நிலாரசிகனும் சஹாராத்தென்றலும் குழுமம் கொடுத்த செல்லப் பிள்ளைகள்.
இருவரும் கவிஞர்கள். எங்கு சென்றாலும் இக்கவிதைகளைப் பிடித்துக்
கொண்டுதான் நடப்பேன். ஜெயகாந்தன் இல்லத்திற்கும் அப்படியே சென்றேன்.
ஏற்கனவே ஒரு முறை நிலாரசிகனை அங்கு அனுப்பியிருக்கின்றேன். எத்தனை
முறையானாலும் அவர் வீட்டிற்குச் செல்லுவதில் தனி மகிழ்ச்சி என்று
கூறுவான்.
ஜெயகாந்தனே வரவேற்றார். உடல்நலம் மோசமாகி சிகிச்சைபெற்று உயிருடன்
மீண்டவர். அவரைப் பார்க்கவும். பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டேன்.
அவர் உட்கார்ந்த நாற்காலிக்கடுத்து நான் உட்கார்ந்து கொண்டேன். எதிரில்
பக்கவாட்டில் இருந்த சோபாவில் அவர்கள் இருவரும் உட்கார்ந்தனர்.
வழக்கம்போல் டீச்சரம்மா உடனே வந்து சில வினாடிகள் பேசிவிட்டு
விருந்தோம்பலுக்கு வேண்டியன செய்ய உள்ளே சென்றுவிட்டார்.
அறிமுகம் செய்து கொண்டிருக்கும் பொழுது கவுசல்யா வந்து , அந்த அறையின்
வாசலையொட்டி இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.
திடீரென்று ஜெயகாந்தன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
சீதாலட்சுமி, நாம் எந்த வருடம் முதலில் சந்தித்தோம்?
70ல்
அதற்குப் பிறகு நான் பேச வில்லை அவரே எங்கள் சந்திப்புகள், சேர்ந்து
போன பயணங்கள் போன்றவற்றை வந்தவர்களிடம் கூறிக் கொண்டிருந் தார்.விபரங்கள்
ஒருவர் வாய்வழிமட்டும் வரவில்லை.. கவுசல்யாவும் சேர்ந்து விளக்கிக்
கொண்டிருந்தார். ஒவ்வொன்றிற்கும் பிறகு தொடர்ந்து வந்த கதைகள், கதைகளில்
அவர் காட்டிய காட்சிகளை கவுசல்யாதான்
விளக்கிக் கொண்டிருந்தார். ஒன்றையும் விடாமல் மனைவியிடம் கணவர்
கூறியிருக்கின்றார். ஜெயகாந்தனின் குறிப்பேட்டைப் போல் காட்சி யளித்தார்
கவுசல்யா. ஒரு கணவனுக்கு மனைவி தோழியாகவும் இருக்க வேண்டும் என்று
சொல்லப்படுவது தெரியும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவு வைத்துக்
கொண்டு ஜெயகாந்தனின் மனக்குரலாய் ஒலித்துக் கொந்திருந்தார் கவுசல்யா.
குற்றாலத்தில் கசாப்பு கடைக்குப் போக வேண்டும் என்று சொன்ன பொழுது நான்
தவித்த தவிப்பைக்கூடச்
சொல்லியிருக்கின்றார். அந்த அதிசய தம்பதிகளை வியப்புடன் பார்த்து
ரசித்துக் கொண்டிருந்தேன்
இப்பொழுது அவருக்கு முதுமையும் நோயும் வந்துவிட்டது. பேச வருகின்றவர்கள்
கூட கவுசல்யாவிற்குத் தெரிந்து வரவேண்டும். கண்ணை இமை காப்பது போல்
காத்து வருவதையும் உணர்ந்தேன்.
திடீரென்று ஒரு சம்பவம் எனக்கு நினைவிற்கு வந்தது.
எனக்கு நாராயணன் என்று ஒரு நண்பர் உண்டு அவர் பெண்களைப்பற்றி
எழுதும்ஆங்கிலப் பத்திரிகைகளின் நிருபர். நானும் அவரும் நடிகர் ஜெமினி
கனேசனைப் பார்க்கச் சென்றிருந்தோம். எங்கள் உரையாடல் காரசாரமான
விவாதத்திற்குப் போய்விட்டது. நேரம் பறந்து கொண்டிருந்தது. நான் போக
வேண்டும் என்றேன். ஏனெனில் ஜெயகாந்தனைச் சந்திக்க வருவதாகச்
சொல்லியிருந்தேன். எனக்கு எதுவும் சொன்ன நேரப்படி நடக்க வேண்டும்.
ஜெயகாந்தன் பெயரைக் கேட்கவும் அவரைச் சில நிமிடங்கள் புகழ்ந்தார்.
அதன்பின் கவுசல்யாபற்றி ஒரு கதாகாலக்ஷேபமே செய்துவிட்டார். அவர் ஒரு
சிறந்த நடிகையென்றும் அவர் நடிப்பதை நிறுத்தியது கலை உலகிற்கு நஷ்டம்
என்றும் சொன்னார். அவர் நடித்த தனிக்குடித்தனம் நாடகம்தான்
திரைப்படமாகியது. கவுசல்யா மாதிரி கே.ஆர் விஜயா கூட அப்படி நடிக்கவில்லை.
அந்த அளவு அற்புதமாக நடிக்கும் திறன்பெற்ற ஒரு பெண்மணி என்று
புகழ்ந்தார்.
அத்தகைய திறன் பெற்ற ஓர் பெண்மணி, சிவத்துடன் சேர்ந்த சக்தி
ஐக்கியமானதைப் போல் ஜெயகாந்தனுடன் எண்ணத்திலும் ஒவ்வொரு உணர்விலும்
ஐக்கியமாகி இருப்பதைக் கண்டு பிரமிப்பு அடைந்தேன். அந்த அளவு கணவரின்
ஒவ்வொரு அசைவையும் புரிந்து வைத்திருந்தார். அந்தக் கணங்களைப்
பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகின்றார்.
பெண்ணுக்கு மரியாதை தருகின்றவர் ஜெயகாந்தன்.
பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஜெயகாந்தனின் மகன் வந்து சேர்ந்து
கொண்டார். பேச்சு அரசியல் பக்கம் திரும்பியது. ஜெயகாந்தனும் கவுசல்யாவும்
பேசவில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் பேசினேன். பிறகு கருத்தாடல் போன பாதை
பிடிக்கவில்லை. இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஜெயகாந்தனை நான்
பார்த்த பொழுது “gossip”
என்று சிரித்துக் கொண்டே மெதுவாகச் சொன்னார்.
“நாம் இருவரும் சேர்ந்து கலைஞரைப் போய்ப் பார்க்கலாமா?”
என்று அவர் கேட்ட பொழுது தலையாட்டி என் இயலாமையைத் தெரிவித்தேன்.ஒரு
காலத்தில் நான் விரும்பியதை நினைத்துதான் அவர் இப்பொழுது என்னைக்
கேட்டார். அரசியல் வட்டத்திலிருந்து விலகி இப்பொழுது அமைதியாக
இருக்கின்றேன். என் முகத்தில் எழுந்த கேள்விக் குறியைப் பார்த்து, “நான்
இப்பொழுதும் அதே ஜெயகாந்தன் தான்”என்றார்.
நான் புறப்பட எழுந்தேன். மெதுவாக நிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு கார்
நோக்கிச் சென்றேன். ஜெயகாந்தனும் கேட்வரை தொடர்ந்து வந்தார். காருக்குள்
ஏறும் முன் அவரைப் பார்த்தேன்
ஊருக்குப் போகும் முன் வருவீர்களா?
