கண்ணில் தோன்றும் காட்சி - தொடர்-1
முனைவர் க.சுபாஷிணி
பல்லவன் அமைத்த திருச்சி குடைவரை
தமிழ்நாடு கோயிற் கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் புகழ்பெற்ற மாநிலம். தொடக்ககால கோயில்கள் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டன. ஆரம்ப கால குடைவரைக்கோயில்கள் ஒடிசா, விஜயவாடா போன்ற பகுதிகளில் காண்கின்றோம். இவ்வகை கோயில் அமைப்பை பல்லவரும் பாண்டியரும் தமிழ்நாட்டில் உருவாக்கினர். தமிழகத்தில் சிற்பக்கலை நிபுணர்கள் பலர் இக்கலையில் தேர்ச்சி பெற்று பாண்டிநாடு, தொண்டைமண்டலம் சோழநாட்டிலும் குடைவரைக்கோயிற்கலை வடிவங்களை உருவாக்கினர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரிநதியின் தென்கரையில் அமைந்துள்ள திருச்சி மலைக்கோட்டை ஒரு தொல்பழங்கால மலைப்பாறையாகும். இங்குள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் சாலையில் இடது புறத்தில் ஒரு குடைவரைக்கோயில் அமைந்திருக்கின்றது. மலைமீது உள்ள குடைவரைக்கோவில் மகேந்திரவர்மப்பல்லவனின் ஆட்சிக்காலமான பொ.ஆ. 600-630ஆம் காலத்தில் அமைக்கப்பட்டது. ‘லலிதாங்குர பல்லவேஸ்வரகிருகம்’ என இக்குடைவரைக் கோவில் அழைக்கப்படுகிறது. லலிதாங்குரன், மகேந்திரவர்மனுக்கு அமைந்திருக்கும் மற்றொரு பெயர். இக்குடைவரைக் கோவிலின் மூல தெய்வம் சிவன்.
உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குக் கீழுள்ள குடைவரைக்கோயில் அளவில் பெரியது. இந்தியத் தொல்லியல் துறை இது பல்லவன் மாமல்லன் காலத்து கோயில் எனக் குறிப்பிடுகின்றது. இது பாண்டியர் காலத்துக் குடைவரை என சில ஆய்வாளர்கள் வேறுபடுகின்றனர். ஆயினும் இக்குடைவரைக்கோயில் நரசிம்மபல்லவன் காலத்து கலைப்பாணியாக இருக்கலாம் என்றே கருதலாம்.
குடைவரைக்கு முன்புறம் திறந்த வெளி அமைந்திருக்கின்றது. முன்வாசல் பகுதியில் கோயிலைத் தாங்கிய வண்ணம் நான்கு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் உள்ளே நேர் எதிராக இரண்டு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்றின் முன்னே இடது வலது பக்கங்களில் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட துவாரபாலகர்களின் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன.
கோயிலின் வலது புற கருவறையினை அடுத்து வரிசையாகக் கணபதி, முருகன், பிரம்மா, சூரியன் ஆகிய சிற்பங்களும் கொற்றவையின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்களில் சிலவற்றின் முகப்பகுதி சிதைக்கப்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது.
இந்தக் குடைவரையில் அமைந்திருக்கும் கணபதி புடைப்புச் சிற்பம், நான்கு கரங்களுடன், குட்டையான கால்களுடன் நின்ற அமைப்பில் ஆரம்பக்கால கணபதி வடிவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
வலது புறத்தில் அமைந்திருக்கும் கருவரைப்பகுதியில் விஷ்ணுவின் சிற்பம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் பாதத்தில் ஒரு ஆணின் சிற்பமும் ஒரு பெண்ணின் சிற்பமும் வலது இடது பக்கங்களில் வழிபடும் பாவனையில் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை இக்குடைவரையை எடுப்பித்த மன்னனும் அவனது அரசியும் வழிபடுவதைக் குறிப்பிடுவதாகவும் இதனைக் கருதலாம். இடதுபுற கருவரையில் சிற்பங்கள் ஏதும் இல்லை.
நான்கு கரங்கள்கொண்ட கொற்றவையின் பாதத்தில் இருவர் மண்டியிட்டு அமர்ந்து, ஒருவர் தனது தலையைக் கரத்தால் பிடித்து மறுகரத்தால் கழுத்தை வாளால் வெட்டும்படியுள்ளது. கொற்றவைக்கு வீரன் ஒருவன் தன்னையே பலிகொடுத்துக் கொள்ளும் நவகண்ட வகை அரிய காட்சி இது. இதனை அடுத்து சூரியனின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
தமிழகக் கோயிற் கலையில் குடைவரைக் கோயில்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுபவை. கற்றளிகள் உருவாக்கப்படுவதற்கு முன் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட இத்தகைய கோயில்கள் பல இன்றும் தமிழக நிலப்பரப்பில் இருக்கின்றன. பல்லவர்களும் பாண்டியர்களும் எடுப்பித்துப் போற்றிப்பாதுகாத்த இத்தகைய கலைக்கோயில்கள் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புக்களாகும்.
இக்கோயிலை தமிழ் மரபு அறக்கட்டளையின் யூடியூப் சானலில் காண: http://tinyurl.com/Trichy-Rockcut
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/75195f61-0720-4178-ae51-4434a5035b12n%40googlegroups.com.
கண்ணில் தோன்றும் காட்சி!- 2
சமணமலையில் ஒரு வரலாறு
முனைவர்.க.சுபாஷிணி
தமிழ்நாட்டின் தொண்டைமண்டலத்தைப் போல சமண சமய சின்னங்கள் நிறைந்த ஒரு பகுதி மதுரை. மதுரை நகரின் தெற்கே தேனி செல்லும் சாலையில் நாகமலைப் புதுக்கோட்டைக்குத் தெற்கில் அமைந்துள்ளது சமண மலை. இங்கு இயற்கையான பாறை ஒன்று அமைந்துள்ளது. இதில் ஏறக்குறைய கிபி 8ம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்ட சுமார் ஆறு அடி உயரமுள்ள அமர்ந்த நிலையில் காணப்படும் மகாவீரர் சிற்பம் ஒன்றை மதுரைக்குச் சென்றவர்கள் பலரும் பார்த்திருக்கலாம்.
இந்தச் சிற்பத்தோடு மேலும் சில சிற்பங்களும் கல்வெட்டுக்களும் உள்ளன. இவை இச்சிற்பம் பற்றிய வரலாற்றுத் தகவல்களை நமக்கு வழங்குகின்றன.
மகாவீரர் சிற்பத்தோடு இச்சிற்பத்தை உருவாக்கக்காரணமான குறண்டி திருக்காட்டாம் பள்ளியின் மாணாக்கர்கள் பெயர் இங்கே வட்டெழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1.வெண்புநாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக நந்திப்ப
2.டாரர் அபினந்தபடார் அவர் மாணாக்கர் அரிமண்டலப்ப டார்அ
3.பினந்தனப்படார் செய்வித்த திருமேனி
இதற்கடுத்து இங்குள்ள குகையில் ஐந்து புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. சமண தீர்த்தங்கரர்கள் சிற்பங்களில் உள்ள முக்குடை வடிவம் அலங்கரிக்க தீர்த்தங்கரர்கள் அமர்ந்திருக்க ஒரு இயக்கி சிம்மத்தின் மீது அமர்ந்து யானை மீது அமர்ந்துள்ள அசுரனோடு வீராவேசமாகப் போரிடுவது போல இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வலது ஓரம் அம்பிகா இயக்கியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள சிற்பங்களின் கீழ் வட்டெழுத்தில் இவற்றைச் செய்வித்தோர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
முதல்கல்வெட்டில்
1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகு
2.ணசேனதேவர் சட்டன் தெய்வ
3.பலதேவர் செய்விச்ச திருமேனி
அடுத்த கல்வெட்டில்
1. ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டி
2. த் திருக்காட்டாம்பள்ளிக்
3. குணசேனதேவர் மாணாக்கர் வ
4. ர்தமானப் பண்டிதர் மாணாக்
5. கர் குணசேனப் பெரிய
6. டிகள் செய்வித்த தி
7. ருமேனி
என்றும்
மூன்றாம் கல்வெட்டில்
1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்
2. கின்ற குணசேனதேவர் சட்டன்
3. அந்தலையான் களக்குடி தன்னை
4. ச் சார்த்தி செய்வித்த திரு
5. மேனி
என்றும் வழங்கப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டுக்கள் தரும் செய்திகளின் வழி இச்சமணப்பள்ளிக்கு நெடுங்காலம் பொறுப்பு வகித்தவர் குணசேனதேவர் என்ற செய்தியை அறிகிறோம். அவரது சீடர்கள் இப்பள்ளியை நிர்வகித்து இச்சிற்பங்களைப் பாதுகாத்தனர் என்றும் அறியலாம். அக்காலகட்டத்தில் அதாவது பொ.ஆ 9ஆம் நூற்றாண்டில் மதுரைப்பகுதியிலேயே மிகப்பெரிய சமணப்பள்ளியாக இது திகழ்ந்தது.
குறிப்பு: இப்பதிவின் காணொளியைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வலைப்பக்கத்தில் https://jainism.tamilheritage.org/samanamalai-madurai/ காணலாம்.
கண்ணில் தோன்றும் காட்சி – 3
மெட்ராஸ்: கருப்பு-வெள்ளை நகரங்கள்
முனைவர்.க.சுபாஷிணி
இன்று நாம் சென்னையின் ஜியோர்ஜ்டவுன், வடசென்னை என்ற பகுதிகளைப் பற்றி அறிந்திருப்போம். 1639ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மெட்ராசைக் கைப்பற்றிய போது இப்பகுதியில் ஒரு கோட்டையைக் கட்டி வெள்ளை நகரம் எனப் பெயரிட்டனர். கோட்டைக்கு வடக்கில் ஒரு நகரத்தை அமைத்தனர். இதற்குக் கருப்பு நகரம் எனப் பெயரிட்டனர். கருப்பு நகரத்தில் தமிழர்களும், போர்த்துக்கீசியர்களும், வெள்ளை நகரத்தில் ஆங்கிலேயர்களும் வசிப்பது போல அமைத்தனர்.
பாரிமுனையிலிருந்து, முத்தியால்பேட்டை, இன்று சென்னை உயர்நீதிமன்றம் உள்ள பகுதி, காசிமேடு பகுதி அதனைச் சுற்றியுள்ள பகுதி என யாவையும் அடங்கிய ஒரு பகுதி இது. இன்று வணிகர்கள் நிறைந்து கோடிக்கணக்கில் பணப்புழக்கம் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னையின் மிக முக்கிய வணிகத் தளமாக இப்பகுதி அமைந்திருப்பதைக் காண்கின்றோம். பூர்வகுடி தமிழ்மக்கள் நிறைந்திருந்த இப்பகுதியில் இன்று அதிகமாக மார்வாடி சமூகத்தினர் குடியேறி வணிகம் நடத்திக் கொண்டும் மேலும் பலரையும் வடஇந்தியாவிலிருந்து அழைத்து வந்து வணிகத்தை விரிவாக்குவதையும் கண்கூடாகக் காண்கின்றோம்.
1639இல் ஆங்கிலேயர் 300 சதுரகஜம் மட்டுமே கொண்ட அளவிலான நிலப்பகுதியைக் கூவம் நதிக்குத் தெற்கே கையகப்படுத்தி தங்கள் கைவசம் கொண்டு வந்தார்கள். இந்தச் சிறிய நிலப்பகுதியில் தான் முதலில் ஆங்கிலேயரின் கோட்டைப்பகுதி அமைக்கப்பட்டது. 1640இல் இக்கோட்டை கட்டுமானப் பணிகள் நிறைவுற்றன. அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த இந்திய மக்களை ஆங்கிலேயர்கள் கூவம் நதிக்கு வடக்குப் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். அதுமட்டுமல்ல. அந்த வடபகுதியைக் கருப்பர் நகரம் என்றும் பெயரிட்டனர். இதுவே இன்று வடசென்னை என்றும் அறியப்படுகின்ற பகுதி.
1746இலிருந்து 1949வரை சென்னை பிரஞ்சுக்காரர்கள் வசமிருந்தது. இப்பகுதியிலுள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு மாமன்னன் வீரசிவாஜி நேரில் வந்து வழிபட்டுச் சென்றிருக்கின்றார். அந்தச் செய்தியை இன்றும் இக்கோயிலின் முகப்புப் பகுதி கல்வெட்டுச் செய்தியின் வழி அறியலாம்.
சென்னையின் கடற்கரைப் பகுதியில் கேசவப் பெருமாள் கோயில் என்ற வைணவ வழிபாட்டினரின் ஒரு கோயிலும், மல்லிகேஸ்வரர் கோயில் என்ற சைவ வழிபாட்டினரின் கோயிலும் இருந்தன. இப்பகுதியைத் தங்கள் பாதுகாப்பு அரணாக மாற்ற ஆங்கிலேயர்கள் முடிவு செய்ததால் இவை இரண்டுமே 1749இல் இடிக்கப்பட்டன. அதன் பின்னர் அவை இரண்டுமே இன்றைக்கு இவை உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் ஆங்கிலேயர்களாலும் அன்று பொருளாதார பலம் மிக்க தமிழர்களாலும் கட்டப்பட்டன. ஆரம்பத்தில் இக்கோவில்களில் இருந்த தெய்வ வடிவங்களே இப்புதிய கோயில்களுக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு வழிபாட்டில் வைக்கப்பட்டன.
இது பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஒரு பதிவு தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்டங்களுள் ஒன்றான ”டிஜிட்டல் மெட்ராஸ்” திட்டத்தில் பேட்டியாக இணைக்கப்பட்டுள்ளது. வரலாற்றறிஞர் திரு.நரசய்யா இப்பேட்டியில் பல அரிய தகவல்களை வழங்குகின்றார் http://tinyurl.com/Madras-Black-Town. வடசென்னையின் வரலாற்றையும் ஆங்கிலேயர் ஆட்சிகால நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள இப்பதிவு உதவும்.