|
ஓம்.
ஞானியார் அடிகள்.
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகே திருநாகேச்சரம் என்ற ஊரில் வீரசைவர் மரபில் தோன்றியவர் ஞானியார் அடிகள்.
இயற்பெயர்: பழநி
அவரது தந்தையார்: திரு அண்ணாமலை.
தாயார்: திருமதி பார்வதி அம்மையார்.
பிறந்த நாள்:17-05-1873.
திருக்கோவலூர் மடத்தில் துறவு மேற்கொண்ட
நாள்:20-11-1889.
தமிழுக்கும் சைவ சமயத்திற்கும் பெரும் தொண்டாற்றியவர்.
மதுரைத் தமிழ்சங்கம் தோன்றுவதற்கு முதன்மைக் காரணமாக அமைந்ததவர்.
புகழுடம்பு எய்திய நாள்:01-02-1942.
அன்னாரைப் பற்றிய தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களின் சொற்சித்திரம்:
முருகன் சேவடி வருடி யுருகும் ஈர நெஞ்சும், அவன் புகழ் பேச இனிக்கும் நன்னாவும், தண்மை பொழியும் செவ்விய நோக்கும், வெண்ணீறு துதையும் நெற்றியும், மாணிக்கக் குழை பிறங்குஞ் செவியும், பொன்னொளிரும் மணிமார்பும், கருமைக் கதிர் விரிக்கும் திருமேனியும், ‘சண்முகா!- சண்முகா!’ என்று (திரு)நீறளிக்கும் நீண்ட கையுங் கொண்ட அடிகளின் திருவோலக்கப் பொலிவு, என்னுள்ளத்தில் ஓவியமெனப் படிந்து நிற்கிறது. அஃது எவர் உள்ளத்தையும் கவரும்; எவர்க்கும் எளிதில் இன்பூட்டும்.
’ஆறுமுக நாவலரை யான் கண்டதில்லை. அவரது நாவன்மையைப் பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இளமையில் யான் கண்ட நாவலர் கதிரைவேற் பிள்ளையே. ஞானியார் சுவாமிகள் பேச்சைக் கேட்ட பின்னைத் தமிழ்நாட்டில் மற்றுமொரு நாவலர் இருத்தலைக் கண்டேன். தமிழ் நாட்டிலும் கிளாட்ஸன்கள், சுரேந்திரர்கள் இருக்கிறார்கள் என்று என் நெஞ்சம் எண்ணியது.
சுவாமிகளின் பேச்சுத் திறனை எதற்கு ஒப்பிடுவது? கடல் மடைத் திறப்புக்கா? வெண்கலக் கோட்டையில் அரசுவா புகுதலுக்கா? பெரும் புயலுக்கா? ஓயா மழைக்கா? எதற்கு எதற்கு ஒப்பிடுவது?’
’மாணாக்கருக்குப் பாடஞ்சொல்லும் போதும், சொற்பொழிவு நிகழ்த்தும் போதும் தொல்காப்பியனாராகவும், நக்கீரராகவும், திருவள்ளுவராகவும், இளங்கோ அடிகளாராகவும், கச்சியப்பராகவும், கம்பராகவும், சேக்கிழாராகவும், வியாசராகவும், நீலகண்டராகவும், சிவஞான முனிவராகவும், பிறராகவும் முறை முறையே விளங்கி விளங்கி, இலக்கிய இலக்கணச் சாத்திர நுட்பங்களை வெளியிடுவதைக் கேட்டுக் கேட்டு புலவரானோர் பலர். பழம் புலவர் பலரும் ஞானியார் ஒருவரிடம் விளங்குதல் வியப்பன்றோ?
தமிழ்நாட்டில் எத்துணையோ மடங்கள் உள்ளன. அவை என்னை ஈர்த்தனவோ? இல்லை. அம் மடங்களில் ஒன்றாகிய ஞானியார் மடம் மட்டும் என்னை ஈர்க்குமோ? பின்னை, என்னை ஈர்த்தது எது? ஞானியார் சுவாமிகளின் பரந்த கலையொளி.
திருப்பாதிரிப் புலியூரில் வீற்றிருந்து அடியவர்க்கருள் புரியும் கோவலடிகள். கருமை பூத்த ஒரு பொறுமை மலை. அம்மலை உச்சியில் மூளையில், கலை மேகங்கள் பொழிந்த அறிவு மழை நீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகம் கொண்டு எழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடு இல்லாச் சொற்றொடர் அருவியாக இழிந்து, பலதிறச் சுவைநுட்பப் பெருக்காய்ப் பரவிப் பரந்து, அருள் அலைகொழித்துக் கொழித்து ஓடும்.
ஞானியார் சுவாமிகள் பேச்சால் விளைந்த நலன் அளப்பரிது.யான் இளமை தொட்டு ஞானியார் சுவாமிகளை வணங்கி வந்தேன். ஒருவரை ஒருவர் வணங்கக் கூடாததென்று சிலர் பேசுவர். அவருள் ஒருவர், ‘நீங்கள் ஏன் ஞானியாரைமட்டும் வணங்குகிறீர்?’ என்று கேட்டார். அதற்கு, ‘ஞானியாரை வணங்கும் பழக்கம் எனக்கு இன்று ஏர்பட்டதன்று. அஃது ஏற்பட்டு நீண்ட காலமாயிற்று. அதை வலித்து நிறுத்தப் புகுவது ஆணவமாகும்’ என்று பதிலிறுத்தேன்.’
இவ்வாறு ஞானியார் அடிகளைப் பற்றி திரு.வி.க பெரிதும் புகழ்ந்து மதித்தார்.
| |||||
|
|

இதுவல்லவோ இனிய தமிழ்.
ஞானியார் அடிகள் மிகவும் புரட்சிகரமாக செயல்பட்டவர். தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களால் பல இடங்களில் போற்றப்பட்டவர்.
இன்னம்பூரான்