சேரர் கோட்டை எனும் சரித்திரத்தொடர் வரலாறு டாம் காமிலே ரொம்ப நாள் முன்பு வெளிவந்தது. எழுதிய கோகுல் சேஷாத்ரி அவர்கள் முன்பே பைசாசம், ராஜகேசரி எனும் தொடர்களையும் அந்த தளத்திலே எழுதி புத்தகவடிவம் கண்டன. அவர் எழுதியதின் சுட்டி
http://www.varalaaru.com/Default.asp?groupno=3 . அதே போல் சேரர்கோட்டை தொடரும் புத்தகவடிவம் கண்டிருக்கிறது.
இந்தக்கதை ராஜராஜ சோழன் காந்தளூர் சாலை எனும் மலையாள கல்வி நிறுவனம் மீது படையெடுத்ததை ஒட்டி அமைக்கப்பெற்ற கதை. சேர தேச ஆட்சி முறைகள், களிரி சண்டைகள், ஆதித்த கரிகாலனின் கொலைக்கு காரணமானவர்களை கண்டறிய முனைதல் என பல இடங்களை தொட்டுச்செல்கிறது. இதை படிக்கும் போது பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக இருப்பது போன்ற ஒரு உணர்வு வருகிறது. கதையின் மிக முக்கியமான கரு ஒன்று ஊகிக்ககூடியதாகவே அமைந்திருக்கிறது என்பது கதையின் சுவாரசியத்தை குறைத்துவிடுகிறது. களரியில் வரும் ஒரு பிரயோகத்திற்கு விஷ்ணுவின் அவதாரங்களில் ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பிரயோகம் எப்படியிருக்கும் என்பது கொஞ்சம் புராண அறிவு இருப்பவர்களுக்கு ஊகிக்ககூடியது தான். பல கலைகளிலும் கற்றறிந்தவர்கள் என சொல்லப்படும் கதையின் வில்லனாக சித்தரிக்கப்படுபவருக்கும் சரி அவருடைய எதிராளிகளுக்கும் சரி கொஞ்சம் கூட புரியவில்லை என்பது ஆச்சரியமே. இதே போல் யார் அந்த முகம் தெரியாமல் இயக்குபவர் என்பவரும் அவரை கண்டுபிடிக்க முயற்சிப்பவர்களும் ஊகிக்க கூடியதாகவே இருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் கதையை ஞாபகம் வைத்திருப்பதால் அப்படி தோன்றுகிறதா இல்லை எல்லோருக்குமே அப்படியா என தெரியவில்லை.
நிற்க. கதையின் போக்கை புரிந்து கொள்ளவும் அதிலே வரும் சொற்றொடர்களுக்கும் வார்த்தைகளுக்கும் விளக்கம் அளித்திருப்பது அதுவும் அந்தப்பக்கத்திலேயே அளித்திருப்பது பாராட்டுக்குரியது. இதற்கு கோகுல் சேஷாத்ரி அவர்கள் செய்திருக்கும் முயற்சிகளும் பாராட்டப்படவேண்டியவை. கதையில் வரும் செய்திகளுக்கு ஆதாரங்கள், முழு கல்வெட்டுச்செய்திகள் என அவருடைய உழைப்பு நன்றான தெரிகிறது கதையில் வரும் செங்கிருத சுலோகங்களும் அவற்றின் விளக்கத்துடன் நன்றாக எழுதப்பட்டுள்ளன. படிக்க அலுப்பேற்ப்படுத்தான நடையில் எழுதியிருக்கிறார். பின் கதை தொடர்ச்சியின் கதையில் சொல்லப்படாத பல செய்திகளுக்கும் விளக்கம் அளித்திருப்பது புதிது. வேறு யாரும் இப்படி முயன்றிருக்கிறார்களா என தெரியவில்லை.
சரி இந்த புத்தகம் வாங்கின கதைக்கு வருவோம்.
உடுமலையில் புத்தகம் ஜூலை 21 முதல் கிடைக்கும் என வெளியீட்டு இதழில் சொல்லியிருந்தார்கள். சரி நாம் பொறுமையாக ஒரு 25 ஆம் தேதி வாங்கலாம் என்று போனால் இரண்டுபுத்தகமும் தனித்தனியாக காண்பிக்கப்பட்டிருந்து. உள்ளே கிளிக்கி போனால் ஒரே புத்தகம் 775 போட்டிருந்தது. என்னடா இது சோதனை என தளத்திலே இருந்து எண்ணிற்கு தொடர்பு கொண்டேன். எடுத்தவர் இரண்டும் ஒன்றாகவே கிடைக்கும் தனித்தனியாக கிடைக்காது, பதிப்பகத்திலே அப்படி தரமாட்டேன் என சொல்லிவிட்டார்கள் என்றார். சரிங்க இரண்டும் தான்வேண்டும் நான் வாங்கிவிடுகிறேன் என சொல்லி புத்தகத்தை தேர்ந்தெடுத்து கூடையில் போட்டுவிட்டு செக் அவுட் என்பதை அழுத்தினேன். அது இன்னோர் தளத்திற்கு போனது.
இது வழக்கமாக நடக்கும் ஒன்று தான். கிரெடிட் கார்டு மற்றும் இன்ன பிற விவரங்களை கையாள எல்லோராலும் முடியாது என்பதால் இதை செய்து தர தனியாக நிறுவனங்கள் இருக்கும். வாங்கப்போனால் அவர்களுடைய தளத்திற்கு போகும் அங்கு நம்முடைய விவரங்களை செலுத்தி வாங்கிவிட்டால் பின்பு முன்பிருந்த தளத்திற்கு கொண்டுவந்து விட்டுவிடும். இது போன்ற சேவையை செய்யும் ”பேபால்” பற்றி கேள்விப்பட்டிருக்ககூடும். உடுமலையிலே கடைசியாக சொன்னது நடக்கவில்லை. பணம் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பிறகு உடுமலைக்கு திரும்பவில்லை. சரி எவ்வளவோ முறை ஐஆர்சிடிசியில் நடந்தால் பொறுத்துக்கொள்கிறோம், ஒரு புத்தகத்திற்கு இதை பொறுத்துக்கொள்ளமாட்டோமா என சொல்லி திரும்பவும் அந்த உடுமலை அலுவலகத்திற்கு கூப்பிட்டேன். எடுத்தவுடன் ஆமாம் ஆர்டர் பண்ணியிருக்கிறீர்கள், புத்தகம் இப்போது இருப்பு இல்லை, வர ஒரு வாரம் ஆகும் என்றார். சரிங்க என சொல்லிவிட்டு திரும்பவும் தளத்திற்குள் போய் பார்த்தால் கூடையில் இன்னும் சேரர் கோட்டை இருந்தது. வாங்கிவிட்டால் இப்படி இருக்ககூடாது. பரவாயில்லை என சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
ஒருவாரம் கழித்து உடுமலையில் இருந்து அழைப்பு வந்தது. புத்தகம் வந்துவிட்டது நாளைக்கு உங்கள் கைக்கு வரும் என. அப்படியே ஜூலை 31 இல் புத்தகம் வந்து சேர்ந்தது. சுபம்.
கொசுறு: கோகுல் சேஷாத்திரி எழுதிய இராஜகேசரி, பைசாசம், அடுத்தவீடு திவாகர் எழுதிய விசித்திர சித்தன் நூல்களை புத்தககண்காட்சியில் வாங்கி பின்பு அவற்றை உடன்பிறப்பின் கையில் கொடுத்தது தனிக்கதை.
ராஜசங்கர்
(Rajasankar)