தமிழ் அன்னை முத்தமிழ் உருவாகி நிற்கிறாள். 

இயற்றமிழிலே இசையும் உண்டு; நாடகமும் உண்டு. இசைத் தமிழிலே இயலும் உண்டு; நாடகமும் உண்டு. நாடகத் தமிழிலே இயலும் உண்டு; இசையும் உண்டு. இந்த மூன்று தமிழும் ஒரு மரத்தின் கிளைகள், ஆனால், இவற்றைப் பிரித்து வெட்டித்தள்ள முடியாது. 

கன்னிப்பெண் எல்லோர் நெஞ்சையும் கவர்வதுபோலவே இந்த முத்தமிழும் அனைவர் உள்ளத்தையும் அள்ளிக்கொள்வது. எல்லோருக்கும் இன்பமும், மகிழ்ச்சியும் அறிவும் ஊட்டுவது. கன்னித் தமிழின் இயல்புக்கு இந்த முத்தமிழ் அமைப்பும் ஓர் எடுத்துக்காட்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செந்தமிழ் என்று பெயர் பெற்று நிற்கின்றது. இதுபோன்ற பெயர் - சிறப்பு வேறு எம்மொழிக்கும் இல்லை!

காவியத்தில் கன்னித் தமிழ்:- 

கவிதைகளால் இயற்றப்படுவன காவியங்கள். தமிழ்க் கவிதைகளிலும், கவிதைகளின் பொருள்களிலும் கன்னித் தன்மையுண்டு; கவிதைகளால் செய்யப்பட்ட காவியங்களிலும் கன்னித் தன்மை உண்டு. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என்ற நான்கு பகுதியுடையது என்பர். இவையே பாடல் வகையில் விரிவாகும்.

தொல்காப்பியர் காலத்திலும் அவர் காலத்திற்கு முன்னும் இந்த நால்வகைப் பாடல்களையும் இவற்றின் பகுதிகளையுமே காவியங்கள் செய்வதற்குக் கருவியாகக் கொண்டனர். இந்த நான்கு வகைப் பாடல்களிலே மூன்று வகைப்பொருள்களை அமைத்துப் பாடி வந்தனர். அந்த மூன்று பொருள்கள் அறம், பொருள், இன்பம் என்பன. காவியங்களிலும், கவிதைகளிலும் இந்த முப்பொருள்களையே அமைத்துப் பாடிவந்தனர். 

இத்தகைய கவிதையும் பொருளும் கொண்ட காவியங்களிலே தமிழ்க் காவிய அமைப்பு மிகவும் சிறந்தது. தமிழ்க் காவிய அமைப்பு ஒரு தனித் தன்மையுள்ளது. வடமொழிக் காவிய அமைப்புக்கு மாறானது. 

இன்றைய யுகம்:- 

இன்று நடப்பது பொதுமக்கள் யுகம். அரச குடும்பங்களின் தனி அதிகார ஆட்சிக்காலம் மறைந்து வருகின்றது. கதைகளும், காவியங்களும் காலத்தின் சூழ்நிலையை ஒட்டியே பிறக்கும். அரச குடும்பக் கதைகளுக்கு இக்காலத்தில் மதிப்பில்லை. அரச குடும்பங்களின் வாழ்க்கையை - அரசர்களின் சர்வாதிகாரப் பெருமையை - அளவுகோலாகக்கொண்டு எழுதப்படும் கதைகளை இக்காலத்தினர் கண்ணெடுத்தும் பார்க்கமாட்டார்கள். 

தமிழ் நாட்டிலே பன்னூறாண்டுகளுக்கு முன்னே பல மொழியினர் குடியேறினர். அவர்களிலே பலர் தமிழர்களாகவே உருமாறிவிட்டனர். தமிழ்மொழியையே தாய்மொழியாகக் கொண்டுவிட்டனர். 

தமிழகத்திலே புகுந்த எந்த மொழியினராலும் தமிழின் கன்னித் தன்மையைக் கலைக்க முடியவில்லை; தமிழின் தனிச் சிறப்பைத் தகர்க்க முடியவில்லை. இதற்கு மாறாக, எல்லோரும் செந்தமிழ்க் கன்னியின் சிறந்த புன்முறுவலிலே சிந்தனையைப் பறிகொடுத்தனர். அருந்தமிழ்க் கன்னியின் அழகு சிந்தும் நடையிலே அன்பு கொண்டனர்; அவளுடைய வனப்பையும் பண்பையும் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தும் அடியார்களாகத் திரும்பிவிட்டனர். இது வரலாறு கண்ட உண்மை. 

வாழ்க கன்னித் தமிழ்!

நன்றி:- தினமணி

Kannan Natarajan

unread,
Dec 3, 2011, 12:43:47 AM12/3/11
to Min Thamizh
ஆலங்குடி ஆதவிப்பிரகாசன் என்கிற புனைபெயரில் கிறுக்கலான கையெழுத்துடன் ஒருவர் மொட்டைக் கடிதம் எழுதி இருக்கிறார். "வேருக்கு நீர் வார்த்தவர்கள்" வரிசையில் யாழ்ப்பாணப் புலவர் ந.சி.கந்தையா பிள்ளை எழுதிய "தமிழின் சிறப்பு" என்கிற கட்டுரை நவம்பர் 13, 2011 இதழில் வெளிவந்திருக்கிறது. அதில் அவர் குறிப்பிட்டிருந்த "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" என்கிற "மனோன்மணீயம்" பாடல் வரிகள்தான் அவரது மொட்டைக் கடிதத்துக்கான காரணம்.

"தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நீவிர் அச்சடித்தது சரியா, பாடப் புத்தகங்களில் உள்ளது சரியா? தமிழை, தமிழாய்ந்த தலைமகனை, தானைத் தலைவன் கலைஞர் கருணாநிதியைக் குற்றம் கூறும் உமது பிழைப்பும் ஒரு பிழைப்பா? பார்ப்பனீயம் வளர ஆதரவு தேடும் உமது நோக்கத்தை விட்டு ஒழிப்பீர்'' என்பதுதான் அந்த மொட்டைக் கடிதத்தின் வாசகங்கள்.

முதலில் அவர் "தமிழின் சிறப்பு" என்கிற கட்டுரையைச் சரியாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. கட்டுரையைச் சரியாகப் படித்திருந்தால் பார்ப்பனீயக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்க மாட்டார்.

