ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார்
ஜனவரி 28, 2021
யாழ்ப்பாணம்: ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும் பதிப்பாளருமான மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா (வயது 94) காலமானார்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் 1927-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி அவிராம்பிள்ளை ஜோசப்- மரியம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை யாழ்ப்பாணத்தில் அப்போது முடித்திருத்தகம் நடத்தி வந்தார். ஈழத்து நவீன இலக்கியத்துறையில் 1946-ல் நுழைந்தார் டொமினிக் ஜீவா. அப்போது தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமறைவாக இருந்த காலம். ப. ஜீவானந்தம் யாழ்ப்பாணத்துக்கு சென்ற போது அவருடன் இணைந்து கொண்டார் டொமினிக் ஜீவா. அதுவரை டொமினிக் என்ற இயற்பெயருடன் ஜீவாவையும் இணைத்துக் கொண்டார்.
1966-ல் மல்லிகை இதழை டொமினிக் ஜீவா தொடங்கினார். நவீன தமிழ் இலக்கிய இதழாக வெற்றிகரமாக மல்லிகை இதழை நடத்தினார் டொமினிக் ஜீவா. சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று மாஸ்கோ சென்று திரும்பினார் டொமினிக் ஜீவா. எண்ணற்ற தமிழ் நூல்களை இந்த சமூகத்துக்கு படைத்து தந்தவர் டொமினிக் ஜீவா.
முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் டொமினிக் ஜீவா வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் படைப்புலக ஆளுமைகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-----
தமிழீழ இலக்கிய முன்னோடியும், மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக் ஜீவா (1927-2021) இன்று காலமானார். இவரது 'எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.
டொமினிக் ஜீவாவின் சிறுகதைத் தொகுப்புகள்:
தண்ணீரும் கண்ணீரும் (1960)
பாதுகை (1962)
சாலையின் திருப்பம் (1967)
வாழ்வின் தரிசனங்கள் (2010)
டொமினிக் ஜீவா சிறுகதைகள்
கட்டுரைத் தொகுப்புகள்:
அனுபவ முத்திரைகள்
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம்
நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்
முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்
மொழிபெயர்ப்பு நூல்:
UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்)
(மொழிபெயர்ப்பு: கந்தையா குமாரசாமி, மல்லிகைகைப்பந்தல், 2004)
ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள்:
டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை (தொகுப்பு: மேமன்கவி)
மல்லிகை ஜீவா நினைவுகள் (லெ. முருகபூபதி, 2001)
பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (தொகுப்பு: மேமன்கவி)
மல்லிகை ஜீவா - மனப்பதிவுகள் (திக்குவல்லை கமால், 2004)