பொங்கல் கொண்டாடப் பிரச்சாரம் செய்த பெரியார்! -- நா.முத்துநிலவன்

20 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 5, 2026, 1:20:38 PM (2 days ago) Jan 5
to மின்தமிழ்
நன்றி: உண்மை இதழ் - https://unmai.in/
வளரும் கவிதை  -  நா.முத்துநிலவன் வலைப்பக்கம்

உண்மை இதழில் எனது கட்டுரை - பெரியாரும் பொங்கலும் . . .

பொங்கல் விழா என்றும், தமிழர் திருநாள் என்றும் இப்போது உலகத் தமிழர்கள் எல்லாரும் உவந்து கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளை, தந்தை பெரியார்தான் தமிழர்களிடையே பிரச்சாரம் செய்து,  கொண்டாடத் தூண்டினார் இது பலருக்கு வியப்பாகவும் சிலருக்கு எரிச்சலாகவும்தான் இருக்கும். 

சரி, ஏன் அப்படிச் செய்தார் என்றாவது தெரியுமா? இதுபற்றி,  நான் எழுதிய கட்டுரை இன்று வந்த 'உண்மை' ஜனவரி-01 -15 இதழில் வந்திருக்கிறது. நண்பர்களைப் படித்துப் பார்க்க வேண்டுவதோடு;

நேற்று திருச்சியில் நடந்த தமுஎகச - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலச் செயற்குழுவில், ''தமிழர் திருநாளாக உலகத் தமிழர்கள் எல்லாரும் உவந்து கொண்டாடும் பொங்கல் விழா'வை, ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் கலைக் கழகம் (யுனெஸ்கோ - United Nations Educational Scientific and Cultural Organisation) ஏற்று, அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு" ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது என்னும் உவப்பான செய்தியையும் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு மகிழ்கிறேன்.  சரி இனி நான் எழுதிய கட்டுரை.

-----------------------------------------------------------------------  

பொங்கல் கொண்டாடப்  பிரச்சாரம் செய்த பெரியார்!                                

-- நா.முத்துநிலவன் --


சாதாரண மக்கள், அவ்வப்போது எதையாவது கொண்டாட விரும்புவதும் கூடியிருந்து மகிழ்வதும் உலகம் முழுதும் உள்ளதுதானே? எந்திரங்கள் அல்லவே மனிதர்கள்? ஆகவேதான் எந்திர கதியான வாழ்க்கையில் தினமும் உழைத்துக் களைத்துப் போகும் மக்கள், அவ்வப்போது மாற்றத்தை, மகிழ்வை, ஓரிருநாள் கொண்டாட விரும்புவதும் உலக இயல்புதானே?

ஆண்டுதோறும் சிற்றூர்களில் கூட, ஏதாவதொரு திருவிழா நடத்துவது பகுதிக் கொண்டாட்டம் எனில், நாடுமுழுக்கக் கொண்டாடும் பண்டிகைகளை “கடன ஒடன வாங்கியாச்சும்” கொண்டாடுவதன் காரணமும் இதுதான்! ஆனால், இந்தப் புத்துணர்ச்சி தேடும் மனித இயல்பைப் புரிந்து கொண்ட பார்ப்பனியம், அதற்குள் புகுந்து கொண்டு செய்துவரும் அர்த்தமற்ற சடங்குகள், ஆசைகாட்டி அதில் காசு பார்ப்பது தான் அபத்தமானது, அநியாயமானது!, அறிவுக்கு ஒவ்வாத இந்தப் பண்பாட்டு நிகழ்வுகளுக்கான மாற்று இன்றி சமூக மாற்றமும் வெற்றிபெறாது என்பதை தந்தை  பெரியார் உணர்ந்திருந்தார்.

 அதைக் கொண்டாடாத பகுத்தறிவாளர்கள் என்ன செய்யலாம்? அறிவுக்கு ஒவ்வாத தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட விரும்பாதவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மாவட்ட – மாநில அளவில் - வேறு ஏதாவது ஒரு விழாவை எடுத்து நடத்தலாம்தான். ஆனால், அவ்வளவு அறிவு முதிர்ச்சிபெறாத மக்கள் கொண்டாடவும் ஒரு தமிழர் விழாவாவது வேண்டுமே பார்ப்பனர்களின் அறிவுக்கு ஒவ்வாத தீபாவளி, சரஸ்வதி பூஜைக்கும் மாற்றாக அர்த்தம் கெட்ட ‘சித்திரையில் தொடங்கும் தமிழ்ப் புத்தாண்டு’க்கும் மாற்றாக, ‘தமிழர் விரும்பிக் கொண்டாடும் அர்த்தமுள்ள விழா ஒன்று வேண்டுமே’ எனத் தந்தை பெரியார் சிந்தித்திருந்த வேளையில்தான்  ஒரு நல் வாய்ப்பு வந்தது.

தமிழ்நாட்டின் அறிஞர்கள் பலர் ஓரிடத்தில் கூடியிருந்த நிகழ்ச்சி. தந்தை பெரியார் உரையாற்றச் சென்றிருந்த வேளை, ஒரு வாய்ப்பு வந்தது. இது பற்றி எழுத்தாளர் பெருமாள் முருகன், தனது வலைப்பக்கத்தில் “பெரியார் ஏற்றுக்கொண்ட பொங்கல்” எனும் தலைப்பில் பின்வருமாறு எழுதுகிறார்:

“1921ஆம் ஆண்டு மறைமலையடிகள் தலைமை தாங்க, சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ‘தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு’ என்று தமிழறிஞர்கள் தீர்மானித்ததாகவும் திருவள்ளுவர் ஆண்டை முடிவு செய்ததாகவும் தெரிகிறது. பின்னர். 1937ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் திரு.வி.க. உள்ளிட்ட தமிழறிஞர்கள் ‘பொங்கலே தமிழர் திருநாள்’ என்றுரைக்கப் பெரியாரும் அதை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

1949ஆம் ஆண்டு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்த பெரியார், ‘மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக் குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே? அதற்கென்ன செய்வது? என்று கேட்ட காலத்தில், பொங்கல் பண்டிகையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டாடலாம் என்று சுயமரியாதை இயக்கம் விடை கூறிற்று. அக்கூற்றுக்கேற்ப இந்த 10ஆண்டில் பொங்கல், தமிழர்கள் இடையில் ஆண்டுக்காண்டு வளர்ந்து தீபாவளிப் பண்டிகைக்கு மேலாகத் தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாட ஆளாகி விட்டனர்’” என்று இந்தச் சரித்திரப் புகழ்பெற்ற நிகழ்வை எழுதுகிறார் எழுத்தாளர்பெருமாள் முருகன்.

இதை, அங்கிருந்த ‘பெரியார் ஏற்றுக் கொள்வாரோ, மாட்டாரோ’ என்று திரு வி.க. நினைத்ததற்கு மாறாக, பெரியார் அதை உடனே ஏற்றுக்கொண்டு, தமிழர் அனைவரும் தமிழர் திருநாளை, பொங்கலைக் கொண்டாட வேண்டும் என்று பேசியதை மிகுந்த மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். பெரியார்தான் இப்படி ஒரு வாய்ப்பு வராதா என்று காத்துக் கொண்டிருந்தாரே! அதை உடனே தனது உரைகளில் ஊரெல்லாம் போய்ப் பொங்கலைப் பிரச்சாரம் செய்தவர் பெரியார்!

-----------------------------------------------------------------------  

தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகளைக் கொண்டாடுவதை விட, இப்படித் தமிழ்த் திருநாள் (பொங்கல்) என்று, தமிழ்மக்கள் கூட்டுறவுக்கும் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்துக்கும், அனுகூலமாகத் திருநாள்களைப் பரப்ப வேண்டும் - குடிஅரசு -26-01-1946

-----------------------------------------------------------------------  

இவ்வாறு, மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் வேண்டும், அவ்விழா அறிவுப் பூர்வமானதாகவும் இருக்க வேண்டும் என்று சிந்தித்த பெரியார், தமிழரைக் கேட்டுக் கொண்ட - 1921முதல் 1949வரை - சில பத்தாண்டுகளாக நாடு முழுக்கத் தான் பேசிய கூட்டங்களில் எடுத்துச் சொல்லி, பொங்கல் விழாவை மகிழ்வோடு நடத்தச் சொல்லிப் பிரச்சாரம் செய்ததன் பயனாகவே இப்போது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம், பொங்கல்விழா தமிழர் திருநாளாக வள்ளுவர் விழாவாக நடந்து வருகிறது.

இதில் உள்ள இன்னொரு மனநிலை என்னவென்றால், இதை -– வழக்கமான பண்டிகைகளில் முதலிடம் பிடித்திருக்கும் -- வழிபாடுகளை நடத்தும்போது, ஏதோ குலசாமியைக் கும்பிடுவது போலக் கால்நடைகளை --குறிப்பாக மாடுகளை—கொண்டாடுவதுதான்!  ‘குலசாமி வழிபாடு’ என்பது தமிழ் வழக்கில் நெடுங்காலமாக இருப்பதைச் சங்க இலக்கியங்களே சொல்கின்றன!

திருக்குறளின் முதல் அதிகாரம் “கடவுள் வாழ்த்து” என்று இப்போது அறியப்பட்டாலும் அந்த அதிகாரப் பெயர் வள்ளுவர் வைத்தது அல்ல! பழைய உரையாசிரியர்கள் பத்துப் பேரின் ‘உரைக் கொத்து” இப்போதும் கிடைக்கிறது அதில், குறளில் ‘கடவுள்’ எனும் சொல் எங்குமே வரவில்லை! என்பதை பன்மொழி அறிஞர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களின் ‘அறியப்படாத தமிழ்மொழி’ நூலில் காண்க. ‘கடவுள் வாழ்த்து” எனும் தலைப்பு, குறள் தோன்றி ஆயிரம் ஆண்டுக் கழித்து, பின்னர்  உரையெழுத வந்த பரிமேலழகர் என்னும் பார்ப்பனர் வைத்த தலைப்பே ‘கடவுள் வாழ்த்து” என்பதாகும்! அவரது உரை முழுவதும் பார்ப்பனியக் கருத்துகள் ஊடுருவிக் கிடக்கும்! அதைத் தனி ஆய்வாகவே எழுத வேண்டும். திருக்குறளில் பெயர் சுட்டி எந்தக் கடவுள் பெயரும் இல்லை, ஆயினும் பாயிரத்தின் ஓர் அதிகாரமாக ‘நீத்தார் பெருமை’ வரும்! அது தமிழர் மரபில் ‘முன்னோர் வழிபாடு’ என, நெடுங் காலமாக இருப்பதுதான். இப்போது கூட வீட்டுச் சிறுவர்களுக்கு வேட்டி கட்டி விட்டு, ‘தாத்தாவக் கும்பிட்டுக்கடா’ என்பது பெருவாரியாக இருப்பதுதானே?

‘குலசாமி’ என்பது பெருந்தெய்வங்கள் அல்ல! ‘பணக்கார’ சாமிகளான திருப்பதி வேங்கடாசலபதியோ, தஞ்சாவூர் பிரகதீஸ்வரனோ, ஸ்ரீரங்கம் ரெங்கநாதனோ, சிதம்பரம் நடராஜனோ அல்ல! இவையெல்லாம் பின்னால் பார்ப்பனர்களால் கட்டமைக்கப் பட்ட பெருந்தெய்வ வழிபாட்டுக் கோவில்கள். இந்தக் கோவில்களில் உழைக்கும் மக்கள் உள்ளே கருவறைவரை போய் வழிபாடு நடத்த முடியாது! இடைத்தரகராக நிற்கும் பார்ப்பனர் ஒருவர், அர்ச்சனை செய்வதற்குக் கட்டிய தொகைக்கும் மேலாக, மக்கள் தரும் காணிக்கைப் பிச்சையை, பூசைப் பொருள்களோடு வாங்கிக் கொண்டு, கருவறைக்குள் போய், சாமி அருகில் நின்று கொண்டு, மக்களுக்குப் புரியாத மந்திரத்தைச் சொல்லி, ராசி நட்சத்திரத்தின் பேரில் அர்ச்சனை செய்வார்கள். (ராசி நட்சத்திரம் தெரியாதவர் எனில், ‘சாமி பேர்லயே அர்ச்சனை செஞ்சிடுங்க சாமி’ என்பார்கள்! இதுதான் அர்த்தமற்ற மக்களின் அப்பாவிப் பெருந்தன்மை!)

‘குலசாமி’ பெரும்பாலும் ஒரு சிறு கல்லாக மரத்தடியில் இருக்கும். அதற்கு பூசை நடத்தும் கிராமக் கோயில் பூசாரிகள் பார்ப்பனர் அல்லாதாராக இருப்பார்கள். அந்தச் சாமிக்கு தான் விரும்பும் பொருள்களோடு, ஆடு கோழி வெட்டிப் படைத்து, சாராயம், சுருட்டு முதலானவற்றையும் படைப்பதுண்டு!

மேற்சொன்ன பெருந்தெய்வ வழிபாடுகளைத்தான் பார்ப்பனர்கள் கைப் பற்றி புரியாத மந்திரம் சொல்லி, காசு தந்து வழிபடுபவனைத் புறம் தள்ளி, காணிக்கைத் தொகையை மட்டும் அள்ளிக் கொள்வார்கள். கவிஞர் நந்தலாலா சொல்வது போல, ‘உண்டியல்’ மட்டும்தான் தமிழில் இருக்கும்! மற்றவை எல்லாம் புரியாத வடமொழிதான்! உண்டியலை வட மொழியில் எழுதினால், ‘புரியாம காசு போடாம போயிட்டா..?’ அடடா! என்னா மெய்ஞ்ஞானம்!

       திருக்குறள் சொல்லும் அந்த நீத்தார் பெருமைக்கும் ஓர் அர்த்தமுண்டு! முன்னோரை மரியாதை செய்வது, அதன் தொடர்ச்சியே வழிபடுவது இன்றும் போரில் வீரமரணம் அடைந்தவருக்கு வைக்கப்படும் நடு கல்லே அனைவரின் மரியாதைக்கும் வழிபாட்டுக்கும் உரியதாக மாறுகிறது. இந்த நன்றியைத்தான் பொங்கல் விழாவில் தனது விவசாய வேலைக்குப் பயன்படும் மாடுகளை வழி பட்டு நன்றி செலுத்துவது. விவசாயத்திற்கு உதவும் சூரியனை வணங்கி வழி படுவது என்று நல்லதொரு பண்பாட்டின் அடையாளமாகப் பொங்கல் உள்ளது. அந்த நடுகல்லைப் பின்னர் மக்கள்  வழிபடத் தொடங்கினர் என்பதையும் நமது சங்க இலக்கியம் சொல்கிறது – ‘கல்லே பரவின் அல்லது நெல்லுகுத்துப் பரவுமோர் கடவுளும் இலவே!” –புறநானூறு -335. அந்தக் கல் எந்தக் கல் எனில், அதைத் திருக்குறளே சொல்கிறது – குறள் -771. வீரர் வழிபாட்டுக் கல்!

       ஆரிய சூழ்ச்சியிலிருந்து பொங்கலைக் காப்பாற்றிய பெரியார்: ஆரியப் பார்ப்பனர்களின் அர்த்தமற்ற கதைகளின்படி சொல்லப்படும் தமிழ் ஆண்டு அறுபது பெயர்களில் ஒன்று கூடத் தமிழ் இல்லை! மாறாக, வாழ்வியல் நூலாம் திருக்குறளைத் தந்த வள்ளுவர் நாளையே தமிழர் ஆண்டுத் தொடக்க நாளாகச் சொல்வதிலும் இந்த நீத்தார் பெருமை உண்டு! எனவே உழவுக்கும், வாழ்வியல் நூல் தந்த வள்ளுவருக்கும் சேர்த்தே அடுத்தடுத்த நாள்களில் தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் விழாக்கள் என்று நாடெங்கும் தனது உரை வழியாகப் பொங்கலையும் தமிழ்ப் புத்தாண்டையும் பிரச்சாரம் செய்த பெருமை நமது தந்தை பெரியாரையே சேரும்.

மகர சங்கராந்தியாக,  இந்திர விழாவாக பார்ப்பனர்கள் சொல்லிவந்த பொங்கலை, தமிழர் திருநாளாக, நன்றிகூறும் திருவிழாவாக, தமிழர் வேளாண் வாழ்வியல் சார்ந்த விழாவாக, அறுவடைத் திருநாளாக மாற்றி, மக்களிடம் பேசி, புராணப் புளுகு மூட்டைகளை மூட்டைகட்டி வீசி,  தமிழர் திருநாளாகப் பொங்கலை மாற்றித் தந்த பெருமை தந்தை பெரியாருக்கு என்றென்றும் உண்டு!

பொங்கட்டும் தமிழர் சுயமரியாதை! பொங்குக தமிழ்ப் பொங்கல்! பொங்கல் விழாவைத் தமிழர்க்கே உரியவிழாவாக மாற்றிய பெரியாரை வாழ்த்தி, ‘பொங்கலோ பொங்கல்’ என்று புது அரிசியில் புதுப் பானையில் புத்துணர்ச்சி பொங்கப் பொங்கலிடுவோம்! பொங்கட்டும் பெரியார் பெருமை!

சாதிச் சடங்குகள் அற்ற – மத வேற்றுமை இல்லாத – மதச்சார்பற்ற பொங்கலாக, மூடச் சடங்குள் இல்லாத தன்னைத் தமிழர் என்றுணரும் யாவரும் குடும்பத்துடன் கூடி, தமிழர் விழாவாக, இயற்கைக்கும், உழவருக்கும், கால் நடைகளுக்கும், நன்றி கூறும் தமிழ்விழா சிறக்கட்டும்!

-----------------------------------------------------------------------  

தேமொழி

unread,
Jan 5, 2026, 1:44:45 PM (2 days ago) Jan 5
to மின்தமிழ்

நன்றி: உண்மை
https://unmai.in/14621/father-periyar-of-the-tamil-festival/



தமிழர் விழா – தந்தை பெரியார்
ஜனவரி 3, 2026


""தமிழர் விழா!""


பொங்கல் விழா எதற்குக் கொண்டாடப் படுகிறது என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது. உண்மையில் தமிழர்களுக்கு என்று தமிழர்களின் நாகரிகம் பண்பு இவைகளுக்குப் பொருத்தமான பண்டிகை ஒன்றுகூடக் கிடையாது.

அப்படி இருந்தும் நம் மக்களுக்கு பண்டிகைகளுக்கு அளவே இல்லாது பல பண்டிகைகள் இருந்து வருகின்றன.

பாடுபடும் பாட்டாளிகளின் மனம் பொங்கிப் பூரிப்புக் கொள்ளும் புது நாள் பொங்கல் நாள். பொங்கல் நாள் புதுமை வீறு பெறும் நாள். உணவில், உடையில், உறையும் மனையில், உள்ளத்தில் செயலில் இவ்வாறு அகமும் புறமும் புதுமை பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் புதுமை. புதுமை நிலையானதல்ல; புதுமை பழமையாகும்; மீண்டும் புதுமை தோன்றும். அப்புதுமையும் மகிழ்ச்சியோடு வரவேற்கப்படும். ஆண்டு தவறாமல் வந்து சென்ற பொங்கலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் வரவிருக்கும் பொங்கலும் இதைத்தானே நமக்கு பாடமாக உணர்த்த முடியும்?

– ‘குடிஅரசு’, 10.01.1948

*~~*~~*~~*~~*~~*~~*~~*~~*~~*~~*~~*~~*


. . . முதலில் அப்பண்டிகைகளின் பெயர்களைப் பார்த்தால் அவை அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்களாகவே இருக்கும். தமிழர்களுக்கென்றும் தமிழர் களின் பண்பு நாகரிகம் கலாச்சாரப் பழக்கவழக்கம் இவைகளைக் கொண்டதாகவும் ஒரு பண்டிகை இருக்குமேயானால் அதற்கு தமிழிலேயே பெயர் இருக்கவேண்டும். ஆனால், வட மொழியில் இருக்குமேயானால் எப்படி தமிழர்களுக்குண்டான பண்டிகையென்று கூறமுடியும்?

பொங்கல் பண்டிகை:
ஏதோ பொங்கல் பண்டிகை என்று கூறும் முறையில் தமிழ்ப் பெயராக இருப்பதும் அன்றி நம் மக்களுக்கு ஏற்ற பண்டிகையாகவும் இருக்கிறது. மேலும் இதற்குக் கூட பார்ப்பனர்கள் சங்கராந்தி என்று பெயர் கொடுத்து அப்பண்டிகைக்காகக் கட்டுக்கதைகளை இயற்றிவிட்டு அது இந்திரனுக்குக் கொண்டாடப்படும் பண்டிகை என்பதாக மாற்றிவிட்டார்கள். பண்டிகைகள் ஒவ்வொன்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் இப்பண்டிகையை மட்டும்தான் பார்ப்பனப் பண்டிகையிலிருந்து தமிழர் பண்டிகையாக மாற்றம் செய்ய முடிந்தது. தமிழர்களின் பண்புக்கேற்றவண்ணம் அதன் அவசியத்தையும், கொண்டாடும் முறையையும் விளக்கி வருகிறோம்.

உழவர் திருநாள்:
இப்பண்டிகை நம் மக்களில் பெரும்பான்மை யானவர்களாகிய விவசாயிகளுக்குண்டான பண்டிகையாகும். அவர்கள் இந்த ஆண்டு முழுதும் விவசாயம் செய்து தானியங்களைத் தங்கள் இல்லத்தில் கொண்டு வந்து அத்தானியத்தை முதன்முதலாகச் சமைத்து உண்ணும்பொழுது தாங்கள் சந்தோஷமாக இருக்கும் அறிகுறியைக் காட்டும் முறையில் இப்படிக் கொண்டாடுகிறோம். இதுவரை பார்ப்பனர்களின் முறைப்படி கொண்டாடப்பட்ட முறைகள் அறிவுக்கும் பண்புக்கும் பொருத்தமற்றதாகும் என்பதை விளக்கி நம்முடைய பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவண்ணம் கொண்டாடும் முறையைப் பின்பற்றுகிறோம்.

உறவைக் கூட்டும் விழா:
இந்நன்னாளில் ஒருவருக்கொருவர் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்ள தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். இப்பண்டிகை மட்டும்தான் தமிழர்களுக் கென்று உள்ள பண்டிகை.

இதைத் தவிர மற்றவை யாவும் பார்ப்பனப் பண்டிகைகள். அப்பண்டிகைகள் அத்தனைக்கும் கூறப்படும் கதைகள் அறிவுக்குப் பொருத்தமற்றவைகள். நாகரிக காலத்திற்கு ஏற்றவை அல்ல. அப்போது காட்டுமிராண்டித்தனம் மலிந்த காலத்தில் அதற்கேற்றவண்ணம் பார்ப்பனர்கள் கதைகளைக் கட்டிவிட்டார்கள்.

அறிவுக்கு அளவுகோல்:
இப்போது விஞ்ஞானம் மலிந்த காலம்; ஆராய்ச்சியாளர்கள் மிகுந்து அதிசய – அற்புதங்கள் பலவற்றைச் சாதித்துக்காட்டும் காலம். இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் காலத்தில் புராணக் கதைகள் இருப்பது சிறிதும் அறிவுக்குப் பொருத்தமற்றதாகும்.

அவைகள் இன்னமும் நிலைத்து நிற்பதன் காரணம் நம்முடைய முட்டாள்தனம் எத்தனை டிகிரி இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறதே அன்றி, அறிவின் தரத்தைக் காட்டுவதில்லை…

(சேலம் நகராண்மைக் கழகக் கல்லூரி விழாவில் ஆற்றிய உரையிலிருந்து
– ‘விடுதலை’, 26.01.1954)

*~~*~~*~~*~~*~~*~~*~~*~~*~~*~~*~~*~~*


திராவிடத்தின் ஆதிமக்களான தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது என்பது மிக அரிதாக உள்ளது.

இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத் துறையில் தமிழர்மீது ஆதிக்கம் செலுத்தியவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக தமிழ்நாட்டில் தமிழர் கலாச்சாரங்களை, பழக்கவழக்கங்களை அடியோடு அழித்து, மறைத்து விட்டார்கள். இதனால் தமிழருக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவதுகூட மிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழரின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல் தமிழர்க்கு வரலாறு (சரித்திரம்) என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது.

எனவே, இன்று தமிழர் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற அடிமைகளாக விளங்குகின்றனர். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழர் கொண்டாடும் – நடக்கும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவை எல்லாம் தமிழர்க்கு இழிவும் அடிமைத்தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவையாகவே இருந்து வருகின்றன.

தமிழர்க்குள்ள கலைகள் என்பன வெல்லாம் தமிழரை அடிமையாக்குவதாகவே இருந்து வருகின்றன. தமிழர்க்கு அடியோடு சமயம் என்பதே இல்லாமற் போய்விட்டது எனலாம். மக்களுக்கு விழா மிக முக்கியமான தேவையாகும். விழாவை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவளாவுதல் கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல் அன்பு, ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவைகளை அனுபவிக்க முடிகின்றது. இவை ஏற்படுவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.

(‘கலை’ பொங்கல் மலர் – 14.01.1959)

*~~*~~*~~*~~*~~*~~*~~*~~*~~*~~*~~*~~*

தேமொழி

unread,
Jan 5, 2026, 3:20:07 PM (2 days ago) Jan 5
to மின்தமிழ்


4. தமிழர் திருநாள்

திராவிடத்தின் ஆதி மக்களான தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது.

இதன் காரணம் என்னவென்றால், கலாசாரத்துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாசாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக-தமிழ்நாட்டின் தமிழனின் கலாசாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாசாரம் எது என்று அறிவது கூட மிகமிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது தமிழனின் கலாசார பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு, சரித்திரம் என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது.

எனவே, இன்று தமிழன் கலாசாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகிறான். இப்படி விளங்குவதுமாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும்- நடத்தும் கலாசாரப் பண்பு, வரலாறு என்பவைகள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.

தமிழனுக்குள்ள கலைகள் எனபனவெல்லாம் தமிழனை அடிமையாக்குவனவாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்கு அடியோடு சமயம் என்பதே இல்லாமல் போய்விட்டதே எனலாம். மக்களுக்கு, விழா முக்கியமான தேவையாகும். விழாவை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவாளவுதல், கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல், அன்பு, ஆசைப்பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவைகளை அனுபவிக்க முடிகின்றது. இவைகளை ஏற்படுத்துவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம். அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், மகாசிவராத்திரி, தமிழ் வருடப்பிறப்பு, ஆவணிஅவிட்டம், கோகுலாஷ்டமி, சரஸ்வதிபூசை, தீபாவளி. விடுமுறை இல்லாத பண்டிகைகள்-பிள்ளையார்சதுர்த்தி, கார்த்திகைதீபம், பங்குனிஉத்திரம், தைப்பூசம் இந்தப்படியாக இன்னும் பல உள.

இவைகளில் தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு-ஏற்றவாறு விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?

தமிழனின் இழிவுக்கு மறுக்கமுடியாத-முக்காலத்திற்கும் ஏற்றநிலையில் ஒரு எடுத்துக்காட்டைக் கூறவேண்டுமானால் தமிழனுக்குக் காலத்தைக் காட்டக்கூடிய சொல், சாதனம், அமைப்பு என்பது இல்லையென்றே கூறலாம்.

கிறித்தவர்கள் காலத்தைக்காட்ட கிறித்துவ ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முஸ்லிம்கள் காலத்தைக்காட்ட இஸ்லாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல, தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது? மற்றும், இப்படியேதான் தமிழனுக்குக் கடவுள், சமயம், சமயநூல், வரலாற்றுச்சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச்சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.

இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (Harvest Festival) என்ற கருத்தில் தானேயொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திரவிழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.

இந்தப் பொங்கல் பண்டிகையை தமிழர் எல்லோரும் கொண்டாடவேண்டும்.

[பெரியார் - கட்டுரை - 'விடுதலை' 30-1-1959]

pongal.jpg
2 pongal.jpg

--------------------------------------------------------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages