"இந்து அறநிலையத்துறை தேவையா?" - முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.

41 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 4, 2026, 10:41:37 PMJan 4
to மின்தமிழ்
"இந்து அறநிலையத்துறை தேவையா?"

முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.



பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடமிருந்து, இந்தியாவை ஆளும் பொறுப்பை,1858 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் மன்னராட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. முதலாவதாக, இந்தியர்களின் மத விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று பிரிட்டிஷ் அரசு  அறிவித்தது. இது, "இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்ட பரிசு" என்று இங்கிலாந்து மகாராணியார் இக்கொள்கையை அறிவித்தார்.

இதற்கு 57 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கொள்கையைப் பிரிட்டிஷ் அரசு கைவிட நேர்ந்தது. இதற்குக் காரணம் 1925 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசாங்கம் நிறைவேற்றிய இந்து அறநிலையத்துறைச் சட்டம்தான். இந்தச் சட்டத்தை அன்று சென்னை மாகாணத்தின் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றியவர்கள் ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்ட நீதிக் கட்சியினர்.

தென்னிந்தியாவில் களப்பிரர் ஆட்சிக் காலம் வரை (கி.பி. 300-550) கோயில்கள் என்று எதுவும் இல்லை. (ஜைன) சமணப் பள்ளிகளும், பௌத்த விகாரைகளும், ஆசீவக மடங்களும் தான் இருந்தன. இவற்றில் சமணத் தீர்த்தங்கரர்கள், புத்தர்களின் சிலைகள் நிறுவப் பட்டாலும் உருவ வழிபாடு நடைமுறையில் இல்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தென்னிந்தியாவின் வடக்குப் பகுதியில் இருந்த பல்லவர்கள் ஏற்றம் பெற்றனர். மெல்ல மெல்ல, பல பகுதிகளிலும் பல்லவரது ஆட்சி அமைந்தது.
Siva Ilango1.jpg
பல்லவர்களுடைய ஆட்சிக்காலத்தின் போதுதான் பார்ப்பனர்களின் உள்நுழைவும் அதிகமாக ஏற்பட்டது. அப்போதிலிருந்து தொடங்கிய சமண, பௌத்த சமயங்களுக்கு எதிரான களம், பக்தி இலக்கியக் காலத்தில் பெரிய அளவில் வளர்ந்தது. சமண, பௌத்தப் பள்ளிகளும், மடங்களும் சைவ, வைணவ சமயத்தினர் என்று சொல்லிக் கொண்டவர்களால் கைப்பற்றப்பட்டுக் கோவில்களாக மாற்றப்பட்டன. ஏற்கனவே கற்பனையில் இருந்த கடவுள்களுக்கு உருவம் கொடுத்து அதற்கு வழிபாடுகளும் நடத்தத் தொடங்கிவிட்டனர்.

பல்லவர் ஆட்சிக் காலத்தில் தமிழகம் பார்ப்பனிய மயமாகிக் கொண்டிருந்தது. தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் எதிரான செயல்கள் மெல்ல மெல்ல அரசின் நடைமுறைகள் ஆகத் தொடங்கின. பக்தி இலக்கியக் காலத்தில் தமிழுக்கு முன்னுரிமை கிடைத்தாலும்,  கற்பனைப் புராணக் கதைகளும், மூடநம்பிக்கைச் செயல்களும் மக்களைக் குழப்பி வந்தன.

பல்லவர்களுக்குப் பிறகு வந்த பிற்காலச் சோழர்கள் (கி.பி. 9 - 12), பிற்காலப் பாண்டியர்கள் (கி.பி. 13 - 15) ஆட்சிக் காலங்களிலும் இதே நிலையே நீடித்தது. சமயங்கள் சைவம், வைணவம், சாக்தேயம் (சக்தி), காணபத்யம் (கணபதி), கௌமாரம் (முருகன்), சௌரவம் (ஞாயிறு) என்று சன்மார்க்கமாக (ஆறு மார்க்கங்களாக) வளர்ச்சிநிலை பெற்றன.

கி.பி. 16 ஆம் நூற்றாண்டு தொடங்கிய விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்துக் கோயில்களிலும் பார்ப்பனர் ஆதிக்கம் உறுதிப்படுத்தப்பட்டு, கோவில்கள், மன்னர்களின் வழியாகப் பார்ப்பனர் வசம் கொண்டு வரப்பட்டன. இதே காலத்தில் ஐரோப்பியர் வருகைகளும் நிகழ்ந்தன.

அதிகாரம் இல்லாத மன்னர்கள் காலத்துக் கோவில்களில் பார்ப்பனர்களின் கொள்ளையும், ஊழல்களும் அதிகரிக்கவே, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்றுப் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியரின் ஆட்சிக் காலத்தில், கி.பி. 1817 ஆம் ஆண்டு முதல், அரசாங்கம் தனது வருவாய்த்துறை மூலம், கோயில் அறக்கட்டளைகளை நிர்வகிக்கத் தொடங்கியது.

1858 ஆம் ஆண்டில் கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்து, பிரிட்டிஷ் மன்னராட்சி நிர்வாகம் ஏற்பட்டபோது, மதத்தில் தலையிடாக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி 'மத அறக்கட்டளைகள் சட்டம் 1863' ( The Religious Endowment Act, 1863) சட்டம் இயற்றப்பட்டுக் கோயில்கள் மீண்டும் கொள்ளையர் (பார்ப்பனர்) வசமாயின.
Siva Ilango 2.jpg
தமிழ் மன்னர்கள் கட்டி வைத்த கோவில்களில், பார்ப்பனர்கள் உள்நுழைந்து, தங்கு தடையின்றிச் செய்த கொள்ளைகளும், ஊழல்களும் உண்மையான பக்தர்களின் மனதைப் புண்படுத்தவே, அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் (1874, 1876, 1884, 1894) அரசாங்கத்திடம் முறையிட்டனர். அரசாங்கம் தன் தலையிடாக் கொள்கையின் விளைவாகக் கோயில் கண்காணிப்புக் குழுக்களை மட்டுமே நியமித்தது. ஆனால், இதனையும் பார்ப்பனர்கள் ஏற்கவில்லை.

பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்த கண்காணிப்புக் குழுவைப் பார்ப்பனர்கள் ஏற்காத நிலையில், பார்ப்பனர்களின் கோவில் கொள்ளைகளைக் கட்டுப்படுத்தக் கோரி, 1905 ஆம் ஆண்டு பெல்லாரியில் நடந்த சென்னை மாகாண மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் என்னாவது என்ற பயத்தில் பார்ப்பனர்களே, 1907 இல் 'தரும இரட்சண சபா' என்னும் அமைப்பைத் தொடங்கி, கோயில்களின் நிதி மோசடிகளை ஆய்வு செய்து நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
 
முறையிடுவதும் பார்ப்பனர்; வழக்கு நடத்துவதும், எதிர்வாதம் செய்வதும் பார்ப்பனர்; தீர்ப்பு வழங்குவதும் பார்ப்பனர். இதன் விளைவு? கோவில் அறக்கட்டளைகளில் இருந்த பார்ப்பனர் அல்லாதார் வெளியேற்றப்பட்டு, முழுவதும் பார்ப்பனர்களே நிர்வகிக்கும் (கொள்ளையடிக்கும்) நிலை ஏற்பட்டது. கோவில் முறைகேடுகள் குறித்து யாரேனும் நீதிமன்றங்களை அணுகினால் 'திட்ட வழக்குகள்' (ஸ்கீம் சூட்டுகள் - scheme suits) மூலம் தாங்கள் விரும்பும் திட்டங்களைப் பெற்றுத் தாங்கள் செய்யும் முறைகேடான செயல்களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்று வந்தனர்.

இந்நிலை குறித்து அன்றைய சென்னை நாளிதழான "மெட்ராஸ் மெயில்" தனது தலையங்கத்தில் இப்படி எழுதியது: "மத விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று பிரிட்டிஷ் அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளதைப் பின்பற்றி வருகிறது. ஆனால், கோவில்களின் அறங்காவல் குழுவினரின் நடைமுறை மனநிறைவு தருவதாக இல்லை. அவர்கள் செய்கிற தவறுகளால் அந்த நிர்வாகங்கள் அதிகமாகக் கண்காணிக்கும் படியான நிலைக்கு ஆளாகியுள்ளன. பெரும்பாலான அறக்குழுக்களின் நிர்வாகச் சீர்கேடுகளும், மோசடிகளும் மிகவும் இழிவாக இருக்கின்றன" என்று குறிப்பிட்டது அப்பத்திரிகை (மெட்ராஸ் மெயில், 13. 1. 1920).

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் இந்தியாவில் மன்னர் ஆட்சியே நிலவி வந்தது. மக்கள் பங்கெடுக்கும் தேர்தல் அரசியல் முறை இல்லாத அக்காலத்தில், இந்தியாவில் மக்களாட்சி முறையை அறிமுகப்படுத்தும் நோக்கில், ஒரு சீர்திருத்த முறை 1919 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் என்று அது அழைக்கப்பட்டது.

மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டத்தின் விளைவாக, மாகாணங்களிலும் சட்டமன்றம் ஏற்படுத்தப்பட்டு இரட்டை ஆட்சி முறை நடைமுறைக்கு வந்தது. அதன் அடிப்படையில் 1920 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று அமைச்சரவையை அமைத்தது. இந்த நீதிக்கட்சி, தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக, 1916 ஆம் ஆண்டு தான் சென்னையில் தோற்றம் பெற்றது.
Siva Ilango 3.jpg
பிரிட்டிஷ் ஆட்சியில் நிர்வாகம், நீதிமன்றம், கோயில்கள், வணிகம் என்று அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருந்த பார்ப்பனர்களைப் போல், பார்ப்பனர் அல்லாதவர்களுக்கும் வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கப்பட்டது தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். இவ் வியக்கத்தின் பிரச்சார ஊடகமாக ஜஸ்டிஸ் (Justice) என்ற பத்திரிகை தொடங்கப்பட்டு நாளடைவில் அந்தப் பேரிலேயே அது ஜஸ்டிஸ் பார்ட்டி (Justice Party) என்று அழைக்கப்பட்டது. அதுவே தமிழில் நீதிக்கட்சி என வழங்கலாயிற்று.

நீதிக்கட்சி தொடங்கப் பட்டதற்கும், பெரியாருக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. (1938 ஆம் ஆண்டில், முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு எர்ரவாடா சிறையிலிருந்த போதுதான், பெரியார், நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு, 1944 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார்).  

நீதிக்கட்சியில் எல்லாருமே பழுத்த பக்திமான்கள் ஆகவே இருந்தனர். கோவில்களில் பார்ப்பனர்களின் அட்டூழியங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத நீதிக்கட்சியின் பக்திமான்கள் தான், இந்து அறநிலையத் துறை சட்ட மசோதாவை, சென்னை மாகாண சட்டமன்றத்தில் கொண்டு வந்தனர்.

(தொடரும்) 

தேமொழி

unread,
Jan 9, 2026, 1:28:26 AMJan 9
to மின்தமிழ்

"இந்து அறநிலையத்துறை தேவையா?" (தொடர்ச்சி . . . )

முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.

விகிதாச்சாரப்படி பார்ப்பனர் அல்லாதவர் பெரும்பான்மையாக இருந்த சென்னை மாகாணத் தேர்தலில், நீதிக்கட்சி பெரும்பான்மை அடைந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவைக் காலத்தில் (1920-23) கோயில்களின் நிர்வாகத்தைச் சீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழுவின் ஆலோசனைப்படி, 1922 ஆம் ஆண்டு, டிசம்பரில் ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது. இதனை மெட்ராஸ் மெயில் நாளேடு பாராட்டி எழுதியிருந்த அதே நேரம், இந்து பத்திரிகையும், பிற பார்ப்பன ஊடகங்களும் மிகக் கடுமையாக அம்மசோதாவை எதிர்த்து எழுதினர்.

கோவில் வருமானத்தில் கிடைக்கும் உபரி நிதியில் நகராட்சி மூலம் மருத்துவமனைகளை அமைப்பது, சாலைகள் அமைப்பதையும் விட, வேதம் படிப்பதையே அந்த நன்கொடையாளர்கள் விரும்புவார்கள் என்று பார்ப்பனப் பத்திரிகைகள் எழுதின. அப்போது சென்னை மாகாணப் பிரதம அமைச்சராக இருந்த பனகல் அரசர், இம்மசோதாவுக்கு எழுந்த எதிர்ப்புகளையெல்லாம் ஒருவாறு சமாளித்தார். ஒரு சில திருத்தங்களுக்குப் பின், 1923 ஆம் ஆண்டு ஏப்ரலில், மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், எதிர்ப்பாளர்கள் டில்லி வரை சென்று வைசிராயிடம் விண்ணப்பித்தனர். இதனால் மசோதா சட்டமாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் 1923 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது அமைச்சரவையை அமைத்தது. இதனைத் தொடர்ந்து 1924, ஏப்ரல் மாதத்தில், இந்து அறநிலையத்துறை மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உடனடியாக நிறைவேற்றப் பட்டது.  இறுதியில் வைசிராயின் ஒப்புதலுடன் 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்து அறநிலையத்துறை மசோதா சட்டமாக்கப்பட்டது.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டதுடன், கோயில் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற தன்னுடைய கொள்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் விலக்கிக் கொண்டது.

இந்து அறநிலையத்துறை சட்டம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1927 ஆம் ஆண்டு "இந்து சமய அறநிலைய வாரியம்" ஒன்று அமைக்கப்பட்டது. "மெட்ராஸ் இந்து சமய அறநிலையங்கள் சட்டம், 1927" என்ற சட்டத்தின் படி இவ்வாரியம் அமைக்கப்பட்டது. இதற்கும் மிகப்பெரிய எதிர்ப்பு நிலவியது. காங்கிரஸ் கட்சியின் சத்தியமூர்த்தி ஐயர் போன்ற சனாதனிகள், சட்டமன்றத்தில் இந்து அறநிலையத்துறை மசோதா கொண்டுவரப்பட்ட போதும், தேவதாசி ஒழிப்பு மசோதா கொண்டுவரப்பட்ட போதும் அவற்றை எதிர்த்துப் பேயாட்டம் ஆடித் தீர்த்தனர்.

"இந்து அறநிலையத்துறை சட்டம், 1927" இல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு "மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம், 1951" இயற்றப்பட்டது. இதன் மூலம் தலைமை அதிகாரியாக ஆணையர் ஒருவர் நியமனம் செய்யப்பட வழிவகை செய்யப்பட்டது. இறுதியாக, 1959 ஆம் ஆண்டில், காமராசர் ஆட்சிக் காலத்தில், முந்தைய சட்டங்களின் குறைபாடுகள் சில களையப்பட்டுத் தற்போது உள்ள சட்டமான "தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம், 1959" இயற்றப்பட்டது. இதன்படி இந்து சமயக் கோயில்களை நிர்வாகிப்பதற்கான தனியான அரசுத்துறை ஒன்று உருவானது.
 
HRCE ACT 1959.jpg
அரசாங்கத்தின் துறைகள் என்ற வகையில் வருவாய்த் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவு அசையாச் சொத்துக்களை கொண்டுள்ள அரசு துறை என்றால் அது இந்து சமய அறநிலையத்துறை ஆகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது 38,635 இந்து சமயக் கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள், சமண சமயக் கோவில்கள் ஆகியவை உள்ளன. இந்த சமய நிறுவனங்கள் ஆண்டு வருவாய் அடிப்படையில் பட்டியலைச் சாராதவை என்றும், பட்டியலைச் சார்ந்தவை என்றும் சட்டத்தால் வகைப்படுத்தப் படுகின்றன. மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் உள்ள கோயில்கள் பட்டியல் சார்ந்தவை என்றும், அதற்குக் கீழ் வருமானம் உள்ளவை பட்டியல் சாராதவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பட்டியல் சாராத கோவில்கள் உதவி ஆணையர் நிலை அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. பட்டியலைச் சார்ந்த கோயில்கள் இணை ஆணையர் நிலை அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்து அறநிலையத் துறையின் முக்கியமாக பணிகளாகக் குறிப்பிடப்படுபவை: கூட்டம் அதிகமாக வரும் கோயில்களில் பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு தரிசனத்திற்குத் தனியே அழைத்துச் செல்வதைத் தடுப்பது; முறையாக நுழைவுச்சீட்டு மூலம் சிறப்பு தரிசனம் போன்ற ஏற்பாடுகள் செய்வது; கோயில் உண்டியல் முதல் சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுகள், கோயிலைச் சுற்றி உள்ள கடைகளில் வசூலிக்கப்படும் வாடகைப்பணம் ஆகியவை கோயில் பெயரில் வங்கிக் கணக்கில் முறையாகச் செலுத்தப்படுவதைக் கண்காணிப்பது; கோயிலுக்கான செலவுகள் உண்மையில் சரியாக செய்யப்படுகின்றனவா அல்லது வெறுமனே கணக்குப் புத்தகங்களில் மட்டுமே எழுதப்படுகின்றனவா என்று கண்காணித்தல்; கோயிலுக்கு நிலங்கள், அசையாச்  சொத்துகள் இருந்தால் அதற்கான குத்தகை, வாடகைப் பணங்கள் சரியாக வசூல் செய்யப்பட்டு வங்கியில் செலுத்தப்படுகிறதா என்று கண்காணிப்பது ஆகியவை.

இந்தப் பணிகளை அறநிலையத் துறையின் அதிகாரிகள் மிகுந்த சிரமத்தோடு மேற்கொண்டு வருகின்றனர். இத்தனை ஆயிரம் கோவில்களை நிர்வகிக்க ஆணையர் முதல் கடைநிலை ஊழியர் வரை மிகப்பெரிய கட்டமைப்பை தமிழ்நாடு அரசாங்கம் உருவாக்கி வைத்திருக்கிறது. இவர்களுக்குத் தமிழ்நாடு அரசு கஜானாவின் மூலம் பெறப்படும் மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் ஊதியம் வழங்கப்படுகிறது. அதேநேரம், கோயில்களின் வருவாயிலிருந்து தான் பூசாரிகளுக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்து அறநிலையத் துறையின் சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாட்டின் ஆலய நிர்வாகங்களைச் சிறப்பாக மேம்படுத்தி உள்ளது. இதனால் ஆலயங்களின் வருவாய் பல மடங்கு பெருகி வருகிறது. இத்துறையில் பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் குறைவாக இருக்கின்ற சூழ்நிலையிலும், ஆலயங்களின் நுழைவுச்சீட்டு தேவைக்கேற்ப அச்சிடப்பட்டு ஆலய அலுவலகத்தில் முறையான கணக்கு வழக்குகளுடன் இத்துறையால் பாதுகாக்கப்படுகிறது.

ஆலயத்தில் உள்ள உண்டியல்கள் இத்துறை அலுவலர்களால் முத்திரையிடப்பட்டு, முறையாகத் திறக்கப்பட்டு, அந்தத் தொகை ஆலயக் கணக்கில் வங்கியில் சேர்க்கப்படுகிறது. ஆலயத்திற்குச் சொந்தமான கடைகள், வீடுகள், நிலங்கள், காலியிடங்கள் ஆகியவற்றை சட்டப்படி வாடகைக்கு விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  ஆலயத்திற்கு வருகின்ற நன்கொடைகள், காணிக்கைகளுக்கு இரசீது போடப்பட்டு முறையாக வரவு வைக்கப்படுகின்றன. கணக்குகள் கால அடிப்படையில் தணிக்கை செய்யப்படுகின்றன. தணிக்கையில் குறைபாடுகள் இருந்தால் அதற்குத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பல ஆலயங்களில் திருப்பணிகள் சரிவர நடைபெறுகிறதா என்று கண்காணிக்கப் படுகின்றன. இத்திருப்பணிகளுக்கு அரசு நிதி உதவியும் செய்து வருகின்றது.

இந்து அறநிலையத்துறையின் வழி மாநிலத்தின் கல்வி மேம்பாடு, பண்பாட்டு மேன்மை, ஓய்வு பெற்றோர்களுக்கு ஆதரவு, பெற்றோரற்றச் சிறுவர்கள் பராமரிப்பு, மருத்துவமனைகள் பராமரிப்பு ஆகிய பொதுநலப் பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன. சாதி சார்பற்ற சிறப்பு வழிபாடுகளும், சமபந்தி விருந்துகளும் பெரும்பாலான ஆலயங்களில் நடத்தப்படுகின்றன. ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை இந்துக்களின் திருமணங்களைப் பல்லாயிரக்கணக்கில் நடத்தி வருகின்றது.

இக்கோயில்கள் மூலம் வரும் வருமானத்திலிருந்து இதுவரை 56 கல்லூரிகளும், தொழில்நுட்பக் கல்லூரிகளும் (பாலிடெக்னிக்) நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, இடைநிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி என்று 360 பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி, வேத ஆகமப் பாடசாலை, தேவாரப் பயிற்சிப் பள்ளி, காது கேளாதோர் பள்ளி, கருணை இல்லம் ஆகியவற்றுடன் 45 மருத்துவமனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பல ஆலயங்களில் அன்னதானமும், ஒரு காலப் பூசைகளும், இலவசத் திருமணங்களும் நடத்தப்படுகின்றன. இந்தத் தகவல்கள் எல்லாம் இந்து அறநிலையத் துறையின் ஓய்வு பெற்ற அதிகாரியின் வாக்கு மூலங்கள்.

இதுவரை கூறியபடி, இவ்வளவு சீரான பணிகள் நடந்து வருவதற்குக் காரணம் இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் தான். இப்படிப்பட்ட செயல்பாடுகள் இல்லாமல், இத்தனை வருவாயும் காலங்காலமாகப் பார்ப்பனர்களால் கொள்ளை அடிக்கப்பட்டே வந்திருக்கின்றன. இவையெல்லாம் தெரிந்தும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகளும், அறங் காவலர்களும் இதற்குப் பெரிய அளவில் எதிர்ப்புத் தெரிவிக்காமல் முனகலுடன் நிறுத்திக் கொள்கின்றனர்.

காவல் நிலையங்களுக்குச் சென்றாலும் பார்ப்பனர்களுக்கு எதிராக அவர்களும் வழக்குத் தொடுப்பதில்லை. நீதிமன்றங்களில் பார்ப்பன மேலாண்மையே நிலவுவதால் இந்த வழக்குகளில் தவறு செய்தவர்களுக்குத் தண்டனை கிடைப்பதில்லை. மாறாக அவர்களுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டு அனுப்பப் படுகின்றனர். இப்படி ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நடத்திய வழக்குகளில் ஏராளமானவை நீதிமன்றச் சான்றுகளாகவே உள்ளன.

தொன்றுதொட்டு மன்னர்களாலும், பக்தி மார்க்கத்தில் திளைத்திருக்கும் மக்களாலும் கோயில்களுக்கு ஏராளமான சொத்துகள் குவிந்து வருகின்றன. வாழும் பிறவியில் இல்லை என்றாலும், அடுத்த பிறவியிலாவது சொகுசான வாழ்க்கை வாழ, ஒரு பயன்தரத்தக்க முதலீடு என்ற நம்பிக்கையில் தான் இப்படிக் கோயில்களுக்கும், கடவுள் பெயருக்கும் மன்னர்களும், மக்களும் சொத்துக்களைக் குவித்து வைத்துள்ளனர்.

இப்படிக் குவிந்த சொத்துகளை, எங்கிருந்தோ வந்த பார்ப்பனர்கள் தங்களின் ஏகபோக உரிமைகளாக வரித்துக் கொண்டு, கணக்கு வழக்கற்ற நிலையில் அதை அனுபவித்துக் கொண்டு, அந்த நிலையைத் தங்களுக்குத் தந்த மக்களையே பிறவியில் பேதம் கூறி, தரந்தாழ்த்தி நடத்தி வருகிறார்கள். சாதியைச் சொல்லிக் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுத்து வருகிறார்கள். தென்னிந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உள்ள சொத்துகள் சொல்லியும் மாளாது; எண்ணியும் மாளாது. விஜயநகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயர் கி.பி. 1513 முதல் 1521 வரை திருப்பதி கோயிலுக்கு ஏழு முறை சென்று, ஏராளமான நகைகளை வழங்கி இருக்கிறார்.
 
KRISHNA DEVA RAYA.jpg

கிருஷ்ணதேவராயர் முடி சூட்டிக் கொண்ட 500 ஆவது ஆண்டு நிறைவையொட்டி (2009) ஆந்திர அரசு கொண்டாடிய விழாவுக்குக் கிருஷ்ணதேவராயர் வழங்கிய நகைகளைப் பார்வையிடக் கேட்டால் "அவை எதுவுமே இல்லை; உருக்கப்பட்டு விட்டன" என்று பதில் வருகிறது. யாருடைய அனுமதியில் இவை உருக்கப்பட்டன என்ற கேள்விக்குப் பதில் இல்லை. கோயில் நகைகள் திருடப்பட்டது குறித்தும், பிற மோசடிகள், ஊழல்கள் குறித்தும் ஆந்திர முதலமைச்சரே புலனாய்வு விசாரணை கோரியும் எதுவும் நடைபெறவில்லை.

(தொடரும்) 

தேமொழி

unread,
Jan 20, 2026, 7:46:37 PMJan 20
to மின்தமிழ்
 "இந்து அறநிலையத்துறை தேவையா?" (தொடர்ச்சி . . . )

முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.


அரசாங்கம் தலையிட எவ்வளவோ முயன்றும், "ஏழுமலையானுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான நகை மோசடி! தங்கமுலாம் பூசப்பட்ட செப்பு நகைகளை வைத்துவிட்டு ஒரிஜினல் நகைகள் களவாடல்" என்று பத்திரிகைகளில் செய்தி வந்ததுதான் மிச்சம் (மாலைமுரசு, 26.8.2009).

அதேபோல சிதம்பரம் கோயில் கொள்ளைகள் குறித்தும் ஏராளமான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இக்கோவிலின் ஊழல்கள், தீட்சிதர்களின் முறைகேடுகளைப் பட்டியலிட்டுச் சென்னை தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த செயலாளர்கள் மற்றும் நாக. வெங்கடேச தீட்சிதர், நடராஜ தீட்சிதர், சங்க சபேத தீட்சிதர் ஆகிய பார்ப்பனர்கள் கையொப்பமிட்டுத் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், இந்தியப் பிரதமருக்கும் புகார்களை அனுப்பினார்கள். இந்தப் புகார்கள் குறித்துப் புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசி விசாரணைக் கமிஷன் கோரியிருக்கிறார். ஆனாலும் எதுவும் நடைமுறைக்கு வந்தபாடில்லை (ஜுனியர் விகடன் 20.7.1994).

"சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் கடவுளுக்கே துரோகம் செய்கிறார்கள்" என்று நீதிபதி சதாசிவ அய்யர் ஒரு தீர்ப்பில் கூறியிருக்கிறார். 31. 12. 1925 அன்று அவர் அளித்த ஒரு தீர்ப்பில், "சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் உண்மைக்குப் புறம்பாக மனு கொடுத்துள்ளனர். எவ்வித வரவு செலவுக் கணக்குகளையும் வைக்காமல், நம்பிக்கைத் துரோகக் குற்றச்சாட்டிற்கு உள்ளாகிறார்கள்" என்று தன்னுடைய தீர்ப்பில் எழுதி இருக்கிறார்.
சிதம்பரம் கோயில் தங்களுடைய சொந்த சொத்து என்று தீட்சிதர்கள் வழக்குத் தொடுத்த போது, அந்த வழக்கினை விசாரித்த திருவாரூர் டி. முத்துசாமி ஐயர், "முற்காலம் தொட்டே இக்கோயில் ஒரு பொது வழிபாட்டுக்குரிய இடமாக இருந்து வருகிறது. இக்கோயில் தீட்சிதர்களின் சொந்த சொத்து என்பதற்குச் சிறு துளியும் கூட ஆதாரம் கிடையாது" என்று கூறிவிட்டார். 1888 ஆம் ஆண்டின் வழக்கின் தீர்ப்பு அது. இப்படிப்பட்ட கொள்ளைக் கூட்டம் இந்தக் கோயிலில் மட்டுமல்ல, எல்லாக் கோவில்களையுமே ஆக்கிரமித்துக் கொண்டது. அவர்களின் கைவரிசை உண்டியல் ஆழத்திற்கும், நிலத்தின் ஆழத்திற்கும், கோயில் ஆழத்திற்கும் நீண்டு செல்கின்றன.

இந்தியா முழுவதும் குறிப்பாகத் தமிழ்நாட்டுக் கோயில்களில் கடவுள் சிலைகளும், நகைகளும் அதிகமாகத் திருட்டுப் போகின்றன. இவற்றிற்குக் கோயிலில் அர்ச்சகர்களாகப் பணிபுரியும் பார்ப்பனர்களே காரணமாக இருக்கின்றனர். சிதம்பரம் நடராஜர் கோயில் கொள்ளை (ஜுனியர் விகடன், 19.2.1995), மதுரை அழகர் மலைக் கள்ளழகர் கோயில் கொள்ளை (ஜுனியர் விகடன், 3.8.1994), நெல்லையப்பர் கோயில் கொள்ளை, மதுராந்தகம் ராமர் கோவில் கொள்ளை, திருக்குண வாயிற் கோயில் பெருந்திருட்டு என்று பட்டியல் பெரிய அளவில் நீள்கிறது.

திருவிழாக் காலங்களில், கோவில்களுக்கு வரக்கூடிய காணிக்கைகள் குறித்து, கோயில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் குடும்பங்கள் அல்லது குழுக்களுக்கு  முன்கூட்டியே ஏலம் விடுகின்றனர். அதற்கான புத்தகங்களில் முழுக் காணிக்கைகளும் பதிவு செய்யப்படுவதில்லை. கணக்கில் காட்டப்பட்ட மிகக் குறைவான தொகையைத் தவிர, காணிக்கையாக வருகிற நகை, தொகை முழுவதையும் அதை ஏலம் எடுத்த பார்ப்பனரே களவாடி விடுகிறார்.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார் என்பவர், நாகைப்பட்டினத்துப் பௌத்த விகாரை ஒன்றில், முழுவதும் தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்த புத்தரின் உருவ சிலையைத் திட்டமிட்டுத் திருடிக் கொண்டு போய்த் திருச்சி, திருவரங்கக் கோவில் பணிகளுக்குப் பயன் படுத்தியுள்ளார் (மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், 2010, பக்கம் 43).

இந்தக் கொள்ளை தற்போது சமூக வலைத்தளங்களில் பெருமையாகப் பார்ப்பனர்களாலேயே பேசப்படுகிறது. தொன்று தொட்டுக் கொள்ளையடிப்பதுவே பார்ப்பனர்களின் தொழில் என்று அவர்களே வெளிப்படையாகவும், வெட்கமின்றியும் ஒப்புகின்றனர். இப்படி மறைமுகமாகக் கூட பஞ்சமர்களும், சூத்திரர்களும் சொல்லிவிட முடியாது.

கேரளாவில் உள்ள கோயில்களிலும் இதேநிலை தான் நிலவுகிறது. குருவாயூரில் உள்ள பார்த்தசாரதி கோயிலை, மலபார் தேவசம் போர்டு நிர்வாகம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்த போதும், அதற்கு மதவெறியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்று கேரள அரசின் தேவசம் போர்டு அமைச்சர் தெரிவித்துள்ளார் (தீக்கதிர், 17. 1. 2018).  

இந்த நிலைதான் அரித்துவாரம், காசி, விந்தியாச்சல், கயா, பூரி, புவனேஸ்வர் உள்ளிட்ட புகழ்பெற்ற மதத்தலங்களில் உள்ள கோயில்களிலும் நிலவுகிறது. அதன் எல்லா உரிமைகளும் பண்டாக்களுக்கே இருக்கிறது. இந்தப் பண்டாக்கள் கையாளும் மிரட்டலும், உருட்டலுமான முறைகள் குறித்தும், வட இந்தியக் கோயில் பூசாரிகள் கோவில் பணத்தில் பங்கு மார்க்கெட்டில் புகுந்து விளையாடுவது குறித்தும், சி.பி. ராமசாமி ஐயரின் தலைமையிலான ஆணையம் 1962 இல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

தென்னிந்தியக் கோயில்களில் ஊழல்களும், முறைகேடுகளும் இருந்தாலும் கூட, வட இந்தியாவில் உள்ள கோயில்களை விடத் தென்னிந்தியக் கோயில்கள் நன்கு நிர்வாகம் செய்யப்படுகின்றன என்பதையும் ராமசாமி ஐயர் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. (நன்றி: ஹிந்து அறநிலையத் துறையை ஒழித்து கோயில்களின் நிர்வாகத்தைப் பார்ப்பனர்கள் கைப்பற்றத் துடிப்பதேன்?, தொகுப்பாசிரியர் கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, 2022).

இட ஒதுக்கீடு, சமூக விழிப்புணர்ச்சி, கல்வி வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாகத் தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் கோயில் நிர்வாகிகளாக உயர்ந்து, உயர்சாதிப் படிநிலையில் உள்ளவர்களுக்கும் சம்பளம் வழங்கும் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். சமூகநீதிப் போராட்டத்தின் பலனாக பெண்களும் செயல் அலுவலர்களாகப் பதவிக்கு வந்துள்ளனர். இப்படிப்பட்ட சமூகப் புரட்சியை முறியடிக்கவே, கோயில் நிர்வாகங்கள் பற்றித் திட்டமிட்ட அவதூறுகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இதற்காக அறநிலையத் துறையை, 'அறம் இல்லாத துறை' என்ற பெயரில் முகநூல் பக்கம் ஒன்றை ஏற்படுத்தி, அதில் இந்து அறநிலையத்துறை ஆண், பெண் அலுவலர்களை வேசி மகன்கள், வேசி மகள்கள் என்று குறிப்பிட்டு, விரிவான பதிவுகள் இட்டுக்கட்டி அவர்களை உளவியல் ரீதியாக அந்த பணியின் மேல் வெறுப்புக் கொள்ளச் செய்கின்றனர். இப்படிப்பட்ட தாக்குதல்களுக்கு உள்ளான அரசு ஊழியர்கள் பதிலடி கொடுப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

ஒன்றிய அரசாங்கத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் மதவெறிச் சக்திகள், மாநில உரிமைகளுக்கும், சமூக நீதிக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. மக்களைக் குழப்புவதற்காகவே திட்டமிட்ட பொய்களை நாடு முழுவதும் இந்து மதவெறியர்கள் பரப்பிக் கொண்டு வருகின்றனர். இவர்களுக்குத் துணை போகவே பெரும்பாலான ஊடகங்கள் காத்திருக்கின்றன.

ஊழலும், கடமையும் குறிப்பிட்ட ஒரு மதத்துக்குத் தான் சொந்தமானது என்றில்லாமல் நாட்டில் உள்ள எல்லா மதங்களுக்கும் இடையே இதில் ஒற்றுமை நிலவுகிறது என்று இல்லஸ்டிரேட்டட் வீக்லி பத்திரிகை, 1972 ஆம் ஆண்டிலேயே கருத்துத் தெரிவித்துள்ளது.

அவ்விதழில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரை ஒன்றில், "கோயில் வருவாயின் பெரும் பகுதியும் திட்டமிட்ட முறையிலும், ஈனத்தனமாகவும் கையாடல் செய்யப்படுகிறது. பரம்பரை பூசாரிகள், பண்டாரங்கள், முத்திராதிகாரிகள், முத்தவல்லிகள், முஜாவர்கள், கிரந்திகளுக்கு அப்பணம் சென்று கொழுப்பு ஏற்றுகிறது. அவர்கள் எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும் அவர்கள் கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையே நின்று பணம் பறிக்கும் இடைத்தரகர் கூட்டம் என்றே சொல்லலாம்" என்று அவ்விதழ் தெரிவிக்கிறது. (இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா, 3. 9. 1972).

கருவறையில் கொள்ளையர்கள் மட்டுமே இருப்பதில்லை, காமுகர்களும் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த 'சிதம்பர ரகசியம்' தான். காஞ்சிபுரம் மச்சேச பெருமாள் கோவிலில் நடந்த காமலீலைகளைக் 'குருக்களின் காமராஜ்ஜியம்' என்ற தலைப்பில் ஜூனியர் விகடன் (9.12.2009) பத்திரிகையும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கருவறையில் நடந்த காம லீலைகளை நக்கீரன் (27-29.3.2018) பத்திரிகையும், ஆதியோடந்தமாக வெளியிட்டன.

சாமி சிலைகள் திருட்டுப் போன கும்பகோணம் கோயிலில், சிலையைத் திருடிய பார்ப்பனர் கைது செய்யப்பட்ட செய்தியும் (மாலைமலர், 17.3.2022) மக்களை அதிர்வடையச் செய்யவில்லை. இதெல்லாம் வாடிக்கைதானே என்று சொல்லி விட்டு மறந்து போய் விடுகின்றனர்.

இப்படிக் கடவுள்களுக்கு என்று இருக்கின்ற ஒரு சமூக மரியாதை கூட இல்லாமல், "கடவுள் இல்லை; அது வெறும் கல்" என்பதை உணர்ந்தே இந்தப் பார்ப்பனக் கூட்டம் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துச் சமூகங்கள் தான் நாணுகின்றனவே தவிர, இந்தப் பார்ப்பனர்களுக்கும், இந்து என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களுக்கும் துளிக்கூட வெட்கம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டுமென்றுப் பிற மதத்தினரோ, கடவுள் நம்பிக்கை அற்றவர்களோ போராடவில்லை. மாறாக இந்துக்கள் தான் போராடினார்கள். அதுவும் பக்தியில் திளைத்த, நேர்மையான இந்துக்கள் மட்டுமே போராடினார்கள். பார்ப்பனர்கள் அடிக்கும் கொள்ளைகளையும், ஒழுங்கீனங்களையும் பொறுக்க முடியாமல்தான் இந்து பக்தர்கள் பொங்கி எழுந்து, அரசு தலையிட வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை அடுத்தே இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது.

இந்த உண்மையை அறியாமல் அல்லது அறிந்திருந்தும் தெளியாமல் இந்து அறநிலையத்துறை என்பது நாத்திகர்களின் கோரிக்கையால் உருவானதைப் போன்ற பொய்க் கருத்தை உருவாக்கிப் பரப்பி வருகிறது பார்ப்பனியம்.

பார்ப்பனர்களும், பிற உயர்சாதியினரும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கோயில்களைக் கொள்ளைக் கூடாரமாக மாற்றி, அனுபவித்து வந்ததுதான் இந்தியக் கோயில்களின் வரலாறாக இருக்கிறது. இப்படிப்பட்ட கொள்ளைக் கூட்டங்களை நேர்மையும், துணிவும் உள்ள அதிகாரிகள் பிடித்து நீதிமன்றங்களில் நிறுத்தினால், நீதிமன்றத்தின் பூணூல் வளையத்தில் அவர்கள் நுழைந்து விடுகிறார்கள்.

அளவுக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் பிழைக்கும் அறக்கட்டளை நிர்வாகிகள், தீட்சிதர்கள் மீது புலனாய்வுத் துறையோ, அமலாக்கத் துறையோ எந்த விசாரணையும் நடத்துவதில்லை. இது ஒரு மானமில்லாத பிழைப்பு என்று உயர் வர்க்கத்தினர் எண்ணுவதே இல்லை போலும். இந்நிலையில் இந்து அறநிலையத்துறையின் தேவையைப் பக்தர்கள் உணர்வது தான் அனைவருக்கும் நல்லது.

இந்து அறநிலையத்துறை சட்டம் (1924) இயற்றப்பட்டு ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னர், திடீரென்று இந்து அறநிலையத்துறையின் மூலம் கோயில்களை மாநில அரசாங்கங்கள் கையகப்படுத்தி விட்டன என்று பிரதமர் முதற்கொண்டு அடிபட்டத் தொண்டர் வரை ஆர்ப்பரிக்கின்றனர்.

கோவில்கள் முதற்கொண்டு, பாராளுமன்றம் வரையிலும் பார்ப்பனப் பரதேசிகளும், பண்டாரங்களுமே மலிந்திருக்கும் இந்து ராஷ்டிரம் அமைப்பதையே முழுமூச்சாகக் கொண்டு செயல்பட்டு வரும் மதவெறியர்களை அன்றாடம் பார்த்தும் கூட, பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு சற்றும் உரைக்கவில்லை என்றால், 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மதவெறிச் சழக்கர்களை மாய்க்கவில்லை என்றால், மீண்டும் மத வெறியர்களுக்கு அடிமையாகப் போய்விடுவதென்னவோ திண்ணம்.
இந்து அறநிலையத் துறை தேவை! தேவை!! தேவை!!!

(நிறைவு) 
Reply all
Reply to author
Forward
0 new messages