மெய்க்கீர்த்திகள்

525 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 25, 2021, 3:44:15 PM6/25/21
to மின்தமிழ்
    இரண்டாம் குலோத்துங்க சோழன் (கி. பி. 1133 - 1150)

    முதற்குலோத்துங்கன் மகனாகிய விக்கிரம சோழனுடைய வீர மைந்தன் இரண்டாம் குலத்துங்கன். தந்தை விக்கிரமசோழன் ஆட்சிக் காலத்தேயே கி. பி. 1133 - இல் இவன் இளவரசுப்பட்டம் சூட்டப்பெற்றான். விக்கிரமசோழன் கி. பி. 1135 - இல் புகழுடம்பெய்தினான். இளவரசன் இரண்டாம் குலோத்துங்கன் சோழர் அரியணையமர்ந்தான். இளவரசுப் பட்டம் பெற்ற காலம்தொட்டே இவனது ஆட்சியாண்டு சாசனங்களில் இடம் பெறுகிறது. தந்தை பரசேகரிப்பட்டம் புனைந்தமையால், இவன் இராசகேசரிப்பட்டம் கொண்டான். இவனுடைய மெய்க்கீர்த்திகள் நற்றமிழ் நடை வாய்ந்தவை; 'பூ' என்னும் மங்கலமொழியால், இம்மெய்க் கீர்த்தி (இத்தலைப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது) 'பூ மன்னு பதுமம்' , 'பூமன்னு பாவை', 'பூமேவு திருமகள்' முதலாகத் தொடங்கி, உயர்வு நவிற்சியணிபட இவனது அரசியலைப் பலபடப் புனைந்து செல்கின்றன. அப்புனைந்துரைகள் வரலாற்று வாய்மைக்கு விளக்காக ஒளிகாட்டுவன அல்ல. வேறாக இடம் பெறத் தக்க விசேடச் செய்திகள் இவன் காலத்து இன்மையே இன்னோரன்ன புனைந்துரைக்குக் காரணம் எனலாம்.

    ஆயினும் இவனது தில்லைத் திருப்பணி குறிப்பிடத் தக்க சிறப்பு வாய்ந்தது. இவனது ஆட்சியில் தில்லையம்பதி பல்வகை வளனும் பல்கித் திகழ்ந்தமையும், அப்பதியில் இவனுக்கு முடிசூட்டுவிழா நிகழ்ந்தமையும், அப்பதியிடத்தும் அம்பலவாணனிடத்தும் தனக்கு மிக்கிரந்த ஈடுபாடு தோன்ற அத்தலத்தில் பல திருப் பணியும் திருமன்றில் பல பெரும்பணியும் இவன் ஆற்றியமையும் திருமாணிகுழியில் காணப்படும் கல்வெட்டொன்றால் வலியுறுகின்றன. 'தில்லைத் திருநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் முதலான தொடர்களை நோக்குக. தில்லைத் திருமன்றில் இவன் கண்ட அரிய திருப்பணிகள் ஒட்டக்கூத்தரால் இவன் மீது பாடப்பட்ட குலோத்துங்க சோழனுலாவிலும் (அடிகள் 77-116), இராசராச சோழனுலாவிலும் அடிகள் 57- 66, தக்கயாகப் பரணியிலும் (தாழிசைகள் 802, 806-810) பரக்கப் பாடப்பட்டுள.

    “ஈசனது பரமானந்தக்கூத்தைக் களிகூரக் கும்பிட்டான் குலோத்துங்கன்; தில்லையம்பல முன்றிலில் வரங்கிடந்த திருமாலின் மமதையாகிய குறும்பைக் கீழ்ப்படுத்தான்; அம்பலத்தே பசும்பொன்னால் பூரண கும்பம் நிறைத்தான்; பசும்பொன்னால் நிலம் செய்தான்; அதில் வச்சிரப்பலகை ஆதனமாகப் பதித்தான்; முத்துமாலையைச் சுற்றிலும் தொங்க விட்டான்; சேடனது சூடாமணி கொண்டு திருத்தீபம் ஏற்றினான்; வயிர ஒளியால் குளமாய், சூழக் கிடந்த மரகதத்தால் பசிய இலையாய், பருமுத்தால் இலை நடுவே சரற்காலத்து ஆலியாய், பதுமராகமணியால் திருமிக்க செந்தாமரையாய், மிகுதியான நீலமணியால் வண்டின் கூட்டமாய் இவ்வாறாகக் கோயிற்பணியாகப் பதுமபீடம் சமைத்தான். திருப்பேரம்பலமும் கோபுர மாடம் பரந்தோங்கு மாளிகையும் மாமேருவும் சக்கரவாளகிரியும் போலக் காட்சி வழங்கின; ஏழு கோபுரங்களும் சப்தகுல பருவதங்களை ஒத்தன; தலையில் மகரங்களையுடைய கோபுரங்கள் வானில் உலவும் விமானச் சிகரங்களாகக் கவின் செய்தன; அம்பிகை கோயிலிலுள்ள முற்றம் செம்பொன்படர் பாறையென விளங்கிற்று; பொற்கடாரத்தில் சொரியப்பட்ட பனிநீர் மேருமலையிலுள்ள பொற்றடாக நீராகத் ததும்பிற்று; இரவு பகலாமாறு பல கற்பக வருக்கத்தின் ஒளி விஞ்சிற்று; மகளிர் தாம் அணிந்த பொன்னணிகளால் தேவமகளிரை ஒத்தனர்; அம்மை தான் பிறந்த கடவுட் குன்றினையும் மறக்குமாறு பெருஞ்செல்வம் ஆண்டு நிறைந்தது. இப்பரிசாக இவன் இறைவியது திருக்காமக் கோட்டத்தைத் திகழ்வித்தான்; வீதிதோறும் நிலைத்தேர் வகுத்தான்; நாற்பெருவீதிகளையும் அமராவதி மூதூரின் பெருவீதிகளும் நாணுமாறு பொலிவுறுத்தினான்.”