அது போகட்டும். இவரைப்போலவே பாட நூலில் கூறப்படுவதற்கு மாறுபட்டு "மனோன்மணீயம்" பாடல் வரிகள் கட்டுரையில் தரப்பட்டிருக்கிறதே என்கிற ஐயப்பாடு, மனோன்மணீயம் படித்திராதவர்களுக்கும், தமிழ்த்தாய் வாழ்த்து உருவான சரித்திரம் தெரியாதவர்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதால் அதற்கு விளக்கம் தரவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை எழுதிய "மனோன்மணீயம்" காப்பியத்தில் காணப்படும் வரிகள் இவைதான்.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

கவிஞர் கண்ணதாசன் அப்போது நடத்திவந்த "கண்ணதாசன்" இதழில் ஒரு தலையங்கம் தீட்டியிருந்தார். அதைக் கண்ணதாசன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள "கவிஞர் கண்ணதாசன் தலையங்கங்கள்" என்கிற புத்தகத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

"தமிழ்த்தாய் வாழ்த்து" என்கிற அந்தத் தலையங்கத்தில் கவிஞர் கண்ணதாசன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்து "மனோன்மணீயம்" சுந்தரம் பிள்ளையின் பாடலுடைய கருச் சிதைவாகும்.

மனோன்மணீயம் ஆசிரியரே கேட்டால் தற்கொலை செய்து கொள்கிற மாதிரி வரிகளைச் சிதைத்தும் மாற்றியும் கருணாநிதி எழுதி இசைத்தட்டு வெளிவந்திருக்கிறது.

இந்த மொழி வாழ்த்தை இன்றைய அரசாங்கம் வைத்துக்கொள்ள விரும்பினால், ஒரிஜினலில் உள்ளபடி இசைத்தட்டு கொண்டுவர வேண்டும். இல்லையேல், முன்னிருந்தபடி பாரதியாரின் "வாழிய செந்தமிழை" இசைத் தட்டாக்கி, அதையும் தேசிய கீதமான "ஜனகணமன" இரண்டையும் ஒரே இசைத்தட்டாகக் கொடுக்கலாம்''.

"மனோன்மணீயம்" சுந்தரனாரின் பாடல் வரிகளை அன்றைய முதல்வர் கருணாநிதி மாற்றியதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டன.

"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்'' என்பது நாத்திகவாதியான அவருக்கு உடன்படாத கருத்து என்பது ஒன்று.

"கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்'' என்கிற வரிகள், அப்போது கட்சியிலிருந்து பிரிந்துவிட்ட மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எம்.ஜி.ஆருக்கு "திராவிட" அந்தஸ்த்தைக் கொடுத்துவிடுமே என்கிற அச்சம் இரண்டாவது காரணம்.

இந்த இரண்டு காரணங்களும் இருக்கட்டும்.

"ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே'' என்பதையாவது தமிழ்த்தாய் வாழ்த்தில் வைத்துக் கொண்டிருக்கலாமே, அதை ஏன் அன்றைய முதல்வர் கருணாநிதி தவிர்த்தார் என்பதற்கு மொட்டைக் கடிதம் எழுதிய ஆலங்குடி ஆதவிப்பிரகாசன்தான் பதில் சொல்ல வேண்டும். தயவுசெய்து தனது உண்மையான பெயருடனும், விலாசத்துடனும்!

rajam

unread,
Dec 3, 2011, 12:51:47 AM12/3/11
to mint...@googlegroups.com
இக்கட்டுரையை இங்கே வழங்கியவர் ("கண்ணன் நடராசன்") என் முன்னாள் பேராசிரியர் ஔவை அவர்களின் பேரரும் திரு நடராசன் / டாக்டர் தாரா அவர்களின் மகனாரும் ஆகியவர் என்று நினைக்கிறேன்.
இன்னுமா நம் மக்கள் "கன்னித் தமிழ்" என்ற போதையில்/பேதையில் இருக்கிறார்கள்?
முதலில் "கன்னி" என்பதற்கு என்ன பொருள் என்று தெரிவித்தால் நல்லது. தமிழில் சொல்லக் கூச்சமாக இருக்கிறது, அதனால் ஆங்கிலத்தில் கேட்கிறேன்: "What the heck does that "kaṉṉi" mean? Does it mean that it is not sexually consummated?"
வாழ்ந்துவரும் எந்த மொழியும், எந்த இனமும் "கன்னி"யாக ("not consummated") இருக்கவே முடியாது. 
தினமணியில் தமிழ் அறிந்தவர் இல்லையோ?

Nagarajan Vadivel

unread,
Dec 3, 2011, 1:10:07 AM12/3/11
to mint...@googlegroups.com
//இன்னுமா நம் மக்கள் "கன்னித் தமிழ்" என்ற போதையில்/பேதையில் இருக்கிறார்கள்?
முதலில் "கன்னி" என்பதற்கு என்ன பொருள் என்று தெரிவித்தால் நல்லது. தமிழில் சொல்லக் கூச்சமாக இருக்கிறது, அதனால் ஆங்கிலத்தில் கேட்கிறேன்: "What the heck does that "kaṉṉi" mean? Does it mean that it is not sexually consummated?"//
தமிழ் வேற்று மொழிகளின் தொடர்பில்லாமல் தனித்தியங்கியதைக் குறிக்க கன்னித் தமிழ் என்ற சொல்லைச் சிலர்  பயன்படுத்தினார்கள்.  அதாவது சமஸ்கிரிதக் கலப்பு இல்லாத தமிழைக் குறிக்கப் பயன் படுத்தினர்.  பின்னர் கன்னி என்ற சொல்லே சமஸ்கிரிதச் சொல் என்றறிந்து தனித் தமிழ் என்ற சொல்லைப் பயன் படுத்த ஆரம்பித்தார்கள்.
கன்னிப் பருவத்தைத் தமிழ் கடந்து ஆயிரக்கண்க்கான் ஆன்டுகள் கடந்தபின்னும் கன்னித் தமிழ் என்று சொல்லுவது ஒரு வேளை தமிழை முதிர் கன்னியாகப் பார்ர்க்கிறார்களோ என்னவோ
நாகராசன்


2011/12/3 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Dec 3, 2011, 1:16:29 AM12/3/11
to mint...@googlegroups.com
ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இந்த மாதிரிச் சொல்லாட்சி ("கன்னித் தமிழ்") எல்லாம் வெறும் வெத்துப்பேச்சு; பயன்படுத்துகிறவர்களுக்கு அதன் ஆழ்ந்த பொருள் சொல்லும் திறன் இருக்கா இல்லையா என்பது ஐயமே.
தமிழ் முதிர் கன்னியும் இல்லை; இளம் கன்னியும் இல்லை! இது ஒரு மொழி, அவ்வளவே!

Raja sankar

unread,
Dec 3, 2011, 1:22:35 AM12/3/11
to mint...@googlegroups.com
கன்னித்தமிழ் என சொல்பவர்களுக்கு பொருள் தெரியாமல் இல்லை. ஆனாலும் ஏன் சொல்லுகிறார்கள் என்றால் அது பச்சையான ஆணாதிக்கம் தான். வேறொன்றும் இல்லை.

ராஜசங்கர்

2011/12/3 rajam <ra...@earthlink.net>

தாரகை

unread,
Dec 3, 2011, 1:24:53 AM12/3/11
to மின்தமிழ்
> தினமணியில் தமிழ் அறிந்தவர் இல்லையோ?

இக்கட்டுரையை சாமி.சிதம்பரனார் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது.
வேருக்கு நீர் வார்த்தவர்கள் பகுதியில் சில வாரங்களாக அக்காலத்தில்
எழுதிய கட்டுரைகளை தினமணி வழங்கி வருகிறது.

> இக்கட்டுரையை இங்கே வழங்கியவர் ("கண்ணன் நடராசன்") என்
> முன்னாள் பேராசிரியர் ஔவை அவர்களின் பேரரும் திரு
> நடராசன் / டாக்டர் தாரா அவர்களின் மகனாரும்
> ஆகியவர் என்று நினைக்கிறேன்.

இக்குழுமத்தினர் அறிந்த மெய்மை.

rajam

unread,
Dec 3, 2011, 1:52:17 AM12/3/11
to மின்தமிழ்


Begin forwarded message:

From: தாரகை <thar...@gmail.com>
Date: December 2, 2011 10:24:53 PM PST
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Subject: [MinTamil] Re: தமிழ்மணி - பழகு தமிழ் - வேருக்கு நீர் வார்த்தவர்கள்!

தினமணியில் தமிழ் அறிந்தவர் இல்லையோ?

இக்கட்டுரையை சாமி.சிதம்பரனார் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது.
வேருக்கு நீர் வார்த்தவர்கள் பகுதியில் சில வாரங்களாக அக்காலத்தில்
எழுதிய கட்டுரைகளை தினமணி வழங்கி வருகிறது.
 
அப்படியே இருக்கட்டும்! ஆனாலும், மறுபடி மறுபடி அரைத்த மாவையே அரைத்துக் கொடுத்து என்ன பயன்? பிள்ளைகளுக்கு அறிவு வளர்ந்திருக்கிறதா/விரிந்திருக்கிறதா/முதிர்ந்திருக்கிறதா என்று கண்டுகொள்ள அடையாளம் ஒன்றுமே இல்லையே! கட்டுரையை வெளியிட்ட கையோடு ஒரு சிறு பின் குறிப்பையும் தரலாமே -- அந்தப் பழைய கருத்து இன்று எப்படிச் செல்லுபடியாகும்/ஆகாது என்று சொல்லி! 


இக்கட்டுரையை இங்கே  வழங்கியவர் ("கண்ணன் நடராசன்") என்
முன்னாள் பேராசிரியர் ஔவை  அவர்களின் பேரரும் திரு
நடராசன் / டாக்டர் தாரா  அவர்களின் மகனாரும்
ஆகியவர் என்று  நினைக்கிறேன்.

இக்குழுமத்தினர் அறிந்த மெய்மை.

தெளிவுக்கு நன்றி! 

rajam

unread,
Dec 3, 2011, 2:15:51 AM12/3/11
to mint...@googlegroups.com
On Dec 2, 2011, at 10:22 PM, Raja sankar wrote:

கன்னித்தமிழ் என சொல்பவர்களுக்கு பொருள் தெரியாமல் இல்லை. ஆனாலும் ஏன் சொல்லுகிறார்கள் என்றால் அது பச்சையான ஆணாதிக்கம் தான். வேறொன்றும் இல்லை.

ராஜசங்கர்

சரி, ஒரு உந்துவண்டி (car) வாங்கப் போறோம்-னு வச்சுக்குவோம். என்ன சொல்வாங்க-னா ... "Once you take it out of the shop, the value goes down" என்று. அதாவது ... வண்டியைக் காசு கொடுத்து வாங்கி நீங்கள் ஓட்டத் தொடங்கிய உடனே அது "பழைய" வண்டி ஆகிவிடுகிறது; அதன் மதிப்பு ("book value") உடனே குறையத் தொடங்குகிறது! அதே போலத்தான் ... ஒரு மொழியும் ... பயன்படுத்தத் தொடங்கின உடனே "பழசு" ஆகிவிடுகிறது! தமிழும் இதற்கு விதிவிலக்கு இல்லை, இல்லை! 


2011/12/3 rajam <ra...@earthlink.net>
ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இந்த மாதிரிச் சொல்லாட்சி ("கன்னித் தமிழ்") எல்லாம் வெறும் வெத்துப்பேச்சு; பயன்படுத்துகிறவர்களுக்கு அதன் ஆழ்ந்த பொருள் சொல்லும் திறன் இருக்கா இல்லையா என்பது ஐயமே.
தமிழ் முதிர் கன்னியும் இல்லை; இளம் கன்னியும் இல்லை! இது ஒரு மொழி, அவ்வளவே!


தாரகை

unread,
Dec 3, 2011, 3:02:21 AM12/3/11
to மின்தமிழ்
> அந்தப் பழைய கருத்து இன்று எப்படிச் செல்லுபடியாகும்/ஆகாது
> என்று சொல்லி!

அம்மையார் தெரிவித்துள்ள உவமைகள் தமிழ் மொழியிற்கு மட்டுமின்றி
குழந்தைகளாகவும், கன்னிகளாக வணங்கும் சில இறைவன்/இறைவிக்கும் பொருந்துமா!

ஒரு ஐயம்!

"செல்வி" என்றழைக்க பெண்ணின் அகவை வரையரை என்று ஏதாவது அளவுகோல் உள்ளதா?

Nagarajan Vadivel

unread,
Dec 3, 2011, 3:16:35 AM12/3/11
to mint...@googlegroups.com
கன்னி என்ற சொல்லின் பயன்பாடு இங்கே
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF
கன்னித் தமிழ் என்ற குறிப்பு இங்கே காணோம்
ஆதாரம் சென்னைப் பல்கலைக்கழகச் சொல்லகரமுதலி என்று குறிப்பிடப்பட்டுள்ளதே.
சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகனில் கன்னித் தமிழ் இல்லையா?

Raja sankar

unread,
Dec 3, 2011, 3:44:28 AM12/3/11
to mint...@googlegroups.com
நீங்க எங்கே இந்த உரையாடலை கொண்டு செல்ல முயல்கிறீர்கள் என புரிகிறது. :-)

இறைவன் இறைவியும் , உயிருள்ள பெண்களும் மொழியும் ஒன்றா என நீங்கள் தான் தெரிவிக்கவேண்டும்.

ராஜம் அவர்கள் முன்பே சொன்னது போல் எல்லோரும் மொழியை பயன்படுத்திக்கொண்டு தானே இருக்கிறோம் அப்புறம் எப்படி கன்னித்தமிழ் ஆகும்????

கன்னித்தமிழ் என்று சொன்னால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது. ஒரு பக்கம் கன்னி என சொல்லிக்கொண்டு இன்னோர் புறம் தாய் என சொல்லுவது எந்த நியாயத்தில் சேரும் என தெரியவில்லை.

ராஜசங்கர்



2011/12/3 தாரகை <thar...@gmail.com>

தாரகை

unread,
Dec 3, 2011, 3:54:35 AM12/3/11
to மின்தமிழ்
> சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகனில் கன்னித் தமிழ் இல்லையா?

"சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!" என்று மனோன்மணீயம்
சுந்தரனாரின் பாடல் வரியின் "சீரிளமை" என்பதை கன்னித் தமிழ் என விளக்கம்
தருவதும் உண்டு.

கன்னி என்பதிற்கு பல பொருள் உள்ளது - இளமை, புதுமை, முதன்மை/முதல்.......

அவ்வகையில், கன்னித்தமிழ் என்பதை புதுமைத்தமிழாக இக்காலத்திற்கு ஏற்பது
சால்பு.

> ஒரு மொழியும் ... பயன்படுத்தத் தொடங்கின உடனே "பழசு"

> ஆகிவிடுகிறது! தமிழும் இதற்கு விதிவிலக்கு இல்லை, இல்லை!

மொழியின் வளர்ச்சி பழகப் பழகத்தான் வளர்ச்சிபெறும். புதியச்சொற்கள்
மலரும். துடைக்கத் துடைக்க கண்ணாடி பளப்பளப்பாக இருப்பதைப்போல.

காலப்பழக்கத்தை நம் சான்றோர்கள்,

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப் பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்...

கூறியதன் பொருள், பழகப் பழக பழசாக மாறுவதிற்கில்லை, பொலிவு பெறுவதற்கே.

In English language, elderly woman are mentioned as old lady. The use
of "Grand" old lady is intriguing!

தாரகை

unread,
Dec 3, 2011, 4:06:38 AM12/3/11
to மின்தமிழ்
> நீங்க எங்கே இந்த உரையாடலை கொண்டு செல்ல முயல்கிறீர்கள் என புரிகிறது. :-)

உங்கள் சிந்தை இவ்வுரையாடல் எத்திசையில் செல்கிறது என்பதில்லாமல்,
எவ்வாறு ஒருங்கிசைவாக கலந்துரையாடலாம் என்றிருப்பின் மாண்பு:-)

> இறைவன் இறைவியும் , உயிருள்ள பெண்களும் மொழியும் ஒன்றா என நீங்கள் தான்
> தெரிவிக்கவேண்டும்.

ஒன்றா அல்லது ஆத்மா வரையறைகளில் செல்லாமல், மொழியையும் நம்மினத்தவர்
இறையோடு சமநிலையில் ஒப்பீடு செய்துள்ளனர் என்பதை நீர் அறியாதாரில்லை.

Nagarajan Vadivel

unread,
Dec 3, 2011, 4:23:10 AM12/3/11
to mint...@googlegroups.com
உலகெங்கும்  தங்கள் சொந்த மொழியைத் தாய்மொழி என்றுதானே குறிப்பிடுகிறார்கள்?
நாகராசன்

2011/12/3 தாரகை <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
Dec 3, 2011, 3:36:00 PM12/3/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 17:- திரிபுரி பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகள்!


      "நாட்டுப்புறவியலின் தந்தை" பேரா.நா.வானமாமலை

துஷார் காந்தி நியோகி என்ற ஆய்வாளர் திரிபுரி மக்களது சில பழமொழிகளை ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளார். முடிந்த அளவிற்கு திரிபுரி பழமொழிகளுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளையும் தொகுத்துள்ளார். அக் கட்டுரையில் வெளியிடப்பட்ட திரிபுரி பழமொழிகள், பரேந்திரதேவ் வர்மன் என்ற கிராமவாசியினால் சேகரிக்கப்பட்டது. அவருக்குத் திரிபுரி மொழியும் வங்காளி மொழியும் தெரியும். இப்பழமொழிகளை அவர் தமது வயது முதிர்ந்த தாய் - தந்தையரிடம் கேட்டு அறிந்தார்.

நியோகி மேற்குறிப்பிட்ட கட்டுரையின் முன்னுரையில் "பல மொழி பேசும் மக்களிடையே ஒரே விதமான கருத்துக்களும், கொள்கைகளும் நிலவுவதை அவர்களுடைய பழமொழிகள் காட்டுகின்றன'' என்று எழுதுகிறார்.

இதற்கு உதாரணமாக சில பழமொழிகளுக்கு வங்காளியில் இணைப் பழமொழிகளைக் காண்பித்து, அவை ஒரே கருத்தைக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

"இவற்றின் கருத்தொற்றுமைக்குக் காரணம் என்ன? இருவேறு மொழிகளில் வழங்கும் இப்பழமொழிகள் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவையா?'' என்று வினவுகிறார்.

இக்கேள்விகளுக்கு அவர் விடையளிக்க முயலுகிறார்.

"ஒரு மூலத்தோற்றம்'' என்ற விடை பொருத்தமற்றது என்று கூறிவிட்டு, அவர் "மனிதனுடைய அறிவாற்றல் அளவில் வேறுபட்டபோதிலும் தன்மையில் ஒன்றாகவே இருக்கிறது'' என்று அபிப்பிராயம் கூறுகிறார்.

பின்னர் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கடன் பெறுவது என்ற கொள்கையையும் - திரிபுரிப் பழமொழிகள் சிலவற்றை வங்காளிப் பழமொழிகளோடு ஒப்பிட்டு ஆராய்கிறார். எந்த மொழியிலிருந்து எந்த மொழி கடன் வாங்கியது என்பதை உறுதியாகக் கூறமுடியாது என்ற முடிவுக்கு வருகிறார். இவ்வொற்றுமைக்குக் காரணம், இவ்விரு நாகரிகங்களின் சமூகப் பின்னணி ஒரே மாதிரி இருந்த காலத்தில் இப்பழமொழிகள் தோன்றியிருக்க வேண்டுமென கருத்துத் தெரிவிக்கிறார்.

