மலாயா ஆவணங்கள் – முனைவர் க.சுபாஷிணி

220 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 2, 2025, 6:39:48 PMApr 2
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 1
முனைவர் க.சுபாஷிணி

கப்பல்  பயணச் செய்தி

மலாயாவிலிருந்து தமிழ் பத்திரிக்கைகள் வெளியிடப்பட்ட முயற்சி 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேகமெடுத்தது. கிபி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலும் பல பத்திரிக்கைகள் வெளிவந்தன.  “பினாங்கு ஞானாசிரியன்” எனும் பெயர்கொண்ட வாராந்திர பத்திரிக்கை அப்படி அக்காலகட்டத்தில் வெளிவந்த ஒரு முக்கிய பத்திரிக்கை எனலாம்.
நான்கு பக்கங்கள் மட்டுமே கொண்டிருக்கும் பத்திரிக்கை இது. முகப்பில் பத்திரிக்கை, அதன் வெளியீட்டாளர்கள், புரவலர்கள் பற்றிய செய்திகளும், உள்ளே இரு பக்கங்களில் உள்நாட்டு அயல்நாட்டுச் செய்திகளும், கடைசிப்பக்கத்தில் விளம்பரங்களும் கொண்ட வகையில் இப்பத்திரிக்கை வெளியிடப்பட்டு வந்தது.
தமிழ்நாட்டிலிருந்து வணிகம் செய்ய வந்த தமிழ் மக்கள் பெரும்பாலும் பினாங்கு, கிள்ளான், சிங்கப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து கப்பல் பயணம் எடுத்து தமிழ்நாட்டிற்குச் செல்வது அப்போது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி இலங்கை, பர்மா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கும் இக்காலகட்டத்தில் வணிகம் செய்து வந்தனர். ஆகவே கடல் வழியாகக் கப்பல் பயனம் மேற்கொள்வது என்பது அன்று, அதாவது 18, 19, 20ஆம் நூற்றாண்டு மலாயாவில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு முக்கியத் தேவையாகவே இருந்தது.
அவ்வகையில் கப்பல் பயணங்களைப் பற்றிய அறிவிப்புக்களை வெளியிடுவது பத்திரிக்கைகளின் விளம்பரப் பகுதியில் இடம்பெறும் ஓர் அங்கமாக இருந்துள்ளதைக் காண்கின்றோம். 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ”பினாங்கு ஞானாசிரியன்” பத்திரிக்கையில் அவ்வகையில் வெளிவந்த ஒரு அறிவிப்பு நமக்குப் பல தகவல்கல்ளை வழங்குகின்றது.
அக்காலகட்டத்தில் சிங்கை மலாயாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. அங்கிருந்து இன்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற ஒரு பகுதியாகத் திகழ்கின்ற கிள்ளான் பகுதியில் அமைந்திருக்கும் கிள்ளான் துறைமுகத்திலிருந்தும் (Port Klang) கப்பல்கள் ஒவ்வொரு வாரமும் இயங்கின. கிள்ளான் துறைமுகம் ஆங்கிலேயர்களின் காலணிய ஆட்சிக்காலத்தில் சுவெட்டெனஹாம் துறைமுகம் (Port Swettenham)  என பெயர் கொண்டிருந்தது. பின்னர் Port Klang என சுதந்திரத்திற்குப் பின்னர் பெயர் மாற்றம் பெற்றது.
பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி எனப் பெயர்கொண்ட ஆங்கிலேயரின் கப்பல் நிறுவனம் இயக்கிய கப்பல்களும் இப்பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு பயணச் சேவையை வழங்கி வந்தன.
வாரம் மூன்று முறை சிங்கப்பூரிலிருந்து  கிள்ளானின் சுவெட்டெனஹாம் துறைமுகம் (பத்திரிக்கையில் போர்ட்ஸ் வெட்னம்) கிள்ளான் துறைமுகத்திற்குப் பயணச் சேவை இருந்தது.   சிங்கப்பூரிலிருந்து வாரம் இருமுறை பெர்குயி, மோல்மின் பகுதிகளுக்குப் பயணம் இருந்தது.  மாதம் இருமுறை சீனா, ஜப்பான், சிங்கப்பூருக்கும் கப்பல் பயணம் செயல்பட்டது.  வாரம் ஒருமுறை ரங்கூன், கல்கத்தா துறைமுகங்களுக்கும் கப்பல் சேவையை இந்த நிறுவனம் வழங்கியது பற்றி இச்செய்தி வழி அறிகின்றோம்.  அதுமட்டுமன்றி நாகப்பட்டணம், மதராஸ், கூடலூர், காரைக்கால் பகுதிகளுக்கும் கப்பல் சேவை இயங்கியது.
அன்று கடல்போக்குவரத்து, வணிகத்திற்காகத் தமிழ்நாட்டிலிருந்து பயணிக்கின்ற மக்களுக்கு இன்றியமையாத ஒரு தேவையாக இருந்தது.  மலாயாவில் வணிகம் செய்து வந்த பெரும்பாலோர் தமிழ்நாட்டில் உறவினர்களைக் காணச் செல்வதும், பொருட்களை ஏற்றி வரச் செல்வதும், அயல்நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வதும் மிக இயல்பாக நடைபெற்ற காலகட்டமாகவும் இதனைக் காணலாம்.
suba article 1-1.jpg
suba article 1-2.jpg
--------------------
[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

தேமொழி

unread,
Apr 2, 2025, 6:42:49 PMApr 2
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 2

முனைவர் க.சுபாஷிணி
பினாங்கு ஞானாசிரியன்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாயாவில் தமிழ் பத்திரிகைகள் வெளியிடப்பட்ட முயற்சி தமிழ் பற்றாளர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்டன. அவ்வகையில் வெளிவந்த பத்திரிகைகளுள் ”பினாங்கு ஞானாசிரியன்” என்ற தினசரி பத்திரிக்கையும் ஒன்று.

இந்தப் பத்திரிக்கைக்கு சந்தாதாரர்களை சேகரிக்கும் திட்டத்தையும் ஆசிரியர் குழு செயல்படுத்திருந்தார்கள். மலாயாவிற்குள் இந்த பத்திரிகையை வாங்குபவர்கள் ஒரு மாதத்திற்கு மொத்தம் 75 காசு மாத சந்தாவாக கொடுக்க வேண்டும். வெளியூர் அதாவது, பர்மா சிங்கை, இலங்கை, இந்தியா போன்ற பகுதிகளில் இருந்து வாங்குவோருக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு ரிங்கிட் மாத சந்தா; தனி பத்திரிக்கையாக வாங்குவோருக்கு ஒரு பத்திரிக்கையின் விலை ஐந்து காசு என்றும் நிர்ணயம் செய்திருந்தார்கள்.
அது மட்டுமல்ல இந்தப் பத்திரிகைகளுக்கு 10 சந்தாதாரர்களை அறிமுகப்படுத்தி வைப்பவர்களுக்கு ஒரு பத்திரிக்கை இலவசமாக அனுப்பப்படும் என்ற சலுகைகளையும் அறிமுகப்படுத்தி இருந்தார்கள். இந்த வணிக உத்தி இப்பத்திரிகை தொடர்ந்து வெளிவருவதற்கு அப்போது உதவி இருக்கின்றது.

இந்த தினசரி பத்திரிகையில் மொத்தம் நான்கு பக்கங்கள் மட்டுமே அடங்கியுள்ளன. முதல் பக்கத்தில் இப்பத்திரிக்கை பற்றிய அல்லது இப்பத்திரிகை தொடர்பான அறிவிப்புகள், இதன் நிறுவனர்கள், இப்பத்திரிகை அச்சடிக்கப்படும் அச்சகம் பற்றிய செய்திகள் ஆகியவை முழு பக்கத்தை நிறைக்கின்றன. நடுவில் உள்ள இரண்டாம் பக்கமும் மூன்றாம் பக்கமும் உள்ளூர் செய்திகள், அயல்நாட்டு செய்திகள் பலவற்றை தாங்கி வெளிவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. 1912 ஆம் ஆண்டு கால கட்டத்தில் முதலாம் உலகப் போர் தொடர்பான துருக்கி இத்தாலி இரண்டு நாடுகளுக்குமிடையிலான போர் தொடர்பான செய்திகள் ஒரு பக்கத்தில் மிகப்பெரிய அளவை எடுத்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. அக்காலகட்டத்தில் ஆசியாவில் தமிழர்களிடையே முதலாம் உலகப் போர் தொடர்பான தகவல்கள் சுவாரசியத்தை ஏற்படுத்துகின்ற செய்தியாக அமைந்திருந்தது என்பதை வெளிக்காட்டும் வகையில் இது அமைகிறது. இப்பத்திரிக்கையின் இறுதி பக்கத்தில் விளம்பரங்கள் இடம் பிடிக்கின்றன. அக்காலச் சூழலில் கடல் பயணம், மருந்து வகைகள், உணவு விற்பனை, அறிவிப்புச் செய்திகள் போன்றவை இறுதிப் பக்கத்தை நிறைக்கின்றன. இந்த வகையில் முதல் பக்கத்தில் இருந்து நான்காம் பக்கம் வரை செய்திகள் இப்பத்திரிக்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

1912 ஆம் ஆண்டு வாக்கில் இப்பத்திரிக்கையின் மேலாளராக கே கே சம்சுகனி ராவுத்தர் பெயர் குறிப்பிடப்படுகின்றது. விளம்பரங்கள் இப்பத்திரிக்கையில் வர வேண்டும் என நினைப்பவர்கள் மேலாளரை நேரடியாக தொடர்பு கொண்டு சந்தா தொகை மற்றும் விளம்பரத்திற்குக் கொடுக்க வேண்டிய தொகை ஆகியவற்றை அனுப்ப வேண்டும்; முன்பணம் அனுப்பினால் மட்டுமே பத்திரிக்கையும் விளம்பரமும் இணைக்கப்படும் என்ற செய்தியும் இதில் குறிப்பிடப்படுகின்றது.

இப்பத்திரிக்கையின் புரவலர்களாக பலரது பெயர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன.

பச்சி ஹாஜிமுகமது நூர், கோ கா கம்பெனி இப்ராஹிம் மரைக்காயர், கோ இ கம்பெனி மஞ்சூர் ஷா மரைக்காயர், கோ.இ.கம்பெனி,    மஞ்சூர்ஷா மரைக்காயர், உ.மவுலாசா மரைக்காயர்,  கி.வாஞ்ஞூர்பக்கீர் மரைக்காயர்,  வ.மு.நைனா மரைக்காயர் கம்பெனி, சே. சீனிமதாறு ராவுத்தர், க. மு. செய்யது அபூபக்கர், கா. அ. காண்முகம்மது கம்பெனி, முகமது அலி அம்பலம், மொ. கா. காதிறுபாவா, காசிக்கடை நெய்னா முகம்மது, எம் கதிர்வேலு, மா. நா. கணக்கு சுப்பிரமணிய பிள்ளை, எல். சுப்பையா ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெறுகின்றார்கள். பெரும்பாலும் இஸ்லாமியர்களால் வெளியிடப்பட்ட, ஏனைய சமூகத்தோரின் ஆதரவைப் பெற்ற ஒரு பத்திரிக்கையாக இது வெளிவந்தது.

தமிழ்நாட்டிலிருந்து மலாயாவிற்கு வணிகம் செய்யப் புலம்பெயர்ந்த மரைக்காயர்கள் தொடர்ச்சியாக தமிழ் இதழியல், நாளிதழ், இலக்கிய முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். அம்முயற்சியின் தொடர்ச்சியை இன்றும் நாம் காண்கின்றோம்.

மலாயா 1957 ஆம் ஆண்டு ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. இக்கால கட்டத்திலும் சில பத்திரிகை முயற்சிகள் தொடர்ந்தன. அதன் பின்னர் தமிழ் முரசு, தமிழ் மலர், தமிழ் நேசன், மலேசிய நண்பன் போன்ற பத்திரிகைகளை மலேசிய மண்ணில் வெளிவந்த முக்கியமான பத்திரிகைகளாக நாம் கூறலாம்.

தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து எண்ணிக்கையில் அதிகமாக வாழ்கின்ற நாடுகளில் மலேசிய நாடு முக்கியத்துவம் பெறுகின்றது. இங்கு இன்றும் கூட தமிழ் பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் மலாயா மண்ணில் அன்றைய தமிழ் ஆர்வலர்கள் வித்திட்ட முயற்சிகள் இன்றும் மலேசிய மண்ணில் தொடர்ந்து தமிழ் மக்களிடையே வாழ்வதற்கு அடிப்படையை வகுத்துக் கொடுத்திருக்கின்றது. அதில் பினாங்கு ஞானாசிரியர் எனும் இப்பத்திரிக்கையின் பங்கு அளப்பரியது.
suba article 2-1.jpg
suba article 2-2.jpg
---

தேமொழி

unread,
Apr 2, 2025, 6:45:24 PMApr 2
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 3

முனைவர் க.சுபாஷிணி

பினாங்கு வர்த்தமானி

19 ஆம் நூற்றாண்டில் மலாயாவின் பினாங்கிலிருந்து வெளிவந்த பத்திரிக்கை முயற்சிகளில் "பினாங்கு வர்த்தமானி" பத்திரிக்கையும் ஒன்று. இது வாரம் தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பதிப்பிக்கப்பட்டது.
பினாங்கு வர்த்தமானி என்ற பத்திரிக்கையும் அதனுடன் ஆங்கிலத்தில் இணைந்து வெளியிடப்பட்ட The Penang News என்ற பத்திரிக்கையும் ஒரே நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்டன.   பினாங்கில் ’எண் 1, பிஷப் சாலை’யில் இயங்கிய சிலோன் வர்த்தக நிறுவனத்திற்காக எஸ் அயாத்தோர் என்பவரால் இப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது ( S.Ayatore for the Salon Trading Company) என்றும் க்ரைட்டேரியன் பதிப்பகத்தால் (Criterion Press,  Penang)  பதிப்பிக்கப்பட்டது என்ற செய்தியையும் இப்பதிரிக்கையில் காண்கிறோம்.

1897ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த பினாங்கு வர்த்தமானி பத்திரிக்கை ஒன்று நமக்கு இப்பத்திரிக்கை தொடர்பான சில தகவல்களையும் அது வெளியிட்ட செய்திகளைப் பற்றியும் வெளிப்படுத்துகின்றது.
இப்பத்திரிக்கை ஆங்கிலத்தில் இரண்டு பக்கங்களும் தமிழ் செய்திகளுக்காக ’பினாங்கு வர்த்தமானி’ என்ற தலைப்புடன் இரண்டு பக்கங்களும் கொண்ட வகையில் அமைந்திருக்கின்றது. ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.  

