மலரும் நினைவுகள் ---------சும்மாடு
சும்மாடு பற்றி நம் பாண்டியராஜா ஐயா அவர்கள் , வழக்கம்போல் ஒரு அருமையான பதிவினை இட்டிருகிறார்கள். அவருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. இந்தப் பதிவு என்னை ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றது.
1968 ஆம் ஆண்டு. நான் ஒன்பதாம் வகுப்பு, A செக்ஷன். பிற்பகல் முதல் பீரியட், . தமிழாசிரியர் சம்பந்தனார் அவர்கள் திருவிளையாடற்புராணத்தில் “பிட்டுக்கு மண் சுமந்த படலம்” நடத்திக் கொண்டிருந்தார். அற்புதமான ஆசிரியர்.
“அழுக்கு அடைந்த பழந்துணி
ஒன்று அரைக்கு அசைத்து
விழுத்தொண்டர்
குழுக் கடந்த இண்டை நிகர் சுமை அடை மேல் கூடை
கவிழ்த்து “
என்று பாடலின் இருவரிகளை சொல்லி கொஞ்சம் நிறுத்தினார்.
‘அரைக்கு அசைத்து’ என்று பாடும்போது இடுப்பில் துண்டு கட்டுவதுபோல் அவர் கை சென்றது. ‘சுமை அடை மேல் கூடை கவிழ்த்து’ எனும்போது தலையில் கூடையை கவிழ்ப்பது போல் கை சென்றது. தானாகவே பொருள் புரிந்தது..
கடைசி டெஸ்க்கில் இருக்கும் தயாளன் எழுந்து
“சார்” என்றான்.
“என்ன தயாளா, என்னா சந்தேகம்” என்றார் ஆசிரியர்.
“ பருப்பு அடை , கேவுரு அடை இதெல்லாம் தெரியும்... அதென்ன சார் சுமை அடை .....எதுல சுடறது, அதை எதுக்கு கூடையில கவுக்கறாங்க , காக்கா கொத்திகிட்டு போயிடுமா” என்றான் குறும்புக்கார தயாளன்.
வகுப்பில் சிரிப்பொலி எழுந்து அடங்கியது.
மேசையை ஒரு தட்டு தட்டிய ஆசிரியர்.,
“டேய் .....சுமை அடை அப்பிடின்னா என்னா பொருள் ...சொல்லுங்கடா” என்றார்.
“ டேய் ....சிங்கம் , எந்திரி ......நீ சொல்லு”
எழுந்தேன்.
“ சரியா தெரியல சார்...ஆனா இந்த பாட்ல பாக்கும்போது நம்ப சும்மாடு தான் சுமை அடையாய் இருக்குமோனு தோணுது” என்று சொல்லிவிட்டு தயாள னைப் பார்த்தேன்.
“ஓஹோ, சும்மாடு வட்டமா அடை மாதிரி இருக்குதே ....அதால சொல்றியாடா சிங்கம்” என்று அவன் நையாண்டி செய்தான்
“இல்லடா,.தலைக்கும் சுமைக்கும் இடையில அடை மாதிரி நின்னு சுமையை குறைக்குதில்ல,அதால சொல்றேண்டா,”
“ஏற்கனவே கூடையில சுமை....கூட ஒரு சும்மாடு வச்சா சுமை குறையுமா கூடுமாடா ?”
“டேய் , இங்கப் பாரு .....ஒரு பெரிய பாறாங்கல்ல எடுத்து மடியில வச்சிக்க ....எப்பிடி இருக்கும். வலிக்கும் இல்லியா....அதையே மடியில ஒரு தலக்காணி போட்டு இப்ப பாறாங்கல்ல வச்சிக்க....வித்தியாசம் இருக்குமில்ல...இங்க இந்த தலக்காணி சுமையடை “ என்றேன்.
என் தமிழாசிரியர் என்னை உச்சிமோர்ந்தார்.
அன்றிரவு கண் உறங்கும் முன் என் அப்பாவிடம் எல்லாம் சொன்னேன்.
“அடேயப்பா, சும்மாடு அப்பயே இருந்திச்சா என்று மகிழ்ந்தார் அவர்.
|
| பழைய தோர்பொல்லம் பொத்திய பத்தர்யாழ்க் கோறோள் உழைய தாகவிட் டெருத்தலைத் தூசலா டியவொண் குழைய காதினிற் களவிணர்க் *குறியகாய் தூக்கித் தழையும் வார்சிகை சரிந்திடச் சுமையடை தாங்கி. |
(இ - ள்.) பழையது - பழையதாகிய, பொல்லம் பொத்திய -
தைக்கப்பட்ட, ஒர் பத்தர் யாழ்க்கோல் - ஒரு பத்தரையுடைய வீணையின்
தண்டானது, தோள் உழையது ஆகவிட்டு, தோளினிடத்ததாகத் தொங்க
விட்டு, எருத்து அலைத்து ஊசல் ஆடிய - பிடரியை அலைத்து ஊசல் போல்
அலைந்தாடிய, ஒண்குழைய காதினில் - ஒள்ளிய குண்டலத்தை யணிந்த
திருச்செவியில், கள இணர்க்குறிய காய் தூக்கி - களாவின் பூங்கொத்தோடு
கூடிய சிறிய காயினைத் தொங்கவிட்டு, தழையும் வார்சிகை சரிந்திட -
தழைந்த நீண்ட சிகை சரிய, சுமையடை தாங்கி - சும்மாடு தாங்கி. பொல்லம்
பொத்தல் - கிழிந்ததனை மூட்டுதல்; தைத்தல். பத்தர் - யாழின் உறுப்புகளுள்
ஒன்று. - சுமையடை என்பது சும்மாடு என வழங்குகிறது. (