
சங்க காலத்திலிருந்தே விளக்கேற்றுதல் சிறப்புக்குரிய நிகழ்வாகக் கருதப்பட்டது. பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் கண்சிமிட்டும் விளக்கேற்றல் காட்சிகள் அந்நாளைய சமூகம் அதற்கு எத்தனை முதன்மை அளித்திருந்தது என்பதைச் சுட்டுகின்றன. குளத்தில் மூழ்கித் தூய்மை பெற்ற பிறகே மகளிர் இறையகத்தில் விளக்கேற்றியதாகப் பட்டினப்பாலை பேசுகிறது.
நந்தாவிளக்கு, கார்த்திகை விளக்கு, மலரணி விளக்கு எனச் சங்கம் சுட்டும் விளக்கு வகைகள் பத்திமைக் காலத்தில் பலவாய்ப் பெருகின. விளக்கேற்றலை அருஞ்செயலாய்ப் போற்றும் அப்பர் பெருமான், இறைவன் அருளைப் பெற உடல் உறுப்புகள் ஆற்றக்கூடிய பணிகளைப் பேசுமிடத்தில், ஒளி உமிழும் விளக்குகளை இயன்றபோதெல்லாம் ஏற்றுவதே விரல்கள் பெற்றதன் பயன் என்கிறார். இவ்விளக்கேற்றும் பணி பல்லவ, பாண்டிய, சோழர்காலத்தில் ஓர் அறமாகவே கைக்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டுக் கோயில்களிலுள்ள பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளில் பெரும்பாலனவை விளக்கேற்றல் பற்றியே பேசுகின்றன.
அக்காலத்தே தமிழ்நாட்டிலிருந்தவிளக்குகளின் வகைகள், அவை ஏற்றப்பட்ட முறை, விளக்கேற்றலின் நோக்கம், அதற்கெனத் தரப்பட்ட கொடைவகைகள், அதையொற்றி உருவான அறக்கட்டளைகள், அவை செயற்பட்ட ஒழுங்கு - தணிக்கை செய்யப்பட்ட பாங்கு, கொடையாளர்களின் விளக்கேற்றல் தொடர்பான விழைவுகள் என இச்செயல் சமுதாயத்தின் பல்வேறு நம்பிக்கைகள், நடைமுறைகள், ஒழுகலாறுகள் குறித்த வரலாற்று விளக்கமாக விளங்கியதைக் கல்வெட்டுகள் விரிவாகப் பேசுகின்றன.
'உலகும் சந்திரரும் ஆதித்தரும் உள்ள அளவும்' ஒளிர வேண்டும். 'பூமியும் ஆகாசமும் உள்ள மட்டுக்கெல்லாம்' வெளிச்சம் தரவேண்டும் என்று வேண்டி நிகழ்ந்த இந்த இறையக விளக்கேற்றல் பேரறமாகக் கருதப்பட்டதால், சமுதாயத்தின் பல தள மக்களும் பல்வேறு நோக்கங்களுக்காகக் காலங்காலமாகக் கோயில்களில் விளக்கேற்றியுள்ளனர். உறவுகளின் நலம் காக்கவும் நீத்தார் நினைவு போற்றவும் நிகழ்வுகளின் சிறப்பு குறிக்கவும் விளக்கேற்றினாற்போலவே குற்றங்களுக்குத் தண்டனையாகவும்கூட விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. கோயில்களில் சுடர்விட்ட இத்தகு விளக்குகள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு கதை இருக்கிறது. அவற்றுள், பழுவேட்டரையர் காலத் தரவுகள் குறிக்கத்தக்கவை.
அரியலூர் மாவட்டப் பழுவூர், பழுவேட்டரையர்கள் எனும் சிற்றரசமரபினரின் கீழ்ச் செழிப்புடன் விளங்கிய பேரூராகும். அங்கு அவர்கள் எடுப்பித்த கலைக்கோயில்களில் பதிவாகியுள்ள கல்வெட்டுகள் சில, அக்காலத்தே நேர்ந்த இழப்புகளையும் அவற்றின் விளைவான விளக்குகளையும் படம்பிடிக்கின்றன. பழுவேட்டரையரின் படைவீரர் பலதேவன் வயிரியும் மல்லூர் கிழவன் நம்பனும் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவின் காரணமாக வாளேந்திச் சண்டையிட, அதில் வயிரி, கொல்லப்பட்டார். அதற்கான தண்டனையாகக் கோயில் இறைத்திருமுன் நம்பன் விளக்கேற்ற வேண்டுமென மன்னர் ஆணையிட, வயிரியின் நினைவு நிலைக்குமாறு பழுவூர்க் கோயிலில் நந்தாவிளக்கு ஒளிர்ந்தது.
குஞ்சிரமல்லன் முருக்கனுக்கும் தென்பாளன்பாடி வாழ் ஐயாறன் கானனுக்கும் இடையிலான சச்சரவில் முருக்கன் உயிரிழந்தார். அவ்விழப்பிற்கு ஈடாக, பழுவூர்க் கோயிலில் முருக்கன் நினைவாக ஐயாறன் நந்தாவிளக்கேற்றுமாறு ஆணையிடப்பட்டது. குற்றம் இழைத்தவர் பிடிபடுகையில் தண்டனை உடன் விளைவாகிறது. அதற்கு இவ்விரு நிகழ்வுகளும் சான்று. குற்றவாளி தப்பிவிட்டால் ...?
பழுவூரில் வாழ்ந்த சோமன் புவனியைக் கத்தியால் குத்தி உயிரிழக்கச் செய்த அரங்கன்பட்டன், ஊரார் பிடியில் சிக்காமல் தப்பிவிட்டார். தப்பிய அரங்கனை, ஊரார் யார் கண்டாலும் அவர்களே அவனுக்குத் தக்க தண்டனை வழங்கிட ஆணையிட்ட நகராட்சி, இறந்தவர் நினைவு போற்றிப் பழுவூர்க் கோயிலில் நந்தாவிளக்கேற்றும் பொறுப்பைத் தனதாகக் கொண்டது.
குற்றம் செய்தவர் தப்பிவிடுகையில் குற்றத்தின் விளைவால் உயிரிழந்தவருக்காக அரசரே விளக்கேற்றியதையும் பார்க்கமுடிகிறது. முதுகுடியில் வாழ்ந்த வீரக்கலி அரங்கனும் மாதேவடிகளும் சச்சரவிட்டபோது, வீரக்கலிஅரங்கன் கொலையுண்டார். குற்றம் இழைத்த மாதேவடிகளைக் கண்டுபிடிக்க முடியாத சூழலில், பழுவேட்டரையர் குமரன் மதுராந்தகனே இறந்தவர் நினைவாகக் கோயிலில் நந்தாவிளக்கேற்றியுள்ளார்.
பழுவூர் எண்ணெய் வணிகர் குமிழிமனப்பன் கோலொன்றால் அடிபட்டு இறந்தார். கோலை எறிந்து அவர் உயிரிழக்கக் காரணமானவரை அறியமுடியாத நிலைில், அவர் சார்ந்திருந்த வளஞ்சியர் என்னும் வணிகக்குழுவினர் மனப்பன் நினைவாகக் கோயிலில் நந்தாவிளக்கேற்ற நிதியளித்தனர். குமிழிமனப்பனின் மனை, நிலங்கள் ஆகியவற்றை அவர் துணைவியும் வழியினரும் நிலவும் கதிரும் உள்ளவரை வரி செலுத்தாது அனுபவித் துக்கொள்ள ஊராட்சி துணையானது. பழுவூர்க் கல்வெட்டுகள் பகிர்ந்துகொள்ளும் இந்த ஐந்து நிகழ்வுகளிலும் உயிரிழப்பு நேர்ந்துள்ளது. அந்த உயிரிழப்பை நேர்செய்யக் குற்றம் செய்தவர்களோ, ஊராட்சியோ, அரசோ, இறந்தவர் சார்ந்த குழுவினரோ கோயில்களில் விளக்கேற்றியுள்ளனர். இறந்தவரின் ஆன்ம அமைதிக்கான அறமாக இவ்விளக்குகள் சுடர்விட்டன.
எனில், குற்றஞ்செய்து தப்பியவர் களுக்குத் தண்டனை இல்லையா? இந்தக் கேள்விக்கு ஐந்து கல்வெட்டுகளில் ஒன்று தெளிவாக விடைசொல்கிறது. சோமன்புவனி இறக்குமாறு அவனைக் குத்தித் தப்பிய அரங்கன் பட்டனை, 'கண்டாரே கலக்கப் பெறுக' என்ற பழுவூர் நகரத்தாரின் ஆணை பொருள் பொதிந்ததல்லவா!
--