இது, மிகவும் உண்மையான கூற்றாகும். வெவ்வேறு மொழிகளில் உள்ள பழமொழிகள் கருத்தில் மட்டுமல்லாமல் உவமைகள், உருவகங்கள், குறியீடுகள், படிமங்கள் முதலிய வெளியீட்டுக் கூறுகளில்கூட ஒற்றுமை உடையனவாய் இருப்பதைப் பல மொழிகளில் உள்ள பழமொழிகளை ஒப்பிட்டு ஆராய்ந்தவர்கள் அறிவார்கள். உலகில் வெகு தூரத்திற்கு வழங்கிவரும் இரு மொழிகளில் ஒரே கருத்தும், ஒரே உருவ அமைப்பும் கொண்ட பழமொழிகள் கடன் வாங்கல் முறையால் தோன்றியிருக்க முடியாது. தமிழும் திரிபுரியும் நெடுந்தொலைவில் வாழ்கின்ற மக்கள் கூட்டத்தினரால் பேசப்படுபவை.

இந்திய நாட்டின் வடகிழக்கிலுள்ள இமயமலைப் பள்ளத்தாக்கில் வாழ்கின்ற திரிபுரி மக்களும், இந்திய நாட்டின் தென் கோடியில் வாழ்கின்ற தமிழ் மக்களும், எந்தக் காலத்திலும் பண்பாட்டுத் தொடர்பு கொண்டவர்களல்லர்.

ஆயினும் பரேந்திர தேவ் வர்மன் தொகுத்துத் தந்துள்ள 35 பழமொழிகளில் 32க்குக் கருத்தொருமை உடைய இணைப் பழமொழிகள் உள்ளன என்பதை எளிதான முயற்சியால் நான் கண்டேன். இவற்றுள் 32 பழமொழிகளுக்கு நேரிடையான தமிழ்ப் பழமொழிகள் உள்ளன. தமிழ் நாட்டுப் பாடல் ஆய்வாளர்களான டி.மங்கையும், உ.மீனாட்சிசுந்தரமும் 32 திரிபுரிப் பழமொழிகளுக்கு இணையான 32 தமிழ்ப் பழமொழிகளைத் தேடித் தந்தார்கள்.

தமிழ், திராவிட மொழி வகையைச் சேர்ந்தது. இதனை நாலரைக்கோடி மக்கள் பேசுகின்றனர். திரிபுரி மொழியைச் சில
லட்சம் மக்கள்தாம் பேசுகிறார்கள். ஆயினும், இவ்விரண்டு மொழிகளிலும் கருத்தொற்றுமை உடைய பழமொழிகளைக் காணமுடிகிறது.

ஒப்பிடுதலை எளிதாக்குவதற்காக நான் ஒரு பட்டியல் தயாரித்துள்ளேன்.

அப்பட்டியலில்,

- முதல் காலத்தில் திரிபுரிப் பழமொழியைத் தமிழ் மொழிபெயர்ப்போடு கொடுத்துள்ளேன்.
- இரண்டாவது காலத்தில் தமிழ்ப் பழமொழியும்,
- மூன்றாவது காலத்தில் பழமொழியின் விளக்கமும் தரப்பட்டுள்ளன.

Geetha Sambasivam

unread,
Dec 3, 2011, 4:22:50 PM12/3/11
to mint...@googlegroups.com
பலரும் கலந்துரையாடிய இந்த இழையின் மூலம் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.  நன்றி.

2011/12/3 Kannan Natarajan <thar...@gmail.com>
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 17:- திரிபுரி பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகள்!


Subashini Tremmel

unread,
Dec 4, 2011, 5:29:13 AM12/4/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இக்கட்டுரையின் வழி திரிபுரி மக்கள் கூழு என்ற ஒன்று இருப்பதைத் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

சரி .. இக்கடுரை முழுதாக முடியவில்லை போலிருக்கிறதே?

பழமொழிகள் மட்டுமல்லாமல் வாழ்வியல் கூறுகள் பலவற்றில் இந்தியா மட்டுமல்லாத பல்வேறு இன மக்களிடையே பல விஷயங்களில் ஒற்றுமை இருப்பதை நான் எனது அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். புல்காரிய மக்களின் கிராமிய வழக்கங்களில் நாம் நன்கு பழகிய பழக்கவழக்கங்கள் சில இடம்பெறுவதை முதலில் அறிந்து கொண்டபோது ஆச்சரியம் ஏற்பட்டது.  மாலையில் நகம் வெட்டக்கூடாது, வாசலில் கதவில் சின்னம் ஒன்றினை தொங்க வைத்திருப்பது.. திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது என சில. எல்லாவற்றையும் அறிந்து ஆராய்ந்தால் பழக்க வழக்கங்களாக் கடைபிடிக்கப்படுவனவற்றில் மனித சிந்தனையில் உள்ள ஒற்றுமைகளைக் கண்டறியலாம். 

சுபா

2011/12/3 Kannan Natarajan <thar...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kannan Natarajan

unread,
Dec 10, 2011, 5:24:49 PM12/10/11
to Min Thamizh
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 18:- தமிழும், தமிழ்நாடும்!


 
                                         மகாகவி பாரதியார்

தென்றலுடன் பிறந்த பாஷை:-
 

பொறுப்பென்பதே அற்ற சில மூட வாலிபர்கள் தாம் அரைகுறையாகக் கற்றிருக்கும் அன்னிய பாஷைத் தருக்கு மேலிட்டவர்களாகித் தமிழ்மொழியே இறந்து போய்விட வேண்டுமென்றும் கூறுவதை நன்கு கண்டித்துப் பேசியிருக்கிறோம். இவர்கள் கிடக்க, மற்றபடிப் பொதுவாக இந்நாட்டில் ஆங்கிலம் கற்றோரெல்லாம் சுபாஷாபிமானம் என்பது மிகவும் குன்றியிருப்பது அன்றி, அதன் நயமறியாது திட்டுவதை நினைக்கும்பொழுது நமக்கு வருத்தமுண்டாகிறது. இதன் சம்பந்தமாகச் சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய மஹா வித்வான் ஸ்வாமிநாதையர் சொல்லிய வார்த்தையொன்று நமது நெஞ்சை விட்டு ஒருபோதும் அகலமாட்டாது. மேற்படி காலேஜ் தமிழ்ச் சங்கத்தில் ஒரு "மீட்டிங்" நடந்தது. தமிழ் பாஷையின் அருமையைப் பற்றி ஏதோ பிரஸ்தாபம் வந்தது. 

அப்போது ஸ்வாமிநாத ஐயரவர்கள் எழுந்து பின்வருமாறு பேசினார்:-

"ஆங்கிலேய பாஷையின் இலக்கிய நூல்களில் எத்தனையோ அருமையான கருத்துக்கள் ததும்பிக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். அந்தப் பாஷை எனக்குத் தெரியாது. அதனால் அவ்விஷயத்தில் ஒருவிதமான அபிப்பிராயமும் என்னால் கொடுக்கமுடியாது என்றபோதிலும் மேற்கண்டவாறு சொல்வோர் தமிழ் பாஷையிலே அவ்விதமான அருமையான விஷயங்கள் கிடையாவென்று சொல்லும்போது உடன் எனக்கு வருத்தமுண்டாகிறது. இவ்வகுப்பினர்களுடன் நான் எத்தனை முறையோ சம்பாஷணை செய்திருக்கிறேன். அந்தச் சமயங்களிலே நான் இவர்களது தமிழ் வன்மையைப் பரிசோதனை புரிந்திருக்கிறேன். இவர்கள் அத்தனை சிறந்த பண்டிதர்களென்று எனக்குப் புலப்படவில்லை. பழங்காலத்துத் தமிழ் நூல்களிற் பயிற்சியில்லாத இவர்கள் அவற்றைப்பற்றி இழிவான அபிப்பிராயம் கொடுப்பதுதான் வெறுக்கத் தக்கதாக இருக்கின்றது'' என்று அப்பண்டிதர் முறையிட்டார்.

வாஸ்தவந்தானே?

ஆனையையே பார்த்திராத குருடனா அதன் நிறம் முதலியவற்றைப் பற்றி ஓர் அபிப்பிராயம் கொடுக்க முடியும்?

"போப் முதலான விற்பன்னர்கள் இவர்கள் இருக்கும் திசை நோக்கிக் காறியுமிழும் வண்ணமாக நம்மவர்களிற் சிலர் நடந்து கொள்கிறார்களென்று மேற்கூறப்பட்ட மித்திரன் குறிப்பிலே எழுதப்பட்டிருப்பதை நாம் முற்றும் அங்கீகாரம் செய்கிறோம்". (இந்தியா; 29-9-1906). 

தமிழ் பாஷையின் இனிமை
:-

பாற்கடலிலே பிறந்த மீன்கள் பாலைப் பெரிதாகப் பாராட்டுவது வழக்கமே கிடையாதென்பது நெடுங்காலமாக வழங்கிவரும் உண்மையாகும். அவ்வசனக் கருத்து முற்றும் மெய்யென்பதற்குச் சிறிது காலத்தின் முன்பு டாக்டர் போப்பையர்
லண்டனில் ராயல் ஏஷியாடிக் சபையார் முன்பு செய்த உபந்நியாசத்திலே நல்லதோர் திருஷ்டாந்தம் அகப்பட்டது. திருக்குறள், திருவாசகம் என்னும் தெய்வீக நூல்களை பிரசுரித்திருப்பவரும் ஆகிய டாக்டர் போப்பைத் தமிழ்நாட்டாரில் பெரும்பான்மையோர் நன்கு அறிவார்கள். இவர் சொல்கிறார்:-

"அநேகர் (அதாவது அநேக ஆங்கிலேயர்கள்) பிரெஞ்சு, ஜெர்மன், இடாலியன் முதலிய பாஷைகளைப் போய்ப் படித்துக்கொண்டு இடர்ப்படுகிறார்கள். இப்படிச் செலவிடப்படும் காலத்தைத் தமிழ் கற்பதில் செலவிட்டால் எவ்வளவோ விசேஷமாகும். நான் அநேக ஆங்கில மாதர்களுக்குத் தமிழ் கற்பித்திருக்கிறேன். அவர்களுடைய இதழ் நயத்திற்கும், செவிநுட்பத்திற்கும் அபிருசிக்கும் அந்தப் பாஷையைப்போல் எந்தப் பாஷையும் ஒத்துவருவதில்லை'' என்கிறார்.

இவர் தமிழ் பாஷையின் இனிமையையும், பெருமையையும் குறித்து எவ்வளவோ சிலாக்கியமாகப் பேசியிருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்த நம்மவர்களோ அந்தப் பாஷையின் இனிமையைப் பாதுகாக்க வேண்டுமென்றேனும் அபிவிருத்தி செய்யவேண்டுமென்றேனும் சிறிதும் முயல்வதில்லை!

தமிழ் மட்டும் தெரிந்த ஜனங்களின் சிறுபாலார் தமிழ் விஷயத்தில் ஒருவிதமான மூடபக்தியாவது வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆங்கிலம் கற்றுணர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் நமது கடமையை முற்றும் மறந்து விடுகிறார்கள். இவர்கள் தமிழ்ப்பாஷை விஷயத்தில் கொண்டிருக்கும் எண்ணத்தையும் இவ்விஷயத்திலே இவர்கள் வகிக்கும் அசிரத்தையையும் டாக்டர் போப்பைப் போன்ற ஆங்கிலேயர்கள் அறியும் பக்ஷத்தில் இவர்கள் இருக்கும் திசையை நோக்கிக் காறியுமிழும் வண்ணமாக நம்மவர்கள் நடந்து கொள்கிறார்கள். (சுதேசமித்திரன், செப்.1906) 

தமிழ்
:-

கல்கத்தாவிலிருந்து வெளிப்படும் "மாடன் ரெவ்யூ" என்ற மாதப் பத்திரிகையின் தை - மாசி ஸஞ்சிகையை நேற்றுப் பொழுதுபோக்கின் பொருட்டாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலே திருநெல்வேலி ஹிந்து காலேஜ் சரித்திர பண்டிதர் ஸ்ரீநீலகண்டையர் ஒரு சிறிய கடிதமெழுதியிருக்கிறார். ஏற்கனவே மேற்படி பத்திரிகையில் ஸ்ரீ யது நாத ஸர்க்கார் என்ற வித்வான் எழுதியிருந்த சில வார்த்தைகளைக் குறித்து ஸ்ரீஐயர் தமது கருத்துக்களை வெளியிடுகிறார். 

கலாசாலையிலே சரித்திரப் பாடங்களை இங்கிலீஷில் கற்றுக் கொடுப்பது பயனில்லாத வீண்தொல்லையாக முடிகிறதென்றும், தேச பாஷைகளிலே கற்றுக்கொடுத்தால் நல்ல பயன் விளையுமென்றும் ஸ்ரீ ஸர்க்கார் தமது அனுபவத்திலே கண்ட செய்தியைச் சொன்னார். அதற்கு நமது திருநெல்வேலிப் பண்டிதர் சொல்கிறார்:-

"பாஷைத் தொல்லை பெருந்தொல்லையாகவே இருக்கிறது. ஆனால் எனது ஜில்லா, எனது காலேஜ் சம்பந்தப்பட்ட வரையிலே பிள்ளைகளுக்குச் சரித்திரப் பாடம் இங்கிலீஷிலே கற்றுக்கொடுப்பதைக் காட்டிலும் தேச பாஷையில் கற்றுக்கொடுப்பது அதிகப் பயன்படுமென்று சொல்வதற்கில்லை. எனது மாணாக்கர்களிலே பெரும்பாலோர் இங்கிலீஷ் இலக்கணப் பிழைகளும், வழக்குப் பிழைகளும் நிறையச் செய்தபோதிலும் மொத்தத்திலே தமிழைக் காட்டிலும் இங்கிலீஷை நன்றாக எழுதுகிறார்கள். சரித்திர விஷயங்களை வியவஹரிக்கும்போது எனக்கும் இங்கிலீஷ்தான் தமிழைக் காட்டிலும் நன்றாகச் சொல்ல வருகிறது''. 

இங்ஙனம் எழுதுகிற ஸ்ரீநீலகண்டையரின் நிலைமையை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சொந்த பாஷையை நேரே பேசத் தெரியாதவர்கள், சாஸ்திரப் பாடங்கள் நடத்தும் விநோதத்தை இந்தத் தேசத்திலேதான் பார்த்தோம். புதுமை! புதுமை!! புதுமை!!! 

மேலும், இவர் தமக்குத் தாய்மொழி தெரியாதென்ற செய்தியை வங்கப் பத்திரிகைக்கு ஏன் எழுதப்போனார் என்பது எனக்கு அர்த்தமாகவில்லை. ஜப்பானியர், சீனர், நார்வேக்காரர், ஸ்விஸ் ஜாதியார், இத்தாலி தேசத்தார், ஹாலந்துக்காரர் முதலிய உலகத்து ஜாதியாரெல்லாம் நம்மை அறிவிலும் சாஸ்திரங்களிலும் பாஷைத் திறமையிலும் தாழ்வென்று நினைத்து வந்தார்கள். இப்போதுதான் ஹிந்துஜாதியாராகிய நாம் காட்டு மனிதரில்லை, வாலில்லாத குரங்குகளில்லை, நமக்குப் பாஷைகள் இருக்கின்றன; நமக்குள் சாஸ்திர விற்பன்னர்கள் இருக்கிறார்கள்; கவிகள் இருக்கிறார்கள் என்று நம்மவரிலே சிலர் வெளியுலகத்தார் தெரிந்துகொள்ளும்படி செய்து வருகிறார்கள். இதற்குள்ளே தமிழ் வகுப்பு மற்ற ஹிந்துஸ்தானத்து வகுப்புக்களைக் காட்டிலும் குறைவுபட்டதென்று நம்மிலே சிலர் முரசடிக்கத் தொடங்குவது எனக்கு நகைப்புண்டாக்குகிறது. என்னுடைய சொந்த அபிப்பிராயத்தைக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். 

உலகத்திலுள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையிலே மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம் போல் விளங்குகிறோம். எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. இவற்றிலே தமிழைப்போல வலிமையும், திறமையும், உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமில்லை. 

இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நானறிவேன். ஆனால், போன நிமிஷம் போய்த்தொலைந்தது. இந்த நிமிஷம் ஸத்யமில்லை. நாளை வரப்போவது ஸத்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலகம் முழுவதிலும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அதுவரையில் இங்கு பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச் சொல் நேரே வராவிட்டால் வாயை மூடிக்கொண்டு வெறுமே இருக்க வேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும். இவ்வளவுதான் என்னுடைய வேண்டுகோள்.(சுதேசமித்திரன் 3.4.1916 இதழிலிருந்து தேடி அளித்தவர்  பெரியசாமித் தூரன் (பாரதித் தமிழ்-பக்.101-104). 

(இன்று மகாகவி பாரதியாரின் 130வது பிறந்த நாள்)

விஜயராகவன்

unread,
Dec 10, 2011, 5:47:15 PM12/10/11
to மின்தமிழ்
100 வருஷம் முன் சு.பா. ஸ்ரீநீலகண்டையர் (”நமது திருநெல்வேலிப்
பண்டிதர்”) இப்படி சொல்கிறார் என வருத்தப்படுகிறார். >

> "பாஷைத் தொல்லை பெருந்தொல்லையாகவே இருக்கிறது. ஆனால் எனது ஜில்லா, எனது காலேஜ்
> சம்பந்தப்பட்ட வரையிலே பிள்ளைகளுக்குச் சரித்திரப் பாடம் இங்கிலீஷிலே
> கற்றுக்கொடுப்பதைக் காட்டிலும் தேச பாஷையில் கற்றுக்கொடுப்பது அதிகப்
> பயன்படுமென்று சொல்வதற்கில்லை. எனது மாணாக்கர்களிலே பெரும்பாலோர் இங்கிலீஷ்
> இலக்கணப் பிழைகளும், வழக்குப் பிழைகளும் நிறையச் செய்தபோதிலும் மொத்தத்திலே
> தமிழைக் காட்டிலும் இங்கிலீஷை நன்றாக எழுதுகிறார்கள். சரித்திர விஷயங்களை
> வியவஹரிக்கும்போது எனக்கும் இங்கிலீஷ்தான் தமிழைக் காட்டிலும் நன்றாகச் சொல்ல
> வருகிறது''.

ஆனால் 100 வருஷம் பின் சு.பா. இன்று திரும்பி வந்தால், சரித்திரம்,
அர்த்த சாஸ்திரம், கணக்கு, விஞ்ஞானம், இஞ்ஜினேரிங் எல்லாவற்றிலேயும்
நீலகண்டையரின் நிதர்சன நோக்கை தான் பார்ப்பார்.


அது மட்டுமல்ல. பாரதி காலத்தில் பளிகளில் 99% தமிழில்தான் படித்தனர்.
இன்று அதுவும் இல்லை.


பாரதியாரின் வாயாக நீலகண்டையரின் கருத்தை விமர்சிக்கலாம். ஆனால் 100
வருஷம் கழித்து வென்றது நீலகண்டையர்.

This is Neelakanta Iyer the famous historian of South India

வகொவி


On Dec 10, 11:24 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 18:- தமிழும், தமிழ்நாடும்!
>

>     *


>                                          மகாகவி பாரதியார்
>

> தென்றலுடன் பிறந்த பாஷை:-*

> (இந்தியா; 29-9-1906).  *
>
> தமிழ் பாஷையின் இனிமை*:-


>
> பாற்கடலிலே பிறந்த மீன்கள் பாலைப் பெரிதாகப் பாராட்டுவது வழக்கமே
> கிடையாதென்பது நெடுங்காலமாக வழங்கிவரும் உண்மையாகும். அவ்வசனக் கருத்து
> முற்றும் மெய்யென்பதற்குச் சிறிது காலத்தின் முன்பு டாக்டர் போப்பையர் இலண்டனில்
> இராயல் ஏஷியாடிக் சபையார் முன்பு செய்த உபந்நியாசத்திலே நல்லதோர்
> திருஷ்டாந்தம் அகப்பட்டது. திருக்குறள், திருவாசகம் என்னும் தெய்வீக நூல்களை
> பிரசுரித்திருப்பவரும் ஆகிய டாக்டர் போப்பைத் தமிழ்நாட்டாரில்
> பெரும்பான்மையோர் நன்கு அறிவார்கள். இவர் சொல்கிறார்:-
>
> "அநேகர் (அதாவது அநேக ஆங்கிலேயர்கள்) பிரெஞ்சு, ஜெர்மன், இடாலியன் முதலிய
> பாஷைகளைப் போய்ப் படித்துக்கொண்டு இடர்ப்படுகிறார்கள். இப்படிச் செலவிடப்படும்
> காலத்தைத் தமிழ் கற்பதில் செலவிட்டால் எவ்வளவோ விசேஷமாகும். நான் அநேக ஆங்கில
> மாதர்களுக்குத் தமிழ் கற்பித்திருக்கிறேன். அவர்களுடைய இதழ் நயத்திற்கும்,
> செவிநுட்பத்திற்கும் அபிருசிக்கும் அந்தப் பாஷையைப்போல் எந்தப் பாஷையும்
> ஒத்துவருவதில்லை'' என்கிறார்.
>
> இவர் தமிழ் பாஷையின் இனிமையையும், பெருமையையும் குறித்து எவ்வளவோ
> சிலாக்கியமாகப் பேசியிருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்த
> நம்மவர்களோ அந்தப் பாஷையின் இனிமையைப் பாதுகாக்க வேண்டுமென்றேனும் அபிவிருத்தி
> செய்யவேண்டுமென்றேனும் சிறிதும் முயல்வதில்லை!
>
> தமிழ் மட்டும் தெரிந்த ஜனங்களின் சிறுபாலார் தமிழ் விஷயத்தில் ஒருவிதமான
> மூடபக்தியாவது வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆங்கிலம்
> கற்றுணர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் நமது கடமையை முற்றும் மறந்து விடுகிறார்கள்.
> இவர்கள் தமிழ்ப்பாஷை விஷயத்தில் கொண்டிருக்கும் எண்ணத்தையும் இவ்விஷயத்திலே
> இவர்கள் வகிக்கும் அசிரத்தையையும் டாக்டர் போப்பைப் போன்ற ஆங்கிலேயர்கள்
> அறியும் பக்ஷத்தில் இவர்கள் இருக்கும் திசையை நோக்கிக் காறியுமிழும் வண்ணமாக

> நம்மவர்கள் நடந்து கொள்கிறார்கள். (சுதேசமித்திரன், செப்.1906)  *
>
> தமிழ்*:-

N. Ganesan

unread,
Dec 11, 2011, 7:00:04 AM12/11/11
to மின்தமிழ், Santhavasantham, housto...@googlegroups.com, yavaru...@googlegroups.com, panb...@googlegroups.com
>கல்கத்தாவிலிருந்து வெளிப்படும் "மாடன் ரெவ்யூ" என்ற
>மாதப் பத்திரிகையின் தை - மாசி ஸஞ்சிகையை நேற்றுப்
>பொழுதுபோக்கின் பொருட்டாகத் திருப்பிப் பார்த்துக்
> கொண்டிருந்தேன். அதிலே திருநெல்வேலி ஹிந்து காலேஜ்
> சரித்திர பண்டிதர் ஸ்ரீநீலகண்டையர் ஒரு சிறிய
> கடிதமெழுதியிருக்கிறார். ஏற்கனவே மேற்படி
> பத்திரிகையில் ஸ்ரீ யது நாத ஸர்க்கார் என்ற வித்வான்
> எழுதியிருந்த சில வார்த்தைகளைக் குறித்து ஸ்ரீஐயர் தமது
> கருத்துக்களை வெளியிடுகிறார்.

யதுநாத ஸர்க்கார் என்னும் பேராசிரியர் பெயர்
அவரது வங்காள மொழியில் ஜதுநாத ஸர்க்கார்.
தமிழர்கள் முதலில் கடலாடி யா மரங்கள் அதிகம்
உள்ள தீவுக்கு யாவகம் என்று பெயரிட, அது
ஜாவா என்று இன்று அழைக்கப்படுகிறது.
மணிமேகலை காப்பியத்தில் சாவகம் என்பது
யாவகம்/ஜாவகம்.

யாவகம் என்னும் பெயரை யவ த்வீபம் (யவம் = பார்லி
தானியம். அங்கில்லை) என்று உற்பத்தி ஆவதைப்
பார்க்குபோது, யமுனை என்பது யாமையால் ஏற்பட்ட
பெயரோ எனச் சிந்திக்கலாம். சந்து/சாந்து சந்தநம்
என்பது போலா? யாமையில் இருந்து யமுநை?
கங்கைக்கு விடங்கர்/இடங்கர் என்ற அங்கே வாழும்
முதலை வாகனம் ஆதல் போல, யமுனை
இந்தியாவின் சிற்பங்களில் யாமை (ஆமை) வாஹனத்துடனேயே எப்பொழுதும்
காட்டப்படுகிறாள்.

நா. கணேசன்

தினமணி: பாரதியாரின் பிறந்த நாள் கொண்டாட்டமாக
‘தென்றலுடன் பிறந்த பாஷை’ கட்டுரையை வெளியிட்டுள்ளது. தமிழர்கள் தொழில்
போன்றவை காரணமாக ஆங்கிலக்
கல்வி போதிப்பது 100 ஆண்டுகளில் மொழி மாற்றம்
காட்டிநிற்கிறது.


Geetha Sambasivam

unread,
Dec 12, 2011, 11:25:17 AM12/12/11
to mint...@googlegroups.com
This is Neelakanta Iyer the famous historian of South India//

நீலகண்ட சாஸ்திரி???

2011/12/10 விஜயராகவன் <vij...@gmail.com>

விஜயராகவன்

unread,
Dec 12, 2011, 11:52:19 AM12/12/11
to மின்தமிழ்
ஆம். அவர்தான் என நினைக்கிறேன்.

வகொவி


On Dec 12, 5:25 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> This is Neelakanta Iyer the famous historian of South India//
>
> நீலகண்ட சாஸ்திரி???
>

> 2011/12/10 விஜயராகவன் <viji...@gmail.com>

> ...
>
> read more »- Hide quoted text -

It is loading more messages.
0 new messages