சாம்பலில் இருந்து எழுந்தவர் — கரந்தை ஜெயக்குமார்

17 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 21, 2025, 4:10:25 PM6/21/25
to மின்தமிழ்
சாம்பலில் இருந்து எழுந்தவர் 
— கரந்தை ஜெயக்குமார்
20 ஜூன் 2025

     திருப்பதி சென்று திரும்பி வந்தால், ஓர் திருப்பம் நேருமடா.

     திருப்பம் நிகழும், வாழ்வு மலரும் என்று நம்பித்தான், நண்பர்கள் பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து, தஞ்சைக் கரந்தையில் இருந்து, ஒரு வேனில் திருப்பதி புறப்பட்டனர்.
     வழியில் ஒரு திருப்பம் வந்தது.
     வெகுவேகமாய் ஒரு பேருந்தும் வந்தது.
     ஒரு சில நொடிகள்தான், வேன் முற்றாய் உருக்குலைந்து போனது.
     ஒருவர் அவ்விடத்திலேயே, தன் வாழ்வை இழந்தார்.
     பலருக்கும் படுகாயம்.
     ஒருவருக்கு முதுகின், தண்டுவடத்தில் டி5 மற்றும் டி6 என்னும் இரண்டு எலும்புகள் சுத்தமாய் நொறுங்கிப் போய்விட்டன.
     குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தனர்.
     கும்பிடாத தெய்வமில்லை.
     வேண்டாத சாமி இல்லை.
     செல்லாத ஊரில்லை.
     பார்க்காத மருத்துவர்கள் இல்லை.
     திருப்பதி பெருமாளோடு சேர்ந்து, மருத்துவர்களும் கை விரித்துவிட்டனர்.
     நெஞ்சுக் கூட்டிற்கும் கீழே, உடல் முழுமையாய் செயல் இழந்து விட்டது.
     உணர்வினை முற்றாய் இழந்து விட்டது.
     சிறு வயதிலேயே, தன் தந்தையை இழந்து, குடும்பப் பாரத்தை சுமந்தவரின் கால்கள், உடலைக்கூட சுமக்க வழியின்றி, வலுவிழந்து துவண்டு போய்விட்டன.
     அரசுப் பேருந்தில் நடத்துநராய் பணியாற்றி, தன் ஊதியத்தைச் சிறுகச் சிறுகச் சேர்த்துச் சேர்த்து, தன் சகோதரிகளைக் காத்து கரையேற்றியவர், கரை ஒதுங்கக்கூட வழியின்றி நான்கு சுவர்களுக்குள் முழுவதுமாய் முடங்கிப் போனார்.

     நண்பர்கள் தொடர்ந்து வந்தனர்.
     பேசிப் பேசி, உடலைப் போல் உள்ளமும் துவண்டு போகாமல், தூக்கி நிறுத்தினர்.
     படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தார்.
     உள்ளத்தை அறையை விட்டு வெளியே ஓட விட்டார்.
     நண்பர்கள் கொடுத்த நூல்களை மெல்ல மெல்லப் புரட்டத் தொடங்கினார்.
     படிக்கத் தொடங்கினார்.
     படிக்கப் படிக்க உள்ளம் சிறகு விரித்து, வானில் பறக்கத் தொடங்கியது.
     பறக்கப் பறக்க, மனம் படிப்புலகில் இருந்து தாவி, எழுத்துலகில் போய் அமர்ந்தது.
     ஏடெடுத்து எழுதத் தொடங்கினார்.
     தன் வாழ்வையே கதையாக்கி,
     தான் எதிர்கொண்ட, விபத்தினையே, கதையின் கருவாக்கி,
     கற்பனையூரில் இருந்து அழைத்து வந்த கண்ணம்மாவை, தன் உள்ளம் கவர் காதலியாக்கி, முதல் நாவலை எழுதினார்.
     இப்படிக்கு கண்ணம்மா.
     நாவலைப் படித்தவர்கள் எல்லாம் மனம் கலங்கித்தான் போனார்கள்.

     அன்று முதல் எழுதுகோலே, இவரது ஊன்றுகோலாய் மாறிப்போனது.
     தொடர்ந்து எழுதத் தொடங்கினார்.
     சிறுகதைகள்.
     குறு நாவல்கள்.
     நாவல்கள் என எழுதிக் கொண்டே இருக்கிறார்.
sivakumar.jpg

SM-G615F என்கிற செயற்கை உளவாளிக்குத் தெரிந்த ஏழு காரணங்கள்.
நூலின் பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா?
கதையும் வித்தியாசமானதுதான்.
போர்த்துகீசியனின் விரல்கள்
விளையாட்டை மையப்படுத்திய நாவல்.
இந்நாவலுக்கானக் கதாநாயகனைத்
தன் தந்தையை மனதில் வைத்தே படைத்திருக்கிறார்.
லங்கூர்
சிறுகதைகளின் தொகுப்பு
மற்றும்
நியமம்
வெளிவர முடியாமலும் போகக்கூடிய QWERTY keboard லிருந்து
என புத்தகங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

தொடர்ந்து இவர் எழுதுவதற்கானக் காரணத்தை அறிந்தபோது, மனம் கனத்துத்தான் போய்விட்டது.
என்னைப் பொறுத்தவரை எழுத்தென்பதை
வாழ்தலுக்கானப் பயிற்சியாகவும்,
மரணத்தைத் தள்ளிப் போடுவதற்கான ஒத்திகையாகவும்தான்
செய்து கொண்டிருக்கிறேன்.
sivakumar2.jpg
     எழுத்து.
     வாழ்தலுக்கானப் பயிற்சி.
     மரணத்தைத் தள்ளிப்போடுவதற்கான முயற்சி.
     நிச்சயம், பயிற்சியிலும், முயற்சியிலும் வென்று வாகை சூடுவீர் நண்பரே.
     மனமார்ந்த வாழ்த்துகள்.

     எழுத்து வாழ்தலுக்கானப் பயிற்சியைக் கொடுக்கலாம்.
     ஆனால் வாழ்வதற்கானப் பொருளைக் கொடுக்குமா?
     வீட்டு வாடகையைக் கொடுக்குமா?
     உண்ண உணவைக் கொடுக்குமா?
     உடுக்க உடையைக் கொடுக்குமா?
     மருந்து மாத்திரைகளைக் கொடுக்குமா?
     உடனிருக்கும் வயது முதிர்ந்த தாயைக் காக்குமா?
     எனவே, பொருளீட்டியாக வேண்டும்.
     நடக்க இயலாது.
     அதிகபட்சம், படுக்கையில் இருந்து, கைகளை ஊன்றி, எழுந்து உட்காரலாம், அவ்வளவுதான்.
     உலகமே, ஒரு கட்டில்தான்.
     எப்படிப் பொருள் ஈட்டுவது?
     கணினி கைகொடுத்தது.
     மடி கணினியை இவருக்காகத்தான் கண்டுபிடித்திருப்பார்கள் போலிருக்கிறது.
     கர்ணனுக்கு கவச குண்டலம் போல், மடி கணினி இவரது உடலின் ஓர் அங்கமாகவே மாறிப் போனது.
     மெல்ல மெல்லக் கற்றார்.
     புத்தக வடிவமைப்பில் தேர்ந்தோர்.

     நம்மில் பலரும் எழுதுகிறோம்.
     கதைகள் எழுதுகிறோம், கவிதைகள் எழுதுகிறோம்.
     வலைப் பூவில் எழுதுகிறோம், முக நூலில் எழுதுகிறோம்.
    பலர் கவிதைகளை எழுதி, எழுதி, பக்கம் பக்கமாய் வீட்டிலேயே பத்திரமாய் வைத்திருக்கிறார்கள்.
     பலரும் தங்கள் எழுத்துக்களை நூல் வடிவில் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
     இருப்பினும், பெருந்தொகை செலவு செய்ய அஞ்சியே ஒடுங்கிக் கிடக்கிறார்கள்.
     இப்படிப்பட்ட எழுத்தாளர்களுக்கு இவர்தான் அரு மருந்து.
     யாருமே நினைத்துக்கூடப் பார்க்காத, மிகக் குறைந்த கட்டணத்தில், நூலினைக் கட்டமைத்து, அச்சிட்டுக் கொடுக்கிறார் இவர்.
     500, 1000 என்று அதிக எண்ணிக்கையில் புத்தகங்களை அச்சிட்டு, விற்பதற்கு வழியின்றி, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
     வெறும் 50 புத்தகங்களைக்கூட, வேண்டுமானால், இன்னும் குறைந்த எண்ணிக்கையில், புத்தகங்களை அச்சிட்டு வாங்கித் தருவார்.
     தானே, தன் மடிகணினி மூலம், நூலை வடிவமைத்து, மின்னஞ்சல் மூலம், சென்னைக்கு அனுப்புவார்.
     மூன்றே நாட்களில், புத்தகங்கள் அச்சாகி, அஞ்சல் வழி வந்து, உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டும்.

குறைந்த செலவு.
துல்லியமான அச்சு.
தரமான நூல்.
தாங்கள் எழுதுகிறீர்களா?
தங்கள் எழுத்துக்களை நூல் வடிவில் பார்க்க விரும்புகிறீர்களா?
அலைபேசியை எடுங்களை.
அழையுங்கள் இவரை.

லக்ஷ்மி சிவக்குமார்.
99 94 38 49 41
63 81 89 82 02
Ptshiv...@gmail.com
Reply all
Reply to author
Forward
0 new messages