பழந்தமிழகத்தில் பருவகால மாற்றங்கள் எவ்வாறு இருந்தன என்பதை இலக்கியங்கள் மூலம் நம்மால் அறியமுடியும். குறிப்பாக ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகிய ஆறு வகைப் பருவங்களில் மதுரை மாநகரில் வாழ்ந்த இளம்பெண்கள் செயல்பாடுகளை விவரிக்கின்றார்.
மதுரை மாநகரத்து மகளிர் இளநிலா முற்றத்தில் தம் காதலருடன் படுக்கையில் கிடந்து பழைய நினைவுகளில் மனம் செலுத்தினராம். தங்களின் நினைவோட்டத்தில் அப்பெண்கள் கார்காலம், கூதிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் என வரிசையாக ஒவ்வொரு கால நிகழ்வுகளையும் நினைவு கூர்வதாக சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 — 125), பகுதியில் காட்டப்பட்டுள்ளது.
அந்தி சாயும் வேளையில், மென்மையான மயக்கும் மாலை ஒளியில், மதுரை மகளிர் தங்களது அன்புக்குரியவர் பாராட்டும் வகையில் ஒப்பனை செய்து கொண்டு நிலாமுற்றத்தின் பூப்பஞ்சணை இருக்கைகளில் அவர்களுடன் இனிமையுடன் அமர்ந்திருப்பர்.
"கார்காலம்" (ஆவணி - புரட்டாசி மாதங்களில்) . . . மகளிர் இடையில் பூப்போட்ட செந்நிறப் பட்டாடை அணிந்து, கூந்தலை முடித்து அதைக் குடச மலரால் அலங்கரித்து, சிறுமலைக்காட்டில் மலர்ந்த செங்கூதாளப் பூ, மணம் வீசும் அன்றலர்ந்த குறிஞ்சி மலர் ஆகியவற்றால் அலங்கரித்திருப்பர். செஞ்சாந்து பூசிய மார்பில் செங்கோட்டு வேரிப் பூச்சரம் அணிந்து, சிந்தூர மணப்பொடி பூசி நறுமண மூட்டிய உடலில் பவளக் கோவை அணிகலன் பூட்டியிருப்பர். மழைதரும் மேகத்திற்கு அரசனான, வச்சிரப் படையினைக் கொண்ட இந்திரனுக்கு ஆரவாரம் மிக்க மதுரையின் செவ்வணியை விளக்கமாகக் காட்டுமாறு, கார்காலத்தை ஆளும் அரசன் வாடைக் காற்றோடு வரும் கார்காலத்தில் மட்டுமின்றி ;
"கூதிர் காலம்" (ஐப்பசி - கார்த்திகை மாதங்களில்) . . . கட்டிடக்கலை பயின்ற வல்லுநர்களால் சிறப்பாகக் கட்டப்பட்ட, மேகம் தவழும் வகையில் உயர்ந்து நிற்கும் மாடத்தில், அழகிய மகளிர், அகிற் புகை தரும் விறகில் தீமூட்டிக் குளிர் காய்ந்தவாறு, மணக்கும் சந்தனம் பூசிய மார்பினையுடைய காதலரோடு இணைந்து இருக்கும் பொழுது, அவர்கள் குளிர் காற்றைத் தவிர்க்க சாளரங்களை அடைக்கும் கூதிர் காலமும் ;
"முன்பனிக் காலம்" (மார்கழி - தை மாதங்களில்) . . . செல்வச் சிறப்பு மிக்க இல்லங்களின் நிலா முற்றங்களில் மகளிரும் ஆடவரும் இளம் வெய்யிலில் வெயில் காய விரும்புவர், தெற்கில் மகர ரேகையில் இருந்து வடதிசைச் செலவாக ஞாயிறு வடதிசை நோக்கி நகரத் தொடங்கும் அக்காலத்தில், வானில் வெண்மேகங்கள் மிகக் குறைவாகக் காணப்படும் முன்பனிக் காலத்தில் மட்டுமின்றி ;
"பின்பனிக் காலம்" (மாசி - பங்குனி மாதங்களில்) . . . மிகப் பெரிய கடலின் வழியே கப்பல் கூட்டத்தால் தொண்டி துறைமுகம் வழியாகக் கொண்டுவரப்பட்ட அகிலும் பட்டுத் துகிலும் சந்தனமும் வாசம் மிக்க பொருட்களும் கருப்பூரமும் சுமந்து வந்த கொண்டல் என்னும் கீழ் காற்றோடு பாண்டிய மன்னனின் கூடல் நகரில் நுழைந்து, காமனது விழாவினைக் கொண்டாடும் பின்பனிக் காலமாகிய பங்குனித் திங்கள் நாட்களில்;
"இளவேனில் காலம்" (சித்திரை - வைகாசி மாதங்களில்) . . . குருக்கத்தி கொடிகளில் மலர்கள் மாலை போன்று மலரும் வகையில் அக்கொடிகள் வளரவும், காடுகளிலும் பூங்காக்களிலும் நறுமணமிக்க மலர்கள் பூக்கவும், பாண்டிய மன்னனின் பொதிகை மலையின் தென்றல் மதுரை மாநகர் நுழையவும், தன் துணையைக் கூடி மகிழவும் செய்யும் இனிமையான இளவேனில் அரசன் எங்குள்ளான் என்று வியக்க நேரும். பூங்கொடி போன்ற மகளிர், தம்மையுடைய காதலர்களோடு இளவேனில் பருவ காலத்தின் வரவை விரும்பி மகிழ்ந்து அதனால் வருத்தம் நீங்கிய காலத்தே;
"முதுவேனில் காலம்" (ஆனி - ஆடி மாதங்களில்) . . . கன்றுகள் விரும்பிய பிடியின் கூட்டத்தோடு அவற்றைக் காக்கும் களிறுகள் நடுங்கும்படி, வெயில் நிலைபெற்ற மலைசார்ந்த இடங்களில் காட்டுத்தீ தோன்றி பரவச் செய்த மேற்கிலிருந்து வீசிய காற்று கோடைக் காலத்தில் புகும் பொழுது மதுரை மாநகரை ஆட்சி செய்து கொண்டிருந்த வேனில் அரசன், தென்திசைச் செலவாக மகர ரேகையை நோக்கி முன்னேறி மதுரையை விட்டு வேறிடம் செல்ல நகர்ந்து கொண்டிருக்கும் வெயிலின் கடைசி நாள் அது.
இவ்வாறு ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு பருவ காலத்திலும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மதுரை மாநகரில் ஆடிமாத இறுதியில், கோடைக் காலம் முடியும் தறுவாயில், புறஞ்சேரியில் மாதரியின் இல்லத்தில் கண்ணகியை விட்டுவிட்டு கோவலன் மதுரை மாநகருக்குள் நுழைகிறான்.
சான்றாதாரம்:
சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம்: 4. ஊர் காண் காதைhttps://www.tamilvu.org/library/l3100/html/l3100016.htm