இப்பத்திரிக்கைகளை வாங்க விரும்புவோர் சந்தா பணமாக வருடம் ஒன்றிற்கு மூன்று மலாயா ரிங்கிட் செலுத்த வேண்டும்; அயல்நாட்டிலிருந்து, அதாவது தமிழ்நாடு, இலங்கை, பர்மா போன்ற நாடுகளிலிருந்து வாங்க விரும்புவோர் ஆண்டிற்கு நான்கு மலாயா ரிங்கிட் கட்டணம் செலுத்த வேண்டும்.

இப்பத்திரிக்கை ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கு மட்டுமே என்றல்லாமல் எல்லா மதத்தை சார்ந்தவர்களுக்கும் தகவல்கள் வழங்க வேண்டியது அதன் முக்கிய நோக்கம் என்பதை உறுதி செய்யும் வகையில் முதல் பக்கத்தில் குறிப்புச் செய்தியாகப் பதிந்திருக்கின்றது.  எந்த ஒரு மதத்தை பற்றி குறைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்தும் வகையிலான செய்திகள் இப்பத்திரிக்கையில் இடம்பெறாது என்ற ஆசிரியர் குழுவின் அறிவிப்பு இதனைத் தெரிவிக்கின்றது.  இப்பத்திரிக்கையில் விளம்பரங்களும் இடம்பெறுகின்றன.

பினாங்கு உள்ளூர் செய்திகளும் கூடுதலாக ஏனைய மாநிலங்களான கோலாலம்பூர் மற்றும் அன்று மலாயாவின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த சிங்கப்பூர் உள்ளிட்ட செய்திகளும் இதில் இடம்பெறுகின்றன. அயல்நாட்டுச் செய்திகளுக்கும் ஒரு பக்கத்தில் இடமளிக்கப்பட்டிருக்கின்றது.

தங்க விலை பற்றிய, உண்டியல் விலை பற்றிய செய்திகள் இதில் இடம் பெறுகின்றன. அத்தோடு எண்ணை விலை, நிலக்கடலை, பிண்ணாக்கு விலை அச்சைகளிப்பாக்கு, கொட்டைப்பாக்கு போன்றவற்றின் விலை மட்டுமன்றி, விலை ஏற்றம் ஏன் ஏற்படுகின்றது போன்ற தகவல்களும் இடம்பெறுகின்றன.

இதில் வழங்கப்பட்டுள்ள செய்திகளில் இருந்து சர்க்கஸ் விளையாட்டுக்காரர்கள் இங்கு வருவதால் பொதுமக்களது பணம் வசூல் செய்யப்பட்டு செலவு செய்யப்படுகின்றது என்றும், ஒவ்வொரு தெருவுக்குத் தெரு பேய் ஓட்டிகளும், பாம்பாட்டிகளும், மாயவித்தை செய்பவர்களும் இருந்து மக்களை ஏமாற்றி வருவதால் மக்களின் பணம் மக்களிடமிருந்து தட்டிப் பறிக்கப்படுகின்றது என்பதையும் பத்திரிக்கை செய்தி வெளிப்படுத்துகின்றது.

இன்றைக்கு 150 ஆண்டுகள் அல்லது 100 ஆண்டுகள் கால மலாயாவின் தமிழ் பத்திரிகை முயற்சிகள் ஒவ்வொன்றிலும் மலாயாவின் பினாங்கு, கிள்ளான் மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களில் இருந்து தமிழ்நாடு, பர்மா, வங்காளம், இலங்கை போன்ற நாடுகளுக்குப் பயணிக்கின்ற போக்குவரத்து கப்பல்கள் பற்றிய செய்திகள் இடம்பெறுவதும் வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது.

ஆக, அக்காலத்து சூழலுக்கு ஏற்ப மக்களுக்குத் தேவையான செய்திகளை வழங்குவதில் பினாங்கு வர்த்தமானி போன்ற பத்திரிகைகள் 1800 களின் இறுதியில் செயல்பட்டதை இத்தகைய ஆவணங்களின் வழி நம்மால் அடையாளம் காண முடிகிறது. இன்றைக்கு 200 ஆண்டு கால கிழக்காசிய சூழலில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையை அறிந்து கொள்ள இவை முதன்மை ஆதாரங்களாகவும் திகழ்கின்றன.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
suba article 3-1.jpg
suba article 3-2.jpg
---

தேமொழி

unread,
Apr 9, 2025, 5:12:03 AMApr 9
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 4

முனைவர் க.சுபாஷிணி

"பினாங்கு கலாநிதி" எனும் மங்கை

சமகால பத்திரிகைகள் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை வெளியிடும் போக்கு இன்றைக்கு ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன் மலாயாவிலிருந்து வெளிவந்த பத்திரிகைகளிலும் இடம்பெற்ற நிகழ்வுகளை நாம் ஒதுக்கிவிட்டுச் செல்ல இயலாது. அப்படிப்பட்ட ஒரு செய்தியை 1912 ஆம் ஆண்டு பினாங்கிலிருந்து வாரம் இரு முறை வெளிவந்த ”பினாங்கு ஞானாசிரியன்” ஏப்ரல் மாத இதழில் காண்கின்றோம்.

இதே காலகட்டத்தில் "பினாங்கு கலாநிதி" என்ற பெயரில் ஒரு பத்திரிகை வெளிவந்திருக்கின்றது. இப்பத்திரிக்கையை நடத்தியவர் அல்லது இதன் உரிமையாளராக இருந்தவர் ஆ. முகமது அப்துல் காதிர் என்று இச்செய்தியிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

பினாங்கு கலாநிதி என்னும் இந்தப் பத்திரிகை 1911 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி வெளிவரத் தொடங்கி இருக்கின்றது. இதனைக் கூறுகின்ற பினாங்கு ஞானாசிரியன் செய்தி, "கலாநிதி என்னும் சண்டைக்காரி தன் முக்காட்டை நீக்கிப் போட்டு ஊர் திரியப் புறப்பட்டாள்" என இப்பத்திரிகை வெளிவந்த தேதியைக் குறிப்பிட்டு எழுதுகிறது.

இப்பத்திரிக்கை வெளிவந்து ஆறு மாதங்கள் ஆகின்றன ஆனாலும் இப்பத்திரிக்கையாசிரியர்கள் இது வெளிவந்து 151 நாள், அதாவது ஐந்து மாதங்கள் மட்டுமே, என்று கூறுகின்றார்கள் என்றும் குற்றம் சாற்றுகின்றது. இதனைக் குறிப்பிடுகையில், ”கலாநிதி என்னும் இம் மங்கை பினாங்கென்னும் இம்மாபதயில் உற்பத்தியாகி சற்றேறக்குறைய ஆறு மாதங்கள் ஆகின்றன. ஆயினும் அவள் தன் வயதை 151 நாளெனக் கூறுகிறாள்"  எனக் கேலி பேசுகிறது.

இப்பத்திரிக்கையின் ஆசிரியரைக் குறிப்பிட்டு சொல்லும் பொழுது ”பினாங்கு கலாநிதி மங்கையின் தந்தை” என்று மறைமுகமாகக் குறிப்பிடுவதையும் காண்கின்றோம்.

பினாங்கு ஞானாசிரியரினில் வந்திருக்கும் இச்செய்தி, பினாங்கு கலாநிதி பத்திரிகை ஆசிரியரையும் ஆசிரியர் குழுமத்தையும் சாடுவதாக அமைகின்றது. அச்செய்தியின் தலைப்பு "பினாங்கு கலாநிதி மங்கையின் புலால் நாற்ற விளக்கமும் அவள் தந்தையின்  நற்சாட்சிப் பத்திரமும் மிலேச மொழிக் கண்டனமும்" என எழுதப்பட்டுள்ளது.

ஆக,  பினாங்கு கலாநிதி பத்திரிகையைச் சாடும் வகையில் எழுதப்பட்ட ஒரு பதிவு என்றே இதனைக் கூறலாம்.

இப்பத்திரிக்கையின் தோற்றம் சிறப்பாக இல்லை என்பதை கேலி பேசும் வகையில்  தொடர்ந்து வரும் செய்தி அமைகிறது. " இவள் அழகோ சொல்லத் தரமல்ல. முன்புறம் மட்டும் துருக்கி இத்தாலிய யுத்த விஷயமாகிய தசையும், மறுபுறம் சுத்த வெள்ளை காகிதமாகிய வெறும் எலும்பும் பூண்டு அகோர ரூபத்துடன் இளைத்து நலி கொண்டு வளர்ச்சியின்றி கூனிக்குறுகி சொந்த மனை இல்லாமல் அயல்மனையில் வளர்ந்து, அங்கிருந்து துரத்தப்பட்டு மறுபடி திரும்பி வந்து குட்டும், வெட்டுமுண்டு தத்தளித்து தள்ளாடி நடந்து வருகிறாள்" எனக் கடுமையாகச் சாடுகின்றது.

பினாங்கு கலாநிதி பத்திரிக்கை பினாங்கு ஞானாசிரியன் பத்திரிகையை "ஏ குழந்தாய்" எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதைப் பற்றியும் பினாங்கு ஞானாசிரியனில் காண்கிறோம்.

இரண்டு பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு இடையிலான விவாதத்தை பத்திரிக்கை செய்தி நன்கு வெளிப்படுத்துகின்றது.  "அவனுக்கு மூக்கில்லையாதலால் மற்றவர்கள் மூக்கையும் அறுக்க பிரயாசைபட்டனன் போல மகாமாணியாகிய கலாநிதி பத்திராதிபரும் எம்மை தூஷிக்க ஆரம்பித்தார்" எனக் கேலி பேசுகிறது.

இன்றைக்கு நூறு ஆண்டுகள் கால மலாயா நாட்டு தமிழ் உரைநடை எழுத்துமுறை மணிப்பிரவாள எழுத்து நடையில் அமைந்திருக்கின்றது. அக்கால வாக்கில் தமிழ்நாட்டு எழுத்து நடையை ஒத்த வகையிலான எழுத்து நடையைப் பின்பற்றுவது தமிழ்மக்கள் புலம்பெயர்ந்த மலாயா நாட்டிலும் தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றது. பொதுவாகவே மொழி, பண்பாடு ஆகிய தளங்களில் தாய் தமிழகத்தைப் பின்பற்றும் இப்போக்கை இன்றும் மலேசிய தமிழ் மக்கள் சூழலில் காண்கின்றோம்.

பினாங்கு ஞானாசிரியன் பத்திரிகையின் இந்த ஏப்ரல் மாத இதழின் ஒரு பக்கம் முழுவதிலுமே பினாங்கு கலாநிதி பத்திரிக்கையுடனான் வாக்குவாதமே முழு பக்கத்தையும் நிறைக்கின்றது.

இப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருக்கும் இச்செய்தியின் வழி ”பினாங்கு ஞானாசிரியன்” பினாங்கு மாநிலத்திலிருந்து வெளிவந்த அதே காலகட்டத்தில் பினாங்கிலிருந்து வெளிவந்த மற்றொரு பத்திரிக்கையாக ”பினாங்கு கலாநிதி” இருந்தது என்பதும், இந்த இரண்டு பத்திரிகைகளுக்கிடையே சர்ச்சைகள் நிகழ்ந்துள்ளன என்பதும் இப்பதிவின் வழி தெளிவாகின்றது.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
suba 1.jpg
suba 2.jpg
---

தேமொழி

unread,
Apr 16, 2025, 5:41:36 PMApr 16
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 5


முனைவர் க.சுபாஷிணி

ரிக்‌ஷா வண்டி


18, 19, 20ஆம் நூற்றாண்டு காலம் என்பது மிக அதிகமான எண்ணிக்கையில் ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்தும் மக்கள் மலாயா நிலப்பகுதிகளுக்குக் குடியேறிய காலமாகும். இப்படிக் குடியேறிய மக்கள், அவர்களோடு கொண்டு வந்த பண்பாடும் தொழில்நுட்பமும், வாழ்க்கை முறைகளும் உள்ளூர் மலாய் நிலத்திலும் மக்கள் புழக்கத்தில் ஊடுறின.

மக்களை அமரவைத்து ஒரு மனிதன் தன் கைகளால் இழுத்து நடந்து செல்வது இழுக்கும் ரிக்‌ஷா எனப்படும். இது தொடக்கத்தில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அறிகின்றோம். அங்கு Jiinrikisha என இது அழைக்கப்படுகிறது.   ஆசிய நாடுகள் பலவற்றிலும் இந்த வகை ரிக்‌ஷா பயன்பாடு 19ஆம் நூற்றாண்டில் பரவத் தொடங்கியது.  சம காலத்தில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலாயா, இந்தோனீசியா போன்ற நாடுகளிலும் இது புழக்கத்தில் வந்தது.

மலாயாவில் 1912இல் இவ்வகை இழுக்கும் ரிக்‌ஷாவில் பயணம் செய்தபோது நிகழ்ந்த ஒரு தாக்குதலைப் பற்றிய செய்தி நமக்கு இவ்வகை ரிக்‌ஷா பயன்பாடு மலாயாவில் புழக்கத்தில் இருந்ததைத் தெரிவிக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு செய்தியை 1912 ஆம் ஆண்டு பினாங்கிலிருந்து வாரம் இரு முறை வெளிவந்த ”பினாங்கு ஞானாசிரியன்” ஏப்ரல் மாத இதழில் காண்கின்றோம்.

இவ்வகை ரிக்‌ஷா பயன்பாடு 10ஆம் நூற்றாண்டில் மிகச்சாதாரணமான ஒரு போக்குவரத்துச் சாதனமாக மக்கள் புழக்கத்தில் இருந்துள்ளது.  குறிப்பாக நகர்ப்புரங்களில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பொருளாதார வசதிபடைத்த உள்ளூர் மக்களும் ஆங்கிலேயர்களும் ரிக்‌ஷா பயன்படுத்தியிருக்கின்றனர்.

பினாங்கு ஞானாசிரியன் பத்திரிக்கையில் வந்திருக்கும் செய்தி பீடோர் தோட்டத்தின் அன்றைய உரிமையாளராக இருந்த கார்ன்வால் என்ற ஓர் ஆங்கிலேயருக்கு நடந்த தாக்குதலைப் பதிகின்றது.

அவர் கையில் 200 மலேசிய வெள்ளியை எடுத்துக் கொண்டு  சுங்கை தோட்டத்திலிருந்து பீடோர் தோட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றார்.  இவர் பயணித்த ரிக்‌ஷாவண்டி ரயில்நிலையம் அருகாமையில் செல்லும் போது அவருக்கு அருகே இரண்டு சீனர்கள் வந்திருக்கின்றனர். அவர்கள் நல்லமுறையில் உடை உடுத்திக் கொண்டு சாதாரணமாகத் தென்பட்டிருக்கின்றனர்.  ரிக்‌ஷா வண்டியை நெருங்கியதும் கையில் கத்தியை உருவி எடுத்துக் கொண்டு மிரட்டத்தொடங்கியுள்ளனர். அதைக் கண்ட ரிக்‌ஷா வண்டிக்காரர் பயந்து வண்டியையும் கார்ன்வாலையும் அப்படியே விட்டு விட்டு ஓடியிருக்கின்றார்.
கார்ன்வால் அவர்களை எதிர்த்து சண்டை போட்டிருக்கின்றார். ஆனால் அந்த கொள்ளைக்காரர்களில் ஒருவன் துப்பக்கி ஒன்றை உருவி வெளியே எடுத்து கார்ன்வால் காலில் சுட்டிருக்கின்றான். காலில் காயப்பட்டலும் கூட தொடர்ந்து அவர்களை எதிர்த்து சண்டையிட்டிருக்கின்றார் கார்ன்வால்.  துரத்திப் பிடிக்க ஓடியபோது கயவர்கள் இருவரும் ஓடிவிட்டனர். பின்னர் ஒளிந்து கொண்டிருந்த ரிக்‌ஷா வண்டி ஓட்டுநர் அவரிடம் வந்து அவரை ஏற்றிக் கொண்டு மருத்துவமணை சென்று  சிகிச்சை எடுத்துக் கொண்டு காவல்துறைக்கும் செய்தி கொடுத்திருக்கின்றனர்.

இப்படி ரிக்‌ஷா வண்டி தொடர்பான செய்திகளையும் கடந்த  நூற்றாண்டு பத்திரிக்கையில் காண முடிகின்றது.

இழுக்கும் வகை ரிக்‌ஷா வண்டிகள் கால ஓட்டத்தில்  மாற்றம் பெற்றன. சைக்கிளை வண்டியில் பொருத்தி சைக்கிள் ரிக்‌ஷாவாக இது உருமாற்றம் பெற்று விட்டது. கடந்த நூற்றாண்டின் இறுதிவரை மக்களின் இயல்பான புழக்கத்தில் இருந்த சைக்கிள் ரிக்‌ஷா படிப்படியாக இன்று இயல்பான ஒரு பொதுப்போக்குவரத்து வாகனமாகப் பயன்பாட்டில் இல்லை. ஆனால், உலகின் பல நாடுகளில் இன்று சுற்றுலா துறை அலங்கரிக்கப்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்களைச் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். மலேசியாவில் இன்றும் இத்தகைய அலங்கரிக்கப்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்களைப் பினாங்கு, கோலாலம்பூர், மலாக்கா, ஜொகூர்பாரு போன்ற பெரு நகரங்களில் சுற்றுலா பயணிகள் வருகின்ற பகுதிகளில் காண்கிறோம்.  இங்கிலாந்தில் லண்டன் நகரில் சீனா தெருவில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

Suba article 1.jpg
Suba article 2.jpg

----

Erode wellness / ஈரோடு வெல்னஸ்

unread,
Apr 17, 2025, 4:01:26 AMApr 17
to mint...@googlegroups.com

வரலாறு தெரிந்தது


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/e1f9b555-3d86-43d4-a71d-2c7d599fcc5dn%40googlegroups.com.

தேமொழி

unread,
Apr 23, 2025, 6:44:25 PMApr 23
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 6


முனைவர் க.சுபாஷிணி

டைட்டானிக் கப்பல் மூழ்கியது

இதே மாதம், அதாவது 15 ஏப்ரல் 1912 அன்று உலகம் முழுவதும் பரிதாபத்திற்குறிய ஒரு செய்தி பரவியது. ஆம்.  அன்றுதான் இங்கிலாந்தின் சவுத்ஹேம்டன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் நியூ யோர் நகருக்குப் பயணித்த ஆர்.எம்.எஸ் டைட்டானிக் கப்பல் பனிக்கட்டியில் மோதி உடைந்தது.  அக்கப்பலில் பயணித்த ஏறக்குறைய 2200 பயணிகளில் ஏறக்குறைய 1500 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். வைட் ஸ்டார் கடல் வழிப்பயண போக்குவரத்து நிறுவனத்தின் இரண்டாவது துரதிஷ்டமான கப்பல் விபத்தாக அது அன்று அமைந்தது.

இங்கிலாந்தின் வசதி படைத்த பெரும் பணக்காரர்களும், அவர்களோடு அமெரிக்காவிற்குப் புலப்பெயர்வதற்காகத் திட்டமிட்டவர்களும் இக்கப்பலில் இருந்தோரில் பெரும்பாலனவர்கள்.  டைட்டானிக் கப்பல் இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து செயல்பட்ட Harland and Wolff நிறுவனத்தாரால் உருவாக்கப்பட்ட கப்பல்.

கடந்த  நூற்றாண்டின் இறுதியில் ஏறக்குறைய மக்களால் மறக்கப்பட்ட இந்த விபத்தைப் பற்றிய செய்தியைத் தூசிதட்டி எடுத்து இன்று மக்களின் பேசுபொருளாக உருவாக்கி வெற்றி கண்டவர் ஆங்கில திரைத்துறையின் புகழ்மிக்க இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். கேட் வின்ஸ்லட், லியானார்டொ டிகப்ரியோ ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் உலகமெங்கும் டைட்டானிக் கப்பல் பற்றியும் அதன் விபத்து பற்றிய செய்திகளைக் கொண்டு சேர்த்தது.

இந்த டைட்டானிக் கப்பல் விபத்து நடந்த செய்தியைப் பினாங்கு ஞானாசாரியன் இதழ் அதே 1912ஆம் ஆண்டு ஏப்ரல் இதழில் பதிகின்றது.

உடைந்த கப்பலில் 2378 பேர் இருந்ததாகவும், அதில் செய்தி அறிந்து வந்து சிலரைக் காப்பாற்றி ஏற்றிச்சென்ற கார்பேதியா கப்பலில் மீட்கப்பட்டவர்களுள் முதல் வகுப்பினர் 210 பேர், 2ஆம் வகுப்பினர் 125 பேர், 3ஆம் வகுப்பினர் 200 பேர், கப்பல் பணியாளர்கள் 4 பேர்,  கப்பற்காரர்கள் 37 பேர், விசாரணைக்காரர்கள் 96 பேர், நெருப்பவிப்போர் 71 பேர் என்றும் குறிப்பிடுகிறது. கப்பலின் கப்பித்தானும் முதல் பொறியாளரும் தற்கொலை செய்து கொண்டனர் என்று பிழைத்தவர்கள் தெரிவித்ததையும் குறிப்பிடுகின்றது.  அதோடு கடைசிப் படகு கப்பலை விட்டு நீங்கியவுடன் கப்பலில் இருந்த இசைக்கலைஞர்கள் குழுவினர் கப்பலின் அலங்காரமண்டபப் பகுதிக்குச் சென்று “ கடவுளே உனதருகில் வருகிறேன்” என்ற பாடலை பாடி மூழ்கிய கப்பலில் மாண்டனர் என்பதையும் பதிகிறது. பின்னர் பனிக்கட்டியின் நீர் அதிசூடாகிய கப்பல் இயந்திரத்தில் பட்டதும்  அது வெடித்து கப்பல் இரண்டாகப் பிளந்து போனதையும் குறிப்பிடுகிறது.

அதுமட்டுமன்றி கார்போதியா கப்பல் பிழைத்தவர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் நியூ யோர்க் வந்த போது அங்கு அவர்களுக்கு உதவி செய்ய  அமெரிக்க மக்கள் 20,000 டாலர் பணம் சேகரித்து வைத்திருந்தார்களென்றும், மருத்துவர்களும், தாதிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர் என்பதையும் பதிகிறது.

ஆக, உள்ளூர்  மலாயா செய்திகள் மட்டுமன்றி அயல்நாடுகளில் சமகாலங்களில் நிகழ்ந்த செய்திகளை வழங்குவதிலும் பினாங்கு ஞானாசாரியன் போன்ற அப்போதைய மலாயா தமிழ் இதழ்கள் பங்களித்தன என்பதைக் காண்கின்றோம்.  உடனுக்குடன் உலகச் செய்திகளைச் சேகரித்து அதனை மலாயா வாழ் தமிழ் மக்களும் அறிந்து கொள்ளும் பெரும்பணியை மலாயாவின் இத்தகைய இதழ்கள் செயல்படுத்தியிருக்கின்றன என்பதை இந்த ஆவணங்கள் நமக்குச் சான்று பகர்கின்றன.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

[- தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 281இல் இன்று வெளிவந்திருக்கும் கட்டுரை]
Suba-6-1.jpg
Suba-6-2.jpg
---------------------------------

தேமொழி

unread,
May 7, 2025, 1:27:43 PMMay 7
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 7


முனைவர் க.சுபாஷிணி

பினாங்கு விஜய கேதனன்

பினாங்கிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவரத் தொடங்கிய மாத பத்திரிகைகளுள் ஒன்று ”பினாங்கு விஜய கேதனன்”.

இக்காலகட்டத்தில் மலாயாவிலிருந்து தொடங்கப்பட்ட  தமிழ் இதழியல் முயற்சிகளில் இந்த  மாதப் பத்திரிக்கையும் அடங்குகிறது. ”பினாங்கு ஹெரால்ட் பிரஸ்” என்ற அச்சகத்தாரால் பினாங்கு மாநிலத்தில் அச்சிடப்பட்டு மாதம் ஒரு முறை இந்த பத்திரிகை வெளியிடப்பட்டிருக்கிறது.  1870 களில் இப்பத்திரிக்கை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்படும் இப்பத்திரிக்கையின் 1888 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ் நமக்கு இப்பத்திரிகை பற்றிய அடிப்படை விஷயங்களை விளக்குவதாக அமைகிறது.

அடிப்படையில் பினாங்கு விஜய கேதனன் என்ற பெயர் கொண்ட இது  முற்றிலும் தமிழில் நான்கு பக்கங்களில் அமைந்திருக்கின்றது. இப்பத்திரிகையின் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவினர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் இப்பத்திரிகையின் தொடக்கப் பகுதி இஸ்லாமிய தமிழில் இறைவனுக்கான துதியுடன் தொடங்குகிறது. இதில் இடம்பெறுகின்ற சொற்கள் அரபுத் தமிழ்ச் சொற்களாகவும் அமைகின்றன.

இப்பத்திரிகை மாதம் ஒருமுறை வெளிவருவதற்கு சந்தாதாரர்களைத் தேடுகின்ற முயற்சிகளும் முதல் பக்கத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. மலாயாவின் பினாங்கு மாநிலத்தில் அச்சிடப்பட்டாலும் தமிழ்நாடு, இலங்கை, பர்மா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் இப்பத்திரிகை பொது மக்களுக்குக் கிடைக்கும் வகையில் முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன  என்பதையும் அறிய முடிகின்றது.

கூடுதலாக, 1888 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருந்த ”முஸ்லிம் நேசன்” என்ற ஒரு பத்திரிகையின் ஆசிரியர் இந்தப் பினாங்கு விஜய கேதனன் மாதப் பத்திரிக்கைக்கு ஒரு வாழ்த்துச் செய்தியையும் அனுப்பி இருக்கின்றார்.

ஏப்ரல் மாத பத்திரிக்கையாக வெளியிடுவதற்காக 21.3.1888இல் தயாரிக்கப்பட்ட இப்பத்திரிகையின் இறுதிப் பகுதியில் முஸ்லிம் நேசன் பத்திரிகையின் ஆசிரியர் கீழ்க்காணும் வகையில் தன் வாழ்த்தையும் எதிர்பார்ப்பையும் குறிப்பிடுகின்றார்.

”நாகரிகமும் சீர்திருத்தமும் உற்ற இந்தியர்கள் வர வர அவைகளைப் பெற்று விளங்கும்படி ஆங்கிலேயர் பல வழிகளைக் காட்டி வந்தும், மூடத்தன்மை அதிகரித்த நமது இந்தியர்கள் சற்றேனும் அவ்வழியில் ஒழுகாது எருமையின் குணம் கொண்டே நிற்கிறார்கள். ஆகையால் தங்கள் பத்திரிக்கையில் முறை முறையாய் ஐரோப்பியருடைய நாகரிகத்தையும் இந்தியர்களுடைய மடமையையும் எடுத்துக்காட்டி வருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அதில் இடம்பெறுகின்றது.

பினாங்கு விஜய கேதனன் என்று பெயர் கொண்ட இப்பத்திரிக்கை எப்போது தொடங்கப்பட்டது, யாரால் தொடங்கப்பட்டது, எப்போது நிறுத்தப்பட்டது போன்ற செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் மக்கள் உள்நாட்டு அயல்நாட்டுச் செய்திகளை அறிந்து கொள்ள செயல்பட்ட பத்திரிகைகளில் ஒன்றாக இது திகழ்ந்தது என்பதும், அது மலாயாவின் பினாங்குத் தீவைக் கடந்தும் பல பகுதிகளுக்குச் சென்றது என்ற செய்திகளையும் நம்மால் அறிய முடிகிறது.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]
இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் "உலகத்தமிழ்" இதழில் 283 வது இதழ் வெளிவந்தது.

Suba 7-1 .jpg
Suba 7-2.jpg
------------------------

தேமொழி

unread,
May 14, 2025, 3:00:57 AMMay 14
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 8


முனைவர் க.சுபாஷிணி

"Penang Standard”

பினாங்கிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவரத் தொடங்கிய மாத பத்திரிகை ”பினாங்கு விஜய கேதனன்” பற்றி கடந்த இதழில் அறிமுகப்படுத்தியிருந்தேன். அதன் ஜூலை மாத இதழ் புதிய ஆங்கிலத் தலைப்பையும் இணைத்தவாறு வெளிவரத் தொடங்கியிருக்கின்றது.


பினாங்கு விஜய கேதனன்
மாதந்தோறும் பிரகடனம் செய்யப்படும்
This Tamil Journal
Penang Standard

என்ற தலைப்புப் பெயருடன் வெளிவந்திருக்கின்றது.

இஸ்லாமிய தமிழ் புரவலர்கள் சிலரும் இப்பத்திரிக்கைக்கு மாத சந்தா அனுப்பியிருக்கின்றனர். அவ்வகையில் அப்துல் காதிறு மரைக்காயர், ஹாசீம் நெயினா மரைக்காயர், ஆதாம்கான் சாயுபு, ஓசன் சாயுபு, முகவது அசன், முகம்மதலி மரைக்காயர், மீராலெவ்வை மற்றும் வீ.ற.முத்துசாமி செட்டியார் போன்றோர் அப்போதைய மலாயா  ரிங்கிட் 1 சந்தா செலுத்தி ஆதரித்திருக்கின்றனர்.

பினாங்கில் இருந்த அச்சகத்தில் வெளியிடப்பட்ட இப்பத்திரிக்கைக்கு சிங்கப்பூரில்  தொடர்பாளராகச் செயல்பட்டவர் ஓ மஸ்தான் சாயபு என்பவர். இப்பத்திரிக்கையின் இந்தோனீசியா ஆச்சே,  சமலங்கான் பகுதிகளுக்கு ப.தல்பாதர் என்பவர் தொடர்பாளராக இருந்திருக்கின்றார். ஆக இந்தோனீசியாவில் அச்சமயம் வசித்து வந்த தமிழர்கள் இவரிடம் தொடர்பு கொண்டு பெறலாம் என்ற செய்தியைக் காண்கிறோம்.

1888 ஜூலை மாத இதழ், புதிதாகப் பெயர் விரிவாக்கம் கண்ட விஜய கேதனன் பத்திரிக்கை அது தொடங்கப்பட்டு 3 மாதங்கள் தான் ஆவதாக இப்பத்திரிக்கையில் குறிப்பிடுகிறது. ஆகவே இதனை நோக்குகையில், பினாங்கு விஜய கேதனன் 1888 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டிருக்கலாம் என்பதை ஊகிக்கலாம். ஆயினும் இதே பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கை 1886ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதென்று அக்டோபர் 1898ஆம் ஆண்டு பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கை தெரிவிப்பதைக் காணும் போது 1886ஆம் ஆண்டு தொடங்கி, பின்னர் ஆங்கிலப் பெயரையும் இணைத்துக் கொண்டு ஜூலை 1888இல் வெளிவந்திருக்கக்கூடும் என ஊகிக்கலாம்.

நான்கு பக்கங்களே கொண்ட இப்பத்திரிக்கையில் உள்நாட்டு வெளிநாட்டு செய்திகள் இடம்பெறுகின்றன.  அதில் இடம்பெறுகின்ற சில இந்திய மற்றும் அயல்நாட்டு செய்திகளைச் சுருக்கமாகக் காண்போம்.
1. பம்பாய் பல்கலைக்கழகத்தில் ஒரு பார்சியப் பெண்மணி பிஏ பட்டம் பெற்று தேரினார்.
2. ஏறக்குறைய 70 வயதான இந்தியச் சக்கரவர்த்தினி (மகாராணி) ஹிந்தி மொழி படிக்கத் தொடங்கியிருக்கின்றார். தமிழ் மொழியும் படிக்கலாமே என்ற ஆதங்கத்தை பத்திரிக்கை பதிகிறது.
3. ஜெர்மனி நாட்டில் போசன் மாநிலத்தில்  ஒருவர் 124 வயது வரை இருந்து இறந்திருக்கின்றார். அதே போல கொண்ஸ்டாண்டினிப்போல் (இன்றைய இஸ்தான்புல்)  நகரில் 115 வயது வரை வாழ்ந்து ஒரு பெண்மனி இறந்திருக்கின்றார்.
4. ஓசூரில் 7 வயதுடைய  பிராமணப் பெண் ஒருத்தி உடையில் நெருப்புப் பற்றி இறந்து போனதாகவும், இடுப்பில் ஒட்டியானம் அணிந்திருந்ததால் காப்பாற்ற முடியாமல் இறந்தாள்.
5. சிசுவிவாகம் – சென்னை பிளாக்டவுனில் வசித்து வரும் சாமர்த்தி விஜயராகவலு செட்டியாரின் 12 வயதுள்ள ஒரு தத்து புத்திரனுக்கு செட்டியாரின் மைத்துனனின் 2 வயதுள்ள பெண் குழந்தை விவாகம் செய்யப்பட்டதாம். ஆனால் கடந்த மே மாதம் அக்குழந்தை இறந்து விட்டதாம்.
இப்படி இன்னும் பல செய்திகள் இந்த நான்கு பக்கங்களில் அடங்குகின்றன.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 284 இன்று வெளியிடப்பட்ட கட்டுரை இது.

suba 1.jpg
suba 2.jpg
____________________________________________________________________________

தேமொழி

unread,
May 20, 2025, 11:55:55 PMMay 20
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 9

முனைவர் க.சுபாஷிணி
சிங்கை நேசன் பற்றிய கடிதம்

1888ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நாம் அறிகின்ற ”பினாங்கு விஜய கேதனன்” பத்திரிக்கையில் பல்வேறு செய்திகளுக்கிடையே வாசகர்களின் கடிதங்களும் இடம்பெறுகின்றன.

பத்திரிக்கைகளைச் சந்தா செலுத்தியும் பினாங்கு, கிள்ளான், சிங்கை போன்ற நகர்களில் முகவர்களிடமிருந்து பெற்று வாசிக்கின்ற வாசகர்கள் தங்கள் எண்ணத்தை பதிவதற்காக கடிதம் எழுதி பத்திரிக்கை அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பது இந்த 1888ஆம் ஆண்டு வாக்கிலேயே நிகழ்ந்திருக்கின்றது. அப்படி ஒரு கடிதம்  1888 ஜூலை மாத பத்திரிக்கையில் இடம்பெறுகின்றது. இதில் உள்ள சுவாரசியமான தகவல் என்னவென்றால், அதே காலகட்டத்தில் சிங்கை நேசன் என்ற ஒரு பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது என்பது  தான்.  

ஒரு சர்ச்சை தொடர்பான கடிதம் இது.  இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் நடை சற்றே கடினமானதானதாகவும் சூசகமான பொருளைக் கொண்டதாகவும் அமைந்திருப்பதால் இக்கடிதத்தின் பின்னனியை முழுமையாகப் புரிந்து கொள்வது சவாலாக உள்ளது.  இதே கடிதத்தில்  “மஹாவிகடதூதன்” என கடிதம் எழுதியவர் குறிப்பிடுவதும் ஒரு பத்திரிக்கையாகவே இருக்க வேண்டும். இந்த மஹாவிகடதூதனையும் சிங்கை நேசனையும் இவை இரண்டுக்குள் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சனைக்காக பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கை நடுநிலை எடுத்து கருத்து பதிந்திருப்பதையொட்டி எழுதப்பட்ட ஒரு கடிதம் என்றே கருத வாய்ப்புண்டு.

இரு சொற்கள் பிரியும் போது அவை முழுமையாகத் தொடராமல் தொடர்ச்சியாகத் தொடரும் வகையில் எழுந்த கடித எழுத்து நடையையே முழுதாகக் காண்கிறோம்.  அதோடு ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கும் முயற்சியையும் இதில் கான்கிறோம்.

எடுத்துக்காட்டாக ”எடிட்டோரியல்” அதாவது தலையங்கம் என குறிப்பிட வேண்டிய சொல்லை வாக்கியத்தினுள்ளே “அவ்வெடிற்றோரியலை”  என்று பயன்படுத்தும் பாங்கினைக் காண்கிறோம்.

சிங்கப்பூரிலிருந்து இக்கடிதத்தை வாசகர் ஒருவர் எழுதியிருக்கின்றார். பெயர் குறிப்பிடப்படாத கடிதம் இது.

இக்காலகட்டத்தில் பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கை பினாங்குத் தீவிலிருந்துதான் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. எஸ்.பி.எஸ்.கே காதர் சாஹீபு அச்சமயத்தில் பினாங்கு விஜய கேதனன் பத்திரிக்கையின்  மேலாளராகவும் ஆசிரியராகவும் இருந்திருக்கின்றார்.  பினாங்கு ஹெரால்டு ப்ரஸ் அச்சகத்திலிருந்து அச்சிடப்பட்டு இப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் "உலகத் தமிழ்" இதழ் 285ல் இன்று வெளியிடப்பட்டது.)
suba article 1.jpeg
suba article 2.jpeg
---------------------------------------------

தேமொழி

unread,
May 28, 2025, 12:50:10 AMMay 28
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 10

முனைவர் க.சுபாஷிணி

1898இல் பினாங்கில் கல்வி

1886இல் முதலில் வெளிவந்து பின்னர் 1888 வாக்கில் ஆங்கில பெயரையும் உள்ளடக்கியவாறு வெளிவந்த  ”பினாங்கு விஜய கேதனன்” பத்திரிக்கையின் 1898ஆம் ஆண்டு அக்டோபர் மாத இதழ் அக்காலகட்டத்தில் பினாங்கில் தமிழ் மக்களின் குழந்தைகளின் கல்வி நிலை பற்றி சில தகவல்களைப் பதிகின்றது.    இதில் இடம்பெறுகின்ற ஆசிரியர் தலையங்கம் போன்ற முதற்பகுதி கல்வி, தமிழ்ச்சமூக நிலைகளைத் தொட்டு கருத்து பதிகிறது.

தற்காலத்தில் பினாங்கில் வந்து வசிக்கும் தமிழ்நாட்டினர் கல்வியின் முக்கியத்துவம் தெரியாமல் இருப்பதாகவும் குழந்தைகளைப் பல்வேறு வேலைகளைச் செய்ய அனுப்புவதாகவும் குற்றம் சுமத்துகிறது. மேலும் கடைத்தெருக்களில் உள்ள திண்ணைப்பள்ளிக்கூடங்களில் அரிச்சுவடி, எண்கள் போன்றவற்றை ஆழ்ந்த அக்கறையின்றி ஆசிரியர்கள்  கற்றுத் தருகின்றனர் என்றும் சாடுகிறது.

இந்த அவல நிலைக்கு மாற்றாக ஆங்கிலேய முகம்மதிய பள்ளிக்கூடம் ஒன்று பினாங்கில் சூலியா ஸ்ட்ரீட் சாலையில் எண் 130இல் உள்ள கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆறு மாதங்களாக  இங்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருவதையும் இப்பத்திரிக்கை பதிந்திருக்கின்றது.

இந்த அடிப்படை பள்ளியில் ஆங்கிலேய அரசு ஏற்படுத்தியுள்ளபடி ஆங்கிலம், வாசிப்பு, எழுத்து, கணிதம், பூகோளம், இலக்கணம், சொற்கள், தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசிப்பு, எண்கணிதம், ஆத்திச்சூடி, அவ்வையார் இயற்றிய செய்யுட்கள், உரையுடன் பயிற்சி பெறும் வகையில் நடத்தப்பட்டன.

இப்பள்ளியில்  கல்வி கற்கும் மாணவர்கள் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் கற்பார்கள்.  இங்கு ஆங்கிலத்தில் மூன்றாம் நான்காம் வகுப்பில் தேறிய மாணவர்களைப் பினாங்கின் முதல் பள்ளிக்கூடம் என அழைக்கப்படும் புகழ்மிக்க “பினாங்கு ஃப்ரீ ஸ்கூல்” பள்ளிக்கு அடுத்த கட்ட உயர் கல்விக்கு இணைத்துக் கொள்வார்கள் என்பதையும் குறிப்பிடுகிறது.

இத்தகைய பல்வேறு பயன்களை குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வழங்கக்கூடிய கல்வியை வழங்குகின்ற  இந்த ”ஆங்கிலேய முகம்மதிய”  பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகளை அனுப்புங்கள் என்று கோரிக்கை வைக்கின்றது 1898 அக்டோபர் மாத பினாங்கு விஜய கேதனன்.

இப்பள்ளியில் படிப்பதற்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டது.  அவ்வகையில், ஒவ்வொரு மாதமும் கீழ்க்காணும் வகையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
முதலாம் வகுப்பு – 50 காசு
இரண்டாம் வகுப்பு - 50 காசு
மூன்றாம் வகுப்பு - 75 காசு
நான்காம் வகுப்பு – 1 வெள்ளி (மலாயா)

பள்ளியில் சேர்க்கப்ப்டும் மாணாக்கர்களை இடையிலே நிறுத்தக்கூடாது என்றும் குறைந்தது ஒரு வருடமாவது அவர்களைப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்றும் இப்பத்திரிக்கை அறிவுரை கூறுகிறது.

ஆக, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் செயல்பாட்டில் இருந்த திண்ணைப்பள்ளிகள் தரமான கல்வியை வழங்கவில்லை என்பதும் அதற்கு மாற்றாக பினாங்கில் அரசு தமிழ் இஸ்லாமியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட முயற்சிகளின் பலனாக ஒரு தமிழ்ப்பள்ளி ஒன்று 1898இல் தொடங்கப்பட்டதை இந்த ஆவணத்தின் வழி அறிகின்றோம்.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 286இல் வெளிவந்த கட்டுரை இது.)
suba 1.jpg
suba 2.jpg
-----------------------------------------------------------------

தேமொழி

unread,
Jun 4, 2025, 1:25:14 AMJun 4
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 11

முனைவர் க.சுபாஷிணி

ரெக்கார்டு இசை – இசைவட்டு

ஆங்கிலத்தில் phonograph record (அல்லது gramophone record) என அழைக்கப்படும் ரெக்கார்டு இசைக்கருவி தமிழ் மக்களின் சூழலிலும் பரவத் தொடங்கியது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எனலாம். 1857ஆம் ஆண்டில்   Édouard-Léon Scott de Martinville  என்ற பிரெஞ்சுக்காரர்  phonautograph என்ற இதன் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தார்.    
1877இல் அமெரிக்கரான தோமஸ் எடிசன் வட்டுகளில் சேர்க்கப்படும் வகையில் முதல் phonograph  கருவியைக் கண்டுபிடிக்கின்றார். பின்னர் படிப்படியாக இதன் தொழில்நுட்பம் மேம்பாடு காணத் தொடங்கியது.  1880இல் ஜெர்மானியரான Emile Berliner என்பவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான இசைவட்டுக்களைக் கண்டுபிடிக்கின்றார். அதன் பின்னர் பெர்லினர் தனது வணிகக்கூட்டாளியான அமெரிக்கரான ஜோன்சனுடன் இணைந்து கேம்டன் நியூ ஜெர்சி அமெரிக்காவில் 1901இல் விக்டர் டால்கிங் மெஷின் கம்பெனியைத் தொடங்கி அது உலகப் பிரபலம் அடைகின்றது.

அமெரிக்க பயன்பாட்டில் பெரும்பாலும் phonograph record  என்றும் இங்கிலாந்தில் gramophone record  என்றும் இது அழைக்கப்பட்டது. அதன் பின்னர் gramophone record எனும் இசைவட்டு 1910 வாக்கில் மக்கள் புழக்கத்திற்கு வரத்தொடங்குகிறது.

பொதுவாக இசைவட்டின் சுற்றளவை வைத்து இது குறிப்பிடப்படும். உதாரணமாக 12, 10, 7 அங்குலத்தில் இவை தயாரிக்கப்பட்டன.
என்ன ஆச்சரியம் என்றால் மேற்கத்திய உலகில் அறிமுகமாகும் இந்த க்ராமஃப்போன் இசைவட்டுக்கருவி அதே 1912 வாக்கில் மலாயாவிலும் தமிழ் மக்களின் பொழுது போக்கு சாதனமாக புழக்கத்தில் வந்தது என்பதுதான்.

1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாத வாரப் பத்திரிக்கையான பினாங்கு ஞானாசாரியன் பத்திரிக்கையில் இடம்பெறுகின்ற ஒரு விளம்பரம் இதற்குச் சான்றாகின்றது.
 
இந்த விளம்பரத்தில் 1912 வாக்கில் தமிழிசை அல்லது உரைகளைக் கொண்ட இசைவட்டுக்களின் தகவல்கள் சில நமக்கு இப்பத்திரிக்கையின் வழி கிடைக்கின்றன. அவற்றுள் சில:
* இன்னும் என்மீதில் (கதிரையாத்திரை விளக்கம் – பண்: நாதனாமக்கிரியை –தாளம்: ரூபகம்.
* மயினமிசைவரும் – பண்: தன்னியாசி – தாளம்: ஆதி
* அங்கிங்கெனாதபடி – தாயுமானவர்
* தாயைவிட்டு: அரிச்சந்திரநாடகம் – மயான காண்டம்
* பரமேஸ்வரி – ராகம்:  கல்யாணி
* சண்டாளன் – ராகம்: ஆனந்தபைரவி
* எக்காலத்திலும் மறவேனே – ராகம்: நாட்டைக்குறிஞ்சி – தாளம்: ஆதி
* நான் படும்பாடு (அருட்பா) – ராகம்: பைரவி

மலாயாவின் கிள்ளான் நகரில் 38 ரெம்பாவ் சாலையில் அமைந்திருந்த கிள்ளான் அச்சு ஆலையில் திரு சி.கந்தையா பிள்ளை என்பவரது கடையில் இவை விற்கப்பட்டன என்ற தகவலும் இந்த விளம்பரத்தில் அடங்குகிறது.

மாலாயா வாழ் தமிழ் மக்களின் இசை ஆர்வத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் தமிழ் இசைவட்டுக்கள் உருவாக்கப்பட்டு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புழக்கத்தில் இருந்தன என்பதும், தமிழ்நாட்டிலிருந்து அவை மலாயாவிற்குத் தருவிக்கப்பட்டு விற்பனை நிகழ்ந்திருக்கின்றது என்பதையும் பினாங்கு ஞானாசாரியன் பத்திரிக்கையின் வழி நாம் அறிகின்றோம்.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 287 இதழில் இன்று வெளிவந்தது.)

Suba 11 -1.jpg

Suba 11 -2.jpg
-------

தேமொழி

unread,
Jun 11, 2025, 1:46:35 AMJun 11
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 12

முனைவர் க.சுபாஷிணி

பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தால் சாவான்

இன்று ஒரு பத்திரிக்கையின் பல பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் செய்திகள் யாவை என ஆராய்ந்தால் ஆங்காங்கே நடைபெற்ற விபத்து, மரணம், தாக்குதல், அதிர்ச்சிகரமான செய்தி போன்றவைதான் நமக்குத் தென்படுகின்றன.  இவற்றோடு உள்ளூர் மற்றும் அயல்நாட்டு அரசியல் நிகழ்ச்சிகளும் இணைந்து கொள்கின்றன. இன்று மட்டுமல்ல. மலாயாவில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த தமிழ்ப்பத்திரிக்கைகளின் உள்ளடக்கமும் இப்படித்தான் இருந்திருக்கின்றது.

1912ஆம் ஆண்டு பினாங்கு ஞானாசாரியன் தமிழ் வாரப்பத்திரிக்கையில் உள்ள உள்ளூர் செய்திகள் சிலவற்றைக் காண்போம்.

ஒரு செய்தி, பெப்ரவரி மாதம் 28ஆம் தேதி பினாங்கு அட்டன்லேன் சாலையில் ஒரு சீனரான சுவாகாங் என்பவரை வியாக் ஆ ஈ என்ற ஒரு சீனர் கொலை செய்ததை அறிவிக்கிறது. விசாரணையில் திட்டமிடாத ஒரு கொலை இது என நீதிபதிகள் முடிவு செய்ததாகவும் குற்றவாளிக்கு நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது என்றும் அக்குற்றவாளியைப் பிடித்த சுல்தான் என்று பெயர் கொண்ட ஒரு மலாய்காரருக்குப் பரிசாக மலேசிய ரிங்கிட் பத்து வெள்ளி வழங்கப்பட்டது என்றும் செய்தி பதிகிறது.
மற்றொரு செய்தி பினாங்கில் கஸ்டாவ் வெஸ்ஸ்ன்ஸ் என்று பெயர் கொண்ட வைர வியாபாரி ஒருவர் 25900 டாலர் பெருமானமுள்ள வைரங்களை ஏமாற்றி திருடிவிட்டார் என்பதையும், இக்குற்றத்திற்கு வில்லியம் டி சல்வா என்னும் ஒரு வைர வியாபாரி உடந்தையாய் இருந்தார் என்பதையும் பதிகிறது. இக்குற்றம் பல நாட்கள் விசாரணையில் இருந்திருக்கிறது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் நீதிபதிகள் அவர்கள் இருவர் மீதும் குற்றமில்லை என தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர்.  வாதியான மெஸர்ஸ்பெர் அண்ட் கம்பெனியார் எழுப்பிய சந்தேகம் உறுதி செய்யப்படவில்லை என்று அறிவித்து குற்றவாளைகளை விடுதலை செய்த செய்தியைப் பதிகிறது.
மற்றொரு செய்தி பாம்பாட்டி ஒருவரின் மரனத்தைப் பற்றியது. ”பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தால் சாவான்” என்ற பழமொழியைக் கூறி இலங்கையின் கொழும்பில் வசித்து வந்த பம்பாய் ராமசாமி என்று பெயர் கொண்ட ஒருவர் ஒரு பாம்பை வித்தை காட்ட வளர்த்து வந்ததாகவும், அதனை வைத்து வித்தைகாட்டி பணம் சம்பாரிக்க துறைமுகத்தில் இருந்த டச்சு கப்பல்  ஒன்றிற்குச் சென்றதாகவும், வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கையில் அங்கு திடீரென்று ஒரு சத்தம் ஏற்பட அதில் பயந்த பாம்பு சீறிக்கொண்டு வந்து பாம்பாட்டி பம்பாய் ராமசாமியின் வலது கரத்தைக் கொத்தி விட்டு பெட்டிக்குள் புகுந்து கொண்டது என்றும் குறிப்பிடுகிறது.
அப்பாம்பின் விஷப்பற்களை முன்னரே பிடுங்கியிருந்தாலும் அது மீண்டும் முளைத்திருந்ததைப் பாம்பாட்டி ராமசாமி  கவனிக்கவில்லை போலும்.  அங்கேயே மயக்கமடைந்து விழுந்து விட்டார்.  அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமணை செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். உடனே அரசாங்கத்தினர் அந்தப் பாம்பை சுட்டுக் கொன்று அதனைப் புதைத்திருக்கின்றனர் என்ற செய்தியை இப்பத்திரிக்கையில் காண்கிறோம்.

மக்களுக்கு பேசுபொருளாக சில சுவாரசியமான தகவல்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தகைய அசம்பாவித சம்பவங்களைப் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. வாசிக்கின்ற மக்கள் அவற்றை பற்றி ஏனையோருடன் பேசி கலந்துரையாட விரும்புவார்கள், அவர்களது கவனத்தை இத்தகைய செய்திகள் ஈர்க்கும் என்ற உத்தியை அறிந்தே பத்திரிக்கை ஆசிரியர்கள் இயங்கி வந்திருக்கின்றனர். அத்தகைய போக்கை இந்த ஆரம்பகால பத்திரிக்கைகளிலும் காண்கின்றோம்.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் 288ஆம் இதழில் இன்று வெளிவந்தது)

Suba 12-1.jpeg
Suba 12-2.jpeg
-----------------------------------------

தேமொழி

unread,
Jun 18, 2025, 12:27:56 AMJun 18
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 13


முனைவர் க.சுபாஷிணி

முதல் தரமான சாப்பாட்டுக் கடை

1912ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி வெளிவந்த பினாங்கு ஞானாசாரியன் பத்திரிக்கையில்  ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அது ஒரு உணவகம் பற்றிய விளம்பரம்.  
இந்த விளம்பரம் சொல்லும் செய்தியைக் காண்போம்.
எஸ்.எஸ் என்ற ஒருவரது   பெயரில் வணிக உரிமம்  பெற்று பினாங்கிலுள்ள குவின்ஸ்ட்ரீட் சாலையில் மாரியம்மன் கோயில் இருக்கும் சாலையில் ஒரு உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

 மா.நா.நா சுப்பிரமணியப்பிள்ளை என்பவருடைய இந்தப் புகழ்பெற்ற சாப்பாட்டுக் கடையில் தூய்மையான ருசியான உணவு விற்கப்படுகிறது.  அங்கேயே தங்கிக் கொள்ளவும் அறைகள் உள்ளன. இந்தியாவிலிருந்து, அக்கரை ஊர்களிலிருந்து வருபவர்களும் பினாங்கிலிருந்து இந்தியாவிற்கு செல்பவர்களும் இந்த சாப்பாட்டுக் கடையைத் தேடி வருகிறார்கள். ஒருமுறை இங்குச் சாப்பிட்டவர்கள் பின்னர் வேறெங்கும் செல்ல மாட்டார்கள். இங்குதான் உணவு உண்பார்கள்.  
இந்த விளம்பரத்தை வழங்கியவர் ”திருப்பத்தூருக்கு அடுத்த ஆத்திரம்பட்டி எனும் ஊரைச் சார்ந்த மா.நா.நா சுப்பிரமணியப்பிள்ளை என்பவரின் கணக்கு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பினாங்கில் குவின்ஸ்ட்ரீர் எனப்படும் சாலை பிரசித்தி பெற்றது. இங்கு இன்று ஏராளமான தமிழர்கள் வணிகம் செய்கின்றார்கள். பினாங்கின் தமிழ் வணிகர்கள் மட்டுமே கோலோச்சும் பகுதி இது.  கடைவீதி என்றும் சொல்லலாம்.

இன்று “லிட்டல் இந்தியா” என அழைக்கப்படும் பகுதியில் இச்சாலையும் அடங்கும். இங்குதான் பிரமாண்டமான மாரியம்மன் கோயில் உள்ளது. இன்றும் கூட தைப்பூசத் திருவிழா இக்கோயிலில் தொடங்கி பின்னர் தண்ணீர்மலை முருகன் கோயில் வரை செல்வது வழக்கம்.
விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ”அக்கரை” என்ற சொல் மலேசிய தமிழர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொல் எனலாம். தமிழ்நாட்டை குறிக்க பயன்படுத்தப்படும் சொல் என்றும் பினாங்கு தீவைக் கடந்த நிலப்பகுதி என்றும் இரு வேறு பொருளில் இது பயன்பாட்டில் உள்ளது.

இன்று இப்பகுதியில் ஏராளமான தமிழர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம்களின் உணவகங்கள் செயல்படுகின்றன. “ஊர்க்காரர்கள்” தெரு என்றும் இப்பகுதி இன்று உள்ளூர் தமிழ்   மக்களால் அழைக்கப்படுகிறது. “ஊர்” என்ற சொல் தமிழ்நாட்டைக் குரிப்பதுதான். “ஊர்” என்றாலே மலேசியத் தமிழர்களுக்கு அது தாய் தமிழ்நாடுதான். இது மிக இயல்பாக மக்களின் பேச்சுப் பயன்பாட்டில் இடம்பெற்று விட்டது.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலக தமிழ் இதழ் 289ல் இன்று வெளியிடப்பட்டது.

தேமொழி

unread,
Jul 2, 2025, 8:25:18 PMJul 2
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 14

முனைவர் க.சுபாஷிணி
ஊர்க்கப்பல்

இளம் வயதில் மலேசியாவில் வசித்த காலங்களில் விமானம் சென்னையிலிருந்து வந்து அதில் உறவினர்களோ நண்பர்களோ வந்திருந்தால் ‚ஊர்க்கப்பல்’  வந்திருக்கு என்று எங்கள் சுற்றத்தில் சொல்லி உரையாடுவது இயல்பு. கடலில் பயணம் செய்யும் கப்பலைப் போலவே விமானத்தையும் “கப்ப” என்று பேச்சு வழக்கில் அழைப்பது மலேசியத் தமிழர்களிடையே உள்ள வழக்கம்.

தமிழ் நாட்டிலிருந்து யார் வந்திருந்தாலும் பொருட்கள் வந்திருந்தாலும்  ”ஊரிலிருந்து வந்திருக்கின்றார்கள்” என்று சொல்வதும், ”ஊர் சாமான்” வந்திருக்கின்றது எனச் சொல்வதும் மிக இயல்பான ஒன்று. தமிழ்நாட்டு மக்களையே மலேசியத் தமிழர்கள் ”ஊர்க்காரர்கள்” என்று சொல்வது வழக்கம். தமிழ்நாட்டுக்குச் செல்வதென்றால் அதனையும் ”ஊருக்குப் பயணமா?” என்று கேட்பதும் வழக்கம்.

ஆக மொத்தம் தமிழ்நாட்டை “ஊர்” என்று தான் மலேசியத் தமிழர்கள் அடையாளப்படுத்தி பேசுகின்றனர். அது இன்றும் தொடர்கின்றது.
1897ஆம் ஆண்டு மலாயாவின் பினாங்கிலிருந்து வெளிவந்த வார இதழ்களில் பினாங்கு வர்த்தமானி பத்திரிக்கையும் ஒன்று. இது 2 பக்கங்களில்  வெளிவந்த பத்திரிக்கை. உள்ளூர் மற்றும் அயல்நாட்டுச் செய்திகள் இதில் அடங்கும்.

அதில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி புதிதாக அச்சமயத்தில் தமிழ்நாட்டிலிருந்து மலாயாவிற்குச் சேவையைத் தொடங்கிய ஒரு புதிய கப்பலைப் பற்றி பேசுகிறது,

இந்தப் புதிய “ஊர்க்கப்பல்” ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டிலிருந்து மலாயாவிற்குச் சேவையைத் தொடங்கியிருக்கிறது.  ஏற்கனவே அச்சமயத்தில் வேறு சில கப்பல்களும் ஆட்களையும் பொருட்களையும் ஏற்றி வரும் சேவை இருந்ததால் இப்புதிய கப்பல் வந்த பின்னர் போட்டியில் பயணக் கட்டணம் குறைய வாய்ப்பிருப்பதை இப்பதிவு சுட்டிக்காட்டுகிறது.

போட்டிக்குப் புதிய கப்பல் வந்திருப்பதால் ஏற்கனவே பயணிக்கும் கப்பல்களில் சிறிய குறையைக் கண்டுபிடித்தாலும் உடனே புதிய கப்பலுக்கு வணிகர்கள் சென்று விடுவார்கள்.  ”வேண்டாப் பெண்டிர் கைப்படக் குற்றம் கால்படக் குற்றம்” என்பது போல என்கிறது இச்செய்தி.

இப்புதிய கப்பலைப் பற்றி உள்ளூரில் மக்கள் புகழ்ந்து பேசி மகிழ்வதைக் கேலி பேசும் வகையில் இப்புதிய கப்பலை இயக்குபவர்களை உள்ளூர் மக்கள் புகழ்ந்து பேசுவதை இச்செய்தி குறிப்பிடுவதைக் காண்கின்றோம்.

இதற்கு முன்னால் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த கப்பலில் தொற்று நோய்க்காரணமாக மாடுகளை இறைச்சிக்காகக் கொண்டு வருவது தடைபட்டிருந்தது போலும். அதனால் மாட்டிறைச்சியின் விலை கட்டி ஒன்று (அளவை) 30 காசு விலையேற்றம் கண்டிருந்தது. ஆட்டிறைச்சி விலையேற்றம் கண்டால் கூட பரவாயில்லை; மாட்டிறைச்சி விலையேற்றம் காணக் கூடாது என்கிறது இச்செய்தி.
 
[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 290இல்  வெளியிடப்பட்டது.)

Suba 14.1.jpg
Suba 14.2.jpg
----

தேமொழி

unread,
Jul 3, 2025, 7:06:43 PMJul 3
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 15

முனைவர் க.சுபாஷிணி
சத்தியவான்

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய மலாயாவின் பினாங்குத் தீவிலிருந்து குறிப்பிடத்தக்க தமிழ் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அத்தகைய முயற்சிகளில் ஒன்று சத்தியவான் என்ற பெயர் கொண்ட, வாரம் ஒரு முறை திங்கட்கிழமைகளில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை.

இதன் தலைப்பில் சத்தியவான் என தமிழிலும் ஆங்கிலத்தில் The Sathiawan என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பத்திரிக்கையில் இது 1919 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக வெளிவந்திருப்பதைக் காண முடிகின்றது. ஆக, ஏறக்குறைய 1919 அல்லது இதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது மாதங்களுக்கு முன்னர் இப்பத்திரிக்கை முயற்சி தொடங்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்திற்கு இது இடம் அளிக்கிறது.

14 ஏப்ரல் 1919 அன்று வெளியிடப்பட்ட சத்தியவான் பத்திரிகையில் உள்ள தகவல்களை ஆராய்வோம்.

நான்கு பக்கங்களைக் கொண்ட வகையில் இது அமைந்திருக்கின்றது. இப்பத்திரிகை பினாங்குத் தீவில் உள்ள பினாங்கு ஸ்ட்ரீட் சாலையில் அமைந்திருந்த விக்டோரியா பிரஸ் என்ற அச்சகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர் டாக்டர். பாலகந்தக சிவம் என்பவர். பினாங்கு ஸ்ட்ரீட் என்பது தமிழர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வணிகம் செய்கின்ற ஒரு பகுதி என்பதை இன்றும் காண்கிறோம்.

ஏனைய பத்திரிகைகளைப் போலவே இந்த பத்திரிகைக்கும் சந்தாதாரர்கள் தேவை என்பதைக் குறிப்பிட்டு பத்திரிகை நிர்வாகத்தார் விளம்பரங்கள் செய்துள்ளார்கள்.

தங்கள் பத்திரிகை பற்றிய நல்ல கருத்துக்களையும் எண்ணங்களையும் வாசகர்களிடையே விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது பத்திரிக்கை பற்றி கீழ்காணும் வகையில் இதில் செய்தி இணைத்துள்ளார்கள்.

”உலகத்துக்குச் சிறப்புப் பொருள்.
பரலோகத்துக்குச் சிறப்பு அருள் அல்லது அன்பு.
மனிதன் தேர்ந்த பிறகு பிறருக்குப் போதிப்பது கல்வி.
மனிதன் ஞானத்தை அடைந்த பிறகு பிறருக்குப் போதிப்பது மார்க்கம் அல்லது மதம்.
பினாங்கு மலாயா தீபகற்பங்களில் பிரசுரமாகும் செந்தமிழ் பத்திரிகைகளில் இது ஒன்றே மிகச்சிறந்தது.”

செந்தமிழ் பத்திரிக்கை என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொண்டாலும் கூட மணிப்பிரவாள நடையும் ஆங்கிலக் கலப்பும் இப்பத்திரிக்கையில் நிறைந்து காணப்படுகின்றது.

பினாங்கு மாநில செய்திகள் தான் இந்தப் பத்திரிக்கையை முழுமையாக நிறைத்திருக்கின்றன. பினாங்கு அறநிலையத்துறை தொடர்பான செய்திகள், பினாங்கு முத்துமாரியம்மன் கோயிலின் செய்திகள், உள்ளூர் செய்திகள் ஆகியன அன்றைய சூழலை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மலாயாவில் தமிழ்ப் பத்திரிக்கைகள் வெளியீட்டில் பினாங்குத் தீவில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பதற்கு இந்த சத்தியவான் வாரப்பத்திரிக்கையும் சான்றாக அமைகிறது.

 
[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 291இல் இன்று வெளியிடப்பட்டது.)

suba 15.1.jpg

suba 15.2.jpg

---------------------------

தேமொழி

unread,
Jul 9, 2025, 1:33:49 AMJul 9
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 16

முனைவர் க.சுபாஷிணி
சேலை வாங்கலையோ? சேலை!

இன்று சிங்கப்பூர் தனி நாடாக உள்ளது. ஆனால் மலேசியா பண்டைய மலாயா என்ற அடையாளத்திலிருந்து பிரிந்து, பிரித்தானிய ஆட்சியில் இருந்து 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட சிங்கப்பூர் மலேசியாவின் ஓர் அங்கமாகத்தான் இருந்தது.

1959 ஜூன் மூன்றாம் தேதி முதல் சிங்கப்பூர் தனி ஆட்சியுடன் உருவாகத் தொடங்கியது. அதன் பின்னர் அதிகாரப்பூர்வ மலேசிய புரிந்துணர்வின் வழி 1963 செப்டம்பர் 16ஆம் தேதி முதல் சுதந்திர நாடாக படிப்படியாக பிரிட்டனிடம் இருந்தும் மலேசியாவிடமிருந்தும் பிரிந்து தனி நாடாக மாறியது.

இந்தப் பின்னணியோடு நாம் பார்க்கும் போது 1963 க்கு முன்னர் சிங்கப்பூர் மலாயாவின் ஓர் அங்கமாகத்தான் இருந்தது.

வரலாற்று காலத்தில் பண்டைய ஸ்ரீவிஜயா பேரரசு, அதன் பின்னர் மலாய் பேரரசு ஆட்சி காலத்தில் எல்லாம் மலாயா, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மூன்றும் பெரும் பேரரசின் ஆட்சிகளுக்குள் இருந்தன. பின்னர் படிப்படியாக பல்வேறு ஆதிக்கங்கள் இடைப்பட்ட காலத்தில் ஏற்படுத்திய சூழல் மாற்றங்களால் இவை தனித்தனி நாடுகளாக இன்று பிரிந்திருக்கின்றன.

19 ஆம் நூற்றாண்டு காலத்தில் தமிழ் பத்திரிகைகள் முயற்சிகள் என்று நோக்கும் போது பினாங்கு பகுதியில் எப்படி தமிழ் பத்திரிகை வெளியீட்டு முயற்சிகள் தொடங்கப்பட்டதோ, அதேபோல சமகாலத்தில் சிங்கையிலும் தமிழ் பத்திரிகை முயற்சிகள் வெளிவரத் தொடங்கின. அத்தகைய ஒரு பத்திரிக்கை தான் ”சிங்கைநேசன்”.

ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை தோறும் வெளியிடப்படும் பத்திரிக்கையாக ஒரு வாரப் பத்திரிக்கையாக சிங்கைநேசன் அன்று வெளிவந்து கொண்டிருந்தது.

1887 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி வெளிவந்த சிங்கைநேசன் இதழ் கூறும் ஒரு செய்தியைக் காண்போம். இது புடவைகள் பற்றிய ஒரு விளம்பரம்.

இன்றைக்கு மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பல புடவைக் கடைகள் இருக்கின்றன. ஆனால் இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து புடவைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வோர் உள்ளூர் வியாபாரிகளுடன் வணிகத்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அதன் வழி பொருட்களை அனுப்பி வைப்பது என்பது நடைமுறை வழக்கமாக இருந்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற ஒவ்வொரு கப்பலிலும் புடவைகளும், வேஷ்டிகளும், துண்டுகளும், கைலிகளும் மற்ற மற்ற பொருட்களும் வந்து சேர்வதும் மிக இயல்பாக நடந்து கொண்டிருந்தது. அத்தகைய,  புடவைகள் விற்கும் ஒருவர் கொடுத்த விளம்பரத்தை இப்பத்திரிகையில் கீழ்காணும் செய்தி விளக்குகின்றது.

”மதுரை வெள்ளிக்கெண்டை வேஷ்டிகளும்,  உருமால்களும், சேலைகளும், காசி பேட்டு மாதிரி துப்பட்டிகளும், சிறுபிள்ளை வேஷ்டிகளும், சிற்றாடைகளும், சீர்மைக்கெண்டையில் மேற்கண்ட ஜவுளித் தினுசுகளும், சென்ன பட்டண மாதிரி ஜோடி லேஞ்சிகளும், பல்லாரி கடப்பை கர்நூல் முதலிய இடங்களில் இருந்து வருவித்த விரிப்புக்கடுத்த மேலான கம்பள திணிசுகளும், மல், காசா காரிக்கன் புடவைகளும், கொறநாடு, கும்பகோணம், சிதம்பரம் முதலில் இடங்களில் இருந்து பல மாதிரி பட்டு பளுக்கா சேலைகளும், சென்னப்பட்டின மாதிரி கைலி சாரம் தினுசுகளும் மற்றும் பலவித ஜவுளி தினசக்களும் வந்திருக்கின்றன. பலவித புஸ்தகங்களும் இருக்கின்றன. வேண்டியவர்கள் பால்கடை சைட்டியில் 49 ஆம் நம்பர் புடவை கடையில் வந்து வாங்கிக் கொள்ளலாம்.

இப்படிக்கு
திவான்முக்கியித்தீன்சாகி, சிங்கப்பூர், 3/8/87”

மேற்கண்ட செய்தியில் ”லேஞ்சி” என்ற சொல் கைத்துண்டுகளைக் குறிக்கின்றது. மலேசிய தமிழ்மக்கள் புழக்கத்தில் உள்ள ஒரு சொல் இது. அதே போல “சாரம்” எனும் சொல் கைலியை குறிப்பது. Sarong எனும் மலாய் மொழிச் சொல்லின் தமிழாக்கம். மலேசியாவிலும் இலங்கையிலும் தமிழ் மொழி பயன்பாட்டில் உள்வாங்கப்பட்ட ஒரு சொல் எனலாம்.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 292ல் இன்று வெளியிடப்பட்டது

Suba 16.1.jpeg
Suba 16.2.jpeg
__________________________________________________________

தேமொழி

unread,
Jul 16, 2025, 1:43:44 AMJul 16
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 17

முனைவர் க.சுபாஷிணி

இலங்கை “ஆதி திராவிடன்”


தமிழ் இதழியல் முயற்சிகள் சீரிய வகையில் தொடங்கப்பட்ட காலமாக 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தைக் கூறலாம். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட தமிழ் பத்திரிக்கைகள், வார மாத இதழ்கள் மேலும் பலருக்கு இத்துறையில் ஈடுபாட்டை உருவாக்கியதன் விளைவாக புதிய பத்திரிக்கைகளின் வரவுகளும் அமைந்தன. அவ்வகையில் தமிழ்நாடு மட்டுமன்றி, பர்மா, மலாயா, இலங்கை ஆகிய தமிழர் வசிக்கும் பகுதிகளில் புதிய பத்திரிக்கைகள் தொடங்கப்பட்டன.

1919ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி மலாயாவின் பினாங்கிலிருந்து வெளியிடப்பட்ட சத்தியவான் வாரப்பத்திரிக்கையில் ஒரு செய்தி இடம்பெறுகின்றது. அதில் அச்சமயத்தில் இலங்கையிலிருந்து ஒரு புதிய பத்திரிக்கை வெளிவரத் தொடங்கியிருக்கும் செய்தியை அறிகின்றோம். இப்பத்திரிக்கையின் பெயர் ”ஆதி திராவிடன்”. இந்த விளம்பரச் செய்தியைக் காண்போம்.

“ஆதி திராவிடன்”
இப் பெயர் வாய்ந்த ஒரு மாதாந்தப் பத்திரிகை இலங்கை தென்னிந்திய ஐக்கிய சங்கத்தாரால் ஆதிதிராவிடன் முன்னேற்றத்தைக் கருதி 16 பக்கங்களடங்கி மிக அழகாக அச்சிடப்பட்டிருக்கின்றது. பத்திரிக்கையின் போக்கை நோக்க அது தன்சந்தாதாரர்களுக்கு மிகவும் உபயோகமான விஷயங்களையே எடுத்து போதிக்கு மென்று நம்புகின்றோம். அப்பத்திரிக்கைக்கு வருஷ சந்தா ரூபா 1.25. சந்தாதரராக சேர விரும்புவோர் ஆதிதிராவிடன் பத்திராதிபர், தென்னிந்திய ஐக்கிய சங்கம், 221, சர்மாவிலா, கொள்ளுப்பட்டி,கொழும்பு என்னும் விசாலத்திற்கு எழுதிக்கொள்ளலாம். – திராவிடன் “

இந்த விளம்பரத்துடன் மேலும் சத்தியவான் பத்திரிக்கை ஆசிரியர் கீழ்க்காணும் வாழ்த்தையும் பதிகின்றார்.

[ஆதிதிராவிடர்கள் முன்னேற்றத்திற்குப் பத்திரிக்கை மிக அவசியம். திராவிடன் பத்திராதிபதியோடு இப்பத்திரிக்கையும் வாழும்படி ஆசி கூறுகிறோம்]

இலங்கையில் தொடங்கப்பட்ட ஆதி திராவிடன் இலங்கையில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பத்திரிக்கையாகத் திகழ்ந்திருக்கின்றது.  இந்த ஆதிதிராவிடன் என்ற பத்திரிக்கை இலங்கையின் முதலாவது தலித் இதழ் மட்டுமல்ல, மலையகத்தின் முதலாவது பத்திரிக்கையுமாகும் என்பதை நோர்வேயின் வசிக்கும் இலங்கை ஆய்வாளர் சரவணன் குறிப்பிடுகின்றார். (https://www.namathumalayagam.com/2023/04/AdiDraviden.html)

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இதழியல் செயல்பாடுகளில் அயோத்திதாசப் பண்டிதர் மிக முக்கியமானவர். அக்காலத்தில் இவரது ஆதிதிராவிடர்கள் நலன் சார்ந்த முயற்சிகளின் தாக்கத்தை தமிழ்நாடு மட்டுமன்றி மலாயா, இந்தோனீசியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் காணமுடியும். எடுத்துக்காட்டாக அயோத்திதாசப் பண்டிதரின் தாக்கத்தாலும் உதவியுடனும் இந்தோனிசியாவின் மேடான் நகரில் ஆதிதிராவிடர் அமைப்பு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கம் கண்டு செயல்பட்டது (நூல்: தமிழர் புலப்பெயர்வு – க.சுபாஷிணி)  அதே வகையில் இலங்கைக்கான அயோத்திதாசப் பண்டிதரின் வருகை எழுச்சியை ஏற்படுத்தியது என்பதும் மறுப்பதற்கில்லை.

இந்த ஆதி திராவிடன் பத்திரிக்கை 1919ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் அரசியல், கல்வி, சமயம், இலக்கியம், பெண்கள் முன்னேற்றம், சாதிப் பிரிவினை எதிர்ப்பு ஆகிய பொருளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

சமூக மாற்றத்தை முன்வைத்து 20ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இதழியல் முயற்சிகளில் இலங்கையிலிருந்து வெளிவந்த இந்த ஆதி திராவிடன் என்ற மாதப் பத்திரிக்கையும் முக்கியத்துவம் பெறுகின்றது.  


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழ் 293 இல் இன்று வெளியிடப்பட்டது)

Suba 17-1.jpg

Suba 17-2.jpg

----------

தேமொழி

unread,
Jul 23, 2025, 2:02:17 AMJul 23
to மின்தமிழ்

மலாயா ஆவணங்கள் – 18

முனைவர் க.சுபாஷிணி
கப்பல் டிக்கெட்

தமிழ்நாட்டில் பஞ்சகாலத்தில் தாம் வாழ்ந்த ஊரையும், கிராமத்தையும், நிலத்தையும் விட்டு புதிய வாழ்க்கையைத் தேடி பயணித்த எண்ணற்ற தமிழ் நிலத்து மக்கள் இன்று உலகின் பல நாடுகளிலும் தீவுகளிலும் வசிக்கின்றார்கள். அவர்கள் புலம்பெயர்ந்த காலத்தில் சொல்லொனா துயரத்தை அவர்கள் அனுபவித்தாலும் இன்று அம்மக்களது சந்ததியினர் தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை சூழல் ஆகியவற்றில் உயர்ந்து நல்ல வாழ்க்கையைப் பெற்று அந்தந்த நாடுகளில் சட்டப்படி குடியுரிமை பெற்ற மக்களாக வாழ்கின்றார்கள்.

பஞ்சம் என்றால் அது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தது என்பது நம் பொதுவான கருத்து என்றாலும், கிபி 13 ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் நிலத்தில் பஞ்சம் குறித்த ஆவணக் குறிப்புகளை நாம் காண்கின்றோம் (காண்க: நூல் "தமிழர் புலப்பெயர்வு - உலகளாவிய பயணங்கள் குடியேற்றங்கள் வரலாறு - ஆசிரியர் க.சுபாஷிணி)

மலாயாவிற்குத் தமிழ்நாட்டில் இருந்து தமிழ் மக்களின் புலம்பெயர்வு என்பது பல்வேறு காலகட்டங்களில், குறிப்பாக பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் நிகழ்ந்திருக்கின்றது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பஞ்சத்தின் காரணத்தால் தமிழ் மக்கள் மலாயா வந்திருக்கின்றனர். அவர்கள் மெட்ராஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல்களில் மலாயாவிற்கு வரும்போது பெரும்பாலும் அவர்கள் இறங்கிக் கொள்வது பினாங்குத் தீவில். சிலர் கிள்ளான், இறுதியாக சிங்கப்பூர் என்று இறங்கினர்.

இப்படி வந்த மக்கள் மலாயாவின் எல்லா மாநிலங்களிலும் தோட்டக்காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டனர்.  இது தொடர்பான பல ஆவணக் குறிப்புகள் இன்று நமக்கு கிடைக்கின்றன. அத்தகைய பயணத்தைப் பற்றிய ஒரு செய்தியை மலாயாவின் பினாங்கில் இருந்து வெளிவந்த சத்தியவான் என்ற பத்திரிக்கை நமக்கு வழங்குகின்றது.
12.5.1919 என்று தேதி இடப்பட்ட ஒரு இதழ் இச்செய்தியை குறிப்பிடுகிறது.

பஞ்சத்தால் சீர் அழிந்த தமிழ் மக்கள் தரகர்களிடம் காசு கொடுத்து பயணம் செய்வது என்பது ஒரு புறம். சிலரோ மெட்ராஸில் இருந்து புறப்படும் கப்பல் எந்த தேதியில் எத்தனை மணிக்கு புறப்படுகின்றது என்பதை தெரிந்து கொண்டு தாங்களே கூட டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணம் செய்து மலாயா வந்திருக்கின்றனர். அப்படி பயணச் சீட்டு பெறுகின்ற அலுவலகத்தில் அவர்கள் பணம் கட்டி பயணச்சீட்டு வாங்கும் போது அவர்கள் படுகின்ற கஷ்டம் மிகப் பெரிது என்பதை இச்செய்தி சுட்டிக்காட்டுகிறது.

ஏமாற்றுக்காரர்களாக அதாவது டம்பவேடம் பூண்டு உலவிக் கொண்டிருக்கும் சிலர் உபகாரமாய் நான் வாங்கித் தருகிறேன் என்றும், அதற்கு தனக்கு அன்றைய மலாயா ரிங்கிட் இரண்டு கொடுக்க வேண்டும் என்றும் ஏமாற்றி அவர்களிடம் தொகையை வாங்கிக் கொண்டு மறைந்து விடுகின்றார்கள்.  

சில ஏமாற்றுக்காரர்கள் மொத்தமாக 10 அல்லது 20 டிக்கெட்களை முன் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதால் பயணச்சீட்டு அலுவலகத்தில் மக்கள் வரும்போது பயணச் சீட்டு கிடைப்பதில்லை. அத்தகைய சூழலில் மெட்ராஸ் நகரில் அவர்கள் அடுத்த கப்பல் வரும் வரை காத்திருக்கும் போது உணவுக்கு வழியில்லாமல் மிகுந்த துன்பத்திற்கு உள்ளான நிலையையும் இப்பத்திரிக்கை செய்தி சுட்டிக்காட்டுகிறது.

இப்படி ஏமாந்து போவதாலும், அடுத்த கப்பல் வரும் வரை காத்திருப்பதற்கு ஏற்ற செலவுகளை கவனிக்க முடியாமல் சிக்கித் தவிப்பதாலும் கட்டண அலுவலகங்களில் பணிபுரியும் மேலதிகாரிகள் இதனை கவனிக்க வேண்டும் என்பதை இப்பத்திரிகை கூறுகிறது.

இதற்கு நிவாரணமாக,  இத்தனை பயணச்சீட்டுகள் தான் ஒரு பயணத்திற்கு என்பதை பினாங்கிலேயே அலுவலகம் தீர்மானித்து பினாங்குக்கு எவ்வளவு,  கிள்ளான் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு எவ்வளவு என்பதையும் தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற ஏழை மக்களுக்கு அவர்கள் அனுபவிக்கின்ற சிரமம் குறையும் என்று இப்பத்திரிக்கை ஆலோசனையை முன் வைக்கின்றது.

இச்செய்தியின் வழி பினாங்கிலிருந்து வெளிவந்த “சத்தியவான்” வாரப் பத்திரிக்கை மக்கள் நலனில் அக்கறையோடு அக்காலகட்டத்தில் செயல்பட்டது என்பதையும், பொதுமக்கள் அதிலும் குறிப்பாக பஞ்சத்தில் வாடி வேலை தேடி மலாயா வருகின்ற மக்கள் சிரமம் இல்லாமல் மலாயா வந்து சேரும் வகையில் அவர்களது பயணங்கள் இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு பத்திரிக்கை தர்மத்தை செயல்படுத்தி இருக்கின்றது என்பதையும் இச்செய்தியின் வழி காண்கிறோம்.

செய்தி ஊடகங்கள் கடைக்கோடி எளிய மனிதர்களுக்கு உதவும் கருவியாக இருக்க வேண்டும் என்பதுதான் பத்திரிக்கை மற்றும் இதழியல் முயற்சிகளுக்கு அடிப்படை காரணமாகவும் நோக்கமாகவும் இருந்தது. ஆனால் இன்று பத்திரிகைகள் இத்தகைய நோக்கத்தோடு செயல்படுகின்றனவா என்பதை பத்திரிக்கை நிர்வாகத்தினர் ஒவ்வொருவரும் தங்களை நோக்கி கேட்டுக் கொள்ள வேண்டியதும் அவசியம் தான் அல்லவா!


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 294ல் இன்று வெளியிடப்பட்டது)
suba 18.1.jpg

suba 18.2.jpg

--------------------------

தேமொழி

unread,
Jul 30, 2025, 12:45:25 AMJul 30
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 19

முனைவர் க.சுபாஷிணி

""தஞ்சாவூரில் சாதிக் கொடுமை""

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாயாவின் பினாங்கில் இருந்து வெளிவந்த தமிழ் பத்திரிகைகளில் ”சத்தியவான்” வாரப்பத்திரிக்கை சமூக சிந்தனையோடு இயங்கிக் கொண்டிருந்த ஒரு பத்திரிக்கையாக மிளிர்கிறது. அதில் 12.5.1919 அன்று வெளிவந்த பத்திரிக்கையில் தஞ்சாவூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் அனுபவித்த கொடூரங்களைப் பற்றி ஒரு செய்தி வெளிவந்திருக்கின்றது.

இச்செய்தி தஞ்சாவூர் ஜில்லாவில் சாதி வேறுபாடுகளும் பண்ணையார்கள் வேலையாட்களை வைத்து விவசாயம் செய்யும் முறை பற்றியும் பேசுகின்றது. பண்ணை சாகுபடி முறை மிகக் கொடூரமாக இருக்கின்றது என்பதை இச்செய்தி பதிகின்றது.

”பண்ணை சாகுபடி என்ற மகா பெரிய தேர் சக்கரத்தில் கழுத்தை கொடுத்துக் கொண்டு கஷ்டப்படுகிறவர்கள் பஞ்சமர்களே. அவர்கள் குடியிருப்பதற்கு வசதியே கிடையாது. இவ்விஷயத்தில் அவர்களுக்கு மிராசுதார்களால் உண்டாகும் இம்சை மிகவும் அதிகம். சொற்ப குற்றத்திற்கெல்லாம் பண்ணை ஆட்களின் குடிசைகளைப் பிரிப்பதும் அல்லது அக்கினி பகவானுக்கு இரையாக்குவதுமே சகஜமான தண்டனை. ஏனெனில் அந்தக் குச்சி வீடுகள் இருப்பது மேற்படி மிராசுதார்களின் மனைக்கட்டு என்று தர்க்கம் செய்கிறார்கள்” என்று இச்செய்தி குறிப்பிடுகிறது.

பண்ணையார்கள் தங்கள் நிலங்களில் பஞ்சமர்கள் வாழ்கின்றார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் அவர்களின் வீட்டை எரிப்பது அல்லது அவர்களின் குடிசை வீட்டை பிரித்து போட்டு அவர்களை நிற்கதியாக நிற்க வைப்பது என்ற வகையில் கொடுமை செய்திருக்கின்றார்கள். உண்மையில் இப்பத்திரிகை செய்தி சொல்கின்ற கொடுமைகளை விட இன்னும் அதிகமாக கொடுமைகள் நிகழ்ந்திருக்கும். ஆனால் இதில் விரிவாக அவை விளக்கப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் இது பற்றி பேசும் இப்பத்திரிகை செய்தி, ”இது சம்பந்தமாக கவர்னருக்குப் பலமுறை மனு செய்யப்பட்டது. தென்னிந்தியா ஒடுக்கப்பட்டவர்கள் சங்கத்தாரும் சென்ற 10 வருஷமாக பண்ணையாட்களின் மனைக்கட்டு விஷயமாகப் பரிகாரம் செய்யும்படி சென்னை கவர்ன்மெண்டாருக்கு மனு செய்தார்கள். ரங்கூன், சென்னப்பட்டணம், திருச்சினாப்பள்ளி முதலான பிரபல தலங்களில் உள்ள ஆதிதிராவிட சபைகளால் கவுரவம் பொருந்திய இந்தியா தேச மந்திரி அவர்கள் திவ்ய சமூகத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் இருந்தும் இம்மனைக்கட்டு விஷயம் குறிக்கப்பட்டிருந்தது. சென்ற மாதம் சிதம்பரம் நந்தனார் சபையின் ஆதரவில் நடந்த பஞ்சமர் கான்பரென்சில் மனைக்கட்டு விஷயமாயும் ஒரு தீர்மானம் ஏற்படுத்தப்பட்டு மேற்படி மந்திரி அவர்களுக்கும் நமது பிரதிநிதி சென்னை கவர்னர் முதலான அரசாங்க தலைவர்களுக்கும் தந்தி மூலமாய் அனுப்பப்பட்டது” என்று குறிப்பிடுகிறது.

இதிலிருந்து மூன்று செய்திகளை முக்கியமாகக் காணலாம்.

1. 1919 வாக்கிலேயே தென்னிந்திய ஒடுக்கப்பட்டவர்கள் சங்கம் என்ற ஒன்று இயங்கி வந்தது என்பதையும் அது கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு இது தொடர்பாக கடிதம் எழுதி இந்த கொடுமைகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
2. ரங்கூன், அதாவது இன்றைய மியான்மார் தலைநகர் ரங்கூன், சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிட சபை ஏற்படுத்தப்பட்டு அவை மக்களின் நலனுக்காக போராடி இருக்கின்றன.
3. இந்த நிகழ்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் சபை என்ற ஓர் அமைப்பு இருந்தது பற்றியும், அங்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பஞ்சம நலன்களைக் கவனத்தில் கொண்டு ஒரு மாநாடு நடத்தப்பட்டு அதில் பண்ணையார்களின் மனைக்கட்டு மற்றும் அதனால் ஏற்படுகின்ற கொடூரங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டும் 20 ஆம் நூற்றாண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் கொடூரங்களை ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களிடம் கொண்டு சென்று சேர்த்து தங்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க வேண்டுமென ஒடுக்கப்பட்ட மக்கள் மேற்கொண்ட முயற்சிகளை வெளிப்படுத்துகின்ற காலங்களாக அமைந்தன. அடிமைகளாக பண்ணையார்களிடம் எந்த எதிர் கேள்விகளும் கேட்க முடியாமல் துன்பத்தில் உழன்று கொண்டிருந்த ஏராளமான ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட அல்லது பஞ்சம சமூகத்து மக்கள் பட்ட இன்னல்கள் அதிகம். தமிழ் மக்கள் பலர் இக்காலகட்டங்களில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு கூலிகளாகவும் அடிமைகளாகவும் ஒப்பந்தக் கூலிகளாகவும் புலம்பெயர்ந்து சென்ற வரலாறும் இதனோடு தொடர்புடையது தான்.

ஆக இப்பத்திரிகை செய்தி சொல்வதன் அடிப்படையில் தஞ்சாவூர் பகுதியில் பண்ணையார்களின் கொடுமைகளை அரசுக்குத் தெரிவிக்கும் ஒரு முயற்சியாக இதனைக் காண்கிறோம்.

இக்கோரிக்கைகளின் அடிப்படையில் மனைக்கட்டு விஷயமாக எல்லா விபரங்களையும் விசாரிக்கும்படி ஸ்ரீமான் ஸ்ரீநிவாச்சாரி என்ற ஒருவரை துணை உதவி ஆட்சியராக பிரித்தானிய அரசாங்கம் நியமித்திருக்கின்றது என்பதை இச்செய்தி குறிப்பிடுகின்றது. இந்த சீநிவாச்சாரி என்பவர் பஞ்சமர்களின் பரிதாப நிலையைக் கண்டு அனுதாபம் அடைந்து தீர விசாரித்து பிரித்தானிய அரசுக்கு அறிக்கை கொடுத்ததாகவும் அதற்காக பஞ்சமர்கள் அனைவரும் அவருக்கு நன்றி செலுத்துவதாகவும் இப்பத்திரிக்கை செய்தி மேலும் குறிப்பிடுகிறது.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் 295ல் இன்று வெளியிடப்பட்டது)

suba 19.1.jpg

suba 19.2.jpg

***

தேமொழி

unread,
Aug 6, 2025, 2:25:56 AMAug 6
to மின்தமிழ்
மலாயா ஆவணங்கள் – 20

முனைவர் க.சுபாஷிணி
""கூலிகள் பாடக் கூடாதா?""

அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வதுதான் பெரும்பாலும் நீதிக்கு முன் அடங்கிப் போய் விடுகிறது. ஜனநாயகமும் சமூக நீதியும் பெருமளவில் கடைபிடிக்கப்படுகின்ற இந்தக் காலகட்டத்திலேயே எத்தனையோ சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் செய்தி ஊடகங்களின் வழி பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கே இப்படி இருக்கின்றது என்றால் இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை ஓரளவு நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஆவணங்களின் வழி தான் அது நமக்குச் சாத்தியமாகும். அந்த வகையில் கடந்த நூற்றாண்டில் வெளிவந்த நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் ஆகியவை இப்படி சில செய்திகளை நமக்கு வழங்குகின்றன. வரலாற்றை திரும்பிப் பார்க்க இத்தகைய ஆவணங்கள் நமக்கு இன்று தேவைப்படுகின்றன.

மலாயாவின் பினாங்கு மாநிலத்தில் இருந்து வெளிவந்த தொடக்க கால பத்திரிகைகளில் "பினாங்கு ஞானசாரியன்" முக்கியமான ஒரு பத்திரிக்கை. 3.5.1912 வெள்ளிக்கிழமை எனத் தேதி இடப்பட்ட இப்பத்திரிக்கை தமிழ்நாட்டில் இருந்து சென்ற தோட்டக்கூலிகள் பெற்ற தண்டனையைப் பற்றி குறிப்பிடுகிறது.

கோலாலம்பூருக்கு பக்கத்தில் "காசில்பீல்ட்" என்று பெயர் கொண்ட ஒரு ரப்பர் தோட்டம். அதன் மேலாளர் மிஸ்டர் ஆர். ஆலன்.

அத்தோட்டத்தில் ஒரு புதன்கிழமை இரவு 9 மணிக்கு 10 பேர், தமிழ் தோட்டக்கூலிகள். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பாடல் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது மிஸ்டர் ஆலன் தனது வேலைக்காரப் பையனை அனுப்பி இந்தப் பாட்டு கச்சேரியை நிறுத்தும்படி உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் பாடிக்கொண்டிருந்த அந்த பத்து பேரும் பாடல் கச்சேரியை நிறுத்தவில்லையாம். அவர்கள் 10 மணி வரை பாடிக் கொண்டிருக்கலாம் என தோட்டத்தின் மேனேஜர் அனுமதி கொடுத்து இருந்ததால் தாங்கள் பாடலை நிறுத்த மாட்டோம் என்று சொல்லி விட்டு தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தனர்.

கோபமடைந்த மிஸ்டர் ஆலன் இந்த தமிழ் கூலிகள் பாடிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்து ஒரு பிரம்பை எடுத்து ஒரு கூலியை அடித்தாராம். இதனைப் பார்த்த மற்ற கூலிகள் அவர் மேல் பாய்ந்து தடிகளால் அவரை அடித்திருக்கின்றார்கள். இதனால் மிஸ்டர் ஆலனின் வலது கை சுண்டு விரல் உடைந்து போனது. அது மட்டுமல்ல. அவர் உடலில் பல இடங்களில் காயமும் ஏற்பட்டதாம். அவர் தரையில் விழுந்த பிறகும் அவரை நன்கு அடித்து புடைத்து இருக்கின்றார்கள். பின்னர் டாக்டர் அங்கு சென்று அவரை வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டாராம்.

மறுநாள் மாலினிக்ஸ்ம் என்று பெயர் கொண்ட  ஓர் காவல் அதிகாரி அங்கு சென்று 9 தமிழ் ஆண் கூலிகளையும் ஒரு பெண் கூலியையும் பிடித்துக் கொண்டு போய் காவல் நிலையத்தில் அடைத்து விட்டனர். அதன் பின்னர் மிஸ்டர் டொனால்ட்சன் அவர்கள் முன் இந்தக் குற்றம் விசாரணைக்கு வந்து இவர்கள் குற்றவாளிகள் என்று காவலில் வைக்கப்பட்டனராம். இச்செய்தி பினாங்கு கெஸட்டில் எழுதப்பட்டிருக்கின்றது.

மேல் குறிப்பிட்ட செய்தியை இப்பத்திரிக்கை வெளியிட்டு கருத்துப் பதிகிறது.

மிஸ்டர் ஆலன் முதலில் அங்கு வந்து பிரம்பால் அக்கூலிகளை அடிக்காமல் இருந்தால் இந்தக் குற்றம் நடந்திருக்காது ஆகவே அவர் மீது குற்றம் இல்லையோ? என இப்பத்திரிக்கை கேட்கிறது.

இப்பத்திரிகை கேட்பதும் நியாயம் தானே? கூலிகள் அவர்கள் வேலையை செய்து விட்டு மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டிருந்தால் அதனால் யாருக்கு என்ன துன்பம் வரப்போகிறது? கூலியாக பணி செய்ய வந்த மக்கள் வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்ற கடுமையான, மனிதாபிமானமற்ற போக்கை எல்லோரும் எப்போதும் தாங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

தங்களைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் தாக்குவது உயிரினங்கள் அனைத்துக்கும் உள்ள இயல்பு. இதனைத் தான் 1919 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து மலாயாவின் தோட்டக் காடுகளுக்கு உழைக்கச் சென்ற தமிழ் கூலிகளில் சிலரும் செய்திருக்கின்றார்கள்.


[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 11.3.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத் தமிழ் இதழ் 296ல் இன்று வெளியிடப்பட்டது.)

suba 20.1.jpg

suba 20.2.jpg
********************

தேமொழி

unread,
Oct 22, 2025, 6:00:36 AM (3 days ago) Oct 22
to மின்தமிழ்
//சில வாரங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலாயா ஆவணங்கள் ஆய்வு தொடர்கிறது//

மலாயா ஆவணங்கள் – 21
முனைவர் க.சுபாஷிணி

1929இல் மலாயாவில் நடைபெற்ற அகில இந்தியர் கருத்தரங்கம்

"முன்னேற்றம்” என்ற பெயரில் வே.சி.நாரயணசாமி என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஒரு பத்திரிக்கை 1929இல் மலாயாவிலிருந்து வெளிவந்துள்ளது. பொது மக்களின் சமூக நலனில் அக்கறை கொண்ட ஒரு வாரப்பத்திரிக்கையாக இது அமைந்திருந்தது என்பதை இதனை வாசிக்கும் போது நாம் புரிந்து கொள்ளலாம்.  தமிழ்நாட்டிலிருந்து தோட்டக்காடுகளை வெட்டி ரப்பரும் செம்பனையும் காப்பியும் விளைவிக்க மலாயா வந்த தமிழ் மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இப்பத்திரிக்கை இயங்கியிருக்கின்றது.
இப்படி சமூக நலனில் அக்கறை கொண்டு சிங்கையிலிருந்து வாரம் ஒருமுறை வியாழக்கிழமைகளில் இப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது என்பதை அறிகின்றோம்.

இதில் 10.1.1929 தேதியிடப்பட்ட இதழ் அக்காலகட்டத்தில் மலாயாவில் ஈப்போ நகரில் நடைபெற்ற ஒரு அகில மலாய இந்தியர்  கருத்தரங்கம் பற்றிய செய்தியைப் பதிகின்றது.
இதில் சிறப்பு என்னவென்றால், அன்றைய மலாயா பிரித்தானிய ஆட்சியில் முக்கிய உறுப்பினராக இருந்த திரு. எஸ். வீராசாமி என்பவரது தலைமையில் ஈப்போவில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. மலாயாவின் பல பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் இதற்கு வந்தனர் என்றும் தமிழ் மக்களின் முன்னேற்றம் பற்றி கலந்துரையாடப்பட்டது என்றும் அறிகின்றோம். இதில் நிறைவாக சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

1. மாநில அரசாங்கத்தில்(மலாயா மாநிலங்களில்)  இந்தியர்களுக்குப் பதவி அளிக்கவேண்டுமென அரசாங்கத்தாரைக் கேட்டுக்கொள்வது.
2. இந்தியர்களுக்கு ஒருவியாபார சங்கத்தை அரசு ஏற்படுத்த வேண்டும்.
3. பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமூக சேவைகள் ஆற்றுவதற்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் பயனளிக்கும் இயக்கங்களை ஆரம்பிக்க வேண்டும்.
4. கள்ளுக் கடைகள் பெருகியிருப்பதால் அது தொழிலாளர்களையும், மற்றவர்களையும் பாழ்படுத்துகின்ற காரணத்தால், எஸ்டேட்களிலும், பிற இடங்களிலுமுள்ள எல்லா கள்ளுக்கடைகளைகயும் எடுத்துவிடும்படி அரசாங்கத்தாரை மிகவும் வலியுறுத்துவது.
5. மலாயா நாட்டின் பலபாகங்களிலும் தமிழ் பள்ளிக்கூடங்களைத் தொடங்க வேண்டும். வயதான தொழிலாளர்களுக்கு இரவு பள்ளிக்கூடங்களை உருவாக்க வேண்டும்.
6. பி.ஐ. கப்பல்களில் இந்தியப் பிரயாணிகள் தாங்கமுடியாத கொடுமைகளுக்குள்ளாகின்றார்கள் என்பதால் அக்குறைகளை அரசு களைய ஏற்பாடு  செய்ய வேண்டும். (இக்கால கட்டத்தில் கப்பல் பயணம் தான் தமிழர்கள் தமிழ்நாட்டிற்குச் சென்று வர இருந்த ஒரே போக்குவரத்து)
7. இந்தியர்களுக்கென தினசரி பத்திரிகை ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.
8. அகில மலாயா கூட்டுறவு சேமிப்பு சங்கத்தை ஆரம்பிக்க வேண்டும்.
9. தொழிலாளர் பாதுகாப்பு நிதி ஒன்றைச் சேர்க்கத் தொடங்க வேண்டும்.
10. இந்தியர்களின் தொண்டர் படை ஒன்றை நியமிக்க அரசாங்கம் உத்திரவளிக்க வேண்டும்.
11. இந்திய தொழிலாளர்கள் வசிப்பதற்குத் தகுதியான விவசாய நிலங்களை அனுமதிக்கவேண்டும்.

மலாயா சூழலைப் பொறுத்தவரை இந்தியர்கள் எனக் குறிப்பிடப்படுவது தமிழர்களை என்பதை நாம் நினைவு  கூரவேண்டும்.  இந்த அமைப்பு தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அக்காலச் சூழலுக்கு ஏற்ற தீர்மானங்களை நிறைவேற்றி செயல்படத் தொடங்கியிருக்கின்றது என்பதைக் காண்கின்றோம். சிங்கை அன்றைய மலாயாவின் ஒரு பகுதி. அங்கிருந்துதான் இப்பத்திரிக்கை வெளிவந்திருக்கின்றது.

[குறிப்பு: இப்பத்திரிக்கைச் செய்தி இக்கட்டுரை ஆசிரியரால் பிரித்தானிய நூலகத்தின் ”இந்தியா அலுவலகம்” பகுதியில் உள்ள ஆவணப்பாதுகாப்புப் பகுதியிலிருந்து 17.9.2025 அன்று மின்னாக்கம் செய்யப்பட்டது]

(இக்கட்டுரை தமிழ் வளர்ச்சி துறையின் உலகத் தமிழ் இதழ் 307ல் இன்று வெளிவந்துள்ளது)

SUBA 21 1.jpeg

SUBA 21 2.jpeg

--------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages