சோழ மன்னன் செய்த ஆணவக்கொலை — தேமொழி

9 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 31, 2026, 9:28:02 PM (19 hours ago) May 31
to மின்தமிழ்
சோழ மன்னன் செய்த ஆணவக்கொலை

—    முனைவர் தேமொழி

 
பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழகத்தில் நிலவிய சோதனை மற்றும் சித்திரவதை நடைமுறைகள்; ஒரு வரலாற்றுப் பார்வை என்ற தலைப்பில் மதுரை டோக் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் தெ.துர்க்காதேவி; சோதனை,  சித்ரவதை ஆகிய இரு முறையில் தீர்ப்பளிக்கும் முன்னர் விசாரணைக்கு உள்ளாகும் கைதி எதிர்கொள்ளும் கொடுமைகளையும் துன்புறுத்தல்களையும் (தமிழ் மரபு அறக்கட்டளை - திசைக்கூடல், மே 2026) விவரித்து இருந்தார். விசாரணைக்கு உள்ளானவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை விசாரணைக்கு உள்ளாகும் பொழுதே கைதிகள் அனுபவிப்பதும் உண்டு.

தமிழ் இலக்கியங்கள் வழியாக சுண்ணாம்புக் காளவாயில் போடுதல், கல்லைக் கட்டி கடலில் மூழ்கடித்தல், கழுவில் ஏற்றல், மாறுகால் மாறுகை வாங்கல், யானையின் காலால் இடறப்படுதல், கசையடி, பிரம்படி, நாடுகடத்தல், தூக்கிலிடுதல் போன்ற பற்பல தண்டனைகளை நாம் அறிந்துள்ளோம். சிற்பங்களாக தொல்லியல் தரவுகளாகவும் அவை கிடைத்து வருகின்றன. தண்டனைகள் எப்படிப்பட்டவை என்பதற்கு சாக்ரடீசுக்கு  நஞ்சு அருந்துமாறு கொடுக்கப்பட்ட தண்டனை, உலகம் உருண்டை என்று சொன்னதற்காக உயிருடன் எரிக்கப்பட்ட புரூனோ என்று வரலாறு முழுவதும் உலகம் முழுவதும் மனிதக் குலத்தில் பலகாலமாகக்  கொடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது பதிவாகியுள்ளது.  

சான்றுகள் இல்லை என்றே கூறப்பட்டாலும் மக்களிடையே பலகாலம் வழங்கப்படும் கதை அம்பிகாபதி அமராவதி காதல் கதை.  இக்கதையை  அக்காலத்தில் நிலவிய ஆணவக் கொலை என்று கருதப்பட வேண்டிய நிகழ்ச்சி எனலாம்.  வரலாற்றில் அறியப்படும் கதை மாந்தர்களை ஒட்டி வழங்கும்  இக்கதையின் காலம் கி. பி. 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.  சோழப்பேரரசன் மகள் இளவரசி அமராவதியும், கவிச் சக்கரவர்த்தி கம்பரின் மகன் புலவர் அம்பிகாபதியும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலை ஏற்காத சோழ மன்னன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை கொடுக்கிறான். காதலன் மறைந்ததை அறிந்த அமராவதியும் உயிர் நீக்கினாள் என்பது இக்காதல் காப்பியத்தின் முடிவு.

அம்பிகாபதி-அமராவதி காதல் நாம் நன்கு அறியும் கதையாக, பாடலாக (கவிஞர் சே.ர.குமாரசாமி) , காப்பியமாக (பேராசிரியர் சுந்தர சண்முகனார்), நாடகமாக (மறைமலை அடிகள்), திரைப்படமாக (இளங்கோவன்) ஆகியோர்களால்  பல்வேறு வடிவங்களில் உயிர் பெற்றுள்ளது. இவற்றில் 'அமரன் அம்பிகாபதி' என்ற தலைப்பில் கவிஞர் சே.ர.குமாரசாமி பி. ஏ. (தேவி பதிப்பகம், 1956) எழுதியுள்ள நூலில் அம்பிகாபதியைக் குற்றவாளி என்று கூறிக் கொதித்து எழும் குலோத்துங்கச் சோழனின் ஆணையைப் பின்வரும் வரிகளில் குமாரசாமி விவரிக்கிறார்.
ambikapathy2.png
      "நடத்தையிலே தீயநெறி நச்சரவா யானான்!
      கடத்திச் சென்றேகுங்கள் ! காவலர்காள் ! ஓய்ந்திருக்கும்
      வாட்கு விருந்தாய் வழங்குங்கள்! போர்க்களிற்றின்
      தாட்கிடையே இன்னவனைத் தந்து நசுக்குங்கள்!  (70)
      தீங்கு புரிந்தென் திருவைக் கவர்ந்தவனை
      ஏங்குங் கடலுள் எறியுங்கள்! பண்புலவாக்
      கொச்சை வாழ்வேற்ற கொடியவனைக் கொண்டேகி
      உச்சிமலை நின்று உருட்டியுயிர் வாங்குங்கள் !
      தீராப் பசியுடைய தீய விலங்குகட்குச்
      சேரா விருந்தாய்ச் செலுத்துங்கள்! என்னாவி
      கண்டு தவழும் கரைகாணாப் பேருவகைக்
      கொண்டு மகிழ குறையெல்லாம் தான்விலகச்
      செய்க இவற்றுள் செயலொன்று!" என்றரசன்
      மெய்கனலே கொண்டெரிய மேவும் சினங்குமுற  (80)
      ஆங்கு கொதித்தெழுந்து ஆர்த்தான்! ...
                [அமரன் அம்பிகாபதி, சே.ர. குமாரசாமி]

 ஒருவரை எப்படி எல்லாம் கொல்லலாம் என்ற பட்டியல்தான் இது. வாளால் வெட்டிக் கொல்வது, யானைக் காலால் தலையை இடறுவது,  கடலில் மூழ்கடிப்பது, மலையிலிருந்து உருட்டுவது, விலங்குகளுக்கு இரையாக்குவது என்று வழக்கில் இருந்த தண்டனைகளைத் தனது பாடலில் சேர்த்துள்ளார்  குமாரசாமி.  குற்றம் புரிந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குக் கொடிய தண்டனையை வழங்குவதை ஏற்காத மனித நேயம் இக்காலத்தின் வளர்ச்சி. மரண தண்டனையைப் பெரும்பாலான நாடுகள் நீக்கிவிட்டன. சித்திரவதைகளையும் கட்டுக்குள் கொண்டு வருகின்றன. விஷவாயுக் கூடத்தில் இரக்கமின்றிக் கொல்லப்பட்ட யூதர்களின் மரணத்தை இன்றைய உலகில் ஒருவர் கூட ஏற்கமாட்டார்கள்.

      யாயும் ஞாயும் யாரா கியரோ
      எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
      யானும் நீயும் எவ்வழி அறிதும்
      செம்புலப் பெயல்நீர் போல
      அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
                  [குறுந்தொகை 40]
என்ற பாடலை வியந்து வியந்து போற்றுகிறது தமிழ் உலகம். அதே வேளையில், உயிர்களிடையே இயல்பாக எழும் காதல் உணர்வுகளுக்காக ஆணவக்  கொலைகள் இன்றும் தமிழ்நாட்டில், இந்தியாவில் நிகழ்த்தப்படுகின்றன என்ற உண்மை  நாம் எந்த அளவு மனித நேயத்தில் முன்னேறி உள்ளோம் என்று காட்டுகிறது.

 
நன்றி: தமிழணங்கு
ஜூன் 2026, பக்கம்: 3-5
Reply all
Reply to author
Forward
0 new messages