நிச்சயம் வருவேன்
காரில் ஏறிவிட்டேன். எங்களையே பார்த்துக் கொண்டிருந்த இரு கவிஞர்களும்
“நட்புக்கு இத்தனை சக்தியா?” என்று கேட்டனர்.
பதில் கூறாமல் கண்கலங்க உட்கார்ந்திருந்தேன். எனக்கும் வயதாகிவிட்டது.
உயிருக்கு யார் உத்திரவாதம் அளிக்க முடியும்?
ஏதோ அவரும் கேட்டார், நானும் பதில் சொன்னேன்.
எதேதோ சிந்தனைகள் மனத்திரையில் ஓட ஆரம்பித்தன.
சிங்கம் வீட்டுக்குள் அடங்கிவிட்டதா?
ஒரு ஜன்னல் இருந்தாலும் அது வழியே சென்று உலகைக்காட்டும்
திறமை பெற்றவர். அவர் ஜன்னைப்பற்றி எழுதிய கதை நிழலாடியது
“இந்த ஜன்னல் வழியாக யார் மொதல்லே பார்த்திருப்பா?மொதல்லே என்னத்தைப்
பாத்துருப்பா .எனக்கு ஞாபகம் இருக்கற மொதல் நெனவே
இந்த ஜன்னல் வழி பாத்ததுதான்.ஜன்னலண்டை நின்னுண்டு யாரையோ
பாக்கறேனாம்.அங்கெ யாரும் இல்லே. அரச மரத்தடியிலே தும்பிக்கையும்
தொந்தியுமா ஒரு பிள்ளையார்த்தான் உட்கார்ந்திருந்தார்.பிள்ளையாரைப்
பாத்துண்டு நானும் உக்கந்திருக்கேன் பிள்ளையார் மாதிரி.அவர் தெய்வப்
பிள்ளையார். நான் மனுஷ்யப் பிள்ளையார்”
ஆழ்வார்ப்பேட்டைக் குடிலுக்குக் கீழே ஒரு கோயிலும் உண்டு. இந்த
ஜெயகாந்தன் பிள்ளையாரும் குட்டைச் சுவருக்கருகில் உட்கார்ந்து கொண்டு
அந்த சின்னத் தெருவைப் பார்த்துக் கொண்டே இருப்பார். அங்கே மனிதர்கள்
நடமாட்டம் உண்டு. சத்தம் உண்டு. இங்கே கே. கே நகர் விட்டில் அமைதி.
“இந்த வீடு ஒரு ரயில் மாதிரி. நான் பிரயாணம் போறேன். எல்லாம் ஓடறது.
ரயில்லே போகச்சே நாம் ஓடிண்டிருக்கோம். ஆனா தந்திக் கம்பமும் மரமும் ஓடற
மாதிரி இருக்கோன்னோ. ஜன்னல் வழியா பாத்தா அவா ஓடற மாதிரி இருக்கு.
யாராவது ஒருத்தர் ஓடினா சரிதான்”
ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்
இப்பொழுது இவருக்குப் பொருந்தும் தலைப்பு
இப்பொழுதும் அவர் மனத்தில் உலகம் சுழன்று கொண்டுதான் இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்தமான கதை ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம். புத்தகம்
இப்பொழுது என் கையில் இல்லை. அதைப் பற்றி எழுத ஆரம்பித்தால் தொடர்
இன்னும் நீண்டுவிடும்.
மனத்தில் ஓர் சுமை இருப்பது போன்று உணர்வு. வீட்டிக்குச் சென்ற பொழுது
கோமதியும் அவள் கணவன் சந்துருவும் வந்திருந்தார்கள். கோமதியைப்
பார்க்கவும் எனக்கு மகிழ்ச்சி பொங்கியது. திடச் சித்தம் உள்ளவள் இந்த
சந்துரு என்னமா ஆடினான். எப்படி யிருந்தவன் இப்படி மாறிவிட்டான் என்பதில்
வியப்பு. அவன் ஒரு காலத்தில் சபல புத்திக்காரன். மனைவியை ஒரு பொருட்டாகவே
நினைக்கவில்லை.
சட்டென்று ஜெயகாந்தனின் கதை ஒன்றில் வரும் காட்சி நினைவில் தோன்றியது.
ஓர் கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் உரையாடல்
நீ என்னைப்பத்தி என்ன நினைக்கறே
என்னோட புருஷன்னு நினைக்கறேன்
என் மேலே உனக்கு ஏதாவது கோபம்
இல்லே
வருத்தம்
ம்ஹம்
கவலை
இல்லை
ஏன் இல்லை
ஏன் இருக்கணும்
அவனது கேள்விகளுக்கெல்லாம் அவளால் பதில் சொல்ல முடிந்தது.
அவனது கேள்விகளுக்குப் பதிலாய் ஒரு கேள்வியையே திருப்பி போட்ட பொழுது
அந்தக் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
(கேள்விக்குக் கேள்வி விடையாய்த் தருவது ஜெயகாந்தன் வழக்கம். நான்
அனுபவித்திருக்கின்றேன்.)
அவன் ஆர்வத்திற்கு ஓர் அடி.
பதில் கூறமுடியாத நிலையில் தன் இயலாமையில் அவளிடம் ஏதோ உயர்வை
உணர்ந்தான். அவளை அவன் ரசிக்க ஆரம்பித்தான்
இந்த ரசனைகளைப்பற்றி எத்தனை எழுதினாலும் போதவில்லை.
ஒரு வழக்குச் சொல் உண்டு. ஓடுகின்றவரைத்தான் விரட்டுவார்கள். எதிர்த்து
நின்றால் அடங்கி விடுவார்கள். மனிதன் இல்லறத்துக்கும் இது பொருந்துமோ?
பொதுப்படையாகக் கூறிவிட முடியாது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். சில நேரங்களில் சில மனிதர்கள்!
அப்பப்பா போதும். கொஞ்சம் ஜெயகாந்தனைப் பற்றிய நினைவுகளி லிருந்து
ஒதுங்கி வந்தவர்களைக் கவனிக்க வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் ஊருக்குப் புறப்படும் முன்னர் அவர் வீட்டிற்குச் சென்றேன். இம்முறை
என் கணவரும், என் தோழி புனிதவதி இளங்கோவனும் உடன் வந்தார்கள். முதலில்
டீச்சரம்மா வந்து கொஞ்ச நேரம் எங்களுடன் பேசினார்கள். பின்னர்
ஜெயகாந்தனும் என் கணவரும் பேசினார்கள். கவுசல்யா வரவும் புனிதத்தின்
முகம் மலர்ந்தது
என் தோழி புனிதவதி இளங்கோவன் அவர்கள் வானொலியில் வேலை பார்த்து , பின்னர்
ஓய்வு பெற்றவர்கள். நாடகப் பிரிவில் இருந்ததால் அவர்களுக்கு கவுசல்யாவை
நன்றாகத் தெரியும். அவ்வளவுதான் இருவரும் மலரும் நினைவுகளில் எங்களை
மறந்துவிட்டனர். ஆனால் நாங்களும் அந்த நினைவுகள் சென்ற திசையைப் பார்த்து
ரசித்துக் கொண்டிருந்தோம். என் கணவர் அந்த உரையாடலை மிகவும் ரசித்தார்.
எனக்கும் பல புதிய செய்திகள் கிடைத்தன. இந்த சந்திப்பில் ஜெயகாந்தனுடன்
அதிகம் பேச முடியவில்லை. பார்த்ததில் ஓர் மன நிறைவு.
வெளியில் வந்தவுடன் என் கணவர் கவுசல்யாவைப் பற்றிக் கூறியது
Very intelligant ... sharp
ஜெயகாந்தன் இப்பொழுது ஏன் எழுதுவதில்லை?
பலரும் நினைப்பதுதான்
எந்த எழுத்தாளனுக்கும் ஒரு காலக் கட்டத்தில் ஓட்டம் நின்றுவிடுகின்றது.
ஒரு சிலர் தான் விதிவிலக்கு. எழுதுபவன் மாறிவிடுகின்றானா அல்லது அந்த
எழுத்தைப் படிக்கும் மனிதர்களின் ரசனைகலின் மாற்றங்களா?
என் கணவருக்குப் பதில் சொல்ல வேண்டும்
இப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் நையாண்டி அரசியல், சினிமா, ஆன்மீகம்
இப்படியெல்லாம்தான் வருகின்றன. சிறுகதைகள் ஒன்றிரண்டு வந்தாலே அதிசயம்.
தொடர்கதை படிக்கும் பெண்கள் தொலைக் காட்சிப் பெட்டிக்குமுன்
ஐக்கியமாகிவிட்டார்கள். மற்றவர்களை கணினி தன் பக்கம் ஈர்த்துவிட்டது.
மிச்சமுள்ளவர்களுக்கும் வெட்டிப் பேச்சும் சினிமாவும் இருக்கின்றன. ஆனால்
இப்பொழுது புத்தகங்கள் படிப்பவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கின்றது
கலைஞனுக்கு ரசிகர்கள் தேவை.
எழுத்தாளனுக்கு வாசகர்கள் தேவை
அப்பொழுதுதான் உற்சாகமாக அவர்கள் தங்கள் திறமையைக் காட்டும் ஆர்வம்
பெறுவர். இப்பொழுது சூழல் மாறிவிட்டது.
பிரபலமான ஒன்றை கேலியாக விமர்சனம் செய்தால் , கேலி செய்பவரும்
பிரபலமாகிவிடுவர். எழுத்து, பேச்சு, அரசியல் எல்லாவற்றிலும் இதே
நிலைதான்.
இப்பொழுதும் ஜெயகாந்தனின் புத்தகங்களுக்கு மவுசு உண்டு. எழுதியது போதும்
என்று தனக்குள் சமாதானம் செய்து கொண்டு எழுத்தாளர்கள்
ஒதுங்கிவிடுகின்றார்கள். அவர் எழுதுவதில் ஏன் தேக்க நிலை என்று நான்
கேட்டதில்லை.
இந்த நாட்டில் பத்திரிகையில் எழுதுகின்றவன் பணக்காரனாக முடியாது.
என் கணவரிடம் ஒரு பெரிய விளக்கமே கொடுத்தேன். அவரும் அதனை ஒப்புக்
கொண்டார்.
ஜெயகாந்தன்
அவருடன் நடந்த உரையாடல்களில் பெரும் பகுதி என் பணியிடத்துப் பிரச்சனைகள்
தான். அக்கினி பிரவேசம், அதனைத் தொடர்ந்த கங்காவின் கதை பற்றி
பேசியிருக்கின்றோம். அவர் பத்திரிகை உலகில் உச்சத்தில் இருந்த பொழுது
எனக்கு அவர் பழக்கமில்லை. பழகியபிறகு
அவர் தன் எழுத்தில் அதிகமாக உரையாடியது அவர் எழுதிய ஜெய ஜெய சங்கர
பற்றித்தான். அதற்குப் பல காரணங்கள் உண்டு
அவர் அதனை எழுதி வரும் பொழுது நான் காஞ்சியில் இருந்தேன். சங்கர
மடத்திற்குப் பக்கம் வீடு. செங்கல்பட்டு மாவட்ட அதிகாரியாக இருந்தேன்.
காஞ்சிக்கு வருகின்ற பார்வையாளர்களில் பலர் மடத்திற்கும்
செல்வதுண்டு. நானும் உடன் செல்ல வேண்டியிருக்கும். மஹாப்பெரியவ
ரைப் பார்க்க தேனம்பாக்கமும், கலவைக்கும் செல்வதுண்டு
அந்தத் தொடரை எழுதும் பொழுது எழுந்த விமர்சனங்கள் கொஞ்சமல்ல. ஆனால்
அதுபற்றி எதுவும் அவரிடம் நான் பேசியதில்லை. உணர்ச்சிப் பிரவாகமாக
ஓடிவரும் சிந்தனையை தடுக்கவோ, அல்லது திசை மாறிச் செல்ல வைப்பதோ எனக்கு
உடன்பாடில்லை. எப்பொழுதும் நான் பேசுவேன். அவர் பதில் கூறாமல் சிரித்துக்
கொண்டே கேட்பார். இப்பொழுது அவர் பேசிய பொழுது நான் மவுனம் காத்தேன்.
அவருக்கும் பல விமர்சனங்கள் தெரியும். இந்தக் கதை எழுதும் பொழுத்துதான்
அவரிடம் ஓர் தவிப்பைக் கண்டேன். அவர் நினைத்தவை, சொன்னவை யெல்லாம்
எழுத்தில் முழுமையாகக் கொண்டு வரவில்லை
ஒரு கர்ப்பினிப் பெண் பிரசவ நேரம் வந்தவுடன் இடுப்பு வலி எடுக்கவும் ஒரு
தவிப்பு இருக்குமே அது போன்று ஓர் நிலையை அவரிடம் கண்டேன். பலருக்கும்
அவர் எழுத்தில் கருத்து வேறுபாடு இருக்கலாம். மாற்றுக் கருத்து என்பது
உலகில் இயல்புதானே
ஜெய ஜெய சங்கர ஜெயகாந்தனின் ஆத்ம ராகமாய் உணர்ந்தேன்.
அவருடைய புத்தகங்கள் நான்கும் எப்பொழுதும் என்னுடன் இருக்கும்.
எனவே அதைப்பற்றி எழுதாமல் ஜெயகாந்தன் தொடரை என்னால் முடித்தல் இயலாது.
புத்தகத்தைத் திறந்தேன்
முன்னுரைக்குமுன்னே முதன்மையாகக் காணப்பட்ட வரிகள் என்னை அங்கேயே தங்க
வைத்தது. மஹாப்பெரியவரின் வாசகங்கள். எக்காலத்திற்கும் பொருந்தும்
அறிவுரைகள்.
மனித நேயமும், உலக நன்மையும் ஒவ்வொருவரின் வாழ்வின் குறிக்கோளாக இருக்க
வேண்டும்
ஈஸ்வரோ ரக்ஷது!
------------------------
பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தான் இன்றையப்
பெளராணிகர்கள்.சூதரும் பெளராணிகர்களும் எப்படி பிரச்சாரம் செய்தார்களோ
அவ்விதமே செய்ய வேண்டியது இன்றையப் பத்திரிகைகாரர்கள், எழுத்தாளர்களின்
கடமை .ஜனங்களுக்குப் பிடித்ததையே சொல்வது என்று வைத்துக் கொள்ளக் கூடாது.
வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாச்சாரங்களில்தான் ஜனங்களுக்கு அதிகக்
கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இவ்விதமே எழுதுவது சரியல்ல.
ஜனங்களுக்கு ஆத்மாவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இருதயபூர்வமான
எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் முனைந்தால் தானாகவே ஜனங்களுக்கு அதில்
ருசி பிறக்கும். “நம்மையும் உயர்த்திக்
கொண்டு நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும் என்கிற கடமை
உணர்ச்சியைப் பெற வேண்டும்.இவ்விதம் ஆத்ம க்ஷேமம், லோக க்ஷேமம்,
சாந்தி, சுபிட்சம் எல்லாவற்றுக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப்
பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெற வேண்டும் .”
-ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
தொடரும்
நன்றி -திண்ணை
'...கலைஞனுக்கு ரசிகர்கள் தேவை. எழுத்தாளனுக்கு வாசகர்கள் தேவை...'
- உண்மை.
இன்னம்பூரான்
2010/7/21 சீதாலட்சுமி <seethaa...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil