வரலாற்று ஆய்வுகள் — மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி

21 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 1, 2026, 10:51:13 AM (10 days ago) Apr 1
to மின்தமிழ்
பாச்சில் மேற்றளியும் பைஞ்ஞீலி கோயிலும்

இரா. கலைக்கோவன்,
இயக்குநர், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி

நன்றி: திருநெல்லை 
மார்ச் 2026 இதழ்
பக்கம் 25-29

25.jpg
26.jpg
27.jpg
28.jpg
29.jpg

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​---------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Apr 6, 2026, 11:08:17 AM (5 days ago) Apr 6
to மின்தமிழ்
மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்

இரா. கலைக்கோவன்
 
கழுவேற்றம்
அன்புள்ள வாருணி, நலந்தானே. 'விளக்கேற்றலில் மகிழ்ந்தேன்; சிவபெருமானின் ஆடற்காட்சிகளிலும் காரைக்கால் அம்மையின் அன்பிலும் நெகிழ்ந்தேன்; மன்னர் திருமலையின் எளிமைப் பெருநோக்கில் உருகினேன்; இப்போதோ, தொடர்ந்து குற்றங்களும் தண்டனைகளுமாய்க் காட்சிப்படுத்துகிறீர்கள்! கோயில்கள் பதிவகங்கள் என்று பலமுறை நீங்கள் கூறியிருந்தபோதும், இவை எல்லாமும் அங்குக் காட்டப்பட்டுள்ளன என்பதை அறிய நேர்கையில், கோயிலைப் பற்றிய பார்வை விரியவேண்டும் என்பதை முற்றிலுமாய் உணர்கிறேன். பதிவகம் என்பதன் உட்பொருளும் அறிகிறேன்' என்று நீ எழுதியுள்ளாற் போலவே, இத்தொடரைப் படிக்கும் அன்பர்கள் சிலரும் தெரிவித்துள்ளனர்.

கோயில்கள் பத்திமைக்காக எழுந்தவைதான் என்றாலும், அக்காலத்தே மக்கள் பெரும் அளவில் கூடுமிடங்களாகவும் அவை விளங்கியமையால், அவற்றைக் கட்டமைத்தவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் அறிவூட்டலுக்காகவே சமூகத்தின் அனைத்துப் பக்கங்களையும் அங்குப் பாடமாக்கினர். ஒவ்வொரு கோயிலும் அது உருவான, உருமாறிய காலங்களின் கண்ணாடியாகவே திகழ்வதைக் கோயிலுடன் உறவாடி வாழ்பவர்கள் அறியாதிருக்க முடியாது. மீனாட்சிக் கோயிலில் வலம் வந்த ஒவ்வொரு நாளும், கோயில் எங்களுடனும் நாங்கள் கோயிலுடனும் கூடிக் கலந்ததாலேயே பலவும் பார்க்க முடிந்ததுடன். அவற்றின் பாடங்களும் உணர்ந்து கோயிலுடன் ஒன்றவும் இயன்றது.

மீனாட்சிக் கோயிலின் ஒவ்வோரிடமும் காலநிரலான வாழ்க்கைப் படப்பிடிப்புகளைப் பெற்றிருந்தாலும், கொண்டதும் இணைந்ததுமாய் அதன் ஆயிரங்கால் மண்டபம் உள்ளடக்கியிருக்கும் சிற்ப அற்புதங்கள் அதை வரலாற்றுக் களஞ்சியமாய் மாற்றியுள்ளன. மண்டபக் கூரையைத் தாங்கியிருக்கும் நெடுந்தூண்கள் ஒன்றின் கீழ்ப்பகுதியில் நாங்கள் பார்த்த சிற்பம் நாயக்கர் காலத் தண்டனை முறைகளுள் ஒன்றான கழுவேற்றத்தின் படப்பிடிப்பாய்ப் புன்னகைத்தது.

'கழுவேற்றல்' என்ற அந்தத் தண்டனைமுறை தமிழ்நாட்டில் வழக்கிலிருந்ததைப் பதிகம் படித்த அனைவரும் அறிவர். தேவாரமூவரில் ஒருவரான ஞானசம்பந்தரின் மதுரைப் பயணமும் அப்போது அங்கு நிகழ்ந்தனவும் அவற்றின் பலனாய் விளைந்த கழுவேற்றமும் சேக்கிழாரின் பெரிய புராணம் பயின்ற அனைவருக்கும் தெரியும். பொதுக்காலம் 6ஆம் நூற்றாண்டில் நிறைவேறிய அந்தக் கழுவேற்றம் சங்க காலத்தில் இருந்ததா என்பதறிய இலக்கியப் பக்கங்களைப் புரட்டியபோது நான்கு சுட்டல்கள் கிடைத்தன. அவற்றுள் முதன்மையானது பெரும்பாணாற்றுப்படையின் பாடலடிகள் எனலாம். எயினர் குடியிருப்புகள் உள்ள ஊரின் வாயிலை வருணிக்க முற்பட்ட புலவர், நெடிய முனையுடைய வலிமையான கழுமரங்கள் அங்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவைபகைவரைக் குத்துவதற்குப் பயன்பட்டதாக இப்பாடலுக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் கூறுகிறார்.

புலவர் தமிழகனை நீ அறிவாய் வாருணி. நாமிருவருமே அவரைச் சந்திக்க அவர் இல்லம் சென்றிருக்கிறோம். மெத்தப் படித்தவர். பெருநூலகம் கொண்டிருப்பவர். அங்குள்ள நூல்கள் அனைத்தும் அவர் கைப்பட்டு மனம் சென்றவை. அவரிடம் மீனாட்சிக் கோயில் சிற்பம் குறித்து உரையாடியபோது, 'பழங்காலத் தண்டனைகள்' என்ற தலைப்பில், தாம் குறிப்புகள் சேர்த்திருப்பதாகவும், அருட்பா, பிரபந்தம், திருவிளையாடல் புராணம் இவற்றிலும்கூடக் கழுவேற்றல் சுட்டப்பட்டுள்ளது என்றும் செய்தி தந்தார். இராமலிங்க அடிகளாரின், 'இருங்கழுவில் ஏற்றினாலும்' எனும் அருட்பா அடி குறிக்கத்தக்கது. பழமொழியில்கூட, 'இனம் கழுவில் ஏற்றினார் இல்' என்ற பாடம் உள்ளது. மதுரைக் கோட்டை வாயிலில் இருந்த கழுக்கோல்களைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது.

இலக்கிய ஆளுகை கழுவேற்றலைச் சங்கம் தொட்டுத் தொடரும் தண்டனையாகக் காட்டுவதால், சிற்ப வெளிப்பாடுகளாய் இது பதிவாகியுள்ளதா என்று தேடினோம். பல்லவக் கற்றளியாய்க் காஞ்சிபுரத்தில் உயர்ந்தோங்கி நிற்கும் வைகுந்தப்பெருமாளின் உள்சுற்றுச் சுவர் பல்லவர் வரலாறு பேசும் சிற்பத்தொகுதிகளைத் தொடராய்க் கொண்டுள்ளது. அவற்றுள் ஒன்றில் கழுவேற்றல் காணலாம். அரசர் ஆணையிட நிறைவேற்றப்பட்ட தண்டனையாகப் பதிவாகியுள்ள அக்காட்சியில், இரண்டு குற்றவாளிகளைக் காணமுடிகிறது. ஒருவரைத் தலைகீழாகவும் மற்றவரைத் தலை மேலிருக்குமாறு நேராகவும் கழுவில் ஏற்றியுள்ளனர்.

மீனாட்சிக் கோயிலில் முற்றிலும் மாறுபட்ட காட்சி. இங்குக் கழுமரம் பெரும்பாணாற்றுப்படைப் பாடலடியை ஒட்டி நெடிய முனையுடன் உள்ளது. வைகுந்தப்பெருமாள் காட்சி போலன்றி இங்குக் குற்றவாளி வயிற்றில்கழுமுனைநுழையுமாறு தண்டிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்து துவண்டிருக்கும் அவர் உடலின் கீழ்ப்பகுதியை நரிகளும் நாய்களும் கடிக்க, மேற்பகுதியைப்பருந்தும் கழுகும் கொத்துகின்றன. இச்சிற்பத்தின் மேற்புறத்தில் மற்றொரு கழு. அதிலும் ஒரு குற்றவாளி. அவரது தலையருகே ஒரு நரி.

இறைவன் ஆடும் இடு, சுடுகாட்டுக் காட்சிகளை வருணிக்க முனைந்த காரைக்கால் அம்மையார், அப்பர் பெருமான், சம்பந்தர் ஆகியோர் அங்கு நரிகளும் பருந்து, கழுகு முதலிய பறவைகளும் இறந்தோர் உடலை உணவாய்க் கொள்ளும் காட்சிகளைப் பலபடக் காட்டியிருப்பர். பரஞ்சோதி முனிவரோ, திருவிளையாடல் புராணத்தில் இந்தச் சிற்பக் காட்சியை நேரில் கண்டவர் போல் வருணித்திருக்கிறார். பார்வையின் விளைவே பாடலடிகள் என்பதை மீனாட்சிக் கோயில் கழுவேற்றல் காட்சியும் இலக்கியப் பக்கங்களின் பதிவுகளும் உறுதிசெய்கின்றன வாருணி. ஆவுடையார் கோயில் ஓவியங்களிலும் கழுவேற்றம் இடம்பெற்றுள்ளதை நினைவூட்டிய பேராசிரியர் மு. நளினி அந்தப் படங்களையும் காட்சிப்படுத்தினார்.

குற்றங்கள் இல்லாத சமுதாயம் எக்காலத்தும் இருந்ததில்லை. அது போலவே குற்றத்திற்கேற்பத் தண்டனைகள் வழங்குவதும் காலந்தோறுமான நிகழ்வாகவே இருந்துவந்துள்ளது. அவற்றுள் சில, கிடைக்கும் வாய்ப்பிற்கேற்ப எதிர்வரும் தலைமுறைகளுக்கு எச்சரிக்கையாகப் படைப்பாளிகளால் பதிவு செய்யப்படுகின்றன. பார்ப்பவர்கள் பகிர்வதும் கேட்பவர்கள் உணர்வதும் சமுதாயத் திருத்தங்களுக்கு வழிகோலும் என்ற நம்பிக்கையுடன்தான் காலமும் அதைக் கருத்துடன் காப்பாற்றி வந்துள்ளது.


நன்றி:
இலக்கியப்பீடம், ஏப்ரல் 2026
பக்கம்: 35-38

Dr Kalaikovan 1.jpg
Dr Kalaikovan 2.jpg 
Dr Kalaikovan 3.jpg
Dr Kalaikovan 4.jpg

--------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages