மங்கையர்க்கரசி நாயனார் வாழ்க்கைவரலாற்றையும் பாண்டியன் மதமாற்றத்தையும் பற்றிய புனைவுச்சரிதம் :-)

அன்றைய சோழநாடு சிற்றரசாக மட்டுமே இருந்தது. சங்ககால சோழர் தம் சீரையும், சிறப்பையும் இழந்து குறுநில மன்னர்களாக ஆட்சிபுரிந்து வந்தார்கள். உறையூரையும், தஞ்சையையும் முத்தரையர்கள் ஆண்டு வந்தார்கள். பல்லவநாட்டை மகேந்திரவர்மலல்லவன் ஆண்டுவந்தான். பாண்டியநாட்டை நெடுமாறபாண்டியன் ஆண்டுவந்தான்.
அன்றைய அரசியல் சதுரங்கத்தில் திருமணமே முக்கியமான காய்நகர்த்தல். அதனால் சோழர்-பாண்டியர் திருமண உறவு நிகழ்ந்தது. நெடுமாறபாண்டியன் சோழகுலவிளக்கான மானி எனும் நங்கையை பெண்கேட்டு தூதனுப்பினான்.
சபாநாயகன் தில்லைநடராஜன் தாளையே தினம் தியானித்து வந்த மானியம்மையார் தன்னைப்பெண் கேட்டு வந்தது ஓர் சமணன் என்பதையறிந்தார். ஆனால் தில்லைநடராஜன் தாண்டவமாடும் அவரது மனதில் சமணர், சைவர் என எந்த பாகுபாடும் இருக்கவில்லை. பெற்றோர் கைகாட்டிய மணமகனை மணந்தார். பாண்டிமாதேவியாக அரியணை ஏறினார்.
நெடுமாறபாண்டியன் சமணநெறியில் திளைத்து வாழ்ந்த உத்தமன். ஈ எறும்புக்கும் தீங்கு நினையாதவன். மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்ற அருகனடிபணிந்து சமண நெறிகளுக்கேற்ப ஆட்சி செய்து வந்தான். பலதாரமணம் புரிவது அரசநெறியாக இருக்க மானியையன்றி வேறொரு பெண்ணை மனதாலும் தீண்டாதவன். மனைவியின் மேல் மாறாகாதல் கொண்டு அவரை "மங்கையர்க்கெல்லாம் அரசி" என அன்புடன் அழைத்து வந்தவன். அதனால் மானி எனும் இயற்பெயர் மறைந்து மங்கையர்க்கரசி என்றே அவரை பாண்டியமக்கள் அழைத்து வந்தார்கள்.
இச்சூழலில் பாண்டிமாதேவியின் தந்தையும், தாயும் மகளைக்காண பாண்டியநாடு வருகிறார்கள். இராமனும், சீதையும் போல் மகிழ்வுடன் அரசாளும் தம்பதியினரைக்காண்கிறார்கள். பெற்ற தாய், தந்தையரை உபசரிக்கும் விதத்தில் மாமனார், மாமியாரை உபசரிக்கிறான் நெடுமாறன். அவர்களுக்கு வேண்டியதைக்கொடுக்கவும், நாட்டை சுற்றிக்காட்டவும் அமைச்சர் குலச்சிறையாரைப் பணிக்கிறான்.
காலை உணவுண்டு தாம்பூலம் தரித்தபின் "பாண்டியநாட்டு உணவு எப்படி இருந்தது?" என சம்பிரதாயமாக வினவுகிறார் குலச்சிறையார்
"ம்ஹ்ம்ம்.." என உதட்டைபிதுக்குகிறார் சோழர்
"உணவு பிடிக்கவில்லையா? வேறு ஏதேனும் கொண்டுவரசொல்லட்டுமா?" என அதிர்ச்சியுடன் வினவுகிறார் மங்கையர்க்கரசியார்
"என்னவோ போம்மா. பாண்டியநாடு முத்துடைத்து என்பார்களே என நினைத்து இங்கே கடல்வளம் நிரம்பிய பாண்டியநாட்டில் கருவாட்டுக்குழம்பும், நண்டுப்பொறியலும் கிடைக்கும் என வந்தேன். நீ என்னடாவென்றால் காலையில் பருப்புப் பொங்கலையும், பணியாரத்தையும் கொடுக்கிறாய். உணவில் வெங்காயம், பூண்டு என எதையும் காணோம். இதை எப்படியம்மா தினமும் சாப்பிடுவது?"
"இல்லை தந்தையே. வெங்காயமும், பூண்டும் காம உணர்வை தூண்டுபவை என்பதாலும், பூமிக்கு அடியில் இருக்கும் அதை வெட்டி எடுப்பதால் நுண்ணுயிரிகள் பாதிக்கபடுமென்பதாலும் சமணநெறி அதைத்தவிர்க்க வலுயுறுத்துகிறது. காமம், க்ரோதம் ஆகியவை கீழான உணர்வுகள்.."
"என்னம்மா காமம் கீழானது, மேலானது என என்னென்னோ சொல்கிறாய்? மன்னர்களுக்கு அதெல்லாம் பொருந்தாது. உன் தாய் எனக்கு எத்தனாவது மனைவி என்ற கணக்கே எனக்கு தெரியாது. பகைநாட்டை பிடித்து அவள் தகப்பனை திரைசெலுத்த வைத்து இவளைப்பிடித்து வேளமேற்றினேன். அப்புறம் கல்யாணமும் செய்துகொண்டேன். எனக்கு வெங்காயம், பூண்டு வேண்டாமென்றால் என்ன அர்த்தம்?"
"இம்மாதிரி கீழான செயல்களை எல்லாம் இவர் செய்வதில்லை தந்தையே. இவர் ஏகபத்தினி விரதர்"
'நான் ஏகபட்ட பத்தினி விரதனம்மா. மகாராஜா என்றால் அந்தப்புரம் ஜே, ஜே என இருக்கவேண்டாமா? சிவப்பரிசிச் சோற்றை மூடுமளவுக்கு உடும்புக் கறிப் பொரியலைப் சாப்பிட்டு, கத்தியை எடுத்து பகைவன் தலையை வெட்டித்துன்டாடி நாட்டை விரிவுபடுத்தவேண்டாமா? உன் கணவன் என்னடாவென்றால் எந்த நாட்டின் மேலும் படையெடுக்க மாட்டேன் என்கிறான். ஈ, எறும்பை மிதிக்ககூடாது என் மயிற்பீலியால் பாதையைக்கூட்டியபடி நடக்கிறான். இப்படியே விட்டால் இவன் சாமியார் ஆகிவிடுவானே ஒழிய சாம்ராஜ்யாதிபதியாக்கூடிய எந்த வாய்ப்பையும் காணோம்." என்றார்
"போர் புரிந்து என்ன சாதிக்கபோகிறோம் அப்பா? கலைகளையும், தமிழையும் வளர்த்துவந்தாலே போதுமன்றோ?"
"என்னம்மா உலகம் தெரியாத பெண்ணாக இருக்கிறாய்? இப்படித்தான் பல்லவமன்னன் மகேந்திரவர்மன் சமணனாக இருந்த காலத்தில் இலக்கியம், சங்கீதம் என நூல்களை எழுதிக்கொண்டும், ராகங்களை பாடிக்கொன்டும் நாட்டை விரிவுபடுத்தாமல், போர் தொடுக்காமல் விட்டுவிட்டான். வடக்கே இருந்து வந்த புலகேசி காஞ்சியை சின்னாபின்னபடுத்திவிட்டுபோய்விட்டான். ஹர்ஷன் மட்டும் புலகேசி நாட்டின் மேல் படையெடுக்கவில்லையெனில் பல்லவர் குலமே அழிந்திருக்கும். நல்லவேளை மகேந்திரவர்மன் மகன் நரசிம்மவர்மன் தந்தையைப்போல சங்கீதகலாநிதியாக இல்லை. பெரும்படையை திரட்டி சாளுக்கியரை அழிக்க வாதாபிக்கு படையெடுத்துள்ளான். அவன் தளபதியாக போயிருக்கும் பரஞ்சோதி கூட நம் சோழநாட்டின் திருச்செங்காட்டங்குடியைச் சேர்ந்தவர் தான். அவரை விட சிறந்த சிவபக்தரை உலகில் யாரும் பார்க்கமுடியாது. ஆனால் அவர் ஒன்றும் சாமியாராகி, பூஜை புனஸ்காரம் செய்துகொண்டு இருக்கவில்லையே? படையெடுத்து வாதாபியை அழிக்கவலவா போயிருக்கிறார்? நன்றாக யோசித்துப்பாரம்மா....சைவநெறியை தமிழர்கள் பின்பற்றி, மூன்றுவேளையும் புலாலுணவை உண்டு, ஏறுதழுவுதல் முதலான வீரவிளையாட்டுக்களை செய்து வந்த காலகட்டத்தில் தமிழர் வீரம் உலகெங்கும் பரவியது. இமயவரம்பன் எனப்பெயர் பெரும் அளவு வடக்கே படையெடுத்து கனக, விசயர் முடிதனை நெறித்து கண்ணகிக்கு கோயில்கட்டினார்கள். மீண்டும் அதேபோல தமிழ்மன்னனாவது மீண்டும் கடாரம், கங்கை எனப்படையெடுத்து கங்கைகொண்ட சோழன் எனபெயர்வாங்கவேண்டும் என்பதே என் ஆசை. இப்போது எழுதிவைத்துக்கொள் அம்மா..அப்படிசெய்யும் தமிழ்மன்னன் நிச்சயம் ஒரு சைவனாகவே இருப்பான். அப்பேர்ப்பட்ட வீரம் தமிழ்மண்ணில் மீண்டும் வரவேண்டுமெனில் இங்கே மீண்டும் சைவம் தழைக்கவேண்டும். சோழநாடெங்கும் சிவாலயங்கள் எழும்பவேண்டும். ஆனால் உன் கணவன் என்னடாவென்றால் ஈ, எறும்பை மிதிக்கமாட்டேன் எனச்சொல்லி பருப்புசாதமும், வெண்டைக்காய்பச்சடியும் சாப்பிடுகிறான். இப்படி இருந்தால் நாடு என்ன ஆவது?" என்றார்.
"மன்னரை சைவர் ஆக்குவதே நாட்டைக்காக்கும் வழி அரசியாரே" என்ற குலச்சிறையார் "அப்பர், சம்பந்தர் என இரு நாயன்மார்கள் பல்லவ, சோழநாடெங்கும் சைவநெறியை பரப்பி வருகிறார்கள். அவர்களைக்கூட்டிவந்து ஏதேனும் சதியாலோசனை செய்து மன்னரை சைவமாக்கிவிடலாம்" என்றார்
"அய்யோ..சதியாலோசனை எல்லாம் செய்யவேண்டாம். அது தவறு" என்றார் மங்கையர்க்கரசி நாயனார்
"சரி..சதியாலோசனை எனும் வார்த்தை பிடிக்கவில்லையெனில் ராஜதந்திரம் என வைத்துக்கொள்ளுங்கள். அடிப்படையில் சதி செய்வது, கோல்மால் செய்வது, தில்லுமுல்லு செய்வது, ராஜதந்திரம் செய்வது எல்லாமே ஒரே விசயம் தான். கொச்சைத்தமிழில் தில்லுமுல்லு, மேல்தட்டுத்தமிழில் ராஜதந்திரம். பிராகிருதத்தில் கோல்மால், யவனர் மொழியில் கிராண்ட் ஸ்ட்ராடஜி" என்றார் குலச்சிறையார்
"சரி அப்ப சம்பந்தரைக்கூட்டி வர ஏற்பாடு செய்துவிடுங்கள்" என்றார் மங்கையர்க்கரசியார்
அடிகள் ஆலவாய், படி கொள் சம்பந்தன்,
முடிவு இல் இன்தமிழ் செடிகள் நீக்குமே.
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.
“சென்ற காலத்தின் பழுதிலாத்திறமும் இனி எதிர்காலத்தின் சிறப்பும்
இன்று எழுந்தருளப்பெற்ற பேறிதனால் எற்றைக்கும் திருவருடையோம்
நன்றியினால் நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ்வேந்தனும் உய்ந்து
வென்றிகொள் திரு நீற்றொளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம்
--