இன்று, என்னுடைய முதுகலைப் பட்டப் படிப்பின் கடைசி எழுத்துத் தேர்வின், தேர்வுத்தாள் – சட்டம், அறம் மற்றும் ஆளுமை (Law, Ethics and Governance) ஒருபுறம். பட்டப் படிப்பின் நிறைவு தருணமாக, எங்கள் இளநிலை மாணவர்கள் பிரியாவிடை கொடுத்து, சிறப்பு செய்யவிருக்கும் மாலைப்பொழுது மறுபுறம். இவை இரண்டையும் எண்ணி நெகிழ்ந்து மகிழ இயலாத சூழலாய் என் மனதை வருத்தி ஆட்கொண்டு நிற்கிறது மற்றொரு புறம் – முள்ளிவாய்க்கால் தமிழீழ மக்களின் இனப்படுகொலையின் நினைவு தினம்.
மே 18, 2009 – No Fire Zone என்று அறிவித்த முல்லைத்தீவில் குண்டுமழையை பொழிந்தது சிங்களராணுவம், ஆயிரமாயிரம் தமிழீழ பொது மக்களின் உயிர் அவர்களின் அனுமதியின்றி பறிக்கப்பட்டது. நான் ஏட்டில் படிக்கும் சட்டமும் அறமும் ஆளுமையும் எங்கே போனது அன்று, என்று தெரியவில்லை.
· மக்களுக்காக மக்களால் அமைக்கப்படும் மக்கள் ஆட்சியில், சட்டம் பொதுமக்களுக்காக செயல்படாதது ஏன் ?
· ஐயன் காட்டிய அறக்கோட்பாடும் அவன் மூத்தோர் வாழ்ந்த அற வாழ்வியலும் பொய்த்துப்போனது ஏன் ?
· தமிழ்நாட்டு அரசு தமிழ் மக்களுக்கான ஆளுமைமிக்க அரசாக செயல்பட்டிருந்தால் இத்தகைய அழிவுச்செயலை அரங்கேற்றியிருக்குமா சிங்களராணுவம் ?
அன்று தமிழீழ பொதுமக்களுக்கு நேர்ந்த கொடூரம் – குற்றம். போர்க்குற்றம். இன்றுவரை அதற்கான நீதி அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது நாணம்.
இந்தியா ஒன்றியத்தில், தமிழ்நாட்டில், எந்த ஒரு அச்சுறுத்தலும் இன்றி மன்னின் அரவணைப்பில் வளர்கின்ற நான், தமிழீழ மக்களின் மனநிலையையும் மீளா துயரையும் உணர்ந்து கொள்ள முயல்கிறேன் (முற்றும் உணர்தல் இயலாது என்ற உண்மையை அறிந்தும்); அத்தகைய கடும் துயரை மனதில் சுமக்கும் தமிழீழ மக்களுக்கு ஆறுதல் கூறும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை எனினும், எனது இயலாமையை எண்ணி வருந்துகிறேன்.
‘இத்தகைய நிலை விரைந்து மாறும்; தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்கும்’
இள. பைந்தமிழ் ராஜா