    குலோத்துங்க சோழனுலா இவ்வாறு இவன் செய்த திருப்பணிகளை விரித்துப்பாடுகிறது. இராசராசசோழனுலாவும் இக்கருத்துக்களையே சுருங்கப் பாடுகிறது. தக்கயாகப்பரணி தில்லைத் திருமன்றின் முன்றிலில் கிடந்த கருங்கடலை (-திருமாலைப்பண்டு போலவே கடலிற் புகுமாறு அவ்விடத்தினின்றும் பெயர்த்து எறிந்து திருப்பணி விரிவுறச் செய்யுமாறு மன்றில் இடம் கண்ட திறத்தைச் சற்றே விளங்கப் போற்றுகிறது.

    நம் குலோத்துங்கன் பெயர்த்தெறிந்த திருமால் மூர்த்தம் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப்பல்லவமன்னனால் நிறுவப்பெற்றது என்ப. சோழமன்னர் சைவப் பெரும்பற்றுடையராயினும் சமயப்பொறை மிக்கிருந்தமைக்கு, முதற்குலோத்துங்கன் விஷ்ணுவர்த்தனன் என ஒருபெயர் புனைந்திருந்தமையும், இராசமன்னார் கோயிலில் (தஞ்சைமாவட்டம்) தன் பெயரால் குலோத்துங்க சோழ விண்ணகரம் ஒன்று திருமாலுக்கு எடுத்தமையும் போல்வன தக்க சான்று பகர்வன. அம்பலவாணனிடத்துப் பேரீடுபாடுடைமையால், தில்லைமன்றில் விரிவான திருப்பணிக்கு இடங்காண வேண்டி இம்மன்னன் முயல்கையில், கோவிந்தராசர் பத்தராம் வைணவப் பெருமக்கள் பலர் அதற்கு இடையூறு செய்யப் புக்கமையால் மன்னன் திருமால் மூர்த்தத்தையே அவ்விடத்தினின்று பெயர்த்து, வழிபாட்டுக் குறை முதலிய ஏதம் நிகழாமலிருத்தற் பொருட்டுக் கடலில் எறிந்துவிட்டான் என்றே அமைதி காண்பர். எவ்வாறாயினும், பெருமன்னனது இச்சிறு செயல் அவனது புகழிற்குச் சற்றே களங்கம் விளைத்து விட்டமை துணிவு அன்றி கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் தமது முறுகிய சிவபத்தியால் குலோத்துங்கன் செயலை மிகைப்படுத்திவிட்டதாகக் கருதவும் இடனுண்டு.

    'கிருமிகண்ட சோழன் ' என வைணவ நூல்கள் இவனை இழித்துப் பெயர் புனையிலும், இவன் ஆட்சிக் காலத்தில் நாட்டில் எவ்வகைக் கொடுமையும் போர்வினையும் நிகழ்ந்தில. அமைதியில் சோழநாடு நலம் திளைத்த நற்காலங்களில் இவனாட்சிக் காலமும் ஒன்று. தந்தைக்குத் திறையிறுத்த சிற்றரசர்கள் இவனாட்சியிலும் பணிந்திருந்தனர். மேலைச்சளுக்கியர்பால் தந்தை கொண்ட வேங்கி நாடு இவனாட்சியிலும் தொடர்ந்து திறையிறுத்துவந்தது. இம்மன்னனுடைய கல்வெட்டுக்கள் ஆந்திர தேசப் பகுதியில் பலவாக உள்ளமை மேலதற்குச் சான்று கூறும்.

    'தில்லைக் கூத்தப்பிரான் திருவடித் தாமரை மலரிடை அருள் தேனை ஆரும் வண்டு போன்றவன்' என இவனது சைவப் பெரும்பற்றைத் திருவாரூர்க் கல்வெட்டொன்று புகழ்கிறது. அப்பர் சம்பந்தர் சுந்தரர் இம்மூவருடைய திருமேனிகளைத் திருவாரூர்க்கோயிலில் எழுந்தருளுவித்து நித்தல் விழா அணி நிகழ்த்த நிவந்தம் பல இவன் வழங்கியுள்ளமையும் அவ்வூர்க் கல்வெட்டொன்றால் போதருகிறது. இதனால் சைவசமயக்குரவர் மூவர் பாலும் இவனது முறுகிய ஈடுபாடு தேற்றம். இவ்வாற்றால் இறையருள் நிறைந்த நிறைமதிச் செல்வனாய் ஆட்சி நடத்திய இம்மன்னன் காலத்தில் மக்களும் பழிபாவம் நேராது கடவுட்கொள்கை சிறந்து அமைதியுற வாழ்ந்துவந்தனர் என்பதும் ஒருதலை.

    நம் பெருந்தகை தன் பாட்டனாகிய முதற்குலோத்துங்கனைப் போலவே அருங்கலை விநோதனாகத் திகழ்ந்தமை காண்கிறோம். தன் தந்தைக்கு ஆசிரியராக அமர்ந்த ஒட்டக்கூத்தர்பால் இவனும் தமிழ்க்கல்வி பயின்றான்; கவிபுனையும் ஆற்றலும் பெற்றான். இயற்றமிழில் மாத்திரமன்றி இசைத்தமிழிலும் இவனது தேர்ச்சியை 'நித்திய கீதப் பிரமோகன்' என்ற இவனது சிறப்புப் பெயர் சுட்டும். குதிரை நூலில் இவனது வல்லமையைத் ‘துரகவித்தியா விநோதன்' எனவும், வில் விச்சையில் இவனது ஆற்றலை 'வில்விநோதன்' எனவும், இவனைப்பற்றிய பிள்ளைத்தமிழில் பாடி மகிழ்கிறார் கூத்தர். இப்புலவர் பெருமான் பல சிறப்புப்பெயர்களால் தம் மன்னனைப் புகழ்கிறார். அவற்றுட் சில வருமாறு: வீரியன், வானவன், மீனவன், வீரகண்டீரவன், விமலன், இராசாதிராசன், சூரியன், வியாகரன், நேரியன், சயதரன், குணபரன், நித்யகல்யாண பூஷணன், ஆரியன் எனக் காண்க. நாட்டில் போர் நிகழ வாய்ப்பின்றி அமைதி நிலவ ஆண்டுவந்த இம்மன்னர் பெருந்தகை, 'போர் எனில் புகலும் மறவன்' எனபதை வீரம்பற்றிய இவனுடைய சிறப்புப் பெயர் சிலவற்றில் காண்க.

    தமிழ்க்கல்வி மிக்க இம்மன்னன் தமிழ்ப்புலவரைப் பாணரோடு ஆதரித்தமை கற்றவர் குடிபுடை சூழ் கற்பக இள அனமே' (பிள்ளைத்தமிழ்-80 ) 'கோடியர் புலவர் விறலியர் பாணர், குலகிரிகளும் குறை நிறையத் - தேடிய நிதியம் குலோத்துங்க சோழன் உருட்டுக சிறுதேரே' (பிள்ளைத்தமிழ்-103) பெரும்புலவரும் அருங்கவிஞரும் - நரம்புறு நல் லிசைப்பாணரும்--இரவலரா யிடும்பை நீங்கிப் - புரவலராய்ப் புகழ்படைப்ப' (குலோத், மெய்கீர்த்தி) என்னும் தொடர்களால் வலியுறும். இளமைதொட்டே இவனுக்கு நல்லாசிரியராக அமர்ந்து - இவனது அவைக்களத்தைச் சிறப்பித்த கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் இவன் மீது உலா ஒன்றும், பிள்ளைத்தமிழ் ஒன்றும் பாடிப் போற்றியுள்ளமை இவனது அரும்பெறற் பேறு எனலாம். வடமொழிப் புலவர் தண்டி இயற்றிய காவியாதர்சம் என்ற வடமொழி அணிநூலைத் தமிழில் ஆக்கித்தந்த தமிழ்த் தண்டியாசிரியர் இவன் காலத்தவரே என்று கருத இடனுண்டு.

    இம்மன்னனது கோநகராக விளங்கியது கங்காபுரி எனவும், கங்காபுரம் எனவும் பாடப்பெறும் கங்கைகொண்டசோழபுரமேயாகும். தான் தெய்வத் திருப்பணியாற்றிய திருத்தலமாகிய தில்லையும் இவன் விரும்பியெழுந்தருளும் நகரமாக விருந்தமை தெளிவு. இவன் பிறப்பித்த ஆணைகள் கீழைப்பழுவூர், பிரமதேசம், ஏமப்பேரூர் என்ற ஊர்களினின்று வரையப்பட்டனவாகக் காணுதலின், அவ்வூர்களில் அவ்வப்போது சில காலம் இவன் தங்கியிருப்பானாதல் வேண்டும் எனலாம்.

    கல்வெட்டுக்களின் வாயிலாக. இவனுக்கு வழங்கியவாக அறியப்படும் சிறப்புப்பெயர்கள் அநபாயன், எதிரிலாப் பெருமாள், கலி கடிந்த சோழன், பெரிய பெருமாள் என்பன; திருநீற்றுச்சோழன், அபயன் என்பனவும் காணப்படுகின்றன. அவை முதற்குலோத்துங்கனுக்கு வழங்கியவை உபசார வழக்கால் இவனுக்கும் எய்தின என்க.

    திருமழபாடிக் கல்வெட்டொன்றினின்று இம்மன்னர் பிரானுடைய மனைவியர் தியாகவல்லி, முக்கோக்கிழானடி என்னும் இருவர் என்பது புலனாகிறது. பட்டத்தரசியாகிய தியாகவல்லிக்குப் புவன முழுதுடையாள் என்பது ஒரு சிறப்புப்பெயர். முக்கோக்கிழானடி சேதி நாட்டு மன்னன் ஒருவனுடைய மகளாதல் வேண்டும் என்பது, 'பெருங்கற்பின் மலாடர் குலமணி விளக்குத் - திருந்து நித்தில மணிமுறுவல் தெரிவை - முக்கோக்கிழானடிகளும்' என்ற இவனது மெய்க்கீர்த்தித் தொடரால் தெளிவுறுகிறது.

    இவ்வேந்தன் கி.பி. 1136-இல் தன் மைந்தன் இராசராசனுக்கு இளவரசுப் பட்டம் புனைந்தான்; கி. பி. 1150-இல் அம்பலவாணர் தம் அடியிணையடைந்தான்.

    இவனது ஆட்சிக் காலத்தில் அரசியல் அதிகாரிகளாகவும் சிற்றரசராகவும் இருந்து பணியாற்றிய பெருமக்கள் சிலர் கல்வெட்டுக்களில் பெயர் சுட்டப்பெறுகின்றனர்: அம்மையப்பன் கண்ணுடைப்பெருமாளான விக்கிரம சோழ சம்புவராயன் என்பான் பல்லவர் மரபினைச் சார்ந்த செங்கேணி என்னும் குடிப் பெயரினன்; தொண்டை மண்டலத்தே இன்றைய வட ஆர்க்காடு தென்னார்க்காடு மாவட்டப்பகுதிகளை இவன் ஆண்டு வந்தவன். ஏழிசைமோகன் ஆட்கொள்ளியான குலோத்துங்க சோழ காடவராயன் என்பானும் பல்லவமரபினன்; இன்றைய தென்னார்க்காடு மாவட்டத்தில் திருமாணிகுழிச் சூழலை இவன் ஆண்டு வந்தான். இராசராச மகதை நாடாழ்வான் என்பான் மகத நாட்டு வாணர் மரபினன்; இவனும் இன்றைய தென்னார்க்காடு மாவட்டப் பகுதியில் நாடுகாவல் புரிந்துவந்தான். விக்கிரமசோழ சேதிராயன் என்பான். திருக்கோவலூரைச் சார்ந்த நிலப்பரப்பைக் காவல் பூண்டு வந்தவன். குலோத்துங்க சோழ யாதவராயன் என்பான் யதுகுலச் சிற்றரசன்; காளத்தியைச் சூழ்ந்த நிலப்பரப்பினைக் காவல் மேற்கொண்டிருந்தவன். சீயகங்கன் என்பான் கங்கர் மரபினன்; மைசூர்த்தேயத்தே கங்கநாட்டுப் பகுதியை யாண்டுவந்த இச்சிற்றரசன் நன்னூல் ஆசிரியர் பவணந்தியை ஆதரித்த சீயகங்கனுக்குப் பல தலைமுறை முன்னோன் என்க. அதிகமான் என்பான், கொங்கு நாட்டுத் தகடூரை ஆட்சி புரிந்து வந்த அதிகமான் மரபினன். மதுராந்தக பொத்தப்பிச் சோழ சித்தரசன், கடப்பை மாவட்டத்துப் பொத்தப்பிச் சூழலையாண்டுவந்த குறுநில மன்னன். மற்று, ஆந்திரதேயத்தில் நம் மன்னனுக்குத் திறையிறுத்து வந்த குறு நிலமன்னர்கள் மகா மண்டலேசுவரன் பல்லயசோடமகாராசன் முதலாகச் சிலர் கல்லெழுத்துக்களில் இடம் பெற்றுள்ளனர்.

    ‘பாடற்பெரும் பரணி தேடற்கருங்கவி கவிச்சக்ரவர்த்தி பரவச் செஞ்சே வகஞ் செய்த சோழன் திருப்பெயர செங்கீரை யாடியருளே' எனவும், ‘கோமன்னன் புவனதரன் விக்கிர சோழன் குலமதலை குலோத்துங்க சோழனைக் காத்தருள்க' எனவும் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் செங்கீரைப் பருவத்தும் காப்புப்பருவத்தும் முறையே வருதலால், இப்பிள்ளைத்தமிழ் நூலைக் கூத்தர் பாடக் கொண்டான் கலிங்கத்துப் பரணி கொண்ட முதற்குலோத்துங்கனாகிய அபயன் பெயரனும், விக்கிரம சோழன் புதல்வனுமாகிய இரண்டாம் குலோத்துங்கசோழனே என்பது தெளிவாம்.

    -------------------
    குலோத்துங்கன் மரபு


    இரண்டாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகள்
      1. பூமன்னு பதுமம் பூத்தவே ழுலகுந்
      தாமுன்செய் தவத்தாற் பரிதிவழித் தோன்றி
      நெடுமா லிவனெனச் சுடர்முடி சூடி
      இருநில மகளை யுரிமையிற் புணர்ந்து
      திருமகள் பணைமுலைச் செஞ்சாந் தணைந்து
      பருமணி மார்வம் பனிவரை நிகர்ப்பச்
      சயமகள் செழுந்தண் சந்தனச் சுவட்டாற்
      புயமிரு கயிலைப் பொருப்பெனத் தோன்ற
      நாமகள் தானுமெங் கோமகன் செவ்வாய்ப்
      பவளச் சேயொளி படைத்தன னியானெனத்
      தவள நன்னிறந் தனித்துடை யோரெனப்
      புகழ்மகள் சிந்தை மகிழு நாளிலும்
      ஒருகுடை நிலவும் பொருபடைத் திகிரி
      வெயிலுங் கருங்கலி யிருளினைத் துரப்ப
      நீடுபல் லூழி யேழ்கடற் புறத்தினுங்
      கோடாச் செந்தனிக் கோலினி துலாவ
      மீனமுஞ் சிலையுஞ் சிதைத்து வானுயர்
      பொன்னெடு மேருவிற் புலிவீற் றிருப்ப
      உம்ப ரியானை யோரெட் டினுக்குந்
      தம்ப மென்னத் தனித்தனி திசைதொறும்
      விசயத் தம்ப நிற்பப் பசிபகை
      யானது தீங்கு நீங்க
      மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க
      மாதவர் தவமு மங்கையர் கற்பும்
      ஆதி யந்தண ராகுதிக் கனலு
      மீதெழு கொண்டல் வீசுதண் புனலு
      மேதினி வளருஞ் சாதி யொழுக்கமும்
      நீதி யறமும் பிறழாது நிகழப்
      பாவும் பழனப் பரப்பும் பணைக்கை
      மாவு மல்லது வன்றளைப் படுதல்
      கனவிலுங் காண்டற் கரிதென வருந்திப்
      புடையினும் பல்வேறு புள்ளினு மல்லது
      சிறையெனப் படுத லின்றி நிறைபெருஞ்
      செல்வமோ டவனி வாழப் பல்லவர்
      தெலுங்கர் மாளுவர் கலிங்கர் கோசலர்
      கன்னடர் கடாரர் தென்னர் சேரலர்
      சிங்களர் கொங்கணர் சேதியர் திரிகர்த்தர்
      வங்க ரங்கர் வத்தவர் மத்திரர்
      கங்கர் சோனகர் கைகயர் சீனரென்
      றறைகழல் வேந்தரு மெல்லா வரைசரும்
      முறைமையில் வருந்தித் திறைகொணர்ந் திறைஞ்ச
      அம்பொன் மலர்க்கொடி செம்பியன் கிழானடி
      ஒருமருங் குடனமர்ந் திருப்ப வருள்புரி
      சிமயப் பொற்கொடி யிமயப் பாவையுஞ்
      சிவனும் போலப் புவனமுழு துடையா
      ளிவன்திரு மணிமார்வத்
      துலகமுழு துடையா ளெனவுட னிருப்பச்
      செம்பொன் வீர சிம்மா சனத்துப்
      புவனமுழு துடையாளொடும் விற்றிருந் தருளிய
      இராசகேசரி வன்மரான திரிபுவன சக்ரவர்த்திகள்
      குலேத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு
    --------
      2. பூமன்னு பாவை காமுற்று முயங்க
      இருநிலக் கிழத்தியைத் திருமணம் புணர்ந்து
      கலையின் செல்வி தலைமை யோங்கப்
      போர்மகள் காப்பச் சீர்மகள் போற்ற
      மரகதப் புரவி யிரவிகுலம் விளங்கப்
      பாற்கடற் றெய்வப் பள்ளி நீங்கி
      நாற்கடல் வட்ட நாடொறுந் தாங்கி
      எண்டிசை யானை தண்டுவிடை நிற்பக்
      காவற் றேவர்க ளேவல் கேட்பக்
      கலிப்பகை யோட்டிப் புலிக்கொடி யெடுத்துத்
      தென்னவர் கேரளர் சிங்களர் தெலுங்கர்
      கன்னட ரிலாடர் கலிங்கர்முத லாகக்
      கொற்றவர் வந்து குடிமை செய்ய
      ஒற்றை வெண்குடை யுலகுதனி கவிப்ப
      ஊழிபல கோடி யாழி நடாத்திச்
      செம்பொன் வீர சிம்மா சனத்துத்
      திரிபுவன முடையாளொடும் வீற்றிருந் தருளிய
      கோவிராசகேசரி வன்மரான திரிபுவன சக்ரவர்த்திகள்
      ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு -……..
      ---------------
source : 
ஒட்டக்கூத்தர் இயற்றிய குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்

தேமொழி

unread,
Sep 6, 2021, 1:59:44 AM9/6/21
to மின்தமிழ்
மாயிருண்டகம் கோத்தா கெலாங்கியில் இராஜேந்திர சோழன்  
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
தமிழ் மலர் - 05.09.2021

தமிழகக் கோயில்களில் கிடைத்த இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவை. சோழப் பேரரசர்களின் மெய்க்கீர்த்திச் சான்றுகளைக் கொண்டுதான் சோழர் காலத்துப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்த முடிகிறது. 

மெய்க்கீர்த்திகள் என்றால் என்ன? தெரிந்து கொள்வோம். ஓர் அரசரைப் பற்றிய கல்வெட்டுகளில் அல்லது செப்பேடுகளில் செதுக்கப் பட்ட செய்திகள் தான் மெய்க்கீர்த்திகள். பெரும்பாலும் அந்த அரசரின் அருமைப் பெருமைகளைச் சொல்லும் வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். 

அதாவது ஓர் அரசரின் ஆட்சிக் காலத்தில் அவருடைய புகழ்ச் செயல்களையும்; புகழ்ச் சாதனைகளையும் கூறும் கல்வெட்டுகளைத் தான் மெய்க்கீர்த்திகள் (Meikeerththi - True Glory or Prasaththi) என்று அழைக்கிறார்கள். அவற்றைப் புகழ்மாலைகள் என்றுகூட சொல்லலாம்.

இன்னும் ஒரு விசயம். கல்வெட்டுகளைச் செதுக்கியவர்கள், மன்னர்களின் பாராட்டைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி அள்ளி விடுவதும் உண்டு. எடுத்துக்காட்டாக பாண்டியர்களின் ஒரு கல்வெட்டு. அதில் ஒரு வாசகம். 

இராமாயணம் நடந்த காலத்தில் ஒரு பாண்டிய மன்னர் ஆட்சி புரிந்தார். அவர்தான் இராமனுக்கும் இராவணனுக்கும் இடையில் சமரசம் செய்து வைத்தார் என்று சொல்கிறது. இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். 

அப்படிப்பட்ட புகழேந்திகள் இந்தக் காலத்தில் மட்டும் அல்ல. எல்லா காலத்திலும் வாழ்ந்து இருக்கிறார்கள். ஆக அந்த மாதிரி அள்ளிவிடும் கல்வெட்டுகளும் இருக்கவே செய்கின்றன. 

ஒரு கல்வெட்டின் உண்மையை உறுதிப்படுத்த மற்ற மற்ற கல்வெட்டுகளையும் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும்.

இல்லாத ஒன்றைப் புகழ்ந்து புகழுரைகள் செய்வதைத் தவிர்க்கும் வழக்கம், முதலாம் இராஜராஜன் காலத்தில் தோன்றியது. இது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவு. 

சோழர்களின் மெய்க்கீர்த்திகள் அகவல் பாவில் அமைந்து உள்ளன. முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்து எட்டாம் ஆண்டுக் கல்வெட்டுகளில் இருந்து (கி.பி. 993), அவை காணப் படுகின்றன. 

இந்த மெய்க்கீர்த்திகளைக் கொண்டு எந்த ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கங்கை நோக்கி இராஜேந்திரன் எடுத்த படையெடுப்புகளைச் சொல்கின்றன. வட நாட்டு தர்மபாலா மன்னரை வெற்றி கொண்ட செய்தியைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் காணலாம். 

இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் எல்லாவற்றையும் நூல் வடிவில் கோர்த்துத் தொகுப்புகளாக வைத்து இருக்கிறார்கள். அந்த நூல் கோர்வையின் பெயர் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்திகள். 

இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திச் செப்பேடுகளின் பெயர்கள்:

1. திருவாலங்காட்டுச் செப்பேடு

2. கரந்தைச் செப்பேடு

3. திருக்களர் செப்பேடு

4. எசாலம் செப்பேடு

இதில் ஆனைமங்கலச் செப்பேடுகள் (Leiden Copper plates), நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ளன. அவை சோழ வரலாறு குறித்த முக்கியமான ஆவணங்கள். 

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி தமிழகத் தொல்பொருள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சருக்கு இந்த லெய்டன் செப்பேடுகள் மீட்கப்பட வேண்டும் எனத் தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு கடிதம் அனுப்பி இருந்தது. 

விரைவில் மீட்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. முயற்சி செய்து வரும் தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர்  டாக்டர் சுபாஷிணிக்கு வாழ்த்துகள்.

இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பட்டியலிடும் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி (Inscription of Rajendra Chola - 1, No: 66). அதில் ஒரு பகுதியில் பின்வருமாறு செதுக்கப்பட்டு உள்ளது.

1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகள்.

1. ஸ்ரீ விஜயம் (சுமத்திரா) - Sri Vijaya
2. பண்ணை (சுமத்திரா) - Pannai
3. மலையூர் (சுமத்திரா) - Malaiyur
4. மாயிருண்டகம் (ஜொகூர்) - Maa-Yirudingam
5. இலங்காசுகம் (வட மலாயா) - Ilangaasokam
6. மாபப் பாளம் (பேராக்) - Maa-Pappaalam
7. மேவிலி பங்கம் (பங்கா தீவு) - Mevili-Bangkam
8. வலைப்பந்தூர் (கிளந்தான்) - Valaipanthur
9. இலாமுரி தேசம் (ஆச்சே) - Ilaamurithesam
10. தலை தக்கோலம் தக்கூவாபா (தாய்லாந்து) - Takuapa Thailand
11. மாதமாலிங்கம் (தாம்பரலிங்கா மலாயா  - தாய்லாந்து) - Maa-Thamaalingam
12. மா நக்காவரம் (நிக்கோபார்) - Maa-Nakkavaaram
13. கடாரம் - Kadaaram

மெய்கீர்த்தியில் பொறிக்கப்பட்டவை அனைத்தும் தமிழ் எழுத்துகள். 

அந்த எழுத்துகளில் கிரந்த எழுத்துகளும் உள்ளன. ஜ, ஸ, ஷ, ஹ போன்ற கிரந்த எழுத்துகள், சோழர்களில் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணப்படுகின்றன. 

இப்போது உள்ள தமிழ்ப் பிரியர்கள் அந்த எழுத்துகைத் தவிர்த்து வருகின்றனர். நல்லது. 

திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் பற்றிய வாசகங்களில் ஒரு பகுதி:

அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி
சங்கிராம விஜய துங்க வர்மன்
ஆகிய கடாரத்து அரசனை வாகயம்
பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து 
உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகநகர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சா தரதோ ரணமும் முத்தொளிர்
புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்
நிறை சீர் விஜயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யூரெயில் தொன் மலையூரும்
ஆழ்கடல் அகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவல் புரிசை மேவிலிம் பங்கமும்
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்
தேனக் கலர்பொழில் மாநக்க வாரமும்
தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட
கோப் பரகேசரி பன்மரான
உடயார் ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு

(Inscription of Rajendra Chola - 1, South Indian Inscription Vol 1, Inscription No: 66, page 98.)


ஸ்ரீ விஜயத்தின் மீது படையெடுப்பதற்கு முன்னர் இராஜேந்திர சோழனின் கடல்படை, முதலில் நக்காவரம் எனும் நிக்கோபார் தீவில் முகாமிட்டு உள்ளது. 

இந்தத் தீவில் சோழப் படைகள் மூன்று அல்லது நான்கு பிரிவுகளாகப் பிரிந்து சென்று தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுப்புகள் நடத்தினார்கள் என்பது வரலாற்று அறிஞர்கள் சிலரின் கருத்து. 

மேலும் ஒரு சாரார் இராஜேந்திர சோழன் படையெடுப்புகளில் கலந்து கொள்ளவே இல்லை. அவர் உளநாட்டுப் போரில் கவனம் செலுத்தி வந்தார் என்பது அறிஞர்கள் சிலரின் கருத்து. இதைப் பற்றி விவரமாக அடுத்த கட்டுரைகளில் பார்ப்போம். 

நிக்கோபார் தீவில் படையெடுப்பு செய்த பின்னர், சோழரின் படைகள், மற்ற மற்ற இடங்களின் மீது படை எடுத்து இருக்கிறார்கள். அவற்றில் ஓர் இடம் மாயிருண்டகம் எனும் கோத்தா கெலாங்கி.

மாயிருண்டகம் எனும் சொல்லைப் பிரித்துப் பாருங்கள். மா + இருண்டகம் என இரு சொற்கள் பிரிந்து வருவதைப் பார்க்கலாம். ’மா’ என்றால் ’பெரிய’ என்று பொருள். ’இருண்டகம்’ என்றால் ’இருண்டு கிடக்கும் இடம்’ என்று பொருள். 

(Maayirudingam - Johore kingdom of South Malaysia which was the "Maayirudingam" of Rajendra Chola's Meikeerththi. that existed in the southern most end of then Malaysia, a region without much human habitation and prominance in the early 11th century.)

கி.பி. 950-ஆம் ஆண்டுகளில் மாயிருண்டகத்தில் மாபெரும் கோட்டை இருந்து இருக்கிறது. கரும் கற்பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட கோட்டை. 

தொலைதூரத்தில் இருந்து பார்க்கும் போது கருமையாகக் காட்சி அளித்து இருக்கின்றது. அதை வைத்துத் தான் அந்த இடத்திற்கு மாயிருண்டகம் எனும் பெயர் வந்து இருக்கலாம்.

கோத்தா கெலாங்கியை லெங்குய் என்று சீன நாட்டவர் அழைத்து இருக்கிறார்கள். இராஜேந்திர சோழன் காலத்திற்கு முன்னரே; பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே; சீன நாட்டு வணிகர்கள் தென்னிந்தியாவில் வணிகம் செய்யப் போய் இருக்கிறார்கள்.

அப்படிப் போகும் வழியில் கோத்தா கெலாங்கியைப் பார்த்து ’லெங்குய்’ என பெயர் வைத்து இருக்கிறார்கள். இப்போது அங்கே ’லிங்கி’ எனும் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் பெயர் தான் ’லெங்குய்’ என்று மருவி இருக்கலாம்.

லெங்குய் எனும் பெயர்தான் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளிலும் இடம் பெற்று உள்ளன. சீன நாட்டவர் பயன்படுத்திய அதே லெங்குய் எனும் பெயரையே மெய்க்கீர்த்திகளிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

Maayirudingam a big city in South Malaya with a fortress of blackstone (granite) known as 'Glang Gui' (Lenggui in corrupted form). The kingdom of Maayirudingam at that time was ruled by the king Chulaamanivarman.

மாயிருண்டகத்தைப் பற்றி மெய்க்கீர்த்திகள் என்ன சொல்கின்றன. அதையும் பார்ப்போம். 

மாயிருண்டக அரசு. அதைச் சுற்றிலும் ஆழ்க் கடல்கள். நூற்றுக் கணக்கான வணிகக் கப்பல்கள். பச்சைக் காடுகள் மேவிய தீபகற்பத்தின் தென் பகுதியில் மாயிருண்டக அரசு மையம் கொண்டு இருந்தது.

இந்தக் கருத்தை ஜொகூர் தமிழர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் அவர்களும் உறுதியாகச் சொல்கிறார். ஏன் என்றால் இவர் கடந்த பல ஆண்டுகளாக கோத்தா கெலாங்கியைப் பற்றி ஆய்வுகள் செய்து வருகிறார். 

பல்வகையான வரலாற்றுச் சான்றுகளைத் தொகுத்து வைத்துள்ளார். அவரின் முயற்சிகளைப் பாராட்டினால் மட்டும் போதாது. தமிழ் நல்லுள்ளங்கள் அவருக்கு நிதியுதவி செய்ய வேண்டும். என்னுடைய தாழ்மையான கருத்து. வாழ்க கணேசனின் தமிழினச் சேவை. சரி.
 
மாயிருண்டகத்தின் தலைநகரம் லெங்குய். கருங்கற்களால் ஆன பெரிய ஒரு கோட்டை தலைநகரத்தைப் பாதுகாத்தது. அந்த நகரத்தின் வலது புறத்தில் ஒரு பெரிய ஆறு.

(நீண்ட கட்டுரை. வலைத்தளத்தில் பதிவாகி உள்ளது)
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்) 
05.09.2021

சான்றுகள்:
1. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula.

2. Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia by Hermann Kulke,K Kesavapany,Vijay Sakhuja

3. Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen


5. Inscription of Virarajendra Chola at Bahawathi Amman shrine at Agatheseswarem temple in Kanyakumari district, Tamil Nadu, India. Travancore Archeological Series vol 111, Part 1, No 41

#whatsappshare
Reply all
Reply to author
Forward
0 new messages